Tuesday, April 28, 2009

மதிப்புரை - 3

பவாசெல்லதுரையின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை தொகுப்பிற்காக

முடிவற்ற வசீகர வெளியில் வலி உணரும் தருணங்கள் -உதயசங்கர்.

கலை ஒரு வசீகரம், கலை ஒரு வலி மிக்க வேதனை, கலை ஒரு துயர் மிகுந்த பாடல். கலை ஒரு நம்பிக்கைக் கீற்று. கலை ஒரு புலம்பல். கலை வாழ்வின் உயிர்த்துடிப்பு. கலை ஒரு விந்தைவெளி. கலை ஒரு இன்பம். கலை ஒரு மாயஜாலம். கலை தனக்கான இரத்த பலிகளைத் தானே வேட்டையாடிக் கொள்ளும் காட்டுத் தெய்வம். கலை உக்கிரம் மிகுந்த அக்னிக் குண்டம். கலைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவர்களின் பட்டியலில் இதோ இன்னுமொரு புதிய வரவு. ஒரு புதிய கலைத்திறப்பாய் நம் முன் விரிந்து படபடக்கிறது üநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைý பவாசெல்லதுரையின் சிறுகதைத் தொகுப்பு.
புத்தகத்தை விரித்தவுடன் கல்லும் முள்ளும் கீறிப் பிறாண்டி ரத்தம் துளிர்க்கும் திரேகம். எதையும் ஊடுருவி உள்ளொளி காணும் தீர்க்கமிக்க கண்கள். தீராத வாழ்க்கையை நடந்தே தீர்க்க முளைத்த உறுதியான கால்கள். எதையும் எதிர்கொள்ள, எதையும் புரட்டிப்போடும் வல்லமை கொண்ட கவிச்சி வாடை வீசும் கைகள். பச்சை மணம் கமழும் முறுக்கேறிய உறுதியான உடலோடு மரணத்தையும் நேர்கொள்ளும் தைரியத்துடன் நாம் சற்றும் எதிர்பாராத தருணத்தில் நம்முன்னே வந்து நிற்கும் ஜப்பான் கிழவன் இல்லை பச்சை இருளன் இல்லை பொட்டு இருளன் இல்லை பவாசெல்லதுரை.

அன்றாடத்தின் செயற்கை நீருற்றின் செயற்கையான சுழிப்புகளோடு ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் கணங்கள் திகைத்து நிற்கின்றன. மூச்சுத் திணறுகிறது. உடல் பதறுகிறது. நா நடுங்க எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் நிலைகுலைந்து யார் நீ என்று குழளுகிறது வாய். போலியான இந்த நாகரீக வாழ்க்கையின் அந்தப் பக்கத்திலிருந்து தன் முரட்டுக்கைகளை நீட்டுகிறான். தப்பிக்கவே முடியாத முட்டுச்சந்துக்குள் மாட்டிக் கொண்ட நாம் சந்தேகத்துடனும் பயத்துடனும் தயங்கித் தயங்கி நம் கைகளை நீட்டித் தொடுகிறோம். தொட்ட கணத்திலேயே நம் வாழ்வு மாறி விடுகிறது. வாழ்க்கை பற்றிய நம்மதிப்பீடுகள் சுக்குநூறாகித் தகர்ந்து விடுகின்றன. ரசவாதம் நிகழ்ந்தது போல காட்டின் நடுவே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கிறோம். நமக்குமுன்னால் ஜப்பான் கிழவன் போய்க் கொண்டிருக்கிறான் திப்பக்காட்டிற்குள். அவனுடைய வேட்டையின் தந்திரங்களை காடு முறியடிக்கிறது. தற்காலிகமாய் தோல்வியடைந்த அவன் ஸ்தோத்திரப் பாடல்களுக்குள் அடைக்கலம் புகுவதற்குப் புறப்படுகிறான். ஆனால் இன்னமும் வேட்டையின் கண்ணிகள் அவன் நெஞ்சில் பத்திரமாகவே இருக்கின்றன. திரும்பி வரும் பெரும் நம்பிக்கையோடு.

கண் மூடித்திறப்பதற்குள் காசிரிக்கா நாரினால் கட்டப்பட்ட திருட்டு இருளன், விசித்திரங்களால் அடுக்கப்பட்ட பஞ்சத்தினால் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும் அந்த ஊரின் பாறை வீட்டில் மரணத்தின் கடிவாயில் கிடக்கிறான். அனுக்குமலை காட்டின் பச்சிலைச் சாற்றினால் உடல் ஊதிச் செத்துப்போகக் காத்திருக்கிறான். பஞ்சத்தினால் வன்மமும், குரோதமும் கொலைவெறியும் ஏறிய மனிதர்கள் ஓரிரவு மழையினால் கருணை நிரம்பி வழிகிறார்கள். மழை கருணையைப் பொழிகிறது. பவாசெல்லதுரையின் கலை நம் உயிர்வரை பாய்கிறது நமக்குள் தூர்ந்து போன ஊற்றுக்கண்ணைப் பொத்துக் கொண்டு கருணை பொங்குகிறது.

கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சை இருளன். நரியின் பற்களையே ரம்பமாக்கி கூண்டை உடைத்து ஜமீன் மாளிகையிலிருந்த மரகதப்பச்சை ஒளி பின் தொடர பாய்ந்து செல்கிறான் கோட்டங்கல் குன்றை நோக்கி அதிகாரங்களுக்கு எதிரான கலகக்குரல் எழுப்புகிறான்.
எல்லோரிடமும் மனசின் ஒரு நிலவறையில் கருமியின் கைக்காசு போல பத்திரப்படுத்திய ஈரமும் கதகதப்பும் நிரம்பிய ஒரு ராஜாம்பாளின் நினைவுகள் இருக்கும். மனசு துயருரும் போதெல்லாம் அந்த நினைவுகளை எடுத்துப்போர்த்தி மீண்டும் வாழ்வை எதிர்கொள்ளும் வலிமை பெறவைக்கும். ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாளின் நினைவுகள், ரயில்வண்டி விளையாட்டில் பின்னால் கொத்தாய் சேர்த்துப்பிடித்த உணர்வில் ததும்பிக் கொண்டிருக்கிறது. அங்கே ராஜாம்பாள் இல்லை. ஆனால் அவள் சேர்த்துப்பிடித்து கசக்கிய சட்டையின் கசங்கல் இன்னும் இருக்கிறது. ராஜாம்பாளும் தோழர்களும் நதியின் அக்கரையிலுள்ள காட்டின் முகப்பிலிருந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஏரோதின் வாளின் கூர்மை மேரியின் எத்தனை குழந்தைகளைப் பலி கொண்டு விடுகிறதுஙு கன்னிமரியாளின் பிரசவவலியினூடாக தன் குழந்தையையும் காப்பாற்றி ஆசீர்வதிக்க ரட்சகர்களைத் தேடுகிறாள். வழிகாட்டும் நட்சத்திரமும் வழிமறந்து மறைந்து விடும் போது துயருற்ற மேரி கன்னிமரியாளுக்குச் சுகப்பிரசவம் என்ற சேதிகேட்டபோதுதான் நம்பிக்கை கொள்கிறாள். பரிதவித்து வலியும் வேதனையும் இறைஞ்சுதலுமான மேரி நம்மையும் ஆட்கொண்டு விடுகிறாள்.

எத்தனையோ தலைமுறைகளாய் யாரும் காணாத மர்மமான சிங்காரக்குளம் ஒரு குறிலிடாகிறது. குளத்தில் விழுந்து இறந்து போன மல்லிகா தன் மரணத்தின் மூலம் ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்துகிறாள். அந்த ஆத்திரம், கோபம், பயம், இயலாமை சிங்காரக்குளத்தை வெவ்வேறு தளங்களில் வாகிக்கத் தூண்டுகிறது.

கலையின் உயிர் எது என்றறிந்த கலைஞனான கோணலூர் ஏழுமலை நவீன வாழ்க்கையின் கோரநகங்களில் சிக்கிச் சிதறுண்டு போகிறான். வாழ்க்கை அவனை பெங்களூர் மார்க்கெட்டில் மூட்டை சுமக்கச் சொல்கிறது. அவனை அவமானப்படுத்துகிறது. அவனுடைய கலையை இழிவு படுத்துகிறது. கோணலூர் ஏழுமலை சவால் விடுகிறான். அடங்க மறுக்கிறான். கலகம் செய்கிறான், மீறலின் துடிப்பு கோணலூர் ஏழுமலையை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கிறது. இரத்தபலி கேட்கும் வாழ்க்கைக்கு எதிராக போராடத்தயாராகிறான் கோணலூர் ஏழுமலை.
üமண்டித்தெரு பரோட்டா சால்னாýவில் தன் வாழ்வை கடைத்தேற்றும் ஈஸ்வர் தாயின் அரவணைப்பறியாமல் தந்தையின் லட்சியச் சுமையை தன்மீது ஏற்றிக்கொண்டு நிராதரவான நிலைமையில் அலையும் ஈஸ்வரன் வாழ்வின் விசித்திரமான இன்னொரு பக்கம்.

தன் உடலை அர்ப்பணித்து, எந்த ஜாமத்திலும் யாருடனும் சைக்கிளின் பின்னால் ஏறிச் சுற்றும் சுதந்திரத்தை விஜயாவின் சத்தமான சிரிப்பின் பின்னாலுள்ள வாழ்வின் துயரம். உறவுகளின் போலிமையை முகங்களிலும், வாழ்வின் அவலத்தை வேறு வேறு மனிதர்களிலும் எதிர்கொண்டு திகைத்து நிற்கிறோம். பொங்கிவரும் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறோம். நீண்ட பெருமூச்சு விடுகிறோம்.

கூர்ந்த வாசிப்பைக் கோரும் பவாசெல்லதுரையின் கதைகள் தமிழிலக்கியத்தின் பரப்பை இன்னும் விரிவாக்கி இருக்கின்றன. முதல்தொகுப்பு என்று யாராலும் சொல்லமுடியாதபடிக்கு கதைகளை தேர்ந்த சிற்பியைப்போல செதுக்கியிருக்கிறார். மௌனமான பல இடங்களில் கலை ஆட்சி செய்கிறது. புனைவின் உச்சத்தையும், ஒரு புதிய யதார்த்தவாதத்தையும் இவருடைய கதைகள் கட்டமைக்கின்றன.

அனுபவங்களின் சாரம் ஏறிய முதிர்ந்த மொழிநடை, அடர்த்தியான இந்த வாழ்வைச் சொல்ல அடர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல ஒற்றை வரிகளில் வாழ்வின் தரிசனமும் கவித்துவமும் பொங்கி வழிகின்றன. வாசிக்கும் போது தான் அதை உணர்ந்து அனுபவிக்க முடியும்.

தமிழ்ச் சிறுகதைப்பரப்பில் இது ஒரு முக்கியப் பதிவு. ஒரு புதிய கொடை. உலகத்தின் எந்தமொழியிலும் இந்தத் தொகுப்பிலிருந்து குறைந்தது நான்கு கதைகளையாவது மொழிபெயர்க்க முடியும். அதற்கான வலிமையும் கலை உச்சமும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. பவாசெல்லதுரை என்ற கலைஞனுக்கு கலை கைவரப்பெற்றுள்ளது. எனவே தான் தொகுப்பை வாசிக்கும் போது நம்முடனேயே இருக்கிறார் பவாசெல்லதுரை அழுகையும் கோபமும் கண்ணீரும் ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது. வாசித்து முடிக்கும் போது பித்துப்பிடித்த நிலையில் நீண்ட பெருமூச்சுகள் விடுகிறோம். நாம் விடும் ஒவ்வொரு பெருமூச்சும் பவாசெல்லதுரை என்ற ஜப்பான் கிழவன் என்ற பச்சை இருளன் மீது படும்போது அவர்கள் சிரிக்கிறார்கள். அது பைத்தியக்காரனின் வசீகரமான சிரிப்பு. கலையும் மர்மமாய் நம்மை நோக்கிச் சிரிக்கிறது.

Sunday, April 19, 2009

மண்டித்தெரு பரோட்டா சால்னா

கேட்க நினைத்து, கேட்க நினைத்து இருபத்தாறு வருடங்கள் போய்விட்டன, அப்பா! கேட்க முடியாத கேள்விகளைத்தான் நோட்டில் எழுதி வைத்திருக்கிறேன். அவைகளைதான் கவிதைகள் என்கின்றனர் நண்பர்கள். சுய புலம்பல்கள் என்கின்றனர் இலக்கிய நண்பர்கள். எனக்கு ஏதப்பா கவிதையும், கதையும்? எனக்குச் சொந்தமானதெல்லாம் ஒரே கவிதையும் ஒரே கதையும்தானே! இரைச்சலால் கேட்டு அடைந்து போயிருக்கும் என் காதுகளுக்கும், சோடியம் வேப்பர் வெளிச்சத்திலேயே இத்தனை வருஷமும் தூங்கிப் பழக்கப்பட்ட என் கண்களுக்கும், தூக்கம் மிகுந்த கண்களைக் கசக்கி முன் ஜாமத்திலேயே மண்டிக்காரர்களுக்கு "டீ" வாங்கிவர ஓடிக் கொண்டிருந்தவனுக்கு எப்படி அப்பா கதையும், கவிதையும் சாத்தியம்?

உன் அன்பின் வன்முறைதான் இந்த மாதிரியான நிறைய்ய கேள்விகளைக் கேட்க முடியாதவனாக்கி விட்டது அப்பா. பாசம், ஆறுதல், கட்டுப்பாடு இப்படி நிறைய வார்த்தைகளால் நீ போட்டு வைத்திருந்த இரும்புக் கம்பிவேலிகளுக்குப் பின்னால், புது மழையில் பூத்த சிறு பூக்களைக்கூட நான் நின்று கவனித்ததில்லை. எனக்கு ஸ்கூலுக்கு நேரமாகி விடும். அந்தத்தேவடியாவுக்கு எதிரா நான் படிச்சி கலக்டராவணும். இதையெல்லாம் அந்தச் சின்னஞ்சிறிய பூக்களின் மென்மையும் அழகும் பாதிக்கலாம், இல்லையா அப்பா!

ஒரே ஒரு கேள்விதான் அப்பா எனக்கு.

