Thursday, February 16, 2017

ஓர் வாசிப்பனுபவம் - டொமினிக் முன்னுரை





சற்று முன்புதான் உங்களது வலைத்தளத்தில் ‘ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்..‘ சிறுகதையை வாசித்தேன். இது உங்களது தொகுப்பில் முன்பே வாசிக்கக் கிடைத்த சிறுகதைதான். ஆனால் இன்று வாசிக்கும்போது உங்களது படைப்பினைக் குறித்து வெகு நாட்கள் பனி மூட்டத்தில் காணக் கிடைக்கும் மலைஅருவி போல சிக்கியும், சிக்காமலும் இருந்த ஒன்று பிடி கிடைத்து விட்டது.  உங்களை உங்கள் சமகாலப் படைப்பாளிகளிடமிருந்து தனித்தன்மையுடன் நிறுத்துவது அதுதான் என நினைக்கிறேன். 

நான் இலக்கியம் வாசிக்க வந்தது 80 களின் மத்தியில்,  அதாவது என் பதின்ம வயதுகளின் துவக்கத்தில். அப்போது வெகுவாக என் வாசிப்பு வட்டத்தில் சிலாகிக்கப்பட்ட வண்ணநிலவன்,  வண்ணதாசன்,  ஜி.நாகராஜன் ஆகியோர்  எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை.  நெல்லை மாவட்டத்தின் உள்ளடங்கிய பேரூராட்சி (வாசுதேவநல்லூர்) ஒன்றில் இவ்வளவு  எதிர்பார்ப்பு அதிகம் என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.   ஆனால் மிக வியப்பாக என்னை முதலில் வந்தடைந்தது அசோகமித்திரன் . அவரது ஒற்றன் நாவல் நான் முதலில் வாசித்த உருப்படியான இலக்கியப் படைப்பு. அதிலிருந்து தி.ஜா., சுஜாதா ., அப்புறம்  சு.ரா.,  கு.ப.ரா., கி.ரா.,  லா.ச.ரா., என்று வாசிப்பு நீண்டது.  ஆனால் பெயர்பெற்ற  எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடியடைந்து வாசிக்க முடிந்தது 1990 களின் மத்தியிலிருந்துதான்.  

நான் வாசிக்கும்போது என்னை அறியாமலேயே  கடைப்பிடித்திருக்கிற ஒரு விஷயம் ஒரு எழுத்தாளரின் முழுத் தொகுதியை வாசிக்க முயல்வது. ஓரிரு படைப்புகளை மட்டும் வாசித்தால் உருவாகிவரும் மதிப்பீட்டை நான் அடைகாத்துதான் வைத்திருந்திருக்கிறேன். முழு தொகுப்பாய் வாசித்ததும்தான் எனது வாசிப்பின் முட்டை குஞ்சைப் பொரிப்பதும்;  கூமுட்டை ஆவதும். தி.ஜா. வை நான் அறிமுகம் செய்துகொண்டது சிறுகதைத் தொகுப்புகள் வழியேதான். அதிலும் தம்பி மேலுள்ள அசூயையால் அண்டா பாயசத்தையும் சாக்கடையில் கொட்டும் கிழவரின் கதையை மட்டும் ஒரு வாரம் மறுபடி , மறுபடி வாசித்திருக்கிறேன். இல்லாக் கொடுமையால் ஒரு பணக்காரத் தொழு நோயாளிக்குப் பணியாளாக அனுப்பி வைக்கப்படும்  நல்லவனும், அசடனுமான அம்பியின் அப்பாவைக் கொலை செய்யும் வெறியில் ஒரு மாதம் திரிந்தேன். ஒரு சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற வித்தையை அவரிடம்தான் கற்றேன். அப்படி ஒரு சிறுகதை, வாசகனை என்னவெல்லாம் செய்யும் என்பதன் முதல் அனுபவமும் அவரிடம்தான்.  அங்கிருந்து அம்மா வந்தாள், மரப்பசு, மோகமுள் என்று போகும்போது ஒரு எண்ணம் வெகு உறுதியாக மனதில் நின்றது. 

