Tuesday, November 22, 2011

தொடர் - 16

என்ன நினைவுப் பிழையெனினும் பத்து வருடங்களுக்கு முன்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் என்பதுகூட நினைவிருக்கிறது. எங்கள் வீட்டு தெரு முக்கில், ஆட்டோவுக்காக காத்திருக்கிறோம். என்னோடிருப்பவர்கள், அப்போதுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமியும், அவர் மனைவியும்.

ஞாயிறு ஆராதனை முடிந்து, வண்ண வண்ண உடைகளோடும் பொங்கி வரும் சிரிப்போடும், தேவாலயத்திலிருந்து வெளிவரும் மனிதர்களில் நானும் அவரும் வெவ்வேறு விதமாக ஒன்றியிருந்தோம். கொஞ்சமும் திர்பாராத விதமாக, திடீரென எழுந்த ஓர் அலறலும் அதைத் தொடர்ந்து கூடிய கும்பலும், அச்சூழலை மட்டுமின்றி எங்களையும் குலைத்தது. எல்லாவற்றிலிருந்தும் அறுத்துக் கொண்டு ஓடினோம்.

அந்த சர்ச்சின் பாதிரியார், மெல்ல தரையில் கை ஊன்றி எழுந்து கொண்டிருந்தார். அங்கி முழுக்க மண் ஒட்டியிருந்தது. உதட்டோரம் கொஞ்சமே கொஞ்சமாக ரத்தக் கசிவு. கீழே விழுந்துவிட்டாரோ என்ற எங்கள் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக, ஒருவன் தேவனுக்கு விரோதமான தமிழ் வார்த்தைகளில் அவரை திட்டிக்கொண்டிருந்தான். அவனிருந்த மூர்க்கம், மீண்டும் அவரை தாக்கக்கூடுமோ என அச்சமூட்டியது. நாங்கள்தான் அவனை விலக்கிவிட்டோம்.

நான் தற்செயலாய் கந்தசாமி சாரை கவனித்தேன். ஒட்டுமொத்த முகமும் கருத்து, ஒதுங்கி நின்று சற்று முன் விழுந்த அடிகள், தன்மீது விழுந்த வலியோடும் வேதனையோடும் நின்றிருந்தார். கூட்டத்திலிருந்து தனித்திருந்தோம்.

‘‘எனக்கு மதம் மீதெல்லாம் பெரிய நம்பிக்கையில்லை பவா. ஆனா, ஒரு பாதிரியாரை அடிப்பதென்பது கடவுளை அடிப்பது மாதிரி’’ அவர் வார்த்தைகளில் துயரம் தோய்ந்திருந்தது.

கடந்த இருபதாண்டுகளில் இந்த இறை நிலையையும், நன்னெறியையும் திருச்சபைகளே முற்றிலும் இழந்துவிட்டதென்றும், வெறும் பதவி, பணம், சொத்து என அது ஒரு கிணற்றுப் பிணம் மாதிரி உப்பியிருப்பதையும் அவருக்குச் சொன்னேன். பதிலுக்கு, ‘‘அதுபற்றி அக்கறையோ, கவலையோ படவேண்டியது என்னைவிடவும் அதன் எளிய மக்கள்தான். அப்பாதிரியார் அடிபட்டு நடுரோட்டில் விழுந்த காட்சி, எத்தனை ஜென்மத்திலும், என்னால் எதன்பொருட்டும் மறக்க முடியாதது’’ என்ற ஒரு படைப்பாளியின் பதைபதைப்பை அப்போது உள்வாங்கினேன்.

சா.கந்தசாமி கலை, ஓவியம், சிற்பம், சினிமா, புனைவு என்று எல்லா நுண்கலைகளின் மீது மிகுந்த ஆர்வமும் அக்கறையுமுள்ளவர் மட்டுமல்ல, புனைவில்கூட மிகையை எப்போதும் மறுதலிப்பவர். ‘‘ஒரு படைப்பாளி, எழுதி முடித்த தன் படைப்பிலிருந்து மிகுதியான ஜோடனைகளை, அன்னப்பறவை மாதிரி உறிஞ்சி எடுத்துவிட்டால் மட்டுமே தெளிந்த நீரைப்போல அவன் படைப்பு வாசகனுக்கு அருந்தக் கிடைக்கும்’’ என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

சா.கந்தசாமி, தமிழ் படைப்பிலக்கியத்தில்சாயாவனம்என்ற நாவல் மூலம், தன் இடத்தை மிக சுலபமாக அடைந்தவர் எனினும், ‘தொலைந்து போனவர்கள்’, ‘சூர்யவம்சம்என்ற அவரின் நாவல்களும் பொருட்படுத்தத் தக்கவைகளே.

