Showing posts with label வம்சி 2010 வெளியீடுகள். Show all posts
Showing posts with label வம்சி 2010 வெளியீடுகள். Show all posts

Monday, March 8, 2010

திருவண்ணாமலையில் வம்சி புத்தக வெளியீட்டு விழா




திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக இரண்டு நாட்கள் புத்தக வெளியீட்டு விழா
வம்சி புக்ஸ் பதிப்பகத்தின் சார்பாக 5 புது புத்தகங்களின் வெளியீட்டு விழா 13.03.2010 அன்று மாலை 6.00 மணிக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளியில் நடைபெற உள்ளது. விழாவினை மாவட்ட ஆட்சி தலைவர் மு. இராஜேந்தின் ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்து உரையாற்றுகிறார்கள். விழாவின் முதல் அமர்வாக மலையாள மொழியில் கே.ஆர். மீரா அவர்கள் எழுதி தமிழில் கே.வி. ஷைலஜா மொழிபெயர்த்த " சூர்ப்பனகை" என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் ஜி. திலகவதி ஐ.பி.எஸ். காவல் துறை கூடுதல் தலைவர் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் சந்திரபோஸ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கற்றது தமிழ் பட இயக்குனர் ராம் உரையாற்றுகிறார்.

இரண்டாவது அமர்வாக பின்னி மோசஸின் ” நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து” என்ற என்ற கவிதை தொகுப்பை வெண்ணிலா கபடி குழு இயக்குனர். சுசீந்திரன் வெளியீட, எழுத்தாளர் பவாசெல்லதுரை பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து எழுத்தாளர் பாஸ்கர் சக்தி உரையாற்றுகிறார்.

மூன்றாவது அமர்வாக அய்யனார் விஸ்வநாத்தின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்படுகின்றது. மூன்று புத்தகங்களையும் கவிஞர் சமயவேல் வெளியிடுகிறார். ”உரையாடலினி” என்ற சிறுகதை தொகுப்பை நம் தினமதி நாளிதழின் ஆசிரியர் பி. நடராஜன் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து இயக்குனர். சந்திரா உரையாற்றுகிறார். தனிமையின் இசை” என்ற கவிதை தொகுப்பை திரு. வி. ரமேஷ் பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து கவிஞர். தமிழ்நதி உரையாற்றுகிறார். ”நானிலும் நுழையும் வெளிச்சம்” என்ற கவிதை தொகுப்பை புகைப்பட கலைஞன் பினுபாஸ்கர் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். புத்தகம் குறித்து எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகிறார்கள். சி. பலராமன் நன்றிகூற முதல் நாள் விழா நிறைவு பெறுகிறது.

இரண்டாவது நாள் 14.03.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில் 4 புத்தகங்களின் வெளியீட்டு விழா அதே இடத்தில் நடைபெறுகிறது. விழாவினை திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி எம்.எல்.ஏ. துவக்கிவைக்கிறார். முதல் அமர்வாக மலையாள மொழியில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதி தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ”ஒற்றைக் கதவு” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட, ஏ.எல்.சி.யின் பொது செயலாளர் அறிவர். ரிச்சாட் பாஸ்கரன் பெற்றுக்கொள்கிறார்.
இரண்டாவது அமர்வாக பி.ஜே. அமலதாஸ் தொகுத்த ”இன்றும் வாழும் தெருக்கூத்து” என்ற புத்தகத்தை திரைப்பட கலைஞர் நாசர் வெளியிட கவிஞர். இளையபாரதி பெற்றுக்கொள்கிறார். புத்தகம் குறித்து முனைவர் பார்திபராஜா உரையாற்றுகிறார்.

மூன்றாவது அமர்வாக கே.ஸ்டாலினின் ”பாழ் மண்டபம் ஒன்றின் வரைபடம்” என்ற கவிதை தொகுப்பை கவிஞர். ரவி சுப்ரமணியன் வெளியிட, கவிஞர் அய்யப்ப மாதவன் பெற்றுக்கொள்கிறார்.