தி.ஜா. நாவல்கள் பலவற்றில் மையமாய் கையாள்வது காதலின் விரகத்தை. ‘பொங்கிப் பெருகும் தேவதைப் பெருங்காதல்‘ கிட்டாமல் மனதின் வேதனை செல்லரித்து அதில் மாயும் மனிதரையும், அந்த வெள்ளத்தின் வேகத்திலே சுக்கானின் பிடி கிட்டாமல் அதன் போக்கிலேயே அடித்துச் செல்லப்படும் மானிடர்களையும் மாறி, மாறி அவரது நாவல்கள் பேசுவதாகப் பட்டது. ஆனால் இதை நான் பகிர்ந்து கொண்ட இரு நண்பர்கள் என் மொத்த உடலின் எடையும் தலையால் மட்டுமே ஆகியிருப்பதாகவும், இன்னும் கொஞ்சம் தம் கட்டி நான் வாசிப்பின் ஆஆஆழத்தில் மூழ்க வேண்டுமென்றும் சொன்னதால் அப்படியே வைத்துவிட்டேன்.  

பிறகு 90களின் மத்தியில் தேடிக் கிடைத்த படைப்புகளைப் படித்ததும் எனது எண்ணம் வலுப்பட்டது. பாலியத்தில் உருவாக்கி வரும் எல்லாங் கலந்த நட்பு, முதல் பூவாய் பூத்து மலர்ந்த காதல், பிரியத்தால் தோளேறி பிரிவால் பிரும்மாண்டமாகிக் கொண்ட சிறுவயது சொந்தங்கள் ஆகியவை ஒரு புறம். பொருள் வயிற் பிரிவு, காலமும் தூரமும் உருவாக்கிய இடைவெளிகளில் சிக்கிக்கொண்ட சொந்தங்கள், வாழ்வின் மாறுபாடுகளால் அழுத்தப்பெறும் வேளையில் சோதனைக்குள்ளாகும் மெல்லுணர்வுகள், இழந்தவற்றின் மீதான துக்கத்தை அதிகப்படுத்தும் நிதர்சன வாழ்வின் சமரசக் கோரல்கள் ஆகியவை மறுபுறம். இந்த இரண்டும் மாறிமாறி வந்து கதாபாத்திரத்தை அலைக்கழித்து நம்மையும் பித்தாக்கும். இந்த இரண்டு நிலையில் முன்னதைப் பின்னது அழுத்த அந்த வேதனையும், பின்னதால் பிரிய நேரிட்ட முன்னதன் உணர்வும் கிட்டத்தட்ட 80% கதைகளின் கருப்பொருள். 

அவை பேசக்கூடாத பொருளல்ல. எனினும் இந்த மையமே பெரும்பான்மை படைப்புகளின் சுழிமையம்… ஆனால் களை  நடுவே முளைத்த நெல்பயிர்களாய் அமைந்த நல்ல படைப்புகளும் உண்டு.  பதின்வயதின்  தொடக்கத்தில்  ‘பார்த்த‘  அக்காக்களையும்,  அத்தைகளையும் வாலிபம் வந்தபின் எத்தனை முறைதான் திரும்பி வந்து சந்திப்பது? 

சமவயது இருபால் உறவு சகஜமாக இல்லாத ஒரு காலத்தில்,  காவியங்களில் பயின்றுவரும் ரொமாண்டிசமும் , பொருள்வயிற்  பிரிவும், சற்று ஊறவைத்துப் புழுக்கினால் வெளிப்படும் ஊமைக்காமமும் , ஒரு 20 வருடக் கருப்பொருளாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது நமது வாசிப்பில். அதன் வெவ்வேறு பரிமாணங்களாவது  பேசப்பட்டதா? இல்லை. மாறாக,  வெவ்வேறு வெளிப்பாட்டு முறைகள் மட்டுமே. இது இன்றுவரை ஊரில் தொலைத்த ஒரு தாவணி அக்காவை இலக்கிய முகத்தோடு வணிக இதழ்களில் ஒவ்வொருவரையும் வாராவாரம் முறைவைத்துத் தேடச் செய்திருக்கிறது. 

