Monday, October 24, 2011

தொடர் - 12


சல்வடோர் டி விட்டாவின் சினிமா பாரடைஸ் என்ற உலகப் புகழ் பெற்ற இத்தாலியப் படத்தில், அப்படத்தின் நாயகன் பெரிய இயக்குநராகி திரும்பித் தன் நகரத்துக்கு வந்து அவனை இப்படி ஓர் இயக்குநராய் உயர்த்திய சிதிலமடைந்த அத்திரைப்பட அரங்கின் முன் நிற்கிற துயரம் எப்போதும் என்னுள் வந்து வந்து போகும் காட்சிப் படிமம். இதற்குச் சற்றும் குறைவில்லாத மனநிலையை எங்கள் ஊர் ராமலிங்கனார் தெரு மூலையில் சிதைந்து போயுள்ள மீனாட்சி தியேட்டரைப் பார்க்கும் போதெல்லாம் அடைந்திருக்கிறேன். அதைக் கடக்கும்போதெல்லாம் , துருப்பிடித்த அதன் மூடிய இரும்பு கேட்டைத் திரும்பிப் பார்ப்பேன். ஒரு துக்கம் உடல் முழுவதும் பரவுவதை உணர்வேன். யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத, வார்த்தைகளில் கூடாத மன உணர்வு அது. ஒரு கிழட்டு வேசியின் அந்திம காலத் துயர வாழ்வை மீட்டுவது போன்றது.

ஆறரை மணிக்குத் துவங்கும் பஸ்ட் ஷோ பார்க்க நாலு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் புறப்பட்டு கியூவில் முதல் ஆளாய் நிற்க ஆரம்பித்தாலும், ஒரு போதும் முதல் டிக்கெட்டை நான் வாங்கினதாய் நினைவில்லை. மனிதர்களின் அசுர நெரிசலில் நான் நசுங்கியும், பின்னோக்கி இழுத்து விடப்படினும்கூட ஒவ்வொரு படத்தையும் வியர்வையினூடே பார்த்த நினைவுகள் மேலிடுகிறது.

அத்தியேட்டரில் நான் பார்த்த தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்த முடியாது. ஆனால் பாரதிராஜாவின் நிழல்களை முதல் நாள் முதல் காட்சியில் மூன்றாம் ஆளாக டிக்கெட் வாங்கி, மனித ஆரவாரங்களினூடே பார்த்த நாளின் ஞாபகம் மட்டும் என்றென்றும் என்னுள் நேரம், காலம், பருவம் எல்லாவற்றையும் உள்ளடக்கி அப்படியே உறைந்திருக்கிறது.

அன்று அப்படம் என்னுள் நிகழ்த்திய உணர்வுக் குவியலான உரையாடல்கள், வேலையின்மையைப் பற்றி அது தந்த மனச் சித்திரம், கலைஞனின் பெருமிதம் குறித்து அது பேசிய உச்சம் இப்படத்தின் இயக்குநரை ஒரே ஒருமுறை வாழ்வில் சந்தித்துவிட முடியுமா என்ற பேராசை எல்லாத் தமிழ் இளைஞர்களுக்கும் போலவே எனக்குள்ளும் எழுந்த அன்றைய இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.

ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல காலம்தான் எத்தனை வேகமாக நம்மை சடசடத்துப் போய்விடுகிறது! ஆறேழு வருடங்களுக்கு முன் பெரும் தனிமை சூழ்ந்த ஒரு விடுமுறை நாளின் பின்னிரவில் என் நண்பர் எஸ். கே. பி. கருணாவுடன் பெங்களூர் போய், உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கினோம்.

அயர்ந்து தூங்கும் நண்பர்களின் முகங்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, திருட்டுப்பூனையின் மெல்லிய காலடி ஓசையில் அறையை விட்டு வெளியேறி நாங்கள் தங்கியிருந்த மூன்றாவது மாடியின் லிப்ட்டுக்குள் நுழைய வைத்தது எல்லாமும் ஒரு காப்பியின் பொருட்டே.

கண்ணாடி அணிந்து, பெர்முடாஸ் போட்டு, ஒரு கங்கலான டி-ஷர்ட்டோடு அந்த லிப்ட்டில் என்னோடு இருந்த லிப்ட் ஆபரேட்டர் அச்சு அசல் பாரதிராஜாவின் இன்னொரு வார்ப்பு. அவசர அவசரமாய் காபி குடித்து, தம் அடித்து, மீண்டும் அறைக்கு வந்து என் நண்பர் கருணாவிடம் இந்த ஹோட்டல் லிப்ட் ஆப்பரேட்டர் நம்மூர் பாரதிராஜா மாதிரியே இருக்கிறார் என்று சொன்ன என் குழந்தைத் தனத்தையும் கருணா புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த காப்பிக்கு அவரோடு போய், மங்கலான அவ்வெளிச்சத்தில் உட்கார்ந்து நிமிர்ந்தால் எங்கள் எதிரில் அவர்.

