Sunday, August 22, 2010
Monday, August 16, 2010
‘‘வம்சி’’யின் குழந்தைகள் கொண்டாட்டம்
குழந்தைகளின் குதூகல சங்கமம்
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியை ஒட்டிய அந்த நீண்ட பாதையில் போய் கொண்டே இருந்தால், சமுத்திர ஏரிக் கரையின் பிரம்மாண்டமும், அதில் தன்னிச்சையாக வளர்ந்து நிற்கும் பனைமரங்களும் காலத்தின் பழமையில் இறுகிய புளிய மரங்களும் வழி நெடுக நமக்கு துணை வரும். அதன் முடிவில் பரந்து விரிந்த மரங்கள்... மரங்கள்... மரங்கள்...
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின் பகல் ஒரு மணிக்கு கொத்து கொத்தாய் குழந்தைகளில் வருகையில் உயிர் கொள்கிறது அம் மைதானம்.
முன்னூறு குழந்தைகள். அநேகமாக எல்லா குழந்தைகளும் அப்பா, அம்மாவை இழந்தவர்கள். பல்வேறு விடுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். குழந்தைகளின் சங்கமத்தை இன்னும் குதுகலமாக்குகிறது 'பாப்பம்பாடி ஜமா'. நம் ஆதி இசையின் முழகத்திற்க்கு குழந்தைகளின் ஆட்டம் வர்ணிக்க முடியாதது.
குழந்தைகளின் குவியலிலிருந்து அவர்களின் விருப்பத்தின்படி, ஓவியம் கற்றுக் கொள்ள, களிமண் சிற்பம் செய்ய, கதைகேட்க பாட்டு கற்க, அனுபவம் பகிர , புகைப்படம் பயில என தனித்தனி குழுக்களாக பிரிகின்றனர். மரக்கூட்டங்களால் லேசான இருள் சூழ்ந்த அம் மைதான வெளி எல்லோரையும் அனுமதித்துக் கொண்டேயிருக்கிறது. புகைப்படக் கலையில் 'Birds View' என்பது மாதிரி ஒரு பறவையின் பார்வையில் கொத்து கொத்தான சிறு மலர்கள் மைதானமெங்கும் பரந்து கிடந்தார்கள். ஓவியம் கற்றுக் கொள்ள வந்த குழந்தைகளை ஓவியர்கள் கோபி, ஸ்டெல்லா, எழில், துரைஎழிலன், கருப்புசாமி ஆகியோர்கள் தங்களின் அனுபவத்தை குழைத்து அக்குழந்தைகளின் சிரிப்பில் குழிவிழும் கன்னத்திற்கு திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பனசாமி, சாமிநாதன், கதிர், தாமரி டீச்சர், எல்லோரும் ஒரு குழுவாகி மாறி, மாறி குழந்தைகளிடம் கதைசொல்வதும், கதைகேட்பதுமாய் லேசான மழைத்தூரலினூடான அப்பகலை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தனர்.
காட்டின் சகல பக்கங்களை விளக்கும் சூழலியலா
ளர் மோகன்ராம்
ளர் மோகன்ராம்இன்னொரு பக்கத்து பாறையில் அமர்ந்து, தன் காட்டுப்பயண அனுபவங்களை பச்சையம் மாறாமல் அக்குழந்தைகளின் மனங்களில் விதைத்து கொண்டிருந்தார் சூழலியலாளர் மோகன்ராம்.
மைதானத்து கிழக்கு மூலையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும், இருபதுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களும் வகுப்பறை அமைதியோடு அவ்விடத்தின் மௌனத்தை அடைகாத்து அமர்ந்திருக்கிறார்கள். ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து அவர்களுக்கு புகைப்படத்தின் நுட்பங்களை சொல்லிக் கொண்டிருந்தவர் இந்தியாவின் மிகப்பெரிய புகைப்பட ஆளுமை பி.சி.ஸ்ரீராம் தன் மனைவியுடனும், தன் ஆர்மார்த்த சிஷ்யன் வைட்ஆங்கிள் ரவிசங்கரனோடும் இதில் பங்கேற்ற பி.சி.யின் பங்கு அளவிடமுடியாதது. இவர்களோடு மிக முக்கிய புகைப்படக்காரர்கள் சேலம் விஜய், வேலு,எம்.ஆர்.விவேக் ஆகியோர்கள் சேர்ந்து ஒவ்வொரு குழந்தையின் கையிலும் கேமராவைத் தந்து படமெடுக்கவைத்து, அதை லேப்டாப்பில் ஏற்றி, colour correction செய்து, அக்குழந்தைகளுக்குக் காட்டி, ''தன் வாழ்நாளில் எப்போதும் அடையாத சந்தோஷத்தை இன்று அடைந்தேன்'' என பரவசப்பட்டார் பி.சி. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் எடுத்தப்படங்கள் 30"X40" அளவில் Print செய்து கொடுக்கப்போகிறோம்.

பி.சி.ஸ்ரீராம் அவர்கள் ஒரு குழந்தைக்கு புகைப்படம் கற்றுத்தரும் காட்சி
கற்றலின் முழு சந்தோஷத்தை குழந்தைகள் உணர்ந்த நாள் அது. இப்பிரமிப்பு இன்னும் விரிய ஏரிக் கரைச்சரிவிலிருந்து கிராமத்து மனுஷாள்கள் மாதிரி இறங்கி வந்து கொண்டிருந்தவர்கள் திருவண்ணாமலை கலெக்டரும், எஸ்.பி.யும். குழந்தைகளுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை.
அடுத்த நிகழ்வு ஆரம்பிக்கிறது.

