வம்சி வெளியீட்டரங்கம்.
இரண்டு நாட்கள் ஆறு நூல்கள்.
வம்சி வெளியீட்டரங்கத்தின் 2 மற்றும் 3 இலக்கமிட்ட வெளியீட்டு நிகழ்ச்சிகள் சென்னையில் 30& 31 .01.2010 தேதிகளில் நடைபெற்றன.
முதல் நிகழ்வு கீழ்ப்பாக்கம் டான்போஸ்கோ பள்ளி அரங்கில் உள்ள டி-பிகா அரங்கில் மாலை நேரம் ஆறு மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நெகிழ்ச்சியான வரவேற்புரையை கே.வி. ஷைலஜா வழங்கினார்.கவிஞர் உமா ஷக்தி முழு நிகழ்வின் தொகுப்புப் பொறுப்பினை ஏற்றார்.
முதலாவதாக பாஸ்கர் சக்தியின் ‘கனக துர்கா’ (இதுவரை வெளியான மொத்த சிறுகதைகளின் ) தொகுப்பை இயக்குனர் மகேந்திரன் வெளியிட பத்திரிக்கையாளர் ஞாநி பெற்றுக்கொண்டார்.
புத்தகத்தின் மீது இயக்குனர் சிம்புதேவன், கவிஞர் யுகபாரதி இருவரும் உரையாற்றினார்கள்.
இயக்குனர் மகேந்திரன் தான் எளிதில் எழுத்தாளர்களுக்கு மனதில் இடம் கொடுப்பதில்லை என்றும் அப்படியான இடத்தை பாஸ்கர்சக்தி பெற்றிருக்கிறார் என்றும் அதேபோல் நல்ல அன்பராகவும் நண்பராகவும் கூட மனதில் இடம் பெற்றிருக்கிறார் என்றார்.
ஞாநி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னமே சந்தித்த கணத்தில் தன்னையே கண்டது போல உணர்ந்ததாகக் கூறினார். யுகபாரதியும் சிம்புதேவனும் சிறுகதை மட்டுமல்லாமல் திரைக்கதை சின்னத் திரை வசனம் உட்பட எதிலும் தனி முத்திரை பதிக்கிறவர் என சிலாகித்தனர்.
நண்பர்களுக்கும் வருகை தந்தவர்களுக்கும் நன்றி கூறி பாஸ்கர்சக்தி ஏற்புரை வழங்கினார்.
அடுத்ததாக எஸ்.லட்சுமணப்பெருமாளின் கதைகள் தொகுப்பை பத்திரிக்கையாளர் ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் விஜயசங்கர் வெளியட கவிஞர் நா.முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். இயக்குனர் ராம் புத்தகம் குறித்து உரையாற்றினார். விஜய சங்கர் படித்த அளவிலான கதைகள் உணர்வு நிலைகளைக் கிளறியதோடல்லாமல் கிராமத்தைக் காட்சிப்படுத்தியது என்றார். முத்துக்குமார் இத்தினத்தில் வெளியிடப்படுகிற மூன்று எழுத்தாளர்களது எழுத்தில் உள்ள நகைச்சுவை மற்றும் வாழ்வின் மீதான அக்கறை குறித்து ஒப்புமை நினைவு கூர்ந்தார்.
இயக்குனர் ராம் எழுத்தாளனின் தீவிரமும் உழைப்பும் ஒரு போராளியின் செயல்பாட்டுக்கு இணையானது என்கிற தொனியை பேச்சில் வெளிப்படுத்தினார்.
மூன்றாவதாகவும் முடிவாகவும்
க.சீ. சிவகுமாரின் ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைத் தொகுப்பை கவிஞர் சுகுமாரன் வெளியிட கு.கருணாநிதி பெற்றுக்கொண்டார்.
சிவகுமாரின் தொகுப்புக்கு சுகுமாரன் வாசித்த கட்டுரை வடிவத்தை www.nayakan.blogspot.com மில் காணலாம்.கு.கருணாநிதியின் உரைக்குப்பின் ஏற்புரை வழங்கிய க.சீ.சிவகுமார் புத்தகத்தை களிகூர்ந்திருந்த மாரீசை மேடைக்கு அழைத்து பிரதியை வழங்கினார்.
பி.ஜே. அமலதாசின் நிறைவான மகிழ்வான நன்றிய்ரைக்குப் பின் அரங்கத்துக்கு வெளியே வந்து குழுமியவர்களை இந்த நூறாண்டுகளின் ஆகப்பெரிய நிலா ராத்திரி வரவேற்றுத் தண்ணொளி பொழிந்தது.
ஜனவரி 31- நிகழ்ச்சிகள் சென்னை எழும்பூர் மியூசியத்தின் எதிப்புறம் அமைந்துள்ள எக்சா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.வி.ஜெயஸ்ரீ வரவேற்புரை நல்கினார்.
முதலில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த லூயி புனுவலின் ‘இறுதி சுவாசம்’
நூலினை பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெற்றுக்கொண்டார்.
நூலினைக் குறித்து பிரபஞ்சனும் இயக்குனர் மிஷ்கினும் பிரதி தந்த பரவசத்தை மத்தாப்பு மகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.
அடுத்து சா.தேவதாஸ் மொழி பெயர்த்த ஹென்றி ஜேம்சின் ’அமெரிக்கன்’ நாவலை எழுத்தாளர் எஸ்.சண்முகம் வெளியிட எழுத்தாளர் அஞ்சனா பெற்றுக்கொண்டார். வெளியிட்ட சண்முகம் நூல் குறித்த விரிவான செறிவான உரை வழங்க பத்திரிக்கையாளர் கடற்கரய் அவை கலகலக்கும் உரை வழங்கினார்.சுருக்கமான ஏற்புரையை தேவதாஸ் வழங்கினார்.
அடுத்து உதயசங்கரின் ‘பிறிதொரு மரணம்’ சிறுகதைத் தொகுப்பை ஓவியர் டிராட்ஸ்கி மருது வெளியிட புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் பெற்றுக்கொண்டார்.மணி மாறனின் விரிவான கதைகள் பற்றிய உரையாடலுக்குப் பின் உதயசங்கர் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வு நிறைவில் பவா செல்லதுரை நன்றியுரைத்தார்.
சென்னையில் நடைபெற்ற இருநாட்கள் நிகழ்ச்சிகளின் நினைவுகளிலிருந்து நான்கு நாட்களாகியும் வெளிவர இயலவில்லை. நண்பர்கள் என் மீதும் வம்சி பதிப்பகம் மற்றும் குடும்பத்தினர் மீதும் வைத்துள்ள தனிப்பட்ட பிரியத்தை மேடைகளில் கேட்டபோது நம்பமுடியாத்தாக இருந்தது. இருநாள் நிகழ்வுகளுக்கும் வந்திருந்த விருந்தினர்களும் வாசகர்களும் இந்த நிகழ்வுகளின் மீது அக்கறையும் அன்பும் என்றென்றும் மறக்க இயலாதது.
இருநாள் நிகழ்ச்சி பற்றி இன்னும் எழுத எண்ணமுள்ளது. அதற்கு முன் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
Read more »