இரு குழந்தைகளின் குதூகலத்தோடு பாரதிராஜாவும் கருணாவும் உடல்மொழியில் கட்டித் தழுவி, நிதானப்பட்டு, கருணா என்னை அறிமுகப் படுத்தினார்.

‘’இவர் பவா, என் நண்பர், நல்ல எழுத்தாளர் சார்’’

ஹேய், இவனைத் தெரியாதா எனக்கு! இவன்தான் கொஞ்சம் முன்னாடி என்னை யாருன்னே தெரியாத மாதிரி லிஃப்ட்ல மொறச்சான்.

சார்... நான் உங்களை லிப்ட்...’’ வார்த்தைகளைப் பாம்பின் நச்சு நாக்கு மாதிரி உள்ளிழுத்துக் கொண்டேன்.

காலம்தான் என்னென்ன விளையாட்டுகளை நம்முன் தினம் தினம் விளையாடிப் பார்த்து விடுகிறது. அவர் காபி குடித்து முடிக்கும்வரை, நிழல்கள் படம் ஒவ்வொரு பிரேமாய் அவர் முகத்தின்மீது ஓட ஆரம்பித்தது எனக்கு.

ராஜசேகர், சந்திரசேகர் என்ற இரு அறிமுகங்களின் இயல்பான நடிப்பும், ஒவ்வொரு காட்சியும் வரையப்பட்ட ஓர் ஓவியம் மாதிரி வந்துபோன இன்றுவரை பெயர் தெரியாத அப்படத்தின் நாயகியும், மனதில் நினைத்ததை அப்படியே திரைக்கு மாற்றியஒரு கலைஞனின் அசாத்தியமான ஆளுமையாலும் நிறைந்து அறைக்குத் திரும்பினேன்.

பெப்ஸி போராட்டம் உச்சமாகியிருந்த நேரமது. திருவண்ணாமலையில் ‘மறுமலர்ச்சி படமாகிக் கொண்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் ஹென்றி படைப்பாளிகள் சங்கத்தின் தீவிர செயல்பாட்டாளர். அப்போது படைப்பாளிகள் சங்கத்தைத் தலைமையேற்று நடத்தியவரும் தன் நண்பனுமான பாரதிராஜாவின் பிறந்தநாளை திருவண்ணாமலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தன் விருப்பத்தை ஹென்றி சார் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவ்வளவுதான்.

மூடப்பட்டிருந்த தன் ரைஸ் மில்லையே ஓரிரு நாட்களில் கலாபூர்வமாக்கி, ஒரு படைப்பாளியின் பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தப்படுத்தினார் கருணா.

அது இன்னும் நம்ப முடியாத ஓர் இரவு.

முப்பது நாற்பது இயக்குநர்கள் பத்திருபது கார்களில் வந்திறங்கி எங்களை ஆச்சர்யப்படுத்தினர். மயக்கமூட்டிய அன்றைய லேசான மழைத்தூறல் மிக்க இரவில் கிட்டத்தட்ட விடியும்வரை எங்juகள் உரையாடல் நீண்டது.

அடுத்த நாள் அவரோடு பயணிக்க வாய்ந்த பகல்நேரக் கார் பயணம் நேற்றிரவு விட்ட உரையாடலை நீட்டித்துக் கொள்ள உதவியது. இயக்குநர் வி. சேகரின் சொந்த கிராமமான நெய்வா நத்தத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து வேட்டவலம் போகும் சாலையில் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.

வழியோர மந்தமான கிராமங்கள், டீக்கடை மரப்பலகைகளில் கிராமத்து ஆட்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தவர் என்பக்கம் திரும்பி, தமிழ்நாட்ல எல்லா கிராமத்தானும் ஒருபோலத்தான் இருக்கான். இது மாவட்டம், ஜாதி அப்படியெல்லாம் ஒரு மயிருமில்ல என்று வார்த்தைகளை முடிப்பதற்குள் கார் கோணலூர் ஏரிக்கரைமீது போய்க் கொண்டிருந்தது. பரவசத்துடன் காரை நிறுத்தச் சொன்னார். நான்கு திசைகளிலும் வியாபித்திருந்த உருண்டை உருண்டையான கற்குன்றுகள் அவருக்குள் எதையோ மீட்டுக்கொண்டு வந்திருப்பதை நான் மௌனமாய் உணர்ந்தேன்.

ஆழ்ந்த மௌனமும் பெருமூச்சுமாய் காரின் முன்சீட்டிற்கு ஏறி, என் பக்கம் திரும்பிக் கொண்டார்.

