Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Tuesday, October 29, 2013

மஞ்சேரிவரை


நான் எழுதிய எல்லா நாளும் கார்த்திகை அதே பெயரில் டாக்டர் ரகுராம் (இவர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்) அவர்களால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கோழிக்கோடு ராஸ்பெரி பப்ளிஷர்களால் பதிப்பிக்கப்பட்டு 26.10.2013 சனிக்கிழமை மாலை மஞ்சேரி Wood Bine ஆடிட்டோரியத்தில் அதன் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(மஞ்சேரி, பாலக்காட்டிற்கும், கோழிக்கோட்டிற்குமிடையே உள்ள சிறுநகரம்)
வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு மூன்று கார்களில் என் பதினெட்டு நண்பர்களோடு புறப்படும்போதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. வழியில் அரூர் ஸ்வேதா ஓட்டலின் அசைவ உணவை வைத்தே பயணம் தீர்மானிக்கப்பட்டது. ஒரு சதவீதமும் ஏமாற்றாமல் அந்த ஹோட்டலில், மட்டன் குழம்பு, ஒண்ணுக்குள்ள ஒண்ணு (பரோட்டாவில் உடைத்து ஊற்றிய முட்டை) நாட்டுக்கோழி வறுவல், போட்டிக்கறி, தலைக்கறி, கல்தோசையென எங்கள் ருசி அகலமாகிக் கொண்டே போனது. மதிய சாப்பாடு தேவையில்லையென எல்லாருமே அப்போதே முடிவு செய்திருந்தோம்.
என் மகன் வம்சியும், மானசியும் அவர்களுக்கு பிடித்தமான அம்மம்மா, பாஸ் அண்ணன், அஜிதன் (எழுத்தாளர் ஜெயமோகனின் மகன்) இவர்கள் பயணித்த டவேராவைத் தேர்த்தெடுத்துக் கொண்டார்கள். தான் புதிதாய் வாங்கியிருந்த எல்லோரையும் பொறாமைப்படுத்திய சிகப்புநிற ஆடி ஏ4-ல் ஓவியர் சீனிவாசனும், நண்பன் கார்த்தியும் மாற்றி, மாற்றி ஓட்ட பயணம் குதூகலித்தது.
சேலத்தில் நண்பன் வேலுவும், ஸ்நேகிதி அல்லியும் கைக்குலுக்கி பயணத்தை மேலும் உற்சாகமாக்கினார்கள்.

மாலை கோவை மருத்துவமனைக்கு எதிரில் நல்லதொரு விடுதியில் என் நண்பன் அக்னி நந்து நான்கு விசாலமான அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இரவு குளித்து முடித்ததும் உரையாடல் ஆரம்பித்தது. மொழிபெயர்ப்பாளர்   ஜி. குப்புசாமி தன் மனைவி நர்மதாவை ஷைலஜா, ஜெயஸ்ரீ அறைக்கு அனுப்பிவிட்டு எங்களோடு சங்கமித்துக் கொண்டார்.
முப்பது மில்லிக்கும் குறைவான ஒயின் கண்ணாடி டம்ளர்களில் தேங்கி நின்றது கொள்ளை அழகு.
பேச்சு சுழன்று சுழன்று அறைக்கு வெளியே அவசரத்தில் தத்தளித்து. நான் புதிதாய் எழுதப் போகும் ஒரு கதையின் கரு எல்லோரையும் வசீகரித்தது. நான் உற்சாகமேறியிருந்தேன்.
சீனுவாசன் சாரும், கார்த்தியும், ஜெய்யும் வம்சியும் கோவை மாநகரில் ஒரு இரவு உலாவுக்குச் சென்றார்கள். அவர்களின் உலகங்களாக விதவிதமான கார்கள், பைக்குகள் இவை கோவையில் யார் யாரிடம் உள்ளன என பட்டியல்கள் அவர்களின் செல்போனுக்கு அதற்குள் தகவல்களாக வந்து குவிந்திருந்தன.
இரவு இரண்டு மணிக்கு மேல்தான் அவரவர் அறைக்கு அவர்கள் திரும்பினார்கள். நான் அடுத்த நாள் நிகழ்வுக்குப் போட வேண்டி விலையுயர்ந்த ஒரு சட்டை வாங்கி வந்திருந்தார்கள்.
என்னை சந்திக்க கோவையில் பல நண்பர்கள் வந்திருந்தார்கள். தகவல் தெரியாதவர்கள் திட்டித் தீர்த்தார்கள். தன் வாசகி யாழினியை சந்திக்க ஷைலுவும், ஜெயஸ்ரீயும் காரில் கிளம்பிப் போயி வந்தார்கள். எல்லாம் பரபரப்பான ஒரு திரைப்படக் காட்சி போல விரிந்து கொண்டேயிருந்தன.

எழுத்தாளர் சூர்யகாந்தன் தன் புகழ்பெற்ற மானாவாரி மனிதர்கள் நாவலை மறுபதிப்பு செய்யவேண்டி எங்களை சந்திக்க அறைக்கு வந்திருந்தார். என் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ராம்கோபால் இரவு உணவுக்கு எங்கள் எல்லோரையும் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு வரமுடியாத சூழலை நான் விவரித்ததும் அவர் தொலைபேசியை அவர் மனைவியிடம் தர, அவர் செய்து கொண்டிருக்கும் உணவு வகைகளின் பட்டியல் ஒரு நிமிடம் என் மன நிம்மதியைக் குலைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டேன். திரும்பும் வழியில் சந்திப்பதாக ஒரு பொய் வாக்குறுதியைக் கொடுத்தேன்.
கோவையிலிருந்து லீனா ஜோஸ் என்ற என் வாசகி தன் கணவருக்கு இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக என்னுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன் என மெயில் அனுப்பியிருந்தார். அவ்வளவு சிரமம் ஏன் எனக் கோவையிலேயே சந்திக்க விரும்பினேன். அதற்கு அவகாசம் தராமல் நானும் என் கணவரும் மஞ்சேரி புத்தக வெளியீட்டில் சந்திக்கிறோம் என மறுபடியும் மெயில் அனுப்பியிருந்தார்.
காலைத் தேனீருக்கு செல்வேந்திரன் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இரண்டு காரிலும் இருந்தவர்களை அவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கார், பைக் பார்த்த உற்சாகத்தில் எனக்கு வாங்கப்பட்ட சட்டையை அந்த ஷாப்பிங் மாலிலேயே விட்டுவிட்டு வந்ததை எடுக்க நாங்கள் போவதற்கும், அக்கடையைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது.
எடுத்து முடித்து நேரம் பார்க்கையில்தான் மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. லேசான பதட்டம் எங்களைத் தொற்றிக் கொள்ள, செல்வேந்திரனிடம் ஒரு தொலைபேசி மன்னிப்புக் கேட்டு மஞ்சேரி என்ற அந்த கனவு நகரத்திற்கு விரைந்தோம்.

