Sunday, February 20, 2011

ஒரு கடிதம்

அன்பு பவா அவர்களுக்கு தாழ்ந்த வணக்கம்....

உங்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்... கடந்தவாரம் நடந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எஸ்.ரா அவர்களுடன் வந்திருந்தேன்.. நாங்கள் அங்கு வரும்வரை மூவரும் இலக்கியம் மற்றும் சினிமா பற்றி உரையாடிக் கொண்டு வந்தோம் ... மறுநாள் சென்னை வந்தடையும் வரை பேச்சு உங்களை சுற்றியே இருந்தது..

நானும் எனது நண்பனும் ஒருமுறை கொச்சியில் நடந்த திரைப்படவிழாவில் அபர்னாசென்னின் 36chowrengi lane எனும் படத்தை பார்க்க நேர்ந்தது.... இரவுக்காட்சி... எப்போதும் படம் முடிந்ததும் அதை பற்றி விவாதிப்பது வழக்கம்..ஆனால் அப்படம் முடிந்ததும் நடந்தே ஹோட்டலுக்கு வந்தோம்... இருவரும் ஒருவார்த்தை பேசிக்கொள்ள வில்லை. அன்று என்னால் உறங்கமுடியவில்லை...அதற்குபிறகு உங்கள் விழாவிற்கு வந்தபின்புதான் மீண்டும் அந்த அனுபவத்தை அடைந்தேன்...

உங்கள் விழா என்னை பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பி அழைத்து சென்றது...அன்று வீதிநாடகம் மற்றும் தெருக்கூத்தின் மீது தீராத மோகம் கொண்டிருந்த காலம்...திரு புரிசை கண்ணப்பதம்பிரான் வீட்டில் தங்கியிருந்து அவர்களுடன் பயணப்பட்டு நேர்த்தியான அவர்களது கலை வடிவத்தில் கரைந்து போனதும்..கொட்டிவாக்கத்தில் திரு ந.முத்துசாமியுடன் இருந்த நாட்களும் கண்முன்னால் நிழலாடியது....

பின் சினிமாவிற்குள் வந்ததும் மெதுவாக அவற்றுடனான தொடர்பு மெலிந்து ஒரு காலத்தில் அறுந்தும் போயிற்று.. காரணம் தெரியவில்லை....ஒருவேளை அவற்றை பற்றி பேச எவரும் கிடைக்காமல் போனதால் இருக்கலாம்...

விழா முடிந்த அவ்விரவுப்பனியில் உணவருந்தியதும் விடை பெறும்போது நான் கை குலுக்கிய பின் என்னை அன்போடு மெல்ல அணைத்தீர்கள்...

இவரை ஏன் பல ஆண்டுகள் முன்பே நமக்கு அறிமுகமில்லாமல் போயிற்று என்று மிகவும் வருந்தினேன்..

நீங்கள் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு தாமதமாக கிடைத்தீர்கள்..?

உங்கள் பணியில் இருக்கும் எளிமை, எழுத்திலும் இருக்கிறது என்பதை உங்கள் புத்தகங்களிருந்து அறிந்தேன்... மேற்கொண்டு என்ன எழுதுவது என்றறியாமல்...

அன்புடன்
மணிகண்டன்

1 comment:

  1. Dear Bava (avl)

    i just have read your story ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் in azhiyasudargal.

    an excellent story with lucid narration.

    thank you.

    ReplyDelete