Showing posts with label குறும்படம். Show all posts
Showing posts with label குறும்படம். Show all posts

Tuesday, October 20, 2009

ஏழுமலை ஜமா



சில இரவுகள் எப்போதும் நினைவுகளில் தங்கியிருக்கும். 1993 நவம்பர் குளிர் இரவில் லேசான மழைச்சாரலில் நனைந்தபடி எஸ். ராமகிருஷ்ணனும், கோணங்கியும் என் வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பிய அகாலம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இரவு முழுக்க பேசி முடிந்தபோது எங்கள் மாவட்ட மாநாட்டை ஒட்டி எல்லோராலும் பேசப்படுகிற ஒரு சிறுகதை தொகுப்பை கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்தோம். தமிழில் ஜெயமோகன், தமிழ்செல்வன், கோணங்கி, பவாசெல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன், போப்பு, ஷாஜகான், ஆகியோரின் கதைகளையும், இதற்கு நிகரான இலத்தின் அமெரிக்க கதைகளின் தமிழ் மொழிப்பெயர்ப்பையும் கொண்டு அத்தொகுப்பு உருவானது. எல்லோரிடமும் கதை வாங்கிய பிறகும் நான் மட்டும் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

விடாமல் மழை பிடித்துக் கொண்ட ஒரு மத்தியானத்தில் எழுத ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் முழுமையாக எனக்குள் கிடைத்தவன் தான் என் ”ஏழுமலை ஜமா”. முதன் முதலாக அப்பா ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த ஊர் கோணலூர். அவரின் ஞாபகச் சிதறல்களில் உதிர்ந்தவைகளை எனக்கு தெரியாமலேயே என்னுள் சேர்த்து வைத்திருந்திருக்கின்றேன். என் ஞாபகம் சரியாக இருக்குமேயானால் என் சாரோன் வீட்டில் பல தடவைகள் ஜிட்டு குடுமியுடனும், சிவந்த கண்களுடனும் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுள்ள ஆள்தான் ஏழுமலையாக இருக்க வேண்டும்.

இக்கதையும் சேர்க்கப்பட்ட தொகுப்பிற்கு நாங்கள் வைத்த பெயர் ”ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்” நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெரும் சூராவலியை அத்தொகுப்பு ஏற்படுத்தியது. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டதென்று அறிவிக்க இவனுங்க யார்? என்று சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த படைப்பாளிகள் தங்கள் எதிர்காலப்படைப்பு சூன்யம் குறித்த பெரும் பதட்டத்தோடு எங்களிடம் எதிர்வினையாற்றினார்கள். அதைத்தாண்டி அசோகமித்ரன் போன்ற பெரும் படைப்பாளிகள் அத்தொகுப்பைப்பற்றி இந்தியாடுடே போன்ற இதழ்களில் மிகவும் சிலாகித்து எழுதினார்கள். விவாதங்கள் எத்தனை உக்கரமானதாக இருந்தபோதிலும் இன்றளவும் அத்தொகுப்பில் வந்த கதைகள் ஜீவனுள்ளவைகளாகவே உள்ளன.


அத்தொகுப்பிலிருந்து என்னுடைய ”ஏழுமலை ஜமா”வை எடுத்து மிகுந்த ஈடுபாட்டுடன் 53 நிமிட குறும்படமாக என் ஆத்மார்த்த நண்பன் கருணா இயக்கினான்.

படப்பிடிப்பின் போது ஒரு நாள் கூட நான் அத்திசைக்கே போகவில்லை. அதற்கு விளக்க முடியாத பல மௌனமான காரணங்கள் உண்டு.

ஆனால் படத்தின் முழுமையை ஒரு மினி ஏசி அரங்கில் வெறும் 30 நண்பர்களோடு பார்த்தபோது பெருமிதமாக இருந்தது. என் நண்பனும் இப்படத்தின் இயக்குநருமான கருணாவை கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்து சொல்ல மனம் ஏங்கினாலும் எதார்த்த வாழ்வு அதற்கு இடம் தாரததால் ஒரு அழுத்தமான கைக் குலுக்களில் என் பெருமிதத்தை கருணாவின் கைகளுக்கு மாற்றிவிட முயற்சித்தேன்.

இன்றும் ஏதோவொரு நாளின் அகாலத்தில், ஏதோ ஒரு பேருந்து நிலையத்தில் தோளில் மாட்டிய ஆர்மோனிய பெட்டியோடும், இடுப்பு வரை நீண்டு வளர்ந்த முடியோடும், பொருட்கள் அடைக்கப்பட்ட இரும்பு பெட்டியோடும், வெற்றிலையால் சிவந்த உதடுகளோடும் எதிர்படும் கூத்துக்கலைஞர்களை சந்திக்க நேரும்போதெல்லாம் அப்பேருந்து நிலையத்தின் அடர்த்தியான இருட்டுள்ள ஒரு பகுதி எனக்கு தேவைப்படுகிறது. என் இரகசிய அழுகையை சிந்துவதற்கு.

ஏழுமலை ஜமா குறுபடத்தை காண