Thursday, May 28, 2015

பிடி

பிடி சிறுகதை  (மலையாளத்திலும், தமிழிலும்)





பிடி 


அந்த பஜாஜ் ஸ்கூட்டர் ஒரு நாளும்  அந்த பிரமாண்ட ஸ்கூல் கேட் முன்னால் நின்றதில்லை. மாணவர்களின் குதூகலம், ஆசிரியப் பணிவு, பெற்றோர்களின் அலைச்சல், விசாரிப்புகள் என எல்லாவற்றையும் மீறி அதன் புறப்பாடும், வருகையும், சமீபித்தலும் கனகராஜின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும். அவன் காதுகள் புற உலகச் சத்தத்தைத் தவிர்த்து பஜாஜ் ஸ்கூட்டரின் சத்தத்திற்கு மட்டுமே காத்திருக்கும். அவர் கையிலிருந்து அணைக்காத எஞ்ஜின் சத்தத்துடன் ஒரு குழந்தையைக் கைமாற்றுவது மாதிரி ஸ்கூட்டரைக் கனகராஜின் கைகளுக்கு மாற்றி விடுவார்.

ஸ்கூட்டரின் வருகையும், கிறீச்சத்தத்தோடு கேட் திறத்தலும் ஒருசேர நிகழும்.  அது ஒரு போதும் தவறினதில்லை. பாரபட்சமான கேட் அது. ஒரு நாளும் தாமதிக்காத கிளமண்ட் சாரைக் கூட மூடிய அதன் எதிர்ப்பக்கத்தில் நிற்க வைத்து இறுமாந்திருக்கிறது.

மெர்சி டீச்சரின் சில குதூகலமான நாட்களில், சற்று மிகையாகி புடவைக்கான மேட்சிங் வளையல்களில் ஆரம்பித்து எப்போதும் விரிக்கப்படாத வண்ண குடை தேர்வு விரை நீண்ட நாட்களில், அது அநியாயத்திற்கு அவர்களை வெளியில் நிறுத்தி உச்சந்தலையிலிருந்து, கால்களின் நகங்கள்வரை ஒருமுறை நிதானமாய் மேய்ந்தபிறகும் திறக்காமல், ஒரு ஆள் மட்டுமே நுழையும் அதன் சின்ன கேட்டைத் திறந்து மெர்சி டீச்சரை அனுமதிக்கும். சரியான உயரமும், அதற்கான தாட்டிகமும், மிகையில்லாத நிறமும், சுருள் சுருளாய் தன் முன் நெற்றியில் விழும் முடிக்கற்றையைச் சற்றே அலட்சியமாய் தள்ளிக்கொண்டே அந்தச் சின்ன கேட்டின் இரும்பு தன்னைத் தொட்டுவிடாமல் மிக ஜாக்கிரதையாய் தன் உடம்பை சுருக்கிக் கொண்டு உள்நுழைகையில் பார்வை மட்டும் அப்பள்ளி மைதானத்தை எட்டும். தன் அழகு எப்போதும் அந்த ஸ்கூல் கேட்டினால் அவமதிக்கப்படுவதை அவள் உள்ளூர வெறுத்தாள். அந்நிமிடங்களில் ஸ்கூல் வழியே கடக்கும் சைக்கிள் ஓட்டிகள், டூ வீலர் பயணிகளின் வேகம் குறைவதும், எப்போதாவது கடக்கும் சில நான்கு சக்கர வாகனங்கள் நிற்பதும், மட்டுமல்ல அந்த கேட்டிற்கு அப்புறமிருந்து தவமிருந்து முளைக்கும் கண்களின் கவனிப்புகளில் அவள் நடந்துவரும் நீண்ட நடை, ஒரு அகங்காரக் கவிதை.

அளவெடுத்துச் செதுக்கப்பட்டு, கருங்கற்கலால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப்படிகளால் இணைக்கப்பட்டு, மரச்சட்டங்களாலான இரண்டாம் மாடியின் மேற்கூரை கறுப்பேறிய சீமை ஓடுகளாலானவை. கருந்தரை வழுக்கும். கீழே தலைமையாசிரியர் அறை, கூப்பிடு தூரத்தில் அதன் எதிரே அலுவலக அறை, தலைமையின் பார்வை எப்போதும் விழுந்து கிடக்கும் எதிருக்கு பக்கத்து அறை ஸ்டாஃப் ரூம். மரப் படிக்கட்டுகளில் ஏறும் மாணவ பாரங்களின் சப்தத்தை அதிகரித்து காட்டவும், பிரேயருக்குப் பின் எனில் கால்களின் சத்தத்தை உறிஞ்சியெடுக்கவும் காத்திருந்த அந்த மரப் படிக்கட்டுகள் ஆசிரியர்களின் ஷீ போட்ட தாமத நடைகளை எப்போதும் ஹெட்மாஸ்டரின்  காதுகளுக்கு ரகசியமாய் கடத்தவும் கற்றிருந்தது. ஜன்னல் கம்பிகளில் புதைந்திருந்து பார்க்கும் மாணவர்களின் முன் எத்தனை சத்தங்கள், அவமானங்கள், அவமதிப்புகள், மீறிய கண்ணீர் துளிகள் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் படியேறும்போது ஆசிரியர்களின் ஷீ சத்தத்தையும் உறிஞ்சிக் கொள்ளும் மாயப் படிக்கட்டுகள் அவை.

அது ஒரு அரசு மான்யம் பெற்ற கிருஸ்துவ மேல்நிலைப்பள்ளி. ஐந்தாயிரம் மாணவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுமாய் நிறைந்து நின்ற அவர்களுக்கு, சகல அதிகாரங்களும் வாய்க்கப்பெற்ற ஒரு மேய்ப்பனிருந்தான். சற்றே உயரத்தைத் தூக்கிக் காட்டிய ப்ரவுன் கலர் ஷீவையும், நல்ல அடர்த்தியான வண்ணங்களில் வேண்டுமென்றே கழட்டிவிடப்பட்ட சட்டையின் மேல்பட்டனும், அதனுள் ஒளிரும் ஐந்தாறு பவுன் எடையுள்ள கோதுமை செயினும், எப்போதும் எதற்காகவும் கசிந்து விடாத புன்னகையின் ஊடே இயேசுவோ அல்லது அவரின் பெயரினால் திருச்சபையோ கொடுத்த ஒரு முழு நீளப் பிரம்புமாய் அவர் அப்பள்ளியின் மைதானத்தைச் சுற்றிவருகையில் மொத்தப் பள்ளியும் அதன் ஜீவராசிகளும் மூச்சடக்கிக் கொள்ளும். மெளனத்தின் வெற்றுத் தடத்தில் அவரின் நடையின் அதிர்வு மட்டும் அதிகாரத்தை உமிழும். இடையிடையே பிடிபடும் மாணவர்கள்மீது பிரம்பு சரமாரியாகப் பிரயோகிக்கப்படும். ஜன்னல்வழியே படியும் மாணவப் பார்வைகளுக்கும், குனிந்து கவனிக்கும் ஆசிரியர்களின் பார்வைகளுக்கும், மைதானத்தின் வெற்று மண்ணில் முட்டிபோட்டு நிற்கும் மாணவர்களின் பின்பாதி மட்டுமே தெரியும். அதிலெல்லாம் எப்போதும் ஆண் பெண் பேதமில்லை. முக்கோணவடிவில் மடித்து விடப்பட்டிருக்கும் பச்சை தாவணி, தன் முகங்களுக்கு ஈடாய் மண்ணில் படிய முழங்காலிட்டு நிற்கும் மாணவிகளின் முகங்கள் அன்று மாலைவரை மீளாது.