கெட்ட வார்த்தைகளற்ற அம்மாவின் பெயரை ஒரு முறை நீ சொல்லி நான் கேட்க வேண்டும். சொல், எளிமையாக.... நிதானமாக. என் மீதான உன் பாச வன்முறையை எல்லாம் தூரத் துடைந்தெறிந்து விட்டு,

மூன்று மாதக் குழந்தையாய்,அம்மாவின் இளஞ்சூட்டில் ஒட்டிக்கிடந்து அவள் கவுச்சி யேறிய உடலிது.உன்னையும், என்னையும் ஒரே நிமிடத்தில் உதறிஎறிந்தாளா?
இதை ஒரு குற்றமாக, கையாலாகாத்தனத்திற்காகவெல்லாம் கேட்கவில்லை. தாய்ப்பறவை தன் செட்டைக்குள் தன் குஞ்சை வெதுவெதுப்போடு வைத்திருந்ததை விடவும் பாதுகாப்பாக, நீ என்னை வைத்திருந்தாய். நீ பறக்கச் சொன்னபோது நான் பறந்தேன். நீ சொன்ன மரக்கிளைகளில் மட்டும் பழருசி அறிந்தேன்.

உடன் வேலை பார்ப்பவர்கள் இசை பற்றி பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். இசை மனிதனை மெய்மறக்க வைக்கிறது என்கிறார்கள். நீ தூங்கிக் கொண்டிருந்த ஒரு பின்னரவில் நானும் மிக ரகசியமாய் இசை கேட்டேன் அப்பா.

கடா முடா சத்தங்களும் நவுரு, நவுரு என்கிற இரைச்சலும் இடைஇடையே மாடுகளின் குரலும், வண்டிகளின் ஹாரன் ஒலியும்... முடியலை அப்பா, இதற்கு மேல் போக தூக்கமும், துக்கமும் அழுத்துகிறது. முப்பத்தி மூன்று வருஷமாக காது இச்சத்தத்திற்குப் பழக்கப்பட்டு பழுத்துப்போயிருக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட சத்தங்கள்தான் இசையாம்! நான் கேட்க நேரும் சத்தங்கள் எப்போது ஒழுங்குப்படுத்தப்பட்டன?

ஸ்கூலில் படிக்கிறபோது எந்த வாத்தியாரும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்ததில்லை.
"உங்க வீடு எங்க இருக்கு?"

எல்லோரும் தெரு சொல்வார்கள். சிலர் வீட்டின் எண் சொல்வார்கள். இன்னும் சிலர் வீட்டுக்குப் பேர்கூடச் சொன்னார்கள். நான் மட்டும்தான் எழுந்து "மண்டித்தெரு" என்பேன்.

"மண்டித்தெருவுல எங்க? "

இந்த கேள்வி என்மீது எறியப்படும் தீஜ்வாலை. என்ன சொல்வது? மணி முதலியார் மண்டி, ராஜமாணிக்கம் கமிஷன் மண்டி, சீத்தாபதி நாய்க்கரின் நெல்தரகு மண்டி என நீளும் என் பட்டியலில் எந்த மண்டி சீக்கிரம் மூடுவார்களோ அதுதான் அன்றைய இரவு என் வசிப்பிடம். அசைவற்றிருந்த அந்த கணங்கள் நினைவிலிருந்து அகலாதவைகள் அப்பா. தொண்டை அடைக்க, உடல் நடுங்க மொய்க்கும் பார்வைகளைத் தவிர்த்து, சொல்லி முடித்து ஒரு பிணம் மாதிரி...

எல்லோரும் கேட்டார்கள். உன் அப்பா இல்லாத நீ சாத்தியமே இல்லையா?

சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சம் விழும் மண்டிகளின் வராண்டாக்களில் நான் படித்து முடிக்கிற வரை என்றைக்கு நீ தூங்கி இருக்கிறாய்? என் விழிப்பிற்குப் பிறகு ஒருநாளும் நீ எழுந்ததில்லை, ஒரு வீட்டைப் பாதுகாக்கும் கூர்காவின் கூர்மையை விட நுட்பமானது உன் விழிப்பு. வரம் வேண்டும் ஒரு முனிவனின் தவம் போல எனக்காக நீ காத்திருந்தாய்.

குளிரில், புழுக்கத்தில், நடத்திக் கூட்டிப்போய் டீயும், எப்போதாவது பன்னும் வாங்கித் தந்து என் விடிதல்களை உற்சாகப்படுத்திய கூட்டாளி நீதான் அப்பா.

இருட்டு பிரியும் முன்பே, ஒரு மைலுக்கும் அப்பால் இருக்கிற தாமரைக்குளத்துக்குக் கூட்டிப் போய், குளிர்ந்த தண்ணீரில் என்னை முக்கி, சோப்பு போட்டு உடம்பு கழுவி நூலிழைத் துண்டால் துவட்டிவிட்டதெல்லாம் எந்த அப்பனும் செய்யாததுதான். பத்தாவது படிக்கிறவரைகூட கால் சட்டையோடு நிற்கவைத்து குளிப்பாட்டிவிடுவாய். ஒரு நாளும் அடுத்த படியில் இறங்கவிடவோ நீந்தத் துடித்த என் சிறகுகளையோ நீ கவனித்ததேயில்லை. எனக்கு ஏதாவதொன்று ஆகிவிட்டால் உனக்கு யார் இருக்கிறார்கள் அப்பா? இதைத்தான் அப்பா அன்பின் வன்முறை என நான் வார்த்தைப்படுத்தி இருக்கின்றேன்.

முதல்முதலில் நாம் வீடு என்று வாடகைக்கு வந்தது என் பிரைவேட் ஸ்கூல் வாத்தியார் வேலைக்குப் பிறகுதானே. என் அவஸ்தையின் உச்சம், நான்கு சுவர்களாலான ஒரு அறையில் படுப்பதென்பது. ட்யூப் லைட்டும், ஸிக்ஸ்டி வாட்ஸ் பல்பும் போட்டுப் படுத்தால்கூடத் தூக்கம் வர மறுக்கிறது. சோடியம் வேப்பருக்குப் பழகிய தூக்கம். அதைவிட புது அனுபவம் கக்கூஸில் உட்கார்ந்து வெளிக்கிருப்பது. ஸ்கூலில், காலேஜில் மட்டும் பார்த்து, எப்போதாவது ஆசையாய்ப்போனது. தினம் தினம் அதில்தான் எனும்போது பரவசமாகிறது. பன்னிரண்டுக்கும் இரண்டுக்குமான இரவின் இடைவெளியில் தானே அப்பா வழக்கமாக நாம் சேர்ந்து போவோம். வெங்காயத்தோல்களும், அழுகிய காய்கறியும், புடைத்த மிளகாய் வத்தலில் மீந்த காம்புகளும் மிதக்கும் முனிசிபாலிட்டி கால்வாயில் கால்களை அகட்டி...

இரவின் அடர்த்திகளானாலும் அப்பாவும் மகனும் எதிர் எதிர் கால்வாய்களில் உட்கார்ந்து கழிப்பதென்பது கல்லூரிப் படிக்கிற எந்தப் பையனையும் நடுங்க வைத்துவிடும்தானே அப்பா?

அதைவிட அவஸ்தை, இதே மாதிரி நீயும் கால்களை அகட்டி எதிர்க் கால்வாயில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே கழிப்பது. இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகிறவர்களைப் பார்த்து பார்த்து எழுந்து முகத்தைத் திருப்பி நிற்பது. நிழல்கள் மறைகிற வரை காத்திருப்பது.

இறந்த கால அவமானங்களால் நத்தை கூட்டுக்குள்ளே உடலை இழுத்துக்கொள்வது மாதிரி என்னைச் சுருக்கிக் கொள்கிறேன் அப்பா. எப்போதுமே மண்டித்தெருவின் நெரிசல் மிகுந்த சாலைகளைத் தவிர்க்கிறேன், எதேச்சையாகத் திரும்ப நேர்கிற மண்டிகளின் வராண்டாக்கள் உடம்பு முழுக்க எதையோ பாய்ச்சுகிறது.

காக்கி கால்சட்டைத் துணிக்கும், எட்டு ரூபாய்க்கும் குறைவான கஞ்சி வடிக்கும் வெள்ளைத்துணியைச் சட்டைத்துணி என அவர்கள் வாங்கிக் கொடுத்ததற்கும் நீ பல நாட்கள், இந்தப் பெரிய மனிதர்களின் முன்னால் கூனிக் குறுகியும், நான் டீ வாங்கி வரவும், அவங்க வீட்டு அம்மாக்களுக்குப் புடவை தேய்த்துக் கொண்டுபோய் கொடுக்கவுமான என் இறந்தகால நடுக்கம் இன்னும் நீடிக்கிறதப்பா.

நடுத்தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கையில் "டேய் ஈஸ்வரா ஓட்றா ஓட்றா நாலு ஸ்டிராங் டீ," என்று ஒரு குரல் வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் ஒரு வாத்தியார் வாழ்ந்து கொண்டிருப்பதின் அதிகபட்ச காயம் உனக்கு இன்னும்கூடப் புரிப்படவில்லை என்பது பெரிய துயரம்தான்.

உனக்கு, நான் இன்னமும் மண்டிக்காரர்களுக்கு ஓடுகிறவனாக, கால்சட்டை போட்டுக்கொண்டு, உன்னைக் கழுவிவிடச் சொல்லித் தாமரை குளக்கரையில் தலைகுனிந்து நிற்பவனாக நீடிப்பது சந்தோசமாக இருக்கலாம்! என் உடல் முழுக்க அவமானம் சேறு மாதிரி பூசப்பட்டிருக்கிறது. நானேக் கழுவிக் கொள்கிறேன், கொஞ்சம் வழி விடு அப்பா!

பரோட்டா சால்னா பார்க்கும் போதல்ல, நினைக்கும்போதே குமட்டுகிறது அப்பா. மீந்த காய்கறிகளும், அழுகிய தக்காளியும், நம் நிலைமைக்கு இதுதான் என்ற உன் நியாயமும் சேர்த்து குமையவைக்கிறது. தர்மலிங்க நாயக்கர் வீட்டில், பவுர்ணமிக்கு, இலைபோட்டுப் பரிமாறிய சுடுசோற்றை, சாப்பிட முடியாமல் திணறி, பிசைந்துகொண்டே இருந்தேனே. அது பரோட்டா சால்னாவைத் தாண்டிப் போய்விட்டோம் என்ற ஆனந்தமில்லை. "தின்னு தின்னு"என்ற உன் வார்த்தைகளுக்குப் பதிலாக, என் கண்கள் இத்தனைக்காலம் கழித்துத் திரண்டிருந்ததே, அதுதான் அப்பா பதில்.

இதெல்லாம் சொல்ல என்ன வந்தது எனக்கு இப்போது? இதுதானே நீ?

மூன்று மாதக்குழந்தையை அம்மாவின் பழம்புடவையால் சுற்றித் தூக்கிக்கொண்டு வந்து, மாரி மண்டி வாசலில் கிடத்தி விட்டு மூட்டை தூக்கிச் சம்பாதித்துக் காப்பாற்றி இருக்காவிட்டால் தெரியும், நான் எப்படிப்பட்ட பொறுக்கியாய் மண்டித் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பேன் என்று.

"ராக்கண் முழிச்சி உனக்கு பசிக்கிறபோது, எனக்கும் பசித்து, உன் வயிற்றைக் கழுவின மிச்சத்தில் நானும் வாழ்ந்த வாழ்க்கையைக் குத்தம்னா சொல்ற?" என்று நீ ஆத்திரப்படாதே அல்லது ஆத்திரப் படு. யாரைப் பார்த்தாலும் அவமானப்பட்டு, உள்ளடங்கி பதுங்கிப் பதுங்கி ஒரு மனிதன் வாழ நேர்ந்த அவலத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல், அல்லது உன் வாக்குப்படியே உன்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியலை அப்பா.

கடைசியாக ஒன்று,

மனசுக்குள்ளேயே தேக்கி, தேக்கி வைத்த இந்தக் கேள்வி ஊத்துக்கண் மாதிரி கசிந்து, சில நேரம் பீச்சியடித்து, சில நேரம் வற்றி...

அம்மா செத்தா போனாள்?

திரும்பும் பக்கமிருந்தெல்லாம் புறப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தக் கேள்வியால் நொறுங்கி, சாவின் விளிம்பில் நின்றபோதெல்லாம், ஒரு நிழல்... ஒரு நிழல்...

கைப்பிடித்திழுத்து, உச்சிமோர்ந்து, தலைக் கோதி, என் துக்கங்களை, உறிஞ்சிவிடத் துடிக்கும் கருணையும், காதலும் நிரம்பித் ததும்பும் அந்தக் கண்களால் மட்டுமே ஒவ்வொரு முறையும் தப்பிக்கிறேன் அப்பா.

மரத்திலிருந்து கழித்துப் போடப்பட்ட தனிக்கிளையாய் மண்டித்தெரு மூலையில் யாரோ ஒரு மூட்டைதூக்கும் குடிகாரனோடு சதா சண்டையும், சச்சரவுமாய் காலம் தள்ளும் அவளின் கண்களுக்கு, ஒரு உயிரைக் காப்பாற்றிப் பொத்தி வைத்திருக்கும் வல்லமையும் ஜீவனும் எப்படி அப்பா சாத்தியம்?

ஒத்துக் கொள்கிறேன் அப்பா, அவளுக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எனக்கு?

Friday, April 17, 2009

மதிப்புரை - 2 : ந. முருகேசபாண்டியன்

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதை தொகுப்பை முன்வைத்து - ந. முருகேசபாண்டியன்.

பல்வேறு சோதனை முயற்சியின் வழியே, தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் சாதனை படைத்திட்ட போச்சானது, கடந்த பத்தாண்டுகளில் பின்னடைவுக்குள்ளாகியுள்ளது. சிறுகதை அற்புதமான என்ற, வடிவத்தைப் ப்ரியமுடன் கையாண்டு, வாழ்வின் மேன்மைகளையும் சிழிவுகளையும் பதிவாச்சிட முயலும் படைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கறிது. இத்தகு சூழலில் புனைவு மொழியில் விசும்பிக்கொண்டு வெளிவர முயலும் பவா செல்லதுரை போன்ற கதைசொல்லிகளின் ஈடுபாடு நம்பிக்கை தருகின்றது. முரட்டுத்தனமான சம்பவங்களைக் கரடுமுரடான மொழியில் விவரிக்கும் பவாவிற்கு, சூர்யனுக்குச் கீழ் எல்லாவற்றின் மீதும் அக்கறை இருக்கின்றது. மொழி உருவாக்கிட முயலும் அதிகாரத்தைச் சிதைத்துப் புனைவின் வழியே சிறுக்கத்தை நெகிழ்விப்பது பவாவின் தனித்துவமாகும். அவ்வப்போது சிறுகதைகள் எழுதிவரும் பவாவின் முதல் தொகுதியான ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ ஒட்டுமொத்த வாசிப்பினம் நம்பிக்கை தருவதாக உள்ளது.