எழுத்தாளன் என்பதைத் தாண்டி, வேறு எந்த வெளிச்சமும் தன்மீது படுவதைக்கண்டு கூச்சத்தோடு ஒதுங்கிக் கொள்பவர் அவர். முற்றத்தில் அவர் உரையாற்ற வந்தபோது, அவரை அறிமுகப்படுத்திப் பேசிய நான், அவருடைய பல படைப்புகளை சொல்லிவிட்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஒருவரின் சம்பந்தி என்பதையும் சொல்லிவிட்டேன். தன் பார்வையிலேயே என்னைக் கண்டித்தார். ‘அதெல்லாம் என் தகுதியல்லஎன்று மறுத்த ஒரு படைப்பாளியின் நேர்கொண்ட பார்வை அது.

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான அவரை, தன் வீட்டிற்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார் கந்தசாமி. எழுத்தாளர்களின் விருந்தென்பது உணவு சாப்பிடுவதா? அந்த நேரத்திலான உணர்வு பகிர்தலும்தானே! விருந்து முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. அந்த பெண் எழுத்தாளரை, அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு கொண்டு போய்விடத் தயாராகும் கந்தசாமி சாரை, அவர் மனைவி ஒரு நிமிடமென உள் அறைக்கு அழைக்கிறார். சில நிமிடங்களில் வெளியே வரும் அவரைப் பார்த்து,

‘‘என்ன கந்தசாமி, உங்க மனைவி என்னை விட்டுட்டு உடனே வந்துடுங்கன்னு தனியே கூப்பிட்டு சொல்றாங்களா?’’ என நக்கலோடு சிரிக்கிறார் அந்த எழுத்தாளர்.

கந்தசாமி சார் மிகுந்த நிதானத்தோடு, ‘இல்லையே, நைட் ரொம்ப லேட் ஆயிடிச்சி. அங்கேயே தங்கிட்டு, காலைல வந்தாப் போதும்னு சொல்றாஎன்கிறார். பெண்ணியவாதத்தை இப்படிக் கோட்பாடுகளின்றி, புத்தகங்களின்றி, தத்துவங்களின்றி, இவைகளை விடவும் வாழ்விலிருந்து எடுத்தாளும் பெண்களே, எப்போதும் வரலாற்றில் மகத்தானவர்கள். அறிவு ஜீவிகளின் பார்வைகளில் வேண்டுமானால் இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லது சராசரிகள். ஆனால், இந்த சராசரிகளும், சாதாரணங்களுமே எப்போதும் மானுடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள்.

மற்ற எழுத்தாளர்களுடனான நட்பைப்போல மிக வாஞ்சையாகவும், உரிமையாகவும் என்னால் கந்தசாமி சாரை அணுக முடிந்ததில்லை. முதல் பார்வையில் அவர் மீது எனக்கேற்பட்டது மரியாதையும், கொஞ்சம் பயமும். ‘எளிதில் அணுக முடியாதவரோ?’ என்ற தயக்கமும், எல்லாவற்றையும் அவரும் அவர் மனைவியும், திருவண்ணாமலை வந்து எங்களோடு தங்கியிருந்த அந்த மூன்று நாட்களும் தகர்த்தெறிந்துவிட்டன.

நம் பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சிதைத்திருந்த அரசியல் கட்சிகள் மீது, மிகப்பெரும் கோபத்துடனேயே எப்போதுமிருப்பார். ‘‘சார், உங்க பிறந்தநாளைக்கு நீங்க ஒரு கேக்கோட உங்க ஃபிரெண்ட் வீட்டிற்கு போவீங்க. உங்க ஃபிரெண்ட் பிறந்த நாளைக்கு ஒரு கேக்கோட உங்க வீட்டிற்கு வருவான். இதான் நம்ம மரபு இல்லையா? ஆனா இந்த தலைவனுங்க பண்றக் கூத்திருக்கே... உங்க பொறந்த நாளுன்னாலும், உங்க தலைவன் பொறந்த நாளுன்னாலும் நீங்கதான் அவங்களைப் போய்ப் பாக்கணும். இது கேக்க ரொம்ப சாதாரணமா இருக்கலாம். இதெல்லாம் ஒரு கலாச்சாரத்தோட சீரழிவு. நம்ம வேர்கள்ல, அதிகாரம்ங்கிற பேர்ல இவங்க ஊத்தற கொதிநீர்’’ என கொதித்திருக்கிறார்.