‘‘இந்த லேண்டஸ்கேப் எத்தனை அற்புதமா இருக்கு! இப்படி ஒரு எடத்தை நான் கிழக்கே போடும் ரயிலுக்காக தேடி அலைந்தேன், உங்க ஊரை அப்ப பாக்கல. இந்த எரியாவை ஏனோ மிஸ் பண்ணிட்டேன்’’ என அப்பயணத்தின் முடிவுவரை எதையோ இழந்த மன பதற்றத்தோடே பேசிக் கொண்டுவந்தார்.

சாலையோரங்களில் அலாதியாய் பூத்துக்கிடந்த கசா மலர்களை படமாக்க வேண்டி அவசர அவசரமாய் முயன்றும் ஆறேழு மாதங்கள் கழித்தேபோய் அப்படி ஒரு மலர் செடிகள் இருந்த அடையாளமேயற்ற நிலப்பரப்பைப் பார்த்து சத்யஜித்ரே அடைந்த மன பதற்றத்திற்கு நிகரானது அது.

ஒரு சிறு பத்திரிகையில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதியிருந்த கட்டுரையை என் மதிய உணவினூடே வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், தமிழில் பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன் மிக முக்கியமான படம். திராவிடக் கட்சிகள் ஒரு சாதாரண ஸ்லம் பையனின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை அதன் கலாபூர்வத்தோடு சொன்ன படம் அது என்று அதை முடிக்குமுன்பே பாரதிராஜவை தொலைபேசியில் அழைத்து அச்செய்தியை பகிர்ந்து கொண்டேன். தான் மிக எதிர்பார்த்திருந்தும் எதனாலோ அப்படம் நான் நினைத்த அளவுக்கு பேசாமல் போனது. ஆனால் எனக்குத் தெரியும் பவா, ஈவிரக்கமற்ற விமர்சனத்தை காலம்தான் முன்வைக்கும். அப்படைப்பை நானே மறந்த பிறகும் யாரோ ஒரு நேர்மையான விமர்சகனால் அது போற்றப்படுகிறது அது போதும் எனக்கு என அவர் தழு தழுத்ததை தவிர்க்க வேண்டி,

‘‘அப்புறம் எப்படி சார் இருக்கீங்க?’’

‘எனக்கு ரொம்ப பிடிச்ச படத்துல ஒன்னு பவா என்னுயிர் தோழன், ஏன் அது தோத்துச்சி என ஆவேசத்தோடு என்னிடமே கேட்டார். எதிர் முனை மௌனத்தை உணர்ந்து ‘தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சுக்க முடியலை பவா என அங்கலாய்த்த அக்கலைஞனின் குரல் நீண்ட நேரம் தொலைபேசியை மீறியும் அந்த அறையில் அலைந்துகொண்டிருந்தது.

மழைநீர் அறைக்குள்ளும், வெளியிலேயும், பொழிந்த ஓர் இரவு அவர் எங்களுக்கு ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலு பேர் கதை சொன்னார். என் வாழ்வில் என்றாவது ஒரு முறை இந்த படத்தை நான் தான் எடுப்பேன். என்னளவிற்கு இக்கதையை உள் வாங்கிக் கொண்டவன் எவனுமில்லையென்று குரல் உயர்த்தினார். ஆனால் அந்நாவல்தான் அவர் தமிழில் கடைசியாக வாசித்தது என என்னால் உணரமுடிந்தது. எதன் பொருட்டோ பிரபலம் வாசிப்பை துப்புற துடைத்து விடுகிறது. அது அவருக்கும் நேர்ந்தது இயல்புதான்.

கொஞ்சம் கொஞ்சமாய் படைப்பு மனம் விலகி, எதை எதையோ முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் பெரும் கலைஞர்களை இலக்கியத்திலும் திரையிலும் நாம் அறிவோம். அப்படி ஓர் இறுதி முடிவுக்கு வாசகனோ, பார்வையாளனோ வந்துவிடுமுன் தன் ஆகச் சிறந்த இன்னொரு படைப்பின் மூலம் உச்சத்தை அடைந்து நம்மை ஏமாற்றத்துகுள்ளாகிய படைப்பாளிகளே அதிகம். (பொம்மலாட்டம்......)

பொம்மலாட்டம் படம் துவங்கின பத்தாவது நிமிடம் நான் இந்த மனநிலையில் இருந்தேன். நானேபடேகர் என்ற ஆகிருதியை இவர் கையாண்ட விதம் அப்படிப் பிடித்திருந்தது எனக்கு. அப்படத்தின் ஜீவனோடே இடைவெளியின்றி அவரோடு கூட நானும் பயணித்தேன்.