கோவையிலிருந்து பாலக்காட்டிற்குச் செல்லும் சாலை சற்றும் குறைவில்லாமல் நம் ஊர் சுடுகாட்டிற்குப் போகும் சாலையை விடவும் கேவலமாயிருந்தது. கல்லடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உம்மன்சாண்டியும், நாளுக்கொருதரம் அமைச்சர்களை மாற்றும் அம்மாவும் இதை எப்போதாவது கவனிக்க வேண்டும் என்பதற்காக மதுக்கரை லாரி உரிமையாளர் சங்கம் தன் பணியாளர்களுடன் ஒரு கருஞ்சட்டை ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தார்கள். காரிலிருந்து மனதார வாழ்த்தினோம். கீழறங்கி ஓடி ஊர்வலத்தின் முன் நின்று கோஷம் போட நினைத்த மனதை காரின் வேகம் அடக்கியது.
பாலக்காட்டிலிருந்து மஞ்சேரி செல்லும் சாலையின் இருபுறமும் தான்தோன்றித்தனமாக வளர்த்திருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும், பூத்து, காய்த்து, கனித்து எங்களை வாரி உள்ளிழுத்துக் கொண்டது. ஒரு பெண்ணிடம் புதைந்து போகும் ஆணின் பரவசர மயக்க நிலை அது. மலைப்பாதைதான் அது என்றாலும் மலையேறும் உணர்வு இல்லை. கொஞ்சம் தரை, கொஞ்சம் மலையென மாறிமாறி வளைந்து, நெளிந்து அது எங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசீகரித்தது.
டாக்டர் ரகுராம் வீட்டில் எங்கள் வருகைக்காக எடிட்டர் பீ.லெனின், வைட்ஆங்கிள் ரவிசங்கரன், தமிழ் ஸ்டுடியோ அருண் மூவரும் காத்திருந்தார்கள். அகோர பசியிலிருந்தோம். டாக்டர் ரகுராம் வீட்டில் நவநீத அக்கா எங்களுக்காக விதவிதமாய் சமைத்திருந்தார்கள். நெய்மீன் வருவல் எங்களை இன்னும் ஈர்த்தது. சாப்பிட்டு முடித்து அவசர அவசரமாக ஹோட்டல் மலபாருக்குப் போனோம். அதற்குள் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு லெனின் சாரும், ரவிசங்கரும், அருணும் மாடியிலிருந்து  கீழறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மிகுந்த களைப்பில் நானும், சீனுவாசன் சாரும் படுக்கையில் படுத்தோம். அப்படியே தரையிலிருந்து தன் இறையை உள்ளிழுத்துக் கொள்ளும் பாம்பைப்போல தூக்கம் எங்களை இழுத்துக் கொண்டது.
யாரோ எழுப்பியதை வைத்துப் பதறி அடித்து எழுந்தால் நேரம் ஆறைத் தாண்டியிருந்தது. பரபரப்பாகி தயாராகி ட்ராப்பிக்கில் மாட்டி Wood Bine  அரங்கை அடையும்போது மௌனமாக்கப்பட்டிருந்த என் தொலைபேசியைக் கவனித்தேன். ஷைலஜா இருபது முறை என்னை அழைத்திருந்தாள்.
முதல் தளத்திற்கு ஏறக்குறைய ஓடினேன். அப்பெரிய அரங்கு நிரம்பியிருந்தது.  நான் மிக மதிக்கும் மலையாக எழுத்தாளர் டி.டீ. ராமகிருஷ்ணன் என் புத்தகம் குறித்து அழகான மலையாளத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
கவிஞரும், எழுத்தாளருமான கல்பட்டா நாரயணனுக்கும், எடிட்டர் லெனினுக்கும் இடையே எனக்கான இருக்கையிலமர்ந்தேன். பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டிய நிமிடம் நெகிழ்ந்து நின்று எழுந்து கைக்கூப்பினேன். ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து கல்பட்டா நாரயணன் சங்கீதத்தையும் தாண்டிய ஒரு மொழியில் கிட்டதட்ட பாடினார். அதை கேட்டுக் கொண்டேயிருக்க மனம் ஏங்கியது. சலித்துப் போகாத காதலியின் ஆரம்பகால முத்தங்களின் போது உடல் ஒருவிதமாக முறுவலிக்குமே அப்படி.
ஆனால் கனவுகள்தான் பாதியில் அறுத்து போகுமே, கல்பட்டாவும் தன் உரையை நிறைவு செய்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் கதையில் வரும் ஒரு திருடன் நாட்டு ஓடுகளைப் பிரித்து களவுக்காக வீட்டிற்குள் இறங்கும்போது அந்த நிசப்தமான கணத்தைத் தாண்டி கேட்கும் மெல்லிய சத்தம் ஒரு பூசணிப்பூவின் மலரல் என அவர் முடிக்கும்போது முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கேரளாவின் மிக முக்கியமான  கதகளிக் கலைஞர் கோட்டக்கல் சசீதரன் எழுந்து நின்று கைத்தட்டினார். அவர் கண்கள் நிறைந்திருந்தை மேடையிலிருந்து கவனித்தேன்.
அடுத்து மதுரமானதொரு மலையாள மொழியில் அந்நிகழ்ச்சி தொகுப்பாளரும், மலையாளத்தில் 100 க்கும் மேற்பட்ட நவீனச் சிறுகதைகளை எழுதியிருப்பவருமான ரகுமான் கிடங்கயம் புத்தக வெளியீட்டு நிகழ்வை அறிமுகப்படுத்தினார்.
பிரசஸ்த்தி பெற்ற எழுத்துகாரன் கல்பட்டா நாரயணன் இப்புத்தகத்தை வெளியிட பிரசஸ்த்தி பெற்ற சித்திரக்காரன் கலைமாமணி என்.சீனிவாசன் இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். ஓரமாய் நின்றிருந்த என்னை இழுத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் நிற்க வைத்து அழகு பார்த்தார் எங்கள் லெனின்.
அரங்கு கைத்தட்டிக் கொண்டேயிருந்தது. சில்ரன் ஆப் ஹெவனில் வரும் அப்பையன் முதல் பரிசு பெற்று அச்சிறு மேடைமீது நின்றிருப்பான்.
‘‘மாஸ்டர் கொஞ்சம் தலையை உயர்த்துங்க’’ என ஒரு புகைப்படக்காரனின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்ப்பான்.
நிமிர்ந்து பார்த்தேன். என்னெதிரே பத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள், தங்கள் கேமராக்களில் மாறி, மாறி இதைப் போட்டிபோட்டு பதிவு செய்தார்கள். பெரும் உற்சாகம் அந்த அரங்கில் நிறைந்து நின்றது.
ஒரு கணம் என் கண்கள் கலங்கின. நான் எழுத ஆரம்பித்த அந்த முதல் நிமிஷம் ஞாபகம் வந்து போனது. பட்ட அவமானங்களில் உடல் எரிந்தது. எல்லாம் எல்லாம் சரியாகி, மொழி தெரியாத இம்மாநிலத்தில் இத்தனை நூறுபேர் என் எழுத்தின் சுவை தேடி வந்திருக்கிறார்கள். என்னை அவர்களின் பிள்ளையாய் சுவீகரிக்கிறார்கள். ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு ஞானஸ்நானத் தொட்டில்  நிறைந்த நீர் ததும்பியது.
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
இன்னும் எழுதலாமா?

Wednesday, October 23, 2013

யேசு கதைகள் வெளியீட்டு விழா

       20.10.2013 ஞாயிற்று கிழமை மொழிப்பெயர்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ வீட்டில் நிகழ்ந்த அவர் மொழிபெயர்த்த பால் சக்காரியாவின் யேசு கதைகள் வெளியீட்டு நிகழ்வின் ஒளி வடிவம்.

நிகழ்வை ஒருங்கினைத்த நண்பன் ஜே.பி 

தீவிர கவனிப்பில் மகள் மானசி

ஏற்புரையில் கே.வி.ஜெயஸ்ரீ

அழகிய பெரியவன்

தொகுப்பை வெளியிடும் ஜெயமோகன், பிரதியை பெற்றுக்கொள்ளும் தேவதேவன்

உரையாற்றும் ஜெயமோகன்

பார்வையாளர்கள்

முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் முன்னாள் பேராயர் கிடியன் தேவநேசன்

பார்வையாளர்களின் இன்னொரு பகுதி

நான்



அரங்கு




 புகைப்படங்கள் - ஷிவாத்மா

Friday, November 16, 2012

ஜெயஸ்ரீயின் கல்வீடு என் பங்களிப்பு


ஜெயஸ்ரீயின் வீடு  என்று தலைப்பிட்டு இன்று ஜெயமோகன் (Jayamohan.in) அவர் வலைத்தளத்தில் எழுதியிருந்ததை வாசித்ததும், அதன் உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபட்ட எனக்கும் அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியது.

ஜெயஸ்ரீயின் கணவர் உத்ரகுமாருக்கு அவருடைய குடும்ப பாகமாக 3 லட்ச ரூபாய் கிடைத்தபோது அதைவைத்து சாரோன் பகுதியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கடைசிவரை கைகூடவில்லை. ஐந்துலட்சத்திற்கும் குறைவாக 20க்கு50 அடியுள்ள மனையும் கிடைக்காத போது ஷைலஜாதான் அந்த யோசனையைச் சொன்னாள்.




நம் நிலத்தருகே 50 சென்ட் இடம் வாங்குவது ஒரு காற்றோட்டமான, விசாலமான வீடு கட்டுவது  அது அப்படியே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் வாங்கி அங்கிருந்த ஒரு கல்லாங்குத்து அழிக்கப்பட்டு அதன் மேல் கடகால் போடபட்ட போது உள்ளிருந்து வந்த கருங்கற்கள் பரவசப்படுத்தின.

மிக ஆழமான கடகால் தோண்டி அக் கருங்கல் துண்டுகளோடு செம்மாண் கலந்து கரைத்துவிட்டு கடகாலை மூடியதற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே செலவானது.

என்  நண்பன், புகழ்பெற்ற புகைப்படக்காரன் பினுபாஸ்கரின் தம்பி பிஜீ பாஸ்கர் மாற்று வீடுகளுக்கான கனவு காண்பவனும்  கட்டி முடிப்பவனுமான ஒரு நவீன ஆர்க்கிடெக்ட். அவனிடம் இவ்வீடு பற்றி விவாதித்தோம். முதலில் செங்கல் என்றும் பிறகு அங்கு கிடைக்கும் கருங்கற்களே போதும் என்றும் முடிவானது.

அவ்வீட்டிற்கான ஒரு பிளானை தந்துவிட்டு வழக்கமான எல்லா கலைஞர்களையும் போல எங்கோயோ காணாமல்   போனான் பிஜீ. அவ்வீட்டின் கட்டுமானத்தை நாங்களே, (நான், ஷைலஜா, ஜெயஸ்ரீ, உத்ரா) ஆகிய நால்வருமே ஒரு சவாலாக எடுத்துக்  கொண்டு வேலைகளைத்  துவக்கினோம்.  கருங்கல்லிலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்த ஒருவனை தற்செயலாக சந்தித்தேன். தன் பெயர் மாது என்றும், தர்மபுரி மாவட்டம் மத்தூர் தன் சொந்த ஊர் என்றும் சொன்ன மாது பத்து உடைக்கற்களை கொண்டு சீத்தாப்பளி பழம்போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி இதுதான் இவ்வீடு என்று சொன்ன அவ்விநாடி, அவ்வீட்டின் நிறைவு என் முன் பிரம்மாண்டமாய் விரிந்தது.



அன்றிலிருந்து ஒரு படைப்பு மனங்கொண்டு அனைவரும் இயங்கினோம். வெய்யில் காலத்தில் ஆரம்பித்த அவ்வீடு வளர வளர எங்கள் படைப்பின் பக்கங்ககள் கூடிக் கொண்டே போனது. நினைத்தது கைக்கூடாத போது அப்பெரும் நிலப்பரப்பில் நின்று தனியாக அழுதிருக்கிறேன். மசூதியிலிருந்தும் மண்டபத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்த கற்றூண்கள் தூக்கி நிறுத்தப்பட்ட போது முற்றிலும் பரவச மனநிலையை அடைந்தோம்.

கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் அதனுள் மூழ்கி இருந்தோம். அதற்கொரு எளிமையான திறப்புவிழாவை நடத்துவதென்றும்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவ்வீட்டை திறப்பதென்றும், எங்கள் எல்லோராலும் வீட்டின் மூத்த அண்ணனாக என்றும் நினைக்கப்படுகிற  எங்கள் பிரியத்திற்குரிய சேலம் மணி அண்ணன் (தமிழ் செல்வன், கோணங்கியின் தம்பி) பால் காய்ச்சுவதென்றும் முடிவு செய்தோம்.