நல்லப் படிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் கடுமையான அடக்கு முறையிலிருந்து கிடைக்கும் அறுவடை. ‘பையன் கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிங்க’ என்று கசாப்பு கடைகளின் முன் ஆட்டுக்குட்டிகளின் எஜமானர்கள் இறைந்து நின்றதற்குச் சற்று பிந்தின நாட்கள் அவை. திருச்சபை அவருக்கான எல்லா அதிகாரங்களையும் வழங்கியிருந்தது. அதன் எல்லைகளை மட்டும் அவரே வரையறுத்துக் கொண்டார். அதைக் குறைக்கவோ, குறைந்தபட்சம் பேசவோ கூட முடியாத உயரத்திற்கு அவர் போய்க் கொண்டேயிருந்த நாட்கள் அவை. நல்லொழுக்கத்திற்கும், நல்படிப்புக்குமென ஒரு மனிதன் எத்தனை தூரம் தன்னை அர்ப்பணிக்கிறாரென ஊர் பெருமிதப்பட்டது. அந்த பெருமிதத்தின் முன் மற்றவர்களின் அபிப்ராயங்கள், புலம்பல்கள், அவஸ்தைகள் எல்லாமும் தூசியிலும் அற்பமானவை.

அவர் பங்களாவை ஒட்டியே அவர் ஆளுமைக்குட்பட்ட இருநூறு மாணவர்களை உள்ளடக்கி ஒரு ஹாஸ்டல் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தும், பிரம்பு தன் கைகளிலேயே இருக்க, அவரே ஏற்படுத்திக்கொண்ட நீட்டல் அது. ஸ்கூல் முடிந்து அப்பிரம்புடனேயே மெளனப்படுத்தப்பட்ட மைதானத்தை அவர் நடந்து கடக்கையில் கரையின் இப்பக்கம் உற்சாகப்பீறிடலும், கரையின் அப்பக்கம் மயான அமைதியும் ஒரு சேர நிகழும்.

சகவகுப்பு மாணவர்களிடம் நோட்புக் வாங்க எப்போதாவது பாலு அண்ணாவோடு அந்த ஹாஸ்டலுக்குப் போவதுண்டு. அப்போதெல்லாம் சைக்கிளை கேட்டிலேயே நிறுத்தி வைத்துவிட்டு, மடித்து கட்டிய வேட்டியைக் கீழே தளர்த்தி விட்டுவிட்டு அண்ணன் பயபக்தியாய் மைதானத்தை என் துணையோடு கடக்கும்.

யாருமற்ற அந்த மைதானத்தில் ஒரு பெரிய ஈசிச்சேரில் வெற்றுடம்பில் லுங்கி மட்டும் கட்டி, எதிரில் போடப்பட்டிருக்கும் மரஸ்டூலில் கால்களைத் தூக்கிப் போட்டு லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கும் ஹெட்மாஸ்டரை என்னைப்போல ஏழு மணிக்குமேல் போனால் பார்த்திருக்கமுடியும். தூங்கின பின்பும் கால் அழுத்திவிடும் ஸ்கூல் ப்யூன்களின் பவ்யம் என்னை எப்போதும் சந்தோஷப்படுத்தும். எங்களிடம் ஸ்கூலில் எரிந்து விழும் அவர்கள், அக்கால்களின் முன் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பது ஏதோ மனதுக்கு இதமாயிருந்தது.

காலை வருகை ஸ்கூட்டரில்தான். தன் பிரம்பும், பெரியடீச்சர் தரும் காபிப்ளாஸ்க்கும், அவர் புறப்படுதலுக்கு முன்பே கனகராஜால் கொண்டு வரப்படும். அப்பிரம்பு அவர் கையில்  சேர்பித்தலுக்குப் பின்பே அறைக்குள் நுழைவார்.

பிரேயருக்கு முன் எதற்காகவோ, யாரிடமாவது எழும் அவரின் முதல் கர்ஜனை அம்முழுநாளுக்கும் போதுமானது. அதை அவர் அறியாதது மாதிரி தனக்குள் அலட்சியமாய் வைத்திருந்தார். பலநேரம் கனகராஜிடம், சிலநேரம் ஆண் ஆசிரியர்களிடம் எப்போதாவது பெண் ஆசிரியைகள் என்ற பட்டியலில் எப்போதும் மெர்சிடீச்சருக்கு மட்டும் இடமிருந்ததில்லை. அவள் அழகும், கம்பீரமும், அவர் அதிகாரத்தை எப்போதும் அசைத்துக்கொண்டேயிருந்தது. அதற்காகவே அவர் அடிக்கடி தன் சிம்மசனத்தை விட்டு எழவேண்டியிருந்தது.

ஏழாம் வகுப்பு நிறுத்திக் கொண்ட அழகிகள் போக, மிச்சமிருந்த மாணவிகளுடன், பி பிரிவில் வகுப்பை நிறைத்துக்கொண்ட ஆண் மாணவர்களுக்கு மத்தியில் நாலாவது பெஞ்சில் இடது ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.

அமைதி... அமைதி... அப்பள்ளி எப்போதும் மெளனத்தில் உறைந்திருந்தது. ஆசிரியர்களின் பேச்சே பழகிப்பழகி ரகசியம்போல மாறிவிட்டிருக்கும். எப்போதும் ஹெட்மாஸ்டரின் வருகைக்காக வாசல்படியிலேயே ஒரு கண்ணை நிரந்தரமாய் வைத்துவிட்டு ஒரு கண்ணால் எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள்.

எந்நேரமும் தான் அவமானப் படுத்தப்படலாம் எனும் ஜாக்கிரதை, நீர் சொட்டச் சொட்ட நாக்கை துருத்திக்கொண்டு படுத்திருக்கும் ஒரு நாயின் மூச்சிரைப்பைப்போல அவர்களுக்குள் எப்போதும் படுத்திருந்தது.

பள்ளிக்கு வெளியிலேயும் நாங்கள் பெரும்பாலும் மெளனமாகவே பேசப் பழகியிருந்தோம். விடுமுறை தினங்களின் குதூகலங்கள்கூட யாருடைய கவனிப்போ எப்போதும் எங்கள்மேல் குவிக்கப்பட்டதுபோல் குறைந்திருந்தது.

ஏழாம் வகுப்பில் எப்போதும் போல ஜெயந்தி முதல் ரேங்கும், நான் இரண்டு, மூன்று எப்போதாவது தவறினால் நான்கு என்ற தகுதியையும் தக்க வைத்துக்கொண்டோம். கணக்கு நான் எட்டிப்பிடிக்க முடியாத தூரத்திற்குப் போய்க்கொண்டிருந்த நாட்கள்அவை. ஜெயந்தி அதன் மீதே அமர்ந்திருந்தாள்.  

ரத்னம் சார்தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். நீண்ட கிருதா வளர்த்து, முடியை சுருள்சுருளாய் வாரி, தன் வயதை மறைக்கும் பிரயத்தனத்தில் சதா வெற்றியடைந்து கொண்டிருந்த முதல் இளைஞர் அவர்.  அவ்வருடத்தின் ஜீலை மாதக் கடைசியில் ஒரு ஓய்வான மாலை நேர வகுப்பில் எங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பி பெயர், அப்பா பெயர், அவர் தொழில், தெரு, எதில் பயணிக்கிறோம்? சைக்கிளா?, நடையா?, கார்க்கானா தெருவில் அவர் வசிக்கும் தெருவிலிருந்து அம்மாணவன் அல்லது மாணவியின் வசிப்பிடம் எத்தனை தூரம், அழைத்துப் போக யார் வருவார்கள் என்ற விசாரிப்புகளுக்கு நல்ல விளைச்சலிருந்தது.

அவர் பை தூண்டில் மீன்களால் நிறைந்துகொண்டேயிருந்தது. பிடிபட்டும், பையில் போட்டும் மீண்டும் மீண்டும் நான் மட்டும் நழுவி நழுவி தண்ணீருக்குள் விழுந்துகொண்டேயிருந்தேன். அவ்வித்தையை அப்பா எனக்குக்  கற்பித்திருந்தார். என் தப்பித்தல் மற்றவர்களை உஷார்படுத்துமென சார் உள்ளூர பயந்தார். என் மீதான வன்மம்   ஒரு சிறு உருண்டை மாதிரி உருண்டு அவர் மனதின் ஓரத்தில் போய் பதுங்கிக்கொண்ட முதல் நாள் அதுதான்.

