Wednesday, December 31, 2014

அலை




இது நடந்து பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன.

அப்போதுதான் நான் மின்வாரியத்தில் இளநிலை உதவியாளனாகப் பணியில் சேர்ந்திருந்தேன். மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தபோது அப்பாவோடு  மிக நவீனமான, அழகிய ஓர் இளம் பெண் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். எங்களுக்கு சிபி பிறந்த நாற்பதாவது நாள் அது. ஷைலஜா அவர்கள் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்ததை சமையலறையிலிருந்து வந்த மணத்திலிருந்து உணர முடிந்தது.

அந்தப் பெண்ணை எங்கேயோ சமீபத்தில் பார்த்தது மாதிரியேயிருந்தது. ஞாபகத்தை திடீரென மீட்டெடுக்க முடியவில்லை.

என்னைக் கண்டதுமே இருவருமே பேச்சை நிறுத்திக் கொண்டார்கள். அப்பெண் எழுந்து நின்று கொண்டாள்.

எதேச்சையாகத் திரும்பினால் நெல்லிக்குப்பத்து மாமா பையன் சிவக்குமார் நின்றிருந்தான். அவன் என்னைப் பார்த்த விதத்தில் ஏதோ தவறு தெரிந்தது.

தேநீர் கோப்பைகளோடு நிமிர்ந்த ஷைலஜாவின் முகம் இயல்பானதாயில்லை.

எல்லோரும் சேர்ந்து ஒரு இறுகிய மௌனத்தை அடைகாத்தார்கள்.

நான்தான் முதல் முட்டையின் நுனியை உடைத்தேன்.

யாருப்பா இது?”

மொதல்ல காபிய குடிடா, சொல்றேன்

அதுவரையிலுமான பொறுமைகூட எனக்கில்லை. சிவக்குமார் என் பார்வையைக் கடந்து எதிர்திசைக்குப் போனது ஒரு பூனை கடப்பது மாதிரியே இருந்தது.

அப்பெண் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவள். தமிழ்நாடு அளவில் மிக முக்கியமான விளையாட்டு ஆளுமை. கூடைப்பந்துப் பிரிவில் அவள்தான் அணித்தலைவி. என் மாமா பையன் மிலிட்டரியில் இருந்தான். அவனுக்கும் கூடைப்பந்தாட்டத்தில் பெரும் விருப்பமும் பங்கேற்பும் உண்டு. ஏதோ ஒரு விளையாட்டு மைதானத்தில் இவர்கள் இருவருக்குமான சந்திப்பு நடந்தது. பையன் அள்ளிவிட்ட அத்தனைப் பொய்யையும் அப்பெண் முழுவதுமாய் நம்பி அவனுடன் புறப்பட்டு வந்துவிட்டாள். தான் மத்திய அரசில் டெல்லியில் வேலை பார்க்கும் .பி.எஸ். அதிகாரி என்ற பொய்கூட அவளைச் சந்தேகப்பட வைக்கவில்லை. காதலும் காமமும் யதார்த்த வாழ்வை என்றுமே புறந்தள்ளும்.

எங்கு போவதென உடனே முடிவெடுக்க முடியாமல் இரண்டு மூன்றுநாள் அலைக்கழிப்புகளுக்கும், ஒப்புக் கொடுத்தல்களுக்கும் பின்  நெல்லிக்குப் பத்திற்கு ஒரு அதிகாலையில் அவளை அழைத்து வந்தான்.

தயங்கி, தயங்கி வீட்டின் கதவைத் தட்டினான். அவன் அப்பாவும், அம்மாவும் கதவைத் திறப்பார்கள் என்ற அவள் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக அவன் மனைவியும், இரு மகள்களும் கதவைத் திறந்த கணத்தில் அவளுக்கு எல்லாமே சிதைந்தது.


அப்பெண்ணைத் தன் ஸ்நேகிதி என்றும், அவள் மாநில அளவில் மிகச் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்றும், தாங்கள் இருவரும் ஒரு போட்டிக்காக கடலூர் வந்ததாகவும், அருகில் இருக்கும் நெல்லிக்குப்பத்திற்குத் தன் வீட்டைக் காண்பிக்க அவளை அழைத்து வந்ததாகவும், ஒரு சிறு பிசிறின்றி அவன் முழுப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருகையில், ஒரே நேரத்தில் அவன் மனைவியும், அந்தப் பெண்ணும் வெடித்தழுதார்கள்.

பாதி புரிந்தும் புரியாமலும் தூக்கக் கலக்கத்தில் எழுந்திருந்த அந்த இரு பெண் பிள்ளைகளும், ஏதோ அம்மாவுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டது என்பது புரிந்து, பெரும் குரலெடுத்து அந்த அதிகாலையில் கேவ ஆரம்பித்தார்கள். அடியும், உதையும் சராமாரியாக மூவருக்கும் கிடைத்தது. ட்ராக் ஷுட், டீ ஷர்ட்டோடு அப்பெண் தனியே சாலையை நோக்கி நடந்தாள்..

கோபம், ஆத்திரம், தோல்வி, இயலாமை, அவமானம் எல்லா கலவையும் அவள் முகத்தில் மலம் மாதிரி அப்பிக் கிடக்க, அவளை சமாதானப்படுத்த பின்னாலேயே வந்தான் அவன்.

