Friday, December 30, 2011

அன்பின் வன்முறையாளன்

பாலா

இயக்குநர் சீமான்தான் பாலாவை அறிமுகப் படுத்த, என்னையும் என் நண்பர் எஸ்.கே.பி.கருணாவையும் அழைத்துப் போனார். தாம்பரத்திற்குள் அடங்கியிருந்த ஏதோ ஒரு பண்ணை வீட்டை நோக்கிப் பயணித்த எங்கள் வண்டியில், தம்பி நா.முத்துக்குமாரும் உடனிருந்தான்.

சேது, என்னைப் பெரிதாய்க் கவர்ந்த படமில்லை.ஆனால், ‘பிதாமகன்என்னை பிரமிக்க வைத்த படைப்பு.விளிம்புநிலை மனிதர்களின் ஆன்மாவின்மீது சினிமா வெளிச்சம் பட்டுவிடாமல், தன் படைப்பில் கொண்டுவந்த லாகவத்திற்காக, அக்கலைஞனைச் சந்திக்க வேண்டி மனம் ஆர்வப்பட்டது.ஆனால், வண்ணநிலவனை, கி.ரா.வைச் சந்திக்கப்போன முதல்முறை பரவசம் எதுவுமற்றிருந்தேன்.மனதில் பிதாமகனை இன்னொரு முறை காட்சிப்படுத்த முயன்றேன்.போட்டி போட்ட விக்ரமையும், சூர்யாவையும் தாண்டி இளையராஜாவும், பாலாவும் என்னை ஆக்கிரமித்தார்கள்.

அந்த மழை இரவில், சூர்யாவின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு நடுத்தெருவில் கிடந்த காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கள் வண்டி அந்த பங்களா முன்நின்று, என் காட்சியை அறுத்தது. தன் அடுத்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டில் இருந்தார் பாலா.எங்களைப் பார்த்தவுடன் அதிலிருந்து வெளியே வந்து, ஒரு அளவான சிரிப்போடு வரவேற்றார்.வார்த்தைகளை அவரே வைத்துக் கொண்டார்.புன்னகை மட்டும்தான் எங்களுக்கு.பெரும் முரணாக, சீமான் அண்ணன் அநியாயத்திற்கு எங்களை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.திராவிட மரபின் மிகை அண்ணனிடம் கொட்டிக் கிடந்தது.எல்லாவற்றிற்கும் பதில் அச்சிரிப்பு மட்டுமே.

சாப்பிடலாமா?” என்ற முதல் வார்த்தை, அத்தனை சிக்கனத்தோடு அவரிடமிருந்து வந்து விழுந்தது.

காத்திருந்ததுபோலக் கலைந்து, உணவு மேடைக்கெதிரே உட்கார்ந்தோம்.மணக்க மணக்க கருவாட்டுக் குழம்புடன் சுடுசோறு தின்றோம்.இன்னும் கொஞ்சம் நெருக்கத்தை கருவாட்டுக் குழம்பு கொடுத்தது.

நான்தான் பேச ஆரம்பித்தேன்.பிதாமகன் பற்றி, என் உணர்வில் இருந்ததையெல்லாம் வார்த்தைப்படுத்தினேன்.நான் அதில் உச்சமெனக் கருதிய காட்சிகளை விவரித்தேன்.‘கொஞ்சம் அதிகமோஎன எழுந்த உள்ளுணர்வை உள் அழுத்தி உரையாடினேன்.

ம்என்ற வார்த்தைகளுக்கு மேல் அவரிடமிருந்து எதுவுமில்லை.

அப்போதுதான்பாலாவை உற்றுப் பார்த்தேன்.அவரின் முழுக் கவனமும் என்னில் மட்டுமே நிலைத்திருந்தது.கவனச் சிதறல் எதுவுமின்றி என் வார்த்தைகளையே உள்வாங்கிக் கொண்டிருந்தார்.நான் உடனேயே ஒரு முடிவுக்கு வந்தேன்.இக்கலைஞனின் மொழி மௌனம்.மௌனத்தால் இவன் மனித வாழ்வின் குரூரத்தை அளக்கிறான்.யாரும் பொருட்படுத்தாமல், சமூகத்தின் விளிம்பில் கிடக்கும் மனிதர்களின் மாட்சிமையை, மேன்மையை, ரௌத்திரத்தை மொத்தமாகப் பருக இம்மௌனம் மட்டுமே இவனுக்கு பலம்.இவனிடமிருந்து வார்த்தைகளை எதிர்பார்ப்பது என்பது நம் அறிவீனம்.பெருவனத்தில் உறைந்திருக்கும் அமைதியை, நம் பாத சப்தங்கள்கூடக் கலைத்துவிடும்.