அதன் பிறகு வகுப்பறை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டேயிருந்தது. தொடர் அவமானங்களால் நான் காயப்பட்டேன். என் சதையைக் காக்கைகள் கொத்தித் தின்று கொண்டேயிருந்தன. சகல மேன்மையும், கம்பீரமும், கெளரவமும் வாய்க்கப் பெற்ற என் அப்பாவின் பொருட்டு வலி பொறுக்க கற்றுக் கொண்டேன். சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து இரவு நேரங்களில் சொல்லிக் கொடுக்கும் அப்பாவின் வாஞ்சைமிகு தோழமையின் முன் என் அற்ப வலியை எடுத்து வைக்க விரும்பினதில்லை எப்போதும். அப்பாவின் நேர்மையும், வாழ்வை அவர் எதிர்கொண்ட திறனும் என்னுள் ஒட்டியிருந்தது. குதூகலமற்ற, புன்னகை தீய்க்கப்பட்ட என் முகத்தை எனக்கு மட்டுமே தெரிகிற மாதிரி நான் மறைத்துக் கொண்டேன். சர்வ வல்லமை பொருந்திய அப்பாவாலேயே அதைக் கண்டடைய முடியவில்லை.

அது ஒரு மே மாதம் என்பதும்  சுட்டெரிக்கும் வெயிலினூடே திடீரெனத் திரண்ட கருமேகங்களும், அடித்த பேய்க்காற்றும், ஊற்றிய மழையும், முறிந்த பெருவேப்பமரமும், நசுங்கிய சேகர் அண்ணனின் சைக்கிளும் எல்லாமும் ஞாபகமிருக்கிறது. களேபரங்கள் முடிந்த அந்த மாலை நாங்கள் ஆறேழு பேர் சாரோனிலிருந்து சைக்கிளுக்கு இருவராகப் பிரிந்து ஸ்கூலுக்கு ரிசல்ட் பார்க்கப் போனோம். நெற்றியிலும் மார்பிலும் சிலுவைக்குறிகளைக் காற்றிலிருந்து எடுத்தெடுத்து அணிந்துகொண்டோம். நான் அன்று ராஜாவின் சைக்கிளுக்குப் பின் அமர்ந்திருந்தேன். என் கண்கள் மூடியிருந்தன. என்னுள் மட்டும் கவிந்த இருட்டு பயமுறுத்தியது.

நான் ஜெபித்துக் கொண்டேபோனேன். உள்ளிருந்து சில வார்த்தைகள் என் அஜாக்ரதையால் கசிந்து ராஜாவை திரும்ப வைத்தது. ஸ்கூலில் நிறைய கும்பலிருந்தது. அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு குவிந்திருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பறையும் ரிசல்ட் கூடங்களாக தற்காலிகமாக மாறியிருந்தன. ஒவ்வொருவரும் நீண்டு நின்ற ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பார்வையை மட்டும் உள்ளனுப்ப வேண்டும்.

சாய்த்து வைக்கப் பட்டிருந்த நோட்டீஸ் போர்டில்,VII ‘ஏ’ ,  VIIபி என்று ஆரம்பித்து VII ‘எச் வரை தேர்வான பெயர்கள் டைப்செய்யப்பட்டிருந்தன. சிவப்பு மையினால் பிரிவுகள் அடிக்கோடிடப்பட்டிருந்தன.

நான் ஆர்வத்தின் நுனியிலிருந்தேன். மற்ற முகங்களில் தீர்க்கமிருந்தது. மற்றவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு நான் VII ‘பியின் தேர்வுப் பட்டியலைப் பார்த்தேன். ‘பியில் ஆரம்பிக்கும் என் பெயர் முதல் ஆறேழு பெயர்களில் இல்லை. நான் திடுக்கிட்டேன். கை நடுங்க ஆரம்பித்ததையும், நெற்றி வியர்வையில் துளிர்ப்பதையும் உணர முடிந்தது. தேர்வான கடைசி பெயர்வரை நான்காவது முறையாகப் படித்தேன். இல்லை. என் பெயரில்லை.எப்போதும் மூன்று அல்லது நான்கு ரேங்குக்குள் வரும் நானில்லை அதில்.

ரேங்க் பட்டியலில் இடமுடியாத பல பெயர்களும் அதிலிருந்தன. எனக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அருகிலேயே தவறினவர்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. நிராசையோடு அதைப் பார்தேன். அதில் என் பெயர் இருந்துவிடக் கூடாதென உள்ளூரப் பிரார்த்தித்தேன். சப்பராங்கால் போட்டு கிராமர் சொல்லிக் கொடுத்த அப்பாவின் குரல் கேட்டது. அவர் முன் எப்படிப் போய் நிற்பது? அவரின் ஒரு பார்வையின் ஊடுருவலில் நான் துளைக்கப்படுவதை உணர்ந்தேன். நம்பிக்கையுடனும், நம்பிக்கையற்றும் பட்டியலைப் பார்த்தேன். தவறினவர்கள் பட்டியலில் முதலில் என் பெயரிருந்தது. என் பெயர் மட்டும் அழுத்தி டைப் செய்யப்பட்டது போலிருந்தது. வன்மத்தின் விஷத்துளி என் பெயர்மீது படிந்திருந்தது.

துளிக்கும் கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி யாரையும் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். ஸ்கூல் கேட்டில் நின்று திரும்பினேன். ராஜா சைக்கிளில் உட்கார்ந்து தரையில் காலூன்றி என் வருகைக்காகக் காத்திருந்தான். நான் அவமானமுற்றிருந்தேன். ராஜாவின் முகத்தில் வெற்றியின் தீட்டல் இருந்தது. என் முகம் கருவடைந்து போயிருந்தது. ஒரு நீண்ட நடையின் முடிவு என் வீட்டில் ஈசிசேரில் வெற்றுடம்போடு படுத்து எதையோ படித்துக் கொண்டிருந்த அப்பா முன் நின்றது.

அப்பா என்னை ஏறெடுத்தார். அந்தப் பார்வையை தாங்கமுடியாமல் அவர் மேல் சரிந்தேன். அவர் தன் தடித்த விரல்களால் என் முதுகில் ஸ்பரிசித்து என்னைத்  தேற்றினார். யாரும் ஒரு வார்த்தை பேசாமல் என் தோல்வியை, அல்லது பழிவாங்கலை அவருக்கு சரீரம் வழி கடத்தியும், பெற்றும் உணர்ந்த கணமது. வஞ்சிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கான கண்ணீர் அவன்               இடக்கண்ணிலிருந்து ஒரு சொட்டு சொட்டியது. என் அழுகை கேவலாய் மாறியபோது அவர் மிகுந்த வாஞ்சையோடு,

பவாய்யா, அழாத, அப்பா இருக்கேன்டா என்ற ஒற்றை வரியில் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியிட்டார்.

அதன்பிறகும் நான்தான் அழுதுகொண்டிருந்தேன். அன்றிரவையும், அடுத்த நாள் காலையையும் சகஜமாக்க நானும் அப்பாவும் மாறி மாறி முயற்சித்தோம். தோல்வி சுற்றிச் சுற்றி வந்து ஒரு பாம்பு மாதிரி எங்கள் கால்களைச் சுற்றியது.

வழக்கம்போல ஷேவ் செய்து, கை வைத்த வெள்ளை பனியன் போட்டு, யாருக்கும் வாய்க்காத அழகோடு வேட்டிகட்டி, ஒரு முழுக்கை வெள்ளைச்சட்டையைக் கஞ்சி மொடமொடப்போடு போட்டுக்கொண்டு எடுத்துவைக்கப்பட்டிருந்த காலை டிபனைப் பார்வையால் நிராகரித்து, என்னை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து அந்த ஸ்கூல் மைதானத்தை அடையும்போது மணி பத்தாகியிருந்தது. நேராக ஹெட்மாஸ்டர் வீட்டு முன் நின்று கால் ஊன்றி, அங்கிருந்த வாட்ச்மேனிடம் ஹெட்மாஸ்டர் இருக்காரா? என உரத்த குரலில் விசாரித்தார்.