குழந்தைகளுடன் மாவட்ட எஸ். பி. அவர்கள்
ஆளுமைகள் தங்கள் பால்ய காலங்களை குழந்தைளோடு பகிர்ந்து கொள்ளள். மைதானத்து நான்கு மூலைகளிலும் நான்கு பெருமரங்களை தேர்வுசெய்து, அதன் கீழ் அடுக்கிவைக்கப்பட்ட கருங்கல்மேடுகளில் உட்கார்ந்தார்கள் மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன், மாவட்ட எஸ்.பி. பாண்டியன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி, சந்தோஷமும், கிண்டலும், கேலியும் சிறுபொய்களும், கள்ளத்தனங்களும் நிறைந்த தங்கள் பள்ளிநாட்களை அவர்கள் பகிர்ந்து கொண்ட வினாடிகள் அவர்களே மீட்டெடுக்க முடியாதது. குழந்தைகள் அவர்களின் உரையாடல்களின் தொடர்ச்சியாக அவர்களுக்கே உரிய குறும்பு கேள்விகளால் ஆளுமைகளைக் குழந்தைகளாக்கினார்கள்.
எஸ்.பி.யிடம் ஒரு பையன், துப்பாக்கி இல்லாம நீங்க என்ன எஸ்.பி.சார்? என்றான்
அவர் வெடித்து சிரித்து, தன் காருக்கு ஒரு போலீசை அனுப்பி ரிவால்வரை எடுத்து குழந்தைகளுக்கு காண்பித்தார்.

சிலம்பம் சுற்றும் எஸ்.பி. பாண்டியன் அவர்கள்
உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் சார்? என்ற கேள்வியை கேட்டது ஒரு சாதரண ஆள் இல்லை. குழந்தை. அது கடவுளைவிடவும் ஒரு படி மேலானது இல்லையா! எஸ்.பி. தன் வீட்டிற்கு ஆளனுப்பி சிலம்பம் எடுத்துவரச்சொல்லி அதை அவர்களுக்கு சுற்றிக் காட்டினார். குழந்தைகளின் கைத்தட்டல் அவருக்கு ஒரு தேசிய விருதின் ஒத்திகையை நினைவுபடுத்தி இருக்கும்.
கலெக்டர் ராஜேந்திரனிடம் குழந்தைகளின் அன்பும், ஆர்வமும், கிண்டலும், நிறைந்த கேள்விகள் ஏராளம். அவர் தன் அனுபவ பகிர்தலை இப்படி ஆரம்பிக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன் தன் பால்யகால நினைவகள்
''தங்கள் வாழ்வைப்பற்றி சொல்ல ஏதோ ஒரு வகையில் ஜெயித்தவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். ஒரு கண்டக்டரை கூப்பிட்டு உன் வாழ்வை பகிர்ந்து கொள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்தை அழைத்து அப்படி சொல்வார்கள். ஏன் எனில் அவர் கண்டக்டராய் இருந்து ஒரு துறையின் உச்சத்தை அடைந்தவர்'' என்றுத் தொடங்கி அக்குழந்தைகளின் உலகில் சுலபமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார் அவரே அவரை மறந்து குழந்தையாகி இருந்தார். இங்கும் தன் அய்யாவின் பின்னால் நிற்க மனமில்லாத அவர் டவாலியும் ஒரு மூலையாகப்பார்த்து உட்கார்ந்து தன் அய்யாவின் பால்யத்தை பருகிக் கொண்டிருந்தார்.
.பி.சி.ஸ்ரீராம் தன் சிஷ்யன் வைட்ஆங்கிள் ரவிசங்கரோடு, ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து தஞ்சாவூரில் தான் பிறந்து வளர்ந்ததை, தாத்தா வாங்கித் தந்த முதல் கேமராவில் முழு படமும் எடுத்து முடித்து, கழுவிப்பார்த்தால் ஒரு படமும் வராதது என தன் ஆரம்பநாட்களை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாணவர்களை அவர் தோள் மேல் நின்று அவர் பால்யத்தைக் காண அனுமதித்திருந்தார்.

எஸ்.கே.பி. சேர்மன் கு.கருணாநிதி ஆழ்ந்த யோசனைகளோடு
இன்னொரு பக்கம், தன் முப்பது வயதிற்குள் ஒரு பொறியியல் கல்லூரியைத் துவங்கி, வெறும் வியாபார நோக்கம் என்று அதன் எல்லைகளை சுருக்கி விடாமல், இன்றளவும் வாசிப்பின் மீதும், இலக்கியத்தின் மீதும், தீராத பற்றுடைய எஸ்.கே.பி. கு. கருணாநிதி, தன் வெற்றியின் இரகசியத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொறியியல் படிக்க ஆர்வமற்றவர்களை அறிய ஆவலோடு கைத்தூக்க சொன்னதற்கு, எல்லாக் குழந்தைகளும் கைதூக்கி அவரை அதிர்ச்சியூட்டினார்கள். இந்நிகழ்விடத்தின் மரச்செறிவின் மகத்து வத்தையும், இயற்கையையும் தங்கள் உள்ளங்கைகளில் பொத்திப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் மொழியில் அவர்கள் மேல் மழைத்தூறல் மாதிரி பொழிந்தார்.
அதிலிருந்து ஆரம்பித்து, குழந்தைகளின் சட்டை ஜோப்பிகளில் நம்பிக்கை விதைகளை நிரப்பி அனுப்பினார்.
சாயங்காலம் ஆறாகப் போகிறது, இருட்டு மெல்ல கவ்வி இடம்பிடிக்கிறது. குழந்தைகள் தங்கள் முன் உட்கார்ந்திருக்கும் ஆளுமைகளை தங்கள் கேள்விகளால் பிணைத்திருக்கிறார்கள். அந்த அன்பின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு போக ஆளுமைகளால் முடியவில்லை.

வேலுச் சரவணன் தன் பரிவாரங்களோடு
ஆனால் ஒரு புயலென, பெரும் சத்தத்தோடு தன் பரிவாரங்களோடு அம்மைதானத்திற்குள் புழுதியை கிளப்பிக் கொண்டு நுழைகிறான் 'வேலு மாமா' என்று தமிழகக் குழந்தைகளோடு அன்போடு அழைக்கப்படும் வேலுச்சரவணன்.
'தேவலோக யானை' 'சீத்தா' 'கடல்பூதம்' என்ற தன் மூன்று நாடகங்கள் மூலம் அக்குழந்தைகளை மகிழ்வின் எல்லைக்கே கைப்பிடித்து கூட்டிப்போனான். சுற்றி நின்ற பெருசுகளை தன் மாயவித்தைகளால் குழந்தைகளாக மாற்றினான். மோடிவித்தைக் காரனிடம் மாட்டிக் கொண்ட பள்ளிக்கு போகும் மாணவனைப் போல அப்பெருசுகள் அவனிடம் மாட்டிக் கொண்டனர்.