நான் பேசுவதைச் சட்டென நிறுத்தி, இன்னொன்றுக்குத் தாவினேன்.

உங்களுக்கு ஜெயகாந்தனை ரொம்பப் பிடிக்குமா?”

சிங்கமில்ல அது!”

அவரைத் தனியா சந்திச்சிருக்கீங்களா?”

எதுக்கு?”

என் பொதுப்புத்திக்குஎதுக்கு?’ உறைத்தது. இருந்தாலும் மறைத்துக் கொண்டு,

இல்ல சார், அவருடைய நண்பர்கள் சந்திப்பின்சபைரொம்பப் பிரபலம்.ஒரு இரவு நீங்க அவரோடு உட்காரலாமே.”

தேவையேயில்லை சார்.அமெரிக்கன் காலேஜ் விழாவுலதான் அவர ஒரு சிங்கமாபாத்தேன்.அந்த உருவம் அப்படியே எனக்குள்ள கிடக்கட்டும். எதுக்கு அவரை நேரா பாத்து அது சிதையணும்?”

நம் வழக்கங்கள்மீதுபாலாஒரு ஆசிட் பாட்டிலை எடுத்து வீசினார்.அதுவரையிலான என் மதிப்பீடுகள் கணத்தில் பொசுங்கியது.‘நான் கடவுள்பார்த்தேன்.படம் எனக்குப் பிடித்தும், பிடிக்காமலுமிருந்தது.‘ஆர்யாஅதன்பிறகு எப்படத்திலும் நடிக்கக் கூடாதென நினைத்தேன்.உச்சம் தொட்ட எதுவும், அதன் கீழிறங்குவதில் எப்போதும் எனக்குச் சம்மதமில்லை. படம் பார்த்த அன்றிரவே பாலாவைத் தொலைபேசியில் அழைத்தேன். படம் பற்றிய என் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டேன்.எல்லாவற்றிற்கும் ஒரும்ம்மட்டுமே.

ஷைலஜா பக்கத்துல இருக்காங்களா?”

நான் என் கைபேசியை அவளிடம் கொடுத்தேன்.

இப்பதான் சார் படம் பாத்துட்டு வந்தோம்.இன்னும் வீட்டுக்குள்ளகூட நுழையல...” அதற்கடுத்த இருபது நிமிடமும் அவளிடமிருந்தும்மட்டுமே வந்து கொண்டிருந்தது.என்னையே நம்ப முடியவில்லை எனக்கு.கைபேசி மாறிவிட்டதா என்ன?அவர் எதிர்முனையில் பேசப் பேச, இவள்ம்சொல்லிக்கொண்டிருந்தாள்.நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.இடையிடையே துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.உரையாடல் முடிந்து இருவரும் கொஞ்சநேரம் பேச்சற்று இருந்தோம்.

என்ன ஷைலஜா, வழக்கத்துக்கு மாறா இவ்ளோ நேரம் உங்கிட்ட மட்டும் பேசினாரு?”

இல்ல பவா, ‘நான் கடவுள்பற்றி ஆரம்பிச்சேன்.உடனே அதை மறிச்சி, அத விடும்மா, இன்னிக்கு ஒரு படம் எடுக்கலாம், எடுக்காத போகலாம். ஆனா, எங்கப்பாவை நீங்க நல்லா பாத்துக்கிறீங்களே! அது போதும் எனக்கு

இவளுக்கு எதுவும் புரியாமல் விழிக்க,

அவரு அப்படி ஒண்ணும் யார் வீட்டுக்கும் போற ஆள் இல்லம்மா, மானஸ்தன்.மனசுக்கு நூறு சதவீதம் புடிச்சாதான் ஒரு வீட்டு வாசல்ல காலெடுத்து வைப்பாரு.அவருக்கு மனசுக்கு உகந்த புள்ளைங்களா நீங்களும் பவாவும் இருக்கீங்க. அது யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம்.”

அவளுக்குப் புரிந்துவிட்டது, தன் குருவை அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்த மனதை.கண்களில் நீர் கோர்த்தது அப்போதுதான்.

உண்மையில் யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம்தான், ‘பாலு மகேந்திராஎன்ற அந்த இந்தியத் திரைப்பட மேதை, எங்கள் இருவரையும் தன் பிள்ளைகளாக சுவீகரித்தது.அதற்கான நன்றி சமர்ப்பணங்கள் மட்டும் அவர் மௌனத்தை மீறி வார்த்தைகளாக மாறி வந்தன.