“ஸ்கூலுக்கு போயிட்டாரு. அங்க போயி பாருங்கஅவன் தலை கவிழ்ந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சினான்.

அப்பாவும் நானும் ஹெட்மாஸ்டர் அறை முன் நின்றிருந்தோம்.ஆறேழு பேர் எங்களுக்கு முன்பே அங்கிருந்தார்கள். புதிய சேர்க்கை, டி.சி. வாங்குதல் போன்றவை அவர்களிடமிருந்ததை உணரமுடிந்தது.

‘தனக்கோட்டி வாத்தியார்என கனகராஜ் வழக்கமான தன் பெருங்குரலில் கூப்பிட்டான்.

ஒரு சுழல் நாற்காலியில் அவரிருந்தார். ஒரு குள்ளமான,தடித்த,சகல அதிகாரங்களும் வாய்த்த  அவர் தலைக்கு மேல் அவர் பெயருக்குப் பக்கத்தில், ஹெட்மாஸ்டர் & கரஸ்பாண்டென்ட் என்று எழுதப்பட்ட பித்தளை போர்டு இருந்தது. அதிகார நெடி அந்த கருங்கல் சுவர்களிலிருந்து  கசிந்து கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் தன் கைகளால் எதிரிலிப்பட்டிருந்த ஒரு மர நாற்காலியை அப்பாவுக்குக் காட்டினார்.

நீடித்த அமைதியைத் தொடரவிடாமல் அப்பா தன் உரத்த குரலில் ஒரு சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரித்தார். எதையும் கேட்டு பழகியிராத அவர் இடைமறித்து,

“அவன் பெயிலாயிட்டான் அதானேஎன்ற அலட்சியத்தை மறித்து, “பெயிலாக்கப்பட்டான்என அப்பா திருத்தினார்.

“அதை எப்படி உறுதியாச் சொல்றீங்க?

நானும் வாத்தியார்தான் சார்.

”எலிமெண்டரி ஸ்கூல் வேற, ஹயர் செகண்டரி ஸ்கூல்  வேற” அலட்சியத்தில் வார்த்தைகள் வெளிவந்தன.

“தெரியும். என்பையனப்பத்தி என்னைவிட வேறுயாருக்குத் தெரிஞ்சிடப்போவுது”

“அப்ப வீட்லேயே வச்சி நீங்களே சொல்லி கொடுக்க வேண்டியதுதானே”

“காலாண்டுலேயும், அரையாண்டுலேயும் மூணாவது ரேங்க் வாங்கற பையன் முழு ஆண்டில எப்படி சார் பெயிலாக முடியும்? அவன் ஆன்சர் ஷீட்டைப் பாக்கலாமா?”

“அதை உங்ககிட்ட காட்டணும்னு ரூல் இல்லை.” எள்ளலும், அலட்சியமும், உதாசீனமுமாய் அவரிடமிருந்து வார்த்தைகள் வந்தன.

”கேவலம், மாசம் அம்பது ரூபா பிச்சை காசுக்காக ஒரு படிக்கிற  பையன இப்படிப் பண்ணிட்டீங்களேடா” என்று அப்பா முடிக்கும் முன், தான் ஒருமையில் அழைக்கப்படுவதைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தில்

கெட் அவுட் ஃப்ரம் திஸ் கேம்பஸ்’ என அந்த அறையே அதிர்வது மாதிரி கத்தினார். வெளியிலிருந்தவர்கள் கதவைத் தள்ளி உள்ளே பார்த்தார்கள். கனகராஜ் உள்நுழைந்து எங்களை சமீபித்து அவருக்கு அரண் மாதிரி நின்று கொண்டான்.

எதற்கோ ஆவேசம் வந்தவர்போல் அப்பா தன் இரு கைகளாலும் தன் சட்டையைப் பிய்த்தார். இரண்டு பட்டன்கள் தெறித்து ஹெட்மாஸ்டரின் மேசை மீது விழுந்தது.

“பாருய்யா,பாரு” என்று தன் தோள்பட்டையைக் காண்பித்தார்.குண்டு பாய்ந்து தைக்கப்பட்ட பெரும் தழும்பு தெரிந்தது.

வெள்ளைக்காரனை அனுப்ப வாங்குன குண்டடி.

எல்லாம் மாறிடுச்சின்னு நெனச்சோமே, உன்னை மாதிரி ஆளுங்க இப்படி சின்னஞ்சிறு பசங்களை பழி வாங்கவா இத்தனை ரணப்பட்டோம்... ”

அப்பாவின் வார்த்தைகளின் கணம் தாங்காமலோ, அது தேவையற்றது என்றோ, அவர் தன் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியேறத் தயாரானார்.

அதிலும் அப்பாவே முந்திக்கொண்டார். என் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு, பட்டன்கள் அறுந்து கிழிந்த சட்டையோடு சைக்கிளை எடுத்தார்.

நான் முன் ஹேண்ட்பாரில் ஏறப்போனேன்.

“பின்னால கேரியர்ல உட்கார்ந்துக்கோய்யா”
நான் அமைதியாய் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.
“அப்பாவை கெட்டிமாப் புடிச்சுக்கோ”

கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.
இன்னும் பிடி தளரவேயில்லை.


Thursday, May 7, 2015

செய்திகளின் நாற்றம்


மொழிபெயர்ப்பு : கே.வி.ஷைலஜா

சதை அழுகுவது போலொரு நாற்றமது. அன்னா சந்தோஷ் பால் அவளுடைய இருபத்தியாறு வருட சுவாசப் பழக்கமுள்ள மூக்கை நுட்பமாக்கி மணம் பிடித்தாள். யாராயிருக்கும் இது? நாற்றம் மிக தூரத்திலிருந்து வந்தது. அதனால் வீட்டிற்குள்ளிருந்து இல்லை என நிச்சயித்துக் கொண்டாள். ஒருவேளை நீண்டநாள் படுக்கையில் கிடந்து படுக்கைப் புண் வந்த ஒரு நோயாளியிடமிருந்தா? இல்லை ஏதாவது மயானம் காக்கும் வெட்டியானிடமிருந்தா.....?

மேலே சொன்ன மூன்றுபேரில் ஒருவரிடம் இருந்து தான் இந்நாற்றம் வர வேண்டுமெனப் பத்திரிகையின் கடைசி பத்தியில் புதிய செய்திக்காக இடம் ஒதுக்கும் அவசரத்திலும் அன்னா தீர்மானித்தான். புதிய செய்திக்கு, செய்தி கொண்டு வருபவன் செக்யூரிட்டியின் பல கேள்விகளுக்கும்  பதில் சொல்லிவிட்டு பாஸ் வாங்கி கொண்டு படி ஏறி வரப்போகிற நிதானத்தின்மீது எரிச்சலுற்று பொறுமையின்றி உட்கார்ந்திருந்தாள்.

அவன் மாடி ஏறிவந்தவுடன் வழக்கம்போல நிமிர்ந்து பார்க்காமல் நாற்காலியைக் காட்டி உட்காரச் சொல்ல வேண்டுமென அன்னா தீர்மானித்தாள். அதே நேரம் அவனறியாமல், இடது கண்ணால் ஓரப்பார்வை பார்த்தால் அவனுடைய முகத்தின் ஆச்சரியத்தைக் கணித்து விட முடியும். முகத்தை நிமிர்த்தாமல், அரவம் கேட்காமல் என் வரவை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்று அவன் ஆச்சரியப்படக்கூடும். அன்னா அதைப் பொருட்படுத்தியதாகவே காட்டிக் கொள்ள போவதில்லை. ஏனென்றால் சந்தோஷின் முகத்தில் இப்படியான ஆச்சரியத்தைப் பார்த்துப் பார்த்து பழக்கமாகிவிட்டது.