இதற்கு மேல் ஒரு நிமிடமும் தாமதிக்க முடியாது. கதையின் கன்னி அறுத்து பார்வையாளனை விடுவித்தே ஆகவேண்டியத் தருணத்தில் அப்படத்தின் நாயகி பெண்ணல்ல ஆண் என்ற அதிர்வு என் உடல் முழுக்கப் பரவியது. ஒரு சராசரி சினிமா பார்வையாளனாக நான் என் வாழ்வில் அடைந்த ஒரு உச்சஸ்தாயிலான யாராலும் அனுமானிக்க முடியாத அனுபவம் அது. கிட்டதட்ட ஷைலஜாவும் என்னுடனே இருந்தாள்.

இருவரும் மௌனமுற்று, பேச எதுவுமற்று, ஈரகாற்று முகத்தில் மோத வீட்டிற்கு வந்தோம். வாசலிலேயே நின்று அவருக்கு போன் செய்தேன்.

‘‘சார் இப்பதான் பொம்மலாட்டம் பாத்துட்டு வர்றோம்’’ என்ற துவக்கம் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. தாவணிக் கனவுகள் என்ற படத்தில் தான் நினைத்த ஒன்றை காட்சிப் படுத்த முடியாமல் முற்றிலும் சோர்ந்து போகும் ஒரு கணத்தில் வெளியில் பாக்யராஜ் ராதிகாவிடம் அதே காட்சியை, அதே உகரத்தோடு நடித்துக் காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாரதி ராஜா ஒவ்வொரு நிமிடமும் மலர்வதை கேமிரா படமாக்கிக் கொண்டேயிருக்கும், அதே மாதிரியான தருணமது.

என் போன் ஷைலஜாவுக்கு போனது, ‘‘இதுக்கு மேல பேசினா நான் பொறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துறவேம்மா, உங்கரெண்டு பேரின் பாராட்டு போதும் எனக்கு, பணம் போனா மயிராச்சி’’

கிட்டத்தட்ட அவரிடம் பேசின அதே மன உணர்வோடு பாலுமகேந்திராவிடமும் பேசினோம். எல்லாக் கலைஞர்களுமே உணர்வுக் குவியல்கள்தானே.

ஒரு நல்ல படைப்பை நான் கொடுத்தா என்ன, என் நண்பன் பாரதி கொடுத்தா என்னம்மா என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ஒரு நிமிடமும் தாமதிக்காமல் அம் மனஉணர்வுகள் எதன் பொருட்டும் கலைந்துவிட அனுமதிக்காதப் பிடிவாதத்தோடு பார்சன் காம்ப்ளக்ஸ்க்குப் போய், எப்போதும் அவரிடம் உள்ள நிதானத்தை கொஞ்சம் தளர்த்தி, பரவசமாகி

‘‘பாரதி நான் இன்னும் படம் பாக்கல என் மக ஷைலுவும், மாப்ள பவாவும் இப்பதான் பேசினாங்க அந்த ஈரத்தோடயே வந்திருக்கேன், இப்போ உனக்கு என்ன கொடுக்கறதுன்னு எனக்கு தெரியல....’’ எனத் தடுமாற,

எதிர்பாராத இவ்வுணர்வுபூர்வமான சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்த பாரதிராஜா, தன் எதிரில் மிக பிரமாண்டமாய் மாட்டப்பட்டிருந்த பொம்மலாட்ட பட ஸ்டில்லை கிழித்து, அரைகுறையாய் கிழிக்கப்பட்ட அந்த போட்டோ பிரிண்ட் மீது

‘நான் எப்போதும் நேசித்து மதிக்கும் அன்பு நண்பன் பாலுவுக்கு அன்புடன் பாரதிராஜா.... என எழுதி தருகிறார்

கலைஞர்களின் வாழ்வை ஒரு பறவையின் புதிர் நிரம்பிய வாழ்வைப் போலவே நம் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது நண்பர்களே!


-நன்றி மீடியா வாய்ஸ்

Friday, October 21, 2011

தொடர் - 11

அத்தனை மினுமினுப்போடு ஒரு நாகப்பாம்பை இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. அச்சமின்றி அவசரமுமின்றி நான் கருங்கல் கட்டிடத்திலான கிணற்றுமேட்டில் நின்றுகொண்டும்,பாம்பு பாதி கிணற்று சூறாவரியில் அலைவுற்றுக்கொண்டிருந்த காட்சிப்படிமம் அலாதியானது.

தவறியோ, விரும்பியோ விழுந்திருக்கவோ இறங்கியிருக்கவோ வேண்டும். அது இருந்த இடத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் நீர். இதற்கப்புறம் மேலேறி வருவது சிரமம். அது நீரை நோக்கி ஊர்வதும், சடாரெனத் திரும்புவதும், மேலேற முயல்வதும், முடியாமல் இறங்குவதும் கொஞ்சநேரம் படமெடுத்து நிற்பதுமான அதன் தவிப்பை எவ்வளவு முயன்றும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மனம் அதன் அலைவுறலைப்போலவே அடங்கமறுத்தது. யாருமற்ற அக்கிணற்றுமேட்டில் நின்றுகொண்டு கொஞ்சநேரம் அழத்தோன்றியது.அதுவும் முடியவில்லை.