எல்லாம் அவ்விதமேயானது. உடன் நண்பர் மிஷ்கின், எஸ்.கே.பி. கருணா, அ. முத்துகிருஷ்ணன், பாஸ்கர் சக்தி, தேனி ஈஸ்வர், வைட் ஆங்கிள் ரவி சங்கர், முருகபூபதி, என்று நண்பர்களால் நிறைந்தது அவ்வீடு.




புதிய வீட்டை எங்கள் முன்னத்தி ஏர் பிரபஞ்சன் திறப்பார் எனச் சொன்னவுடன் புது பட்டுவேட்டி, ஜிப்பாவிலிருந்த பிரபஞ்சன் மிகுந்த சந்தோசத்தோடு கத்தரிக்கோலை கையில் எடுக்க, நாங்கள் யாரும் எதிர்பாராத  அத்தருணத்தில்

காணிநிலம் வேண்டும் - பராசக்தி
காணிநிலம் வேண்டும்”    என

தன் கம்பீரமான குரலில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடத்துவங்க, ஜெயஸ்ரீயின் அம்மாவின் முகம் ஆனந்தமும்துயரமும், கண்ணீரும், பெருமிமுமான பல்வேறு நிலைகளுக்கு சென்று திரும்பியது. என் அன்பிற்குரிய புகைப்படக் கார தம்பிகள் வேலு, ஜான்சன் எல்லோருமே தவறவிட்ட  அற்புத கணங்கள் அவை.



அவ்வீட்டின் மொட்டை மாடியில் பெரிய ஸ்கீரின் ஒன்றை வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிளுருக்கும்  கிராமத்திற்கும் சேர்த்து படம் போட போகிறோம். அத்திரையை நண்பர் மிஷ்கின் திறந்துவைத்தார். அதன் அருகில் அவர் சமீபத்தில் மொழிபெயர்த்த பருந்து கவிதை ஒரு ப்ளக்ஸ் பேனரில் பிரிண்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. சற்றே உணர்வுபயப்பட்ட மிஷ்கின் அங்கிருந்தவர்களுக்கு அக்கவிதையை வாசித்துக் காட்டினார். 



இப்புதிய வீட்டின் துவக்கத்தில் என் முப்பதாண்டுகால நண்பர்களும், தமிழின் நவீன இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களுமான, ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், கோணங்கி ஆகிய மூவரும் எங்களோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீராத ஆசை சில மணித்துளிகளின் இடைவெளிகளில் நிறைவேறியது. முந்தின இரவே ராமகிருஷ்ணனும்அன்று காலை கோணங்கியும், அடுத்த நாள் அதிகாலை ஜெயமோகனுமாய் வந்து அவ்வீட்டை நிறைத்தார்கள். குதூகலமான கொண்டாட்டங்களோடு நாள் நீண்டது. 









எல்லார் விருப்பத்திற்கிணங்க அன்று மதியம் கறிச்சோறுப் போட்டோம். சுடுசோறும், ரத்த பொறியல், மட்டன் குழம்பு, நாட்டுக்கோழி வறுவல் கதம்பம் (போட்டி, நுரையீரல், ஈரல், கிட்னி..) எலும்பு ரசம் என்று ஆட்டின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு பாத்திரங்களில் வெந்தன. அன்றிரவு எல்லோரும் புதுவீட்டின் வெற்று தரை  குளிர்ச்சியில் படுத்துறங்கினோம்.

அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் நான் மட்டும் வெகு தூரம் வந்து திரும்பி  பார்த்தேன்.

ஒரு கனவு முற்றுப்பெற்றது போலவும், ஆனால் முடிக்க முடியாத ஒரு ஓவியம் மாதிரியும் வயல்வெளிகளுக்குக் கிடையில் அவ்வீடு பனியில் நனைந்திருந்தது.









 திறப்புவிழா நிகழ்வுகள் முடிவுறாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தன. அதன் இன்னொரு தொடர்ச்சியாக, அன்றுமாலை ஏழுமணிக்கு குவாவாடீஸ்சில் மிஷ்கின் தான் சமீபத்தில் மொழிபெயர்த்த ஜந்து கவிதைகளையும், தான் எழுதிய ஒரு கவிதையையும் வாசகர்கள்  முன் தன் குரலால் சமர்பித்தார்.



சில விவாதங்களை தவிர்த்திருந்தால் அது ஒரு குழைவான அனுபவமாக மாறியிருக்கும்  எல்லாவற்றையும் மீறி எல்லார் மனதிலும் கவிதைத் தேங்கியிருந்தது.

Monday, August 16, 2010

‘‘வம்சி’’யின் குழந்தைகள் கொண்டாட்டம்



குழந்தைகளின் குதூகல சங்கமம்


திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியை ஒட்டிய அந்த நீண்ட பாதையில் போய் கொண்டே இருந்தால், சமுத்திர ஏரிக் கரையின் பிரம்மாண்டமும், அதில் தன்னிச்சையாக வளர்ந்து நிற்கும் பனைமரங்களும் காலத்தின் பழமையில் இறுகிய புளிய மரங்களும் வழி நெடுக நமக்கு துணை வரும். அதன் முடிவில் பரந்து விரிந்த மரங்கள்... மரங்கள்... மரங்கள்...

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின் பகல் ஒரு மணிக்கு கொத்து கொத்தாய் குழந்தைகளில் வருகையில் உயிர் கொள்கிறது அம் மைதானம்.

முன்னூறு குழந்தைகள். அநேகமாக எல்லா குழந்தைகளும் அப்பா, அம்மாவை இழந்தவர்கள். பல்வேறு விடுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். குழந்தைகளின் சங்கமத்தை இன்னும் குதுகலமாக்குகிறது 'பாப்பம்பாடி ஜமா'. நம் ஆதி இசையின் முழகத்திற்க்கு குழந்தைகளின் ஆட்டம் வர்ணிக்க முடியாதது.

குழந்தைகளின் குவியலிலிருந்து அவர்களின் விருப்பத்தின்படி, ஓவியம் கற்றுக் கொள்ள, களிமண் சிற்பம் செய்ய, கதைகேட்க பாட்டு கற்க, அனுபவம் பகிர , புகைப்படம் பயில என தனித்தனி குழுக்களாக பிரிகின்றனர். மரக்கூட்டங்களால் லேசான இருள் சூழ்ந்த அம் மைதான வெளி எல்லோரையும் அனுமதித்துக் கொண்டேயிருக்கிறது. புகைப்படக் கலையில் 'Birds View' என்பது மாதிரி ஒரு பறவையின் பார்வையில் கொத்து கொத்தான சிறு மலர்கள் மைதானமெங்கும் பரந்து கிடந்தார்கள். ஓவியம் கற்றுக் கொள்ள வந்த குழந்தைகளை ஓவியர்கள் கோபி, ஸ்டெல்லா, எழில், துரைஎழிலன், கருப்புசாமி ஆகியோர்கள் தங்களின் அனுபவத்தை குழைத்து அக்குழந்தைகளின் சிரிப்பில் குழிவிழும் கன்னத்திற்கு திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பனசாமி, சாமிநாதன், கதிர், தாமரி டீச்சர், எல்லோரும் ஒரு குழுவாகி மாறி, மாறி குழந்தைகளிடம் கதைசொல்வதும், கதைகேட்பதுமாய் லேசான மழைத்தூரலினூடான அப்பகலை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தனர்.

காட்டின் சகல பக்கங்களை விளக்கும் சூழலியலாளர் மோகன்ராம்
இன்னொரு பக்கத்து பாறையில் அமர்ந்து, தன் காட்டுப்பயண அனுபவங்களை பச்சையம் மாறாமல் அக்குழந்தைகளின் மனங்களில் விதைத்து கொண்டிருந்தார் சூழலியலாளர் மோகன்ராம்.

மைதானத்து கிழக்கு மூலையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும், இருபதுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களும் வகுப்பறை அமைதியோடு அவ்விடத்தின் மௌனத்தை அடைகாத்து அமர்ந்திருக்கிறார்கள். ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து அவர்களுக்கு புகைப்படத்தின் நுட்பங்களை சொல்லிக் கொண்டிருந்தவர் இந்தியாவின் மிகப்பெரிய புகைப்பட ஆளுமை பி.சி.ஸ்ரீராம் தன் மனைவியுடனும், தன் ஆர்மார்த்த சிஷ்யன் வைட்ஆங்கிள் ரவிசங்கரனோடும் இதில் பங்கேற்ற பி.சி.யின் பங்கு அளவிடமுடியாதது. இவர்களோடு மிக முக்கிய புகைப்படக்காரர்கள் சேலம் விஜய், வேலு,எம்.ஆர்.விவேக் ஆகியோர்கள் சேர்ந்து ஒவ்வொரு குழந்தையின் கையிலும் கேமராவைத் தந்து படமெடுக்கவைத்து, அதை லேப்டாப்பில் ஏற்றி, colour correction செய்து, அக்குழந்தைகளுக்குக் காட்டி, ''தன் வாழ்நாளில் எப்போதும் அடையாத சந்தோஷத்தை இன்று அடைந்தேன்'' என பரவசப்பட்டார் பி.சி. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் எடுத்தப்படங்கள் 30"X40" அளவில் Print செய்து கொடுக்கப்போகிறோம்.
பி.சி.ஸ்ரீராம் அவர்கள் ஒரு குழந்தைக்கு புகைப்படம் கற்றுத்தரும் காட்சி

ற்றலின் முழு சந்தோஷத்தை குழந்தைகள் உணர்ந்த நாள் அது. இப்பிரமிப்பு இன்னும் விரிய ஏரிக் கரைச்சரிவிலிருந்து கிராமத்து மனுஷாள்கள் மாதிரி இறங்கி வந்து கொண்டிருந்தவர்கள் திருவண்ணாமலை கலெக்டரும், எஸ்.பி.யும். குழந்தைகளுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை.