அது ஒரு காலம். அப்போதெல்லாம் மூன்று மணிக்கு முன்பே அன்னா மூன்றாவது பதிப்பினை அவசரப்பட்டு முடித்து விடுவாள். எடிட்டரின் இரவு நேரப்பணி முடிந்து செய்தி அறையின் கடைசியிலிருந்து பார்க் அவென்யூ ஷேவிங் லோஷனின் சீரான மணம் வரும். கூடவே தூக்கக் கலக்கமுள்ள கண்களைக் கசக்கியவாறே சந்தோசும் சத்தமில்லாமல் வருவான். கம்ப்யூட்டர் ஸ்கிரீனிலிருந்து தலையைத் திருப்பாமலும் முகத்தை நிமிர்த்தாமலும் அனிச்சையாய் அன்னா சொல்வாள், ‘‘ஃப்ளாஸ்கில் காஃபி இருக்கு.’’

திருமணமான ஆரம்பநாட்களில் அது சந்தோசுக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ‘தலையைத் திருப்பாமல் நீ எப்படி என்னுடைய வருகையைத் தெரிந்து கொள்கிறாய் என்று கேட்பான். அப்போதெல்லாம் தலையைத் திருப்பி மிகுந்த ப்ரியத்துடனும், பெருமிதத்துடனும் அன்னா சொல்வதுண்டு.

‘‘தட்ஸ் நோஸ் ஃபார் நியூஸ்...’’

அன்னா தன்னையறியாமல் தன் மூக்கைத் தடவிப் பார்த்தாள். அப்போதும் அதே நாற்றம் திரும்பி வந்தது. செக்யூரிட்டி கேபின்வரை இப்போது அந்த நாற்றம் பரவியிருக்குமென அன்னா யூகித்தாள். ஆனால் அதற்காகத் தலையை நிமிர்த்தவோ பரபரத்த எதிர்பார்ப்போ இன்றி பதற்றமற்றிருந்தாள். தன் நாற்பத்தெட்டு வயது அனுபவத்தில் இப்படி வருகிற செய்திகளின் நாற்றம் எங்கும் தங்கிவிடப் போவதில்லையெனவும், எப்படியும் தன்னை வந்தடையும் எனவும் அவள் அறிந்திருந்தாள். இதழை முடிப்பதற்கான இறுதி நேரம் சமீபித்திருந்தது. பத்திரிகை ஆசிரியருக்கு இந்நேரமே ‘‘டெட்லைன்’’ என்ற கடைசி நிமிடம்.

‘‘எனக்கு ஒரு டெட் லைன் சொல்லு.’’ முன்பெல்லாம் வெளியில்  போகும் சந்தோஷ் தான் எவ்வளவு நேரம் கழித்து வரலாம் என்பதை இப்படிக் கேட்பான். டெட் லைன் இல்லாமல் எந்த வாழ்க்கை, எந்த நிகழ்வு பூர்த்தியாகிறது? சன்னி பிறந்தபிறகு குளிக்கவோ, சாப்பிடவோ நிமிட நேரத்தைச் செலவிடும்போதும் கேட்பான். ‘‘என்னுடைய டெட் லைன் என்ன?’’

அன்னாவுக்குச் சீக்கிரமாக தன் வேலையை முடிக்கத் தோன்றினாலும் சமீபமாக அவளுடைய பணி எப்போதும் தாமதமாகிறது. இன்றுகூடச் சொல்லிக் கொள்வதுபோல மாற்றங்கள் ஏதும் நான்காம் கட்டப் பத்திரிக்கையாளரின் பக்கத்தில் இல்லை. முதல் கட்டத்தின் தொடுபுழா இருளான் குந்நேல் சூர்யகுமாரை (22) மாற்றி, பதிலாக அந்த இடத்தில் கொச்சி, துருளையில் வெட்டிக் குழியில் சத்தியவான் (88) பிரதிஷ்டை செய்து, புராண இலக்கியவாதி பரவூர் எஸ். சங்கரதாசின் லேட் செய்தியை மாற்றி பதிலாக ‘அபிநவ எப்பிஸ் கோப்பனின்  மூத்த சகோதரன் என்று பெரிய எழுத்துகளில் போட்டு இருளோமட்டம் தேவஸ்ய (74) என்பது போன்ற சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும்தான் இருந்தது. அதெல்லாம் இரண்டாம் பதிப்பின் பக்கம் முடிக்கும் முன்பே அவள் முடித்திருந்தாள்.

பிறகு பக்கத்தை லேசர் பிரிண்ட் எடுத்துத் திருத்தம் செய்தால் என்ன என்று நினைத்தபோதுதான் அந்தப் பெண் ‘இறந்த நிலையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தாள். 

காஞரமட்டம் பஞ்சார குந்நேல் பவுல் என்பவரின் கீழே தான் அந்த செய்தி. மூன்றாம் பத்தியில் ஐந்தாவதாக காஞரமட்டம் பஞ்சார குந்நேல் பவுல் (98) இறந்துவிட்டார். சவஅடக்கம் இன்று மதியம் 2.00 மணிக்கு காஞரமட்டம் புத்தன் பள்ளியில் நடக்கும்.

உப்புக்குழியில் தெக்கேடத்து வீட்டில், காலம் சென்ற மரியா என்றொரு மனைவியும், பிள்ளைகள்: காலம் சென்ற மாத்யூ, லீலாம்மா, அன்னம்மா, மருமகள்கள்: காலம்சென்ற சோசா (முன்னாள் மாவட்ட செஷன்ஸ் ஜட்ஜ்) அலெக்சாண்டர், (தலைமை பொறியாளர் பி.டபிள்யூ.டி) நெப்போலியன்,  (முன்னாள் டி.சி.சி. பொதுச் செயலாளர்) என்ற செய்திக்கு மேல் இரண்டரை செ.மீட்டர் அகலமும் இரண்டரை செ.மீட்டர் நீளமுள்ள கட்டத்திற்கான இடம் விட்டு அதில் ஆணி அடித்து பவுலோவை அமர்த்தினாள். ஒன்றாம் இரண்டாம் எடிஷன்களில் பவுலோ சரியாகப் பொருந்தினார் (கடைசி நாட்களில் அதீதமான சர்க்கரை வியாதியாயிருந்தது அவருக்கு. தொடும் இடமெல்லாம் புண்ணாகி, புண்ணாகும் இடமெல்லாம் சீழ் வைத்து, முகத்துக்கு நேராக கெட்ட வார்த்தைகளால் திட்டும் ஹோம் நர்சுகளின் கவனிப்பில் வருடங்களை கடத்தியிருந்தார் அவர்) நிமிடங்களின் இடைவெளியில்  அன்னா கவனிக்கத் தவறியபோது ஆணிகளை ஆட்டி பெயர்த்து பவுலோ வெளியேறினார். வேறு வழி இல்லாமல் அந்த இடத்தில் ‘இறந்த நிலையில் பிட்டை ஏற்றிப் படுக்க வைத்தாள்.

கடிகாரத்தைப் பார்க்காமலே டெட்லைன் நெருங்கி விட்டதென்று அன்னாவுக்குத் தெரிந்தது. வேலைக்குச் சேர்ந்து ஏழெட்டு வருடங்கள் கழிந்த பிறகும் அன்னா நேரம் பார்க்காமல் வேலை செய்யப் பழகிக் கொண்டாள். டெட் லைன் என்ற கடைசி நேரம் ஒரு பழக்கமாகிவிட்டிருந்தது. அந்த நேரத்தில் பக்கம் முடியவில்லையானால் படபடப்பு கூடும். சாகக் கிடக்கும் போது ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்காத படபடப்பு அது.

அன்னாவுக்குத் தாகமாயிருந்தது. முன்பெல்லாம் சந்தோஷ் இந்த நேரத்தில் காபி ஊற்றித்தருவான் என்பதை நினைக்கவே கூடாதென்று தீர்மானித்தி ருந்தாலும் அதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. செய்தி கொண்டு வருபவர்கள் உட்காரும் நாற்காலிகளில் ஒன்றை இழுத்துபோட்டு  உட்கார்ந்து சந்தோஷ் காபி ஊற்றித் தருவான். ஒரு கையை கீ போர்டில் வைத்தபடியே மறுகையால் வாங்கி மெதுவாக காபியை உறிஞ்சிக் குடித்தபடியே மூன்றாவது எடிஷனை முடிக்க வேண்டிய மூன்று மணிக்கும் நான்காம் எடிஷனை முடிக்க வேண்டிய நான்கு மணிக்கும் இடையில் வீட்டுச் செலவுகளைப் பற்றியும், வீடுகட்டும் கடன் குறித்தும், சன்னியின் படிப்பு குறித்தும், சாதாரணமான பல லௌகீக விஷயங்களை அவர்கள் பேசுவார்கள். அன்னா பேசிக்கொண்டே திருத்தங்களைச் செய்வாள். பக்கங்களின் லேசர் பிரிண்ட்களை ஒட்டிப்பார்த்த சந்தோஷ் தவறுகளைக் கண்டுபிடித்துச் சொல்வான்.