நான்கவது அமர்வாக வெ. சுப்ரமணியபாரதியின் ”வெ. சுப்ரமணிய பாரதி கதைகள்” என்ற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் நா. முருகேச பாண்டியன் வெளியிட உயிர்எழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில் பெற்றுக்கொள்கிறார்.
நிறைவாக கே. முருகன் நன்றியுரை கூற விழா நிறைவு பெறுகிறது.

Wednesday, December 23, 2009

புதுப்படைப்புகளுக்கிடையே...

























புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

எஸ். லட்சுமண பெருமாள், உதயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ சிவக்குமார் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பும்


இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, இந்திய பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களையும், உணவையும் குடியையும் கொண்டாடங்களையும் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ரெங்கயா முருகனும், ஹரி சரவணணும் சேர்ந்து "அனுபவங்களின் நிழல் பாதை" என்ற தலைப்பில் ஒரு காத்திரமான தொகுப்பையும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளிலுருந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிற நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளிலான சிறுகதைகளை பாவண்ணன், இளம்பாரதி, டாக்டர் ரகுராம், இறையடியான், நஞ்சுண்டன், கே.வி. ஜெயஸ்ரீ இவர்களோடு சேர்ந்து தொகுப்பாசிரியர் என்ற பொறுப்பை சுமந்துகொண்ட ஷைலஜா மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டுடிருக்கிறாள். தொகுப்பின் பெயர் "தென்னிந்திய சிறுகதைகள்". இத்தொகுப்பிற்கான முன்னுரைக்காக பிரபஞ்சனுக்கு கதைகள் முடிய முடிய அனுப்பப்படுக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவள் இயக்கத்தை இன்னமும் துரிதப்படுத்துகிறது.

மிகத்தீவிரமாக இயங்கி திடீரென அதிலிருந்து அறுபட்டு லௌகீக வாழ்வில் பொறுத்திக்கொள்ள முயன்று, தோல்வியுற்று மீண்டும் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்த தன் பழைய நாட்களை விட்ட இடத்திலிருந்த தொடரும் கலைஞர்கள் முன்னிலும் உக்கிரமாக இயங்குவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கலைஞன் பி.ஜே.அமலதாஸ். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டம் மிகுந்த வாழ்வில் அமலதாசுக்கும் ஒரு சின்ன இடமுண்டு. கூத்து பற்றிய ஆழமான கட்டுரைகளும் அதன் உள்ளே புகுந்திருக்கும் சாதீயம் குறித்தும் ந.முத்துசாமி போன்றவர்களின் மேலாட்டமான முன்னிருத்தல்கள் என விரியும் ”இன்றும் வாழும் தெருக்கூத்து” தமிழுக்கு மிக மிக புதிய வரவு.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

”கொமாலா” , ”பெட்ரோபரோமா” நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர். இப்பெயரிலேயே மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானத்தால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இன்னமும் ஓயாமல் தொடர்கிறது. இன்றைய நடுத்தர வாழ்வின் பெரும் சிக்கல் மிகுந்த துயரம் குறித்தும், யார் மீதும் யாருக்கும் அக்கறையற்ற வாழ்வு குறித்தும் கடந்த பத்தாண்டுகளில் இப்படியொரு கதையை நான் வாசித்தது இல்லை. சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் 14 கதைகளின் மொழிபெயர்ப்போடு கே.வி. ஜெயஸ்ரீ தன் பகலையும் இரவையும் கரைத்துக்கொண்டு இருப்பது பெரும் கனவுலகை முன் நிறுத்துகிறது.

கவிதை தொகுப்புகளாக அளவில் சின்ன சின்னதாக அழகான ஆறேழு தொகுப்புகள் வருகின்றன. கே.ஸ்டாலின், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வநாத், தி.பரமேஸ்வரி, வெ. நெடுஞ்செழியன் என்று இக்கவிஞர்கள் தங்கள் புதிய வரிகளோடு புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து செயலாற்றுவது பிடித்திருக்கிறது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.


-நாளை பேசுகிறேன்.