ி

Read more »

'வம்சி'யில் நாசர்

இப்புத்தக கண்காட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை பல்வேறு
ஆளுமைகள் 'வம்சி'க்கு வந்து உரையாடி புத்தகங்கள் வாங்கி,
எங்கள் ரேக்குகளைப் பார்த்து அதிசயித்து 'எங்க செய்தீங்க'
எனக் கேட்டு எங்கள் மூன்று மாத வலியைக் கொஞ்சம் மறக்க
செய்திருக்கிறார்கள்.
நான் இன்றும் சென்னைப் பக்கமே போக முடியலை. இங்கிருக்கும்
ஒவ்வொரு நாளும் ஒரு புதுப் புத்தகத்தை முடித்தணுப்ப முடிகிறது.
9,10 இரு நாட்களில் மட்டும்தான் புத்தக அரங்கில் இருக்க முடியும் போல.
அவ்வப்போது ஷைலஜாவும், ஜெயஸ்ரீயும் சின்ன சின்ன
விஷயங்களுக்கெல்லாம் உற்சாகப்பட்டு தொலைபேசியில்
என்னை அழைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள், நேற்று
ஒரு பெண் மதியம் 2 மணியிலிருந்து 2 மணிவரை 'வம்சி'யிலேயே
காத்திருந்து 'சூர்ப்பனகை' (கெ.ஆர். மீரா-தமிழில் : கே.வி. ஷைலஜா)
தொகுப்பு வந்தவுடன் வாங்கிப் போயிருக்கிறார். இத்தனை எதிர்பார்ப்புக்கு
பரிசாக பணம் வாங்காமல் அத்தொகுப்பை ஷைலஜ கையெழுத்திட்டு தந்ததற்கு
அப்பெண் மிக நெகிழ்ந்து ஷைலஜாவின் கைப்பிடித்து தன் நன்றியை
ஸ்பரிசத்தால் பகிர்ந்து கொண்டது........
நேற்று நண்பர் நாசர் தொலைபேசியில் அழைத்து உங்க ஸ்டால் நோம்பர்
என்னவென்று கேட்டு, மிக முக்கியமான புத்தகங்களை வாங்கி போயிருக்கிறார்.
அப்போது எதேச்சையாக அங்கு வந்த ஆர்.ஆர். சீனிவாசன் எடுத்த புகைப்படங்கள் இவைகள்.







இப் புகைப்படங்களில் மட்டுமே 'வம்சி' யின் ரேக்குகளின் எளிமையான
அழகை தரிசிக்க முடிந்தது ஏன்னென்றால் அப்படி இருக்கிறதுச் சூழல்....
Read more »

19. டி.எம்.சாரோனிலிருந்து...: வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்

Read more »

வம்சியின் சூழலியல் குறித்த புத்தகங்கள்












சில ஆண்டுகளுக்கு முன் என் முதல் கடிதத்திற்கு பதில் எழுதிய
சுந்தர ராமசாமி இந்த வருடம் வாசிக்க வேண்டிய மிக முக்கிய
புத்தகம் என்று குறிப்பிட்டது மசானபு ஃபுபேகாவின் ”ஒற்றை
வைக்கோல் புரட்சியை”.

காலத்தின் சுழற்சியில் பூவுலகின் நண்பர்களோட சேர்ந்து வம்சி
புக்ஸ் சுற்றுசூழல் வரிசையில் 16மிக முக்கிய புத்தகங்களை
கொண்டு வருவது என்றும் அதில் முதல் 8புத்தகங்களையாவது
இப்புத்தக கண்காட்சியின் நிறைவுக்குள் கொண்டு வரும் முயற்சியில்
இரவு 10மணிக்கு அதன் 8அட்டைபடங்களை நிறைவு செய்தோம்.
மதிக்கத்தக்கவனும், நேசிக்கததக்கவனுமான புகைப்பட கலைஞனும்
சூழலியல் வாதியுமான ஆர்.ஆர். சீனிவாசனும் அவர் நண்பர்
ஆர். கனேசனும் இவ்வளவு அழகான அட்டை படங்களை
வடிவமைத்து தந்தார்கள்.

நண்பர் ஆதி. வள்ளியப்பனும், நானும் கடந்த 48 மணிநேரத்தில் 48 தடவைகளாவது தொலைப்பேசியில் உரையாடி இதன் வடிவத்தையும் வார்த்தைகளையும் செழுமைப்படுத்தினோம். என் மருத்துவ விடுப்பு
முடிந்து மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி அலுவலகத்திற்கு
ஒரு பொய் மருத்துவ சான்று கொடுத்து சேரவேண்டும். சேருவதா
அல்லது என் நிலத்திற்கே போய் தீவிர விவசாயியாக மாறி
மண்ணோடும், நீரோடும்,சேரோடும் மிதி படும் மகத்தான இயற்கை
வாழ்வைத் தேடி இப்புத்தகங்கள் என்னை நகர்த்துகின்றன.
Read more »

புதுப்படைப்புகளுக்கிடையே...

























புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

எஸ். லட்சுமண பெருமாள், உதயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ சிவக்குமார் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பும்


இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, இந்திய பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களையும், உணவையும் குடியையும் கொண்டாடங்களையும் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ரெங்கயா முருகனும், ஹரி சரவணணும் சேர்ந்து "அனுபவங்களின் நிழல் பாதை" என்ற தலைப்பில் ஒரு காத்திரமான தொகுப்பையும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளிலுருந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிற நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளிலான சிறுகதைகளை பாவண்ணன், இளம்பாரதி, டாக்டர் ரகுராம், இறையடியான், நஞ்சுண்டன், கே.வி. ஜெயஸ்ரீ இவர்களோடு சேர்ந்து தொகுப்பாசிரியர் என்ற பொறுப்பை சுமந்துகொண்ட ஷைலஜா மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டுடிருக்கிறாள். தொகுப்பின் பெயர் "தென்னிந்திய சிறுகதைகள்". இத்தொகுப்பிற்கான முன்னுரைக்காக பிரபஞ்சனுக்கு கதைகள் முடிய முடிய அனுப்பப்படுக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவள் இயக்கத்தை இன்னமும் துரிதப்படுத்துகிறது.