எப்போதும் துல்லியமாக கோல் போட்டு எந்நிமிடத்தையும் வெல்லும் அவன், அவளுக்கு இந்நிமிடத்தை எப்படி வெல்வது என தெரியவில்லை. துரோகத்தின் நிழல் அந்த நெடுஞ்சாலை முழுக்க விரியன் பாம்பின் குட்டிகள் மாதிரி நெளிவதை அவளால் பார்க்க முடிந்தது. மனித குலத்தின் துவக்கத்திலிருந்து இன்றுவரை தொடரும் ஒரு ஆணின் நம்பிக்கை துரோகத்தில் சற்று முன், இல்லை மூன்று நாட்களுக்கு முன்தானும் பலியானது அவளுக்கு மெல்லப் புரிந்தது. தன் கழுத்தைத் தடவிப் பார்க்கிறாள். வெட்டுப்பட்ட இடத்திலிருந்து இன்னமும் ரத்தம் கசிகிறது. அவனைப் பார்க்கவே கூசுகிறது.

பரந்த விளையாட்டு மைதானத்தின், பெரும் ஆராவாரத்திற்கிடையே சகல கம்பீரத்தோடும் தான் நடந்த வந்த நாட்கள் இனி ஒருபோதும் இல்லை! ஒரு நிமிடத்தில் என்னிலிருந்த எல்லாவற்றையும் உதிர்த்து இவன் துரோகத்தின் முன் போட்டுவிட்டு. உலகின் கடைசி பலவீனமான பெண்ணாக, எதுவுமற்றவளாக நிர்வாணமாக நிற்கிறேன். தொடர் வெற்றியின் குவியலில் எங்கு தோற்றேன்? எப்படி மீள்வேன்?

மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதா? இவனுடனே போய், மூத்தவளுக்கும் சேர்த்து சோறு பொங்கிப் போட்டு மீதி ஜீவிதத்தைக் கடத்துவதா? எதையுமே அந்த அதிகாலை நேரத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டியெனக் கடக்கும் நெடுஞ்சாலையில் நின்று அவளால் முடிவெடுக்க, எந்த முன் முடிவுமின்றி முடியவில்லை. கடலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கிவந்த ஒரு பேருந்தில் ஏறினாள்.

கையில் காசில்லையென்பது தெரியும். மனிதம் இன்னும் தீர்ந்துவிடவில்லையென்ற பெரும் நம்பிக்கை.

அவனும் உடன் ஏறினான். அவள் இருக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவள் விரல்களைப் பற்றினான். கண்ணீரைத் துடைத்தான். அவள் காதுகளில் யாருமறியாமல் முழு முத்தங்கள் தந்தான். அப்பெண்ணின் இளகலில் அவன் நிமிர்ந்தான். ஏமாற்றுதலும், துரோகமும் நிறைந்த அப்பயணம் திருவண்ணாமலையில் என் வீட்டில் வந்து தற்காலிகமாக நிறைவடைந்திருக்கிறது.

மேசையில் வைத்த காபி யாராலும் பருகப்படாமல் ஆறிப் போயிருந்தது. தேநீர் ஈரம் தோய்ந்த ஈக்களின் ரீங்காரம் எல்லோருக்கும் துல்லியமாய்க் கேட்டது.

உன்னை எங்கயோ பார்த்திருக்கேனேம்மா. உம் பேரு?”

நான் முதல் முறையாய் வாய்த்திறந்தேன்.

துர்கா சார்.”

லாஸ்ட் வீக்இண்டியா டுடேவில என்னைப் பற்றி ஒரு மூணுபக்க ஆர்டிக்கிள் வந்திருந்தது சார்

நான் அப்போதுஇந்தியா டுடேவின் தொடர் வாசகன். இப்போது என் ஞாபகத்தில் அப்பெண் இருந்தாள். அவள் மைதானத்தில் விளையாடும்  

நாலைந்து அசாத்தியமான புகைப்படங்களும் கூடவே ஞாபகத்திற்கு வந்தன.
உடல் ரீதியில் வலிமையான ஒரு விளையாட்டு வீராங்கனையை அவன் வெறும் நாலைந்து சொற்களால் ஏமாற்றியிருக்கிறான்.

சாக்லேட் வைத்திருக்கிற பெயர் தெரியாத மாமாவின் பின்னால் போகும் ஒரு எல்.கே.ஜி குழந்தையைப் போல் இந்தப் பெண் இவனோடு புறப்பட்டு வந்திருக்கிறாள்.

இங்கிருந்து இப்போது அப்பூனை எங்களைப் பார்த்துக்கொண்டே மறுபக்கம் கடந்தது.

நானும், ஷைலஜாவும் உக்கிரமானோம். உரத்த குரலில் கத்தினோம். அப்பெண்ணையும், அவனையும் உடனே வெளியேறச் சொன்னோம். என் அம்மா ஒருபுறம் அப்பையனைத் திட்டி தீர்த்தார்கள். இன்னும் இன்னுமென வளர்ந்து, தமிழ்நாட்டின் ஆளுமைகளில் ஒருத்தியாக உயர்ந்து நிற்கப் போகும் ஒரு பெண், அற்பப் புழுமாதிரி இப்படி தன்னை உள்ளிழுத்துக் கொண்டு எங்கள் முன் நிற்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. உருண்டு, திரண்டு அப்பையன் மேல் எங்கள் எல்லோர் கோபமும் குவிகிறது. நாங்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு கணத்தில் என் அப்பா எப்போதும் போல், வேறொரு பார்வையிலிருந்து பேசுகிறார்.

ஒரு தப்பு நடந்துபோச்சு, இப்ப ஏன்டா ஆளாளுக்குக் குதிக்கிறீங்க? அந்தப் பொண்ணு அவமானம் தாங்காம ஏதாச்சும் பண்ணிக்கிட்டா என்ன பண்றது! நம்ப வீட்டுக்கு வந்தா ஏதாவது ஞாயம் கிடைக்குன்னுதானே வந்திருக்காங்க. ஏன் கத்தறீங்க? நிதானமா யோசிப்போம்

அப்பாவிடம் திரும்பி நான் கத்தினேன். வழக்கம் போல் இருவர் வார்த்தைகளும் தடித்து நீண்டன.

