Sunday, June 14, 2009

கமலாதாஸ் கலக எழுத்தின் ஊற்றுக்கண்



ஒரு எழுத்து ஆளுமையின் உடல் அடக்கமாவதற்குள்ளாகவே அந்த ஆளுமையைப் பற்றி வாசகனை அதிர்வுக்குள்ளாக்குகிற அதிர்ச்சி மதிப்பீடுகளை என்னென்னவோ நியாயங்களின் பெயரில் சில எழுத்தாளர்கள் உருவாக்கி விடுகிறார்கள்.
அதிலும் குறிப்பாக கமலாதாஸின் உடலமைப்பு, வசீகரம் அல்லது அவலட்சணம், காமம் உறவுகளற்ற நாட்கள் என விரியும் அஞ்சலியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் எழுத ஆரம்பித்த ஒரு இளம் கவிஞனின் மீதான கமலாதாஸின் அக்கறையும் தாய்மையும் மிளிரும் இச்சம்பவமே நான் அந்த கலக எழுத்துக்காரிக்குச் செலுத்தும் அஞ்சலி.
ராஜகுமாரியும் யாசகபாலனும்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு-தமிழில்: கே.வி. ஷைலஜா.

மாதவிக்குட்டி அகங்காரியான ஒரு ராஜகுமாரி என்று நான் என்னுடைய குழந்தைப் பருவத்தில் நினைத்தேன். வசீகர அழகுடையவனான ஏதோ ஒரு ராஜகுமாரனால் வஞ்சிக்கப்பட்டவளாய்த்தான் அவளின் தோற்றம் எனக்குள் இருந்தது.
அவளுடைய கதைகள் எனக்குத் துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும் வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின விசிறியில் அடிபட்டுத் துடிக்கும், அந்தச் சிட்டு குருவியின் ரத்தம் தெறித்த கறை, இப்போதும் என் இதயத்துக்குள் ஒட்டிக் கிடக்கிறது.
நக்ஸலைட்டான நண்பன் ஒருமுறை ரகசியமாக “üயெனான்ý” என்ற பத்திரிகையை எனக்குத் தந்தான். அதில் கமலாதாஸின் üதேசிய கொடிý என்ற கவிதை பிரசுரமாயிருந்தது. அன்று இரவு நான் என் அம்மாவிடம் சொன்னேன்.
üüஅம்மா கமலாதாஸøம் நக்ஸலைட்டாயிட்டாங்க போலருக்கு.ýý”
üüஅந்த அம்மாவும் புத்தி சுவாதீனமில்லாத ஆயிட்டாங்களா! போ. என்னென்னவோ நடக்குது.ýý”
அன்று அம்மா கோபத்தோடு எழுந்துபோய்விட்டாள்.
நாட்கள் கடந்தபோது, நானும் என் எண்ணங்களும் கொள்கைகளும் வளர்ந்தன. எனக்குள் பொத்தி வைத்திருந்த தீ கொழுந்துவிட்டு எரிந்தபோது வீட்டையும் நாட்டையும் புறக்கணித்து வரவேண்டிவந்தது. திருவனந்தபுரத்தின் தெருக்களில், எந்த ஒரு தொழிலும் வருமானமும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தபோது, என் நண்பனும் சக கவிஞனுமான ஜெயசந்திரன் என்னிடம், மாதவிக்குட்டி திருவனந்தபுரத்தில் செட்டிலாகிவிட்டதாகச் சொல்லி வீட்டிற்கான முகவரியும் வழியும் சொன்னான்.
ஒரு நாள் உச்சி வெயிலடிக்கும் மதியானத்தில் நடந்து நடந்து அலுத்துப்போய், வியர்வையில் குளித்துப் பிசபிசுத்த உடைகளுடன் üசமுத்திர தாராý என்ற வீட்டிற்குச் சென்றேன்.
வீட்டின் உள்ளே கறுப்பாய் நிறம் மாறியிருந்த கட்டிலின் மேல் கமலாதாஸ் உட்கார்ந்திருந்தார். பார்ப்பதற்கு ராஜகுமாரியின் கம்பீரம். நெருப்பின் உட்கரு நிறமுள்ள புடவை உடுத்தியிருந்தார். அவிழ்த்து தொங்கவிடப்பட்டிருந்த கார்மேகக் கூந்தல்.
நெற்றியில் பெரியதாய்ச் சிகப்புப் செந்தூரம். கழுத்திலும் காதிலும் கையிலும் காலிலும் வெள்ளி ஆபரணங்கள். ரத்னாபரணங்கள். இடுப்பை அலங்கரிக்கும் பெரிய வெள்ளிச் சாவிக்கொத்து. ஆஜானுபாகுவான ஒரு பெண். முகத்தில் ராஜகுடும்பத்தின் தேஜஸ். சித்தோர் அரண்மனையில் அக்னிப்ரவேசம் செய்யக் காத்திருந்த ராணி பத்மினியின் தோற்றம் என் முன்னே நிழலாடியது போன்ற பிரமை. அவருடைய கண்களில் ஒரு அகங்காரம் குடிகொண்டிருந்தது. ஏதோ பகவதி அருள் வந்தவனின் கண்களைப்போல ஒரு பளிங்கு மின்னல் அதில் நிரந்தரமாய் இருந்தது.