மிகத்தீவிரமாக இயங்கி திடீரென அதிலிருந்து அறுபட்டு லௌகீக வாழ்வில் பொறுத்திக்கொள்ள முயன்று, தோல்வியுற்று மீண்டும் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்த தன் பழைய நாட்களை விட்ட இடத்திலிருந்த தொடரும் கலைஞர்கள் முன்னிலும் உக்கிரமாக இயங்குவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கலைஞன் பி.ஜே.அமலதாஸ். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டம் மிகுந்த வாழ்வில் அமலதாசுக்கும் ஒரு சின்ன இடமுண்டு. கூத்து பற்றிய ஆழமான கட்டுரைகளும் அதன் உள்ளே புகுந்திருக்கும் சாதீயம் குறித்தும் ந.முத்துசாமி போன்றவர்களின் மேலாட்டமான முன்னிருத்தல்கள் என விரியும் ”இன்றும் வாழும் தெருக்கூத்து” தமிழுக்கு மிக மிக புதிய வரவு.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

”கொமாலா” , ”பெட்ரோபரோமா” நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர். இப்பெயரிலேயே மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானத்தால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இன்னமும் ஓயாமல் தொடர்கிறது. இன்றைய நடுத்தர வாழ்வின் பெரும் சிக்கல் மிகுந்த துயரம் குறித்தும், யார் மீதும் யாருக்கும் அக்கறையற்ற வாழ்வு குறித்தும் கடந்த பத்தாண்டுகளில் இப்படியொரு கதையை நான் வாசித்தது இல்லை. சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் 14 கதைகளின் மொழிபெயர்ப்போடு கே.வி. ஜெயஸ்ரீ தன் பகலையும் இரவையும் கரைத்துக்கொண்டு இருப்பது பெரும் கனவுலகை முன் நிறுத்துகிறது.

கவிதை தொகுப்புகளாக அளவில் சின்ன சின்னதாக அழகான ஆறேழு தொகுப்புகள் வருகின்றன. கே.ஸ்டாலின், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வநாத், தி.பரமேஸ்வரி, வெ. நெடுஞ்செழியன் என்று இக்கவிஞர்கள் தங்கள் புதிய வரிகளோடு புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து செயலாற்றுவது பிடித்திருக்கிறது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.


-நாளை பேசுகிறேன்.

Read more »

வம்சி வெளியீடுகள் - 2010

வம்சி வெளியீடுகள் - 2010

1. தென்னிந்திய நவீன சிறுகதைகள்.தமிழ், மலையாள, தெலுங்கு, கன்னட, நவீன போக்குகளை பிரதிபலிக்கும் நவீன சிறுகதைகளின் தொகுப்பு - தொகுப்பு : கே.வி. ஷைலஜா.

2. அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன், வி. ஹரி சரவணன்.
இந்திய பழங்குடி மக்களின் இன வரைவியல் குறித்த ஆய்வு பயணம்.

3. 19, டி. எம். சாரோனிலிருந்து - பவாசெல்லதுரை மண் சார்ந்த, மனிதம் சார்ந்த கட்டுரைகள்

4. உரையாடலினி - வலைப் பக்கங்களில் தன் தர்க்கக்குரல் மூலம் வியாபித்திருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

5. சூர்ப்பனகை கெ.ஆர்.மீரா. - தமிழில் கே.வி. ஷைலஜா நவீன மலையாள பெண்ணிய சிறுகதைகள்.

6. ஒரு கலகக்காரனின் கதை - ஜான் அப்ரகாம் தொகுப்பு ஆர்.ஆர். சீனிவாசன்.

7. ஒற்றை கதவு - சந்தோஷ் யெச்சிக்கானம் தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ.
மலையாள நவீன சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு.

8. உலக சிறுவர் சினிமா - பாகம் 3 விஸ்வாமித்திரன்.
உலகம் முழுவதிலுமிருந்து விஸ்வாமித்திரன் தொகுக்கும் சிறுவர்களுக்கான சினிமா.

9. பிறிதொரு மரணம் உதயசங்கர் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு.

10. எஸ். லட்சுமண பெருமாள் கதைகள் - முழுமையான சிறுகதைகள்

11 . கனக துர்கா - பாஸ்கர் சக்தியின் இதுவரையிலான முழுமையான கதைகளும் குறுநாவல்களும்.

12. தனிமையின் இசை - தேவதைகளால் சூழப்பட்டிருக்கும் அய்யனார் விஸ்வநாத்தின் கவிதைகள்.

13. பாழ் மண்டபமொன்றின் வரைபடம். - கே. ஸ்டாலின் கவிதைகள்

14. மக்களுக்கான சினிமா - மாரிமகேந்திரன் (இலங்கை)

15. வியாழக்கிழமையைத் தொலைத்தவன் - விக்ராமதித்யனின் சமீபத்திய கவிதைகள்.

16. நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து... - பின்னிமோசஸ்

17. உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமாரின் புதிய கதைகளின் முழுத் தொகுப்பு.

18. என்றும் வாழும் தெருக்கூத்து - பி.ஜே. அமலதாஸ்.

19. அமெரிக்கன் - தமிழில் சா. தேவதாஸ் - நாவல்

20. இறுதிசுவாசம் - லூயிபுனுவல் சுயசரிதம்

21. புதிர்களை விடுவித்தல் - சா. தேவதாஸ்

22. இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - சா. தேவதாஸ்

23. தங்கராணி - வேலுசரவணன் (4 சிறுவர் நாடகங்கள்)

24. மனரேகை - விஸ்வாமித்திரன் (நகுலன் குறித்த எழுத்தும் புகைப்படங்களும்)

25. நானிலும் நுழையும் வெளிச்சம் - அய்யனார் விஸ்வநாத்

26. பெருவெளிச் சலனங்கள் - தொகுப்பு மாதவராஜ் (வலைபதிவுகளில் கிடைத்த அனுபவ பகிர்வுகள்)

27. கிளிஞ்சல்கள் பறக்கின்றன - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து நூறு கவிதைகள்)

28. மரப்பாட்சியின் சில ஆடைகள் - தொகுப்பு மாதவராஜ்(வலைபதிவுகளிலிருந்து சில நவீன சிறுகதைகள்)

29. குருவிகள் பறந்துவிட்டன பூனை உட்கார்ந்திருக்கிறது - மாதவராஜ்(சொற்சித்திரங்கள்)

30. கண்ணாடி உலகம் - வே. நெடுஞ்செழியன் (கவிதைகள்)

31. கனா - ம. காமுத்துரை (சிறுவர்களின் மனஉலகை பேசும் கதைகள்)

32. சிலர்அதன் செவ்வி தலைப்படுவர் - ஆர்.ஆர்.சீனிவாசன்
(10 தமிழ் ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள்)


மறுபதிப்பில் ...

1. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே.வி. ஷைலஜா
3. எனக்கான வெளிச்சம் - தி. பரமேஸ்வரி (கவிதைகள்)
4. எதிர்பாராமல் பெய்த மழை - சிபிலா மைக்கேல் தமிழில்: சுகானா


வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை 606 601 செல் : 9444867023
e.mail- vamsibooks@yahoo.com
Read more »

சூர்ப்பனகை : தமிழில் கே.வி. ஷைலஜா

நவீன மலையாள படைப்பிலக்கியத்தில், புதிய முயற்சிகளையும், அதிர்வுகளையும் ஏற்படுத்தி வரும் கே.ஆர். மீரா எனக்கு அறிமுகமானதே, அவர் எனக்கு அறிமுகப்படுத்திய பி.பி. அனகா என்ற பெண்ணியவாதியின் பிரவேசத்தால்தான். மீராவின் மன உலகை மிக சுலபமாக நெருங்க முடிந்தது. அனல் வீசும் விவாதங்களும், அடங்கி போகும் தர்க்கங்களுமாக இருவேறு திசைகளிலும் பதட்டமின்றி பயணம் செய்யும் மீரா இன்றைய சூழலின் மீது எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவைகள்.

இக்கதையை ஷைலஜா மொழிபெயர்த்த போது ஆர்வமுடன் உடனிருந்து உள்வாங்கினேன். இப்படைப்பின் தாக்கத்திலிருந்து அவள் விடுபட பல நாட்கள் ஆனது. பல்வேறு வகையான வாசிப்பின் அனுபவ பகிர்தலை இக்கதை அவளுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும். உயிர்மையில் இக்கதை பிரசுரமாகி தொலைபேசியின் வழியே நிறைய உணர்வுகரமான உரையாடல்களை கேட்டு உணர்ந்த போதிலும் அனகாவும் அவள் மகளும், எல்லாவற்றிருக்கும் மேலாக அனகாவின் கணவரும் எனக்குள் ஏற்றியிருக்கும் பெரும் பாரம் அத்தனை சுலபத்தில் இறக்க முடியாதது. Italic


சூர்ப்பனகை

மலையாளம் மூலம் கே.ஆர். மீரா
தமிழில் கே.வி. ஷைலஜா

கோழிக்கோட்டில் ஐஸ்க்ரீம் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் உச்சகட்டத்தில் இருந்தபோது தான் பி.பி.அனகாவிற்கு கல்லூரி விரிவுரையாளராக வேலை கிடைத்தது.
முதல் நாள் வகுப்பில் நுழைந்தவுடனேயே கரும் பலகையில் எழுதியிருந்ததைப் பார்த்தாள்.

“சூர்ப்பனகையை வரவேற்கிறோம் “

பி.பி அனகா திரும்பி நின்று கரும்பலகையை துடைக்கத்துவங்கினவுடன் காகித அம்புகள் மேலே வந்து விழுந்தன. தன் முதல் வகுப்பினை ஆரம்பிக்க நினைத்ததருணத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த மாணவன் மெதுவாக எழுந்தான்.

“மிஸ் ஒரு சந்தேகம் “
“கேளுங்க....”
“மிஸ் நீங்க பெண்ணியவாதி தானே?”அப்படின்னா “பேன் தி ப்ரா இயக்கத்தைக் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?”

கோபத்தோடு அனகா அவனை வகுப்பிலிருந்து வெளியேறச் சொன்னாள்.
சற்று நிதானித்து அவனை வகுப்பிற்குள் அனுமதிக்க நினைத்த நேரத்தில் அந்த நிகழ்வு போராட்டமாக உருமாறியிருந்தது. அவள் சமாதானமாய் போக மறுத்த போது போராட்டம் மேலும் வலுத்தது.

பெண்ணியவாதிகளின் தலைவியானதால் இயக்கத்தின் துணையும் கட்சியின் பின்புலமும் அனகாவிற்கு இருந்தது. கயிறு திருகுதல் போல போராட்டம் இறுகியது. கல்லூரி கால வரையற்று மூடப்பட்டது. பெரிய பெரிய மார்புகள் வைத்து வரைந்த படங்களுக்கும் சுவரெழுத்துகளுக்குமிடையில் பதறாமல் நடந்த நாட்களில் உடன் பணிபுரியும் பேராசிரியர்களும் அனகாவை üசூர்ப்பனகைý என்றே கூப்பிடத் தொடங்கியிருந்தார்கள். இதனாலெல்லாம் அனகா மனம் தளர்ந்து போகவில்லை. மூக்கும், முலைகளும் அறுக்கப்பட்ட சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதுமே மரியாதையிருந்தது. சரித்திரத்தில் ஆரம்ப குறியீடாக சூர்பனகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண் விடுதலை?

அகலம் குறைந்த சிறிய கட்டிலில் பச்சைநிற இரவு உடையணிந்து படுத்திருந்த அனகா பக்கத்திலிருந்த பத்து வயது மகள் சீதாவிடம் கேட்டாள்.

“சூர்ப்பனகையின் கதை தெரியுமா உனக்கு? “
“தெரியாது”
சீதாவின் முகம் கனத்திருந்தது.
சீதா அறைக்குள் வரும் பொழுது, அம்மு ஜோஸப் தரியனுடன் பேசிக் கொண்டிருந்தாள் அனகா. எப்போதும் போலான உரையாடல்தான் அது. தாராளமயமாக்கலின் பலனான உலகமயமாக்கலின் விளைவில் நிகழ்ந்த வியாபாரமயமாக்கல், பாலியல் சுதந்திரமின்மை, பெண் விடுதலை, பெண் தன்விருப்பதை அடையும் சுதந்திரம் என்று போய்க் கொண்டே இருந்த பேச்சு சீதா வந்த போது அறுபட்டது.

அம்முவின் பாப் செய்யப்பட்ட முடியும், நிறம் மங்கிய தொள தொளப்பான சுடிதாரும் சீதாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அவளுடைய வெறுப்பினை பல விதங்களில் வெளிப்படுத்தினாள். இதையெல்லாம் கவனித்து சகிக்க முடியாமல் போனபோது அம்மு எழுந்து வெளியே போனாள். அதைப்பார்த்த அனகாவிற்கு கோபம் வந்தாலும் வெளிக் காண்பிக்கவில்லை. அம்மாவின் நடவடிக்கைகளை எப்போதும் விமர்சிக்கும் பெண் அம்மு என்ற பிம்பத்தை வைத்திருக்கும் சீதாவின் மனதில் இன்னும் ஏன் கோபத்தை ஏற்ற வேண்டும்? அதனால் தான் ஒரு கதை சொல்லலாமே என்று நினைத்தாள். உடனே ராமாயணம் தான் நியாபகத்திற்கு வந்தது. அதிலும் குறிப்பாக குறைபடுத்தப் பட்ட பெண்ணாய் சூர்ப்பனகை அவள் மனவெளிகளில் அலையத் தொடங்கினாள். கல்லூரியின் முதல்நாளும் கூடவே சேர்ந்து கொண்டது.