வி.எம். மான்ஸிலில் வீரான்கோயா என்பவரின் செய்தியை அஞ்சலிப் பக்கத்தின் மேல்மூலையில் சரிசெய்யும்போது அன்னா கேட்பாள். ‘‘காலையில இட்லிக்கு  அரிசியும், உளுந்தும் ஊறப்போட மறந்துட்டோமே. ப்ரட் மட்டும் போதுமா?’‘

காலம்சென்ற  ஈரேழ மானிடும்குழியில் லட்சுமிகுட்டி (90) யின் ஈமக்கிரியை இன்று என்ற வாசிப்பினிடையில் சந்தோஷ் சொல்வான், ‘‘இப்போதுதான் ஞாபகம் வருகிறது. அம்மச்சியின் தைலம் தீர்ந்துபோச்சு. நாளைக்கு ஞாபகப்படுத்து.’’

பிழைதிருத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ‘நகராட்சி சுகாதாரச் செயலாளர் இறந்த நிலையில் என்ற தலைப்புச் செய்தியை அடிக்கும்போது சந்தோஷ் சிலநேரம் மெயின் டெஸ்க்கில் அன்று கேட்ட நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்வான். சிரிப்பை அடக்க முடியாத அன்னாவின் கை வழுக்கி கமிட்டி செயலாளரின் பிள்ளைகளின் அடைப்புக்குறிக்குள் தவறி ஓடிவிடும்.

நான்கு மணிக்கு அன்னா கடைசி பதிப்பையும் முடித்து, அச்சில் ஏற்றுவதற்கான கடைசிச் செய்தியைக் கொடுத்துவிட்டு வரும்போது சந்தோஷ் கீழே வந்து குளிர்ந்து உறைந்திருக்கும் பைக்கை மிதித்து ஸ்டார்ட் செய்து நிறுத்தியிருப்பான். நடுங்கும் குளிரும், மழைக்காலமுமாக இருந்தால் சுளீரென முகத்தில் அடிக்கும் அதிகாலை மழையையும் ஏற்று வண்டி வீட்டிற்குச் சீறிப்பாயும். நடுநடுங்கியபடி உள்ளே வந்தால் தூங்கிக் கொண்டிருக்கும் சன்னியின் நெற்றியில் முத்தமிட்டு, ‘‘பாவம், பத்திரிகையாளர் தம்பதிகள் குடும்பம் நடத்தும் கஷ்டம் பற்றி அவனுக்கு என்ன தெரியும்?’’ என்று ஏதாவது சிரிக்கமுடியாதபடி ஜோக் அடித்து சந்தோஷ் படுக்கையில் விழுந்து விடுவான். சன்னிக்கு மறுநாள் பள்ளிக்கூடமாக இருந்தால் ஆறுமணிக்குச் சமையலறைக்குப் போகக் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு அன்னா கட்டிலில் சந்தோசின் பக்கத்தில் நெருங்கிப் படுத்துக்கொள்வாள். சந்தோசின் உடலிலிருந்து அப்போது மூன்றாம் எடிஷனின் புரூஃப் காப்பியின் மணத்தை அவளால் நுகர முடியும்... சூடான செய்திகளின் மணம்.

அன்னா ஸ்கிரீனின் பக்கங்களைப் பார்த்தாள். ‘பெண் இறந்த நிலையில் அப்போதும் பழைய இடத்திலேயே இருந்தது. காஞரமட்டத்தின் பஞ்சாரக்குந்நேல் பவுலோஸ், பொன்குன்றம் நவஜீவன் ஆண்ட்ரூ லூக்காஸின் மகன் எபி லூக்கா (2 1ஞி2) இன்ச் மேலே ஏறி நின்றிருந்தது. அன்னா சற்று கோபத்துடன் கம்ப்யூட்டரின் மவுஸôல் பவுலோஸின் படத்தின் காதைத் திருகினாள். பிறகு அவரை கீழே இழுத்த இழுபறியில் கொஞ்சம் இடம் மாறிப்போன எபிக்குட்டனை அவனுடைய செய்திக்கு நேராக நிறுத்தினாள்.

எங்கிட்டயா விளையாட்டு? அன்னா பவுலோவை புன்னகையோடு பார்த்தாள். ஒவ்வொரு நாளும் இதுபோல எத்தனை பெரியவர்கள்? எத்தனை பெண்கள்? எத்தனை குழந்தைகள்? சட்டென இருபத்தியாறு வருட சர்வீஸின் இடையில், தான் எத்தனை மாறிப்போயிருக்கிறோம் என்று ஆச்சரியத்தோடு யோசித்துப் பார்த்தாள்.

ஜர்னலிசத்தில் முனைவர் பட்டம் பெற்ற மூன்றாம்நாள், ‘அன்னாவிடம் எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு உண்டு. அதனால் நம் பத்திரிகையின் மிகவும் முக்கியமான பக்கங்களின் பொறுப்பினை ஏற்க வேண்டும், எங்களுடைய எதிர்பார்ப்பை அன்னா நூறு சதவீதம் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்’ என்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்தபோது முழுவதுமாய் நொறுங்கிப் போனாள் அன்னா.

‘‘என்னால முடியல’’அன்றைக்கு வெறும் காதலனாக மட்டுமிருந்த சந்தோசுக்கு முன்னால் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

‘‘அஞ்சலிச் செய்திகளின் பக்கத்தை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது. கனவெல்லாம் அதே வருமே.’’

‘‘இப்படி நம்பிக்கை இல்லாம பேசாதே அன்னா... திறமை உள்ள ஒரு ஜர்னலிஸ்ட் அஞ்சலிச் செய்தி போடுவதிலும் தன் தனித்துவத்தைக் காண்பிக்கலாம்.’’

பத்து வருடங்களாக அஞ்சலிச்செய்திப் பக்கத்தைப் பூர்த்திசெய்திருந்த அரவிந்தாக்ஷன் நாயர் இந்த மாதத்தோடு பணி ஓய்வு பெற்றுப் போகிறார்.

‘‘இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை...’’ அன்னாவின் கண்ணீர் பார்த்து பரிதாபத்துடன் நாயர் சொன்னார்.

‘‘பைபிளில் படிக்கலையா? மரிக்கும் பொழுது அவன் யாதொன்றும் கொண்டு போவதில்லை. அவனுடைய பெருமைகள் எதுவும் அவன் பின்னால் போவதுமில்லை.’’

அவர் போனபிறகும் அன்னா மனவேதனையுடன்தான் இருந்தாள். ஆனால் தன்னிச்சையாக மேசையின் மேலிருந்த கோப்புகளைக் கையிலெடுத்திருந்தாள். ராணுவ உடையில் மெடல்கள் குத்தியிருக்கும் கலர் போட்டோ கையில் அகப்பட்டது. அதனுடன், கர்னல் (ஓய்வு) ஆர்.பி.பி. நம்பியார் என்று பொன்எழுத்துகளில் அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேடிலிருந்த எழுத்துகளை அன்னா படித்தாள்.

‘‘விஜயபுரம்: கர்னல் (ஓய்வு) ஆர்.பி.பி. நம்பியார் (87) மறைந்து போனார். ஜனாதிபதியின் உயரிய சேவைக்கான பதக்கமும் வாங்கியிருக்கிறார். அவருடைய இறுதிச்சடங்கு...’’