அடுத்த நிகழ்வு ஆரம்பிக்கிறது.
குழந்தைகளுடன் மாவட்ட எஸ். பி. அவர்கள்
ஆளுமைகள் தங்கள் பால்ய காலங்களை குழந்தைளோடு பகிர்ந்து கொள்ளள். மைதானத்து நான்கு மூலைகளிலும் நான்கு பெருமரங்களை தேர்வுசெய்து, அதன் கீழ் அடுக்கிவைக்கப்பட்ட கருங்கல்மேடுகளில் உட்கார்ந்தார்கள் மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன், மாவட்ட எஸ்.பி. பாண்டியன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி, சந்தோஷமும், கிண்டலும், கேலியும் சிறுபொய்களும், கள்ளத்தனங்களும் நிறைந்த தங்கள் பள்ளிநாட்களை அவர்கள் பகிர்ந்து கொண்ட வினாடிகள் அவர்களே மீட்டெடுக்க முடியாதது. குழந்தைகள் அவர்களின் உரையாடல்களின் தொடர்ச்சியாக அவர்களுக்கே உரிய குறும்பு கேள்விகளால் ஆளுமைகளைக் குழந்தைகளாக்கினார்கள்.

எஸ்.பி.யிடம் ஒரு பையன், துப்பாக்கி இல்லாம நீங்க என்ன எஸ்.பி.சார்? என்றான்

அவர் வெடித்து சிரித்து, தன் காருக்கு ஒரு போலீசை அனுப்பி ரிவால்வரை எடுத்து குழந்தைகளுக்கு காண்பித்தார்.
சிலம்பம் சுற்றும் எஸ்.பி. பாண்டியன் அவர்கள்
உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் சார்? என்ற கேள்வியை கேட்டது ஒரு சாதரண ஆள் இல்லை. குழந்தை. அது கடவுளைவிடவும் ஒரு படி மேலானது இல்லையா! எஸ்.பி. தன் வீட்டிற்கு ஆளனுப்பி சிலம்பம் எடுத்துவரச்சொல்லி அதை அவர்களுக்கு சுற்றிக் காட்டினார். குழந்தைகளின் கைத்தட்டல் அவருக்கு ஒரு தேசிய விருதின் ஒத்திகையை நினைவுபடுத்தி இருக்கும்.

கலெக்டர் ராஜேந்திரனிடம் குழந்தைகளின் அன்பும், ஆர்வமும், கிண்டலும், நிறைந்த கேள்விகள் ஏராளம். அவர் தன் அனுபவ பகிர்தலை இப்படி ஆரம்பிக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன் தன் பால்யகால நினைவகள்

''தங்கள் வாழ்வைப்பற்றி சொல்ல ஏதோ ஒரு வகையில் ஜெயித்தவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். ஒரு கண்டக்டரை கூப்பிட்டு உன் வாழ்வை பகிர்ந்து கொள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்தை அழைத்து அப்படி சொல்வார்கள். ஏன் எனில் அவர் கண்டக்டராய் இருந்து ஒரு துறையின் உச்சத்தை அடைந்தவர்'' என்றுத் தொடங்கி அக்குழந்தைகளின் உலகில் சுலபமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார் அவரே அவரை மறந்து குழந்தையாகி இருந்தார். இங்கும் தன் அய்யாவின் பின்னால் நிற்க மனமில்லாத அவர் டவாலியும் ஒரு மூலையாகப்பார்த்து உட்கார்ந்து தன் அய்யாவின் பால்யத்தை பருகிக் கொண்டிருந்தார்.
.

பி.சி.ஸ்ரீராம் தன் சிஷ்யன் வைட்ஆங்கிள் ரவிசங்கரோடு, ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து தஞ்சாவூரில் தான் பிறந்து வளர்ந்ததை, தாத்தா வாங்கித் தந்த முதல் கேமராவில் முழு படமும் எடுத்து முடித்து, கழுவிப்பார்த்தால் ஒரு படமும் வராதது என தன் ஆரம்பநாட்களை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாணவர்களை அவர் தோள் மேல் நின்று அவர் பால்யத்தைக் காண அனுமதித்திருந்தார்.
எஸ்.கே.பி. சேர்மன் கு.கருணாநிதி ஆழ்ந்த யோசனைகளோடு

இன்னொரு பக்கம், தன் முப்பது வயதிற்குள் ஒரு பொறியியல் கல்லூரியைத் துவங்கி, வெறும் வியாபார நோக்கம் என்று அதன் எல்லைகளை சுருக்கி விடாமல், இன்றளவும் வாசிப்பின் மீதும், இலக்கியத்தின் மீதும், தீராத பற்றுடைய எஸ்.கே.பி. கு. கருணாநிதி, தன் வெற்றியின் இரகசியத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொறியியல் படிக்க ஆர்வமற்றவர்களை அறிய ஆவலோடு கைத்தூக்க சொன்னதற்கு, எல்லாக் குழந்தைகளும் கைதூக்கி அவரை அதிர்ச்சியூட்டினார்கள். இந்நிகழ்விடத்தின் மரச்செறிவின் மகத்து வத்தையும், இயற்கையையும் தங்கள் உள்ளங்கைகளில் பொத்திப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் மொழியில் அவர்கள் மேல் மழைத்தூறல் மாதிரி பொழிந்தார்.

அதிலிருந்து ஆரம்பித்து, குழந்தைகளின் சட்டை ஜோப்பிகளில் நம்பிக்கை விதைகளை நிரப்பி அனுப்பினார்.

சாயங்காலம் ஆறாகப் போகிறது, இருட்டு மெல்ல கவ்வி இடம்பிடிக்கிறது. குழந்தைகள் தங்கள் முன் உட்கார்ந்திருக்கும் ஆளுமைகளை தங்கள் கேள்விகளால் பிணைத்திருக்கிறார்கள். அந்த அன்பின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு போக ஆளுமைகளால் முடியவில்லை.
வேலுச் சரவணன் தன் பரிவாரங்களோடு

ஆனால் ஒரு புயலென, பெரும் சத்தத்தோடு தன் பரிவாரங்களோடு அம்மைதானத்திற்குள் புழுதியை கிளப்பிக் கொண்டு நுழைகிறான் 'வேலு மாமா' என்று தமிழகக் குழந்தைகளோடு அன்போடு அழைக்கப்படும் வேலுச்சரவணன்.

'தேவலோக யானை' 'சீத்தா' 'கடல்பூதம்' என்ற தன் மூன்று நாடகங்கள் மூலம் அக்குழந்தைகளை மகிழ்வின் எல்லைக்கே கைப்பிடித்து கூட்டிப்போனான். சுற்றி நின்ற பெருசுகளை தன் மாயவித்தைகளால் குழந்தைகளாக மாற்றினான். மோடிவித்தைக் காரனிடம் மாட்டிக் கொண்ட பள்ளிக்கு போகும் மாணவனைப் போல அப்பெருசுகள் அவனிடம் மாட்டிக் கொண்டனர்.

போலீசும், மனித மனங்களும், சூழலும், அனுமதித்தாலும் இருட்டு அதற்கு மேலும் அனுமதி தர மறுத்த தருணமது. எஸ்.கே.பி.கருணா அத்தனைக் குழந்தைகளுக்கும் நெய்யொழுகும் கேசரியும், சுடசுட கிச்சடியும் பறிமாறி, கலெக்டர் அத்தனைக் குழந்தைகளுக்கும் சால்வைகள் பரிசளிக்க, எல்லோரும் கலைந்து போன அந்நிமிடத்திற்காக காத்திருந்து இருட்டு முற்றிலும் கவ்விக்கொண்டது. நிலாவை பாம்பு தின்ற அவ்விநாடி, குழந்தைகளற்ற அம்மரங்களடர்ந்த மைதானத்தை திரும்பி பார்க்கிறேன்.

தாங்க முடியவில்லை.

Tuesday, October 20, 2009

ஏழுமலை ஜமா



சில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

விடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.

இக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்? என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.


அத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.

படப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.

ஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.

இன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.

ஏழுமலை ஜமா குறுபடத்தை காண

Thursday, July 23, 2009

யோகிராம்சூரத்குமார் - An Impossible Friend 2



முதல் சந்திப்பு

யோகிராம்சூரத்குமார் சந்திப்பு-2

அது ஒரு லயனர்ஸ் சங்கக்கூட்டம். அரங்கு முழுக்க பெரும்பாலும் மாமிகள் நிரம்பியிருந்தார்கள். ஆண்களுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனாலும் குறைவான ஆண்கள் வந்திருந்தார்கள். அன்றைய சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன். இரும்புகுதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்களென வெற்றியின் மீதேறி நின்று எதிரில் உட்கார்ந்திருந்த மாமிகளுக்கு சொல்ல அவரிடம் நிறைய அகங்காரமான சொற்களிருந்தன. நானும் என் நண்பர்கள் சிலரும் வாசிப்பின் போதையில் திரிந்த காலமது. புதிய விஷயங்களை படிக்க, படிக்க பழமையான விஷயங்களில் ஒன்றுமில்லையென ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தோம். குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் இல்லையெனவும், சுந்தரராமசாமி, அம்பை, நா. முத்துசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜி. நாகராஜன் என எங்கள் வாசிப்பறைகள் இவர்களின் வாழ்வுலகங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரு சின்னத்திமிர் எங்கள் மீது எங்களையறியாமல் ஏறியிருந்தது. எந்தக் கூட்டத்தில் பேசும் பேச்சாளரை விடவும் எங்களுக்கு அதிகம் தெரியும் என நம்பியிருந்தோம்.

