Thursday, May 11, 2017

நஜீப் குட்டிப்புறம்


இந்த தகிக்கும் வெயிலில் இருந்து முழுவதுமாய் விடுபட்டு, சென்னையும் கடலூரும் நீரில் மூழ்கிவிடு்மோ என பெய்து தீர்த்த மழை நாட்களுக்குள் நாம் ஓடிப்போய் நின்றுகொள்ள வேண்டும். .அப்படியொரு பெருமழையின் நாளில்தான் முதன்முதலில் அந்தக் குரலைக் கேட்டேன்.

"பவாண்ணா நான் நஜீப் குட்டிப்புறம் .நானும் மகன் நிசாமும் செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருக்கிறோம். எங்கள் குடும்ப சேமிப்பில் இருந்த 3 லட்ச ருபாயும் என் கையில்தான் இருக்கிறது .இப்பெரு மழையில் உடமைகள் இழந்த பெயர் தெரியாத ஏதாவது ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்பணத்தில் இருந்து சிந்தாமல் சிதறாமல் ஏதாவது செய்தாக வேண்டும். அரைகுரையாய் மொழி தெரிந்த எனக்கு உடனிருந்து உதவ யாராவது சில நண்பர்கள் வேண்டும்"

இப்படிதான் நஜீப் குட்டிப்புறத்தின் ஈரமான குரல் என்னை வந்தடைந்தது. மூன்று லட்ச ருபாயின்  கடைசி பைசாவும் மழை கொண்டுபோன செங்கல்பட்டுக்கு அருகில்  உள்ள ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் கரைந்தது.


அம்மழையினூடே திருவண்ணாமலை நோக்கி வந்த ஒரு பஸ்ஸில் ஏறி பெரியார் சிலைக்கு அருகில் இறங்கி சுடச்சுட வடைகளை  வாங்கி தின்றுகொண்டே வீட்டுக்கு வந்த நஜீப் குட்டிப்புறம் என்ற அந்த எளிய மனிதனின் நீர்மையை, சுட்டெரிக்கும் இவ்வெயிலினூடே  இணைத்துக் கொள்கிறேன்.

சம்பவங்களை மட்டும் அறியத் துடிக்கும்  மனமும், அதை எழுதிவிட முடியுமா என்ற மூன்றாம்தர எண்ணமும் சேர்ந்து  என்னை உந்தித் தள்ள,
"என்னென்ன செய்தீங்க நஜீப் ?

பாதிக்கப்பட்ட மனிதர்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டீர்கள்?".
என்ற என் வார்த்தைகளை இடைமறித்து, 

"
இதையெல்லாம் சொல்ல நேரமில்லை பவாண்ணா. மழை நிற்கும் ஒரு காலத்தில் அது பற்றிப் பேசலாம். நாளைக்குக்  காலையில நாம எல்லாருமா சேர்ந்து கடலூருக்குப் புறப்படலாம். அதிகாலை 5 மணிக்கெல்லாம் என் நண்பனும்,ஹியூமன் கேர் பவுண்டேஷனின் செக்ரட்டரியுமான பரூக் 5 லட்ச ரூபாயோடு உங்கள் வீட்டுக்கு வருவார். அதற்குள் நாம் 500 வீடுகளுக்கான அரிசி, பருப்பு ,பாய், தலையணைகளை ஏற்பாடு செய்ய முடியுமா?"
அந்த நீண்ட இரவு முடிவதற்குள் அதைச் செய்து முடித்தோம் .

திருவனந்தபுரத்தில் இருந்து வந்திருந்த பரூக் பாயை அப்படியே வழிமறித்து நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டடிருந்த லாரியில் ஏற்றினோம். அந்த லாரியின் பின்புறம் எங்கள் மொத்த குடும்பமும் அசதியில் தூங்குக் கொண்டிருந்தது. கடலூர்வரை நீடித்த மழை முடிந்த அந்நாளின் பயணத்தில்தான் நஜீப் குட்டிப்புறம் என்ற அம்மனிதனை நாங்கள் அறிந்தது.



பேரிடர் காலங்களில் மட்டும் ஓடி வந்து உதவும் ஒரு சேவைமனம் கொண்ட மனிதல்ல அவன் என்பதும், நஜீபின் மொத்த வாழ்நாளுமே சாதாரண மனிதர்களுக்கானது மட்டுமே  என்பதுமறிந்து, அவன் சிவந்த கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்.

இந்திய திசையெங்கும் பரவிக் கிடக்கும் இம்மேடு பள்ளங்களை இட்டு நிரப்ப புரட்சி ஒன்றுதான் ஒரே வழி என்ற லட்சியத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவர் தான் நஜீபும்ஆனால் அது நிகழும் வரை நடக்கும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதனாக அவரால் கரை ஒதுங்கி நின்றுவிட முடியாது. இந்தக் கடும் வெயிலில் பீஹார்ஜார்கண்ட் என உள்ளடங்கிய குக்கிராமங்களில் சுற்றியலையும் நஜீப் தனக்கிருக்கும் சொந்த வீட்டையும் பொதுவானதாக மாற்றி வைத்திருக்கிறார். அல்லது அதுவே அப்படி மாறியிருக்கிறது. தன்மீது பிரியமில்லாத தன் எஜமானனுக்கு அவன் தோழமைகளைத் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு இது காட்டும் விசுவாசம்.