“சூர்ப்பனகை யாரு? “
சீதா அவளுடைய கான்வெண்ட் மலையாளத்தில் கேட்டாள். மிகவும் சுருக்கமாக அந்தக் கதையை சொல்லலாமா என்று அனகா யோசித்தாள். ஆனால் சூர்ப்பனகை யார்? பதிவிரதை சீதாவோடான காதலின் காரணமாக ராமனால் நிராகரிக்கப்பட்ட ராட்சஸி. அனகாவுக்கு கதை சொல்ல முடியாமல் வார்த்தைகள் தன்னை சுருக்கிக் கொண்டன.

உயரமான கட்டிலுக்குப் பக்கத்தில் நீலநிற ஃபிளாஸ்டிக் சேரை இழுத்து போட்டுக் கொண்டு எந்தவித உற்சாகமும் இல்லாமல் உட்கார்ந்திருக்கும் சீதாவைப் பார்த்தபோது கதை சொல்லும் சுவாரசியம் முற்றிலும் வற்றிப்போய் மகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
சீதா உயரமாக வளர்ந்திருந்தாள். சிவப்பு நிற டாப்ஸின் திறந்திருந்த வட்டமான கழுத்தினூடாக அவள் மகளின் மார்பினை பார்க்க நேரிட்டது. அவை சராசரியைவிட அதிகமாக வளர்ந்திருப்பதாய் அனகாவிற்குத் தோன்றியது. இருபத்தியெட்டா? முப்பதா? பத்து வயது பெண்ணுக்கு சாதாரணமாக மார்பளவு எதுவரை இருக்கலாம்?

எதுவரை இருக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லையானாலும் சீதாவுக்கான வளர்ச்சி சற்று அதிகம்தான். கடைசியாக பார்த்தபோது அவள் இவ்வளவு புஷ்டியாக இல்லை. உயரமாகவும் இல்லை. நான்கு மாதத்திற்கு முன்பு பாலியல் தொழிலாளிகள் சம்மேளனத்திற்கு போய்விட்டு வரும்பொழுது தான் அனகா சீதாவின் ஹாஸ்டலில் இறங்கினாள்.

அனகாவை பார்த்தவுடன் ஹாஸ்டல் வார்டன் வழக்கம் போல சீதாவைக் குறை சொல்ல ஆரம்பித்தாள். சீதா பைக்குள் எப்போதும் லேக்டோஜன் பால்பவுடர்டின்னை மறைத்து வைத்திருக்கிறாளென்றும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாரி வாரித் தின்கிறாளென்றும், அதனால் நடைபாதை முழுக்க எறும்புகள் வந்து பிரச்சனையாகிறதென்றும் மற்ற பிள்ளைகள் குறை சொல்கிறார்கள் என்றும் கூறினாள்.

சொந்த மகளை மற்றவர்கள் விமர்சித்தால் பெண்ணியவாதியானாலும் கோபம் வரும் தானே! அந்த கோபத்துடனே அனகா ஹாஸ்டலின் கருங்கல் தூண்களுள்ள நடைபாதையை கடந்து மகளைப் பார்க்கப் போன போது “களிக்குடுக்கையில்”கன்றுக்கு பசுவிடம் செல்லும் வழியை தேடிக் கொண்டிருந்தாள் சீதா

“வெக்கமாயில்ல உனக்கு? “
மற்ற பிள்ளைகளுக்கு கேட்கமால் குரலடக்கியபடி கேட்டாள் அனகா.
“நான் அனுப்பின புத்தங்கள் எல்லாம் எங்கே? தொலச்சிட்டியா? “
ரியோ டி ஜனிரோ கருத்தரங்கில் பங்கேற்க சென்றபோது பதினைந்து புத்தகங்களை அவளுக்கு வாங்கி அனுப்பினாள் அனகா. எல்லாமே கிளாஸிக்ஸ். ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் கோபர் ஃபீல்டு, ஹகில்பரிஃபின், டாம் சாயர் - கலர் படங்களோடிருக்கும் குழந்தைகளுக்கான பதிப்பு. அந்த பார்சலை சீதா பிரிக்கவேயில்லை என்பதை பார்த்ததும் கோபமாக வந்தது.

அவளுடைய அழகு சாதனப் பெட்டியைப் பார்த்தபோது கோபம் மேலும் அதிகரித்தது. மின்னும் ஸ்டிக்கர் பொட்டுகள், கண்ணாடி வளையல்கள், பல நிறங்களில் கல்லும், முத்தும் ஒட்டப்பட்ட இமிடேசன் நகைகள். அன்று இரவே அனகா, ராம் மோகனை தொலைபேசியில் அழைத்தாள். பேச்சு ஆரம்பத்திலேயே உஷ்ணமானது.

“அவள் பெண்ணியவாதியான பி.பி. அனகாவின் மகள் மட்டுமல்ல. என்னுடைய மகளும் தான்”
“ஆனால் எல்லோரும் அவளை அனகாவின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். எனக்கான சமூக மரியாதையைப் பற்றி நீங்கள் யோசித்திருக்க வேண்டும்”
“அனகா, அவளுக்கு பத்து வயசுதானே ஆகுது? அந்த வயசுக்குரிய பொருட்களோடு விருப்பம் இருப்பது நியாயம் தானே? “
“எனக்குத் தெரியும். என் மேல உள்ள கோபத்தைத் தீர்க்க நீங்க அவளை ஸ்டீரியோ டைப் பெண்ணாய் வளர்க்கப்பாக்கிறீங்க “
“தயவு செய்து அவளையும் ஒரு மனநோயாளியாக்காதே அனகா”
உஷ்ண உரையாடல் அதோடு தற்காலிகமாக அணைந்தது.
திருமணம்... அது தவறான முடிவாக இருந்தது.
அம்மு அன்றே சொன்னாள்.

“அனு ரொம்ப யோசிச்சு முடிவெடுக்க வேண்டிய விசயம் இது. உனக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. கேரள பெண்களின் வாழ்வோடு உனக்கொரு தவிர்க்க முடியாத பொறுப்பு இருக்கு “
எதைப் பற்றியும் அறிவு பூர்வமாய் யோசிக்கமுடியாத அன்றைய மன நிலையில் அனகா அதையும் ராம்மோகனோடு பகிர்ந்து கொண்டாள். அம்மு உன்னை சந்தோசப்படுத்த புகழ்ந்து பேசியிருக்கிறாள் என்று ராம்மோகன் சொன்னான். பெண்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்ணியம் பேசும் பெண்களுக்கு தன்னை புகழ்ந்து பேசுவது மிகவும் பிடிக்குமென்றும், இந்த அம்முவே தினமும் அவளோட புருசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதானே தூங்குகிறாள் அவளுக்கு அதன் தேவையிருக்கிறது தானே என்ற ராம்மோகனின் கிண்டல் தொனியில் அனகா விழுந்திருந்தாள்.