வம்பிழுப்பதற்காகவே பாலகுமாரன் பேசவிருந்த கூட்டத்தில் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். உடனிருந்த பார்வையாளர்கள் ஒன்றுமில்லாத ஆட்டுமந்தைகள். வெறும் பத்திரிகை கவர்ச்சிக்காக வந்திருப்பவர்கள். அவர்கள் எங்களை கொஞ்சம் உற்று கவனித்தால் எங்கள் தலையிலிருந்து மேதமை பொங்குவதை கவனிக்கமுடியும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு பிறகு பாலகுமாரன் ஒரு உபதேச உரையாற்றினார். வெற்றி பெற்றவர்கள் எதிரிலிருக்கும் மந்தைகளுக்கு போதிக்கும் உரை அது. பேசி முடித்து முகமெங்கும் பெருமிதம் பொங்க பார்வையாளர்களிடம் இருந்து விலகினார். விவாதத்தில் பங்கேற்பாளர்கள் யாரும், இருக்கப்போவதில்லை என்ற உறுதியுடன் பத்து நிமிடம் கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த மௌனம் உடன் உடைபட என் ஸ்நேகிதி கோமதி எழுந்து, பாலகுமாரனின் எழுத்து எத்தனை போலியானது என்றும், அது காலத்தின் முன் நசுங்கி மிதிபட்டு மறையும் காலம் வெகு அருகில் உள்ளதென்றும் கோபம் கொப்பளிக்க பேசினார்.

இக்குரல் அவ்வரங்கம் எதிர்பாராதது. அதிர்ச்சியில் உறைந்த பலகண்கள் கோமதியின் பக்கம் திரும்பின. பாலகுமாரனின் இரு மனைவிகளும் அவ்வரங்கில் பார்வையாளர்களாயிருந்தார்கள். எதிர்பாராத இத்தாக்குதலில் கொஞ்சமும் நிலைகுலையாமல் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒலிபெருக்கியை தன்பக்கமிழுத்து,

உன் பேரென்னம்மா?

கோமதி.

என்ன படிக்கிற?

எம்.எஸ்.சி. பாட்டனி.

என் கதைகள் நீ நினைக்கிறமாதிரி வாசிப்பின் ருசிக்கானது அல்ல. அது வாழ்வின் அவலத்தை அள்ளிக் கொண்டுவருவது. அதை படிப்பதற்கு நீ இன்னும் உன்னை கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு எழுத்தை சரியாக படிப்பதற்கே பயிற்சி வேண்டும்.

நீ சரியாக எழுது

என் குரல் கோபத்தில் உயர்ந்தடங்கியது.

உங்க பெயர்.

பவா செல்லதுரை.

நான் என்ன சரியா எழுதலன்னு சொல்லு?

நான் இப்போது ஜி. நாகராஜனை, அசோகமித்திரனை, அம்பையை, சுந்தரராமசாமியை தொடந்து வாசிக்கிறேன். இப்படைப்புகள் எனக்குத்தரும் வாசிப்பனுபவத்தை உன்னுடைய ஒரு கதை கூட தரவில்லை. எப்படி வாசிப்பதென நீ எங்களுக்கு சொல்லித்தராதே, எப்படி எழுவதென இவர்களிடமிருந்து நீ கற்றுக்கொள்.

ரத்தம் கண்களுக்கேற,

செல்லதுரை நீ இனிமேல் பாலகுமாரனை படிக்காதே

”இது எஸ்க்கேப்பிசம். ” இது கோமதி

இவ்வுரையாடல் அந்த அரங்கிலிருந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியையும், கூட்டத்தில் கலகம் செய்யவந்திருக்கும் கலகக்காரர்கள் நாங்களென்றும், எங்கள் ஜோல்னா பைகளில் வெடிகுண்டுகள் கூட இருக்கலாமெனவும் முணுமுணுத்தார்கள்.ஒரு வழியாக உலை கொதிப்பதற்கு முன் தீ அடங்கியது.
இரு பக்கமும் இன்னும் பேசி தீர்க்க வேண்டிய மூர்க்கமான வார்த்தைகளின் மிச்சத்தோடேயே கூட்டம் முடிந்தது.

கூட்டம் முடிந்து பாலகுமாரன் என் அருகில் வந்து,

”உன்னோடு தனியே பேசணும்”

என கிட்டதட்ட என் கையைப் பிடித்திழுத்தார். விக்டோரியா பள்ளியின் பின்பக்க மேல்மாடியில் கோபத்தில் புகையும் சிகரெட்டுடன் என்னை மிக அருகில் சமீபத்து,

”சொல் செல்லதுரை, நான் ஒண்ணுமேயில்லையா?”

”நான் அப்படி சொல்லலையே சார்,”

இல்லை அதைத்தான் நீயும் அந்த பொண்ணும் வேற மாதிரி சொன்னீங்க? சொல்லுங்க உங்களுக்கு யார் மேல கோபம்? என்ன வேணும் உங்களுக்கு? ஏன் நிசப்தமான உலகத்தைப் பார்த்து கூச்சலிடுகிறீர்கள்? என உக்ரமான குரலில் பேசிக்கொண்டே போனார்.

பாலகுமாரன் அப்போது புகழின் உச்சத்திலிருந்தார். தமிழ்வணிகப் பத்திரிகைகள் அவரை போட்டிப்போட்டு சுவீகரித்து கொண்டிருந்தன. நான் ரொம்ப சின்ன பையனாக கலக்கத்தோடு அவர்முன் நின்று கொண்டிருந்தேன்.
பேசிக் கொண்டே தன் முகவாயில் கைவைத்து அழுத்தி, தன் பல் செட்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டு

”எனக்கு இன்னும் நாப்பது வயசு கூட முடியல. டபே டிராக்டர் கம்பெனி போராட்டத்துல, ”பாப்பார நாயே ன்னு போலீஸ்காரன் அடிச்சதுல ஒடைஞ்ச பல்லு.”

எந்த அனுபவமே இல்லாம ஒருத்தன் ஒரு நாவல் எழுதிறமுடியுமா?
இவ்வுரையாடல் நான்கு முழு சிகெரெட்டுகளை முடித்திருந்தது.
இருவருமே தணிந்திருந்தோம். துவங்குதலுக்கான முதல் சொல் இருவரிடமுமே தயக்கத்திலிருந்தது. சிகரெட்டின் நுனிநெருப்பு ஒரு கேரக்டர் மாதிரி எங்களுடனே அணையாமல் பயணித்தது.

என் கையிலிருந்த புத்தகமே எங்கள் மௌனம் உடைபட காரணமாயிருந்தது. பேச்சு சுழன்று, சுழன்று பிரமிளிடம் வந்து நின்றது.

”பிரமிளின் தியானதாரா படிச்சிருக்கீயா?”
இல்லை. பார்த்தது கூட இல்லை. இது நான்.

அது ஒரு அற்புதமான சிறு புத்தகம் செல்லதுரை, சாது அப்பாதுரை என்கிற ஒரு துறவியைப்பற்றி பிரமிள் எழுதியிருப்பார். அதில் தங்கள் ஊரைச்சேர்ந்த விசிறி சாமியார் ஒருவரைப்பற்றியும் கூட சில பகுதிகள் வரும்.
ஐந்நூறு பிரதிகள் வாங்கி வைத்து நான் போகிற திருமணத்திற்கெல்லாம் கொடுத்திருக்கிறேன்.
என் கண்கள் விரிய
”விசிறி சாமியார்னா யோகிராம் சூரத்குமாரா?”என்றேன்.

தெரியுமா உனக்கு? அவரை தெரியுமா? என ஆர்வத்தின் நுனி நோக்கி பாலகுமாரன் வந்துகொண்டிருந்தார்.

சூரத்குமார் எனக்கு நல்ல நண்பர். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூல் மாடியிருந்து பத்திருபது கட்டிடங்கள் தள்ளிதான் அவர் இருக்கிறார்.

நீ உடனே என்னை அவரிடம் அழைத்துப் போகமுடியுமா?

நிச்சயமாக.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் பெரியத் தேருக்கருகில் நாட்டுஓடுகள் வேயப்பட்ட, ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட அந்த வீட்டின் முன் வாசலில் நாங்கள் நான்குபேரும் நின்றிருந்தோம்.

அவர்கள் மூன்று பேரின் முகங்களிலும் பக்தியும், பரவசமும் படிந்திருந்தது. ஒரு தெய்வ தரிசனத்திற்கான மனநிலை அவர்களிடம் இருந்தது. நான் இரும்பு கம்பிகளிட்ட கேட்டில் கை வைத்து லேசாக தட்டினேன். அதற்காகவே காத்திருந்தவர் போல முதல் தட்டலுக்கே கதவைத் திறந்து வெளியே வந்தார். இருட்டிலும் கூட அவர் முகப் பொலிவின் ஒளி அவ்விடத்தில் ஒளிர்ந்தது. கையில் புகையும் சிகெரெட்டுடன் உற்சாக மனநிலையில் கதவைத்திறந்து,
என் கைகளைப் பற்றி

”வா பவா” வென அழைத்தார். என் தோள் மீது வாஞ்சையாக தட்டிக் கொடுத்து.
”எப்படி இருக்கிற?” என ஆங்கிலத்தில் விசாரித்தார்.

வாசலில் நிற்கும் பாலகுமாரனையும், அவருடைய இரு மனவிகளையும் அருகில் அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

“இவர் பாலகுமாரன் தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர், எல்லா பாப்புலர் பத்திரிகைகளிலும் இவர் கதைகள் தொடர்கதைகளாக வருகின்றன, உங்களை சந்திக்க வேண்டுமென பெரும் ஆவலில் இருக்கிறார்’’ என தொடர்ந்த என் பேச்சை இடைமறித்து.