என் அவதானிப்பு சரிதானாவென்று தெரியவில்லை. ஆனா நிஜம், பாலாவின் அம்மா, அப்பா, மனைவி, ஸ்நேகிதி, நண்பன், குரு, கடவுள் எல்லாரையும்விட உயர்ந்த இடத்தில் பாலா எப்போதும் வைத்திருக்கும் ஒருவர் உண்டு. பாலா உயரும் ஒவ்வொரு விநாடியையும் தூரத்திலிருந்து சுவாசித்துக் கொண்டிருக்கும் அந்த ஜீவனின் பெயர் அகிலாம்மா*

அகரம்நிகழ்வு ஒன்றின் விஜய் டி.வி.படப்பிடிப்பிற்காக ஏவி.எம்.ஸ்டூடியோவிலிருந்தேன். ஒரு தேநீர் இடைவேளையில் நானும் ஷைலஜாவும் வெளியே வந்தபோது, எதிர்பாராமல் எங்களிருவரையும் பார்த்து, பதறி எழுந்து கைகுலுக்கி, ‘சூர்யாவை அழைத்துசூர்யா, ஒருமுறை இவங்க வீட்டுக்கு போய்வாஎனச் சொல்ல, அவர் எதுவும் புரியாமல் என்னோடு கைகுலுக்க, பாலா என்ற கலைஞன் தன் நட்பின் பொருட்டு எங்கள் இருவரின்மீதும் வைத்திருக்கும் மரியாதையையும் தாண்டி பிரியம் வழிந்தது.

நான் கடவுள்பார்த்த கணம் இருந்த மனநிலையேஅவன் இவன்பார்த்தபோதும் இருந்தது. இதுவரை தமிழில் யாரும் பயணிக்காத பகுதியென்ற பெருமிதமும், இதுமட்டுமே ஒரு சிறந்த படத்திற்குப் போதுமாவென்ற போதாமையையும் என்னை ஒரு முடிவுக்கு வரவிடாமல் அலைக்கழித்தன. விளிம்புநிலை மனிதர்களின் பாசமும், கொண்டாட்டமும், ரௌத்ரமும் எப்போதும்போல பாலாவுக்குச் சுலபமாகப் பிடிபட்ட இப்படத்தில், ஏதோவொன்று தவறியிருந்தது.அது எதுவெனப் புள்ளிக் குத்த முடியாமல் தவித்தபோதுதான் நாசர் வந்திருந்தார்.

பவா, ‘அவன் இவன்பாத்தீங்களா?படம் பிடிச்சிருந்திச்சா?”

நான் மௌனமாக அவரையே பார்த்தேன்.சிரித்துக்கொண்டே மேடைக்குப் போய்விட்டார்.அந்நிகழ்ச்சி முடிந்து நானும் நாசரும் காரில் பயணிக்கும்போது, காலையில் விட்ட இடத்தை கவனமாகத் தொட்டு, “அவன் இவன் பாத்தீங்களான்னு கேட்டேன்என ஆரம்பித்தார்.அது ஒரு விவாதத்திற்கான அழைப்பு.தர்க்கத்திற்கான சவால்.

பார்த்தேன் சார், அந்தப் படத்தை என்னால நல்ல படமான்னு வகைப்படுத்தத் தெரியல.”

முன்சீட்டிலிருந்து, என் பக்கம் திரும்பி,

அது, உலக மகா காவியம் பவா

ஒரு நிமிடம் அதிர்ந்தேன்.

என்ன சார், சொல்றீங்க?”

இதுவரை வந்த தமிழ்ப்படங்களில் ஒரு பார்வையாளனுக்கான சவால்கள் இதில் மட்டும்தான் உள்ளது.கலையின் உன்னதம் எனப் போற்றப்படும்அன் டோல்டு ஏரியாஇப்படத்தில் மட்டுமே கொட்டிக் கிடக்கிறது.ஒரு மகத்தான நாவலில், இப்படியான சொல்லப்படாத பகுதியிலிருந்துதான் ஒரு நுட்பமான வாசகன் தனக்கான கதையை தொடங்குவான்.அதேபோல்தான் இப்படமும்என ஆரம்பித்து, அப்படத்தின் நுட்பங்கள், அசாத்தியங்கள் என குறைந்தது அரைமணி நேரம் பேசிக்கொண்டே போனார்.

இப்புரிதல்களோடு தயவுசெய்து இன்னொருமுறை அப்படத்தைப் பாருங்க பவா.பாலா, நம் காலத்திய அசலான கலைஞன்என அவ்வுரையாடலை முடித்தார்.