யதார்த்தமான சித்திரிப்பின் மூலம் கதை சொல்லுவது போன்று பவாவின் புனைக்கதைகள் இன்னொரு நிலையில் கலங்கான பயணிக்க முயலுகின்றன. வெறுமான சம்பவங்கள்/ அனுபவங்களின் தொகுப்பாகக் கதை சொல்லுவதில் பவாவிற்கு நம்பிக்கை இல்லை. கிராமத்து அய்யனார் கோவில் சுடுமண் குதிரை சிற்பங்கள் போல, யதார்த்ததிலிருந்து விலகி, கலையழகுடன் வேறு ஒன்றை வெளிப்படுத்த முயலுகின்றன. இயல்பான மொழியில், கட்டமைக்கப்பட்டுள்ள கதைகள், ஆழ்ந்த வாசிப்பின் போது நடப்பு வாழ்க்கை குறித்துப் பரிசீலிக்கத் தூண்டுகின்றன.

விளிம்புநிலை மக்கள் அன்றாடம் பொருளியல் ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் சொல்லுவது பவாவின் முதன்மை நோக்கமாக இல்லை. சூழலின் வெக்கை காரணமாக எல்லாவிதமான நெருக்கடிக்களுக்கிடையிலும் வாழப் பழகியுள்ளவர்கள், இக்கட்டான ஒரு கணத்தில் எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்பது பவாவின் கதைகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. இருளும் கசப்பும் நிரம்பி வழியும் வாழ்க்கைப் போக்கில், எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறித் தங்கள் இருப்பை அர்த்தமாக்கிட விழையும் விளிம்பு நிலையினரின் மனநிலை பவாவின் கதைகளில், முக்கியமான இடம் பெறுகின்றன.
‘ சத்ரு’ ‘பச்சை இருள்ன்’ ஆகிய இரு கதைகளிலும் திருடர்களுக்கும் கிராமத்தினருக்குமான உறவு நுட்பமான களத்தில் விரிகின்றது. எப்பொழுதும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதுடன் பகடி செய்யும் திருடர்களின் தந்திரங்களை ‘ஆறலைக் கள்வர்’ வழிப்பட்ட தமிழ் மரபில் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். நாட்டார் கதை சொல்லலில் புத்திசாலித்தனத்துடன் நிறுவனம் உருவாக்கியிருக்கும் மதிப்பீடுகளை திருடர்கள் லாவகமாகச் சிதைக்கின்றனர். அதிகாரபீடங்களான ஜமீன்தார், பண்ணையார், அதிகாரி போன்றவர்களை எதிர்க்கும் திருடர்கள் எப்பொழுதும் அடித்தட்டு மக்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

பல்லாண்டுகள் தொடர்ந்து மழை பெய்யாமையினால் எங்கும் கடுமையான வறட்சி கொடிய பஞ்சம். உணவுக்காகக் கண்ணில் தென்படும் எந்த மனிதச் சட்டம். உயிரைத்தக்க வைப்பதற்கான போராட்டத்தில் எல்லா மதிப்பீடுகளும் அர்த்தமிழ்கின்றன. அம்மனுக்குக் கூழ் படைப்பதற்காகச் சிரமப்பட்டுச் சேகரிக்கப்பட்ட தானியத்தைத் திருடியவன் கிராமத்தினரிடம் மாட்டிக் கொள்கிறான்; திருடனைச் கொல்லப்படவேண்டியவன் என்று முடிவெடுக்கின்றனர். அதற்காக நச்சு இலை பறிப்பதற்காக ரங்கநாயகி கிழவி காட்டில் அலைந்து திரிகிறாள். மாவுக்காகக் கம்பினை இடித்துக் கொண்டிருக்கும் வறுமையுற்ற பெண், தன்னிடம் பிச்சையாக மாவு கேட்ட மூன்று பிள்ளைகளின் தாய்க்கு மாவு தருவது சாதாரண விஷயமல்ல. மாவைப் பெறும் பெண்ணின் கண்ணிலிருந்து நீர் சொட்டுகிறது அம்மன் சிலையில் கண்ணிலிருந்து துளிர்க்கிறது நீர். திடீரென வானம் பொத்துக் கொண்டு பேய்மழை கொட்டுகிறது என்ற பவாவின் கதைசொல்லலை நாட்டார் மரபில் தான் புரிந்து கொள்ள முடியும் கொடுரமான சூழலிலும் மனதில் ஈரம் சொதசொதப்பது போல, வானமும் கருணையுடன் மழை பொழிவது ஒரு வகையில் விநோதம் தான். சூழல் காரணமாகக் கெட்டி கட்டிப் போயிருந்த மக்களின் மனங்களை மழை ஈரம் மிக்கவாக்குகிறது. திருடன் விடுவிக்கப்படுகிறான். எல்லோருக்குள்ளும் இயல்பிலே இக்கட்டான நேரத்திலும் நுட்பமாக வெளிப்படும் என்பதனைச் கதை அதியற்புதமாக விவரித்துள்ளது. விளிம்பு நிலையினர் முரட்டுத்தனமானவர்கள்; நாசுக்கற்றவர்கள்; பாசங்கற்றவர்கள்; கருணையாளர்கள் என்று பவாவின் எழுத்து வழியே புனைவினைக் கட்டமைக்கலாம். அப்பொழுதுதான் திருடன் விடுவிக்கப்பட்டதற்கான தர்க்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பவாவின் கதைகளில் இருள் முக்கிய இடம் வகிக்கின்றது. இருள் என்பது புரியாத புதிராகப் பல்வேறு விநோதங்களுக்கு வாயிலாக இருக்கின்றது. இருளுக்குள் பலர் உறங்கிடும் வேளையில் சிலர் ஆந்தையைப் போல அறிவுக் கூர்மையுடன் பரபரத்துக் கொண்டிருக்கின்றனர். இருளுக்குப் பழகியவர்களுக்கு எல்லாப் புலன்களும் கூர்மையுடன் செயற்படும்’ வேட்டை’ கதையில் வரும் ஜப்பான் கிழவனின் உலகம், இருள்டைந்த காட்டிற்குள் உறைந்திருப்பது தற்செயலானது அல்ல. அவனுடைய நினைவுப் பரப்பில், இழந்து போன ‘காடு’’பற்றிய எண்ணம் தவிக்கிறது. இரவு முழுக்கத் தனியாகக் காட்டினில் அலைந்து திரியும் ஜப்பான் கிழவனின் நோக்கம் விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமல்ல என்று தோன்றுகிறது. சோடியும் வேப்பர் விளக்குகளின் ஒளியில் ஜொலித்திடும் நகர்ப்புற வாழ்க்கையுடன் இசைந்து வாழமுடியாமல், தணிந்த மனநிலையுடன் வாழ்கிறவனுக்கு அமாவாசையை ஓட்டிய இரவினில் காடு முழுக்கத் திரிவது யதார்த்தமாக இருக்கின்றது. அவன் வேட்டைக்காகக் கண்ணிகளை விரித்துக் காத்திருத்தல் என்பது, இடிந்துபோன அவனுடைய பூர்விக வாழ்வை நினைத்துப்பார்த்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வேட்டையில் எதுவும் சிக்காமல், வெறுமையுடன் திரும்பும் கிழவனுக்குக் கிறிஸ்தவ துதிப்பாடல், மனதுக்கு ஒத்தடம் தருகின்றது. இயற்கையுடன் போராடித் தோல்வியடையும் மனிதனின் மனக் கொந்தளிப்பை அமைதிப்படுத்த மதம் அல்லது அதியற்புத ஆற்றல் தேவைப்படுகிறது என்றும் கதையை வாசிக்கலாம். எனினும் ‘ அவனுடைய பையில் பத்திரமாகக் கண்ணிகள் இருக்கின்றன’ என்ற கடைசி வரிகள் கதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றன. வேட்டை என்ற கதைத் தலைப்பு, நவீன உலகில் ஜப்பான் கிழவனே வேட்டைப் பொருளாக மாறுவதைச் சூசகமாக உணர்த்துகின்றது.

பெண் மனதின் நுட்பங்களைச் சித்திரிக்கும்’ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ மாறுபட்ட புனைவுமொழியில் விரிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியான மேரி வில்லியம்ஸ், வீட்டின் முன் இரவு வேளையில் குறிசொன்ன ஊமையனின் குரலைக் கேட்டு நடுங்குகிறான். ‘ இந்தக் குழந்தையும் தனக்குத் தங்காமல் போய் விடுமோ’ என்று நினைத்துக் கலக்கமடைகின்றான். இருளின் சிறகுகள் எங்கும் நீக்கமறப் பரவுவது போல மனம் புணைந்திடும் வேதனைகள் உலுக்கியெடுக்கின்றன. ஊமையனின் குழறலான மொழியினால் மன அமைதியை இழந்திடும் மேரியின் துயரம் அளவற்றுப் பொங்குகின்றது. "குழந்தை யேசு பிறந்து விட்டார் நலமுடன்" என்ற சேதியுடன் சாக்லேட் வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தாவின் பேச்சு, அவளுக்குள் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. "எந்தச் சேதாரமும் இன்றி குழந்தை பிறந்ததா" என்ற, அவனுடைய கேள்வியும், "தாயும் சேயும் நலம்" என்ற பதிலும் நுட்பமானவை. மேரி தனது துயரத்தை யேசுவின் பிறப்புடன் ஒப்பிட்டு அடையும் மன அமைதி முக்கியமானது. மனம் ஏதோ ஒன்றின் காரணமாக அடையும் வேதனையும் பின்னர் அதிலிருந்து விடுபடுவதும் மேரியை முன்னிறுத்திப் பவா கட்டமைக்கும் புனைவு சுவராசியமனாது. இந்தக் கதையும் முழுக்க இருளில் நடைபெறுவதாகப் புனையப்பட்டுள்ளது. சிதைவு, பச்சை இருள் ஆவிய கதைகளிலும் இருட்டு முக்கிய இடம் வகிக்கின்றது. இருள் மனிதனின் மனநிலையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் பவாவின் கதைசொல்லலின் முக்கிய இடம் வகிப்பது தற்செயலானது அல்ல.

நவீன உலகில் தமிழர் வாழ்க்கையில் நசித்துப்போன மேன்மையான விஷயங்களில் தெருக்கூத்துவும் ஒன்று. மரபு வழிப்பட்ட உன்னதமான கலையைத் தொலைத்துவிட்டு, அது குறித்து எவ்விதமான பிரச்ஞையுமற்று வேறு ஒன்றைத் தேடிக் கொண்டிருப்பது, காலந்தோறும் தொடர்ந்து நடைபெறுகின்றது. கலையின் மேன்மையும் சீரழிவும் யாருடைய கையிலும் இல்லை. ஆனால் அந்தக் கலையுடன் தன்னுடைய வாழ்வைப் பிணைத்துக் கொண்ட ஏழுமலையின் இருப்புதான் பிரச்சினை. வேறு ஒன்றில் பொருத்திக் கொண்டு, சராசரியாக வாழ்வது என்பது அடையாளச் சிக்கலை ஏற்படுத்திகின்றது. பலரின் மத்தியில் வேடம் தரித்து, அடவுகளுடன் ஆடிக் குதிக்கும் ஏழுமலையின் மனம், வழமையிலிருந்து மாறுபட்டது. அதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெங்களூரு காய்கறி அங்காடியில் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடிச் கொண்டிருக்கும் ஏழுமலையின் மனம், வழமையிலிருந்து மாறுபட்டது. அதனால்தான் வயிற்றுப் பிழைப்புக்காகப் பெங்களூரு காய்கறி அங்காடியில் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஏழுமலையின் காலடிகள், எப்பவும் கூத்துக்கான அடவுகளுடன் இயங்குகின்றன என்பது வலியைத் தரும் உண்மை. சாராய போதையில் துள்ளிக் குதித்து அடவுகளை ஆடிடும் ஏழுமலை மயங்கி விழுந்தவுடன், அவருக்குத் தண்ணீர் தர பல கால்கள் ஓடின என்பது கதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றது. விடுவிப்பு இல்லாத இக்காட்டான நிலையிலும் நம்பிக்கையின் ஒளிச்சீற்றுப் பரவிட எழுதுவது பவாவின் கதைகளில் தென்படும் சிறப்பம்சம். இருளுக்குள் ஒளியைக் காண்பது போல, இடைவிடாத துயரங்களுக்கிடையிலும், நம்பிக்கையை ஏற்படுத்தும் பவாவின் கதைகள் வாழ்வின் மீதான நேசிப்பைச் சொல்லுகின்றன.

முகம், வேறுவேறு மனிதர்கள், சிதைவு, மண்டித்தெரு பரோட்டா சால்னா போன்ற கதைகள் நகர்ப்புற வாழ்க்கையிலூட்ட, மனித இருப்பை விசாரிக்க முயலுகின்றன. எனினும் மலைகளும்,நிரம்பிய காட்டுப் பிரதேசத்தைப் பின்புலமாகக் கொண்ட கதைகளில் பவாவின் புனைவுகள் அளவற்றுப் பொங்குகின்றன. காட்டிற்கும் மனிதனுக்கென பூர்விகக் தொடர்பானது வெவ்வேறு காட்சிகளாக விரிந்திருப்பது கதைகளில் பலமாக உள்ளது.
வாழ்க்கை தரும் நெருக்கடிகளின் ஊடே மனஇருப்பின் அவஸ்தைகளை விவரிப்பது பவாவின் தனித்துவம். யதார்த்தம் சூழலில் நம் அடையாளம் எப்படியும் இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை முன்னிறுத்திப் புனைவின் வழியே, பவா கட்டமைக்க முயலும் கதைமொழி, வாசிப்பால் தொந்தரவை ஏற்படுத்துகின்றது. "முகம்"கதையில் புகைப்பட ஆல்பத்தில் பதிவாகியிருக்கும் பெருங்கதையாடல் வேறுபட்ட முகங்களை வெளிப்படுத்துகிறது. சாதாரண விஷயத்தையும், தன்னுடைய மொழி ஆளுமையின் வழியே வேறு ஒன்றாகப் படைப்பது பவாவின் கதைசொல்லலை வளம் மிக்கதாக்குகிறது. அசலான தமிழ்ப் புனைகதை ஆக்கத்தில் பவா படைப்பளுமையின் மூலம் தனக்கான இடத்தினை உறுதி செய்துள்ளார் என்றும் தொகுப்பினை மதிப்பிட இடமுண்டு

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,

டாக்டர். கே. எஸ். சுப்பிரமணியன்


நண்பர் பவா செல்லதுரையின், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை, என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர் பவா இலக்கியக்களனில் ஒரு படப்பாளி; ஓர் ஆர்வலர்; ஒரு செயல்பாட்டளர் அல்லது தேர்ந்த இலக்கியவாதிகளை, வயது என்ற காரணியைப் புறந்தள்ளி விட்டு, இனங்கண்டு அவர்களுக்கு ஒரு களம அமைத்துக் கொடுப்பது; படைப்பாளி - வாசகர் சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில கருப்பொருள்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைக் கட்டமைப்பது - இவை போன்ற பணிகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருபவர் பவா. இன்று, அவரது நூலுக்கு வெளியீட்டு விழா என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளின் அடிநாதம் காட்டு மணம். காட்டின் குளுமையும், அச்சுறுத்தும் தன்மையும்; காட்டில் வியாபித்திருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள், பச்சிலைகள், மலர்கள், முட்கள், வனாந்திரத்தில் அலைந்து திரியும் விலங்கினங்கள்; பாடிப் பறந்து இனிமையை விநியோகிக்கும் பறவைகள்; வாழ்க்கைக்காக அயராது போராடி, அதே நேரத்தில் வாழ்க்கையை ருசித்து ரசிக்கும் வனவாழ் மக்கள், கானக மணம் நம்மேல் இதமாகக் கவிகிறது. வானம் பொய்த்தால், அம்மக்கள் எதிர்கொள்ளும் வரட்சியும் சோகமும் நம் இதயத்தில் வண்டாய்க் கரிக்கிறது.
காட்டைச் சார்ந்த, இத்தகைய அதீதமான மன ஆக்கிரமிப்பு அல்லது அள்ங்ள்ள்ண்ர்ய் ஏன் என்ற வினா இயல்பாக எழுகிறது. பாவவின் சொந்தஊர் காட்டின் எல்லையுடன் ஒட்டி உறவாடும் கிட்டத்தில் உள்ளது. அவரது தந்தையார் இருளர் இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தனர். பவாவின் பால்ய இருளர் இன மக்களாலானது.