இந்த பிச்சைக்காரனை ஏன் பார்க்க வேண்டும்? என கேட்டார்.

பாலகுமாரனை முழுவதுமாக தன் பார்வையால் குடித்திருந்தார் யோகி. அந்த பார்வையின் ஊடுறுவலின் அதிர்வில் பாலகுமாரன் நிலைகுலைந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் நான் இருவரையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப்பார்த்து தான் யோகி பேசினார்.

“பவா, இவ்விடத்தைவிட்டு இவரை உடனே போகச்சொல், இவரை சந்திக்க நான் விரும்பவில்லை. இப்பிச்சைக்காரனை தேடி இனிமேல் இவர் வரவேண்டாம்.’’
சொல்லிவிட்டு அடுத்த சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டு கைகளைக் குவித்து கஞ்சாபுகையை இழுப்பதுமாதிரி இழுக்க ஆரம்பித்துவிட்டார்.

தெருவில் போவோர்களும் வருபவர்களும் அங்கிருந்தே அவரை வணங்கியதும், கண்ணத்தில் போட்டுக் கொண்டதும், சிலர் தரையில் விழுந்து வணங்கியதும் விநோத காட்சிகளாய் இருந்தது. ஏதோ ஒரு புராதனமான நகரத்தின் அகண்ட தெருவில் இக்காட்சிகள் திரையில் நடப்பது மாதிரியிருந்தது.

பாலகுமாரன் அவ்விடத்தை விட்டகன்றிருந்தார். யோகி அமர்ந்திருந்தற்கு வெகு அருகிலிருந்த ஒரு திட்டில் நான் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அவசரமாக வீட்டிற்குள்ளே போய் இரு ஆப்பிள் பழங்களோடு வந்தார். நான் எழுந்து நின்றிருந்தேன். விடை பெறுதலுக்கான நேரத்தின் உந்துதலை என் சரீரம் உணர்ந்தது.

இரு ஆப்பிள்களையும் என் கைகளில் புதைத்து,
”மை பாதர் ப்ளஸ் யு பவா” என என்னை ஆசீர்வதித்தார். சற்று முன் நடந்த நிகழ்வுகளின் சிறு சலனம் கூட இன்றி, ஒரு குழந்தைமாதிரி சிரித்துக்கொண்டிருந்தார்.

Tuesday, April 14, 2009

பாட்டுக்கார லட்சுமி

திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோ மீட்டருக்கும் அப்பால், சு.வாளவெட்டி என்கிற ஒரு கிராமத்தில் இறங்கி, யாரை விசாரித்தாலும் பாட்டுக்கார லட்சுமியை அடையாளம் காட்டுவார்கள். அவரை விசாரிக்கும்போதே எவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து போகும். ஐம்பதிலிருந்து ஐம்பந்தைந்துக்குள் இருக்கும் லட்சுமி அம்மாவிற்கு வாளவெட்டி சொந்த ஊரோ, கட்டிக் கொடுத்த ஊரோ இல்லை. ஏதோ ஒரு ஊர். அந்த ஊரிலேயே இப்போதிருக்கும் சீமைஓடு போட்ட வீடு நான்காவதோ, ஐந்தாவதோ.

ஊர்பற்றியோ, வசிப்பிடம் பற்றியோ, தொழில் பற்றியோ, சாப்பாடு பற்றியோ, பட்டினி பற்றியோ கவலையின்றி, தனக்குத் தெரிந்த பாடல்களை தன் கரகரத்தக் குரலில் பாடி அதன் வீரிய விதைகளை இம்மாவட்டம் முழுக்க விதைத்து வைத்திருக்கிறார். ஏதோ ஒரு வீட்டில் நிகழும் மரணம் லட்சுமியை அந்த இழவு வீட்டுக்கு அழைக்கிறது. பெரும் குரலெடுத்து, மாரடித்து கண்ரப்பைகள் வலிக்க அழுது தன் துக்கத்தை தன் சக மனுஷிகளுக்கு மாற்றுகிறார். ஜாதி, மதம் அழியும் அந்த நிமிடங்கள் மிக முக்கியமானவை.

லட்சுமியின் சொந்த ஊர், புதுப்பாளையத்திற்கு பக்கத்தில் மூலக்காடு. வறுமை தின்று தீர்த்த மிச்சங்களாக அவர்கள் வீட்டில் நான்கு பெண்கள். வயல் வேளைகளில், அத்தனைப் பணிகளும் அவளுக்குப் பதினைந்து வயதுக்குள்ளேயே அத்துப்படி. ரொம்ப சின்ன வயசிலேயே யாரோ ஒருவனுக்கு கட்டி வைத்து கடமையை முடித்துக் கொண்ட பெற்றோர்கள். அவன் நல்லவனில்லை. அவன் தொழில் சாராயம் காய்ச்சுவது. தூரத்து மலையடிவார மரநெருக்கத்து புகை அவன் இருப்பை அவளுக்குச் சொல்லும். வாழ்தலுக்கான நெருக்கடியில், தன் சொந்த விருப்பங்களை பொசுக்கிப் போட்டு விட்டு, சாராயம் காய்ச்ச, அழுகிய வாழைப்பழத்திலிருந்து குப்பையில் கிடக்கும் பேட்டரி வரை பொறுக்கி தன் கணவனுக்கு அன்பு செய்தாள். அவன் வடித்தெடுக்கும் திரவத்தை மற்றவர்களுக்கு மொண்டு கொடுத்து பணிவிடை செய்தாள். குடிவெறியின் தொடுதல்களையும், சீண்டல்களையும் அருவறுப்போடு அனுமதித்தாள்.

அவன் காய்ச்சிய சரக்கை முதலில் அவன் ருசிபார்த்தான். அதீத ருசியால் தன்னை பறிகொடுத்து, அதற்குள்ளேயே மூழ்கிப் போய் கிடந்தான். குடும்பம், தன் மனைவி, குழந்தைகள் எதுவும் அவன் ஞாபகத்திலிருந்து அகன்றிருந்தன. காலத்தின் குரூரம் அவளை ஒரு வி‘க் கொடிபோல சுற்றியிருந்த போதிலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் எதற்கோ காத்திருந்தாள். எதுவும் நிகழவில்லை. தன் மௌனத்தைத் தானே கலைத்து, வடிசலில் வழித்திருந்த சாராயப் பானையை எட்டி உதைத்து கவிழ்த்தாள். ஒரு கல்லெடுத்து, அதன் மீது போட்டு அதை சுக்குநூறாக்கி தன் வெறியை அதன் மீது துப்பினாள்.

இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் தன் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, அந்த மலையடிவார கிராமத்தைத் திரும்பிப் பார்க்கவும் திராணியற்று நடந்தாள். அதன் பிறகு இந்த மாவட்டமே அவள் வசிப்பிடம். தனக்கு கிடைத்த அதீத சுதந்திரத்தை தன் மனம் போன போக்கில் துயரத்தோடு அனுபவித்தாள்.

அன்னக்கூடையில் மாட்டுக்கறி எடுத்து புதுப்பாளையும் சந்தையில், கூவிக்கூவி விற்றாள். தன் குரலின் வலிமை இன்னும் இரண்டு நாட்களுக்கு தன் குழந்தைகளின் வயிற்றை நனைக்குமென்ற உறுதியிருந்தது.

கறி விற்பதைவிட காய்கறி விற்பது இன்னும் கொஞ்சம் கவுரவமெனக் கணக்குப் போட்டாள். சுட்டெரிக்கும் வெயிலில் காய்கறிகள் கொட்டி, தனக்கேயுரிய ராகத்தோடு கூவிக்கூவி விற்று சந்தையைக் கலகலப்பாகவும், தன் சகவியாபாரிகளை கலக்கத்துக்கும் உட்படுத்தினாள். தன் பக்கத்து வீடுகளில் நடந்த மரணங்கள் அவளுக்குள் ஒரு ஊசி மாதிரி இறங்கி வலிக்க ஆரம்பித்தது. தனக்குள் தேங்கிப் போயிருந்த இந்த வாழ்வின் பெரும் துக்கம் பாடல்களாக உடைப்பெடுத்தது. அவள் குரல் பல மைல்களை அநாவசியமாகக் கடந்தது. அவள் பாடல்களில் புதைந்திருந்த சோகம் யாரையோ பறிகொடுத்து நின்ற குடும்பத்துக்கு தேவையாய் இருந்தது. இரவு, பகல் எந்நேரமும் சாவு வீட்டிலிருந்து அவள் குரல் தேடி ஆள் வரும். பஸ்úஸô, லாரியோ, சைக்கிளோ எந்த வாகனமும் எந்த அகாலத்திலும் அவளைச் சுமந்து கொண்டு போனது.

மரண வீடுகளில் தங்கள் பெரிய மேளங்களால் முழங்கிய "பாப்பம்பாடி ஜமா" தோழர்கள் அவளுக்குச் சிநேகிதர்களானார்கள். அவர்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் ஏதோ ஒரு கண்ணி இறுக்கிக் கட்டியிருந்தது. அவர்களின் பறை முழங்கும் சத்தத்திற்குத் தன் இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆட்டம் போட்டாள். ஒரு மரணத்திற்கான மொத்தக் கண்ணீரையும் ஒரு அணைக்கட்டு மாதிரி தனக்குள் தேக்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய விட்டாள்.

மரணவீடுகளில் அவள் மீது வீசியெறியப்படும் ரூபாய் நோட்டுகளைப் புழுதியிலிருந்து எடுத்து தன் இடுப்புக்குள் சொருகினாள். அவமானப்படுதலிலேயே அமிழ்ந்திருந்த இந்தக் குடும்பத்திலிருந்தும் குழந்தைகள் படித்தார்கள். பிணவாடை வீசும் ரூபாய் நோட்டுகளில் அந்தக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தாள்.