இனிப்பூட்டப்பட்ட வார்த்தைகள் கட்டுப்பெட்டியான பெண்களுக்கே பொருந்தும். சில நேரங்களில் வீழ்ச்சிகளை அறிந்து கொண்டே செய்யும் சாகசம்தான் பெண்ணியம்.
“ராம், நாம் ஏன் ஒன்றாய் சேர்ந்து வாழக்கூடாது”
“அப்ப கல்யாணம்? “
“அது வேணுமா? ஜஸ்ட் லிவிங் டு கெதர் “
“ரேட் என்னன்னும் சொல்லிடேன் “
“புரியல ராம் “
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இப்படியான பெண்களுக்கு விடியும் போது அவங்க கேக்கற பணம் கொடுக்க வேண்டியதிருக்கும் “
“அது அவர்கள் வாழ்வதற்கான வழி “
“ஆமாம். அதனால் அதற்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்கு “

இரண்டு வெவ்வேறு துருவங்கள். இரண்டு வெவ்வேறு உலகங்கள். இரண்டு வெவ்வேறு நூற்றாண்டுகள். தமக்குள் ஒத்து வராது என்று அனகா மிகச் சீக்கிரமே புரிந்து கொண்டாள்.
ஒரு ஆண் எப்படி இப்படி கட்டுப்பெட்டியாக வாழ முடிகிறது? குறுகலாக மட்டுமே யோசிக்க முடிகிறது? அடிப்படைவாதியாகவே தன் வாழ்நாளை நீட்டிக்க முடிகிறது?
ஆனால் தன்னையே புகழ்ந்துபேசும் பேச்சு, எதிரில் இருப்பவர்களை ஆசைப்பட வைக்கும் என்பது போல அனகா, ராமிடம் அடங்கிப் போனாள்.

இருந்தபோதிலும் வேட்டைக்காரனும், பறவையும் ஒரே வலையில் மாட்டிக் கொள்வதுதான் திருமணம் என்பதை சீக்கிரமே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
“ராம் நீங்க என்னோட ப்ரஸ்ட்டைத் தொடக்கூடாது, அது எனக்குப் பிடிக்கல”
“அனு, நான் வெளிப்படையா உங்கிட்ட கேக்கட்டா, உன்னை யாராவது குழந்தையாயிருக்கும் போது துன்புறுத்தியிருக்காங்களா? “
“ராம் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே வம்ச விருத்திக்காகத்தான். செக்ஸ் ஒரு சந்தோசம் என்று மட்டும் வைத்துக் கொண்டால், பெண்ணின் உடலை ஒரு உபயோகப் பொருளாக மட்டுமே உங்களால் பார்க்க முடியும் “
“சுருக்கமாக சொல்லப் போனா நீயொரு மனநோயாளிதான் “

இப்படியான அறிவு தளத்திலான வாக்குவாதங்கள் அடிக்கடி இருவருக்கும் பிடிக்காமலேயே நடந்தேறியது. அப்படியும் சீதா பிறக்கும் வரை ஒன்றாகவே வாழ்ந்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் சீதா பிறந்த பதினோராம் நாளன்று அனகா தொடுபுழாவில் ஒரு வழக்கு காரணமாக போலீஸ் ஸ்டேசன் தர்ணாவுக்கு போக வேண்டியிருந்தது. ரத்தத் தளிராயிருக்கும் தன் மகளுக்கு புட்டிப்பால் கொடுத்து விட்டு தர்ணாவுக்கு போனபோது தான் ராம் மோகன் மிகவும் மூர்க்கனாகி போனான்.

தனக்கான சமூக பொறுப்பினை அனகா நியாயப்படுத்தினாள். தன் குழந்தைக்கு பால் கொடுப்பதை விட பெரிய சமூக பொறுப்பு பெண்களுக்கு இல்லையென்று ராம்மோகன் வாதாடினான்.

ராம்மோகனுக்கு முலைகளில்லை. அதனால் பால் கொடுக்கும் முலைகளின் வேதனையை அவன் அறிந்தவனில்லை. நரம்புகளை உள்ளடக்கிய சிறிய சதைகளின் சக்தி, தோலினால் மூடப்பட்ட மாமிசம், கேவல், மூச்சு வாங்குதல், வலி, ரணம்... அதனிடையில் தர்ணாக்கள், செமினார்கள், கண்டன ஆர்பாட்டங்கள்...

நெருக்கம் கிடைக்கும்போது ஒரு ஆணின் ஆவேசத்தோடு அம்மாவின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டாலும் கூட, குழந்தை சீதா சீக்கிரமாக லேக்டோஜனுக்குப் பழகியிருந்தாள். அதுவே அவளுக்கொரு பலவீனமான பழக்கமாகவும் மாறியிருந்தது. லேக்டோஜனை வாரித் தின்று வளர்ந்ததாலோ என்னவோ சீதா இப்படி வளர்ந்திருக்கிறாள் என அனகா சந்தேகித்தாள். உடல் நுகர் பொருளாகக் கூடாது என்பது சரிதான், ஆனாலும் உயரமான மெலிந்த உடல்களுக்குத்தான் இப்போது பெண்ணியவாதிகளுக்குள்ளும் மதிப்பும் மரியாதையும்.

நர்ஸ் பக்கத்தில் வந்தபோது சீதாவின் கையை எடுத்து விட்டுவிட்டு அனகா நர்ஸிடம் சென்றாள்.
“வீட்டுக்காரர் வந்திருக்காரா?”பல்ஸ் பார்க்கும் போது நர்ஸ் கேட்டாள்.
“இல்ல.”
“பின்ன யார் உங்க உதவிக்கு இருக்காங்க?”
“என்னோட நண்பர்கள்”
“ ஓ......”

நர்ஸ் பரிதாபத்துடன் அனகாவைப்பார்த்தாள். அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது. அனகா பெருமையுடன் சீதாவைப் பார்த்தாள். சீதா சங்கடந்துடன் தலையை குனிந்து கொண்டாள்
அனகாவுக்கு சர்ஜரி முடிவானபோது சீதா ராம்மோகனின் வீட்டிலிருந்தாள். அவள் “ராம்மோகனை தொலைபேசியில் கூப்பிட்டாள்.

சீதாவைக் கொஞ்சம் அனுப்புங்க. எனக்கு திங்கட்கிழமை காலைல ஆப்பரேசன்.”
“உனக்கென்ன ப்ரச்சனை?”
“ப்ரஸ்ட் கேன்சர்... டாக்டர்கள் என்னோட மார்புகளை அறுத்தெறியப்போகிறார்கள்”
“கடவுளே”
ராம்மோகன் அதிர்ந்தது போல தோன்றியது.