போலீசும், மனித மனங்களும், சூழலும், அனுமதித்தாலும் இருட்டு அதற்கு மேலும் அனுமதி தர மறுத்த தருணமது. எஸ்.கே.பி.கருணா அத்தனைக் குழந்தைகளுக்கும் நெய்யொழுகும் கேசரியும், சுடசுட கிச்சடியும் பறிமாறி, கலெக்டர் அத்தனைக் குழந்தைகளுக்கும் சால்வைகள் பரிசளிக்க, எல்லோரும் கலைந்து போன அந்நிமிடத்திற்காக காத்திருந்து இருட்டு முற்றிலும் கவ்விக்கொண்டது. நிலாவை பாம்பு தின்ற அவ்விநாடி, குழந்தைகளற்ற அம்மரங்களடர்ந்த மைதானத்தை திரும்பி பார்க்கிறேன்.
தாங்க முடியவில்லை.
Saturday, June 5, 2010
புதிய பார்வையில்....
புதிய பார்வைக்காக 'இலக்கிய காதலர்கள்' என்ற பொதுத் தலைப்பில் என்னிடமும் ஷைலஜாவிடமும் எங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா என கேட்டார்கள்.
நீண்ட தயக்கத்திற்குபிறகே சம்மதித்தோம். ஆனால் பேச ஆரம்பித்த போது மிகுந்த மனத்தடைகள் ஏற்பட்டது. மீடியாவுக்காக கான்ஷியசாக இருக்க முடியவில்லை.
புத்தகம் வந்ததும் படித்தால் அந்த கார்காலத்தின் எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை.
நிகழ்காலத்தில் உட்கார்ந்து பழையவைகளை மீட்டுக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.
இக்கட்டுரைக்கான புகைப்படங்கள் எம்.ஆர். விவேகானந்தன், பினு பாஸ்கர், காஞ்சனை சீனிவாசன் ஆகிய மூன்று முக்கிய புகைப்பட கலைஞர்களால் மூன்று வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்டவைகள்.


நீண்ட தயக்கத்திற்குபிறகே சம்மதித்தோம். ஆனால் பேச ஆரம்பித்த போது மிகுந்த மனத்தடைகள் ஏற்பட்டது. மீடியாவுக்காக கான்ஷியசாக இருக்க முடியவில்லை.
புத்தகம் வந்ததும் படித்தால் அந்த கார்காலத்தின் எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை.
நிகழ்காலத்தில் உட்கார்ந்து பழையவைகளை மீட்டுக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.
இக்கட்டுரைக்கான புகைப்படங்கள் எம்.ஆர். விவேகானந்தன், பினு பாஸ்கர், காஞ்சனை சீனிவாசன் ஆகிய மூன்று முக்கிய புகைப்பட கலைஞர்களால் மூன்று வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்டவைகள்.


Friday, May 28, 2010
தாய் வீடு

என் எழுத்தாளர் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் மீடியாக்களில் வருவதை எப்போதும் தான் விரும்புவதில்லை என்று சொல்லுவார், ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அவர் சந்தோஷப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அது நம் இருப்பை சொல்கிறது, சக நண்பர்களின் உரையாடலை சமீபப்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மனிதர்களிடம் நம்மை அடையாளப்படுத்தி சந்தோஷமோ, சங்கடமோ கொள்ள வைக்கிறது.
சமீபத்தில் என் குடும்பம் பற்றி ஒரு முழுப்பக்க கட்டுரை கேரளா "தேசாபி மானியில்" "தாய் வீடு" என்ற தலைப்பில் வெளியாகி மூன்று, நான்கு நாட்கள் கேரளாவிலிருந்து நண்பர்களும், உறவினர்களுமாக தொலைப்பேசியில் அழைத்து பேசி நெருக்கத்தை அதிகப்படுத்தினார்கள். நம் மனோஜ் தான் (புனைவின் நிழல்) காசர்கோட்டில் உள்ள தன் சகோதரியின் வீட்டிலிருந்து அதிகாலையில் தேசாபிமானியை பார்த்து என்னை எழுப்பினார். ஆனாலும், மலையாள இளம் சேச்சிகளின் தொலைபேசி குரல்களுக்காக ஏங்கினேன். ஜோதிர்மையி சாருவிடம் என் தொலைபேசி எண்ணை கேட்டிருக்க கூடும் என்ற அற்ப சந்தோஷம் ஒரு நிமிடம் நீடித்தது அப்படிப்பட்ட எதுவும் என்னைப் போன்ற துர்பாக்கியசாலிகளுக்கு எப்போதும் வாய்க்காது. சாருவிற்கும், அய்யனாருக்குமே மொத்த பாக்கியமும் போய்ச் சேரக்கடவது.
இக்கட்டுரையை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவசர அவசரமாக ஜெயஸ்ரீயும், சுகானாவும் மொழிபெயர்த்தனர்
தாய்வீடு
- ஷபீக் அமராவதி
எழுத்துகளின் தூய்மையும், நெருக்கதையும், விவாதத்தையும், சக்தியையும் இதயத்துடிப்பையும் சேர்த்து வைத்து பாலம் கட்டுவது, அதனூடாக மலையாளம், தமிழுக்குள் கரைந்து கொள்வது.
எழுத்துகளின் தூய்மையும், நெருக்கதையும், விவாதத்தையும், சக்தியையும் இதயத்துடிப்பையும் சேர்த்து வைத்து பாலம் கட்டுவது, அதனூடாக மலையாளம், தமிழுக்குள் கரைந்து கொள்வது.
என்.எஸ். மாதவனும், பால் சக்காரியாவும், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஏ. அய்யப்பனும், சந்தோஷ் ஏச்சிக்கானமும் கே.ஆர். மீராவும், பிரபஞ்சனுக்கும், அசாகமித்ரனுக்கும், கோணங்கிக்கும், நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும், கனிமொழிக்கும், மனுஷ்யபுத்திரனுக்குமிடையில் கரைகிறார்கள்.