அன்னா நடுங்கினாள். ஆனாலும் அன்றைய தெளிவின் தாக்கம் தாங்கமுடியாததாக இருந்தது. பிறகு நகரத்தின் புகழ் பெற்ற பழைய பேப்பர் வியாபாரியின் மரணச் செய்தியை பழைய தாளின் பின்னால் எழுதி வந்த போதும், மருத்துவரின் மரணசெய்தியை அவர் கடைசியாக ஆப்பரேஷன் செய்த நோயாளியே கொண்டு வந்தபோதும் அன்னா அந்த உணர்வினை மீண்டும் மீண்டும் அனுபவித்தாள். எத்தனையோ விதமான மரணங்களை அன்னா எதிர்பாராத மனநிலையோடு எதிர்கொண்டிருக்கிறாள்.

காதலிக்கப்பட்டும், காதலிக்கப்படாமலும், வெறுக்கப் பட்டும், புறந்தள்ளப்பட்டும், உதாசீனப் படுத்தப்பட்டும், குற்றவுணர்ச்சியோடும், விரக்தியோடும்... அன்னாவுக்கு தன்மேல் கழிவிரக்கம் தோன்றியது.

போனவர்களை விடவும் அதிகமாக இருப்பவர்களுக்கு என்ன சொல்ல இருக்கிறது?

ஜன்னலிலிருந்து வழக்கமான மூன்றுமணி சில் காற்று உள்ளே நுழைந்தது. அவளுக்கு எப்போதுமில்லாமல் இன்று தூக்கம் வந்தது. காற்றில் முகத்திற்குப் பறந்து வந்த நரைத்த முடிகளை ஒதுக்கி முகத்தை அழுத்தித் துடைத்துச் சுற்றிலும் பார்த்தாள். அறை நிசப்தமாக இருந்தது. வெள்ளைச் சாயம் அடித்த வளைந்த மேசைகள் சிலுவைகள் நடாத கல்லறைகளை ஞாபகப்படுத்தியது.

முன்பெல்லாம் மூன்று மணிக்கெல்லாம் மூன்றாம் கட்டம் முடித்து நாலாம் கட்டத்திற்கான திருத்தங்களைச் செய்து மேலே மூலையில் இரண்டரை சென்டிமீட்டர் நீளமும் இரண்டரை சென்டிமீட்டர் அகலமுள்ள படத்திற்கும், மூன்றரை சென்டிமீட்டர் செய்திக்குமான இடத்தை ஒதுக்கி வைத்து, அன்னா சீக்கிரமே வேலையிலிருந்து விடுபட்டவள்தான். அந்த இடம் எதிர்பார்ப்புக்குட்பட்டது. எப்போதும் எங்கேயும் ஒரு செய்தி கிடைக்கும். காத்திருக்கும் ஏதோ ஒரு மரணத்தை விடவும் முக்கியமானதொரு செய்தி வாழ்க்கையில் இல்லை.

‘‘கல்லறை கட்டியாச்சா?’’ பக்கத்தின் மேல்மூலையில் இடம்விட்டு அன்னா  ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்போது சந்தோஷ் கேட்பான். ‘‘இனி வரும் ஆள் அதில் அடங்கி நிற்பாரோ என்னவோ?’’

‘‘மூன்றரை சென்டிமீட்டர் நீளத்திற்கும் இரண்டரை சென்டிமீட்டர் ஸ்டாம்ப் சைஸிலும் அடங்காத யார் இருக்கிறார்கள் இந்த உலகத்தில்.’’ அன்னா நுகர ஆரம்பித்திருந்தாள், ‘‘எனக்கு ஏதோ ச.த.ஐ மரண வாசனை அடிக்கிறது.’’

‘‘அவள் மரணத்திற்காகக் காத்திருந்தாள்’’சந்தோஷ் அப்போது அன்னாவைப் பரிகசித்து பைபிள் வரிகளை உச்சரிப்பான், ‘‘காத்திருந்தாலும் அது வரவில்லையே...’’

ஆனால் அன்றைக்கு அதிக தாமதமில்லாமல் நிறைய ச.த.ஐ பிள்ளைகளைப் பெற்ற  அம்மாவின் மரணச் செய்தி வந்தபோது சந்தோஷ் ஆச்சரியப்பட்டான்.

‘‘உனக்கு எப்படித் தெரிந்தது?’’

‘‘தட்ஸ் நோஸ் ஃபார் நியூஸ்’’ -அன்னா சிரித்தாள்.

‘‘அஞ்சலிச்செய்தி எடிட்டருக்கு நோஸ் ஃபார் நியூஸ் இருக்காதா பின்ன.’’ மேலும் பரிகசித்தான்.

அந்த நாளை அன்னா மறக்கவில்லை. அதுதான் கடைசிநாளாக வாய்த்தது. பிறகெப்போதும்  மூன்றாம் கட்ட பதிப்பினை முடித்து சந்தோசுடன் வம்பு பேசிக் கொண்டிருக்க முடிந்ததில்லை. வேலை நேரம் முடிந்து மனைவியோடு வம்படித்துக் கொண்டிருக்கிறான் என்று காரணம் காட்டி அவனை டில்லிக்கு மறுநாளே மாற்றியிருந்தார்கள்.

‘‘என்ன வாழ்க்கை?’’ சந்தோஷ் பெட்டியை அடுக்கி முடித்திருந்தபோது அன்னா மூக்கைச் சிந்தினாள். ‘‘என்னால முடியல சந்தோஷ்’’.

‘‘அப்படி சொன்னால் எப்படி?’’ சந்தோஷ் ஆறுதல்படுத்தினான்.

‘‘பொதுமாறுதல் சமயத்தில் நாம கேட்டுக்கலாம். சன்னிக்கு அட்மிஷன் போட வேண்டியது மட்டும்தான் அப்ப பிரச்சனையாக இருக்கும். அதை நாம சமாளிச்சுக்கலாம்.’’

அன்னா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தொடர்ந்த நாட்களில் அப்பாவைப் பார்க்காமல் சன்னி அழுதபோது, அன்னா டெல்லியில் அவனை சேர்க்கப் போகும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பேசினாள். அவர்கள் வசிக்கப்போகும் வீடு பற்றியும், தங்களுக்காகக் காத்திருக்கும் அற்புத அனுபவங்களைப் பற்றியும் பேசினாள்.

அன்னாவுக்குச் சட்டென டெட்லைனின் ஞாபகம் மீண்டும் வந்தது. இவ்வளவு நேரமாகியும் செய்தி வரவில்லையே என்று அவள் சங்கடப்பட்டாள்.

செய்தி இல்லாதிருந்தால் பக்கத்தை முடித்துவிட்டு வீட்டிற்குப் போய் சன்னி, கல்லூரிக்கு அணிந்து கொண்டுபோக வேண்டிய ஆடைகளுக்கு இஸ்திரி போட்டிருக்கலாம். ஆனால் கீழேயிருந்து செய்தியின் மணம் வந்ததிலிருந்து அவள் நிம்மதியற்றிருந்தாள்.   

‘‘ஓ.. அஞ்சலி செய்தி எடிட்டருக்கு என்ன நோஸ் ஃபார் நியூஸ்?’’

சட்டென அன்னாவுக்கு சந்தோசின் குரல் கேட்பது போலிருந்தது.

சவப்பெட்டியின் மூடியில் தளர்ந்த ஆணிபோல அன்னாவின் இதயம் தடதடவென ஓசை எழுப்பியது.

டெல்லியில் 5 வருடத்திற்கு பிறகு சந்தோஷ் வேறொரு பத்திரிகைக்கு மாறப் போகிறான் என்று கேள்விப்பட்ட போதுதான் இப்படி தோன்றியது. வருகையும், தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும், சன்னிக்கான பரிசுப்பொருட்களும் கூட அபூர்வமான காலமது.

‘‘நானும் கூட வரட்டுமா?’’ - தயங்கித் தயங்கி கேட்டாள். ‘‘இனியும் எப்படி நான் மட்டும் தனியா இங்கயே...?’’

‘‘அங்க வந்து மட்டும் என்ன பண்ணப்போற’’

சந்தோசின் வார்த்தைகளில், அகன்ற தூரத்தின் மணத்தை அவள் முகர்ந்தறிந்தாள்.