அப்பா நீங்க இதை ஒத்துக்கிறீங்களா?”

இது ஷைலஜா.

ஒரு தப்பு நடந்துருச்சி, என்னம்மா பண்றது?”

இது அப்பா,

அப்பாவின் இந்த வார்த்தைகளில் அவள் பதறினாள்.

ஜாதி, மதம், இனம், மாநிலம் என்று எல்லாவற்றையும் உதறி, என் மீது மட்டுமே உள்ள நம்பிக்கையில் இந்த வீட்டுக்கு வந்தவள் அவள். இயல்பாக அவளிடமிருந்து அடுத்த வார்த்தை வந்தது.

நாளைக்கி பவா இப்படி ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தா என்ன பண்ணுவீங்க?”

என்னம்மா பண்றது? புள்ள தப்பு பண்ணிட்டான்னு சரி பண்ணித்தான் ஆகணும்

சரி பண்றதுன்னா?” அவள் வெடித்தழுதாள். ஷைலஜா உணர்வுகளின் மேல் நின்றும், அப்பா அனுபவங்களின் பின் நின்றும் பேசினது எனக்குப் புரிந்தது.

ஆனால் அப்பாதான் ஜெயித்தார். ஒரு முடிவுக்கு வரும்வரை அவர்கள் எங்கள் வீட்டிலேயே தயங்குவதெ முடிவானது.

எங்கள் தொடர்பேச்சால் மெல்ல மெல்ல அப்பெண்ணை இயல்புக்குக் கொண்டு வந்தோம். “கட்டின மனைவியையும், இரண்டு பெண்களையும் இப்படி ஏமாற்றிய ஒருவன், உன்னை ஒரே நிமிடத்தில் நிராகரிக்க எவ்வளவு நேரமாகும்?” என வழக்கமான கேள்வியை முக்கியமான நேரத்தில் அவள் முன் வைத்தோம்.

கண்ணாடி மாதிரி நின்று அவள் உயரத்தை   காட்டினோம்.

மூன்றாம் நாள் காலை அவள் வீட்டுத் தொலைபேசி எண்ணைதுர்காஎங்களுக்குத் தந்தாள். நான்தான் பேசினேன். எதிர்முனையில் சற்று முன்வரை கம்பீரமாயிருந்ததற்கான அடையாளமாக ஒரு ஆண் குரலோடும் பின்னணியில் ஒரு பெண்ணின் வெடித்தழும் சப்தத்தோடும் என் தகவல்களை உதிர்த்தேன்.

மாலை ஐந்துமணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் அவர்களைக் காத்திருக்கும்படி சொன்னேன்.

நீங்க யாரு தம்பி?’ என்ற குரலில் வாஞ்சையிருந்தது.

நேர்ல சொல்றேன்ப்பா

ஒரு அம்பாசிடர் காரை வாடகைக்குப் பேசி, நான், ஷைலஜா, அவன், துர்கா, கூடவே என் நண்பர்கள். அதற்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு பேச்சற்ற பயணம் எங்களுக்கு வாய்க்கவேயில்லை.

எதிர்பார்ப்பு, ஆர்வம், அல்லது ஆர்வமின்மை, துக்கம் அல்லது சந்தோஷம் எதுவுமின்றி ஒரு ஆற்றின் தெளிந்த நீரைப்போல நிச்சலமாய் உட்கார்ந்த துர்காவை அப்பயணத்தில் நான்கைந்து முறை திரும்பி திரும்பிப் பார்த்தேன். அப்படியே ஒரு சலனமற்ற கற்சிலை மாதிரி பின் சீட்டில் சாய்ந்திருந்தாள்.

எங்களுக்குத் தெரியாதென்று நினைத்து அவர்களிருவரும் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். துர்கா வீட்டில் எப்படியும் இவர்களை அவமானம் கருதி ஏற்றுக்கொள்வார்கள். அப்படியே அவளைக் கூட்டிக்கொண்டு அவன் இப்போது வேலை பார்க்கும் டெல்லிக்குப் போய்விடுவது.

அவனுக்கும் தெரியாமல் அவள் தனியே தனக்குத்தானே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தது மாதிரிதான் அவள் முக இறுக்கம் எனக்குச் சொன்னது.
மாலை ஐந்தரைமணிக்கு எங்கள் கார் ஒய்.எம்.சி.. மைதானத்திற்குள் 

நுழைந்தபோது ஆறேழுகார்கள் எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தன. அவர்கள் இருபது பேருக்கும் மேற்பட்டவர்கள் அங்கங்கே நின்றிருந்தார்கள். நான் முன் இருக்கையிலிருந்து அவர்களின் முகங்களை அவதானித்தேன். எதையும் என்னால் கண்டடைய முடியவில்லை. அதற்குள் எங்கள் கார் நின்றது. உடனே எங்களைச் சூழ்ந்து கொண்ட அக்கூட்டம் அத்தனை துரிதமாக, அத்தனை துல்லியமாகச் செயல்படும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு வளர்ந்து பருத்த ஆள் என்னைப் பின்னிருக்கையில் ஷைலஜாவோடு உட்காரச் சொல்லிவிட்டு அவன் எங்கள் வாடகைக்காரின் முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டான்.

அடுத்த விநாடி துர்கா இன்னொரு காரின் பின்னிருக்கையில் இரு நடுத்தர வயதுப் பெண்களுக்கு நடுவே இருந்ததை கவனித்தேன்.