கோழிக்கோட்டுக்கு அருகே ஓர் ஆற்றங்கரையிலுள்ள பூட்டப்படாத கதவுகள் கொண்ட நஜீபின் அவ்வீட்டுக்குள் யாரும் எந்நேரமும் பிரவேசிக்கலாம். ஒருவேளை உங்கள் வருகை நடுநிசியெனில் அது அறிந்து அடுத்தநாள் காலை உணவு உங்கள் அறைக்கருகே வரும். அதற்கு நஜீப் அங்கிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நஜீபின் குழந்தைகள் அவருடைய தொடர்ச்சியே. வட மாநில வறுமை சூழ்ந்த உள்ளடங்கிய கிராமத்தில் தங்கி அந்த ஊருக்கு ஒரு கிணறு வெட்டியோ, இனியாகிலும் மழைநீரைத் தேக்கிக் கொள்ள ஒரு தூர்ந்த குளத்தை அந்த மனிதர்களோடு சேர்ந்து தூர்வாரியோ, மாதவிடாய் நாட்களில் தீட்டுக்கறை  படிந்த பூவழிந் எந்த சேலையும் கிடைக்காமல், மண்ணை உபயோகிக்கும் நம் சோதரிகளுக்கு நாப்கின் கொடுத்துக் கொண்டோ நஜீப் இப்போது இயங்கிக் கொண்டிருக்கக் கூடும்.

அம்மாநில மக்களின் வாழ்வை அப்பட்டமாக அப்படியே பதிவு செய்திருக்கும் அஜித் கோமாச்சியின் ஒரு புகைப்படக் கண்காட்சியின் திறத்தலுக்குப் பின் நிகழ்ந்த உரையாடல் அது. நஜீப் நிகழ்த்திய உயிர்ப்பு  மிக்க உரையை அதற்குமுன் மலையாள மொழியில் யார் பேசியும் நான் கேட்டதில்லை. மேற்பூச்சற்ற இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை என்பதை மிக எளிமையாக நான் உணர்ந்து கொண்ட தருணமது.

கோழிக்கோட்டிலிருந்து குட்டிப்புறம் வரை நீடித்த எங்கள் நள்ளிரவுப் பயணமொன்றில் நஜீப் வண்டியை நிறுத்தி, 10 கிலோ பச்சைமீன் வாங்கினார்.

"
எதற்கு நஜீப் இவ்ளோ வாங்குறீங்க?’’

சிரித்துக் கொண்டே,

"
இது நமக்கில்ல பவாண்ணா, நல்ல மீன் உணவு சாப்பிட முடியாத பல வயதானவர்களை, நோயாளிகளை நானறிவேன். நாளை காலை நாம் தூங்கி எழுவதற்குள் எங்கள் குழந்தைகள், அவர்களுக்கெல்லாம் பங்கு பிரித்து பகிர்ந்து தந்துவிடுவார்கள். ஒருவேளை  அது மிச்சமிருந்தால் நாமும் சாப்பிடலாம்.

.நான் நஜீபின் கைகளை இன்னமும் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். என்ன மனுஷன்டா இவன்! என மனதில் உயர்த்திக் கொண்டேன்.

ஒரு படப்பிடிப்பின் இடைவெளியில் நண்பர் மம்முட்டியிடம் நஜீப்பைப் பற்றி விரிவாகப் பேசினேன்.

தன் கண்கள் விரிய, அவர ஒடனே பாக்கணுமே பவா!’ என்றவரை ஏறெடுத்து,
அது அவ்வளவு சுலபமில்ல சார்

அவருடைய 'ஏன்?' பதற்றமாக வெளிப்பட்டதைப் பார்த்து நிதானமாகச் சொன்னேன்.
"இப்படியான எளிய னிதர்களின் உயரம் நம் தொடுதல்களுக்கும் அப்பாற்பட்டது சார்"
நன்றி 
அந்திமழை










தொடக்கமும் தொடர்ச்சியும் பிரபஞ்சன்

  
நெருக்கடிமிக்க சென்னை அண்ணா சாலையின் தென்புறம் நாங்கள் நான்கைந்து நண்பர்கள் நிற்க, மார்பில் அணைக்கப்பட்ட நான்கு பீர் பாட்டில்களோடு சாலையைக் கடந்த பிரபஞ்சனிடம் அந்த இரவு பத்து மணிக்கு சிலர் நின்று ஆட்டோகிராப் கேட்டார்கள்.
பீர் பாட்டில்களை அவர்கள் கையிலேயேத் தற்காலிகமாக தந்துவிட்டு சாலை ஓரமாக நின்று கையெழுத்திட்டுத் தந்த பிரபஞ்சனைப் பார்த்து,
இதெல்லாம் வேணாம் சார், உங்களுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு பெரிய இமேஜ் இருக்குஎன்று சொன்ன என்னை தடுத்து.