இந்தப் பின்புலத்தில், ‘முல்லை’ என்ற பெயர் தாங்கிய முன்னுரையில் பவாவின் வாககுமூலம் அர்த்தம் உள்ளதாக விளங்குகிறது. இதோ பவா:
“ நான் திமிரத்திமிர காலம் என்னை அங்கிருந்து அறுத்துக்கொண்டு வந்து, இந்த நகரத்தில் போட்டது. என்னை ஆக்ரமித்த ஈரமான, குதூகல ஞாபகங்களை அதனால் இன்னும் கூட அழிக்க முடியவில்லை.
.............
நான் விட்டுப் பிரிந்த பதுங்குமுயலையும், ஒழக்குள்ள நரியையும், தவக்கரடியையும் சந்திக்கவே முடியாத துயரத்தை காலம் என்மேல் ஏற்றியிருக்கிறது. என் படைப்பின் மூலமாவது மீண்டும் அந்த நிலப்பரப்பை, பழங்களை, விலங்குகளை, பால்யகாலத் தோழர்களை சென்றடைய எத்தனிக்கும் முயற்ச்சியே இந்நூல்” என்கிறார்.
இம்முயற்ச்சியில் பவா கணிசமாக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டும் இல்லை அவரது காடுகள் பாலும், அங்கு வாழும் மக்கள் பாலும், ஓர் ஒற்றுணர்வை, ஓர் அன்யோன்யத்தை வாசகர்களிடமும் ஊக்கி யிருப்பது அவரது படைப்பாக்கத்தின் வெற்றி.

இத் தருணத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியக் களத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக நிலவிவரும் ஒரு செல்நெறியை விமரிசப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். பல்வேறு காரணிகளின் தாக்கத்தால், கிராமப் புறங்களிலிருந்து நகர்களையும் பெருநகர்களையும் நோக்கி புலம் பெயர்தல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது. இந்தப் பின்புலத்தில் இழந்த கிராம வாழ்வு சார்ந்த பின்னோக்கிய ஏக்கம் அல்லது சர்ள்ற்ஹப்ஞ்ண்ஸ்ஹ இயல்பாக விளைகிறது. இந்த யதார்த்தப் பின்னணியில் சொந்த மண்சார்ந்த ஏக்கம் ஒரு சோகமாக, ஒரு கையறு நிலையாக இலக்கியப் படைப்புக் கருவாக இடம்பெற்று வருகிறது. பல தரமான இலக்கியப் படைப்புகள் செழுமையான அறுவடையாக விளைந்துள்ளன.

இந்தத் திக்கில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்தப் பிரிவு ஏக்கம் நிரந்தரமான ஒன்று இல்லை. முதல் பத்தாண்டு காலத்தில் இந்த ஏக்கத்தில் உண்மை இருக்கும் காலப்போக்கில், புதிய களத்தில் இயன்ற அளவு புலம் பெயர்ந்தவன் காலூன்றுகிறான்,வேர் பாய்ச்சுகிறான். புதிய களத்தின் இயங்கு நெறிகளை உள்வாங்கிக் கொள்கிறான். புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்கிறான். அவனது சாமர்த்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்ப வெற்றி / தோல்வியை எதிர் கொள்கிறான். இது அவனது யதார்த்த இயங்கு களனாகவே உருப்பெற்று விடுகிறது.

மேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்த பின்பும், பின்னோக்கிய ஏக்கத்தைக் கட்டிக்கொண்டு புலம்புவது ஒரு மாயை ; ஒரு சுயஏமாற்று; ஒரு பொய்யான சுய ஒத்தடம். ஒரு படைப்பாளி இதைச் செய்யும் போது சுயஏôமாற்றுதலை மீறி இந்தப் போக்கு ஒரு பொய்யான வியாபார்ச் சரக்காகும் அபாயத்துக்கு ஆளாகிறது. இந்த சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ உத்தி, வேர்மண் விநியோகம் செல்லுபடியாகும் வியாபாரமாக வடுப்பட்டு விடுகிறது. இது குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற எல்லாத் திணைகளுக்கும் பொருந்தும்; எல்லா நிற மண்ணுக்கும் பொருந்தும்.

இரண்டு / மூன்று பத்தாண்டுகள் நகரிலோ, பெருநகர்லோ வாழ்ந்த பிறகு, தன் வேர்மண்ணிலிந்தே அந்நியப்பட்டுப் போதல் நிகழ்கிறது. இது ஒரு சோகம் இது ஓர் இழப்பு. நகர மண்ணிலும் வேர்பாய்ச்ச முடியாமல் இருப்பது ஒரு துயரமான இயலாமையும் உயிர்ப்புள்ள, படைப்புக்கு உகந்த கருப்பொருளாக அமையும்.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும் போதும், காடுகள் சார்ந்த பவா செல்லதுரையின் ககைகளில் வனாந்திர மணத்தில் கலப்படம் இல்லை, அவற்றில் உள்ள உண்மையின் கதகதப்பு நம்மைத் தொடுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை இனங்காண முடிகிறது. பவா இப்போது வாழும் திருவண்ணாமலை நகரம் அவரது படைப்புக் களனான காட்டுப் பகுதிக்கு மிகவும் அருகிலேயே உள்ளது என்று பவாமிடமிருந்து அறிகிறேன். இரண்டு: அவரது இயல்பான சார்பை ஒட்டி, பவா இருளர் இனத்தை, உள்ளடக்கிய வேர்மட்ட மக்கள் நலவில் தீவிரமான, தொடர்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். எனினும், காலம் போக்கில் பவாவின் படைப்புலகம் காட்டிலிருந்து மெல்ல விலகி நகர்ப்புற வாழ்வியல் கரிசனைகளை நோக்கிப் பயணிப்பது இயல்புக் கட்டாயம் என எண்ணுகிறேன்.

காட்டுமணம் முன்னுரிமை பெற்றுள்ள அதே நேரத்தில், இந்தத் தொகுப்பில்உள்ள கதைகள் அழகான ஒரு நிறப்பிரிகை போல் காட்சி அளிக்கின்றன. முத்தான கதைகள், ஒவ்வொன்றிலும் தனித்துவம் உள்ள நிகழ்வுக்களன்; இயல்பான மொட்டவிழ்ப்பு; இறுதியில் எதிர்பாராத ஒரு ‘சுளீர்’.

சிறப்பாக அமைந்துள்ள கதைகளில் ஒரு சிலவற்றையாவது தொட்டுச் செல்லாவிட்டால் என் உரை மூளியாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு.

‘’ஏழுமலை ஜமா’ பின்னோக்கிய ஏக்கத்தின் வார்ப்படம். கோணலூர் ஏழுமலை. கூத்து ஐமாவின் முக்கிய அங்கம். வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அவனை பெங்களூருக்குத் தள்ளியது. சில ஆண்டும் பெருநகர வாழ்க்கை அவனுக்கு மூச்சு முட்டியது பாட்டின் சத்தமும், லயமும், பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகளும்; அவனை பஸ் ஏற்றி விட்டிருந்தது. கிராமத்தின் முகமோ மாறியிருந்தது. சினிமா ஸ்டார்களின் ஆக்கிரமம் மதுவில் மனவேதனையை மழுங்கடிக்கும் முயற்சியூடே தொலைவிலிருந்து கூத்துப் பாட்டின் மெலிந்த ஒலி ஒலி நோக்குத் தள்ளாடுகிறான். ஜமாவில் சங்கமிக்கிறான். சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ வின் கலாநேர்த்தியான, உள்ளத்தைத் தொடும் படைப்பு.

‘வேட்டை’ வேட்டைதான் ஜப்பான் கிழவனின் குலத்தொழில்; வாழ்வாதார ஈடுபாடு. அவனது கண்ணின் வீரியமும், கண்ணியின் வெறியும், அம்பின் குறியும் எதையும் தப்ப விடாது. பறவையாயினும் சரி, குஞ்சானாலும் சரி; காட்டுப் பன்றியாயினும் சரி, குட்டியாயினும்சரி. ஒரு பேரிழப்பு; அதைத் தொடர்ந்து ஒரு ரசவாதம். இதோ பவா:

“ ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து.... ஜன்னி வந்து செத்துப் போனதுக்கு அப்புறம் ..... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக”.

‘சத்ரு’: அருமையான சிறுகதை வடிவத்துக்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு பொட்டு இருளனின் திருட்டு சாகசங்கள் அந்த மலைக்காட்டுப் பிரதேசத்தில் அவனுக்கு ஓர் இதிகாச பிம்பத்தை உருவாக்கி இருந்தது. காட்சி மாற்றம். பல்லாண்டு வரட்சியில் வதங்கி ஒடுங்கிப் போயிருந்தது கிராமம். இறுதி முயற்சியாக சாமிக்குப் படையால். மணி மணியாகச் சேகரித்த சோளம் மாவாக்கப்பட்டது. அதிலேயே கைவைத்துடன் உயிர்மாய்க்க உறுதிபூண்டது கிராமம். திடீரென்று, ‘மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது. பூமி நனைகிறது; உள்ளம் குளிர்கிறது; வன்மம் மறைகிறது.

இனி ஜென்மத்தும் திருடாத மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா போ, போய் பொழச்சிக்கோ, எல்லோர் குரலும் நனைந்திருந்தது

சினமும், சீற்றமும் கருணையாய்ப் பரிணமிக்கும் மந்திர தருணத்தில் நாமும் நனைந்து கரைகிறோம். நம்மை அறியாமல் நம் கண்கள் பனிக்கின்றன.

பவாவின் இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டத்தக்க இன்னோர் அம்சம் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி. வீரியமும், நளினமும், கவித்துவமும் இயல்பான மீட்டலில் நம்மைத் தொடுகின்றன.

பல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்கள்; சிங்காரக் குளத் தண்ணீர் முழுவதுமே, ‘பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா?’ என்ற பிரமிப்பு; ‘மண்ணில் ஊனப்பட்ட விதைகளில் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பாதிப்பாதி கண்கள் முறைத்தும், மறைந்தும் போக்குக் காட்டிடும்’ காட்சி; ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களில் காத்திருத்தல்,’ பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு, அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த யாருமற்ற தனிமை - இவ்வாறு கவித்துவம் நம்மை ஆங்காங்கு ஆலிங்கனம் செய்கிறது.

இறுதியாக, வரட்சியின் வெம்மையையும், பஞ்சத்தின் குரூரத்தையும் நம் கண்முன் நிறுத்தம், கந்தகச் சொற்களால் வடிக்கப்பட்ட சித்திரம்:“ தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.

பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில், உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபத்தில் மீந்தது”.

சொல்லின் சக்தியை நம்முள் விதைத்து, நம் உள்மன ஆழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். படைப்பாளி. பவாவின் படைப்புலகம் மேலும் ஆழமும், அடர்த்தியும் கொண்டு சிறக்க என உளமார்ந்த நல்லாசிகள்.

Wednesday, April 15, 2009

நான் கடவுள் - சில மனப்பதிவுகள்



நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த "ஏழாம் உலகம்" நாவல் என் வாசிப்பனுபவத்தில் முற்றிலும் வேறுபட்டது. எனக்கு காய்ச்சல் உச்சத்தை அடைந்திருந்த போது நான் அந்நாவலை முடித்திருந்தேன். என் தூக்கத்தையும், சாப்பாட்டையும், அன்றாட வாழ்தலையும் அந்த உருப்படிகள் வன்மத்துடன் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். என் நினைவைத் திசைதிருப்ப எடுத்த முயற்சிகளில் நான் தோற்றுக் கொண்டிருந்தேன். என் சௌகர்ய வாழ்வு எனக்கே குமட்டத் தொடங்கின நாட்களவை.

ஏழாம் உலகத்தின் திரை வடிவம்தான்"நான் கடவுள்" என நண்பர்களால் சொல்லப்பட்டபோது ஒரு பயம் தொற்றிக் கொண்டது. புத்தகத்திலிருந்து திரைக்கு கொண்டு செல்பவர்களின், அக்கறையற்றதனமும், சினிமா ரசிகர்களை சாக்கு சொல்கிற அவர்கள் செய்யும் அதிகபட்ச சிதைத்தலின் மீதான பயம் அது.

அதிகம் பேசாத, அதிகம் வாசிக்காத, அதிகம் வியக்காத, எந்த செதுக்கல்களும், அழகூட்டல்களுமற்ற தன் முந்தைய இரு படங்கள் மூலம் ஒரு "ரா"வான கலைஞனாக என்னுள் பதிவாகியிருந்த பாலாவின் கைகளில் இப்படைப்பு ஒப்படைப்பில் என் நம்பிக்கை உட்கார்ந்திருந்தது.

ஏழாம் உலகத்தின் உருப்படிகள் அப்படியே திரையில் வாழ்கிறார்கள். எழுத்தில் இருந்த அதன் உச்சபட்ச குரூரம் தமிழ்த்திரை தாங்காதென்பதால் காட்சிப்படுத்தலில் தவிர்க்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திரைப்பட இயக்குநருக்கே சாத்தியம்.