சிவக்குமார் இன்னொரு மாருதி ஆம்னியில் இருவருக்கிடையே அடக்கிக் கொள்ளப்பட்டான்.

நான் யாரும் எதிர்பாராமல் கார் கதவைத் திறந்து இறங்கினேன். அக்கூட்டத்திற்குத் தலைவர் மாதிரியிருந்த ஒருவரிடம் போய்,

நான்தான் உங்களுக்கு போன் பண்ணேன். இவங்க ரெண்டு பேரையும் உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். எங்க வீட்ல பொறந்து நாப்பது நாள் ஆன சின்னக் குழந்தை இருக்கு. சீக்கிரம் போகணும்என்று சூழலை சாதாரணப்படுத்த முயன்றேன்.

அதெப்படி போய்டுவீங்கஎன்ற அவர் குரலில் அப்படியொரு கடுமையிருந்தது. அப்புறம் நீடித்த ஒரு மணிநேரப் பயணமும் நடக்கப்போகும் என்னென்னவோ நிகழ்வுகளை எங்கள் முன் கொண்டு வந்தது. அத்தனை நிகழ்வுகளிலும் ஏனோ கெட்ட சகுனமிருந்தது போலிருந்தது. நானும், ஷைலஜாவும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முன்னிருக்கையில் இருந்த ஆள் மீதான பயமா தெரியவில்லை, ஷைலஜாவின் கைகள் என் கைகளைப் பிணைத்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் மீறி நாங்களிருவரும் தைரியமாயிருந்தோம். நாங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்கான தீர்ப்பை நோக்கிய பயணம் இது என்று மட்டும் எங்களுக்குப் புரிந்தது.

குறுகலான சந்துகளில் புகுந்து புகுந்து சென்ற கார்கள் அனைத்தும் சொல்லி வைத்தது மாதிரி ஒரு இரண்டு மாடி வீட்டிற்கு முன் நின்றது. சுத்தமாக இருட்டி விட்டிருந்தது. எல்லோரும் அவ்வீட்டின் குறுகலான மாடிப்படியில் ஏறி மொட்டைமாடிக்குப் போனார்கள். நாங்களும் பின்தொடரப்பட்டோம். அளவெடுத்தது மாதிரி இருபது முப்பது பேர் ஐம்பதுக்கும், அறுபதுக்கும் இடைப்பட்ட வயதுக்காரர்கள் அம்மொட்டை மாடியில் தரையில் பாய்போட்டு உட்கார்ந்திருந்தார்கள். சற்று முன் காலி  செய்யப்பட்ட காபி டம்ளர்கள் ஒழுங்கற்று கிடந்தன.

மாடியேறி விரிந்து கிடந்த ஒரு திசையைப் பார்த்தேன். அதன் கிழக்கு. தூரத்தில் கடல் தெரிந்தது. வேறு ஒரு மனநிலையில் இருந்திருந்தால் இந்த இரவில் கடல் சப்தம் கேட்டிருக்கலாம்.

துர்கா அப்பெண்களோடு இரண்டாவது மாடி வசிப்பிடத்திற்கு இழுத்துக் கொள்ளப்பட்டதை உணர முடிந்ததுசிவக்குமார் காரில் வந்த இரண்டு பேருக்கு நடுவில் நிற்க வைக்கப்பட்டிருந்தான். சூழல் எதற்கோ தயாராவது மாதிரியிருந்தது. பெரும் பீதி ஒன்று என்னைப் பற்றிக் கொண்டது. ஆனாலும் நான் தர்மத்தின்மீது நின்று கொண்டிருந்தேன். நான் ஷைலஜாவைப் பார்த்தேன், என்னைவிடவும் தெளிவான நிலையில் இருந்தாள்.

சொல்லுங்க

சொன்னோம்.

தங்கு தடையின்றி அரைமணி நேரம் நடந்த எல்லாவற்றையும் அச்சபைமுன் நானும் ஷைலஜாவும் சொன்னோம். நான் அப்பையன் என் மாமா மகன் என்பதை, மட்டும் எதனாலோ சொல்லவில்லை. இரண்டாவது மாடியிலிருந்ததுர்காவின் பெரும் ஓலம் மேல்மாடிக்குக் கேட்டது. திகில் மளமளவென தீ மாதிரி பரவியது.

அப்பெண்ணின் ஓலத்தைச் சுமந்தவாறே அந்த நடுத்தர வயதுப்பெண், அநேகமாக துர்காவின் தாய் கையில் ஒரு துடைப்பைக் கட்டையோடு மாடியேறி வந்தார்கள்.


ஷைலஜாவின் கை என் கையை இன்னும் இறுக்கியது. நான் பயப்படாதது மாதிரி நடித்தேன். அப்பெண் என்னைக் கடந்து அப்பையன்முன் போனார்கள். அதற்காகவே காத்திருந்தது போல அருகிலிருந்த இருவரும் விலகினார்கள்.

அத்தென்னந்துடைப்பம் முற்றிலும் உதிர்ந்து, அப்பெண்ணின் ஆவேசம் பெரும் மூச்சாய் வந்து இரைத்தது.

எந்தத் துவக்கத்திற்கோ எல்லோரும் காத்திருந்தது போல அப்பையனை அடித்துத் துவைத்தார்கள். ‘அவனை, கையைக் காலைக்கட்டி கடல்ல போடு. சுறா துன்னட்டும்என ஒரு பெரியவர் கட்டளையிட்டார்.