இந்தப் பச்சரிசி ‘காவியக் காதல்‘ ஒருமுனை என்றால் நேரடியாக பழைய கள் இறக்கும் கலை இன்னொரு முனையில். மதுரைக்கு வரும் வாசகனை எல்லாம் குறத்தி முடுக்கைத் தேடும்படி செய்த நாகராஜன் வகை படைப்புகள். நேரடியான , பாசாங்கற்ற பாலியல் பிறழ்வுகள் , அந்தச் சூழலே கதைக்கணங்கள். (என்ன இருந்தாலும் படைப்பூக்கம் மீதூறும்  இடங்களில்லையா?) அதிலுள்ள கலைக்கனத்தைவிட அதன் அதிர்ச்சி வைத்தியமே அதிகமும் பேசப்பட்டது. மதுரையின் குறத்தி முடுக்கு கிளையை தஞ்சையில் பிரகாஷ் தொடங்க முயற்சித்தார். ப்ராய்டின் பிறாண்டல்கள் எழுத்தாளர்கள் அனைவர் மீதும். 

பவா! ஓராண்டு காலம் பல படைப்பாளிகளின் தொகுப்புகள் மொத்தத்தையும் தொடர்ந்து வாசித்தேன். முன்னோடிகளின் படைப்புகளைத் தவிர்த்தால் அதன் பின் தொடர்வன அனைத்தும் பெரும்பாலும் இதே பேசுபொருள். அலுப்பும், சோர்வும் மிஞ்சிப் போனது. இந்தக் கருப்பொருளை மட்டுமேவா இருபது வருடங்கள் தமிழ்ச் சமூகம் மாந்தி மகிழ்ந்தது என்ற கேள்வி என்னை அரித்தது. சுஜாதா நிறைய ஆறுதல் அளித்தார். ஆனால் தேற்றவில்லை. பாலகுமாரன் 90களின் தி.ஜா. தான் ( நாவலில் உள்ள தி.ஜா.) எனக்குப் பெரும் ஆசுவாசம் அளித்தது கி.ரா.வும், கொஞ்சம் சு.ராவும்தான்.  பிறகுதான் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியும் ஒரே நேரத்தில் என் கைக்குக் கிடைத்து வேறுவகை வாசிப்புக்கான சாத்தியங்கள் அமைந்தன. 
எதற்கு இவ்வளவு பூர்வ பீடிகை என்றால் இந்த 80களின் இறுதியில் எழுத வந்த எழுத்தாளர்களில் மேற்கண்ட சாயல் படாத புது எழுத்துகள் என வெகு சிலரையே சுட்ட முடியும். நாஞ்சிலார், ஜெயமோகன், நீங்கள், யுவன் சந்திரசேகர். இவ்வகையில் பெரும் விதிவிலக்குகள்    ‘கும்ப முனி ‘ நாஞ்சிலார்,ஆ.மாதவன் இருவரும். இருவருமே இந்த ‘நவீன‘ காலத்துக்கு முந்தியிருந்து எழுத வந்து அந்தச் சாயல் படாமல் இருப்பவர்கள்.  காமம் கருப்பொருளாகி வந்த சில படைப்புகள் நீங்கள் எல்லோருமே படைத்ததுண்டு. ஆனால் பாயாசம் மட்டுமே விருந்தாகி விடும் கொடுமை உங்கள் எவரிடமும் இல்லை. 

உங்கள்  படைப்பில் முதலாக நான் வாசித்தது ஒரு மழைப் பொழிவினால் மரணம் மன்னிக்கப்பட்ட திருடனின் கதை. மிகுந்த பிரமிப்புடன், ஒருவார காலம் அந்தக் கதையையே நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு குறிப்பிட்ட கதைமாந்தரின் மீது  இரக்கம்  தோன்றும் விதத்தில் கதை சொல்லப்படுவதுவழக்கம். அதுவும் ஒரு கதாபாத்திரம்,  இன்னொன்றின் மீது வெளிப்படுத்தும் ஒன்றாக அமைவதே மரபு. ஆனால் இந்தப் படைப்பில் இரக்கம்  உருவாகி வருவது திருடன் மீதல்ல. கட்டுகளை அவிழ்த்து விடும் ஊர்க்காரர்கள் எவரும் பரிதாபத்தையோ, இரக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஊர்க்காரர்கள் தண்டிக்கும்படியான காரியங்கள் பல செய்த திருடன் , அவர்களே மன்னித்து விடுதலை செய்யுமளவு என்ன மகத்தான நல்ல காரியம் செய்தான்? ஒன்றுமில்லை. அவன் ஒரு பொருட்டே அல்ல. மாறாக, மழை வழியே அவர்கள் மனம் அடைந்த விரிவு.  அந்த மழை கொடுத்த மனவிரிவு. நெல்லுக்கும், புல்லுக்கும், விஷச்செடிக்கும், பழமரத்துக்கும் ஒன்றேபோல் முலை  சுரக்கும் மலையருவிகள். குழந்தைகளின் முகம் பார்த்து அன்னையின் கையில் இடப்பட்ட பிடிச் சோற்றின் வலிமை. இனி உழைக்க வழியுண்டு என்ற மனம் தந்த விரிவு அது. இப்படி மானுடச் செயல்கள் வழியே மானுடத்தை மீறி நிற்கும் ஒரு மகத்தான உணர்வை சொல்ல முடிந்த இந்த ஆள் யார் என்றுதான் உங்கள் பெயரை கவனிக்க ஆரம்பித்தேன். 