தன் கடமை முடிந்ததாகக் கருதிய கணம், தன் பிள்ளைகளிடமிருந்து விடை பெற்றாள். எந்த கிராமத்து கட்டி முடிக்கப்படாத குடிசையும், உதிர்ந்து போன ஓட்டு வீடும் அவளைத் தன்னில் வசிக்க பாசக்கரம் நீட்டி அழைத்தது. தன்னை நோக்கி நீளும் கரங்களுக்குள் தன்னை ஒப்புவித்து, எச்சில் ஒழுக சிரிக்கும் குழந்தை மாதிரி அதற்குள் அடைக்கலமானாள்.

சு.வாளவெட்டி கிராமத்தில், தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வியாபித்திற்கும் அந்தப் பெரிய ஆலமரமும், அதன் பிரமாண்ட நிழலில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குரங்குகளும்தான் அவளுக்கு தற்போது நெருக்கமான ஸ்நேகிதர்கள்.
மூட்டை மூட்டையாக காய்கறிகளையும், வெங்காயத்தையும் தலையில் சுமந்து தனி மனுஷியாக பேருந்தின் மேலேற்றிய பலமான உடல்வாகும் மனமும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

அகால இரவுகளில் பெருங்குரலெடுத்து பாடி தன் தனிமையைக் கரைக்கும் லஷ்மியின் குணத்தையும் மனதையும் நாம் படிப்பதற்கு, அவள் தினம் தினம் தான் சம்பாதிப்பதில் பாதி ரூபாய்க்கு, அதிகாலையிலேயே இட்லிகளை வாங்கி ஒரு தாம்பாலத்தட்டில் வைத்து அக்குரங்குகளைச் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் விதமே போதும்.

தன் கணவன் தன்னை மலையடிவாரத்தில் சாராயப்பானைகளோடு விட்டு விட்டு போனபிறகு அவளுக்கு பல ஆண்களோடு ஸ்நேகிதம் உண்டு. ஆனால் அது மனரீதியான உறவல்ல. தன் மன வலியை, இன்றொரு வலி மூலம் பழி தீர்த்துக் கொள்ளும் பகைமை.

ஊரார் துயரத்தையெல்லாம் தன் பாடல்கள் மூலம் துடைத்த லஷ்மியின் மரணத்திற்கு இவர்கள் யாரும் வரப்போவதில்லை. அவள் மரணம் இவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படக்கூடப் போவதில்லை.

கடவுளே,

நான் இந்த தேசத்தின் எந்த திசையிலிருந்தாலும் வேட்டை நாய்களின் துரத்தல்களிலேயே தன் வாழ்வைக் கழித்த அந்தப் பாட்டுக்காரியின் பாதங்களில் கொஞ்சம் பன்னீர்ப்பூக்களை என் கைகளால் கொட்டும் பாக்கியத்தைத் தா

Saturday, April 11, 2009

குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத சுகந்தன்


எந்த சட்டத்துக்குள்ளும் அடைக்க முடியாமல் அவன் திமிறிக் கொண்டேயிருந்தான். ஒரு பாடகனுக்கென வரையறுக்கப்பட்டிருந்த உன்ன வரைமுறைகள் எதையும் அநாவசியமாக உதறித் தள்ளினான். ஆனாலும் அவன் தொண்டைக்குள் புல்லாங்குழல்களால் கூடு கட்டி ஒரு குயில் நிரந்தரமாக வசித்துக் கொண்டேயிருந்தது.

தமிழக இடதுசாரி மேடைகளை அவன் தன் குரலால் வசியப்படுத்தியிருந்தான். ஒரு வன்முறையாளனைப்போல மேடையேறி, ஒரு குழந்தையைப் போல தன் குரலால் கொஞ்சுவாள். முறைப்படி இசை கற்க அவன் எடுத்த முயற்சியை மூன்றே நாட்களில் அவனே நிராகரித்தான். யாரும் எளிதில் அணுகிவிட முடியாதபடியான ஒரு முரட்டு பாவனையை பிடிவாதமாய் கடைபிடித்து, அதில் தோற்றுக் கொண்டே இருந்த பச்சைக் குழந்தை சுகந்தன்.

பெருங்காற்றில் உதிர்ந்து போகும் சருகென அவனை நண்பர்கள் துயரத்தோடு எதிர்பார்த்த நிமிடங்களில், அதே மரத்தில் ப்ரவுன் கலரில் துளிர்க்கும் இலையாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவான். மாறி மாறி நடந்த இந்த உயிர்ப்பின் விளையாட்டில் சென்றவாரம் அவன் தோற்றுப் போனான்.

சினிமப் பாடல்களுமின்றி, கிராமியப் பாடல்களுமின்றி அவன் தனக்கென 500க்கும் மேற்பட்ட பாடல்களை சேகரித்து வைத்திருந்தான். பரிணாமன், நவகவி, மகாகவி பாரதி, ரமணன் ஆகியோரின் வரிகளோடு, குவார்ட்டர், குவார்ட்டராய் அவன் காலி செய்த பாட்டில்களும், உறிஞ்சின மீதியாய் சிதறிக்கிடந்த சிகரெட்டுகளுக்கும் மத்தியில் அவன் கரைத்த இரவுகளில் கண்டெடுத்த மெட்டுகளில்தான் நாம் இதுவரை பல இலக்கிய மேடைகளில் கரைந்து, அழுதது, சந்தோஷித்தது எல்லாமும்...

பாடுவதற்கு நல்ல மேடை, சக்திவாய்ந்த ஒலிபெருக்கி, உடன் வாசிப்பதற்கு சரியான கலைஞர்கள், இதெல்லாம் அவன் எதிர்பார்த்ததில்லை. சில நண்பர்கள் போதும், மனதுக்குப் பிடித்த ஒரே ஸ்நேகிதி போதும், பாடிக்கொண்டே இருப்பான். தன் பாடல்கள் அவர்கள் மீது நடத்தும் வன்முறையை உள்ளூர் ரசித்தவனாக அடுத்த பாடலுக்குத் தாவுவான்.

எந்த பெரிய அங்கீகாரத்தையும் யாரிடமிருந்தும் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. பாடுவதன்றி மற்றதெல்ல தன் வேலையில்லை என்பது ஒரு தவம் மாதிரி அவனிடம் தங்கியிருந்தது. எத்தனைப் பெரிய பாராட்டுக்களையும், ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுக்கு மேல் அனுமதித்தவனில்லை. திரைப்பட மோகம், இசை ஆல்பங்களின் மேல் சாய்வு என்று எதிலும் தன் மனச் சாய்வுக்கு இடமளிக்காத கலைஞன். குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத அந்த கலைஞனின் குரலைத்தான் போன வாரம் ஈவிரக்கமின்றி காலம் காவு வாங்கியது.

மழை மனிதர்கள்

மரங்களடர்ந்த கேரள போர்ட் கொச்சின் பகுதியில், வியாபித்திருக்கும் அந்த பழமையான ஆலமரத்திற்கு ஒவ்வொரு வருடமும் அங்குள்ள கலைஞர்களும், ஓவியர்களும் எடுக்கும் விழாவிற்கு நான் தொடர்ந்து இருமுறை பயணித்திருக்கிறேன். பரந்து விரிந்து பயமூட்டும் தின்மையோடு நிற்கும் நூறு வருடத்திற்கும் மேற்பட்ட அந்த அரசமரத்தை அவர்கள் "அம்மச்சி மரம்" என்று வாஞ்சையோடு அழைக்கிறார்கள். தன் அம்மச்சியின் மடியில் அமர்ந்து அதன் பேரக்குழந்தைகள் எடுக்கும் விழா அலாதியானது. நினைவில் உதிரும் மனிதர்களுக்கிடையே சில அபூர்வமான மனிதர்களையும், கலைஞர்களையும் அவர்களிடையேயான உரையாடல்களையும் ஒரு புள்ளியாக்கி எனக்குள் எப்போதும் பாதுகாத்திருக்கிறேன்.

காஷி ஆர்ட் கபே என பெயரிடப்பட்ட அந்த சின்னஞ்சிறு அரங்கின் சிவப்பு டெரகோட்டா பதிக்கப்பட்ட தரையில் அங்கங்கே பல நாடுகளிலிருந்து வந்திருந்த வாசகர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். புகைப்பதற்கும், குடிப்பதற்குமான முழு சுதந்திரம் அந்த அறை முழுவதும் பரவியிருந்தது. அப்போதுதான் பறிக்கப்பட்ட புத்தம் புதிய பூக்களால் நிரம்பிய செம்பு உருளிகள் அங்கங்கே நம் மனதை ஒருமைப்படுத்துகிறது. நிசப்தம் ஓர் அரூபமாக அங்கே தங்கியிருக்கிறது. கவனிக்கப்படாத தாடியும், அழுக்கடைந்த ஜிப்பாவுமாக ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் இச்சூழலின் மீது எவ்வித அக்கறையுமற்று கையில் பிடித்திருந்த ஒரு கிரையான் பென்சிலால் அந்த வெள்ளை சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருந்தார். அவர் தன் கை லாவகத்துக்கு எடுத்துக் கொண்ட அளவு அந்த சுவற்றின் நீள அகலம் முழுவதையும்.