அவரே எங்களைப் பார்த்து, ‘இவங்கள என்ன பண்றது?’ எனக் கேட்ட கணம், அப்பையனுக்கு அடிவிழுவது நின்று எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள்.
எப்படியோ அப்பெண்ணின் அப்பா மட்டும் எங்களை முழுக்க உள்வாங்கியிருந்தார்.

அவங்கள அனுப்புங்க அவங்க இல்லன்னா எம்பொண்ணை மறுபடி உசுரோட பாத்திரு க்கவே முடியாது. தோ, இந்தப் பொண்ணு, பச்சப் புள்ளக்காரி. கொழந்தைக்குப் பால் குடுக்கறத விட்டுட்டு இப்படி வந்திருக்குன்னா, இந்த தேவ்டியா பையனைக் காப்பத்த இல்ல. எம் பொண்ணை எங்ககிட்ட ஒப்படைக்க

எதனாலோ அதன்பின் வார்த்தைகள் வராமல் தேம்பித் தேம்பி அழுதார். “ஓடிப் போய் எல்லாத்தையும் பாழாக்கி விட்டேயேடா தாயோளிஎன அவனை வயிற்றில் எட்டி உதைத்தார்.

நாங்களிருவரும் கலங்காமல் நிற்பது மாதிரி நின்றிருந்தோம். ஆனால் கண்களில் தூசி விழுந்தது.

நாங்கள் கீழே இறங்க எத்தனித்தபோது,

நில்லுங்க

என்ற குரல் கேட்டுத் திரும்பினோம். “இந்த நாயைக் கொன்னப் பாவம் எங்களுக்கு எதுக்கு? நீங்களே கூட்டிட்டுப் போங்கஎன அவனை இழுத்து எங்கள்முன் விட்டார்கள். அவனுக்கு முகம் கறுப்பு கறுப்பாய் கன்னியிருந்தது அந்த இருட்டிலும் தெரிந்தது. மூன்று பேரும் இறங்கினோம். திறந்திருந்த ஜன்னல் வழியே துர்கா நின்றிருந்தது தெரிந்தது. தலைகுளித்து ரத்தச் சிவப்பு நிறத்தில் ஒரு சுடிதார் அணிந்து நெற்றியில் சிகப்பு குங்குமம் மேல்நெற்றிவரை இழுத்து விடப்பட்டிருந்தது. எங்கள் இருவரையும் பார்த்தாள். அப்பார்வையிலிருந்தது பழிவாங்கலா, நன்றியா என எதையுமே முழுமையாக கிரஹித்துக்கொள்ள முடியவில்லைஅவன் அதற்குள் கீழே இறங்கியிருந்தான்.

எப்போதும் விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமில்லாத நான் ஏதோ ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து மாத, வார இதழ்களில்துர்காவைத் தேட ஆரம்பித்தேன். அப்பெண் மீண்டும் மைதானத்தில் இறங்கி தன் குழுவினருக்குத் தலைமையேற்று, ஆயிரமாயிரம் ஆரவாரக் கைத்தட்டல்களுக்கிடையே ஒரு ஒற்றைப் பந்தைக் கையிலேந்தி ஓடி வரும் காட்சிக்கு என நாங்கள் ஆசைப்பட்டோம்.

எந்த மலர்தலுமின்றிக் கடந்த ஆறு மாதத்திற்குப் பின் ஒரு ஞாயிற்றுக்கிழமை தினமணிக் கதிரில், அதே கம்பீரமான அழகோடுதுர்கா ராயபுரத்திலிருந்து ஸ்பெயினுக்குஎன்ற தலைப்போடு,

 பக்கங்களைப் புரட்டவே தோன்றவில்லை. எதனாலோ அன்று குமுறி, குமுறி அழுகை வந்தது.

Tuesday, December 23, 2014

முதல் கலை இலக்கிய இரவு

எப்போதுமே எனக்கு டிசம்பரும், ஜனவரியும்தான் மனதுக்கு உகந்த மாதங்களாக இருக்கின்றன. ‘கவிராத்திரி’ ‘கவிதா நிகழ்வு’ என சிறு சிறு முயற்சிகள் நடந்தாலும் கூட அவையெல்லாமே நாங்கள் நினைத்த மாதிரி வரவில்லை.

எண்பத்தாறு டிசம்பர் 31-ல் ஓர் இரவு முழுக்க தமிழ்நாடு முற்போக்கு எழுதாளர் சங்கம் நடத்தப் போகும் கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு ‘கலை இலக்கிய இரவு’ எனப் பெயரிட்டோம். ‘டிசம்பர் பனியில் யார் உட்காருவார்கள்?’ என்ற கேள்விக்கு காந்திசிலை எதிரிலிருந்த வன்னியர் மண்டபத்தைத் தேர்ந்தெடுத்தோம். அப்போது நாட்டுப்புறப் பாடகர் கே.ஏ.குணசேகரன் முனைவர் பட்ட ஆய்வு மாணவர். மூட்டை முடிச்சுகளோடு நீண்ட தூர பஸ் பயணம் முடிந்து, எங்கு போவது எனத் தெரியாமல் காந்திசிலை மூலையிலேயே நின்றிருந்தார்கள் அக்குழுவினர். முக்கா மொழம் கோட்டை சாமி, சின்னப்பொன்னு என தமிழ் கலை உலகிற்கு முற்றிலும் புதிய முகங்கள் அவர்கள் யாவரும், அப்போது.