அனகாவிற்கு சிரிக்கவேண்டும் போல தோன்றியது. இந்த அறுவைச்சிகிச்சை மூலம் நான் சரியான பொருள்படவும் சூர்பனகையாகிறேன். சுதந்திரமானவளாகிறேன் - உன்னுடைய வெறிக்கும் பார்வையிலிருந்து, கொஞ்சலிலிருந்து, வலிகளிலிருந்து நான் விமோசனமடைகிறேன்.
“நான் வரணுமா?”
ராம் மோகன், குரலில் இடரலுடன் கேட்டான்.
“வேண்டாம்”
டாக்டரும் இதையேத்தான் கேட்டார். “கணவர் வரவில்லையா?”
“இல்லை”.
“சம்மத பத்திரத்தில் யார் கையெழுத்திடுவார்கள்?”
“நான்”
அனகா தீர்மானமாய் சொன்னாள்.

என் உடல். நெஞ்சில் பால் சுரக்கும் நரம்புகளும் அடிவயிற்றில் கர்ப்பப்பையும் உள்ள என் உடல். இவைகளை அறுத்தெறிய வேண்டுமா? வேண்டாமா? என்று தீர்மானிக்க இது இரண்டுமில்லாத, இதன் வலி அறியாத ஒருத்தனின் சம்மதம் எனக்கெதற்கு டாக்டர்?
ரத்தக்கொதிப்பும், நாடியும் பரிசோதிக்கப்பட்டது. எல்லாம் சரியாக இருப்பதை உணர்ந்த நர்ஸ் வெளியே போவதற்கு முன் சொன்னாள்.

“பன்னிரண்டுமணிக்கு உள்ளே அனுப்பிடுவாங்க. மகளிடம் ஏதாவது பேசணும்னா பேசிடுங்க.”
அனகா சீதாவைப் பார்த்தாள். என்ன பேச...?
“சீதா”
அனகா ஒரு பெண்ணியவாதியின் திடமான குரலில் மகளை அழைத்தாள்.
“எனக்கு ஆப்பரேசன் நடக்கப் போகிறது. உனக்கு ஏதாவது நான் செய்ய வேண்டியிருந்தால் சொல்”
சீதா முதலில் பதறிப்போனாள். அனகா தொடர்ந்தாள்.

“என்ன வேணுன்னாலும் கேள். என்னால எதையும் செய்து தர முடியும். சர்ஜரி முடிந்து திரும்பி வராமல் போனால் உனக்கு வேண்டியதை செய்து தரவில்லையே என்ற வேதனை என் ஆத்மாவை சங்கடப்படுத்தாமலிருக்கட்டும்... ஏதாவது கேள் மகளே. அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்”

சீதா உடனே பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் குழப்பத்தில் இறுகியது.
டாக்டர்கள் எப்படி இதை அறுத்தெடுப்பாங்க?
சர்ஜரி முடிந்தபின் மார்பு பார்க்க எப்படியிருக்கும்?
இனியொரு பாப்பா பிறந்தால் அம்மா எப்படி பால் கொடுக்க முடியும்?

இப்படியான கேள்விகள் சீதாவை துன்புறுத்தின. அனகாவிற்கு தன் பொறுமையை தானே இழந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
“உனக்கு வேண்டியதை மட்டும் கேட்டுத் தொல” என்று கத்திவிட்டாள்.
சூழல் இறுகியபோது சீதாவின் முகம் சிவந்தது. தன் டீ சர்ட்டின் முன் பக்கத்தை சங்கடத்துடன் திருகிக் கொண்டே அனகா தன் மகள் எதை கேட்கக் கூடாதென்று பயந்தாளோ அதையே சீதா கேட்டாள்.

“அம்மாவின் முலைப்பால்”

பி.பி. அனகா அதிர்ந்தாள். லிங்காதிபத்யம், விமோசனம், விரும்பியதை அடைதல்- ஒரு மனோ பலத்திற்காக அனகா இதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டாள். பிறகு அவள் ஒரு போராளியின் பிடிவாதத்தோடு தன்மீது போர்த்தப்பட்டிருக்கும் பச்சைநிற உடையின் கழுத்தில் இருக்கும் கயிறுகளை இழுத்து அவிழ்த்தாள்.
“வா..... குடி.”

“நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பிப் பார்க்கும்பொழுது பி.பி. அனகா என்ற உன் அம்மா சக்திமிக்க ஒரு பெண்ணாக இருந்தாள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டி, என் மகளுமான உனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக... வா...”
புற்று நோயால் சிவந்து, கறுத்த, சின்ன சின்ன கட்டிகள் முளைத்திருந்த அம்மாவின் முலைகளை சீதா ஒரு முறைதான் நேரெடுத்தாள்.

ஏற்க மறுத்த சூர்ப்பனகையின் மகள் எந்த உணர்வுமற்ற தொனியில் சொன்னாள்.
“எனக்கு லேக்டோஜனே போதும்...”
Read more »

ஏழுமலை ஜமா



சில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

விடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.

இக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்? என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.


அத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.

படப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.

ஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.

இன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.
Read more »

எ. அய்யப்பன் என்ற கலகக்காரனின் தமிழ் வருகை


சுட்டெரிக்கும் அனுபவங்களின் தீச்சூளையில் உருவம் கொண்டெழும் எ. அய்யப்பன் ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் நினைவு படுத்த முடியாத ஒரு பக்கத்தின் மூலையில்தான் எனக்கு முதன் முதலில் அறிமுகமானார். சில உக்ரமான படைப்புகளால் நான் காய்ச்சலால் படுக்கையில் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னை நெட்டி தள்ளிய படைப்பாளிகளில் அய்யப்பனும் ஒருவன்.
தமிழில் விக்ரமாதித்தன், கைலாஷ்சிவன், லஷ்மிமணிவண்ணன் என்ற கவிஞர்களின் வாழ்வு முறையின் முற்றிய வடிவம்தான் அய்யப்பனின் வாழ்வு. அவரை ஒரு முறை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென விரும்பி என் கேரளா நண்பர்களோடு தொடர்பு கொண்ட போது, நிகழ்ச்சி முடிந்து அவர் கேரளா திரும்ப குறைந்தது ஒரு வருடம் ஆகும். பரவாயில்லையா? என்று சிரித்த போது இந்த உற்சாக சவாலை ஏற்கவே மனம் விரும்பியது. ஆனாலும் உப்புச்சப்பற்ற என் மிடில்கிளாஸ் வாழ்வு அதற்கு இன்னும் அனுமதிக்கவில்லை.
என் சிநேகிதி கே.வி.ஜெயஸ்ரீ, அய்யப்பனின் அதே உக்ரத்தை தமிழில்தந்த கையெழுத்துபிரதியுடன் 'வம்சி' யில் உட்கார்ந்திருந்த இரவு என்னை ஒரு பிசாசின் கருணையற்ற துரத்தலோடு அலைகழித்த இரவு பதினோருமணிக்கு ச. தமிழ்செல்வனை தொலைபேசியில் அழைத்து இரண்டு, மூன்று கவிதைகளை வாசித்துக்காட்டி அவரின் நிம்மதியான பஸ் பயணத்தை குலைத்தது நினைவுக்கு வருகிறது. அல்லது அந்த பிசாசை தமிழ்ச்செல்வன் பயணம் செய்த பஸ்சில் டிக்கட் வாங்கி ஏற்றி விட்டு விட்டு நான் மௌனமானேன். சுகுமாரன் சொல்லும் தற்கொலையில் தோற்றவனின் மௌனமது. வார்த்தைகள் எத்தனை அபயாகரமானவைகள் என்பதை என் தொடர் வாசிப்பில் அய்யப்பனிடம்தான் பயந்து நடுங்கினேன். இரண்டாண்டிற்கு பிறகும் அடங்காத என் மனக் கொந்தலிப்பின் ஒரு துளி இது. இதை உங்களுக்கு மாற்றிவிட நினைக்கும் என் சுயநலமே இப்பகிர்தல்.