அன்றிரவு முழுக்க, அவர் சொன்ன நுட்பங்கள் என்னில் வந்து கொண்டேயிருந்தன.உதாரணத்திற்கு, அய்னஸின் சொத்துக்களை மட்டுமல்ல, அவரின் மனைவியையும் அபகரித்துக் கொள்கிறான் அவன்.அது, படத்தில் நேரடியாகச் சொல்லப்படவில்லை.ஓரிரண்டு வசனத்தில் அல்லது காட்சிகளில், ஒரு கவனமான பார்வையாளனின் மனம் குதூகலிக்கும் இடம் அது. உதாரணத்திற்கு, ஆர்யா அந்த அபகரித்துக் கொண்டவனின் மகளைக் காதலிப்பதாக விஷாலிடம் சொல்லும்போது,

அது எப்படிடா முடியும்?” என வானத்திற்கும் பூமிக்குமாக விஷால் குதிப்பான்.அதில் சொல்லப்படாத பகுதி, “அது எப்படி சாத்தியம்? அவ உனக்கு தங்கச்சி மொறஅதேபோல ஒவ்வொருமுறை அபகரித்தவனை திரையில் காண்பிக்கும்போதும் ஆர்யா, விஷால் அம்மாக்களால் மிகுந்த அருவருப்பான ஒரு ஜந்துவைப்போல அவனை உடல்மொழியால் எதிர்கொள்வதை, அய்னஸ் மாதிரியான ஒரு மேன்மையான மனிதனின் சொத்துக்களையும், மனைவியையும் அபகரித்தவன் என்பதை, ஊடகத்தில் சினிமா மொழியில் இப்படித்தான் சொல்ல முடியும். பக்கம் பக்கமான வசன நிரப்புதல்கள் ஒரு மெலோ ட்ராமாவாக முடியுமே தவிர, ஒரு நல்ல சினிமாவாக வாய்ப்பே இல்லை.

என்னில் பொங்கிப் பொங்கி வந்த சந்தேகங்களை நாசர் சொன்ன செய்திகள் தீர்த்து வைத்துக் கொண்டிருந்த ஒரு மூன்றாம் ஜாமத்தில், நான் பாலாவை அழைத்தேன்.

சார், பவா. ஸாரி இந்த நேரத்துல...”

அதெல்லாம் ஒண்ணுமில்ல சொல்லுங்க.”

நேத்து நாசர் வந்திருந்தார்.”

ம்..”

அவர், அப்படத்தைஉலக மகா காவியம்என புகழ்றார்.”

நீங்க சொல்லாமவிட்ட ஒவ்வொரு காட்சியையும் அவர் விவரிக்கிறார்.”

ம்

உதாரணமா...”

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கென நான் நாசரின் வார்த்தைகளை பாலாவுக்கு வரிசைப் படுத்துகிறேன்.

ரொம்ப நன்றி பவா சார்.”

தொலைபேசி அணைந்து ஏற்பட்ட அமைதி, என் அறையை நிறைத்தது.

இவரை என்ன செய்வது?

எல்லா உணர்வுகளையும் மௌனத்தால், ஒரும்மால் மட்டுமே உள்வாங்கும் ஒரு கலைஞனின் பழக்கமென்றோ, எழுதி முடித்த அல்லது எடுத்து முடித்த ஒரு படைப்பைத் திரும்பிப் பார்க்கவும் சலிப்புற்று அடுத்ததை நோக்கிப் பயணிக்கும் ஒரு தகிக்கும் மனநிலையெனவோ, நான் இம்மௌனத்தைப் புரிந்து கொண்டேன்.

தீண்டல் வேண்டி காலம் காலமாய் காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் திமிர்ந்த உடலைப்போல, இன்னமும் கம்பம் பள்ளத்தாக்கின் உறைந்த மௌனம், தன்னையறிந்த ஒருவனின் ஸ்பரிசத்திற்குக் காத்திருக்கிறது. அது பாலா என்ற அசல் கலைஞனின் கைப்பட்டே அடங்கும்.

பாலு மகேந்திரா சாரின் சினிமாப் பட்டறையில், அவரின் முன் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.பாலாவின் தேசிய விருது சான்றிதழ் அங்கே மாட்டப்பட்டிருந்தது.

என்ன பவா, பாக்கறீங்க அவ்ளோ நேரம்?”

ஒண்ணுமில்ல சார், பாலாவோட நேஷ்னல் அவார்ட். இது ஏன் சார் உங்க ஆபீஸ்ல...?”

அவர் புன்னகைத்தார். முகத்தில் பெருமிதம் பொங்கித் ததும்ப,

உங்களுக்குத் தெரியாதா?அன்னிக்கு டைரக்டர்ஸ் ஃபங்ஷன்ல மணிரத்னமும் ரஜினியும்தான் இதை பாலாவுக்குத் தரணும்.ஆனா, அதை இடைமறிச்சி, ‘நான், எங்க டைரக்டர் கையாலதான் வாங்குவேன்னு அடம் புடிச்சி, எங்கிட்ட இருந்து வாங்குனான்.அதோடேயே நேரா இங்க வந்து, ‘இது, இங்க இருக்க வேண்டியதுன்னு அவனே ஆணி அடிச்சி மாட்டிட்டு போய்ட்டான்.அவன் எப்பவுமே இப்படித்தான்.என் அனுமதியையெல்லாம் எதிர்பாக்கறதுல்ல பவா.”