நம் தெருக்களில், கோயில் வாசல்களில், திருவிழாக்களின் நெரிசல்களில், கடைவீதிகளில், பேருந்து நிலையங்களில் நம்மிடம் கையேந்தும் குரூபிகள், ஊனமுற்றவர்கள், குருடிகள், உடல் மற்றும் மனம் சிதைந்த மனிதர்கள், சாமியார்கள் இவர்கள் மீதான இந்த சௌகர்ய மனிதர்களின் அவதானிப்பென்ன? இவர்கள் சுண்டியெறியும் எட்டணாவும், நாலணாவும் எங்கே போகிறது? அவர்களின் வசிப்பிடம் எது? அவர்களின் காலைக்கடன், குளியல், உடலுறவு இவைகளின் நிகழ்விடம் எது? வெறும் துக்கத்திற்கும், கொடுமைக்கும், சாவுக்கும் மட்டும் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களா அவர்கள்? அவர்களின் உலகத்துக் கிண்டல்கள், பகடிகள், பாடல்கள், பொறாமைகள், கொண்டாட்டங்கள், பொங்கிப்பெருகும் மனிதப் பேரன்பு இவைகளை நினைத்துப் பார்க்கவும் முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் "சௌகர்ய மனிதனே"ஒரு நிமிடம் உன் புறக்கடைக் கதவைத் திற. முகத்திலடிக்கும் முடைநாற்றத்தைப் பழகிக்கொண்டு, உன் பார்வையால் ஊடுறுவிப் பார். உனக்கு இந்த உருப்படிகளும் மனிதர்கள்தான் என்ற உண்மை எரியும் நெருப்பின் சரீரத் தொடுதல்போலச் சுடும்.

இக்கூட்டத்திலிருந்து ஏதோவொரு காரணத்திற்காக பிடுங்கப்படும் ஒரு குழந்தையை, ஒரு கிழவியை, ஒரு குருடியை, தடுக்கமுடியாமல் போன கையாலாகததனத்திற்கான அந்த மொத்தக் கூட்டத்தின் துடிப்பும், பிற மனிதர்கள் மீதான அக்கறையற்றுப்போன நம் நவீன வாழ்வின் மீதான காறித்துப்பல்கள்.

பாலாவின் முதல் இரண்டு படங்களுமே என்னை வசீகரித்ததில்லை. எந்த தீர்க்கமான பார்வையும், தீர்மானமுமின்றி எடுக்கப்படும் அவர் படங்களில் நாம் பார்த்தறியாத குரூரமும், வன்மமும் மிக்க மனிதர்கள் வந்து போகிறார்கள் என்பது மட்டுமே புதிதாய் இருந்தது. மானுடவாழ்வின் அழகான பதிவுகள் இம்மனிதனின் பார்வைக்கு படவே இல்லையோ என்ற என் சந்தேகத்தை பிதாமகனில், விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ் எல்லோரும் சோர்ந்து பங்கெடுக்கும் ஒரு பாடலில் விக்ரமையும், சங்கீதாவையும் ஒப்பிட்டு சூர்யாவின் கண்சிமிட்டலுக்கு சங்கீதா படும் ஒரு வினாடி வெட்கத்தில் தீர்த்து வைத்தவர் பாலா.

திரைப்படமாக்கலுக்காக அவர் மெனக்கெட்டிருக்கும் நாலு வருட உழைப்பேறிய வடிவமே நமக்கு பார்க்கக் கிடைக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும், கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையும், இளையராஜாவின் அடக்கி வாசித்தலும், இடத்தேர்வும் - ஜெயமோகன், பாலா என்ற இரு பெரும் கலைஞர்களின் கூட்டுழைப்பும் நம்மை நாம் அறிந்திராத வேறொரு உலகத்திற்கு இட்டு செல்கின்றன என்ற உண்மையோடு, தமிழ்சினிமா போட்டு வைத்திருக்கிற கண்ணுக்குத் தெரியாத இலட்சுமணனின் கோட்டை இப்படமும் தாண்டவிடவில்லை என்ற உண்மையையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆர்யாவின் பாத்திரப்படைப்பே இத்திரைப்படத்தோடு சம்பந்தமில்லாத ஒன்று. காசியிலிருந்து அவனுடைய தமிழ்நாட்டின் வருகையின் நோக்கமே ரொம்ப பலவீனமானது. அவனுடன் அவன் தாய் நடத்தும் உரையாடல்கள் பெரும் சலிப்பை உண்டாக்குபவை. அவன் அம்மாவின் அழைப்பினை ஏற்று அவனை வீட்டுக்குப் போகச் சொல்லி பூஜா நடத்தும் இறைந்த மன்றாடல் அதிகமும் செயற்கைத் தன்மை வாய்ந்தது. அந்த மலைக்கோவில் மீது ஏறி, இறங்கும் கால்களுக்கு மேல் இதைவிட உருக்கமான உரையாடல்கள் நிறைந்திருக்கும் அதிலெல்லாம் நுழையாத இக்குருட்டுப்பிச்சைக்காரி இவளிடம் ஒரு பக்க வசனம் பேசி அடிவாங்குவது அபத்தம்.

தம்பித்துப்போகும் பூஜா தனியாளாக ஒரு மாதாக்கோவிலுக்கு எதிரில் ஒரு கன்னியாஸ்திரி முன்னால் உட்கார்ந்திருப்பதும் அவள் போதிப்பதுமான காட்சி முடிந்து, பிறிதொரு காட்சியில் அவள் தன் பழைய வசிப்பிடத்திலேயே, கிருஸ்துவ வசனங்களை பேசுவது என்பதெல்லாம் படக்கோர்ப்பின் அக்கரையின்மையைத் தெளிவுபடுத்துகிறது.

பாலாவுக்கு பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை ரெக்கார்டரில் போட்டு ஆடவைப்பதில் ஒரு அலாதி சுகமிருப்பது அவருடைய பிதாமகனிலும், இப்படத்திலும் அது தொடர்ந்தாலும் அக்காட்சிகளில் நாமும் லயிக்க முடிகிறது. காவல் நிலைய கொண்டாட்டம் அறுந்து, சற்றுமுன் வரை தன் நெகிழ்வூட்டும் குரலால் நம்மை ஆட்கொண்ட நம் பார்வையற்ற ஸ்நேகிதி, ஒரே விநாடியில் ஒரு டெம்போவில் உருப்படியாக்கி ஏற்றப்படும்போது பதைக்கும் மனதுடன் கொஞ்ச தூரம் டெம்போ பின்னால் கண்ணில் இருந்து தூசியை தட்டிக் கொண்டு நாமும் ஓடி, எதுவும் செய்யமுடியாதவர்களாகத் திரும்புகிறோம்.

இப்படத்தின் நாயகன் ஆர்யா இல்லை. தாண்டவன்தான். அவன் முகத்தில் உறைந்திருக்கும் குரூரம், புன்னகையே மரணம் போல் நிகழ்வதும், தூக்கிக்கட்டிய பச்சை லுங்கியும், தன் உருப்படிகளினூடே அமைக்கப்பட்ட சாமிப்படங்களுக்கு தீபம் ஏற்றி கும்பிடுவதும் குற்ற உணர்வை குறைந்து கொள்ள பயந்து

கடந்த நான்காண்டுகளாக ஆர்யா என்ற நடிகனின் இப்படப்பங்கு குறித்து ஊடகங்கள் நம் மீது ஏற்றியிருக்கும் பிம்பம், அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காஸ்ட்யூம், மூக்குத்தி போடப்பட்டிருக்கும் வெள்ளி வளையம், ஜடாமுடி, அரேபியக் குதிரையின் கண்கள், கஞ்சா புகைக்க அவன் செய்யும் முன்னேற்பாடுகள், இவைகள் எல்லாமும் சேர்ந்து நம்முள் ஏற்படுத்தும் அதிர்வுகளைவிட, தாண்டவனின் அம்மண்டபத்தை நோக்கிய வேக நடை ஒன்றே பல மடங்குகளை கடக்கிறது.

நீதி மன்றக் காட்சியில், இன்ஸ்பெக்டரின் பல்டியும், ஆர்யாவின் விடுவிப்பும் யதார்த்ததிற்கு வெகு தொலைவில் நிற்பவை.

கேரள நாயர் முதலாளியாவது, அக்குருடியின் கடத்தலுக்கான நேரடி முயற்சியில் ஆர்யாவால் குற்றுயிராக்கப்பட்டுத் தொலைந்து போகிறான்.

தாண்டவனின் உலகம் அவன் அறியாதது. அவனின் குரூரமும், ஈவிரக்கமின்றி காசுக்குச் சோரம்போய், எதையும், எவரையும் பலியிடத்துணியும் அவனின் செய்கைகள் மற்ற பிச்சைக்காரர்களின் வழியாகக்கூட ஆர்யா அறியாதது. அப்படிப்பட்ட ஒருவனோடு அத்தனை குரூரமான மோதலுக்குப்பிறகு அவன் பிணம் ஒரு சுடுபாறையின் மீது ரத்தத் தொய்தலுக்கிடையே கிடப்பது நமக்கு சம்மதமே. "நானே பிரம்மா நானே கடவுள்" என சமஸ்கிருதத்தில் சதா உச்சரிக்கும் அச்சாமி?

கெட்டவர்களைப் பார்த்தவுடன் அறியும் ஆற்றல் அவனுக்கு உண்டென்றால், ஐந்து நாட்கள் அவனுடனே சுற்றித்திரியும் அந்த இன்ஸ்பெக்டர் மீது அதில் ஒரு துளி வன்மமும் வெளிப்படாதது ஏன்?

ஏஜண்ட் முருகன், ஒரு பின்னிரவு போதையில் தன் உருப்படிகளிடம் நிகழ்த்தும் உரையாடலும், அதனூடே மனப்பிறழ்வுற்ற ஒரு குழந்தைக்குத் தன்னிடமிருந்து ஒரு குருவி பிஸ்கெட்டை எடுத்துத் தந்து அக்குழந்தையை தன் இடுப்பில் எடுத்து வைத்து உருகுவதும் படைப்பின் உச்சம்.

வேறுமாதிரியான கதை இருந்தும், தமிழ்த்திரை இதுவரை பார்த்தறியாத மனிதர்கள் நிறம்பிய காட்சியமைப்பிருந்தும், ஜெயமோகன், கிருஷ்ணமூர்த்தி , ஆர்தர் வில்சன் ஆகிய ஆளுமைகளின் கண்ணுக்குத் தெரியாத லட்சுமணன் போட்ட மாயக்கோட்டைத் தாண்டுவதற்காக வந்து அதன் விளிம்பிலேயே பாலா நின்றுவிட்டலும், ஆர்யா என்ற கதைக்கு சம்மந்தமில்லாத நாயகனும், பரிட்சார்ந்த முயற்சியில் பணத்தைத் தொலைத்த தயாரிப்பாளரின் நீண்ட பட்டியலும் அவர் கையைப் பிடித்திழுப்பதையும் பார்க்கமுடிகிறது.

அம்ருதா மாத இதழ் மார்ச் - 2009"

Tuesday, April 14, 2009

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள் மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.

அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.

குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.

நடை நின்று, நிலத்தில் ஊனியது கால்கள்.சனிமூலை 'மென' பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.பிடித்தாள்.

கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன் மீது கவிழ்வதை உணரமுடிந்தது.

அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.

'கெழக்கத்தி ஆளுங்களா?'

அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.

துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது.

மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.

தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.

புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.

முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.

பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.

அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளை விடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.

அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள்.

சொம்பு நிரம்பியதும் 'உரிச்சி துண்ணு'என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.

ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான்,
இதோ இன்னொரு இளவரசி.

இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள்.
உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள்.

துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.

இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
'இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு' என்று இவனை அறுத்துக் கொண்டு போய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.

அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.
இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி... அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது.

ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள்.பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தது.

சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான் கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.

மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன.ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.

ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.

மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும் போது ஒரு கையில் ஓணான் கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிடவைத்தது.

எல்லோரையும் போய் சேர்த்து விட்ட ஓணான் கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்து போனது.

அவன் ஊஞ்சலை தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.

இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான்.

இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.
பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தை உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்து சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள். நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.

காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது.ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்.அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.

கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டேயிருந்தார்கள். புதுப்புது விளையாட்டு களில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.
”கண்ணாமூச்சி ஆடலாமா”

உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறு வரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.

மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.
ஒண்ணு... ரெண்டு... மூணு... நூறு... நூறு...

கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தது. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...

”ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா...”

அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.

இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய், அவனைத் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

அன்று ”எட்டுக்கு ஒண்ணு” என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டது.

இருள் அடர்ந்து போயிருந்த போது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள்.
பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.

அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.

பாட்டுக்கார லட்சுமி

திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோ மீட்டருக்கும் அப்பால், சு.வாளவெட்டி என்கிற ஒரு கிராமத்தில் இறங்கி, யாரை விசாரித்தாலும் பாட்டுக்கார லட்சுமியை அடையாளம் காட்டுவார்கள். அவரை விசாரிக்கும்போதே எவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து போகும். ஐம்பதிலிருந்து ஐம்பந்தைந்துக்குள் இருக்கும் லட்சுமி அம்மாவிற்கு வாளவெட்டி சொந்த ஊரோ, கட்டிக் கொடுத்த ஊரோ இல்லை. ஏதோ ஒரு ஊர். அந்த ஊரிலேயே இப்போதிருக்கும் சீமைஓடு போட்ட வீடு நான்காவதோ, ஐந்தாவதோ.

ஊர்பற்றியோ, வசிப்பிடம் பற்றியோ, தொழில் பற்றியோ, சாப்பாடு பற்றியோ, பட்டினி பற்றியோ கவலையின்றி, தனக்குத் தெரிந்த பாடல்களை தன் கரகரத்தக் குரலில் பாடி அதன் வீரிய விதைகளை இம்மாவட்டம் முழுக்க விதைத்து வைத்திருக்கிறார். ஏதோ ஒரு வீட்டில் நிகழும் மரணம் லட்சுமியை அந்த இழவு வீட்டுக்கு அழைக்கிறது. பெரும் குரலெடுத்து, மாரடித்து கண்ரப்பைகள் வலிக்க அழுது தன் துக்கத்தை தன் சக மனுஷிகளுக்கு மாற்றுகிறார். ஜாதி, மதம் அழியும் அந்த நிமிடங்கள் மிக முக்கியமானவை.