வேட்டை கிட்டத்தட்ட ‘கடலும், கிழவனும்‘தான் என்று விவாதம் செய்த நண்பர்கள் உண்டு. ஆனால் வேட்டை அளவுக்கு தமிழில் இயற்கைக்கும், மனிதனுக்குமான உறவினைப் புரிய வைத்த கதைகள் ஒரு கை விரல் எண்ணிக்கையில் அடக்கம். இயற்கையின் ஒரு பகுதியாக மனிதன் வாழ்ந்தால் அவனும் இயற்கைக்கு உட்பட்ட போராட்ட இருப்பையே கொள்ள வேண்டும். வேட்டைக்காரன்,  வேட்டை உயிர் இரண்டுக்குமான நியதிப் பங்கீடு இயற்கையால் செய்யப்பட்டு , சமநிலையில் இயற்கையாலேயே பேணவும்படும். இந்நிலையில் மாசுபடாத ஒரு மனித மனம் வேட்டையில் தன் பங்கு இயற்கையால் சமன் செய்யப்படுகையில் எப்படி உணரும்? ஜப்பான் கிழவன் போன்ற ஒரு கதைமாந்தன் இதுவரை தமிழில் பேசப்பட்டதில்லை.

உங்கள் படைப்புகளில் உருவாகிவரும் கதைமாந்தர்கள் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு மையக் கதாபாத்திரம் மட்டும் அப்படி அமைந்து வருவதில்லை உங்களுக்கு.  அனைத்து கதைமாந்தர்களுமே தனித்துவம் கொண்டவர்கள்தான். மின்னல்வெட்டில் தோன்றி மறையும் காட்சிகளைப் போல ஒவ்வொரு கதைமாந்தரும் தம் இயல்புகளைச் சட்டெனக் காட்டி மறைவது வாசிப்பை சுவாரசியமாக்குகிறது.  கரடியில் வரும் வாத்தியார்,பிடி கதையின் கடைசி நாலு பாராவில் மட்டுமே வந்து படைப்பை உச்சத்தில் கொண்டு நிறுத்தும் அப்பா , படைப்பு முழுவதும் எங்குமே ஒருவரிகூடப் பேசாமல் அனைத்துக்கும் காரணபூதமாக நிற்கும் “டொமினிக்”கின் ராணி, படைப்பின் கடைசி இரண்டுவரிகளை மட்டுமே பேசி படைப்பை அதன் இலக்கில் கொண்டு சேர்க்கும் “நீர்“ சக்ரபாணியின் மகள், கதை முழுவதும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அனைத்து காரியங்களையும் செய்யும் “வலி” யின் கொறராமன் - இன்னும் இருக்கிறார்கள். எப்போதும் மனிதர்களை எழுதும் உங்கள் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது.