தமிழ், மலையாள இலக்கியங்களுக்கிடையில் சங்கமிக்கவைக்கிற ஒரு பாலத்தைப் பற்றியும், அதற்கு குறுக்கும் நெடுக்குமாக ஸ்தூலமாய் தாங்கி நிற்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலை நகரில் பெயரிடப்படாத அந்த வீட்டின் முகவரிதான் 19, டி.எம். சாரோன்.
தமிழின் இனிமையும் மலையாளத்தின் அழகும் கலந்திருக்கும் இந்த இரண்டு அடுக்குமாடி வீட்டின் மர நிழல் வரவேற்கும் வாசலில் கைகூப்பி வரவேற்க, பவாசெல்லதுரையின் அம்மா தனம்மாவும், ஷைலஜாவின் அம்மாவான கேரளத்து மாதவி அம்மாவும் இருக்கிறார்கள். இரண்டு அம்மாக்களின் கருணையும் பிரியமும் விளங்கும் இந்த இடம், இந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக இருக்கிறது. இங்கே தமிழும், மலையாளமும் இழைகளாகப் பின்னிப் பிணைந்து பேசி, பழகி, அற்புதப்பட்டு, விவாதித்து ஒன்று சேர்ந்திருக்கும் மலையாளத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிற இலக்கியங்களை இந்த வீட்டின் வாசலினூடாகஎன்.எஸ். மாதவன், கெ.என். பணிக்கர், எ. அய்யப்பன் முதல் எட்டாம் வகுப்பு மாணவி சிபிலா மைக்கேல் வரை தமிழகம் ஏற்றுக் கொண்டது, இவர்களினூடாகத்தான்.
தமிழ் நவீன எழுத்தாளர் பவா செல்லதுரைதான் இந்தப் பாலத்தின் முதுகெலும்பு. மனைவியின் அம்மா மாதவியம்மாதான் இதைத் தாங்கி நிற்கும் தூண்.
இந்தக் குடும்பத்தின் நான்கு ஜீவன்களுக்குத்தான் இந்தத் தூணில் பாலத்தை முழுமையாக்கிய பொறுப்பு உண்டு. பவாவின் மனைவி ஷைலஜா, ஷைலாஜாவின் அக்கா ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீயின் கணவர் தமிழனான உத்திரகுமாரன், இவர்களுடைய மகள் சுகானா. மலையாளத்தின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கூட காலடியெடுத்து வைக்காமல் இத்தனை முக்கியமான மொழி பெயர்ப்பாளர்களாக உயர்ந்திருக்கின்றனர். பவா அவர்களுக்கு பாதையமைக்க, மாதவியம்மா வார்த்தையெடுத்துக் கொடுக்கிறார். பல விதமான விருந்துகளினூடே பவாவின் அம்மா தனம்மாளும் இதில் பங்கெடுத்துக் கொள்கிறார்.
பாலக்காடு பறளியைச் சேர்ந்தவர் மாதவியம்மா. முண்டூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பாலக்காடு சிவில் ஸ்டேஷனுக்கு அருகில் கல்லேக்காடு வாசுதேவனின் வாழ்க்கைத் துணையானார். முதலில் வாசுதேவனின் சேலத்து அக்கா வீட்டிலும் பின்னர் திருவண்ணாமலையிலுமாக வசிக்கத் தொடங்கினர். மலையாளத்தை மறக்காமல் இருந்த மாதவியம்மா வாசிப்பை உயிரென தொடர்ந்தார். இவர் மூலம் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும், பேத்தி சுகானாவும் மலையாளத்தை பேச்சு - எழுத்து மொழிகளால் நிறைத்தார்கள். மாதவியம்மாவோ தன் மூத்த மகளின் பாடபுத்தகத்தைத் துணையாக்கி தமிழ் எழுத்துலகத்துக்குள் பிரவேசித்தார். வாசுதேவனின் மறைவுக்குப் பின் வாசிப்பு மாதவியம்மாவின் மறுபாதி ஆனாது. பவா-ஷைலஜாவின் குழந்தைகளான ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வம்சியும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மானசியும் ஜெயஸ்ரீயின் மகன் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அமரபாரதியும், மாதவியம்மாவின் தாய்பள்ளிக்கூடத்தின் புதிய மாணவர்கள்.
எழுத்தாளன், அரசு ஊழியன், விவசாயி, சமூகப் பணியாளன், பேச்சாளன், என்பதன் கூட்டுக் கலவையின் மொத்தமே பவாசெல்லதுரை. திருவண்ணாமலை மின்வாரியத்தில் அட்மினிஸ்ரேடிவ் சூப்ரவைசராக இருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும், அமைப்பாளராகவும், பேச்சாளருமாக இருப்பவர். +1 மாணவராக இருக்கும்போதே பந்தங்களையும், அதன் சிக்கல்களையும் விசாரணை செய்யும் விதமாக, "உறவுகள் பேசுகின்றன" என்ற நாவலின் மூலமாகத்தான் பவா 1983 இல் எழுத்துலகில் பிரவேசிக்கிறார். 89இல் "எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்" கவிதைத் தொகுப்பு மூலமும் 90 இல் முகம் என்ற தனது முதல் சிறுகதை மூலமும் தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகிறார். 2008 மார்ச்சில் அவருடைய முதல் கதைத் தொகுப்பு "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" வெளிவந்தது. நவீனத் தமிழிலக்கியத்தின் கவனிக்கத்தக்க பத்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது விமர்சகர்களின் கருத்து. உலகத் தரமான தமிழ்க் கதைகளின் முன்னால் நிற்கும் எழுத்து இவருடையது. இப்போது புதிய ஒரு நாவலின் உருவாக்கத்தில் இருக்கிறார்.