என் நடுவிரல் பெருசேயிருந்த அந்நாகப்பாம்பை இன்னும் கூர்ந்துபார்க்கிறேன். சம்மந்தமேயின்றி அக்கணத்தில் எனக்கு என் நண்பனும் ஒரு காலத்தில் நவீன தமிழ் கவிதையில் கலக்குரல் எழுப்பின கவிஞனுமான கைலாஷ்சிவனின் ஞாபகம் வந்தது.

அந்நாகப்பாம்பை அப்படியே தனித்தலைய விட்டுவிட்டு கைலாஷ் சிவனோடு அங்கிருந்து அகன்றேன்.

கைலாஷ், தமிழ் நவீன கவிதையின் இன்னொரு முகமோ, ஆளுமையோ அல்ல. சிறுபத்திரிகை வாசிக்கும், எழுதும் குழுவில் இப்பெயர் ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்பட்டது.

இவர்களின் ஞானத்தந்தையும், தமிழின் முக்கிய கவிஞருமான விக்கிரமாதித்யன் அண்ணாச்சி எப்போதும் தன் தோள்களிலும், இடுப்பிலும், காடு மேடெல்லாம் இரண்டு மூன்று செல்லக் குழந்தைகளை சுமந்தவர். அப்படி அவரிடமிருந்து இறங்க மறுத்து அல்லது அவர் கீழே இறக்க மறுக்கும், விக்ரமாதித்யனே சொல்வது போல வாழ்வில் இருந்தே வாழ்வை மறுதலிக்கிறவன் கைலாஷ்.

அவன் கவிதைகளின் ஒரு வரியோ, உரைநடையின் ஒரு வார்த்தையோ இது வரை என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் அவன்? அவன்தான் என்னை இப்போதும் அலைக்கழிக்கிறான். பாதிகிணற்றில் மாட்டிக் கொண்ட, அல்லது ஏற்றுக் கொண்ட அந்த நாகப் பாம்பைப் போலவே.

வருடம், மாதம், கிழமை எதுவும் ஞாபகத்திலில்லாத ஒரு மாலையில், நான்கடிக்கும் குறைவான உயரத்தில் தோளில் நீண்டுத் தொங்கின ஜோல்னாப் பையோடு, காதில் போட்டிருந்த சிகப்புக் கல் கடுக்கன் தெரிய, மனதில் பதிக்கத்தக்க உருவத்தில் துளியும் தயக்கமின்றி வீட்டிற்குள் நுழைந்து, என்னிடம் வந்தவன் கைலாஷ்.

திருநெல்வேலியிருந்து வாரேன், உங்களைத் தெரியும். என் பேரு கைலாஷ்சிவன். சூன்யப் பிளவுன்னு ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கு....அவன் பேசிக் கொண்டேப் போக என் பார்வை அந்த சிவப்புக் கல் கடுக்கன் மீதேக் கிடந்தது.

அன்றிரவு அவனே விரும்பிக் கேட்ட மோர் சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு தான் தூங்குவதற்கான இடம் எதுவென தயக்கமின்றி கேட்டான். நான் காட்டிய சிறு அறையை நிராகரித்து, மொட்டை மாடிக்கும், படிக்கூண்டுக்குமிடையேயான,நாலுக்கு நாலிலான ஒரு சிமெண்ட் திட்டு தனக்குப் போதுமென என்னைக் கீழே அனுப்பினான். பழக்கம்தான் எனினும் எல்லாமுமே விசித்திரமாய் இருந்தது எங்களுக்கு. அப்போதுதான் எங்கள் வீட்டில் சமையல் வேலைக்கு சேர்ந்திருந்த சாந்தி என்ற பெண்ணுக்கு விசித்திரத்தை மீறிய அச்சமிருப்பதாய் அன்றிரவே எங்களிடம் சொன்னாள்.கலைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என பாரதியிலிருந்து உதாரணம் சொல்ல வேண்டிருந்தது அவளுக்கு.

திருட்டுப் பூனையின் காலடித்தடங்கள் போலவே அவன் இருப்பும் எங்கள் வீட்டில்.

எப்போது வருகை, எங்கே செல்கிறான், எதுவும் யாருக்கும் தெரியாது. இருட்டுப் பிரியும் முன்பே எழுந்து நிலத்திற்குப் போய், அருகிலிருக்கும் காடுவரை அலைந்து, பம்ப்புசெட்டில் குளித்து, வெற்றுடம்போடு வந்து..... எப்படியெல்லாமோ அவன் வாழ்வு.