லட்சுமியின் சொந்த ஊர், புதுப்பாளையத்திற்கு பக்கத்தில் மூலக்காடு. வறுமை தின்று தீர்த்த மிச்சங்களாக அவர்கள் வீட்டில் நான்கு பெண்கள். வயல் வேளைகளில், அத்தனைப் பணிகளும் அவளுக்குப் பதினைந்து வயதுக்குள்ளேயே அத்துப்படி. ரொம்ப சின்ன வயசிலேயே யாரோ ஒருவனுக்கு கட்டி வைத்து கடமையை முடித்துக் கொண்ட பெற்றோர்கள். அவன் நல்லவனில்லை. அவன் தொழில் சாராயம் காய்ச்சுவது. தூரத்து மலையடிவார மரநெருக்கத்து புகை அவன் இருப்பை அவளுக்குச் சொல்லும். வாழ்தலுக்கான நெருக்கடியில், தன் சொந்த விருப்பங்களை பொசுக்கிப் போட்டு விட்டு, சாராயம் காய்ச்ச, அழுகிய வாழைப்பழத்திலிருந்து குப்பையில் கிடக்கும் பேட்டரி வரை பொறுக்கி தன் கணவனுக்கு அன்பு செய்தாள். அவன் வடித்தெடுக்கும் திரவத்தை மற்றவர்களுக்கு மொண்டு கொடுத்து பணிவிடை செய்தாள். குடிவெறியின் தொடுதல்களையும், சீண்டல்களையும் அருவறுப்போடு அனுமதித்தாள்.

அவன் காய்ச்சிய சரக்கை முதலில் அவன் ருசிபார்த்தான். அதீத ருசியால் தன்னை பறிகொடுத்து, அதற்குள்ளேயே மூழ்கிப் போய் கிடந்தான். குடும்பம், தன் மனைவி, குழந்தைகள் எதுவும் அவன் ஞாபகத்திலிருந்து அகன்றிருந்தன. காலத்தின் குரூரம் அவளை ஒரு வி‘க் கொடிபோல சுற்றியிருந்த போதிலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் எதற்கோ காத்திருந்தாள். எதுவும் நிகழவில்லை. தன் மௌனத்தைத் தானே கலைத்து, வடிசலில் வழித்திருந்த சாராயப் பானையை எட்டி உதைத்து கவிழ்த்தாள். ஒரு கல்லெடுத்து, அதன் மீது போட்டு அதை சுக்குநூறாக்கி தன் வெறியை அதன் மீது துப்பினாள்.

இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் தன் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, அந்த மலையடிவார கிராமத்தைத் திரும்பிப் பார்க்கவும் திராணியற்று நடந்தாள். அதன் பிறகு இந்த மாவட்டமே அவள் வசிப்பிடம். தனக்கு கிடைத்த அதீத சுதந்திரத்தை தன் மனம் போன போக்கில் துயரத்தோடு அனுபவித்தாள்.

அன்னக்கூடையில் மாட்டுக்கறி எடுத்து புதுப்பாளையும் சந்தையில், கூவிக்கூவி விற்றாள். தன் குரலின் வலிமை இன்னும் இரண்டு நாட்களுக்கு தன் குழந்தைகளின் வயிற்றை நனைக்குமென்ற உறுதியிருந்தது.

கறி விற்பதைவிட காய்கறி விற்பது இன்னும் கொஞ்சம் கவுரவமெனக் கணக்குப் போட்டாள். சுட்டெரிக்கும் வெயிலில் காய்கறிகள் கொட்டி, தனக்கேயுரிய ராகத்தோடு கூவிக்கூவி விற்று சந்தையைக் கலகலப்பாகவும், தன் சகவியாபாரிகளை கலக்கத்துக்கும் உட்படுத்தினாள். தன் பக்கத்து வீடுகளில் நடந்த மரணங்கள் அவளுக்குள் ஒரு ஊசி மாதிரி இறங்கி வலிக்க ஆரம்பித்தது. தனக்குள் தேங்கிப் போயிருந்த இந்த வாழ்வின் பெரும் துக்கம் பாடல்களாக உடைப்பெடுத்தது. அவள் குரல் பல மைல்களை அநாவசியமாகக் கடந்தது. அவள் பாடல்களில் புதைந்திருந்த சோகம் யாரையோ பறிகொடுத்து நின்ற குடும்பத்துக்கு தேவையாய் இருந்தது. இரவு, பகல் எந்நேரமும் சாவு வீட்டிலிருந்து அவள் குரல் தேடி ஆள் வரும். பஸ்úஸô, லாரியோ, சைக்கிளோ எந்த வாகனமும் எந்த அகாலத்திலும் அவளைச் சுமந்து கொண்டு போனது.

மரண வீடுகளில் தங்கள் பெரிய மேளங்களால் முழங்கிய "பாப்பம்பாடி ஜமா" தோழர்கள் அவளுக்குச் சிநேகிதர்களானார்கள். அவர்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் ஏதோ ஒரு கண்ணி இறுக்கிக் கட்டியிருந்தது. அவர்களின் பறை முழங்கும் சத்தத்திற்குத் தன் இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆட்டம் போட்டாள். ஒரு மரணத்திற்கான மொத்தக் கண்ணீரையும் ஒரு அணைக்கட்டு மாதிரி தனக்குள் தேக்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய விட்டாள்.

மரணவீடுகளில் அவள் மீது வீசியெறியப்படும் ரூபாய் நோட்டுகளைப் புழுதியிலிருந்து எடுத்து தன் இடுப்புக்குள் சொருகினாள். அவமானப்படுதலிலேயே அமிழ்ந்திருந்த இந்தக் குடும்பத்திலிருந்தும் குழந்தைகள் படித்தார்கள். பிணவாடை வீசும் ரூபாய் நோட்டுகளில் அந்தக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தாள்.

தன் கடமை முடிந்ததாகக் கருதிய கணம், தன் பிள்ளைகளிடமிருந்து விடை பெற்றாள். எந்த கிராமத்து கட்டி முடிக்கப்படாத குடிசையும், உதிர்ந்து போன ஓட்டு வீடும் அவளைத் தன்னில் வசிக்க பாசக்கரம் நீட்டி அழைத்தது. தன்னை நோக்கி நீளும் கரங்களுக்குள் தன்னை ஒப்புவித்து, எச்சில் ஒழுக சிரிக்கும் குழந்தை மாதிரி அதற்குள் அடைக்கலமானாள்.

சு.வாளவெட்டி கிராமத்தில், தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வியாபித்திற்கும் அந்தப் பெரிய ஆலமரமும், அதன் பிரமாண்ட நிழலில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குரங்குகளும்தான் அவளுக்கு தற்போது நெருக்கமான ஸ்நேகிதர்கள்.
மூட்டை மூட்டையாக காய்கறிகளையும், வெங்காயத்தையும் தலையில் சுமந்து தனி மனுஷியாக பேருந்தின் மேலேற்றிய பலமான உடல்வாகும் மனமும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

அகால இரவுகளில் பெருங்குரலெடுத்து பாடி தன் தனிமையைக் கரைக்கும் லஷ்மியின் குணத்தையும் மனதையும் நாம் படிப்பதற்கு, அவள் தினம் தினம் தான் சம்பாதிப்பதில் பாதி ரூபாய்க்கு, அதிகாலையிலேயே இட்லிகளை வாங்கி ஒரு தாம்பாலத்தட்டில் வைத்து அக்குரங்குகளைச் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் விதமே போதும்.

தன் கணவன் தன்னை மலையடிவாரத்தில் சாராயப்பானைகளோடு விட்டு விட்டு போனபிறகு அவளுக்கு பல ஆண்களோடு ஸ்நேகிதம் உண்டு. ஆனால் அது மனரீதியான உறவல்ல. தன் மன வலியை, இன்றொரு வலி மூலம் பழி தீர்த்துக் கொள்ளும் பகைமை.

ஊரார் துயரத்தையெல்லாம் தன் பாடல்கள் மூலம் துடைத்த லஷ்மியின் மரணத்திற்கு இவர்கள் யாரும் வரப்போவதில்லை. அவள் மரணம் இவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படக்கூடப் போவதில்லை.

கடவுளே,

நான் இந்த தேசத்தின் எந்த திசையிலிருந்தாலும் வேட்டை நாய்களின் துரத்தல்களிலேயே தன் வாழ்வைக் கழித்த அந்தப் பாட்டுக்காரியின் பாதங்களில் கொஞ்சம் பன்னீர்ப்பூக்களை என் கைகளால் கொட்டும் பாக்கியத்தைத் தா

Saturday, April 11, 2009

பச்சை இருளன்

புகை தந்த மயக்கத்தில் திமிறிச் சரிந்தன எலிகள். மூன்று நாள் அடைமழை தாங்கும் நிலவொளிக்கு பயந்து இதமான சூட்டில் தன் வளைகளின் நீளத்தை விஸ்தரிக்க எத்தனித்த பொழுதில்தான் இரண்டு பக்கங்களிலிருந்தும் புகை. தப்பிக்க நினைத்த பக்கங்களிலெல்லாம் செம்மண் பூசி மெழுகி இருந்தது. கூர்மையாகிப் போயிருந்த முகமும், விஷமேறிய பற்களும் மண்ணின் பலத்தில் சிதிலமடைந்தது. திட்டமிடப்பட்ட தாக்குதலில் தப்பிக்க வழியில்லை. கிழக்குப் பக்க வளைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட மண்சட்டியில் கங்கு வெறித்தனத்தோடு புகைந்து கொண்டிருந்தது. தேடித்தேடி மற்ற வளைகள் செம்மண் பூசலால் அடைந்து போயிருந்தது. உடைந்த சட்டியில் புதைந்திருந்த வன்மம் நிறைந்த வாய், வெற்று வெளியிலிருந்து காற்றைச் சட்டிக்குள் புகுத்தி புகைபரப்பிக் கொண்டிருந்த கொலைவெறியில் இருந்து தப்பிக்க முடியாமல் திமிறிச் சரிந்த ராஜ எலியை, வெளியே கொண்டு வந்து காலில் சங்கிலி பிணைத்து, இரண்டு கைகளும் பின்பக்கமாக அழுக்கேறிய வேட்டியால் பிணையப்பட்டு, அசைவற்று கிடந்த பச்சை இருளனை ரெட்டை மாட்டு வண்டியிலேற்றி, கூட்டு மொளையில் இழுத்துக்கட்டி இருந்தார்கள். உடன் வண்டியிலிருந்தவர்களின் முகங்களும், பின்னால் நடந்தவர் களின் முகங்களும் மரணத்தால் வெளிறிப் போயிருந்தது. உடம்பின் நடுக்கத்தில் கால்கள் பின்னி மாடுகள் அசைவின்றி நின்றிருந்தன. மரணத்தால் பயமேறிப் போயிருந்த ஆட்கள் அதே வெறியோடு வால்களைக் கவ்வி மாடுகளை விரட்டினார்கள். செய்தி காற்றில் அலைந்து மலைக்குன்றுகளின் இடை வெளிகளில் நுழைந்து ஊரெங்கும் பரவியது.

வெளியே வர பயந்த மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி ஊரை அமைதியாக்கியிருந்தனர். கிடைகளில் நிலவிய அமைதி, மொத்த ஆடுகளும் மரணித்த சந்தேகத்தைக் கோனார்களுக்கு அவ்வப்போது உருவாக்கியும், பயந்து மிரண்ட அதன் கண்கள் அவைகளின் இருப்பையும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தது.

அந்த இரவு வன்மம் நிறைந்ததாயிருந்தது. பச்சை இருளனின் முழிப்பிற்கு எதிர் நிற்க வலுவற்றுப் போயிருந்தது ஊர். குரலறுந்த கறுப்பு நாய்கூட கூரைவீட்டுச் சந்தில் அசைவற்று படுத்திருந்தது. அதையும் மீறி அதன் மேலும், கீழும் அசைந்த வயிறு பார்த்த எவரையும் பயமுறுத்தியது.

நீண்ட யோசனைக்குப் பின்பே பண்டாரியார், ஜமீன் கடடிடத்தின் வாசலில் அடர்ந்திருந்த மகுட மரத்தில் கட்டச் சொன்னார். மயக்கத்திலிருந்த பச்சை இருளன் குபீரெனத் தாக்கிய மகிழம்பூக்களின் வாசனையில் கண்விழித்தான். நிதானிக்க சில நாழிகைகளே போதுமானதாய் இருந்தது. கறுப்பேறி வளைந்த நூக்க மர நாற்காலியில் சாய்ந்திருந்த பண்டாரியார், அவன் முழிப்பில் அச்சப்பட்டு நாற்காலி நுனிக்கு வந்திருந்தார். சுற்றிலும் நின்றிருந்த ஆட்கள் அவன் முக அசைவுகளிலேயே புதைந்திருந்தனர்.

எவர் கண்ணும் தவறியும் பச்சை இருளனின் பக்கம் திரும்பாமல் இருந்தது. பண்டாரியாரின் பிள்ளைகள் மட்டுமே பயமற்று இருந்தனர். குன்றுகளுக்குள் அமைக்கப்பட்டிருந்த தன் வம்ச வழி அரண்மனை, சுற்றிலும் காவலிருந்த அடிமைப் பறையன்கள், அப்பாவின் கண் அசைவிற்கு நின்ற ஊர், தோட்டு, கம்பத்தம் எல்லாமும் அவர்களுக்கு உரமேற்றி இருந்தன. கேள்விப்பட்டிருந்த பச்சை இருளனின் இரவுகள் பயமேற்றி இருந்தாலும் இப்போது முற்றிலும் வேறுமாதிரியான ஆட்களாகி அவனை வேடிக்கைப் பொருளாக்க எத்தனித்தார்கள். நிதானமற்று போயிருந்த கண்களில் ஒவ்வொருவனாகக் கொண்டு வந்து கொண்டிருந்தான் அவன். அந்தப் பார்வைக்கு பயந்து, நின்ற இடத்திலேயே புதர்களில் பதுங்கினார்கள். எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அவன் உறுமி உதறும் ஒரே உதறலில் உயிருக்குப் பயந்து ஓடப்போகும் பெருநரிகளும், மூர்க்கத்தால் உருவேறியிருந்த துஷ்டமிருகங்களும் அவன் உடம்புக்குள்ளேயே படுத்திருக்கிறது என்பது.