‘‘ஒரு சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு பூமியில வாழமுடியாது அன்னா’’

‘‘எனக்கும் ஏதாவது வேலை கிடைக்காதா சந்தோஷ்?’’ - வேதனையோடு கேட்டாள்.

‘‘நிறைய கிடைக்குமே! உன்னோட எக்ஸ்பீரியன்ஸ் என்ன? பத்துவருடமாக மரணச்செய்தி பக்கத்தைப் பார்த்துக் கொண்டதா?’’ - சந்தோஷ் ஒரு கொலையாளியைப் போலச் சிரித்தான்
மரணச்செய்தி பக்கத்தை மட்டுமே பார்க்கும் உன்னை எப்படி ஒரு பத்திரிகையாளரென்று கூப்பிட முடியும்?

‘‘நான் ஜர்னலிஸ்ட்டில்லையா? - அன்னாவின் தன்மானம் ரணப்பட்டது.

‘‘தி ஒன்லி குவாலிட்டி ஃபார் எ ஜர்னலிஸ்ட் ஈஸ் எ நோஸ் ஃபார் நியூஸ்’’

‘‘எனக்கு நோஸ் ஃபார் நியூஸ் இல்லையா?’’ – அன்னா பிடிவாதத்துடன் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

அந்தப் பிடிவாதத்தில் தான் செய்திகளின் நாற்றம் அன்னாவை பிரத்யேகப் படுத்தியது.

சேற்றுக்குழி ராகவனின் மரணச் செய்தியை கையில் எடுத்தபோது எதிர்பாராமல் அடித்த ஒரு சாராய மணத்தால் அன்னா மூக்கைச் சுளித்தாள்.

‘‘அது இந்த ஏரியாவின் முக்கியமான சாராய வியாபாரி ராகவ அண்ணனாச்சே...’’, செய்திகளின் கூட்டத்திலிருந்து இறந்தவனின் படம் தேடும் ஏஜெண்டு சிரித்தான்.

இது ஒரு தொடக்கம். பிறகு ஏலக்காட்டின் ஏலியாமா(78) வின் மரணத்தை வாசித்தபோது மதுரை சுருட்டின் மணம் வந்தது. இறந்தவளுக்கு சுருட்டு வியாபாரம் என்று ஏஜெண்ட் விளக்கினான்.

ராமபுரத்து ராவுத்தரின் மரணத்தில் பச்சை இரும்பின் மணம். அவர் பட்டினத்தில் இரும்பு வியாபாரி என்று பிறகு தெரிந்தது. கல்தொட்டி செரியன் கெ. செரியனின் மரணச்செய்தியை திறந்தபோது அன்னாவின் மூக்கு நுனியில் அவர் இதுவரை குடித்திருந்த மதுவின் வாசமும், புசித்த உணவுகளின் வாசமும், சுகித்த பெண்களின் உடல்மணமும் ஒருசேர கமழத் தொடங்கியது.

பாணக்காமலை சாரதாம்மாளின் மரணத்தில், அவளை குனியவைத்து கணவன் அடித்தபோது, அவன் குடித்திருந்த நாட்டு சாராயமும் தொட்டுக் கொண்ட மாங்காய் ஊறுகாயின் வாசமுமாய் சேர்ந்து நுகர்ந்த வேதனை தெரிந்தது. தேலக்காட்டில் குஞ்ஞோனச்சனின் செய்தியிலிருந்து ஓடிப்போன மனைவியை நினைத்து முகம் பொத்தி அழுத கண்ணீரெல்லாம் விழுந்து சொத சொதத்துப் போன தலையணையின் மணம்.

தவிர்க்க முடியாமல் அன்னா சில யதார்த்தங்களோடு பொருந்தினாள்.  நம்புவதற்கு  சிரமமாக இருக்கிறதென்பதால் செய்தி செய்தியாகாமல் போவதில்லை. எல்லாச் செய்திகளும் முன்னரே எழுதப்படுபவைதான். ஒவ்வொன்றையும் எவ்வளவு சீக்கிரம் கண்டடையப் போகிறோம் என்பதுதான் பத்திரிகையாளரின் சாமர்த்தியம்.

யாரோ படி ஏறி வருவது போல அன்னாவுக்குத் தோன்றியது. அவள் சட்டென யதார்த்தத்துக்குத் திரும்பினாள். அந்தச் செய்தி வருகிறது. அன்னா ஒரு பத்திரிகையாளருக்கு விதிக்கப்பட்ட கௌரவத்தோடு கம்ப்யூட்டர் திரைக்குமுன் தன் முகத்தைத் திருப்பி அந்தரங்கமாக அந்த மணத்தை நுகர முயன்றாள். லேசான அழுகின நாற்றமென்பதால் அவள் தீர்க்கமாக யோசித்தாள்.

யாராயிருக்கும்?

பார்க் அவென்யூ லோஷனின் மணம் தான் அவள் சுவாசித்தது என்றறிந்த போது மேலும் அதிர்ந்தாள். பிறகு மூக்கினை விடைத்துக் கொண்டாள்.

கூடவே பாய்சன் சென்ட்டின் மணமும் வருகிறதோ? இல்லை. இல்லை...

அவளுக்கு ஒரு போதும் என் முன்னால் வர தைரியமில்லை. அன்னா பற்களைக் கடித்தாள்.  ‘மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொருத்தியை திருமணம் செய்பவன், அவளுக்கு எதிராக விபசாரம் செய்கிறான் என்ற வரி ஞாபகத்திற்கு வந்தது. அந்த நினைவில் எப்போதும்போல அவளின் கைகள் வேதபுத்தகத்தைத் தேடியது. அது கிடைக்காமல் போனதால் ஒரு முணுமுணுப்பு போல வழக்கமான வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தன.

‘உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவர்களாய் அணையாத நெருப்புள்ள நரகத்திற்குள் தள்ளப்படுவதைவிட கை ஊனமுற்றவராய் நிலை வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.’   -மார்க்கு 9:43

தோளில் யரோ கை வைப்பதை உணர்ந்து லேசாய் நடுங்கித் திரும்பினாள்.

‘‘அம்மா...’’

கொட்டாவியை அடக்கிக்கொண்டு சன்னி சிரிக்க முயன்றான்.

‘‘தூங்க வேண்டாமா?’’

‘‘பக்கத்தை முடிக்காமலா?’’

அன்னா ஜோக்கடித்ததை போலச் சிரித்தாள்.

‘‘கடைசி எடிஷனில் ஒரு சின்ன மாற்றம் இருக்கிறது. அது முடியாமல் அம்மாவால் எப்படி வரமுடியும் சன்னி?’’

சன்னி மீண்டும் கொட்டாவியை அடக்கியபடி ‘‘இனி புதிய செய்தி ஒன்னும் வரவேண்டியதில்லையே’’ என்றான்.

அவன் அன்னாவின் கைகளைப் பிடித்து எழ வைத்தான். பிறகு அஞ்சலிச் செய்திகளின் நசுங்கிய, சிதைந்த, அழுகிய துண்டுகளிலிருந்து அவளை மெல்ல மெல்ல எழுப்பி நடக்கவைத்தான்.

‘‘இல்லடா. நீ எதுக்கும் ஒரு முறை பாரேன்...’’

கட்டிலில் உட்கார முடியாமல் சரியும்போது, மூக்கு விடைத்தபடி அவள் சொன்னாள்.

‘‘இதோ... இதோ... மீண்டும் அந்தச் சதை அழுகும் நாற்றம்...’’

சன்னி மௌனமானான்.

அவன் குனிந்து அம்மாவின் இடது கணுக்காலைப் பார்த்தான்.

நீர்க்கோர்த்து வீங்கின அந்தக் காலிலிருந்து சன்னி, நோஸ் ஃபார் நியூசை  நுகர்ந்தான்.

‘‘ஜர்னலிஸ்ட் அன்னா சந்தோஷ் பால் சங்கிலி இறுக்கி அழுகின நிலையில்...’’