அவரோடிருந்த பல தருணங்களில் என் அப்பாவோடு இருந்த கதகதப்பை மனம் உணர்ந்திருக்கிறது. அவருக்கு சொல்லவும் கொட்டவும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களை இந்த பெருவாழ்வு ளித்திருக்கிறது.

அவர் வந்திருந்த முற்றத்திற்கு அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராயிருந்த கண்ணகி பாக்யநாதன், பார்வையாளராய் வந்திருந்தார். எப்போதும் அதிகார ஒளி உமிழும் சிவப்பு விளக்கிட்ட காரை கண்ணுக்குத் தெரியாத தொலைவிலேயே நிறுத்திவிட்டு, ஒரு பெரிய டைரியோடு வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருக்கையில் சந்தேகம் வந்த ஒரு ஹைஸ்கூல் மாணவி மாதிரி, நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வந்து, தரையில் உட்கார்ந்து, கூட்டம் முடிய ஐந்து நிமிடங்களுக்கு முன்னமே போய்விடுவார். கலெக்டர் என்ற அதிகார முகமூடியை கழட்டி வைத்துவிட்டு இளைப்பாறும் இடமாக அவர் அந்த முற்ற மைதானத்தை உணர்ந்தார். தமிழ்நாட்டில் அப்போது கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் முன்னணியில் இருந்த கலெக்டர் என்று பெயரெடுத்திருந்தார்.

அன்று ஜெயகாந்தன் பேசிய முற்றத்திலும் அவர் பார்வையாளராய் தரையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்த அன்றிரவு, அறையின் உற்சாகம் ஆரம்பிக்கும் முன்பு ஜே.கே. என்னைப் பார்த்துக் கேட்டார்.

‘‘அந்த இடது பக்கம் உட்கார்ந்து மாய்ஞ்சி மாய்ஞ்சி சிரிச்சிட்டிருந்தாங்களே, அவங்கதான் உங்க கலெக்டரா?’’

நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். திடீரென வேறு ஒரு மனநிலையில் ஜே.கே. சொன்னார்.

‘‘சாராயத்துல நல்ல சாராயம், கள்ளச் சாராயம்னு எதுவும் இல்லை பவா. சாராயம் சாராயம்தான். இந்தம்மா பாவம். ஓடி, ஓடி அதை அழிக்க பாடுபடுது. ஆனா, நாளைக்கே கவர்மெண்ட் சாராய கடையை சட்டபூர்வமா அனுமதிச்சா, இந்தம்மா யாரையெல்லாம் அரெஸ்ட் பண்ணுச்சோ, அவங்கள்ளாம் கலெக்டர் சேம்பருக்கே வந்து, இவங்க கையால புதுக்கடையை தொறந்து வைக்க கேட்பாங்க. நீ, முடியாதுன்னு சொல்ல முடியாது. அது கவர்மெண்ட்டோட பாலிசி.’’ அவர் உற்சாகத்தில் பேசிக்கொண்டே போகிறார்.

கந்தசாமி சார் அதை இடைமறிக்கிறார். ‘‘இல்ல ஜே.கே., அதுக்காக இந்த நிமிஷத்திய அந்த அம்மாவின் முயற்சி தேவையில்லைன்னு சொல்றீங்களா?’’

‘‘அப்படியில்ல கந்தசாமி...’’

‘‘இல்ல. அந்த அம்மாவின் அதிகாரமற்ற ஆழ்மன விருப்பம் அது. தனக்கிருக்கும் அதிகாரத்தின் துணைகொண்டு அதில் ஒரு துளியையாவது நிறைவேற்றத் துடிக்கும் ஒரு தாயின் மனம் அது.’’