அப்போது அவனுக்கு முப்பதுக்கும் கீழே வயதிருக்கும்.

ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு, பெர்ப்யூம் அடித்து, பைக்கில் சுற்றி, காதல் கடிதங்கள் பரிமாறி, நகரில் சந்திப்புகளுக்கான ரகசிய இடம் தேடி, மனம் முழுக்க சந்தோஷம் நிறையும் கணங்களோடு அவன் வயதையொத்த இளைஞர்கள் பறந்து கொண்டிருக்கையில்,

இவன் காவி கட்டி, தேசாந்திரியாகி,

என்ன வேணும் கைலாஷ் உனக்கு?

ஒண்ணுமேயில்லை.

அப்போதைய அவன் கை விரிப்பு என் பல இரவுகளின் மீது விழுந்து பிறாண்டியிருக்கிறது.

அவன் வீட்டை விட்டகன்ற அடுத்தநாள் அவன் தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்யப் போன சாந்தி, துணியால் கட்டப்பட்ட சிறு மூட்டை ஒன்றை எடுத்துவந்து எங்கள் முன் கோபத்தோடு போட்டாள்.

ஆர்வத்தோடு அதைப் பிரித்தால்,

அத்தனையும் அதன் அடிநாதம்வரை இழுக்கப்பட்ட பீடித்துண்டுகள்.

சுகமான வாழ்வை நிராகரித்து அதன் நேர் எதிர் கோணத்திற்கு போய் பார்ப்பது. எல்லோரும் வரவேற்பறையில் உட்கார்ந்து வாசல்வழியே வரும் வசந்தத்தை அருந்திக் கொண்டிருக்கையில் ஜி. நாகராஜனைப் போல் புழக்கடைப்பக்கம் போய், வெளியேறும் கழிவுகளை கவனிப்பது. இதற்கான ஆத்ம பலம்யாராலும் அளவிட முடியாதது. அது கைலாஷ் மாதிரியானவாழ்வை, தேர்ந்தெடுத்தவர்களிடம் நிறைய உண்டு.

எல்லோரும் படித்துமுடித்து, வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்து, லஞ்சம்வாங்கி, கார் பங்களாவோடு பெண் கட்டி, தினம் தினம் ஒரு ஒழுங்கோடு அவளோடு உறவுவைத்து பிள்ளைபெற்று அப்புறம் அதை படிக்க வைத்து.... ச்சேய்... என்ன மாதிரியான வட்டத்துக்குள் வாழ்கிறோம் நாம்?

கைலாஷ் மாதிரியான மனிதர்கள் முதல் கட்டத்திலேயே தங்கள் கயிறுகளை அறுத்துக் கொண்டவர்கள். நாடு முழுக்க அலைவுற்ற அந்த கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள்,எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்து நாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சை மிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள். தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்கு கிடைப்பது எப்போதும் என்னை பொறாமைபடுத்துவது. உப்பு சப்பற்ற இந்த தட்டை வாழ்விலிருந்து, தைரியமாய் வெளியேறும் இவர்களில் ஒருவனாய் என் மகனை நினைத்துப் பார்த்து, நத்தையின் உடல்போல ஓடுகளுக்குள் என் நினைவுகளை ரகசியமாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்.

இப்படியான பலி வாழ்வை அடைந்தே, பெரும் படைப்புகளை மானுடத்திற்கு வழங்கியுள்ள படைப்பாளிகள், தாஸ்தாவேஸ்கியில் ஆரம்பித்து பஷீர் வரை நீளும் இப்பட்டியல் உலகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.

அதன் பிறகான நாட்களில், கிரிவலப் பாதையில் காவி கட்டி அன்னதான வரிசையில் நிற்கும் கைலாஷை பல முறை பார்த்தும் அவன் துறவு வாழ்வு என் பார்வை பட்டு தீட்டாகிவிடுமோ என்ற அதிகபட்ச ஜாக்கிரதையோடு பார்க்காததுமாதிரிவிட்டகன்றிருக்கிறேன் ஆனால் அன்றிரவே அவன் மீண்டும் மக்கா பசிக்குது சோறு இருக்குமா?” என்றபடியே வீட்டிற்குள் நுழைவதை புன்னகையோடு எதிர் கொண்டுமிருக்கிறேன்.

அம்மலைச்சுற்றும் பாதையில் அலைந்து திரியும் கைலாஷைவிட வயதில் குறைந்த சரவணனையும் எனக்குத் தெரியும். சரவணனின் சொந்த ஊர் நாகர்கோயில். ஹைவேயில் கிளார்க் உத்யோகம். வசதியான வீட்டில் சம்மந்தம். அமைதியான நதியின் சீரான வேகம் அவன் லெளகீக வாழ்வை செழிக்க வைத்தது.