பட்டதாரி மாணவியாக இருக்கும்போது கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருந்த ஷைலஜா திடீரென எழுதுவதை நிறுத்திவிட்டார். தன்னைவிட 2 வயது மூத்தவரான பவாவையும் அவருடைய எழுத்துகளையும் நெருங்கியறிந்ததாலும் அவர் மூலமாக அறிமுகமான நவீன இலக்கிய வாசிப்பினாலும் இது நிகழ்ந்தது என்கிறார் ஷைலஜா. இவர் படித்த திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் சீனியர் மாணவராயிருந்தார் பவா. அன்றே இலக்கிய மேடைகளில் கவனிக்கத்தக்க பேச்சாளன், கவிஞன். இப்படியான இலக்கியக் கூட்டங்களில் மூலம்தான் பவாவுடன் நட்பான இந்த சகோதரிகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகள் வரை கொண்டு சேர்த்தது. இப்போது சங்கத்தின் மாநில செயற்குழுவில் பவாவும், மாநிலக்குழுவில் ஷைலஜாவும்.
தீவிர வாசிப்பினூடே மலையாளப் புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும் திரும்பவும் எழுத்துலகில் கால் பதித்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை நடத்திய இலக்கிய சந்திப்பான "முற்றம்" நிகழ்ச்சியில் பேசிய பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மலையாள உரையை தமிழ்படுத்தியதுதான் ஷைலஜாவின் முதல் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம். அந்தச் சந்திப்பிலேயே தன் "சிதம்பர நினைவுகளை" மொழிபெயர்ப்பு செய்வதற்கான அனுமதியையும் பாலச்சந்திரன் அளித்தார். தொடர்ந்து என்.எஸ். மாதவனின் "பரியாய கதைகள்" கூக்குரல், சாராஜோசப், என். பிரபாகரன், ஆர். உண்ணி ஆகியோரின் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டு மொழிபெயர்த்தார். "சூர்ப்பனகை" என்ற பெயரில் மொழிபெயர்த்த கெ.ஆர். மீராவின் "மோகமஞ்சள்" என்ற கதைத் தொகுப்புதான் அவருடைய சமீபத்திய வரவு. குடும்ப நண்பரான நடிகர் மம்முட்டியின் "காழ்ச்சப்பாடு" என்ற சுயசரிதையும், இ.எம்.எஸ். பற்றிய, அவரது மகள் இ.எம். ராதாவின் நினைவுக் குறிப்புகளும் இனி அடுத்ததாக ஷைலஜாவின் மொழி பெயர்ப்பில் வெளிவரப்போகிறது. குறைந்த காலத்துக்குள் தமிழ்நாட்டின் முற்போக்கு புத்தக வெளியீட்டாளர் என்ற பெயர் பெற்ற "வம்சி புக்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஷைலஜா விளங்குகிறார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி தான் இவருக்கு பதிப்பகம் துவங்க ஊக்கமளித்தவர். "திலகவதியின் குறுநாவல்கள்" தான் வம்சி புக்ஸின் முதல் புத்தகம். 2004 மே 29இல் ஆரம்பித்த வம்சி இதுவரை 130 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஜோதிடம், வாஸ்து, ஆன்மீகம் என்பவற்றைப் பரப்பும் புத்தகங்களுக்கான மை வம்சியில் எப்போதும் இல்லை.
புத்தக வெளியீட்டாளர் என்பதற்குமேல் திருவண்ணாமலையின் இடதுசாரி கலாச்சார மையமுமாக விளங்குகிறது மத்தலாங்குளத் தெருவிலுள்ள வம்சி புத்தக மையம்.
ஜவுளி வியாபாரியாக இருந்த உத்திரகுமாருடன் அடிமாலியில் வாழ்ந்த நாட்களில்தான் ஜெயஸ்ரீ தன் எழுத்துலகில் நுழைகிறார். மாத்ருபூமி நாளிதழில் "நிலவில் கால்வைத்தது கட்டுகதையா?" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை 2002 இல் தமிழில் மொழிபெயர்த்தது தான் தொடக்கம். பிறகு அடிமாலியைச் சேர்ந்த சியாமளா சசிகுமாரின், "நிசப்தம்" என்ற கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்தார். பால் சக்கரியாவின் பெண்கதைகள், குறுநாவலான "இதுதான் என் பெயர்" சாகித்ய அகாடமிக்காக "சக்கரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கதைகள்" எ. அய்யப்பனின் "கல்கரியின் நிறமுள்ளவர்கள்" சந்தோஷ் ஏச்சிக்கானத்தின்" ஒற்றைக் கதவு", "கவிதையும் நீதியும்" என்ற தலைப்பில் சுகதகுமாரியுடன் கவிஞர் விஜயலட்சுமி நிகழ்த்திய நேர்காணல் என மலையாள இலக்கியச் செல்வங்களை ஜெயஸ்ரீ தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
கேரள வாழ்க்கையிலிருந்து மலையாளத்தைக் கற்றுக் கொண்ட உத்திரகுமாரன், ஜி.என். பணிக்கரின் "தாஸ்த்தாவேஸ்கியின் வாழ்வும் கலையும்" என்ற புத்தகத்தை மொழிபெயர்த்தார். சேகுவராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" இன் தமிழ் திரைக்கதையையும் மொழி பெயர்த்துள்ளார். மகளான சுகானா எட்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது, திருவனந்தபுரம் மண்ணந்தல எஸ்.இ. தாமஸ் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த சிபிலா மைக்கேலின் "மறையுந்ந தீரம்" என்ற கதைத் தொகுப்பை "எதிர்பாராமல் பெய்த மழை" ஏன்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். பவா-ஷைலஜாவின் மகனான வம்சி இரண்டாம் வகுப்பு மாணவனாக இருக்கும்போது வரைந்த ஓவியங்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்போது "ஆன் பிராங்க் டைரியை" மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் சுகானா. சாரோனிலேயே வேறொரு தெருவில் இந்தக் குடும்பம் வசித்துக் கொண்டிருந்தாலும் 19. டி.எம். வீட்டின் தொடர் இலக்கிய விவாதங்களில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்கிறது.