மௌனம் அதுவாகவே உடைந்தது. சகடை வண்டியை இழுத்து வர நாலைந்து ஒட்டர்கள் ஓடினார்கள். ஒருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் வண்டியின் மேல், சுற்றிலும் கம்பிப் பூண் போட்ட இரும்புக் கூண்டை ஏற்றினார்கள். கண்களில் நெருப்புத் துளிகள் உருள, பெரும் மூர்க்கத்தோடு படுத்திருந்த பெருநரி எழுந்து உள்ளுக்குள்ளேயே நடமாட ஆரம்பித்தது. பண்டாரியாரின் பெரும் கத்தலுக்கு சகல பணிவோடும் எதிரில் நின்றான் கட்டைய இருளன். நரியற்று இருந்த வேறு கூண்டு மகுடமரத்தை ஒட்டி நிறுத்தப்பட்டது. இறுகி இருந்த கட்டை அவிழ்க்க முடியாமல் கட்டைய இருளனின் கைகள் நடுங்கின. அவன் பார்வை மகுடமரத்து வேர் வரை போயிருந்தது. அடி திம்மையளவிற்கு நீண்டிருந்த பச்சை இருளனின் தொடைகளைச் சந்திக்கவும் திராணியற்று இருந்தான். திமிராமல், முரண்டு பிடிக்காமல் அவமானப்பட்டிருந்த அவனைக் கூண்டுக்குள் இழுத்துப் பூட்டவே முன்னிரவு முழுக்கத் தேவையாய் இருந்தது. தலை கூண்டுக்குள் நுழையும்போது கம்பிகளுக்கிடையே ஜமீன் மாடியிலிருந்து ஒளிர்ந்த பச்சை மரகத வெளிச்சம் பட்டு கண்கூசினான். சுற்றிலும் இருந்தவர்கள் வெளிச்சப் பிரக்ஞையற்று இருந்ததையும் அவன் கவனித்தான்.

ஜமீனுக்குள் அடைபட்டிருந்த பச்சை மரகத லிங்கத்தைப் பற்றிய செய்தியை ஊர் தேக்கி வைத்திருந்தது தெரியும் அவனுக்கு. யாராலும் நெருங்க முடியாத அதன் வெளிச்சம் அவனைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அதை நகர்த்திவிடத் துடித்த பொழுதுகளை, கேள்விப்பட்டிருந்த கதைகள் தடுத்திருந்தன. ஊரும் உலகமும் நெருங்க முடியாத தூரத்திலும், பாதுகாப்பிலும், அழகிலும் உறைந்து போயிருந்த பச்சை மரகத வெளிச்சம் அவனை ஒன்றுமில்லாதவனாக்கி இருந்தது. பெண் ஸ்பரிசம் படாமல் முறுக்கேறியிருந்த உடம்பு லகுவாகிக் கொண்டிருந்தது.

கம்பிக் கதவுகள் சாத்தி இரும்புப் பூண் இழுத்து பூட்டப்பட்ட போதும் அசைவற்று இருந்தான். ஆள் கூண்டின் தரையில் கால் ஊன்றி, எழுந்து நின்று அசைகிற அளவுக்கு அனுக்குமலை தச்சனால் மெருகேறி இருந்தது நரிப்பூண். அன்றைய பின் இரவு முழுக்க நின்று அசையாமல் ஜமீன் வீட்டின் மேல்மாடியில் ஒளிர்ந்த வெளிச்சத்தையே தேடிக் கொண்டிருந்தான் பச்சை இருளன்.

பயத்தில் உறைந்திருந்த ஊரை, பெரிய தொந்தாலியின் தமுக்கு சத்தம் எழுப்பிவிட்டது. ஐப்பசிக் குளிரில் சில்லிட்டிருந்த உடம்புகளில் ஆர்வமும், பயமும் பரவ வீட்டின் வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே மறைந்து, மறைந்து தெருவை கவனித்தார்கள்.

தொந்தாலியின் தமுக்குச் சத்தத்தினூடே சகடை வண்டி கட்டைய இருளன் வகையறாக்களால் மெல்ல அசைந்து வந்து கொண்டிருந்தது. பெரும் சத்தத்தில் பெருநரி கூண்டுக்குள் குதிகாலம்போட்டு, எட்டி நடை நடந்து, கம்பிகளில் மோதி காயம் பட்டுக் கொண்டது. எதன் மீதும் பற்றற்றவனாய், ஆனால் கண்கள் எதற்கோ ஏங்குபவை போலக் கூண்டுக்கு வெளியே நின்ற பச்சை இருளனின் முழு உருவம், பெருநரியைப் பயமுறுத்தி உடனேயே கூண்டுக்குள்ளேயே படுக்க வைத்தது.

தெருத்தெருவாய் சகடை வண்டி இழுபட, பேச்சற்று நின்று கொண்டிருந்தான். மண்ணில் ஊனப்பட்ட விதைகளின் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பாதிப்பாதி கண்கள் முளைத்தும், மறைந்தும் அவனுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தன. அந்த ஊர் சுற்றலின் அவமானம் அவனுக்கு இல்லாமல் இருந்தது. சகடை வண்டி கூண்டில் அடைபட்ட நிமிடத்தில் அந்த வெளிச்சம் மட்டும் தென்படாமல் போயிருந்தால், இந்த கூண்டும், பெரு நரியும், இழுத்துக் கொண்டிருக்கிற கட்டைய இருளனின் வம்சமும் இன்னேரம் அற்றுப் போயிருந்திருக்கும்.

எதிர்பாராமல் தெருவில் எதிர்ப்பட்ட சில பெண்கள், திகிலடைந்து கையெடுத்துக் கும்பிட்டார்கள். மறைந்து பார்ப்பதில் தான் பெரும்பாலோர் ஆர்வப்பட்டனர். அவன் தெருக்களையும், அதன் பகல் நேரத்துத் தன்மைகளையும், வீட்டோடு ஒட்டியிருந்த படப்புகளையும் பார்த்தபடி பின்னால் திரும்பினான்.

எந்த வீட்டு ஆட்டுப் படப்பிலும் கைவிட்டு, மென்னி திருகி, கழுத்தில் தூக்கி போட்ட வெள்ளாட்டு கிடாய்களும், செட்டியார் வீடுகளில் ஓட்டைப் பிரித்து இறங்கி அற்றுக் கொண்டுபோன நகைகளும், ஜமீன் களஞ்சியத்தில் நுழைந்து வாரிக் கொண்டு வந்த தானியங்களும், எல்லாவற்றிக்கும் மேலாக கோட்டாங்கல் குன்றும் நினைவில் முட்டியது.

இரவின் எந்த நாழிகையிலும் அவன் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் கோட்டாங்கல் குன்று. அவன் பாத அசைவுகளில் மேலும் இறுகும் பாறை, அவன் வாரிக் கொண்டு வரும் எதையும் இழுத்து தன்னுள்ளே வைத்துக் கொண்டு, ஒன்றும் தெரியாமல் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும். கோட்டாங்கல்லின் அடிப்பாறை சந்தில் எந்த இரவிலும் கண்ணில் நெருப்புருள ஒன்றிரண்டு பெரு நரிகள் படுத்திருக்கும். அதுதான் இவனுக்குக் காவல். இதுவரை எந்த சீவனையும் கோட்டாங்கல் குன்றை எட்டிக்கூடப் பார்க்கவிடாமல் வைத்திருந்தது. ஊர் எப்போதும் கோட்டாங் கல்லையும், அதன் உள்ளே இருந்த பச்சை இருளனின் தனி ஜமீனையும், யாரும் நெருங்க முடியாத அதன் வலிமையையும் பேசியதாகவே எப்போதும் தூங்கும்.

இனி எப்படி கோட்டாங்கல் முகத்தில் முழிப்பேன் என்ற அவமானம் மட்டும்தான் இப்போது அவனிடம் இருந்தது. தன் பாதம் பட்டு உருகி தன்னையே இழுத்துக் கொள்ளுமா கோட்டாங்கல் பாறை? தன் தோல்வியின்மீது பாய்ந்து தன்னைக் குதறி எடுக்கப்போகும் பெருநரிகளுக்குப் பயந்தான். கோட்டாங்கல்லின் அடியில் தான் போட்டு வைத்திருக்கும் நகைகள், தானியங்கள், கிடாய்கள் எல்லாவற்றையும் அந்த விநாடியே விட்டுவிட்டு ஜமீன்மாடியில் ஒளிர்ந்த அந்த வெளிச்சத்தில் அடைக்கலம் தேடினான்.

வெயில் ஏறிக் கொண்டிருந்தது. கட்டைய இருளன் சோர்ந்து போயிருந்தான். மாரியம்மன் கோவில் அரச மரத்தடியில் நின்றது சகடை வண்டி. கோயில் மேடையில் சப்பணம் போட்டு உட்கார்ந்து நீராகாரம் அருந்தினார்கள் கட்டையன் வகையறாக்கள்.

பச்சை இருளன் கைச்சைகைக் காட்டிக் கட்டையனை அழைத்தான். திறந்து விட்ட மடை மாதிரி ஓடி நின்றான் அவன்,
யார் அவ?
இதற்காகவே காத்திருந்தவன் போல, மாடுகள் தெறித்து விடப்பட்டிருக்கும் சகடை வண்டியின் நுகத்தடியின் மேல் ஏறி நின்று முதன் முதலில் பச்சை இருளனின் முகம் பார்த்து சொன்னான் கட்டைய இருளன்.

தொரையின் ஒரே தங்கச்சி.

ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களின் காத்திருத்தல் அது.

தெருத்தெருவாய் சகடை வண்டி உருண்டதையோ, பெரும் சோர்வோடு மாடுகள் ஜமீன் குன்றில் ஏறியதையோ, மீண்டும் மகுட மரத்தின் அடியிலேயே சகடை வண்டியிலிருந்து இறக்கப்பட்ட கூண்டுகளில் ஒன்றில் தான் அடைபட்டு நிற்பதையோ, அவன் மறந்திருந்தான். நேர் எதிரே சாத்தப்பட்டிருந்த ஜன்னலை மீறி வெளியே பரவியிருந்த வெளிச்சத்தில் மயங்கி இருந்தான்.

இரண்டாம் ஜாமம் முடிந்த அடுத்த நிமிஷம், எட்டி எதிர் கூண்டு பெருநரியின் வாயைப் பிடித்திழுத்து அதில் திக்கு முக்காடி, மல்லுக்கட்டி, நிற்க இடம் கொடுக்காமல் அதன் நாற்றமடித்த பற்களைக் கம்பிகளில் தேய்த்துத்தேய்த்து ரத்தக்களறியாக்கி, மூன்றாம் சாமத்தில் அவனும் பெருநரியும் வெளியேறினார்கள். அந்தப் பின்னிரவில் திடுக்கிட்டெழுந்த அனுக்கமலை தச்சன் உத்திரத்தில் தொங்கினான்.

திரும்பிப் பார்க்கவும் திராணியற்று, பாறைகளின் இடைவெளியில் மறைந்தது பற்களிழந்த, வாய்கிழிந்த பெருநரி.

நிரம்பி இருந்த சிங்காரக்குளப் படிக்கட்டுகளில் இறங்கினான். நாள் முழுவதும் வழிந்திருந்த வியர்வை நாற்றம் போக முகம் கழுவினான். எழுந்து திரும்பும்போது பலாக்காய்கள் முகத்தில் மோத, கோட்டாங்கல்லுக்கு எதிர் திசை நோக்கி, வடக்குக் கரையில் பெரும் நடை நடந்தான் மரகதலிங்கத்தின் பெருஒளி ஒன்று தன்னைப் பின்தொடர்வதை அறியாதவனாக.

நிரம்பலில் ததும்பிய ஏரியில் இறங்கி நடந்தான். எதிரில் பெரும் மைதானத்தில் அங்கங்கே நின்றிருந்த பாறைக் குன்றுகளுக்கும் அவன் பாதங்களின் அசைவுகள் தெரிந்திருந்தது. விஷத்தைக் கொடுக்குகளின் முனையில் தேக்கியிருந்த மொணப்பா ஏரியில் தேளி மீன்கள் கால்களில்பட உதறிவிட்டு நடந்தான். ஒரு தேளியும் அவன் உடம்பில் ஒரு சிறு கீறல்போட தைரியமற்று இருந்தது.

இடையனுக்கும், பச்சை இருளனுக்கும் நடுவில் நிறைந்திருந்த ஆடுகள் அசைவற்று நிற்க, பேரழகோடு நகர்ந்த அந்த பச்சைவெளிச்சம் பாறைகளால் இறுகியிருந்த குன்றுக்குள் நுழைந்து திரும்பி பச்சை இருளனை மட்டும் கைநீட்டி அழைத்தது.

இடையனும் ஆடுகளும் நின்ற இடங்களிலேயே கற்களாய் சமைந்து நிரந்தர சாட்சிகளாகிப் போனார்கள். யாரும் எட்டிப் பார்க்க முடியாத இடங்களில், கோட்டாங்கல்லுக்கு அப்புறம், அந்த ஊரில் பொறையாத்தம்மன் குன்றும் சேர்ந்தது.

குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத சுகந்தன்


எந்த சட்டத்துக்குள்ளும் அடைக்க முடியாமல் அவன் திமிறிக் கொண்டேயிருந்தான். ஒரு பாடகனுக்கென வரையறுக்கப்பட்டிருந்த உன்ன வரைமுறைகள் எதையும் அநாவசியமாக உதறித் தள்ளினான். ஆனாலும் அவன் தொண்டைக்குள் புல்லாங்குழல்களால் கூடு கட்டி ஒரு குயில் நிரந்தரமாக வசித்துக் கொண்டேயிருந்தது.

தமிழக இடதுசாரி மேடைகளை அவன் தன் குரலால் வசியப்படுத்தியிருந்தான். ஒரு வன்முறையாளனைப்போல மேடையேறி, ஒரு குழந்தையைப் போல தன் குரலால் கொஞ்சுவாள். முறைப்படி இசை கற்க அவன் எடுத்த முயற்சியை மூன்றே நாட்களில் அவனே நிராகரித்தான். யாரும் எளிதில் அணுகிவிட முடியாதபடியான ஒரு முரட்டு பாவனையை பிடிவாதமாய் கடைபிடித்து, அதில் தோற்றுக் கொண்டே இருந்த பச்சைக் குழந்தை சுகந்தன்.

பெருங்காற்றில் உதிர்ந்து போகும் சருகென அவனை நண்பர்கள் துயரத்தோடு எதிர்பார்த்த நிமிடங்களில், அதே மரத்தில் ப்ரவுன் கலரில் துளிர்க்கும் இலையாகி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவான். மாறி மாறி நடந்த இந்த உயிர்ப்பின் விளையாட்டில் சென்றவாரம் அவன் தோற்றுப் போனான்.

சினிமப் பாடல்களுமின்றி, கிராமியப் பாடல்களுமின்றி அவன் தனக்கென 500க்கும் மேற்பட்ட பாடல்களை சேகரித்து வைத்திருந்தான். பரிணாமன், நவகவி, மகாகவி பாரதி, ரமணன் ஆகியோரின் வரிகளோடு, குவார்ட்டர், குவார்ட்டராய் அவன் காலி செய்த பாட்டில்களும், உறிஞ்சின மீதியாய் சிதறிக்கிடந்த சிகரெட்டுகளுக்கும் மத்தியில் அவன் கரைத்த இரவுகளில் கண்டெடுத்த மெட்டுகளில்தான் நாம் இதுவரை பல இலக்கிய மேடைகளில் கரைந்து, அழுதது, சந்தோஷித்தது எல்லாமும்...