இரவு ஏழு மணியிருக்கும் கே.ஏ.குணசேகரன் குழுவினர் மேடையைத் தங்கள் வயப்படுத்தி, தவில், நாயனம், உடுக்கை எனப் பாரம்பரிய இசைக்கருவிகளை அதிரவிட்டு அடுத்த நாள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு தெருவெங்கும் நடந்து கொண்டிருந்த மனிதர்களைக் கொத்துக் கொத்தாய் அம்மண்டபத்திற்குள் நுழைய வைத்தார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் மண்டபத்திற்குள் நிற்க இடமில்லை. இசையின் பிரவாகம் அம்மண்டபத்தைக் கடந்து தெருவெங்கும் ஒலித்தது. எங்கிருந்தோ ஒரு உற்சாகம். மனிதர்களைப் பற்றிக் கொண்டது. அல்லது துயரம் கசிந்த எம்மனிதர்கள் முன் இசை ஒரு பற்றுக்கோல் மாதிரி நீரில் மிதந்தது.

ஆறு மணிக்கு முன் இருந்த நாங்கள் இல்லை இப்போது. அவ்வளவு சிதைந்திருந்தோம். தயக்கமிருந்தது. எதிர்பார்ப்பு மிஞ்சியிருந்தது. பார்வையாளர்களின் வருகையின் நிச்சயமின்மை பெரும் பதட்டத்தைத் தந்திருந்தது.

இந்த ஒருமணி நேர இடைவெளி எல்லாவற்றையும் மாற்றிப் போட்டிருந்தது. ஒருவரைத் தூக்கி இன்னொருவர் தோளில் போட்டு ஆடாதது மட்டுமே குறை. அப்படி ஒரு உற்சாகம். அப்படி ஒரு கொண்டாட்டம். காணும் இடமெங்கும் மனித முகங்கள். முகங்கள் தோறும் உற்சாகம்.

அவர்கள் அடுத்து, அடுத்து எனப் பாடிக் கொண்டேயிருந்தார்கள். சின்னப் பொண்ணும், குணசேகரனும்

‘‘அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சி போச்சுதே, என்னைப்

பள்ளிக்கூடப் பிள்ளையெல்லாம் கேலி பேசுதே’’ என

மாறிமாறிப் பாடிய வரிகளில் அந்த மண்டபம் முழுவதிலுமிருந்த குதூகலம் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு பெரும் மௌனம் ஒரு ராட்சதப் பறவை மாதிரி வந்து உட்கார்ந்து கொண்டது.

மண்ணின் பாடல்களுக்கு மனிதர்கள் மனங்கசிந்து உருகினதை நான் அருகிலிருந்து கண்டேன். துயரம் தோய்ந்த இப்பெரும் வாழ்வில், மகளுக்கு ஒரு பாவாடை வாங்க பட்ட கஷ்டமும், அவமானமும் அவர்களில் பலர் கண்களில் ஒரு மின்னல் மாதிரி வந்து போனது. கலையின் வெற்றி இதுதான். நாங்கள் இப்போதுதான் சக மனிதர்களின் மூச்சுக்காற்று எங்கள் மேல் படுமளவிற்கு நெருங்கியிருக்கிறோம். நான் ஒருவிதமான பரவச மனநிலையில் இப்படியும், அப்படியுமாக அலைந்து கொண்டிருந்த போது, தோழர் காளிதாஸ் என்னைக் கைப்பிடித்து எதுவும் பேசாமல் வெளியில் அழைத்துப் போனார். பிடித்த கை நடுங்குவதை உணர்ந்தேன்.

‘‘பவா, சுப்ரமணி தெரியுமில்ல, எங்க ஊரு சுப்ரமணி’’

ஏற்கனவே அவருக்குத் திக்கும். இப்போது அது இன்னும் அதிகரித்திருந்தது.

‘‘எந்த சுப்ரமணி தோழர்?’’

‘‘எம்.எல்.மூவ்மண்ட்ல சேந்து…’’ திக்கி, திக்கி வந்த வார்த்தைகள் எனக்குள் நேரடியாய் இறங்கியது.

‘‘டபுள். எம்.ஏ.சுப்ரமணியா?’’

‘‘ஆமாம், ஆமாம் பவா, நான் எத்தனையோ வாட்டி அவரைப் பத்தி சொல்லியிருக்கேன்’’ வார்த்தைகள் தீர்ந்த பின்பும் அவர் தலை ஆடிக் கொண்டேயிருந்தது.

ஒரு தேர்ந்த திரைப்படத்தின் காட்சி மாதிரி ‘பள்ளிகொண்டாப்பட்டு சுப்ரமணியன். எம்.ஏ. (வரலாறு) எம்.ஏ.(பொருளாதாரம்)’ என் கண்முன் விரிந்தார்.

அதுவும் ஒரு குளிர் கால இரவு. வயலெங்கும் நெற்பயிர், பாலேறும் பருவம். இரவு இரைப்பிற்குப் பின் காளிதாஸ் மோட்டார் கொட்டகையில் பாதி விழிப்பும், பாதி தூக்கமுமாய் தன் அண்ணனோடும் இன்னொரு நண்பனோடும் படுத்திருக்கிறார். இப்படி தினந்தோறும் ராத்தூக்கம் கலைவது பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான்.

மோட்டார்க் கொட்டைகையின் மேல் ஆள் பேச்சு சப்தம் கேட்கிறது. அது அந்த ஏகாந்த வெளியில் அருகிலிருந்து பேசுவது போலவே துல்லியமாய்க் கேட்கிறது. இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் எழுந்து வெளியில் வந்து தண்ணீர் தொட்டியின் மேல் உட்கார்ந்து கொள்கிறார்கள். வயலெங்கும் முன் பனி ஒரு பரிசுத்தமான அழகோடு இறங்கிக் கொண்டிருக்கிறது.

‘‘எத்தன மணிக்கு முடிச்சீங்க தோழர்?’’