உலக வர்த்தக மைய நொறுங்கலின் சத்தத்தை சில மைல்களுக்கு அப்பாலிருந்து கேட்ட, கட்டிட இடிபாட்டை பயந்து நடுங்கிய உடலசைவில் உணர்ந்த ஒரு அமெரிக்க பெண் கவிஞர் அதைப்பற்றிய தன் மன சித்தரிப்பை கவிதையாக்கி அந்த அரங்கில் அன்று வாசித்துக் கொண்டிருந்தார். மொழி விலகல் காரணமாக நான் அதில் கவனமின்றி இருந்தேன். அசுரத் தனமாக இயங்கிய அந்த ஓவியனின் கை வேகத்தை மீறி என் மனம் நகரவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் வரைந்து முடிக்கப்பட்ட அச் சுவரோவியம் ஒரு பாரம்பரிய வெங்கல உருளி. முற்றிலும் கிரையானில் நிரப்பப்பட்டிருந்த அதன் வசீகரம் அங்கிருந்த யாவரையும் ஒரு வெளிச்சம் போல் இழுத்தது. அங்கிருந்த வெளிநாட்டுக்காரர்கள் அந்த ஓவியனை அணைத்து முத்தம் தந்து தங்கள் அன்பைச் சொன்னார்கள். அதில் துளியும் ஆர்வமற்றவனாக அங்கிருந்து வெளியேறி ஒரு மர இருட்டில் நின்று தன் சிகரெட்டினுள் அடைக்கப்பட்ட புகையிலை துகளை வெளியே எடுத்து, அதுனுள், தான் மடித்து வைத்துள்ள காகித்தத்திலிருந்து எடுக்கப்பட்ட துகளை நிரப்பி நிதானமாக புகைக்கத் துவங்கிய நிமிடத்தில் நான் வல்சனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

ஒரு புன்னகையால் அதை அங்கீகரித்த வல்சன், நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதில் பெரும் உவகை கொண்டு சந்ரு மாஸ்டர் தெரியுமா? ட்ராஸ்கி மருது அறிமுகமா? என விசாரிக்கும் போதே அவர் கை அழுத்தத்தின் நெகிழ்வை உணரமுடிந்தது.

"வல்சன்" என்று கேரளக் கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்டும் "வல்சன் கூர்ம கொல்லேரி"தன் நூண்கலை படிப்பை சென்னை ஓவியக் கல்லூரிலும், தன் முதுகலை படிப்பை பரோடா நுண்கலைக் கல்லூரியிலும் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு முறை வல்சனை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென்ற என் ஆர்வம் ஒரு தொலைபேசி உரையாடலிலேயே நிறைந்தது. நான் அழைத்த அன்றே அவர் கொச்சியிலிருந்து புறப்பட்டார். எப்போதும் போல் ஒரு இலக்கிய நிகழ்விற்கான தயாரிப்பு வேலைகளில் நாங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மழை நாட்கள் அது. ஒரு யாத்ரீகன் மாதிரி என் வீட்டுக்குள் நுழைந்து, தான் தங்குவதற்கான ஒரு இடத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன் கையோடு கொண்டு வந்திருந்த சில புகைப்படங்களை எங்களுக்கு காட்சிப்படுத்தினார். எங்கள் வியத்தலை இதுவெல்லாம் ஒன்றுமில்லையென கூச்சப்பட்டார்.

ஒரு கவிதா நிகழ்வு மேடைக்கு முன் வீணை போன்ற வடிவத்தில் வைக்கப்பட்டிருந்த சுடுமண் சிற்ப பானையில் வண்ணப் பூக்கள் நிரம்பி ததும்பும் அழகில் நான் நீண்ட நேரம் மூழ்கியிருந்ததை கவனித்த வல்சன், "இது ஒன்றுமில்லை பவா.. ரெண்டு பெரிய பானைகள் வாங்கி வாý என சொல்ல அடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சாத்தியப்பட்டது. பானையின் வாய்ப்பகுதியில் குறுக்காக ஒரு ஆக்சே பிளேடால் அறுக்க ஆரம்பித்தார். சுமார் இரண்டு மணி நேரம் அறுதெடுத்தப்பிறகு பானை இரண்டாக பிளந்தது. சிதைவில்லாமல் கிடைத்த ஒரு படைத்தலில் மகிழ்வுற்று, ஒரு கறுப்பு காப்பியும், தன் பிரத்யேக சிகெரட்டையும் உள்ளிழுத்து, பிளக்கப்பட்ட பானைகளை எதிர் எதிரே ஒன்று சேர்த்து தேங்காய் நார் கயிற்றால் பிணைத்தார். ஒரு படுத்திருக்கும் வீணை. அதன் குழி பாகத்தில் தண்ணீர் நிரப்பி பூக்கள் நிரப்பி முற்றத்தில் வைத்து அழகுப்பார்த்தோம்.

இதை ஆரம்பம் முதல் அருகிலிருந்து கவனித்த என் நண்பர் ஒருவர், மிகுந்த மரியாதையோடும், லேசான பயந்தோடும் வல்சனிடம்

"சார் இந்த பானையை அறுப்பதற்கு உங்களுக்கு இரண்டு மணி நேரமாகிறது. - என்னால் மூன்று நிமிடத்தில் பழுதில்லாமல் அறுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே தன் கையோடு கொண்டுவந்திருந்த மின்சார இன்ற்ற்ங்ழ் ரைக் கொண்டு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இரண்டு பானைகளை அறுத்துக் காட்டினார்.

"இது எனக்கு தோணாம போச்சோ"வென்று வல்சன் தன் தலையில் கைவைத்து சிரித்துக் கொண்டார். என் குழந்தைகளுக்கு வல்சன் அன்பான நண்பனாகி அவர் கூடவே ஒட்டிக்கிடந்தார்கள். நாங்கள் அப்போது நடத்திய இலக்கிய நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட பிளக்கப்பட்ட பானைகளில் உருவான உருளிகளில் பூக்கள் நிறைந்தது. அந்த நிகழ்ச்சி நடந்த மைதானத்தை கட்டுகட்டாய் வாங்கிய மூங்கிலிலிருந்து பிரமாண்ட குடில் செய்து அழகுபடுத்தினார். இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் அதற்குள் விளையாடிக் கொண்டிருந்த அழகை விட அக் கூட்டம் பெரிதாய் எதையும் தந்துவிடவில்லை.

நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் எங்களுடனே தங்கியிருந்த நாட்கள் மீண்டும் கோரமுடியாதவைகள். பக்கத்திலிருந்த ஒரு குயவர் வீட்டிற்குப் போய், வல்சனே உருவாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மண்குவளைகள் இன்றும் அவரின் அடையாளங்களாக எங்களால் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு பால்கனியில் மூங்கில்களைக் கொண்டு ஒரு உருவத்தை வடிவமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் கேட்டது 5 கட்டு மூங்கிலும், தான் சொல்கிறபடி அதை பல்கோண வடிவங்களில் பிளந்து கொடுப்பதற்கு ஒரு ஆளும். மூங்கில் கட்டுகளோடு எனக்கு தெரிந்த மூங்கில் கூடை முடையும் ஒரு குறப் பெண்ணையும் கூட்டி வந்தேன். மிகுந்த உற்சாகமடைந்த இருவரும் தங்கள் புதிய படைப்பை அன்று காலையிலேயே துவங்கினார்கள். முற்று பெறாத தன் பணியினூடே அன்று மாலை என்னை அழைத்த வல்சன், இந்த வேலை சலிப்பூட்டுகிறது பவா. இந்த பெண்தான் என் படைப்பின் இரகசியங்களை கண்டடைய விரும்புபவளாக இருக்கிறாள். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். இவளை பின்னாள் உட்கார வைத்து ஊர் சுற்ற வேண்டும், மலை சுற்ற வேண்டும்.... என ஒரு குழந்தையைப் போல குதூகலித்தார். ஒரு நாள் அறிமுகத்திலேயே அவரோடு பயணிப்பதற்கு அப் பெண்ணுக்கும் பேராவல் இருந்தது. அதன் பிறகான மூன்று நாட்களை அவரின்றி அல்லது அவர்களின்றி நாங்கள் நகர்த்தியிருந்தோம். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறியும் ஆவல் எங்களுக்குள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

மூன்றாவது நாள் மாலை வல்சன் மட்டும் அதே சைக்கிளில் உற்சாகம் குறைந்தவராக வந்து தன் பொருட்களை, துணிகளை எடுத்து வைத்து தான் புறப்படுவதாக சொன்னபோது என் பையன் அவரை தன்னோடு இன்னொரு நாள் இருக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்து கேட்டுக் கொண்டான். தோளில் மாட்டிய தன் உடமைகளை கீழறிக்கி வைத்து விட்டு தன் பயணத்தை ஒத்திப் போட்டு எங்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

மலை சுற்றும் வழியில் உள்ள ஒரு குளத்தைப் பார்த்தேன். சிங்கத்தின் வாய் பிளந்திருப்பது மாதிரி இருப்பதுதான் அதன் நுழைவாயில். (சிங்க முக தீர்த்த குளம்) புராதன அழகோடு கூடிய அதன் மீது யார் சுண்ணாம்பு அடித்து கெடுத்தது? என்ற கேள்விக்கு நான் மொளனமாக இருந்தேன். அடுத்த முறை என் திருவண்ணாமலைப் பயணம், அதன் மீதேறியிருக்கும் சுண்ணாம்பை அகற்றி அதன் பழமையை, அதன் புராதன அழகை மீட்டெடுப்பதுதான் என்று சொல்லி கேரள பாரம்பரிய புட்டு செய்து கொட்டாங்குச்சியில் கொடுத்தார். அரிசி புட்டில் பழமும், நெய்யும் கலந்து பிசைந்து உண்ணும் ருசி எனக்கு வல்சன் ஏற்படுத்தியதுதான்.

எங்கிருக்கிறீர்கள் வல்சன்?

மீண்டும் எப்போது வருவீர்கள்?

சிங்க முக தீர்த்த குளம் இம் மழையில் நிறைவதற்குமுன்

அந்த கூடைமுடியும் குறப்பெண் என்னைப்பார்க்கும் போதெல்லாம்


"அந்த சார் எப்ப வருவார்ண்னே?" என்ற கேள்வி மங்கும் முன்.