பாடுவதற்கு நல்ல மேடை, சக்திவாய்ந்த ஒலிபெருக்கி, உடன் வாசிப்பதற்கு சரியான கலைஞர்கள், இதெல்லாம் அவன் எதிர்பார்த்ததில்லை. சில நண்பர்கள் போதும், மனதுக்குப் பிடித்த ஒரே ஸ்நேகிதி போதும், பாடிக்கொண்டே இருப்பான். தன் பாடல்கள் அவர்கள் மீது நடத்தும் வன்முறையை உள்ளூர் ரசித்தவனாக அடுத்த பாடலுக்குத் தாவுவான்.

எந்த பெரிய அங்கீகாரத்தையும் யாரிடமிருந்தும் எப்போதும் எதிர்பார்த்ததில்லை. பாடுவதன்றி மற்றதெல்ல தன் வேலையில்லை என்பது ஒரு தவம் மாதிரி அவனிடம் தங்கியிருந்தது. எத்தனைப் பெரிய பாராட்டுக்களையும், ஒரு அழுத்தமான கைக்குலுக்கலுக்கு மேல் அனுமதித்தவனில்லை. திரைப்பட மோகம், இசை ஆல்பங்களின் மேல் சாய்வு என்று எதிலும் தன் மனச் சாய்வுக்கு இடமளிக்காத கலைஞன். குரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத அந்த கலைஞனின் குரலைத்தான் போன வாரம் ஈவிரக்கமின்றி காலம் காவு வாங்கியது.

மழை மனிதர்கள்

மரங்களடர்ந்த கேரள போர்ட் கொச்சின் பகுதியில், வியாபித்திருக்கும் அந்த பழமையான ஆலமரத்திற்கு ஒவ்வொரு வருடமும் அங்குள்ள கலைஞர்களும், ஓவியர்களும் எடுக்கும் விழாவிற்கு நான் தொடர்ந்து இருமுறை பயணித்திருக்கிறேன். பரந்து விரிந்து பயமூட்டும் தின்மையோடு நிற்கும் நூறு வருடத்திற்கும் மேற்பட்ட அந்த அரசமரத்தை அவர்கள் "அம்மச்சி மரம்" என்று வாஞ்சையோடு அழைக்கிறார்கள். தன் அம்மச்சியின் மடியில் அமர்ந்து அதன் பேரக்குழந்தைகள் எடுக்கும் விழா அலாதியானது. நினைவில் உதிரும் மனிதர்களுக்கிடையே சில அபூர்வமான மனிதர்களையும், கலைஞர்களையும் அவர்களிடையேயான உரையாடல்களையும் ஒரு புள்ளியாக்கி எனக்குள் எப்போதும் பாதுகாத்திருக்கிறேன்.

காஷி ஆர்ட் கபே என பெயரிடப்பட்ட அந்த சின்னஞ்சிறு அரங்கின் சிவப்பு டெரகோட்டா பதிக்கப்பட்ட தரையில் அங்கங்கே பல நாடுகளிலிருந்து வந்திருந்த வாசகர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். புகைப்பதற்கும், குடிப்பதற்குமான முழு சுதந்திரம் அந்த அறை முழுவதும் பரவியிருந்தது. அப்போதுதான் பறிக்கப்பட்ட புத்தம் புதிய பூக்களால் நிரம்பிய செம்பு உருளிகள் அங்கங்கே நம் மனதை ஒருமைப்படுத்துகிறது. நிசப்தம் ஓர் அரூபமாக அங்கே தங்கியிருக்கிறது. கவனிக்கப்படாத தாடியும், அழுக்கடைந்த ஜிப்பாவுமாக ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் இச்சூழலின் மீது எவ்வித அக்கறையுமற்று கையில் பிடித்திருந்த ஒரு கிரையான் பென்சிலால் அந்த வெள்ளை சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருந்தார். அவர் தன் கை லாவகத்துக்கு எடுத்துக் கொண்ட அளவு அந்த சுவற்றின் நீள அகலம் முழுவதையும்.

உலக வர்த்தக மைய நொறுங்கலின் சத்தத்தை சில மைல்களுக்கு அப்பாலிருந்து கேட்ட, கட்டிட இடிபாட்டை பயந்து நடுங்கிய உடலசைவில் உணர்ந்த ஒரு அமெரிக்க பெண் கவிஞர் அதைப்பற்றிய தன் மன சித்தரிப்பை கவிதையாக்கி அந்த அரங்கில் அன்று வாசித்துக் கொண்டிருந்தார். மொழி விலகல் காரணமாக நான் அதில் கவனமின்றி இருந்தேன். அசுரத் தனமாக இயங்கிய அந்த ஓவியனின் கை வேகத்தை மீறி என் மனம் நகரவில்லை. ஒரு மணி நேரத்துக்குள் வரைந்து முடிக்கப்பட்ட அச் சுவரோவியம் ஒரு பாரம்பரிய வெங்கல உருளி. முற்றிலும் கிரையானில் நிரப்பப்பட்டிருந்த அதன் வசீகரம் அங்கிருந்த யாவரையும் ஒரு வெளிச்சம் போல் இழுத்தது. அங்கிருந்த வெளிநாட்டுக்காரர்கள் அந்த ஓவியனை அணைத்து முத்தம் தந்து தங்கள் அன்பைச் சொன்னார்கள். அதில் துளியும் ஆர்வமற்றவனாக அங்கிருந்து வெளியேறி ஒரு மர இருட்டில் நின்று தன் சிகரெட்டினுள் அடைக்கப்பட்ட புகையிலை துகளை வெளியே எடுத்து, அதுனுள், தான் மடித்து வைத்துள்ள காகித்தத்திலிருந்து எடுக்கப்பட்ட துகளை நிரப்பி நிதானமாக புகைக்கத் துவங்கிய நிமிடத்தில் நான் வல்சனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

ஒரு புன்னகையால் அதை அங்கீகரித்த வல்சன், நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதில் பெரும் உவகை கொண்டு சந்ரு மாஸ்டர் தெரியுமா? ட்ராஸ்கி மருது அறிமுகமா? என விசாரிக்கும் போதே அவர் கை அழுத்தத்தின் நெகிழ்வை உணரமுடிந்தது.

"வல்சன்" என்று கேரளக் கலைஞர்களால் அன்புடன் அழைக்கப்டும் "வல்சன் கூர்ம கொல்லேரி"தன் நூண்கலை படிப்பை சென்னை ஓவியக் கல்லூரிலும், தன் முதுகலை படிப்பை பரோடா நுண்கலைக் கல்லூரியிலும் தொடர்ந்திருக்கிறார்.

ஒரு முறை வல்சனை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென்ற என் ஆர்வம் ஒரு தொலைபேசி உரையாடலிலேயே நிறைந்தது. நான் அழைத்த அன்றே அவர் கொச்சியிலிருந்து புறப்பட்டார். எப்போதும் போல் ஒரு இலக்கிய நிகழ்விற்கான தயாரிப்பு வேலைகளில் நாங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மழை நாட்கள் அது. ஒரு யாத்ரீகன் மாதிரி என் வீட்டுக்குள் நுழைந்து, தான் தங்குவதற்கான ஒரு இடத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன் கையோடு கொண்டு வந்திருந்த சில புகைப்படங்களை எங்களுக்கு காட்சிப்படுத்தினார். எங்கள் வியத்தலை இதுவெல்லாம் ஒன்றுமில்லையென கூச்சப்பட்டார்.

ஒரு கவிதா நிகழ்வு மேடைக்கு முன் வீணை போன்ற வடிவத்தில் வைக்கப்பட்டிருந்த சுடுமண் சிற்ப பானையில் வண்ணப் பூக்கள் நிரம்பி ததும்பும் அழகில் நான் நீண்ட நேரம் மூழ்கியிருந்ததை கவனித்த வல்சன், "இது ஒன்றுமில்லை பவா.. ரெண்டு பெரிய பானைகள் வாங்கி வாý என சொல்ல அடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சாத்தியப்பட்டது. பானையின் வாய்ப்பகுதியில் குறுக்காக ஒரு ஆக்சே பிளேடால் அறுக்க ஆரம்பித்தார். சுமார் இரண்டு மணி நேரம் அறுதெடுத்தப்பிறகு பானை இரண்டாக பிளந்தது. சிதைவில்லாமல் கிடைத்த ஒரு படைத்தலில் மகிழ்வுற்று, ஒரு கறுப்பு காப்பியும், தன் பிரத்யேக சிகெரட்டையும் உள்ளிழுத்து, பிளக்கப்பட்ட பானைகளை எதிர் எதிரே ஒன்று சேர்த்து தேங்காய் நார் கயிற்றால் பிணைத்தார். ஒரு படுத்திருக்கும் வீணை. அதன் குழி பாகத்தில் தண்ணீர் நிரப்பி பூக்கள் நிரப்பி முற்றத்தில் வைத்து அழகுப்பார்த்தோம்.

இதை ஆரம்பம் முதல் அருகிலிருந்து கவனித்த என் நண்பர் ஒருவர், மிகுந்த மரியாதையோடும், லேசான பயந்தோடும் வல்சனிடம்

"சார் இந்த பானையை அறுப்பதற்கு உங்களுக்கு இரண்டு மணி நேரமாகிறது. - என்னால் மூன்று நிமிடத்தில் பழுதில்லாமல் அறுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே தன் கையோடு கொண்டுவந்திருந்த மின்சார இன்ற்ற்ங்ழ் ரைக் கொண்டு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இரண்டு பானைகளை அறுத்துக் காட்டினார்.

"இது எனக்கு தோணாம போச்சோ"வென்று வல்சன் தன் தலையில் கைவைத்து சிரித்துக் கொண்டார். என் குழந்தைகளுக்கு வல்சன் அன்பான நண்பனாகி அவர் கூடவே ஒட்டிக்கிடந்தார்கள். நாங்கள் அப்போது நடத்திய இலக்கிய நிகழ்வில் இருபதுக்கும் மேற்பட்ட பிளக்கப்பட்ட பானைகளில் உருவான உருளிகளில் பூக்கள் நிறைந்தது. அந்த நிகழ்ச்சி நடந்த மைதானத்தை கட்டுகட்டாய் வாங்கிய மூங்கிலிலிருந்து பிரமாண்ட குடில் செய்து அழகுபடுத்தினார். இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் அதற்குள் விளையாடிக் கொண்டிருந்த அழகை விட அக் கூட்டம் பெரிதாய் எதையும் தந்துவிடவில்லை.

நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்திற்கும் மேல் எங்களுடனே தங்கியிருந்த நாட்கள் மீண்டும் கோரமுடியாதவைகள். பக்கத்திலிருந்த ஒரு குயவர் வீட்டிற்குப் போய், வல்சனே உருவாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மண்குவளைகள் இன்றும் அவரின் அடையாளங்களாக எங்களால் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டு பால்கனியில் மூங்கில்களைக் கொண்டு ஒரு உருவத்தை வடிவமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அவர் கேட்டது 5 கட்டு மூங்கிலும், தான் சொல்கிறபடி அதை பல்கோண வடிவங்களில் பிளந்து கொடுப்பதற்கு ஒரு ஆளும். மூங்கில் கட்டுகளோடு எனக்கு தெரிந்த மூங்கில் கூடை முடையும் ஒரு குறப் பெண்ணையும் கூட்டி வந்தேன். மிகுந்த உற்சாகமடைந்த இருவரும் தங்கள் புதிய படைப்பை அன்று காலையிலேயே துவங்கினார்கள். முற்று பெறாத தன் பணியினூடே அன்று மாலை என்னை அழைத்த வல்சன், இந்த வேலை சலிப்பூட்டுகிறது பவா. இந்த பெண்தான் என் படைப்பின் இரகசியங்களை கண்டடைய விரும்புபவளாக இருக்கிறாள். எனக்கு ஒரு சைக்கிள் வேண்டும். இவளை பின்னாள் உட்கார வைத்து ஊர் சுற்ற வேண்டும், மலை சுற்ற வேண்டும்.... என ஒரு குழந்தையைப் போல குதூகலித்தார். ஒரு நாள் அறிமுகத்திலேயே அவரோடு பயணிப்பதற்கு அப் பெண்ணுக்கும் பேராவல் இருந்தது. அதன் பிறகான மூன்று நாட்களை அவரின்றி அல்லது அவர்களின்றி நாங்கள் நகர்த்தியிருந்தோம். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறியும் ஆவல் எங்களுக்குள் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

மூன்றாவது நாள் மாலை வல்சன் மட்டும் அதே சைக்கிளில் உற்சாகம் குறைந்தவராக வந்து தன் பொருட்களை, துணிகளை எடுத்து வைத்து தான் புறப்படுவதாக சொன்னபோது என் பையன் அவரை தன்னோடு இன்னொரு நாள் இருக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்து கேட்டுக் கொண்டான். தோளில் மாட்டிய தன் உடமைகளை கீழறிக்கி வைத்து விட்டு தன் பயணத்தை ஒத்திப் போட்டு எங்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

மலை சுற்றும் வழியில் உள்ள ஒரு குளத்தைப் பார்த்தேன். சிங்கத்தின் வாய் பிளந்திருப்பது மாதிரி இருப்பதுதான் அதன் நுழைவாயில். (சிங்க முக தீர்த்த குளம்) புராதன அழகோடு கூடிய அதன் மீது யார் சுண்ணாம்பு அடித்து கெடுத்தது? என்ற கேள்விக்கு நான் மொளனமாக இருந்தேன். அடுத்த முறை என் திருவண்ணாமலைப் பயணம், அதன் மீதேறியிருக்கும் சுண்ணாம்பை அகற்றி அதன் பழமையை, அதன் புராதன அழகை மீட்டெடுப்பதுதான் என்று சொல்லி கேரள பாரம்பரிய புட்டு செய்து கொட்டாங்குச்சியில் கொடுத்தார். அரிசி புட்டில் பழமும், நெய்யும் கலந்து பிசைந்து உண்ணும் ருசி எனக்கு வல்சன் ஏற்படுத்தியதுதான்.

எங்கிருக்கிறீர்கள் வல்சன்?

மீண்டும் எப்போது வருவீர்கள்?

சிங்க முக தீர்த்த குளம் இம் மழையில் நிறைவதற்குமுன்

அந்த கூடைமுடியும் குறப்பெண் என்னைப்பார்க்கும் போதெல்லாம்


"அந்த சார் எப்ப வருவார்ண்னே?" என்ற கேள்வி மங்கும் முன்.