திருவண்ணாமலைக்கருகில் வாணாபுரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரான ஜெயஸ்ரீயும், வியாபாரியான உத்திரகுமாரும் வேலைப் பளுவிற்கு இடையிலும் புத்தகங்களோடு தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
திருவண்ணாமலைக்கருகில் வாணாபுரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரான ஜெயஸ்ரீயும், வியாபாரியான உத்திரகுமாரும் வேலைப் பளுவிற்கு இடையிலும் புத்தகங்களோடு தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
அறிமுகப் படுத்துவதற்கும் மேலாக, மலையாள இலக்கியத்தைப் பற்றிய கௌரவமான தேடல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இந்தக் குடும்பத்தின் முயற்சிகள் களம் அமைக்கிறது. காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பி.ஏ. தமிழ்ப் பாடப்புத்தகமாக இருக்கிறது ஷைலஜா மொழிபெயர்த்த "சிதம்பர நினைவுகள்". தன்னாட்சிக் கல்லூரியான திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் எம்.ஏ. முதல் வருடப் பாடப்புத்தகமாக உள்ளது ஜெயஸ்ரீ மொழி பெயர்த்த "நிசப்தம்". அதே கல்லூரியின் பி.ஏ. இளங்கலை பாடப்பிரிவிற்கு பவா செல்லத்துரையின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" பாடபுத்தகமாக இருக்கிறது. என்.எஸ். மாதவனின் பரியாய கதைகளின் தமிழ் பெயர்ப்பான "சர்மிஷ்டா" வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களும் தமிழகத்தில் உள்ளனர்.
”நிசப்தம்” திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் விருதும், எ. அய்யப்பனின் ”வார்த்தைகள் கிடைக்காத தீவில்” கவிதைத் தொகுப்பிற்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் கிடைத்துள்ளன. புத்தக வெளியீட்டிற்கும் மேலாக, கேரளத்தின் சின்னச் சின்ன விவாதங்களுக்குக் கூட எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்கிறது இந்தக்குடும்பம்.
கேரளத்தில் பால் சக்கரியா கொளுத்திவிட்ட விவாதமும், இப்போதைய மலையாள சினிமாப் பிரச்சினையும் கூட 19. டி.எம். சாரோனில் தொடர்விவாதப் பொருளாகின்றன.
இந்த வீட்டில் சமையல் உதவியாள் லதா கூட தண்ணீர் கேட்டால் ”வெள்ளம் வேணுமோ” என்று மலையாளத்தில் திரும்பக் கேட்கிறாள். அங்கே சென்று நாம் தமிழைத் தேடும்போது இவர்கள் மலையாளத்தைத்தான் தேடுகிறார்கள். அங்கேயிருந்து வெளியேறினால் நாம் தமிழை விட்டுவிடுவோம் சொந்த நாட்டை விட்டு வெளியேறினால் நாம் மலையாளத்தை மறப்பதுபோல. இப்போதும் இவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை விட அவர்களின் ப்ரியமான மலையாளத்தை.
Monday, May 17, 2010
Monday, March 8, 2010
திருவண்ணாமலையில் வம்சி புத்தக வெளியீட்டு விழா
திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக வெளியீட்டு விழா
வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக 5 புது புத்தகங்களின் வெளியீட்டு விழா 13.03.2010 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளியில் நடைபெற உள்ளது. விழாவினை மாவட்ட ஆட்சி தலைவர் மு. இராஜேந்தின் ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்து உரையாற்றுகிறார்கள். விழாவின் முதல் அமர்வாக மலையாள மொழியில் கே.ஆர். மீரா அவர்கள் எழுதி தமிழில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த " சூர்ப்பனகை" என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் ஜி. திலகவதி ஐ.பி.எஸ். காவல் துறை கூடுதல் தலைவர் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் சந்திரபோஸ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கற்றது தமிழ் பட இயக்குனர் ராம் உரையாற்றுகிறார்.
இரண்டாவது அமர்வாக பின்னி மோசஸின் ” நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து” என்ற என்ற கவிதை தொகுப்பை வெண்ணிலா கபடி குழு இயக்குனர். சுசீந்திரன் வெளியீட, எழுத்தாளர் பவாசெல்லதுரை பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உரையாற்றுகிறார்.
மூன்றாவது அமர்வாக அய்யனார் விஸ்வநாத்தின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்படுகின்றது. மூன்று புத்தகங்களையும் கவிஞர் சமயவேல் வெளியிடுகிறார். ”உரையாடலினி” என்ற சிறுகதை தொகுப்பை நம் தினமதி நாளிதழின் ஆசிரியர் பி. நடராஜன் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து இயக்குனர். சந்திரா உரையாற்றுகிறார். தனிமையின் இசை” என்ற கவிதை தொகுப்பை திரு. வி. ரமேஷ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கவிஞர். தமிழ்நதி உரையாற்றுகிறார். ”நானிலும் நுழையும் வெளிச்சம்” என்ற கவிதை தொகுப்பை புகைப்பட கலைஞன் பினுபாஸ்கர் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். புத்தகம் குறித்து எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார்கள். சி. பலராமன் நன்றிகூற முதல் நாள் விழா நிறைவு பெறுகிறது.
இரண்டாவது நாள் 14.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில் 4 புத்தகங்களின் வெளியீட்டு விழா அதே இடத்தில் நடைபெறுகிறது. விழாவினை திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைக்கிறார். முதல் அமர்வாக மலையாள மொழியில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ”ஒற்றைக் கதவு” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட, ஏ.எல்.சி.யின் பொது செயலாளர் அறிவர். ரிச்சாட் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார்.
இரண்டாவது அமர்வாக பி.ஜே. அமலதாஸ் தொகுத்த ”இன்றும் வாழும் தெருக்கூத்து” என்ற புத்தகத்தை திரைப்பட கலைஞர் நாசர் வெளியிட கவிஞர். இளையபாரதி பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து முனைவர் பார்திபராஜா உரையாற்றுகிறார்.
மூன்றாவது அமர்வாக கே.ஸ்டாலினின் ”பாழ் மண்டபம் ஒன்றின் வரைபடம்” என்ற கவிதை தொகுப்பை கவிஞர். ரவி சுப்ரமணியன் வெளியிட, கவிஞர் அய்யப்ப மாதவன் பெற்றுக்கொள்கிறார்.
நான்கவது அமர்வாக வெ. சுப்ரமணியபாரதியின் ”வெ. சுப்ரமணிய பாரதி கதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் நா. முருகேச பாண்டியன் வெளியிட உயிர்எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் பெற்றுக்கொள்கிறார்.