 “அப்படி ஒரு பொய்யான இமேஜ்ஜை நான் வெறுக்கிறேன் பவா, நான் எதுவாக இருக்கிறேனோ அப்படியான பிம்பம் மட்டுமே வெளியிலேயும் பதிவாக வேண்டும். நான் எப்போதாவதுதான் குடிப்பவன். அது வெளியேத் தெரிய வேண்டாமெனில் இதை இனி தொடக்கூடாது இல்லையா” என்ற அப்படைப்பாளியின் கையிலிருந்த பாட்டில்களை கொஞ்சநேரம் என் கைகளுக்கு மாற்றி நடந்தது நினைவிருக்கிறது.
எவர் கைகளிலேயும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாத நீர் தான் பிரபஞ்சன் எனத்தோன்றும். என் கல்லூரிப் படிப்பை முடித்து, இலக்கியம் நோக்கி வெறிகொண்டலைந்தக் காலத்தில் கி.ரா. பற்றிய ஒரு இலக்கியக் கூட்டத்தில் தான் பிரபஞ்சனை முதன்முதலில் பார்த்தேன்.
பட்டு வேட்டி, பட்டுச் சட்டைப் போட்டு கையில் புகைந்த ஒரு சிகெரட்டோடு அரங்கவாசலில் நின்றிருந்த அவரை ஏனோ அப்படிப் பிடித்துவிட்டது. எனக்கு அது இத்தனை ஆண்டுகளாகியும் அகல மறுக்கும் அன்பின் அடர்த்தி. பத்தாயிரம் ரூபாயை கவரில் வைத்து கொடுப்பார்கள் என்ற நிச்சயத்திற்காக, ஒன்றுமேயில்லாத ஒருவனை உலகக்கவி என்றும், தன் படைப்பு அவன் அதிகார காலடியில் அச்சேறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அவன் எழுத்து நோபலுக்கும் மேலே என எழுதுகிற பலபேருக்கு மத்தியில் பிரபஞ்சன் என்ற அசல் இன்றளவும் தமிழ் வாசிக்கும் பலராலும் நேசிக்கப்படுவதற்கு அவரிடம் இயல்பிலேயே இன்றளவும் இருந்துவருகிற இந்த எளிமையும் உண்மையும் தான் காரணம்.
தகுதிபெறாத படைப்புகள் எதுவாயினும் அதை எழுதியவன் இந்தியாவின் பிரதமரேயாயினும் தன் கால் சுண்டுவிரலால் அவர் எத்தித்தள்ளிய சம்பவங்கள் இலக்கிய உலகம் அறிந்ததுதான்.
எதிலும் எங்கும் நிலைத்திருக்கத் தெரியாத படைப்பாளிக்களுக்கேயுள்ள அலைவுறும் மனம் கொண்டவர் பிரபஞ்சன். முறையாகத் தமிழ் படித்து, முதன்முதலில் மாலைமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராகத் தன் வாழ்வைத் துவக்குகிறார்.
துவக்கத்திலேயே உண்மையின் குரூர முகம் அச்சேற மறுத்து அவரை வெளியேற்றுகிறது, அல்லது அவரே வெளியேறுகிறார்.
மானுட ஜீவிதத்தின் இந்த எழுபத்து மூன்று வயது வரை ருக்கு ஏற்படும் முரண்பாடுகளும், சமூக வாழ்வின் ஒரு படைப்பாளியாய் சகித்துக்கொள்ளமுடியாத அருவருப்பு மிக்க சமரசங்களை உதறித் தள்ளுபவராகவும், எதிர்கால லௌகீக வசதிகளைப் பற்றி எந்தக் கவலையுமின்றி ஆரம்பத்தில் தன் உடல் மீதேறிய அதே உற்சாகத்துடன் கடற்காற்றின் குளுமையுடனும், சுதந்திரத்துடனும் நம்மோடு அலைந்துத் திரியும் எளியப் படைப்பாளியாகத்தான் பிரபஞ்சனை ஒவ்வொருவருமே உணரமுடியும்.
நான் எழுதத் துவங்கிய ஆரம்பத்திலேயே என் முன்மாதிரியென தோழமையோடு குடியேறியவர் அவர்தான்.
என்சத்ருகதையை உலகின் தனித்துவமிக்க பத்து கதைகளில் ஒன்று என எழுதி ஒரு ஆரம்பகால படைப்பாளியை திக்குமுக்காட வைத்தவர். மரங்களையும் பழங்குடி மனிதர்களையும் காடுகளையும் அதன் பச்சைய வாசனையையும் பவாவின் கதைகளில் நான் உணர்ந்தது போல வேறெங்கும் உணந்ததில்லையென எழுதிய கைகளை ஒரு நிமிடம் நான் பற்றிக் குலுக்க கூட அனுமதியாதவர்.