‘‘ஒண்ணு, ஒண்ணரை இருக்கும். சத்தம் போடவே விடலை. தோழர் கழுத்தை இறுக்கிப் புடிச்சிக்கிட்டாரு. திமிற திமிற நான்தான் முடிச்சேன்’’ என சொல்லிக் கொண்டே அவர் கையிலிருந்த ரத்தக் கவிச்சியையும், நகக் கண்களில் ஒட்டியிருந்த சதைத் துனுக்குகளையும் தன் சகத் தோழர்களுக்குக் காண்பிக்கிறார்.

நாங்கள் மூவரும் இன்னும் நெருங்கி உட்காருகிறோம். ஒருவர் உஷ்ணம் இன்னொருவர் மேல் படுகிறது. பனியில் உறைகிறோம். இனி வாழ்நாளெல்லாம் வராதோ என்பது மாதிரி வார்த்தைகள் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டன.

‘‘வீட்ல யாரும் சத்தம் போடலையா?’’

‘‘தனியாத்தான் படுத்திருந்தான். முழிச்சி எங்களை யாருன்னு நிதானிக்கிறதுக்குள்ள தோழர் கழுத்தை நெருக்கிட்டாரு’’

‘‘சரி, இதோட அந்த ஊர்ல இருக்கிற சாதிக் கொடுமை தீந்துடுமா தோழர்?’’

‘‘இல்லை. தனிமனித ஒழிப்பால பெருசா எதுவும் நடந்துறாது. ஆனா ஒரு பயம் கவ்வும். இவன்தான் அவங்களோட தைர்யம். இவந்தான் அந்தக் கோயிலுக்குள்ள அவன் சாதியைத் தவிர வேற எவனும் நுழைய கூடாதுன்னு நாலு வருசமாத் தடுத்தவன். நாம நேரடியாவும், மறைமுகமாவும் எடுத்த எல்லா முயற்சிகளையும் நசுக்கினவன். அவர்கள் உரையாடலில் தத்துவம், மார்க்சியம், சில இடங்களில் கவித்துவம் எல்லாமும் இருந்தது. இல்லாதது தனிமனித விரோதம்.

செத்துப் போனவனுக்கும் இவர்களுக்கும் எந்தப் பகையுமில்லை. சொல்லப் போனால் இவர்கள் ஐந்து பேருமே வேறு வேறு ஊர்களிலிருந்து, சாதியிலிருந்து ஒரு பொதுகொள்கையின் பொருட்டு ஒரு புள்ளியாய்த் திரண்டிருந்தார்கள்.

அப்போதுதான். பி.ஏ.முடிந்திருந்த எனக்குத் கொஞ்சம் புரிந்தது மாதிரியும், புரியாதது மாதிரியுமிருந்தது. அவர்கள் ஒவ்வொருவராய் கீழே குதிக்கிற சப்தம் கேட்டு நாங்கள் அவசரமாக பம்புசெட் ஷெட்டுக்கு உள்ளே போய்ப் படுத்துக் கொண்டோம். லுங்கியைத் தளர்த்தி மேலுக்குப் போர்த்திக் கொண்டோம்.

அவர்கள் தொட்டி தண்ணீரில் விழுந்து சப்தமெழுப்பிக் குளித்தார்கள். அவர்களுக்குள் எப்போதும் விடாமல் விவாதங்கள் நடந்து கொண்டேயிருந்தன. ‘‘விடியறதுக்குள்ள திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறுங்க தோழர். அங்க தோழர் ராமச்சந்திரன் உங்களைப் பாத்துக்குவாரு’’ என்று அவர்களில் ஒருவர் காரியம் முடிந்த இரண்டு பேரைப் பார்த்து சொல்லியிருக்க வேண்டும். வார்த்தைகள் மட்டுமே பம்புசெட்டிற்குள் நுழைந்தன.

அடுத்த நாளிலிருந்து தோழர் சுப்ரமணியனை எங்கள் ஊரில் நாங்கள் யாருமே பார்க்கவில்லை. நேற்றிரவு பம்புசெட்டிற்குள் வந்த வார்த்தை அவரை நோக்கி சொல்லப்பட்டது தான் என்பது எனக்கு அப்புறம் புரிந்தது. சுப்ரமணியன் வீடும் அப்படி ஒன்றும் இளைந்தது இல்லை. பத்திருபது ஆட்களை வைத்து எப்போதும் பெரும் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்தான் சுப்ரமணியனின் அப்பா. ஒரேமகனை மெட்ராஸ் பச்சையப்பன் காலேஜூக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். அங்குதான் அவருக்கு மார்க்சியம், அழித்தொழிப்பு, வர்க்கம் எல்லாமும் அறிமுகம். படிப்பு முடிந்து, தலைமைச் செயலகத்துக்கு முன் ஒரே நாளில் பதினேழு பேர் தங்கள் பட்டங்களையும், ஒரிஜினல் மதிப்பெண் பட்டியல்களையும் கொளுத்தினார்கள். எரியும் ஜ்வாலை அடங்கும் முன் கைதானார்கள். ஜெயிலிலிருந்து இயக்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அனுப்பப்பட்டவர் அவர். சிலருக்கு டபுள் எம்.ஏ.சுப்ரமணி. பலருக்கு நொண்டி சுப்ரமணி.