நிறைவாக கே. முருகன் நன்றியுரை கூற விழா நிறைவு பெறுகிறது.
Thursday, February 4, 2010
வம்சி வெளியீட்டரங்கம்.
இரண்டு நாட்கள் ஆறு நூல்கள்.
வம்சி வெளியீட்டரங்கத்தின் 2 மற்றும் 3 இலக்கமிட்ட வெளியீட்டு நிகழ்ச்சிகள் சென்னையில் 30& 31 .01.2010 தேதிகளில் நடைபெற்றன.
முதல் நிகழ்வு கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ பள்ளி அரங்கில் உள்ள டி-பிகா அரங்கில் மாலை நேரம் ஆறு மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெகிழ்ச்சியான வரவேற்புரையை கே.வி. ஷைலஜா வழங்கினார்.கவிஞர் உமா ஷக்தி முழு நிகழ்வின் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றார்.
முதலாவதாக பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’ (இதுவரை வெளியான மொத்த சிறுகதைகளின் ) தொகுப்பை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிக்கையாளர் ஞாநி பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தின் மீது இயக்குனர் சிம்புதேவன், கவிஞர் யுகபாரதி இருவரும் உரையாற்றினார்கள்.
இயக்குனர் மகேந்திரன் தான் எளிதில் எழுத்தாளர்களுக்கு மனதில் இடம் கொடுப்பதில்லை என்றும் அப்படியான இடத்தை பாஸ்கர்சக்தி பெற்றிருக்கிறார் என்றும் அதேபோல் நல்ல அன்பராகவும் நண்பராகவும் கூட மனதில் இடம் பெற்றிருக்கிறார் என்றார்.
ஞாநி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னமே சந்தித்த கணத்தில் தன்னையே கண்டது போல உணர்ந்ததாகக் கூறினார். யுகபாரதியும் சிம்புதேவனும் சிறுகதை மட்டுமல்லாமல் திரைக்கதை சின்னத் திரை வசனம் உட்பட எதிலும் தனி முத்திரை பதிக்கிறவர் என சிலாகித்தனர்.
நண்பர்களுக்கும் வருகை தந்தவர்களுக்கும் நன்றி கூறி பாஸ்கர்சக்தி ஏற்புரை வழங்கினார்.
அடுத்ததாக எஸ்.லட்சுமணப்பெருமாளின் கதைகள் தொகுப்பை பத்திரிக்கையாளர் ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் விஜயசங்கர் வெளியட கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றினார். விஜய சங்கர் படித்த அளவிலான கதைகள் உணர்வு நிலைகளைக் கிளறியதோடல்லாமல் கிராமத்தைக் காட்சிப்படுத்தியது என்றார். முத்துக்குமார் இத்தினத்தில் வெளியிடப்படுகிற மூன்று எழுத்தாளர்களது எழுத்தில் உள்ள நகைச்சுவை மற்றும் வாழ்வின் மீதான அக்கறை குறித்து ஒப்புமை நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் ராம் எழுத்தாளனின் தீவிரமும் உழைப்பும் ஒரு போராளியின் செயல்பாட்டுக்கு இணையானது என்கிற தொனியை பேச்சில் வெளிப்படுத்தினார்.
மூன்றாவதாகவும் முடிவாகவும்
க.சீ. சிவகுமாரின் ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
சிவகுமாரின் தொகுப்புக்கு சுகுமாரன் வாசித்த கட்டுரை வடிவத்தை www.nayakan.blogspot.com மில் காணலாம்.கு.கருணாநிதியின் உரைக்குப்பின் ஏற்புரை வழங்கிய க.சீ.சிவகுமார் புத்தகத்தை களிகூர்ந்திருந்த மாரீசை மேடைக்கு அழைத்து பிரதியை வழங்கினார்.
பி.ஜே. அமலதாசின் நிறைவான மகிழ்வான நன்றிய்ரைக்குப் பின் அரங்கத்துக்கு வெளியே வந்து குழுமியவர்களை இந்த நூறாண்டுகளின் ஆகப்பெரிய நிலா ராத்திரி வரவேற்றுத் தண்ணொளி பொழிந்தது.
ஜனவரி 31- நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூர் மியூசியத்தின் எதிப்புறம் அமைந்துள்ள எக்சா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.வி.ஜெயஸ்ரீ வரவேற்புரை நல்கினார்.
முதலில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’
நூலினை பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெற்றுக்கொண்டார்.
நூலினைக் குறித்து பிரபஞ்சனும் இயக்குனர் மிஷ்கினும் பிரதி தந்த பரவசத்தை மத்தாப்பு மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
அடுத்து சா.தேவதாஸ் மொழி பெயர்த்த ஹென்றி ஜேம்சின் ’அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட எழுத்தாளர் அஞ்சனா பெற்றுக்கொண்டார். வெளியிட்ட சண்முகம் நூல் குறித்த விரிவான செறிவான உரை வழங்க பத்திரிக்கையாளர் கடற்கரய் அவை கலகலக்கும் உரை வழங்கினார்.சுருக்கமான ஏற்புரையை தேவதாஸ் வழங்கினார்.
அடுத்து உதயசங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் பெற்றுக்கொண்டார்.மணி மாறனின் விரிவான கதைகள் பற்றிய உரையாடலுக்குப் பின் உதயசங்கர் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வு நிறைவில் பவா செல்லதுரை நன்றியுரைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இருநாட்கள் நிகழ்ச்சிகளின் நினைவுகளிலிருந்து நான்கு நாட்களாகியும் வெளிவர இயலவில்லை. நண்பர்கள் என் மீதும் வம்சி பதிப்பகம் மற்றும் குடும்பத்தினர் மீதும் வைத்துள்ள தனிப்பட்ட பிரியத்தை மேடைகளில் கேட்டபோது நம்பமுடியாத்தாக இருந்தது. இருநாள் நிகழ்வுகளுக்கும் வந்திருந்த விருந்தினர்களும் வாசகர்களும் இந்த நிகழ்வுகளின் மீது அக்கறையும் அன்பும் என்றென்றும் மறக்க இயலாதது.