அக்கணத்தில் தனக்கு எது சரியென்றுத் தோன்றுகிறதோ அதன் பின் விளைவுகள் எதுவாயினும் எந்த கணக்கும் போட்டுப்பார்க்கத் தெரியாமல் அப்படியே உதறித்தள்ளி எழுந்து தனக்கு விருப்பமானதை நோக்கி நடக்கத் தெரிந்த ஒரு உண்மைத் துறவியின் மனம் எப்போதுமே பிரபஞ்சனுக்கு உண்டு.
ஒரு பிரபலமான வாரப் பத்திரிகையில் தான் எழுதிக் கொண்டிருந்த தொடர்கதையை ஏதோ சில மனநெருக்கடிகளால் எழுதமுடியாமல் அவரின் பிரியப்பட்டசுமதியை மௌண்ட்ரோட்டின் ஸ்பென்சர் முன் அநாதையாய் நிற்க வைத்துவிட்டு நட்ட நடு இரவில் திருவண்ணாமலைக்கு பஸ் ஏறின பிரபஞ்சனை இப்போது இக்கணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.
அதிகாலை திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் அவரை அழைத்துவர என் பைக்கோடு நின்றிருந்த என்னைப் பார்த்து,
இப்பதான் மனம் சந்தோஷமாக இருக்கு, அச்சு ஊடகம் படைப்பாளியின் வயிற்றைக்கீறி குடலை உருவக்கூடாது சார், நல்ல காபி உங்க ஊரில் எங்குக் கிடைக்கும்” என இயல்புக்கு திரும்பிய ஒரு மனிதனை நீங்கள் எந்த வகையில் சேர்ப்பீர்கள்?
ஒரு நல்ல காபிக்காக, பல மைல்கள் நடந்தும், ஆட்டோவில் பயணித்தும் பருகத் தெரிந்த ருசி வாய்த்தவர் அவர்.
ராயப்பேட்டை சரவணபவனின் அதிகாலை திறப்பு, என்பதே பரபஞ்சனின் ஒரு குவளை தேநீருக்காகத்தான் எனத்தோன்றும். எல்லாத்தரப்பு மனிதர்களுமே அவரின் தோழமைப் பட்டியலில் உண்டு. அல்லது மனிதர்களை எதன் பொருட்டும் வரிசைப்படுத்த தெரியாதவர் அவர்.
மேன்சன் வாட்ச்மேன், கூரியர் கொண்டுவரும் பையன், சத்யம் தியேட்டர் வாசலில் பர்சை தொலைத்துவிட்டு ஊருக்குப்போக வழியில்லாமல் நிற்கும் ஜீன்ஸ் போட்ட இளைஞன், ‘மகாநதி படிச்சிட்டு அப்படியே உங்களைப் பாக்கப்புறப்பட்டு வந்தேன் சார் என சொல்லி அதிகாலையிலேயே கதவைத்தட்டும் ஆய்வு மாணவி இவர்களோடுதான் அவரின் காலை, அல்லது மதிய உணவு பகிர்ந்து கொள்ளப்படும்.
கையில் பணம் கிடைக்கும் தருணங்களில் நீங்கள் பிரபஞ்சனை அருகிலிருந்து அவதானிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு வள்ளல் அவர் கைகளில் புகுந்து பரப்பரப்பான். கடைசி ஒரு ரூபாயும் தன்னிடமிருந்து அகலும் வரை அவரின் வெறிபிடித்த அடவுகள் தொடரும். எந்த காரணத்துக்காகவும் தன்னிடமுள்ள பணம் செலவழிந்துவிட வேண்டுமென நினைக்கும் ஒரு மனதைவிட வேறன்ன மேன்மை வேண்டும் ஒரு படைப்பாளிக்கு?
 “சார் சில நண்பர்கள் உங்களை பார்க்க விரும்புகிறார்கள், கூட்டி வரட்டுமா?” என எஸ்.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் கேட்கிறார்.
”ரொம்ப சந்தோஷம் வாங்க ராமகிருஷ்ணன். எத்தனை பேர் கூட வருவாங்க?”
பத்திருபது பேர்