முதுகில் உண்டான காயம்

இதோ கிரீடம்,
நாம் கீழடங்கியிருக்கிறோம்.
எவ்விதக் கீர்த்தியுமற்ற ஒருவனால்
இதன்றி வேறொன்றும் இயலாது.
ஒரு திரி ஏற்றி வைத்துப் போகிறேன்.
வெடிமருந்து கிடங்கின் சாவியை
நான் பாதுகாக்கிறேன்.

ஒரு குதிரைகூட இல்லாத
பயணம்.

உன் சூர்யரதம்
நான் வரும்வரை
சிதையாமல் இருக்கட்டும்.

உன் ராணி
கணிகையாவாள்;
கிரீடம் பிச்சைப் பாத்திரமாகும்
என்கிறான் தீர்க்கதரிசி,
விஷம் தடவிய வாளினால்
நீ நடத்திய போராட்டத்தை நானறிவேன்.

நான்
நெருப்பிலிருந்து ஒரு பொறியை
வெடிமருந்து கிடங்கிற்குள் எறிவேன்

நீ
யுத்தபூமியில்
போராளிகளின் சாம்பலில்
செவ்விளநீர் மரங்கள் நடு.

நான் கேடயம் தவறவிட்டு
முதுகில் காயத்தோடு தோல்வியைத் தழுவியவன். - ஆனால்
எனக்கும் உண்டொரு வரலாறு.





ஊமை வம்சம்

அவள் ஊமை.
ஊமைகள்தான் தோழிகள்.

சைகை மொழியில்
ஊமையின் பேச்சுத் திறன் அதிகரிக்கிறது.

ஒரு நிசப்த முகூர்த்தத்தில்
திருமணம் நடந்தது
ஓர் ஊமை இளைஞனுடன்.

மிருகத்திற்கு
மிருக மொழி

மனிதனுக்கு
உடைந்து சிதறிய பின்னங்களின் மொழி.

இவர்களின் ஊமைக்காதலிற்கு
திருவிழா உற்சாகத்தின் மொழி

அரவணைப்புகளினூடே
வேர்வைத் துளிகள்
ஆரவாரித்துச் சிரிப்பதை
அவர்கள் கேட்டனர்.

இவர்களின் காதலின் தமனிகளில்
கலகத்தின் முழக்கம்.

விசாரணையில்
வழக்காடு மன்றம்
என்ன செய்யும்?

திருமணம் முடிந்து
மாதங்கள் ஒன்பதானது

இருவரின் வேண்டுதலும்

எங்களுக்குகொரு
ஊமைக் குழந்தை
வேண்டுமென்பதே.






பிரணய ஸ்பரிசம்

ஒரு தழுவலினூடே
தீயாகுபவள் நீ

இன்னும் கொஞ்சம்
நெருங்கி வா
உன் ஸ்பரிச மாபினியை நான்
உணர்ந்து கொள்ளும் வரை.

உள்ளங்கையைக் காட்டு
பிளவுபட்டும்
தெளிவாகவும் காணப்படும்
ரேகைகளில்
எதிர்காலத்தில்
உன்னோடு இணைந்து
நானிருப்பேனா என்று
அறிந்து கொள்ளும் வரை.

இன்று கண்ணாடி பார்க்கவில்லை
மடியில் தலைசாய்த்துக் கொள்.
உன் கண்களில் நான்
நிறையும் வரை.

இது மானின் கால்கள்
ருசித்து அறிந்து கொள்
காதலின் வேகம்
என்னவென்று அறியும் வரை.

இந்த வேர்வை முழுவதையும்
குடித்துத் தீர்
வறண்ட நாக்கு
தாகத்திற்கான ஏக்கம்
என்னவென்று அறியும்வரை

பார்
காட்டின் பசுந்தலங்களில்
முயல்கள்
மயூர நாட்டியம் காண்கிறது
கண்கள் குளிரும்வரை.




நகம் வெட்டி

அவள் கூர்நகங்கள் வளர்த்து
என்னைத் தழுவும்போது
நகங்கள் என்னைக்
காயப்படுத்தியதில்லை.

பூனைக் குட்டிக்கும்
அந்த நகங்களைப் பிடித்திருந்தது.
நகங்கள் மனதிலும் வளருமோ
என்று மட்டும் சிலசமயம் பயந்தேன்.

ஒரு பிரிவினைக் குறித்து நான் கனவு கண்டேன்
அவள் என்னைக் கைவிடுவாள் என.

சிவந்த தலைமுடி பறந்தபடி
குரோதம் அவளுடைய பார்வையின் கூடுடைத்தபோது
நகக்கூர்மை
என் கழுத்தில் அழுத்தியது.

தொண்டையில் இடறிய ஓர் அலறலுடன்
திடுக்கிட்டெழுந்தேன்

கறுத்த பயம் புலர்தலின் நீளம் கூட்டியது

விடியலில் அவள் வந்தாள்.

நான் பார்த்தது
நகங்களைத் தான்
இல்லை
நகங்களில் இரத்தமில்லை.

கைகள் என் கழுத்தில் அழுத்திய
துர்க் கனவை நினைத்து
அவள் மடியில் வீழ்ந்தேன்

இப்போது விரல்களை
என் கைகளில்
உணரும்போது
நகங்கள் இல்லாமல் போகட்டும்.

ஒரு முத்தத்திற்கு இரையாய்ப் போனது
எல்லா நகங்களும்.

வார்த்தைகள் கிடைக்காத தீவில்
மலையாளம் மூலம்

எ. அய்யப்பன்
தமிழில்
கே.வி. ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ் வெளியீடு
தொடர்புக்கு : 9444867023
Read more »