இருநாள் நிகழ்ச்சி பற்றி இன்னும் எழுத எண்ணமுள்ளது. அதற்கு முன் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இரண்டு நாட்கள் ஆறு நூல்கள்.
வம்சி வெளியீட்டரங்கத்தின் 2 மற்றும் 3 இலக்கமிட்ட வெளியீட்டு நிகழ்ச்சிகள் சென்னையில் 30& 31 .01.2010 தேதிகளில் நடைபெற்றன.
முதல் நிகழ்வு கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ பள்ளி அரங்கில் உள்ள டி-பிகா அரங்கில் மாலை நேரம் ஆறு மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெகிழ்ச்சியான வரவேற்புரையை கே.வி. ஷைலஜா வழங்கினார்.கவிஞர் உமா ஷக்தி முழு நிகழ்வின் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றார்.
முதலாவதாக பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’ (இதுவரை வெளியான மொத்த சிறுகதைகளின் ) தொகுப்பை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிக்கையாளர் ஞாநி பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தின் மீது இயக்குனர் சிம்புதேவன், கவிஞர் யுகபாரதி இருவரும் உரையாற்றினார்கள்.
இயக்குனர் மகேந்திரன் தான் எளிதில் எழுத்தாளர்களுக்கு மனதில் இடம் கொடுப்பதில்லை என்றும் அப்படியான இடத்தை பாஸ்கர்சக்தி பெற்றிருக்கிறார் என்றும் அதேபோல் நல்ல அன்பராகவும் நண்பராகவும் கூட மனதில் இடம் பெற்றிருக்கிறார் என்றார்.
ஞாநி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னமே சந்தித்த கணத்தில் தன்னையே கண்டது போல உணர்ந்ததாகக் கூறினார். யுகபாரதியும் சிம்புதேவனும் சிறுகதை மட்டுமல்லாமல் திரைக்கதை சின்னத் திரை வசனம் உட்பட எதிலும் தனி முத்திரை பதிக்கிறவர் என சிலாகித்தனர்.
நண்பர்களுக்கும் வருகை தந்தவர்களுக்கும் நன்றி கூறி பாஸ்கர்சக்தி ஏற்புரை வழங்கினார்.
அடுத்ததாக எஸ்.லட்சுமணப்பெருமாளின் கதைகள் தொகுப்பை பத்திரிக்கையாளர் ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் விஜயசங்கர் வெளியட கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றினார். விஜய சங்கர் படித்த அளவிலான கதைகள் உணர்வு நிலைகளைக் கிளறியதோடல்லாமல் கிராமத்தைக் காட்சிப்படுத்தியது என்றார். முத்துக்குமார் இத்தினத்தில் வெளியிடப்படுகிற மூன்று எழுத்தாளர்களது எழுத்தில் உள்ள நகைச்சுவை மற்றும் வாழ்வின் மீதான அக்கறை குறித்து ஒப்புமை நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் ராம் எழுத்தாளனின் தீவிரமும் உழைப்பும் ஒரு போராளியின் செயல்பாட்டுக்கு இணையானது என்கிற தொனியை பேச்சில் வெளிப்படுத்தினார்.
மூன்றாவதாகவும் முடிவாகவும்
க.சீ. சிவகுமாரின் ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
சிவகுமாரின் தொகுப்புக்கு சுகுமாரன் வாசித்த கட்டுரை வடிவத்தை www.nayakan.blogspot.com மில் காணலாம்.கு.கருணாநிதியின் உரைக்குப்பின் ஏற்புரை வழங்கிய க.சீ.சிவகுமார் புத்தகத்தை களிகூர்ந்திருந்த மாரீசை மேடைக்கு அழைத்து பிரதியை வழங்கினார்.
பி.ஜே. அமலதாசின் நிறைவான மகிழ்வான நன்றிய்ரைக்குப் பின் அரங்கத்துக்கு வெளியே வந்து குழுமியவர்களை இந்த நூறாண்டுகளின் ஆகப்பெரிய நிலா ராத்திரி வரவேற்றுத் தண்ணொளி பொழிந்தது.
ஜனவரி 31- நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூர் மியூசியத்தின் எதிப்புறம் அமைந்துள்ள எக்சா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.வி.ஜெயஸ்ரீ வரவேற்புரை நல்கினார்.
முதலில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’
நூலினை பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெற்றுக்கொண்டார்.
நூலினைக் குறித்து பிரபஞ்சனும் இயக்குனர் மிஷ்கினும் பிரதி தந்த பரவசத்தை மத்தாப்பு மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
அடுத்து சா.தேவதாஸ் மொழி பெயர்த்த ஹென்றி ஜேம்சின் ’அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட எழுத்தாளர் அஞ்சனா பெற்றுக்கொண்டார். வெளியிட்ட சண்முகம் நூல் குறித்த விரிவான செறிவான உரை வழங்க பத்திரிக்கையாளர் கடற்கரய் அவை கலகலக்கும் உரை வழங்கினார்.சுருக்கமான ஏற்புரையை தேவதாஸ் வழங்கினார்.
அடுத்து உதயசங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் பெற்றுக்கொண்டார்.மணி மாறனின் விரிவான கதைகள் பற்றிய உரையாடலுக்குப் பின் உதயசங்கர் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வு நிறைவில் பவா செல்லதுரை நன்றியுரைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இருநாட்கள் நிகழ்ச்சிகளின் நினைவுகளிலிருந்து நான்கு நாட்களாகியும் வெளிவர இயலவில்லை. நண்பர்கள் என் மீதும் வம்சி பதிப்பகம் மற்றும் குடும்பத்தினர் மீதும் வைத்துள்ள தனிப்பட்ட பிரியத்தை மேடைகளில் கேட்டபோது நம்பமுடியாத்தாக இருந்தது. இருநாள் நிகழ்வுகளுக்கும் வந்திருந்த விருந்தினர்களும் வாசகர்களும் இந்த நிகழ்வுகளின் மீது அக்கறையும் அன்பும் என்றென்றும் மறக்க இயலாதது.
இருநாள் நிகழ்ச்சி பற்றி இன்னும் எழுத எண்ணமுள்ளது. அதற்கு முன் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)