  ”சந்தோஷம் உடனே வாங்க.”
அடுத்த அரை மணி நேரத்தில் பீட்டர்ஸ் காலனி வீட்டையடைந்த அவர்களுக்கு பூட்டிய வீடு அதிர்ச்சியைத் தருகிறது.
அனைத்துவைக்கப்பட்டத் தொலைபேசி, தெரிந்தவர்களின் விசாரிப்புகள், அவர் வழக்கமாக போகுமிடங்கள் என எல்லாத் தேடுதல்களும் தோல்வியில் முடிய, அவர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
இப்படியான சிறு ஏமாற்றுதல்களை அவர் எப்போதும் சிரமமேற் கொண்டு கைக்கொள்வதில்லை. அது அவரின் இயல்பு.
பத்துநாள் கழித்து ஒரு இலக்கியக் கூட்டத்தில் ராமகிருஷ்னன் சிரித்துக் கொண்டே கேட்கிறார்.
எங்களை வரச்சொல்லிட்டு வீட்டைப் பூட்டிட்டு எங்கேயோ போய்ட்டீங்களே சார்,
அவன் தனக்குக்குள்ளேயே சிரித்துக் கொள்கிறார்.
ஒரு நண்பரை பார்க்க அவசரமாக போக வேண்டியிருந்தது.
அது பொய் என இருவருக்குமேத்தெரியும். இருந்தாலும் ஒரு உயர்ந்த படைப்பாளி சொல்கிறார், இன்னுமொரு பிரபலமான எழுத்தாளனிடம். அது எப்படி பொய்யாகும்?
அன்று அந்நண்பர்களுக்கு செலவழிக்க அவர் சட்டையில் பணமில்லை என்ற உண்மை இருவருக்கும் இடையேயிருந்த இடைவெளியில் ஒரு நாய்க்குட்டிபோல படுத்துகிடந்தது.’
நண்பர்களை எப்போதும் போஷிக்க வேண்டுமென்பதை பிரபஞ்சனிடமிருந்தே நான் அடைந்தேன்.
விரும்பியபடி பணமில்லையென்பது எப்போதுமே அவருக்கு தற்காலிக சோகம் மட்டுமே. அதன் பொருட்டு எவனை எப்படிப் புகழ்ந்தால் அதை அடைய முடியுமென அவர் மனம் எப்போதும் கணக்குப் போட்டதில்லை.
வெளியூர் பயணம் முடிந்து பாண்டிச்சேரி வீட்டிற்கு வந்த ஒரு நள்ளிரவில், மேசையில் கிடந்த புதுவை அரசுக்கடிதம் அவரை ஆச்சர்யப்படுத்துகிறது.
அரசு கவியாக வரமுடியுமா? என பாண்டிச்சேரி மன்னன் கேட்கிறானா? அப்படியெனில் அதை நிராகரித்துவிட்டு விடிவதற்குள் சென்னைக்கு பஸ் ஏறிவிட வேண்டுமென கடித்தத்தைப் பிரிக்கிறார்.
வைத்தியலிங்கம் என்ற இயற்பெயரோடு சரியாக அச்சிடப்பட்ட அவர் வீட்டு விலாசம். அத்தனிமையில் மிகுந்த அருவருப்போடு அக்கடிதம் அவரால் பார்க்கவும், படிக்கவும் படுகிறது.
ஒரு முழு சிகெரெட்டின் கரைதலுக்கு பின் அவருக்கு எல்லாமும் பிடிபடுகிறது. அவரின் இப்போதைய தேவை ஒரு விடியல் மட்டுந்தான்.
விடிந்ததும் தன் உறவினரும் பாண்டிச்சேரியின் அப்போதைய அமைச்சருமான ஒருவர் வீட்டில் அக்கடிதத்தோடு இருக்கிறார்.
அவர் புன்னகைத்துக் கொள்கிறார். நன்றி சொல்ல வந்தவரை பின் எப்படி வரவேற்பது?
பிரபஞ்சன் சொல்கிறார்,
இப்படி ஒரு கேவலமான ஆணையை எனக்கு அனுப்ப வேண்டுமென உனக்கு எப்படித் தோன்றியது?
அமைச்சரின் முகம் இறுகுகிறது.
பிரபஞ்சன் என்ற பெயரில் மானுட விடுதலைக்கும், வைத்தியலிங்கம் என்ற பெயரில் லாஸ்பேட்டையில் கள்ளுக்கடை எடுத்து வியாபரம் செய்வேன் என நீ நெனச்சேபாரு, உன்னைவிடக் கேவலமா இந்த உலகத்துல யாரும் என்னை நெனச்சிருக்கமுடியாது என அக்கடிதத்தை ஆறிக் கொண்டிருந்த தேநீர் கோப்பைக்குக் கீழே வைத்துவிட்டு நடந்த பிரபஞ்சனின் மன உலகம் எதுவென நமக்கு புரிந்து கொள்ள முடியுந்தானே!
அந்த இயல்பிலிருந்துதான் அவரின் அத்தனை படைப்புகளும் திமிறியது. கலங்கிய ஏரியில் கையால் மீன் பிடிக்கும்போது நீருக்கு மேல் துள்ளும் விரால்கள் எவர் கைகளுக்குள்ளும் அடங்காது தோழனே!
எழுத்தாளன் எப்போதும் மனதாலும், உடலாலும் சுத்தமானவன் என்ற கொள்கையுடையவர் அவர். அவரைத்தொடர்ந்து நட்பால் பின் தொடரும் முருகேசபாண்டியன் போன்றவர்கள் அவரின் உடைகளைப் பற்றி மட்டுமே ஒரு தனிக்கட்டுரை எழுதிவிடக்கூடும். நல்ல உடை. நல்ல உணவு. சுகாதாரமான இருப்பிடம் இது மட்டுந்தான் சாகித்ய அகடெமி விருது உட்பட பல விருதுகளை குவித்த ஒரு தமிழ் எழுத்தாளனின் எளிமையான கனவு.