இதே மின்னல் வெட்டில்தான் படிமங்களையும் நீங்கள் கையாள்வது. பெரும் மாமரத்தில் ஏறி விளையாடும் அணில் கூட்டத்தைப் பார்க்கும் காட்சியில் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட “கால்” கதையின் திரைநாயகன் நினைத்துக் கொள்கிறான் -இந்த மரம் பட்டுப்போய் விட்டால் இவை என்ன செய்யும்?அன்பின் காரணமாக அடைக்கலமளித்த பெண்ணும், குழந்தையும் வல்லடியாய்ப் பிரிக்கப்பட்ட பின்,  மறுநாள் காலை டொமினிக் மீண்டு வந்து தன் முழவோடு எழுவது “ஆணாய்ப்பிறந்தான்“ கிராமத்தில், விசாரணையின்போது அடிபட்ட இடத்தையே மிருதுவாய் தடவிக் கொண்டிருக்கும் ரகோத்தமனின் விரல்கள் “வலி”யில், “நீர்” கதையில் குழந்தைகளின் கைகளில் மாறிமாறி சிக்கும் ஓணான், “பிரிவு” கதையில் லாவண்யா தொலைதூரக் கணவரிடம் தொலைபேசுகையில் பிய்த்துப் போடுவது கசப்புச்சுவையின் வடிவான வேம்பின் கொழுந்துகளை, - பவா, நீங்கள் கதை எழுதுவதில்லை. கதை சொல்லி. எழுத்தில் மின்னுவதும் கதை சொல்லலே.

தமிழ் இலக்கியத்தின் பரப்பில் வட்டார இலக்கிய இயல்புகளுக்கு தனி இடம் உண்டு. அவ்வகையில் நெல்லை, குமரி, தஞ்சை, கோவை, ஆற்காடு, மதுரை, சென்னை போன்ற வட்டாரங்களின் பின்னணியில் பல படைப்புகள் பெருமை சேர்த்திருக்கின்றன. இதுவரை திருவண்ணாமலை தன் தடத்தை அழுந்தப் பதித்ததில்லை எனும் குறை உங்களால் தீர்கிறது. ஆனாலும், அம்மண்ணின் விரிவையும், ஆழத்தையும் முழுவதுமாக அள்ளித்தரும் ஒரு பெரும் படைப்பு உங்கள் மூலம் நிகழக் காத்திருக்கிறது. நாங்கள் காத்திருக்கிறோம் . 

ஜா.ராஜகோபாலன்

Tuesday, February 7, 2017

தேன்

மலையாள மூலம் : பால் சக்காரியா
தமிழில் : பவாசெல்லதுரை
  


Monday, February 6, 2017

உப்பு கடலை குடித்த பூனை




கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்று கொங்கு மண்டலத்தின் ஒரு ஜமீன்தாரை நினைவுபடுத்தும் பெயர்தான் சிவக்குமாரின் சொந்தப் பெயர். ஆனால் இந்த பிம்பத்துக்கு முற்றிலும் நேர்எதிர் திசையில் எப்போதும் பயணித்த எழுத்தாளன் சிவா.

அடிப்படையில் சிவக்குமாரின் வாழ்வு மண்ணும், நீரும் சார்ந்த விவசாய வாழ்வுதான். செடி முருங்கை காய்த்துத் தொங்கும் கன்னிவாடி நிலப்பரப்பைவிட்டு நெட்டித் தள்ளிய வாழ்வை எதிர்கொள்ள அவன் தள்ளு வண்டியில் ஜவுளித்துணிகளைப் போட்டு தெருத்தெருவாய் சுற்றி அலைந்தவன். ஒரு வகையில் அவனுக்குப் பிடித்தமானதொரு ஜீவித துவக்கமும் அதுதான்.

அவன் அலைவுறுதலை பயணம் என என்னால் சுருக்கிவிட முடியாது. கையில் ஒரு துணிப்பைகூட இல்லாமல் கடைசி பஸ் பிடிப்பவன் அவன்.

அலைந்து திரிந்த அவ்வாழ்வின் ஒரு சிறு சிதறலுக்கு ‘காற்றாடை’ என தலைப்பிட்டு, அப்போது ‘இந்தியா டுடே’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவிட்டு தள்ளுவண்டியின் பின்னால் அதே உற்சாகத்தில் நடை போட்டவன் அவன்.

என்ன செய்வது?

சுயம்புலிங்கத்தை, ஏ.அய்யப்பனை, விக்கிரமாதித்யனை, கைலாஷ் சிவனை இப்படித்தான் அலையவிடுகிறது பசித்த வயிறு.