பாலா விட்டுவிட்டுப் போயிருந்த அந்த முரட்டு அன்பு, பாலுமகேந்திரா சாரின் அவ்வலுவலகம் முழுக்க காற்றின் பாடல் மாதிரி பரவியிருக்கிறது.

Monday, December 19, 2011

தவறவிடாமையின் பெருமிதம்

வைட் ஆங்கிள் ரவிஷங்கர்

சுபமங்களாகாலம் என்றொன்றிருந்தது. ஒவ்வொரு மாதமும் அது வாசிப்பு மனங்களில் ஜால வித்தைகள் செய்தது. விஷய கணத்தில், வடிவமைப்பில், புகைப்படத்திலென அது, அதற்கு முந்தைய எல்லா சாதனைகளையும் சுலபமாக துடைத்தெறிந்தது.

அதில், கலைஞர் கருணாநிதியின் ஒரு விரிவான நேர்காணல் வெளிவந்திருந்தது. அதற்கு பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், அந்நேர்காணலை இரண்டாம் இடத்திற்கு தள்ளியிருந்தது. அவரை கட்டம்போட்ட லுங்கி, முண்டா பனியனுடனும், சப்பராங்கால் போட்டு தரையில் உட்கார்ந்து எழுதும்படியான புகைப்படங்களோடும், அதுவரையிலான அவரின் ஒயிட் அண்ட் ஒயிட் பிம்பத்தை சிதைத்து, ‘நம்ம வீட்டு மனுஷன்தான்என்பது மாதிரியான ஒரு மன நெருக்கத்தைத் தந்திருந்தது.

நான் அப்புகைப்படங்களை எடுத்த கலைஞனைத் தேட ஆரம்பித்து, சுலபத்திலேயே கண்டடைந்தேன். வைட் ஆங்கிள்ரவிஷங்கர்என்ற அந்த வளர்ந்த குழந்தை, இன்றளவும் என் ஆத்மார்த்த நண்பர்களில் ஒருவன்.

‘‘எப்படி ரவி இதை சாத்தியமாக்கினீங்க?’’

‘‘நான் புகைப்படம் எடுப்பதற்காக அவர் வீட்டிற்குப் போனப்பவே அவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டு தயாராயிருந்தார். கொஞ்சம் பயமிருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காமிராவை கையிலெடுக்காமல் மௌனம் காத்தேன்.

என்னய்யா எடுக்கலையா?’ என அவரின் கனத்த குரலில் கேட்டபோது, இது எனக்கு வேணாங்க. இதுவரையிலும் யாரும் உங்களை எடுக்காதது மாதிரியான படங்கள்தான் வேணும்’’

‘‘யாரும் எடுக்காததுன்னா?’’

‘‘ரொம்ப இயல்பா, வீட்ல நீங்க எப்படி இருப்பீங்களோ அப்படி, லுங்கி கட்டி, பனியன் போட்டு, தரையில உட்கார்ந்து’’

நான் அடுக்கிக்கொண்டே போனேன்.

அவர் சிரித்துவிட்டார். அச்சிரிப்பின் விநாடிகளை நான் எனதாக்கிக் கொண்டு அவருள் பிரவேசித்தேன். அதன்பின் எல்லாம் சாத்தியமானது. புகைப்படங்கள் கம்ப்யூட்டரில் பதுங்காத காலமது. பிலிம் ரோலில் படமெடுத்து, கெமிக்கலில் கரைத்து, நெகட்டிவ் கழுவி, வெள்ளைத் தாளில் உருவம் பதிவாகும் அந்த கணநேரத்து கலைஞனின் பெருமிதத்தை, அந்த இருட்டறை மட்டுமே தரிசித்த தருணங்களை நாம் இழந்துவிட்டோம். இப்போது அடுக்கடுக்காய் கணினியின் மௌஸ் நகர்தலுக்கு புகைப்பட காட்சியை உட்படுத்தி... சுவாரஸ்யமற்ற நிகழ்வுகளுடன் சுவாரஸ்யமற்ற வாழ்வு.

ரவிஷங்கரின் கேமிரா, இசைக் கலைஞர்களாலும் எழுத்தாளர்களாலும் நிரம்பியிருந்தது. தமிழ் எழுத்தாளர்கள் யாரும் அதற்கு முன் தங்களை இப்படி ஒரு அழகோடு பார்த்ததில்லை. கல்மண்டபங்களின் பின்னணியில் வண்ணதாசனும், தாமிரபரணிக் கரை ஈரத்தில் வண்ணநிலவனும் என்று பார்ப்பவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தின நாட்கள் அது. ஒரு முழுநேர இசைக் கச்சேரியின்போது, பாடுபவருக்கும் வாசிப்பவருக்கும் ஏற்படும் அத்தனை முகபாவங்களையும் பரவசத்தையும், நானறிந்து ரவிஷங்கரைத் தவிர்த்து வேறு எவரும் இந்தளவு நுட்பமாய் பதிவு செய்ததில்லை.