ஆனால் ஒருபோதும் அவை அவருக்கு எளிமையாகக் கிட்டியதில்லை. அதற்கே அவர் தினம் தினம் போராட வேண்டியிருக்கிறது. ‘என் எல்லா நாளும் கார்த்திகையில் அவரைப் பற்றி ‘‘இழப்பதற்கும், அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன்’’ என்ற ஒரு கட்டுரையில்,
‘‘ஒரு கலைஞன் ஒட்டுமொத்த மானுட பசிப்போக்க ஒரு பக்கம் பாடிக்கொண்டே, தன் சொந்த பசிக்கான ரொட்டித் துண்டுகளையும் தினம் தினம் தேட வேண்டியிருக்கிறது’’ என எழுதியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு மழை இரவில் பிரபஞ்சன் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார்
இரண்டு பக்கமுமே மௌனம் நீடித்த அதற்கும் உரையாடல் என்றே பெயர் சொல்லப்பட்டது.
தெளிவற்ற வார்த்தைகள் உடைந்து, சிதறி அவரிடமிருந்து வந்து, அதற்கு முன்னும், பின்னும் அப்போது மட்டுமே கேட்டிருக்கிறேன்.
என் அம்பது வருத்தை வீணாக்கிட்டேன்னு நெனெச்சேன் பவா, இல்ல நானும் இச்சமூகத்துக்கு ஏதோ செஞ்சிருக்கிறேன். அதுதான் உங்க எழுத்துலத் தெறிக்குது. நன்றி.
நான் அவரைத் தொடர்வதற்குள் அவர் வெகுதூரம் போய்விட்டிருந்தார்.
நானறிந்து தமிழில் எழுதத்துவங்குகிற ஆரம்பிக்கிற படைப்பாளிகளுக்கு அவர் தரும் உத்வேகம் எதைக் கொண்டும் அளவிட முடியாதது. அதிலும் பெண்கள் எழுத ஆரம்பித்தால் பிரபஞ்சன் கொண்டாடித் தீர்பார்.
பத்து வருடங்களுக்கு முன் பால் சக்கரியாவின் கதைகளை மொழிபெயர்த்து முடித்து இது சரிதானா தோழர் என தயங்கி தயங்கி பிரபஞ்சனிடம் நீட்டிய கே.வி.ஜெயஸ்ரீக்கு முன்னுரையுடன் சேர்த்து, அதை புத்தகமாக்கி கொடுத்து ஜெயஸ்ரீ கைகளில் கொடுத்தவர் அவர்.
நானறிந்து இது வேறெந்த மூத்த படைப்பாளிகளுக்கும் வாய்க்காத மனது. ஒவ்வொரு புத்தாண்டுக்கும் கட்டுகட்டாகத் தாள்களும், உயர்ந்த விலையுள்ள பேனாக்களையும் வாங்கி, ஷைஜாவுக்கும், ஜெயஸ்ரீக்கும் அனுப்பி வைப்பார் அல்லது அவரே பஸ் ஏறி வந்து கொடுத்துவிட்டுப் போவார். பெண்கள் எழுத ஆரம்பித்தால் மட்டுமே பல நூறு ஆண்டுகளாக புதையுண்டு கிடக்கும் மௌனம் உடையும். போர்ப்பாடல் கேட்கும். அது கரடு தட்டிப்போன இந்த மானுட செவியின் பறைகளைக்கிழிக்கும் என உறுதியாய் நம்பும் வெகு சில படைப்பாளிகளில் பிரபஞ்சனே முதன்மையானவர்.
மாறும்என்ற சொல் மட்டுமே மாறாதது என்பது பிரபஞ்சனுக்கு மட்டுமே நூறு சதவீதம் பொருத்தும். எக்காலத்திலும் எந்நிலையிலும் அவர் எல்லோரையும் ஒரே மாதிரி ஏற்றுக் கொண்டதில்லை.
அசோகமித்திரனின் படைப்புகள் உலகத்தரமானவை என கொண்டாடிய பிரபஞ்சன், இந்துத்துவாவிற்கு சாய்வான அவரின் புனைவில்லாத எழுத்திற்கு முன் நின்று எதிர்விணை ஆற்றியுள்ளார்.
தனக்குப் பிடித்தமான படைப்பாளியாயிற்றே என மௌனம் காப்பது, அக்கருத்துக்கு மறைமுகமாக துணைப் போவதுதானே! ஒரு நேர்மையான படைப்பாளியாக அதை ஒருபோதும் அவர் செய்ததில்லை.
எல்லா காலங்களிலும் ஒரு படைப்பாளியை அவர் கொண்டாடியதில்லை. அவர் வாசிப்புக்கு தக்கவாறு படைப்புகளின், படைப்பாளிகளின் முதன்மைபட்டியல் மாறிக்கொண்டேயிருக்கும். அது ஒரு எழுத்தாளனின் ஆகப்பெரும் தகுதியும், நேர்மையும்கூட.
எல்லாக் காலத்திலேயும் தன்னை முதலிடத்தில் நிறுவிக் கொண்ட ஒரு படைப்பாளியை, ஒரு இளம் படைப்பாளி தன் ஒரே கதையால் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்பது பிரபஞ்சனின் கொள்கை.