அவன் எதிர்பார்த்த மாதிரியே அக்கதைக்கு முதல் பரிசும், அவன் சகதோழன் பாஸ்கர்சக்தியின் கதைக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. தன் பெயரில் வங்கிக்கணக்கு கூட இல்லாத சிவகுமாருக்கு, ஐந்தாயிரம் ரூபாய்க்கான அந்தக் காசோலை ஏற்படுத்தியக் கிளர்ச்சி சொல்லில் அடங்காதது. சிவக்குமாரின் கண்கள் அகல விரிந்த அத்தருணத்தை கண்கள் மூடி படுத்திருக்கும் இப்போது நினைவுபடுத்த முயல்கிறேன்.

அக்கதையின் கவனிப்பிற்குப் பிறகே எழுத்தின்மீது சிவாவுக்கு ஆர்வமும், நம்பிக்கையும் துளிர்த்தது. எழுதி மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என்ற பொய் பிம்பத்தை அவன் கன்னிவாடியில் இருந்துகொண்டு நம்ப ஆரம்பித்தான்.

சிவாவின் எல்லாக் கதைளுமே அவனின் நினைவுகளின் சிந்தல்களே. படித்ததிலிருந்தோ, அறிந்ததிலிருந்தோ, ஒரு வரியும் கூட அவன் தன் கதைகளுக்காக எடுத்துக் கொண்டதில்லை. எல்லாவற்றையும் தன் வாழ்விலிருந்தும் அனுபவங்களிலிருந்துமே கதைகளாக்கியவன்.

சம்சாரிகளின் வலிகளை எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, சிவா மட்டும் அவர்களின் ஆழ்மனதில் ததும்பிக் கொண்டிருந்த அபிலாஷைகள், சிற்றின்ப வேட்கைகள் இவைகளைக் கண்டுபிடித்தான். திருவிழாக்களின் மீதும், மனிதக் கூடுகைகளிலும், அங்கே நிகழும் கேளிக்கைகள், சீட்டாட்டம், கரகாட்டகாரிகளின் கடக்க முடியாத புன்னகை, இவைகளை அவன் எழுத்துகள் கண்டுபிடித்து சுவீகரித்தன.

பெரும்வலி கொண்ட வாழ்வு சிவாவுடையது. போதிய கல்வி இல்லாமை, புருஷ லட்சணத்திற்கான தொடர் உத்யோகத் துறப்பு, வீடு தங்காமை, அவமானங்களை தொடர்ந்து, தானே சென்று வெகுமதிகளைப் போல வாங்கி வருதல், இதனூடே எழுதுதல் என சிவாவின் நாட்களை என்னால் மதிப்பிட முடியும். தாங்கமுடியாத அந்த வலியையும், தாங்கிக் கொண்ட தொடர் அவமானங்களையும் தான் அவன் தன் மொழியின்மீது மேற்பூச்சாக, தடவி வைத்திருந்த நகைச்சுவையால் கடந்தான்.

ஒரு ஆரம்பகால வாசகன் இத்தனை நகைச்சுவையானதா வாழ்க்கை? என வியந்து அங்கேயே நின்று கொண்டான். ஒரு நுட்பமான வாசகன் தன் கூரிய விரல் நகம் கொண்டு மேற்பூச்சைச் சுரண்டியெடுத்து அதன் ஆழத்து வலியைப் பருகினான்.

‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ ஒரு கதை மட்டுமே போதும்  க.சீ.சிவக்குமார் என்ற அசல் கலைஞனை நாம் அடையாளப்படுத்த, அல்லது அவனை தவறவிட்ட குற்றவுணர்வுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ள.

சம்பாதிப்பதற்கு வெளிநாட்டிற்குப் போயிருக்கும் மனைவியில்லாத வீட்டில் தானும், மகளும், தனிமையை துடைத்தெறிய அங்குமிங்கும் ஓடித் திரியும் ஒரு பூனை. இவற்றை வைத்து சிவா காவியத் தன்மையோடு ஒரு சிறுகதையைச் செதுக்கியிருப்பான். ஒவ்வொரு வரியும் ஒரு வாசகனை நகரவிடாமல் நிறுத்தும். வெளிநாட்டிற்குப் போயிருக்கும் அந்த மனைவி திரும்பி வந்துவிட மாட்டாளா என நம்மை ஏங்க வைக்கும்.