காத்திருத்தல்தான் இதன் ரகசியம். தவறவிடாமை இதன் வெற்றி. வண்ணதாசன், ‘போய்க்கொண்டிருப்பவள்என்றொரு கதை எழுதி இருப்பார். அதில்விருத்தாஎன்றொரு புகைப்பட கலைஞன். தாலி கட்டும் அந்த அற்புத கணத்தை, எதன் பொருட்டோ தவறவிட்டுவிடுவான். தலையில் கைவைத்து துளிர்க்கும் கண்ணீரை இரகசியமாய் துடைத்து, இழத்தலின் துயரம் தாங்காமல் அம்மண்டபத்தில் யாரும் பொருட்படுத்தாத ஒரு இருட்டு மூலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பான். அவன் தோளில் விழும் கை ஸ்பரிசம் உணர்ந்து திரும்புவான்.

‘‘என்னாச்சு?’’

‘‘தாலி கட்றப்போ, எல்லாரும் சூழ்ந்துட்டாங்க சார், படம் எடுக்க முடியல.’’

‘‘சரி விடு. அதுக்காக இவ்வளவு கலங்குனா?’’

‘‘என்ன சார் சொல்றீங்க? அந்த கணத்தை, இதயத்தின் அடியாழத்திலிருந்தும் பொங்கும் அப்பரவச கணத்தை வேறெப்போ சார் எடுக்க முடியும்?’’

இக்கதை வாசிப்பின் போதெல்லாம்ரவிதான், விருத்தாஎன ரவியை உருவகப்படுத்திக் கொள்வேன்.

தன் மூன்று மணிநேர கச்சேரி வாசிப்பில், தோ ஒரு சங்கீத சுழிப்பின் உச்சத்தில், கடம் வாசிக்கும் கலைஞர் விநாயக்ராம், தன் கடத்தை மேலே தூக்கிப்போட்டுப் பிடிக்கும் அச்சில நொடிகளை ரவி தன் கேமராவால் ஆறேழு படங்கள் எடுத்து அசத்தியிருப்பான். மண்பானை கீழே விழுந்து புறப்படுவதற்குள் அவன் அள்ளியெடுத்த அற்புத கணங்கள் அவை. ஒரு மேம்பட்ட கலையை தன் உயிராக நேசிக்கும் ஒருவனுக்கு மட்டுமேயான சாத்தியங்கள் இவை.


தன் எழுத்தாளர் புகைப்பட வரிசையில் வி வறவிட்ட ஆளுமைஅம்பை’. அவரை படமெடுக்க, மும்பைவரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கசப்பு, அந்த ஆற்றாமை, ஒரு தீர்க்க முடியாத இரகசிய வியாதிபோல் அவரிடம் தங்கியிருந்தது. ‘அம்பைதிருவண்ணாமலைக்கு வந்தபோது அவரிடம் என் சிநேகிதி திலகவதியும், தன் நெடுநாளைய கனவின் மெய்ப்படுதல் நிமித்தம் ரவியும் உடன் வந்திருந்தார்கள். எல்லோர் பயணங்களுமே உள் இரகசியங்களால் நிறைந்தது. மிக அருகில் இருப்பவர்களாலும் அறிந்துகொள்ள முடியாத பிரபஞ்ச ரகசியங்கள் அடங்கியது மனித மனம். அது மௌனமாய் இருப்பது மாதிரிபொய் தோற்றமளிக்கும், கொந்தளிக்கும் எரிமலைகளை உள்ளடக்கியது. என்ன சொல்லியும், ‘அம்பைஅப்புகைப்பட பதிவிற்கு சம்மதிக்கவில்லை.

‘‘மேடம், நான் உன்னதமான எழுத்தாளர்களையும், இசைக்கலைஞர்களையும் மட்டுமே எடுத்திருக்கிறேன்.’’

‘‘என்னை எடுக்காத, நான் உன்னதமானவள் இல்லை.’’

மூன்று மணிநேர பயணம் முழுக்க அடைந்த தோல்வியும், சக மனப் புரிதலற்றச் சூழலும் ரவியை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தது.

வீட்டில் சாப்பிடும்போது ரவி என் கைப்பிடித்தழுத்தி,

‘‘பவா, நீங்க ஒருமுறை சொல்லுங்க’’

நானும், சிநேகிதி திலகவதியும் சொன்னது, ஒரு முன்முடிவான கருத்தால் உறைந்திருந்த மனதை, கரைக்க முடியவில்லை.