இரண்டு மூன்று வருடங்களுக்குப் பின் சுப்ரமணியன் அப்பாவின் கருப்பந் தோட்டத்தில் கரும்பு வெட்டுபவர்களில் ரெண்டு பேர் அசலூர் கூலித் தொழிலாளிகள் இல்லை, அசலூர் சி.ஐ.டி. போலீஸ்காரர்கள் என்பதையறிந்து ஊரே கூடி நின்ற ஒரு மாலைவேளையில் அவர்கள் இருவரும் மிகுந்த அவமானப்படுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

காலம் எல்லாவற்றையும் துடைத்தெறிந்து விடுகிறது. மனது அனைத்தையும் பத்திரப்படுத்திக் கொள்கிறது.

மண்டபத்திற்குள்ளிருந்து இன்னும் ஆவேசமாய் குணசேகரன் குழுவினரின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தோல் கருவிகளின் குதியாட்டம் ஊரையே எழுப்புகிறது.

ஒலிக்கும் பாடல்களிலிருந்தும், நடக்கும் நிகழ்வுகளிலிருந்தும் நாங்களிருவரும் மனதளவில் வெகுதூரம் வந்து விட்டிருந்தோம். முற்றிலும் வேறொரு உலகத்தில் சஞ்சரித்திருந்தோம்.

‘‘இப்ப அவருக்கு என்னாச்சு தோழர்?’’

‘‘பதினாறு வருசத்துக்கப்புறம் அவரு மண்டத்துக்குள்ள ஒக்காந்து இருக்காரு’’

என் உடல் இந்த வார்த்தையில் லேசாக நடுங்கத் துவங்கியது. அது பயமில்லை. அப்படியென்றால்? ஆர்வம். வெறும் ஆர்வமா? இல்லை தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனக்குக் கிடைத்த ஒரே மானுட வாழ்வை தானே சிதைத்துக் கொண்ட ஒரு மனிதனைப் பார்க்க… நான் அந்நிமிடத்தில் என்னென்னமோ ஆனேன். ஒருவேளை இது எல்லாமுமாய்க் கலந்த கலவையாயிருக்கலாம்.

உள்ளே அதிரும் பாடல்களினூடே தோழர் காளிதாசைப் பின் தொடர்ந்தேன். மண்டபத்தின் கிழக்குப்பக்க சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டிப் போட்டு உட்கார்ந்திருந்த தாடிமுடி நரைத்திருந்த ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதனுக்கு முன் முழுந்தாளிட்டு உட்கார்ந்து, அந்தப் பெரும் சப்தத்தினூடே காளிதாஸ் ஏதோ சொன்னார். நான் அவர்களுக்கருகில் நின்று கொண்டிருந்தேன். அவர் சிரமப்பட்டு எழுந்தார். காளிதாஸ் அவர் கையூன்றிக் கொள்ள தோள் கொடுத்தார்.

அன்புத் தியேட்டர் அருகே ஒரு டீக்கடையில் நின்றோம். அவர்களை முன்னால் நடக்கவிட்டு பின்னாலிருந்து கவனித்தேன். தோழர் சுப்ரமணியத்திற்கு ஒரு கால் முற்றிலும் ஊனமாயிருந்தது. ஒரு கையைக் காலின்மீது ஊன்றி நடந்தார். எதுவும் பேசாமல் காளிதாஸ் உடன் நடந்தார். நான்தான் மூவருக்கும் ‘டீ’ சொன்னேன். ‘‘எனக்கு டபுள் ஸ்ட்ராஸ்’’ என்பதற்கு மட்டும் வாய் திறந்தார். வெளிச்சத்தில் முகம் பார்த்தேன். எப்போதோ இறுகிய முகம். அதிலிருந்து ஒரு புன்னகை, ஒரு சிரிப்பு சாத்தியமாகும் என நம்பவில்லை.

காளிதாஸ் என்னை அறிமுகப்படுத்தினார். ‘தமுஎச செயலாளர்’ என்றதற்கு,

‘மார்ச்சிஸ்ட் குரூப்தானே?’ என அலட்சியமும் கடுமையும் மிகுந்த குரலில் கேட்டார்.

நான் எதுவும் சொல்லவில்லை. மண்டபத்திலிருந்து வெளிவரும் பாடலையும், மண்டபதுக்குள் போகும் மனிதர்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

‘உள்ளே போலாம்’ என்ற அவர் சொல்லுக்குக் காத்திருந்தது போல மூவரும் திரும்பினோம்.

அவருக்குக் கட்சிமீது கடும் கோபமிருந்தது. ‘இந்த ஓட்டுப் பொறுக்கிகளோடு பேச என்ன இருக்கிறது?’ என்பது மாதிரியான கோபம் அது. அப்போது சரியாகப் புரியவில்லை. இப்போது மட்டும் முற்றிலும் புரிந்து விட்டதா என்ன?

அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு நான் தனித்திருந்தேன். என்னென்னமோ யோசனைகள் வந்து போனது. பாடல்களை மீறி சுப்ரமணி என்னை அந்த இரவில் ஆக்ரமித்துக் கொண்டார். அதன்பின் நீண்ட அக்கலையிரவில் நான் கவிதை படித்தேன். ஜெயந்தனின் ‘மாப்பிள்ளை கிடைக்கும்’ நாடகத்தில் நடித்தேன். நன்றி சொன்னேன். வந்தவர்களை வழி அனுப்பி வைத்தோம். அந்த ஒரு இரவில் ஏதோதோ நடந்தது.


முப்பது ஆண்டுகளுக்குப் பின் அதே போல இந்த டிசம்பரில், அன்று இரவு என்னோடு எதுவும் பேசாமல் லட்சியவாதம் இறுகிய முகத்தோடு, தாங்கித் தாங்கி நடந்து வந்த தோழர் சுப்ரமணியனின் முகம் மட்டும் திரும்ப, திரும்ப நினைவு வந்து இன்னும் அலைகழிக்கிறது.