இன்று காலை எனக்கும், சிவாவுக்குமான வாசகர் பாலா தான்சான்யாவிலிருந்து பேசினார்,

என் மனதில் எப்போதும் சிவா ஒரு கேணக்கிறுக்கந்தான் பவா. அப்போதுதான் மழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சு மாதிரி சுவரோரமாக ஒதுங்கி நின்றுகொள்பவன்.

படைப்பாளி என்ற கர்வம் எப்போதும் அவனிடம் இருந்ததில்லை. அச்சலுகையை மேற்கொண்டு மாபெரும் சபைதனில் ஒருபோதும் நடந்ததில்லை. சபைக்கு வெளியே ஏதாவது ஒரு மரத்தடியில் புகையும் சிகரெட்டோடு நின்று அச்சபையைப் பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் மனமே இறுதிவரை அவனுக்கு வாய்த்திருந்தது.

‘கன்னிவாடி’ என்ற தலைப்பில் தமிழினி கொண்டு வந்ததுதான் சிவக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

அது ஏதோ காரணத்தால் தமிழிலக்கிய படைப்பாளிகளாலும், பத்திரிகைகளாலும் புறக்கணிக்கப்பட்டது. அவர்கள் ஒரே நேரத்தில் படைப்பையும், படைப்பாளியையும் புறந்தள்ளினார்கள். அவன் மிக சோர்வுற்றிருப்பான் என என் பொது புத்தியிலிருந்து அவதானித்தேன். மாறாக அவன் பெரும் உற்சாகமடைந்திருந்தான். அக்காலத்தில்தான் ஆதிமங்கலத்து விஷேசங்கள், குணச்சித்திரங்கள், என்றும் நன்மைகள், நீல வானம் இல்லாத ஊரே இல்லை என எழுதிக் குவித்தான்.

அவன் புத்தகப் பக்கங்களை ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்களை, அசல் மனிதர்களைக் கொண்டு நிரப்பினான்.

அப்போதுகூட தமிழ் இலக்கிய பிராண்டட் முகம் எதுவும் சிவாவைத் திரும்பிப் பார்த்தால் எனக்கு நினைவில்லை.

தமிழில் ஜி. நாகராஜனுக்குப் பின்னும், மலையாளத்தில்
ஏ. அய்யப்பனுக்குப் பின்னும், சிவக்குமார் அளவுக்கு தன் சகப்படைப்பாளிகளாலும் நண்பர்களாலும் பொது வெளிகளில் அவமானப்படுத்தப்பட்ட படைப்பாளி க.சீ.சிவக்குமார் மட்டுமே. அவற்றைத் தன் உடலாலும் படைப்பாலும் பகடிகளாக மாற்றி, சிரித்துத் திரிந்த படைப்பாளி அநேகமாக சிவக்குமார் மட்டுந்தான்.

யாருக்குமே இல்லாத சில பிரத்யேக குணாம்சங்கள் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. ஒரு வெள்ளைக்கார துரையின் பங்களாவைப் பார்த்துக்கொண்ட தோட்டக்காரளான தன் மாமனாரை அவன் நண்பர்களிடம் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ என்றே அறிமுகப்படுத்துவான். மாமனார் என்ற மனைவியின் அப்பாமீது தமிழ்ச் சமூகம் ஏற்றி வைத்திருக்கிற பிம்பத்தைக் கலைத்து வேடிக்கையாக்குவது,
அதுதானே சிவா உன் எழுத்திலும் மிளிர்ந்தது. ஒரு தெரு நாயை க.சீ.சிவக்குமார் அளவிற்கு அறிமுகப்படுத்திய எழுத்து தமிழில் வேறில்லை.

‘‘ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் அச்சொற்றொடர் ஒன்று போதும் அக்கதைக்கு.

ஆர். சண்முக சுந்தரம் கூட நாகம்மாளின் துயரத்தை, அதன் மீறலை தன் படைப்பில் முன் வைத்தார்.