‘‘.கே. மேடம், நான் எடுக்கல. ‘அம்பைன்னு ஒரு ரைட்டர் இல்லாமலேயே என் ஆல்பம் நிறைவடையும்.’’

அன்று மாலை நடந்த முற்றத்திற்கு, ரவி தன் கேமராவை அறையிலேயே வைத்துவிட்டு வெறும் ஆளாக அம்மைதானத்துக்கு வந்திருந்தான். ஒரு மந்தகாச வெற்றி புன்னகையோடு அம்பை அவனைப் பார்த்து,

‘‘மீட்டிங்ல வச்சி எதுவும் இரகசியமா எடுத்துறாதப்பா’’ என்றார்.

ரவி மௌனமாக, ஆனால் உறுதியாக சொன்னது ன்னும் என் நினைவில் ததும்புகிறது.

‘‘மேடம், இது பப்ளிக் மேடை. இதுல உங்களை படமெடுக்க நான் உங்க அனுமதியை வாங்கணும்னுகூட அவசியமில்லை. உங்களை கேக்காமலேயே நூற்றுக்கணக்கான படம் எடுத்திருக்க முடியும். ஆனா எனக்கு வேணாம். எதன்பொருட்டோ நீங்க நிராகரிக்கிற ஒரு விஷயத்தை நான் ஏன் பலவந்தப்படுத்தணும்? ஒண்ணே ஒண்ணு சொல்றேன் மேடம். நீங்க எழுத்தாளர்னா, நான் கலைஞன். இதுல நீங்க மே இருக்கீங். நான் உங்களை படம் எடுத்து பொழப்பு நடத்துற தேர்ட் ரேட்டட் வியாபாரியில்லை. அதனாலதான் என் கேமராவை ரூம்ல வச்சிட்டு வந்தேன். இனி நீங்க சுதந்திரமா பேசுங்க.’’

கோபமும், ஆத்திரமும், கலைஞனுக்கான கம்பீரமும் சேர்ந்து ஒலித்த அக்குரல், டேனிஷ் மிஷன் மேநிலைப்பள்ளி மைதானத்தில் அதுவரை ஒலிக்காதது.

ஒரு வனப் பயணத்தில் ரவி எங்களோடிருந்தார். மனித மனம் இதுவரை இழந்துபோன ஸ்ருதிகளை மீட்டும் கணமாக அப்பயணம் மௌனத்திலும் இசையிலும் நிரம்பியிருந்தது. எங்கள் வழியை மறித்து, ஒரு பேயென வியாபித்திருந்த ஒரு ஆலமரம் எங்களை நிறுத்தியது. அதன் விழுதுகளும், அதன் பருண்மையும், அதன் நிழலும், ‘என்னை மீறி எங்கடா போறீங்க?’ என மிரட்டியது. அதற்கு அடிபணிந்து அதன் அடியில் வட்டமாக ஒடுங்கினோம். ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்வில் இந்த இடத்தை அடையக் கொடுத்த விலை, அவமானம், உடலிலும், மனதிலும் மிகுந்திருந்த தழும்புகள், இவைகளைத் தடவிப் பார்த்துக் கொண்டோம்.

ரவிதான் முதலில் தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டான்.

‘‘சுபா சுந்தரத்தின் அசிஸ்டெண்ட் நான். எங்க ஸ்டூடியோவுக்கு எப்போதும் இலங்கையிலிருந்து பலர் வந்து சாரோட பேசிக்கிட்டிருப்பாங்க.

மனதைக் கரைக்கும் அவ்வாழ்வியல் சிதைவு அனுபவங்களை ஈவிரக்கமின்றி துடைத்து, அடுத்த நிமிஷத்திற்கு தாவுவேன். சாதனை என்பது மட்டுமே மனம் முழுக்க நிரம்பியிருந்த நாட்கள் அவை. ராஜீவ் கொலை நடந்த அன்று காலை, என்னோடு சக புகைப்பட உதவியாளனாய் இருந்த ஹரிபாபு வீட்டிற்கு வந்து, ‘உன் கேமரா கிட் வேணும் ரவி. ராஜீவ் நிகழ்ச்சியை கவர் பண்ணனும்.’ என்றான்.

அதை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டு என் அன்றாடங்களில் மூழ்கினேன். அடுத்தநாள் காலை தமிழ்நாட்டுக்கே ரத்தக்களரியாக விடிந்தது. என் வீட்டில் வந்து விழுந்த தினசரியிலும் அந்த இரத்த கவிச்சியை உணர முடிந்தது. நான் ரொம்ப இயல்பாக குளித்து முடித்து, மாலை முரசு அலுவலகத்திற்குப் போய், அதன் எடிட்டரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு, கீழே இறங்கிடீகுடிக்க வந்தேன். அப்போது எடிட்டருக்கு வந்த தொலைபேசி அழைப்பு, ராஜீவ் கொலையில் இறந்தவர்களின் பெயரை பட்டியலிட்டது. அதில் ஆறாவது பெயர்வைட் ஆங்கிள் ரவிஷங்கர்’.