அதை ஏற்று அங்கீகரிக்கிற மனம் மிகப்பெரிது. அது எப்போதுமே பிரபஞ்சன் என்ற ஆளுமையிடம் நிரந்தரமாக தங்கியிருப்பது தான் நம் மொழியின் அதிஷ்டம்.
பாண்டிச்சேரி கடற்கரையில் எப்போதாவது கால் நனைக்கிறமாதிரி தமிழ்திரைப்பட உலகிலேயும் எப்போதாவது அவர் கால் நனைத்திருக்கிறார்.
அந்த அனுபவங்கள் எல்லா தமிழ் படைப்பாளிக்கும் நேர்ந்தது போலவே அவருக்கும் எந்த கௌரவத்தையும் தந்துவிடவில்லை.,
எத்தனை கதைகளையும், எவன் பேரில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் எனக்கு காசநோய் சிகிச்சைக்கு காசு வேண்டுமென புதுமைப்பித்தன் சொன்னது போலவே
எனக்கு பெயர் வேண்டாம். ஊதியம் மட்டும் போதும் என்ற சமரசத்தை நோக்கி அவரை நெட்டித் தள்ளியதும் இதே வாழ்வுதான்.
பீர் முகமது அப்பாவின் ஒரு கதையில் பகலில் அனுமன் வேஷம் போட்டு தெருவில் பிச்சை எடுக்கும் ஒருவனை உண்மையான அனுமன் என நம்பி அவனைப் பின் தொடரும் ஒரு குழந்தையின் மனநிலையே எப்போதும் பிரபஞ்சனின் மனநிலை.
யாருமற்ற புளியமரத்தடியில் நின்று தன் வேட்டியைத் தளர்த்தி சிறுநீர் கழித்து, பீடிபற்ற வைக்கும் ஒரு கணத்தில்.
இது நிஜ அனுமன் இல்ல. சாதரண மனிதன் என ஊர் திரும்பும் குழந்தையும் அதே பிரபஞ்சன்தான். இந்த இரு வேறு மனநிலைகளில்தான் ஒரு பெரும் படைப்பாளி தன் ஜீவித காலம் முழுக்க தமிழ்ச் சூழலில் பயணிக்க வேண்டியுள்ளது.
திரும்பிப் பார்த்தால் பிரபஞ்சன் தன் கதைகளில் மேன்மையான மனிதர்களை, விடுதலையை மௌனமாகவேணும் கோரும் பெண்களை. கடவுள், மனிதன் என்ற கற்பனையும் நிஜமுமான ஊசலாட்டத்தில் மனிதனின் பக்கம் மட்டுமே நிற்கும் மனிதர்களை, குமார சாமியின் பகல் பொழுதுகளை, எம்.பில்., பி.எச்.டி., என்ற பெருங்கனவுகளுக்காக தங்கள் வறுமையிலிருந்து எழுந்து பல்கலைக் கழகங்களின் வாசல்வரை வந்துவிடும் பெண்களை வஞ்சிக்க நினைக்கும் பேராசிரிய அதிகாரங்களை அவர் எப்போதுமே தன் புனைவிலும், புனைவில்லாத எழுத்திலும் எதிர்த்தே எழுதியிருக்கிறார்.
காலந்தோறும் பெண்களை வஞ்சிக்கும் ஆண் மனங்களின் அவலத்தை அவர் அளவிற்கு புரிந்து எழுதியவர் என யாரையும் அடையாளப்படுத்த முடியவில்லை.
தன் சார்பு கொள்கை, தான் சார்ந்த தத்துவம் என்பதற்காக பெண்கள் மீது இழைக்கப்படும் அதிகார அத்து மீறல்களை, அது எவனாய் இருந்த போதிலும், எச்சூழலிலும் எதிர்க்க தவறியதில்லை என்ற உண்மை அவரின்பெண்’ தொகுப்பைப் படிப்பவர்களுக்குப் புரியும்.
இதுதான் ஒரு காலத்திய உன்னதமான கலை மனதின் மேன்மை. நடைமுறைத் தவறுகள் தான் உயிரென நம்பும் இயக்கத்தில் நடந்தாலும் கூட அவன் பேனாவை மூடிவைத்து விடக்கூடாது என்ற உலகளாவிய பேரன்பும் மானுட அக்கறையுமது.
இதன் வழியேதான் பிரபஞ்சன் தன் எழுத்தில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் பயணிக்கிறார். கலங்கல் இல்லாத, ஆர்பரிக்காத, நகருகிறா என  நம்ப வைக்கும் ஒரு நதியின் பயணத்தை அதன் கரைகளில் அமர்ந்து கவனிக்கலாம். நூறு ண்டுகளாய் அதை கடக்கும் நீராலும் கரைக்க முடியாத கூழாங்கற்களின் முழு உருவம் அதற்கடியில் தெளிவாகத் தெரியும்.
 தன்னில் குளிப்பாட்டப்பட்ட ஒரு குழந்தையின் சரும வாசனையை, தன்னில் மிதந்த ஒரு இளம் பெண்ணின் தாங்க முடியாத த்தை, தன்னில் மூழுகிய ஒரு தோல்வியுற்ற கலைஞனின் மொத்த வாழ்வை அது அறியுந்தானே.
அக்கூழாங்கற்களைப்போலத்தான் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட கலைஞனாக ஜீவிக்கிறார் பிரபஞ்சன். அதிலிருந்துதான் ஆக சிறந்த படைப்புகள் அவரில் முகிழ்கின்றன.