ஒரு நிமிடம் தானே! எல்லாரும் ஒரே ஒரு ஒற்றை நிமிடத்திற்கிடையே என இடைவெளிகளில் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்களா? என ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட ஓர் இரவில், தன் உடல்மேல் இரண்டு கால்களையும் போட்டுத்தூங்கும் மகனின் கால்களை மெல்ல விலக்கி, அயர்ந்து தூங்கும் துரோகத்தின் நிழல் படிந்த மனைவியின் முகத்தைப் பார்க்க சகிக்காமல் வெளியேறியவனின் இரவு விடிந்தது திருவண்ணாமலையில்.

என்ன சரவணா இது?

மனம் ஒப்பலை சார்,

மலை சுற்றும் பாதையெங்கும் வியாபித்திருக்கும் இம்மனிதர்களின் வாழ்வை அளவிட முடிந்த விஞ்ஞானி யார்?இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார்?, அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார்? என்ற எந்த பிரக்ஞையுமற்ற லட்சோபலட்சம் கால்கள் அப்பாதையை சுற்றுகின்றன. சுழுலும் அப்பாதங்களில் சில அங்கேயே தங்கிவிடுவதுமுண்டு. கைலாஷ் அதுவுமல்ல. அவன் அதிலிருந்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தான்.

அப்போதைய தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரும், சிறந்த வாசிப்பாளரும் நல்ல இலக்கியம், நல்ல சினிமா இவைகள் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையுமுள்ள என் நண்பர் நாகராஜன் தன் பத்திருபது நண்பர்களோடு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

என்னதான் கலகக்குரல், கட்டுடைத்தல் எனினும் அதிகாரமும், வழமைகளும் நமக்குள் ஏற்றிவைத்திருக்கும் மரபுகளிலிருந்து விடுபடாமைகள் அவ்வப்போது நிகழும்தானே!

அவர்கள் வருகையின் பொருட்டு கொஞ்சம் அதீத பரபரப்போடு வீடு இயங்கியது அப்போது அங்கிருந்த கைலாஷ்க்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் இவர்களோடு விளையாடலாம் என்ற அவனின் ரகசிய முடிவு அந்நண்பர்களின் வருகைவரை பதுங்கியிருந்திருக்கிறது.

அவர்கள் வந்தவுடன், பரஸ்பரம் அறிமுகங்கள், சிரிப்பொலிகள், குதூகலங்கள், நினைவுகூறல்களின் கூச்சங்கள் இதில் யாரும் கைலாஷின் இருப்பை கவனிக்கவில்லை. ஆனால் நாகராஜன் அவனில் மட்டுமே பார்வை பதித்திருந்ததை நான் கவனித்தேன்.

தன் சட்டையைக் கழட்டி அதையே பெரிய முண்டாசாகக் கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு மரச்சேரில் மௌன சாமியாரின் கற்சிலைப் போல அமர்ந்து எங்களை அற்ப மானிடப் பதர்களைப் போல பாவித்து பார்த்துக் கொண்டிருந்த காட்சி அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தியது.

ஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தை மௌனத்தால் தன்வசமாக்கியிருந்தான். சூழலை லகுவாக்க, நான், சார் இவர் பெயர் கைலாஷ்சிவன், ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறதுஎன என் வார்த்தைத் தொடரை இடைமறித்து,

பாரதிக்குப் பிறகு நான்தான்என சத்தமாய் சொல்லி, மீண்டும் கண்மூடி மௌனம் காத்தான்.

சாரோடு ஊரு,?”

தெக்க,

அவன் இருப்பு, அவருக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை கொண்டுவந்திருந்தது. அமைச்சரின் நேர்முக உதவியாளராய் அவர் எப்போதும் சந்திக்கிற பாதி வளைந்த உடல்களும், கூழை கும்பிடுகளும், எதையோ வேண்டி மட்டுமே வரும் போலி முகங்களுக்கிடையே இதோ ஒரு வேற்று முகம். வேற்று ஆள்.

ஒரு கவிஞனின் கன கம்பீரத்தோடு, வாசிப்பின் திமிரோடு, எழுத்தின் வலிமையோடு கால்மேல் கால்போட்டு அதிகாரத்தை சகல விதங்களிலும் அலட்சியப்படுத்தும் அவர் அதற்கு முன் சந்தித்திராத ஒரு இளைஞன்

என் நண்பருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. என் வீட்டில் அக்கணத்தில் அவனைவிடப் பொருட்படுத்தக் கூடியது வேறென்றுமில்லை அவருக்கு.

என்னிடம் கொஞ்சம் பயத்தோடு இரகசியமாய், “பவா இவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா கோவிச்சுக்குவாரா?”

எனக் கேட்டது அவனுக்கு கேட்டுவிட்டது.

திடீரென தன் மௌனம் கலைந்து,

அதெல்லாம் கோவிச்சுக்கமாட்டேன், தாராளமா தரலாம்என்று சாமி தன் திருவாய் மலர்ந்ததும்அங்கிருந்த எல்லாருமே அதுவரையிலானதங்கள்முகஇறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்த கணமது. அக்குழுவில் சிரிப்பின்றி இருந்த ஒரே ஒருவன் நான் மட்டுமே.

சற்று நேரத்திற்கு முந்தைய தன் கம்பீரத்தை கைலாஷ் வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஏன் இழந்தான்?

பாரதி முதல் புதுமைப்பித்தன் வரையிலான பெரும் படைபாளிகள், வெறும் பணமுள்ளவர்களிடம் பசியின் நிமித்தமோ அல்லது வேறெதன் பொருட்டோ தங்கள் ஆளுமைகளை தற்காலிகமாக இழந்த தருணங்கள் வரலாறு நெடுக உண்டுதானே!

எனக்கு ஏதோ நெருட அவசரமாய் அவ்விடத்தை விட்டகன்று இரண்டு முழு சிகெரட்டுகளை முழுவதுமாய் உள்ளிழுத்தேன்.

அவர்கள் வந்துவிட்டுப்போன வெறுமை வீட்டை வியாபிக்க அனுமதிக்காமல், வாசலில் உட்கார்ந்து இலக்கியம் பேச ஆரம்பித்தோம். உரையாடலின் துவக்கத்தில் மௌனமாய் பங்கேற்ற கைலாஷ், இடையில் உக்கிரமாக பேச ஆரம்பித்தான். ஒரு காட்டு விலங்கின் அதிகாரமிக்க நடமாட்டம் அது.

என் வேட்டைகதை கதையேயில்லையெனவும் வேட்டையின் ரத்தம் வாசிப்பவனின் முகத்தில் தெறிக்க வேண்டுமெனவும் என் கதையின் ஒரு வரியையும் வாசிக்காமலேயே பேச ஆரம்பித்தான்.

சூடான தோசைகளோடும், மல்லாட்டை சட்னியோடும் அவ்வுரையாடல் நீண்டது.

அடுப்பங்கரையிலிருந்து ஒவ்வொரு தோசையாக எடுத்து வந்து, சாந்தி எங்கள் தட்டுகளில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தாள் அங்கு எங்கள் யாருக்கும் அவள் இருப்பு நினைவிலேயே இல்லை.

கொஞ்ச நேரம் சூடான தோசைத் திருப்பியோடு எங்கள் உரையாடலைக் கவனித்த சாந்தி எதன் பொருட்டோ மிக உக்கிரமடைந்து,

நீ எங்கண்ணன் கதையை படிச்சிருக்கியாண்ணா?நாங்கள் நிதானிப்பதற்குள், அவளே கைலாஷை நோக்கி,மீண்டும்

சொல்லுண்ணா, நீ வேட்டை கதை படிச்சிருக்கியா?யாரிடமோ பேசும் வார்த்தையென நினைத்த அவன், அவள் பக்கம் திரும்பி.

இது எங்களுக்குள்ள நடக்குற தர்க்கம்மா, நீ போய் தோசை போடு

தான் வெறும் தோசை சுட்டுப் போடும் பெண்ணல்ல என்பதை நிரூபிக்க வேண்டி,

அதிருக்கட்டும் நீ சொல்லு, நீ அந்தக் கதையை படிச்சிருக்கியா? இல்லையா?”

இல்லை

படிக்காமலேயே எப்படி அத குப்பைன்னு சொல்ற?”

எனக்குத் தெரியும்மா

படிக்காமலேயே தெரிய நீ என்ன பெரியக் கடவுளா?”

அதற்குள் ஏதோ சண்டயென நினைத்து தெருப்பெண்கள் வாசலில் கூடியிருந்தார்கள்.

கைலாஷின் தடுமாற்றத்தை உள்ளூர ரசித்து,

நான் படிச்சிருக்கேண்ணா, திப்பக் காடும், ஜப்பான் கெழவனும், தாலியறுத்தான் பாறையும், செவடங்கொளமும், பன்னி வேட்டையும் படிச்சாதாண்ணா தெரியும்.

கோபத்தில் சூடான தோசைத்திருப்பிஎங்கே அவன் மேல் பட்டுவிடுமோ என நாங்கள் பதறினோம்.

கைலாஷிடம் அதுவரை இருந்த அலட்சிம் விலகி ஆச்சர்யம் கூடி,

கண்டிப்பா இன்னிக்கு நைட் வாசிச்சிற்றேன்என்றஅவன் குரல் வழக்கத்திற்கு மாறாய் மிக இளகியிருந்தது.