‘‘வெயிட் வெயிட். ரவி சாகலை, அவன் அங்க போகவேயில்லை. இப்பதான் எங்கூட பேசிட்டு கீழே, ‘டீகுடிக்க போயிருக்கான்.

‘‘இது அஃபீஷியல் பிரஸ் நியூஸ்.’’

‘‘இல்லப்பா. ஏதோ தப்பு நடந்திருக்கு.’’

ரவி, இப்போது நிகழ்காலத்திற்கு வந்திருந்தான்.

‘‘அந்த தொலைபேசி செய்தி என் வாழ்வை நாசப்படுத்தியது பவா. என் ஆன்மா, உடல் ஆகியவற்றின் சிதைவை ஐந்து வருடமாய் என்னையே பார்க்க வைத்தது. என்னிடமிருந்த எல்லா நுட்பங்களையும்மல்லிகைஇல்லம் ஈவிரக்கமின்றி உறிஞ்சியெடுத்தது. ‘ஒருவேளை ஹரிபாபுவுக்கு ராஜீவை கொல்லப்போகிற விஷயம் தெரிந்திருக்குமோ?’ என இப்போது யூகிக்கிறேன். அவன், ‘ரவி, நீயெல்லாம் என்ன பெருசா போட்டோ எடுக்குற? நான் எடுக்கப்போற ஒரே ஒரு போட்டோ உலகம் முழுக்க பேசப்படும் பாருஎன அடிக்கடி சொல்லக்கேட்ட வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்பதை, ராஜீவ் கொலைக்குப் பிறகே உணர முடிந்தது.

குண்டுவெடித்தபோது, ஹரிபாபு சுமார் 20 அடிக்கும் மேலே தூக்கியெறியப்பட்டிருக்கிறான். உயிரற்ற அவன் உடல்மேல், தூக்கியெறியப்பட்ட அந்தக் கேமராவும் வந்து விழுந்திருக்கிறது. ரொம்ப நேரமாய், ஒரு சந்தேகத்தோடே அவனைக் வனித்துக் கொண்டிருந்த ஒரு இன்ஸ்பெக்டர், அக்கேமராவை எடுத்துக் கொண்டுபோய் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஸ்டூடியோவைத் திறக்கச் சொல்லி, அதைக் கழுவி பிரிண்ட் போடச் சொல்கிறார்.

டார்க் அறையிலிருந்து கதவை வேகமாகத் திறந்த அந்த ஸ்டூடியோ தொழிலாளி,

‘‘சார் இது கலரா, ஒயிட் அண்ட் பிளாக்கா?’’

‘‘தெரியலப்பா, இப்ப எவன் ஒயிட் அண்ட் பிளாக்ல எடுக்கறான், கலர்தான்.’’

கேமராவைத் திறக்காமல் அப்படியே அந்த இன்ஸ்பெக்டரிடம் தந்து,

‘‘கலர்னா மெட்ராஸ்தான்’’

அதிலிருந்த புகைப்படங்களே, ராஜீவ் கொலையின் பல மர்மங்களை உலகிற்கு அவிழ்த்தது. கொலைக் களத்தில் சிதறியிருந்த பொருட்களில் ஹரிபாபு இரவல் வாங்கிப் போயிருந்த வைட் ஆங்கிள் ரவிஷங்கரின் கேமரா பேக்கும் ஒன்று. இப்படித்தான் இறந்து போனவர்களின் பட்டியலில் ரவி இடம்பெற்று, பிறகு பிழைத்து வந்தது.

இதோ இந்த டிசம்பர் சீசன் துவங்கிவிட்டது. ஏதாவதொரு இருட்டு மூலையில், தன் செல்ல கேமராவோடு, இதுவரை தவறவிட்ட ஏதோ ஒரு அற்புத கணத்தின் அசாத்தியத்தை அப்படியே தன் கேமராவில் அள்ளிக்குடிக்க காத்திருக்கும் தாகமடங்காத அக்கலைஞனை நீங்கள் காணக்கூடும். மௌனமாக ஒரு கைக்குலுக்கலோடு விடைபெற்றுக் கொள்ளுங்கள். நாத உச்சத்தை, சுதா ரகுநாதனோடு சேர்ந்து ரவியும் தொட முயலும் இத்தருணம், எதனாலும் கலைந்துவிடக்கூடாது.