சிவக்குமார் அதையும் தாண்டிய மனித மனதின் ஏங்குதல்களை, அலைவுறுதல்களை, நிராகரிப்புகளை பகடி மாதிரி சொல்லி நம்மை நெக்குருக்கினான். நரம்பு ஊசிப் போடுகையில் டாக்டர் குழந்தை வாயில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து சப்பு கொட்ட வைப்பது போல அது. ஆனால் போட்டு முடித்த அடுத்த கணம் வலி மெல்ல உடலெல்லாம் பரவுமே அப்படியான ஒன்றுதான் சிவாவின் எழுத்து.

ஒரு எழுத்தாளனை நீங்கள் கொல்ல நினைத்தால் அல்லது அவனை எழுதவிடாமல் செய்ய வேண்டுமென நினைத்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். அவனை இடம்பெயர்த்து விடுங்கள் போதும்.

கன்னிவாடியில் மையம் கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி திருவிழா பார்த்து, கரகாட்டக்காரிகளை வம்புக்கிழுத்து, கூத்தாடிகளோடு குந்திக் குடித்து, செடி முருங்கை மரத்தடியில் கள் குடித்து வாழ்ந்து வந்த ஒரு எழுத்தாளனை, வாழ்வு பெங்களூர் என்ற மாநகரத்திற்குக் கைபிடித்து அழைத்துப் போகிறது. அது ஒரு அபார்ட்மெண்ட் வீடு. மூன்று வேளை சாப்பாடு, இன்டெர்நெட் வசதி என அந்த லௌகீகப் பிசாசு தன் கையிலிருந்த மாய வலைகளை அப்படைப்பாளியின் மீது வீசியது. அறுத்தெறிய முடியாத இறுக்கத்தோடு அது அவனை மரணப்பரியந்தம் சுற்றிக்கொண்டது.

தினம் தாமிரபரணி தண்ணீர் குடித்த வண்ணநிலவனை, கோவில்பட்டி வெய்யிலருந்திய ப.செயப்பிரகாசத்தை, நீங்கள் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தீர்களே என்ன ஆனது?

ஒரு எஸ்தரும், ஒரு ஜெருசலேமும் அதன் பிறகு அவர்களிடமிருந்து முகிழவேயில்லை. ஒரு படைப்பாளியின் நிலப்பரப்பும், வாழ்விடமும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அவன் எழுத்தின் வழி கசிவதை நீங்கள் ஏன் எப்போதும் கவனிக்கத் தவறுகிறீர்கள்?

அதன் பிறகும் அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு மகத்தான படைப்புகள் பீறிடுவது மாதிரித் தெரியலாம் அது, சொந்த ஆற்றில் நீந்தித் திரிந்த மீனைத் தூக்கி தரையில் வீசும்போது இன்னும் கொஞ்சம் உயிர்ப்போடு துள்ளி நம்மை ஏமாற்றுமே அது. அடங்குதலுக்கு முந்தைய ஆர்ப்பரிப்பு.

என் கணிப்பில் தன் வாழ்வின் மொத்தத்தையும் படைப்பிலக்கியத்தில் ‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ என்ற தன் மொத்தச் சிறுகதை தொகுப்பிலும், மற்றவற்றைத் தன் தொடர் அனுபவப் பகிர்பிலும் அவன் எழுதி நிறைவு செய்திருக்கிறான்.

எல்லா மரணங்களுமே புதிரானவைதான் சிவா, மரணமே ஒரு புதிர்தான். நேற்று காலையிலிருந்து ஒரு கவிஞனை ஒரு எழுத்தாளனை ஒரு நண்பனை, உன் தொலைபேசியில் அழைத்திருக்கிறாய். யாரையும் வழக்கம்போல் தொலைபேசியை அணைத்து விடாதே என கெஞ்சியிருக்கிறாய்!

எதையோ சொல்ல தடுமாறியிருக்கிறாய் நண்பா. ஜான் ஆப்ரகாம் என்ற கலகக்காரனும் மாடியிலிருந்து இதே தடுமாற்றத்தோடுதான் மரிப்பதற்கு தரையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.

உன்னை மாநகரச் சுடுகாட்டின் மின் அடுப்பிற்கு உள்நுழைக்காமல், கன்னிவாடியின் சொந்த மண்ணில் புதைக்கப் போகிறோம்.


முன்கூட்டியே உன் பேனாவை மகள் மகாஸ்வேதாவின் கைகளுக்கு மாற்றியிருக்கிறாய். போய்வா நண்பா!