பிரும்மம், மீன், பச்சைமாமி மெஸ், மரி என்கிற ஆட்டுக்குட்டி, ஒரு மனுஷி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் எனத் தொடரும் எல்லா கதைகளுமே மனித வாழ்வின் மேன்மையையும், மனிதர்களின் உயர்வையும் மட்டுமே பேசுகிறது.
அவர் தன் கதைகள் மூலம் எப்போதுமே உபதேசித்ததில்லை. ஆகவே மானுடா! என பெருங்குரலெடுத்து கத்தியதில்லை. சைக்கிள் நிறுத்த இடமில்லையென நீ வெட்டிவிட்ட முருங்கைமரம் துளிர்த்துவிட்டது நண்பா என நம் தோள்மீது தோழமையோடு கை போட்டுக் கொள்கிறார்.
இதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு விடுதியில் தங்கியிருந்தவரை பார்க்க, நானும் ஷைலஜாவும் ஒரு மதியான நேரத்தில் போனோம். தனக்குப் பிரியமான மடையைக் கண்டதும் உடையத் தோன்றும் வாய்க்கால் நீரைப் போல எங்களைப் பார்த்ததும் தன்னை உடைத்துக் கொண்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவுடன் என் மகன் கேட்டான்.
‘‘பாண்டிச்சேரிக்கா? திருவண்ணாமலைக்காப்பா?’’
எங்கள் குடும்பத்தோடுச் சேர்த்து உங்கள் குடும்பத்தையும்  வைத்திருந்த அவன் நம்பிக்கை அந்நேரம் சிலிர்ப்பூட்டியது ஷைலஜா.
எங்கள் கண்ணீரால் மட்டுந்தான் அவ்வார்த்தைகளை ஒற்றியெடுக்க முடிந்தது.
மூன்று மாதத்திற்கு முன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களோடு மூன்று முழு நாட்கள் தங்கியிருந்தபோது தன் நீண்ட வாழ்வின் ஆழ அகலங்களை விசாலமாகப் பகிர்ந்து கொண்டது ஓர் பேரனுபவமாக எங்களுக்குள் விரிந்தது.
எங்களோடுப் பேசிக்கொண்டிருந்தவர் சட்டென எழுந்து வம்சியின் பைக்கில் உட்கார்ந்து ‘‘நீ எடுத்த படம் பாக்கணும் வா’’ என அவனை கைபிடித்தழைத்தபோது எதுவும் தெரியாதவனைப் போல் அவர்களிருவரையும் தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தொடக்கமும், தொடர்ச்சியும் போல் அவர்களிருவரும் பைக்கில் போவது அத்தனை பெருமிதமாக இருந்தது எனக்கு.
பிரபஞ்சனின்கருணையில்தான்கதை எப்போதோ நான் படித்து சிலிர்த்த ஒன்று. அத்தனை வருடங்களாக எனக்குள் அடைகாத்த அது, என் ஒரு கதை சொல்லலில் முட்டை ஓடு உடைந்து, உயிர்த்துடிப்புடன் வெளிவந்து  வம்சியின் கைகளைப் போய் பற்றிக் கொண்டது.
அவன் அக்கதையைப் படமாக்கினான். அதற்குவலிஎன அவனே தன் பெரியப்பாவின் அனுமதியுடன் பெயரிட்டான்.
அத்தனை மகத்தான ஒரு படைப்பாளியோடு, தான் மட்டும் தனித்திருந்து ஒரு பூட்டிய இருட்டறையில் அவர் கதையின் காட்சி வடிவத்தை அவருக்கே போட்டுக் காண்பிக்க வாய்த்தது அவனுக்கு.
நான் உங்கள் கதைக்கு நியாயம் செய்திருக்கிறேனா பெரியப்பா? என சொற்களால் அல்ல கண்களால் ஏறெடுத்த அவனை அப்படியே அணைத்து தன்னுள் புதைத்துக் கொண்ட மகத்தான கலைஞன் பிரபஞ்சனுக்கு இம்மாதம் இருபத்தேயாழம் தேதி எழுப்பதி மூன்று நிறைகிறது என்பது நம்பமுடியாத ஒன்றுதான்.
தமிழ் சமூகம் தன்னுள் அவரை இருத்திக் கொள்வது அது பெற்ற பாக்கியம்.

நன்றி 
விகடன் தடம்