‘‘இல்ல கந்தசாமி. மது விலக்கு அமுல்ல இருந்தப்போ தமிழ்நாட்டுல குடிச்சா குற்றம், ஜெயில். இதையே அரை கிலோமீட்டருக்கு அப்பால போய், பாண்டிச்சேரி பார்டர்ல நின்னுக் குடிச்சா குற்றமில்ல. இது அபத்தமில்லையா?’’

‘‘இந்த அபத்தங்கள் அவ்வப்போது அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன.’’ இது கந்தசாமி சார்.

‘‘அதான், அந்த அரசுகளோட கூலிங்கதான் இந்த ..எஸ்., .பி.எஸ். எல்லாம்.’’

‘‘இல்லையில்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு அதிகாரத்தைக்கொண்டு, எதையாவது செய்திட முடியுமான்னு முயற்சி பண்றவங்கள உங்க வாதம் முடக்கிடும் ஜே.கே.’’

அன்றிரவு அந்த அறைக்கு பக்கத்து அறையில அமர்ந்து, கண்விழித்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஓவியர்கள் சந்தானராஜ், தனபால் போன்றவர்களெல்லாம் எத்தனை பெரிய ஆளுமைகள்! அவர்களெல்லாம் தமிழகம் நமக்களித்த அற்புதக் கொடைகள்.

‘‘ஆனால், துரதிஷ்டம். தமிழ்த் தலைவர்களுக்கு இவர்களின் மேன்மை தெரியாது. சினிமா மீது வெறிகொண்டு, உலகம் முழுக்க சுற்றியலைந்து, அரிய பல பொக்கிஷத்தை நமக்களித்த .கே. செட்டியாரை எத்தனை சினிமாக்காரர்களுக்கு தெரியும்?’’ என்ற அவர் வெளிப்பாடுகளில் இருந்த உஷ்ணத்தை அந்த குளிரறையிலும் நான் ஸ்பரிசித்தேன்.

அவருடைய சாயாவனத்திற்கு நிச்சயம்சாகித்ய அகாடமிகிடைத்திருக்கவேண்டும். நிறுவன அரசியல் காரணமாக, அது வேறு ஒருவருக்கு இடம் மாறிப்போனது. அதைப் பற்றிய மனக்குறைகளற்று இலக்கிய, கலையின் பல துறைகளிலும் அவர் இயங்கிக் கொண்டிருக்கையில், அவர் பெயர் அந்த வருட சாகித்ய அகாடமியின் இறுதிப் பட்டியலில், மூன்று பெயர்களில் ஒன்றாக இருந்தது.

அன்று நடக்கவிருந்த அகாடமி கூட்டத்தில், மூன்றில் ஒருவர் அந்த வருட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். வழக்கம்போல் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள கந்தசாமி சார் காரோட்ட, அவருக்கு அருகாமையில் ஜெயகாந்தன் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கிறார். மௌனம் இருவருக்குமிடையே மிக நாகரீகமாக உட்கார்ந்திருந்தது. வழக்கம்போல் ஜே.கே.வே அதை உடைக்கிறார்.

‘‘கந்தசாமி, உன் பேரும் ஃபைனல் லிஸ்ட்ல இருக்கு தெரியுமா?’’

‘‘தெரியும் ஜே.கே.’’

‘‘ஆனா நான் உனக்கு ஓட்டு போடப்போறதில்ல.’’

‘‘நான் உங்ககிட்ட கேக்கலையே ஜே.கே.’’

‘‘உனக்குதான் போடலான்னு இருந்தேன். நேத்து லட்சுமி வந்து, நேரா பாத்து கேட்டுட்டா. என்னால மறுக்க முடியல.’’

ஒரு சிறு அசைவுமின்றி, காரோட்டிக்கொண்டே அவ்வார்த்தைகளை புறந்தள்ளுகிறது ஒரு நட்பு மனம். அந்த வருடம் கந்தசாமிக்கு அல்லாமல் ஒரு வணிக எழுத்தாளரான லட்சுமிக்கு அகாடமி விருது கிடைத்தது, தமிழ் வரலாற்றில் பிழைத்திருத்த வேண்டிய பக்கம். தக்கையின் மீது பதியும் கண்கள், மீன் வேட்டைக்கு வேண்டுமானால் சாத்தியம். படைப்பாளிக்கல்ல.