நான் பயத்தோடும் பவ்யத்தோடும் வணங்கினேன். பிச்சைக்காரன் என்று என்னை நினைத்திருக்கலாம். என் கால்கள் செருப்பில்லாமல் இருந்தன. உடுத்தின துணிகள் மிகவும் அழுக்கடைந்து போயிருந்தன. வாரப்படாத தலையில் சிக்கேறி இருந்தது. பல நாட்கள் குளிக்காத அலுப்பு உடம்பில் தெரிந்தது.
üüயாரு?ýý”
கம்பீரமான முழங்கும் குரலில் கமலாதாஸ் தான் கேட்டார். என் பெயரைச் சொன்னதும் என்னைத் தெரிந்திருந்தது.
üüவா. தம்பி வா, வாýý”
உற்சாகத்தோடு என்னை வரவேற்றார் கமலாதாஸ்.
உன்னோட கவிதைகளைப் பத்திரிகையில் படித்திருக்கிறேன். மீசைகூட மொளைக்காத சின்னப் பையன்னு நான் நெனக்கல.”
நான் வெட்கிப்போனேன். எனக்கு இன்னும் மீசை முழுமையாக வளரவில்லை. ஒன்றிரண்டு முடிகள் மட்டும் முளைத்திருந்தன.
üüதம்பி பசியோட இருக்கே போலருக்கு. முகத்தைப் பார்த்தால் ரொம்ப வாடியிருக்கே. வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். சாப்பிடுýý”
நான் அந்த ப்ரியத்தில் அதிர்ந்தேன். அழுகையும் வந்தது. நிஜமாகவே எனக்கு அதீத பசி இருந்தது. அன்றைக்கான சாப்பாடு என்பது எனக்கொரு இனிய கனவாக மட்டுமே இருந்தது.
அப்போது கமலாதாஸ் ஒரு நகவெட்டியை எடுத்து என்னிடம் தந்தார்.
üüநகம் வெட்டிக்கோ. அங்க சோப்பு இருக்கு. நல்லா கை, கால்களை சுத்தமாய்க் கழுவு. உன் கை முழுசும் அழுக்கா இருக்கு பாரு.ýý”
வள்ளுவநாட்டில் ஏதோ சொந்தக்காரரின் வீட்டிற்குப் போனதுபோல இருந்தது. இல்லை இல்லை. என்னுடைய சொந்தக்காரர்கள் யாரும் என்னிடம் இவ்வளவு அன்புடனும் வாத்சல்யத்துடனும் நடந்து கொள்ளமாட்டார்கள்.
எனக்குச் சோறும், குழம்பு வகைகளும் மீண்டும் மீண்டும் பரிமாறப்பட்டன. ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் வயிறு நிறையச் சாப்பிட்டேன். அன்னதானம் மாறா தானம். இந்த அம்மாவுக்கு நூறு புண்ணியம் கிடைக்கட்டும். இளம் பருவத்திலான என் ஆத்மா ஆசீர்வதித்தது.
üüஅய்யோ கண்ணு கலங்கிடிச்சே.ýý”
அந்த அம்மா அதைக் கண்டுபிடித்து விட்டார்.
üüநல்ல காரம்ýý”
நான் இடக்கையால் கண்களைத் துடைத்தேன். மனசை என்ன செய்ய?
பிறகு அதிக நேரம் கமலாதாஸ் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பம்பாயில் தன் வாழ்க்கை பற்றி, திருவனந்தபுரத்தில் இலக்கிய உலகின் போக்கைப் பற்றி, இறந்து போன ஓமனா என்ற தன் செல்ல நாயைப் பற்றி... எல்லாம்... எல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.
கமலாதாஸின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
மாலையில் ஒன்றாய் டீ குடித்தோம். புறப்படும்போது என் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்தபோது எனக்கு சங்கோஜம் ஏற்பட்டது. அது அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
üüவச்சுக்கோ தம்பி. இவ்வளவு தூரத்திலிருந்து என்னைப் பாக்க வந்தியே. அக்காவோட சந்தோஷத்துக்காகன்னு நெனச்சுக்கோ.ýý”- மென்மையாய்ச் சிரித்தார் கமலாதாஸ்.
திரும்பி நடந்து வரும்போது நான் நினைத்தேன். கடவுளே, இவ்வளவு சாந்தமும், தயாள குணமும், ப்ரியமுமான, இந்த பாவபட்டப் பெண்தானா நெருப்பு வார்த்தைகளைக் கொண்டு, உலகை உலுக்கும் கலகக்காரியாக எழுதுகிறாள்
ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்த கலவையாய் மாறிப்போன மனத்துடன், பெருமூச்சுவிட்டபடி அந்தி வெயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment