Wednesday, January 30, 2013

பாலு மகேந்திரா: உடல்மொழியோடு வாழும் கலைஞன்.


வருடம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. அப்போது முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். தன்னை விமர்சித்து திரைப்படங்களில் காட்சிகள் வருகிறது என்பதால் திரைப்பட தணிக்கை மசோதாவை கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெரியார் திடலில் ஒட்டுமொத்த கலைஞர்களும் படைப்பாளிகளும் சங்கமித்திருந்த தினம் அது. வெளிர்நீலநிறத்தில் ஜீன்ஸ் பேண்டும், வெள்ளை சட்டையும், தன் ட்ரேட் மார்க் தொப்பியுடனும் ஒரு பழைய அம்பாசிடர் காரில் வந்து இறங்கினார் பாலுமகேந்திரா. எல்லோரையும்போல அக்கூட்டத்தில் ஒதுங்கி நின்று என் ஆதர்சன கலைஞனை தரிசித்தேன். தேர்ந்தெடுத்துக் கொண்ட மிகுந்த நிதானத்துடன் மேடையேறினார். தன் கவித்துவமான உரையை இப்படித் துவங்கினார்.

கேமராவை என் உயிராக மதிப்பவன் நான். அதன் மீது ஒரு ஆக்டோபஸ் அடைத்துக் கொண்டு நிற்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. 




இச்சொற்கள் மட்டுமே எனக்கு போதுமானதாக இருந்தது. அங்கிருந்து வெளியேறி சாலையோரம் நெடுநேரம் சுற்றிக் கொண்டிருந்தேன். ஊர் திரும்பிய பிறகும் நினைவுகள் அந்த அம்பாசிடர் காரையும், எழுந்தடங்கிய கரவொலியையும், கேமராவை வழி மறிந்து நிற்கும் அந்த ஆக்டோபஸ் படமும் என்னை சுழன்றடித்துக் கொண்டிருந்தன.

மனம், பாலுமகேந்திரா எனும் அப்படைப்பாளியை ஒரு முறை தனிமையில் சந்திக்கக் கோரியது. உடனே கனவு மெய்ப்பட்டது. நானும், நண்பர் பிரளயனும் அருணாசலம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு தனியறையில் உட்கார்ந்து ஒரு மணி நேரம் உரையாடின வாய்ப்பு அது. கருத்தியல் ரீதியாக தவறாக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டிருந்தது.

"எப்படி பிரளயன் இப்படி நடக்குது? ஒரு பிரச்சினையை சரியா, டீல் பண்ண தெரியலைன்னா அமைதியா இருந்துடணும். தப்பா எடுக்கக்கூடாது. பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினர் மீது நடந்துவதற்கும் பெயர் தாக்குதல். கலவரம் அல்ல. அது கலவரம்ன்னு நாம சொன்னா நாம தப்பு பண்றோம். இதை சரியா அனலைஸ் பண்ணாம ஒரு படைப்பை அவசர அவசரமா உருவாக்கினா அது அறியாமை. அந்த நிகழ்வை பணமாக்குற அவசரம். இதை உங்கள மாதிரி ஆட்களே சரியா புரிஞ்சுக்காம பாராட்டுவிழா நடந்தறீங்க! என் நம்பிக்கைகள் சரிய ஆரம்பிக்குது".





சமூகத்தின் மீது பற்றுள்ள ஒரு கலைஞனின் ஆவேச உஷ்ணம் அந்த அறைமுழுக்க பரவியிருந்தது. அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் நான் வெளியேற முயன்றேன். அவர் என்னைந் தடுத்து

"எங்க போறீங்க? உட்காருங்க என்றார்". "அது ஏதோ ஒரு கிளையில நேர்ந்த தப்பு சார்" பிரளயனின் குரலில் நடுக்கமிருந்தது.

"எப்படி பிரளயன் இப்படியெல்லாம் சொல்றீங்க. இதை நான் செய்யல. என் கைதான் செய்யததுன்னு. அது உங்க உறுப்பு. சரியில்லைனா வெட்டிபோட்டுடுவிங்களா?"

அறையெங்கும் உஷ்ணம் தகித்தது. எங்கள் மௌனத்தால் அதை குறைக்க முயன்று தோற்றோம். அச்சந்திப்புதான் பாலுமகேந்திரா எனும் கலைஞனை எனக்குள் முழுவதுமாய் கொண்டுவந்தது.

அமைதி ததும்பும் அவர் முகம் எப்போதும் எனக்கு உஷ்ணத்தையும், ரௌத்தரத்தையுமே உணர வைக்கும்.


அழியாத கோலங்களில் ஆரம்பித்து அது ஒரு கனா காலம் வரை ஒவ்வொரு படைப்பையும் ஒவ்வொன்றாய் கால இடைவெளிகளில் பார்க்க ஆரம்பித்தேன். உச்சத்தை தொட்டவைகள், தொடமுயன்றவைகள், படைப்பாக கைக்கூடாதவைகள், எதற்காகவோ சமரசமானவைகள் என்று எல்லா உணர்வுகளையும் திரைவழியே ஒரு இருட்டறையிலிருந்தே ஸ்வீகரிக்க முடிந்தது.

காலத்தின் ஏதோ ஒரு புள்ளி எங்கள் இருவரின் கரங்களை இறுக பிணைத்திருந்தது. வம்சி புக்ஸ்சின் முதல் புத்தகமான திலகவதி குறுநாவல்களை வெளியிட அவரையும், பெற்றுக் கொள்ள பி.சி.ஸ்ரீராமையும் அழைத்திருந்தோம். இருவருமே மொழியை கைகளின் வழியே கடத்த கற்றிருந்தார்கள். அன்று மதியம் எங்கள் வீட்டில் நடந்த விருந்து இருவரையும் உற்சாக மனநிலைக்கு கொண்டு போனது. மதிய உணவிற்கும், மாலை நிகழ்விற்குமான இடைவெளி நான்கு மணிநேரம்.
என் நண்பர் எஸ்.கே.பி.கருணா அவருடைய கல்லூரி கலையரங்கிற்கு 300 பேரை வரவழைத்தார். பி.சி.யும் அவரும் அப்போதுதான் முகிழ்ந்த ஒரு பூவை கையிலேந்தி ஓடும் சிறுமியைப் போல கையிலிருந்த தன் இரு படங்களோடு அக்கலையரங்கிற்கு விரைந்த அந்த இரு கலைஞர்களின் கால்களின் வேகத்தை என் வீட்டு மொட்டை மாடியில் நின்று அளவெடுக்க முயன்றேன்.

அந்நிகழ்வு எங்கள் இருவருக்குமிடையேயிருந்த எல்லாவற்றையும் துடைந்தெறிந்து தூய்மையாக்கியது.

அழியாத கோலத்தில் ஷோபா டீச்சரின் அழகை, மூன்றாம் பிறை ஸ்ரீதேவியின் குதூகலத்தை, ‘யாத்ராவில்  மம்முட்டி, ஷோபனாவின் காதலை, ‘வீடுதிரைப்படத்தில் அர்ச்சனாவின் சோகத்தை, அது ஒரு கனா காலத்தில் தனுஷின் தவிப்பை, என்று ஒவ்வொரு சந்திப்பிலும் அவரிடமிருந்து ஒவ்வொன்றை நான் அடைந்த தருணங்கள் இன்றளவும் என்னால் அடைகாக்கப் படுபவைகள்.


தொலைபேசியில் நிகழ்ந்த ஒரு சிறு உரையாடலின் முடிவில் அவர் எங்களுடன் திருவண்ணாமலையில் இருந்தார். மலைசுற்றும் பாதையின் விளிம்பில் உள்ள ஒரு விடுதியில், ஜன்னலை திறக்காமலேயே மலை தெரியும் 101ஆம் அறையை அவர் தேர்ந்தெடுத்தார்.

"ஓ.கே. பவா, நான் குறைந்தது பத்து நாட்கள் இங்கிருப்பேன். ஒவ்வொரு நாளும் காலை முதல் எனக்கு இத்தனிமையை தாங்கி கொள்ளும் வரை எழுதுவேன். முடியாதபோது காரெடுத்து வம்சிக்கு வருவேன். எப்போவெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்போதெல்லாம் ஷைலுவிடம் சொல்லி சாப்பாடு வேண்டும் என்பேன். ஆனால் ஒவ்வொரு நாள் இரவிலும் நாம் இருவர் மட்டும் தனியே உட்கார்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் பேசியாக வேண்டும். இதுதான் என் திட்டம்".



எல்லா பருவத்திலும் ஆதர்ஷமாக நினைக்கும் தன் ஆளுமை உங்கள் எதிரே நின்று கைபிணைத்து இப்படி சொன்னால் நீங்கள் என்னவாய் ஆவீர்கள். நானும் அவ்விதமேயானேன்.

திட்டமிட்ட முதல்நாளே மாலை ஐந்துமணிக்கெல்லாம் வம்சி புக்ஸ் ஸ்டாலுக்கு வந்து கல்லாவிற்கு முன்னிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எப்போதும் உடனிருக்கும் தொப்பியை தவிர்ந்து, மப்ளரில் ஒரு மாதிரி தலைப்பாகைக் கட்டி கழுத்தில் ஒரு சுற்று சுற்றியிருந்தார். அலுவலகத்திலிருந்து வம்சிக்கு போன எனக்கே ஒரு நிமிடம் அடையாளம் தெரியவில்லை. நாலைந்து வாசகர்கள் புத்தகங்கள் வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். கடைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் திகைத்து மெல்ல இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.




"டேய் பாலுமகேந்திரா சார்டா. வம்சில உட்கார்ந்து கையெழுத்து போடறாரு, சீக்கிரம் வா, நல்ல கேமரா கெடைச்சா கூடவே எடுத்துகிட்டு வா" போன்றக் குரல்கள் கடைக்கு வெளியே சகஜமாக ஒளித்தன.

நான் அவரை ஏறெடுத்தேன். சலனமற்றிருந்தது அவர் முகம். பெரும் சந்தோஷத்திலிருந்தார். நீண்ட நேரம் கடையிலிருந்து விட்டு, “பவா ரூமுக்கு போலாமா?” என்றார்.

இரவு எட்டுமணிக்கு நானும் அவரும் அந்த 101ஆம் எண் அறையின் பால்கனியில் தனித்திருந்தோம். மலை எங்களிருவரின் முன் பிரமாண்டமான யானையைப்போல படுத்திருந்தது.


நீண்ட நேரம் மௌனமாயிருந்தோம். யார் எதிலிருந்து துவங்குவதென ஒரு ஆரம்ப சொல்லிற்கான அவஸ்தை அது.


அவர்தான் ஆரம்பித்தார்.

ஜெயமோகனோட அக்னிக்காற்று படிச்சிருக்கீங்களா பவா?”

படிச்சிட்டேன் சார்.

அதை யீறீவீனீ பண்ணலான்னு இருந்தேன்.

கதையின் சுருங்கிய வடிவத்தை என் முன்னே வைத்தார். பேச்சு எங்கெங்கோ சுழன்றடித்தது. சித்திக்கும் மகனுக்குமான பாலியல் உறவு அதன் மையம். ஒரு தமிழ்மணம் அதன் திரைவடிவை ஏற்காது என்பது என் வாதம். பேச்சறுந்து பாலாவுக்கு வந்து நின்றது.

அவனுக்கு என் மீது இருப்பது அன்புன்னு சொல்ல முடியல பவா, அது வெறி. தாங்கமுடியாத வெறி. அது எப்போ எப்படி வெளிப்படுன்று சொல்ல முடியாது. அநேகமாக பாலா அவன் அப்பாவுக்கு அப்புறம் என்னிடம்தான் நிறைய முரண்பட்டான். அது முற்ற முற்ற அதிலிருந்து கொட்டும் அன்பின் கனிகளை கையிலேந்திக் கொள்ளலாம் நாம் எல்லோருமே.

கவிதைவரிகளைத் தாண்டிய இவ்வுரையாடளால் நான் முற்றிலும் கரைந்திருந்தேன். விடைபெற்று அங்கிருந்து தன்னந்தனியே தூறும் மழைத்துளிகளை முகத்திலேற்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். வழிநெடுக இந்த இரு கலைஞர்களின் ஆகிருதிகள் என்னை வெதுவெதுப்பாக்கி கொண்டேயிருந்தன.

கேரளாவில் ஓர் இளம் பெண் நிருபர் பாலுமகே

ந்திரா சாரை மிக நீண்ட நேர்காணல் எடுத்திருந்தார். நானறிந்து அவர் மன ஆழத்திற்கு சென்று அவரை முற்றிலும் வெளிக்கொண்டு வந்த நேர்காணல் அதுதான். அவரை கோபப்படுத்த, அவரை துக்கத்துள்ளாக்க, அவரை நிலைகுலைய வைக்கவென்று அப்பெண் பலநாட்கள் பயிற்சியும், சில நாட்கள் ஒத்திகையும் மேற் கொண்டிருக்க வேண்டும்.
ஷோபாவின் தற்கொலையில் உங்களுக்கு பங்குகிருக்குன்னு சொல்றாங்களே?”

நீண்ட மொளனம். அப்படியே உட்கார்ந்திருந்திறார். இதுவரை யாரிடமுமே பகிர்ந்து கொள்ளாத்தை உங்கிட்ட பகிர்ந்துக்கிறேன்மா.

ஷோபா என்னை விட வயசுல ரொம்ப சின்னவ. கிட்டதட்ட என் மக வயசு.

அவளுக்கு என்கிட்ட ஒரு வெறித்தனமான காதல் இருந்தது. பல முறை நான் அதை கண்டித்திருக்கிறேன். அதில் நான் வெற்றியடைஞ்சிரலாம்னு நம்பினேன். அப்போதான் அப்படி ஒரு துர் சம்பவம் நடந்துவிட்டது. உயிரற்ற அவள் உடல்முன் நான் நின்றபோது அடைந்த நடுக்கம், இன்னமும் அப்படியே கிடக்கிறது...
ஒரு கலைஞனா என்னால என்ன பண்ண முடியும், எப்பவுமோ சொல்லாததை இப்போ சொல்றேன்.
ஷோபாதான் மூன்றாம்பிறை ஸ்ரீதேவி. இப்போ எல்லாமுமே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அந்நேர்காணலை ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்தாள். பல இடங்களில் அவளால் அங்கிருந்து நகர முடியாமல் அப்படியே கிடந்ததை கவனித்திருக்கிறேன். ஒரு மனிதனை மீடியா வழியே அறிவதற்கும் அருகிலிருந்து அறிவதற்குமான இடைவெளிகள் அதிகம்.
நானறிந்து அவரும் ஷைலஜாவும் தொலைபேசியில் பேசாத நாட்கள் மிகக்குறைவு. உறைந்திருக்கும் அவர் மௌனத்தின் மீது எப்போதும் ஒரு சிறு கல் எறிய பயப்படுவேன் நான். ஆனால் அவர்கள் இருவரும் உரையாடுவதை, ஷைலஜா பல இடங்களில் நெகிழ்வதை, அழுவதை, உரையாடலுக்கு பின் மௌனமாவதை, குழந்தைகளை அழைத்து தாத்தா சொன்னதாக சொல்வதை கேட்டுக் கொண்டேயிருக்கிற பாக்யவான் நான்.
புதிய படங்கள் பார்த்தவுடன் என்னையோ ஷைலஜாவையோ தொலைபேசியில் அழைத்து அப்படம் பற்றிய தன் உணர்வுகளை அப்படியே பகிர்ந்து கொள்வார். சென்னை புத்தகக் காட்சியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் வம்சிக்கு வந்து உட்கார்ந்து பல எழுத்தாளர்களோடு, வாசகர்களோடு உரையாடுவதை ஒரு பழக்கமாகவே இன்றளவும் வைத்திருக்கிறார். அப்படி அவர் வரும் ஒவ்வொரு நாளிலும் ஒரு புதிய செய்தி இருக்கும்.
ஷைலு, ‘ஆடுகளம்பிரிவியூ பாத்துட்டு அப்படியே வரேன். அற்புதமான படம். சரியான ஜூரிஸ் அமைந்தால் இந்த படத்துக்கு குறைந்தது ஆறு நேஷ்னல் அவார்ட் நிச்சயம் என்றார்.



அது அவ்விதமேயானது.
ஒரு திரைப்படத்தின் அனைத்து நுட்பங்களும் புரிகிற மனதால்தான் இப்படி ஒரு stணீtமீனீமீஸீt அளிக்கமுடியும்.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 பார்த்துவிட்டு அரைமணி நேரம் அதைப்பற்றி பேசினார். "இது தமிழ் படத்தின் அடுத்த பரிணாமம். புதிய இளைஞர்களின் இத்தகைய முயற்சிகள் என் நம்பிக்கைகளை அதிகரிக்கின்றன" என்ற வார்த்தைகள் உலரும் முன் அதை நண்பர் பாலாஜிக்கு கொண்டு செல்ல வேண்டி அவரை அழைத்தேன். சத்யம் தியேட்டரில் படம் பார்த்துட்டு வெளியே வந்த அவரை எதிர்கொண்டு போய் கைகளை பற்றிக்கொண்டு "பாலாஜி, என்னைவிட வயசுல சின்னவனாயிட்ட இல்லாட்டி கால்ல விழுந்திருப்பேன்பாஎன்று சொல்லியிருக்கிறார் பாலுமகேந்திரா சார்.. "பவா இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டுமெனக்கு என்று நெகிழ்ந்த பாலாஜி சக்திவேலின் பெருமிதம் எனக்குள் அப்படியே கிடக்கிறது. 
"‘நீர்ப்பறவைபார்த்துவிட்டு அதே சத்யம் தியேட்டரிலிருந்து வெளியே வந்தவரின் எதிரில் சகல எதிர்பார்ப்புகளுடனும் போய் நின்னேன் பவா. ஒரு வார்த்தை பேசல. தன் ரெண்டு கையாலேயும் என் கன்னத்தை பிடிச்சி அழுத்தி ஒரு முத்தம். வெள்ளை முடிகள் முகத்தில் பதிந்த அம்முத்தம் தந்த பரவசம் எப்போதும் போகாது பவா".. இது சீனுராமசாமியின் நெகிழ்ச்சி.
இக்கலைஞன் தன் இளம் தலைமுறையோடு எப்படி ஓர் உறவை வைத்திருக்கிறார்! தன் காலத்திய கலைஞர்களின் வெற்றியை உடல்மொழியால் வார்த்தைகளால் பெருமிதப்படுத்தும் மனம் எத்தனை ஆளுமைகளுக்கு வாய்த்திருக்கிறது?
நண்பர்களுடனான ஒரு காலை நேர சந்திப்பில் தன் அருகிலிருந்த பெரியப்புகை ப்படமொன்றை எடுத்து என் முகத்தருகே நீட்டினார்.
பவா இந்த ஆள உங்களுக்கு தெரியுதா?”. அந்த குளோசப் புகைப்படத்தை உற்றுபார்த்தேன். ஷைலுவும் நண்பர்கள் முருகன், கார்த்தி என்று யாருக்கும் அவரை அடையாளப் படுத்த முடியவில்லை.
இல்லை சார் பார்த்ததில்லை.
இல்லயே, இந்த ஆளுக்கு உங்களை தெரியுமாமே, உங்க வீட்டுக்கு பலமுறை வந்ததாகவும், சாப்டதாகவும் சொல்றாரேஎன்றார்.
கொஞ்சம் ஆர்வத்தோடு மீண்டும் பார்க்கிறோம். பிடிபடவில்லை.
நெற்றியிலிருந்து ஆரம்பித்து மேல்கழுத்து வரை முடிந்த ஒரு நிமிடம் அது.
எங்கள் ஆர்வத்தை அறிந்து சிறு புன்னகையுடன் அப்புகைப்படத்தை தன் முகத்தருகே வைத்தார். அல்லோரும் ஆச்சர்யத்தால் உறைந்தோம்.
"நான்தான் பவா, என் அடுத்த  படந்துல காமிர முன்னால நிற்க போறேன்". அவர் என் மகள் மானசியைவிட துள்ளலிருந்தார். படப்பிடிப்புக்கான வேலைகள் துவங்கியவுடன் அவர் வேறு ஆளாக பரிணமிக்கிறார். அதுவரை மௌனத்தால் தன் திறைமொழியை அடைகாக்கிறார். படப்பிடிப்பில் ஒரு துள்ளல், ஒரு சந்தோஷம் எல்லாமுமாக தான் விரும்பியவண்ணம் அதை நிதானமாக கடக்கிறார். தன் படைப்பு முகிழும் அக்கணத்தின் உச்சத்தை முதலிலேயே தீர்மானித்து விடுகிறார். அதை நோக்கி பயணிப்பது மட்டுமே அவர்வேலை. இப்போது அதனருகே நின்று திரும்பி பார்க்கிறார். பெருமிதத்தோடு கூடிய ஒரு புன்சிரிப்பு உதட்டோரம் கசிகிறது.

                                            நன்றி: உயிரெழுத்து ஜனவரி இதழ்



Monday, January 28, 2013

ஆங்கில புத்தக வெளியீடு


யோகிராம் சூரத்குமாரில் ஆரம்பித்து ஓவியர் சந்தானராஜ் வரை எனக்கு நெருக்கமான பல ஆளுமைகளைப் பற்றி நான எழுதின 19,டி.எம். சாரோனிலிருந்து கட்டுரைத் தொகுப்பு பேராசிரியர். ராம்கோபால். அவர்களால்  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அழகியப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அதற்கு என் நண்பன் ஜே.பி. தன் குவாவாடிஸ் மையத்தில் பல வெளிநாட்டவர்களின் மத்தியில் ஒரு வெளியீட்டுவிழா நடத்துகிறார். சாத்தியமான நண்பர்கள் பங்கேற்கலாம். 

தொடர்புக்கு  9443105633  -  9444867023


Friday, January 18, 2013

இந்த வருடத்திற்கான புதிய புத்தகங்கள்



இந்த வருடத்திற்கான புதிய புத்தக தயாரிப்புகள் பண மின்மையால் தாமதமாகிக் கொண்டே இருந்தன. ஆறேழு புத்தகங்களை மட்டுமே எல்லா தடைகளையும் மீறி கொண்டுவர முடிந்தது. நாளைக் காலை சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் அரங்கு எண் 465 , 466 கிடைக்கும் இப்புத்தகங்கள் வெளிவருவதற்கு நான் எதுவுமே பங்களிக்கவில்லை. எப்போதும் கண்விழித்து இதை சாத்தியமாக்கிய ஷைலஜாவின் உழைப்பை நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.





















Monday, January 7, 2013

அன்பெனும் ஒளி - சூத்ரதாரி


திருவண்ணாமலை என்றதும் அண்ணாமலையாரும் கிரிவலமும்தான் நினைவுக்கு வரும், ஆனால் இலக்கியவாதிகளுக்கு 19. டி.எம். சாரோனும் பவாவும்தான் நினைவுக்கு வருவார்கள்,

வருடந்தோறும் கலை இலக்கிய இரவு என்பது நவீன இலக்கியமும் ஓவியமும் இசையும் சினிமாவும் என பல்வேறு தரப்புகளும் இணைந்து புதிய சாத்தியங்களை அடைந்த பொழுதுகளை சாத்தியமாக்கியவர் பவா,

நமது சமகால வாழ்வை கலை, இலக்கியம், அரசியல் ஆகிய மூன்றும்தான் நிர்ணயிக்கின்றன, இவற்றில் ஏதோவொன்றுடன் அல்லது எல்லாவற்றுடனுமே நமக்கு தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம், ஆனாலும் நமக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மூன்றுமே நமது வாழ்வை பாதிக்கத்தான் செய்கின்றன, ‘எனக்கு பாரக் ஒபாமாவைத் தெரியும், அவருக்குத்தான் என்னைத் தெரியாதுஎன்பதைப் போல,

இத்துறைகள் அளவுக்கு துறை சார்ந்த ஆளுமைகளும் முக்கியமானவர்களே,

பொதுவாக, நம் பொது புத்தியில் ஆளுமைகள் சார்ந்த சில முன் தீர்மானங்கள் உண்டு, கேள்வி ஞானமும் ஊடகங்களும் அப்படியொரு பிம்பத்தை நமக்குள் கட்டமைத்துள்ளன, அப்படி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தைத் தாண்டி, முன் தீர்மானத்தைத் தாண்டி அந்த ஆளுமையைக் குறித்து நாம் ஒருபோதும் யோசிப்பதில்லை,

ஒரு பொது ஜனத்துக்கும் ஆளுமைக்கும் இடையிலான திரையை, இதுபோன்ற புத்தகங்களாலும் அனுபவங்களாலும் மட்டுமே நம்மால் தாண்டிச் செல்ல முடிகிறது,



ஆளுமைகளோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர்களைப் பற்றி எழுதுவது என்பது, தான் எவ்வளவு பெரியவன், தனக்கு எத்தனைப் பேரைத் தெரியும் பாருங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அல்ல,

அப்படித் தம்பட்டம் அடித்துக் கொள்கிறவர்கள் எழுதியவற்றிலிருந்து நாம் ஆளுமைகளின் பெருமைகளைக் குறித்து ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது, மாறாக எழுதியவனின் வறுமையையே அறிந்துகொள்ள முடியும்,

உண்மையில் அசலான இந்த அனுபவங்கள் ஒரு பாலம்,

ஆளுமைகளுக்கும் பொது புத்திக்கும் இடையில் அமைக்கப்படும் ஒருவித புரிந்துணர்வு பாலம்,

ஆளுமைகள் எப்போதும் கூண்டுக்குள் அடைப்பட்டு கிடப்பவர்கள்,

பிரபல்யமும் புகழும் ஊடகங்களும் கட்டமைத்த கூண்டு,
அதிலிருந்து அவர்கள் சுதந்திரமாக வெளியில் வருவதென்பது அனுமதிக்கப்படாத ஒன்று,

அப்படி கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் ஆளுமைகளின் அறியாத பரிமாணங்களை, அக் கூண்டினை நெருங்க முடியாத பொது ஜனங்களுக்கு, வாசகர்களுக்கு சொல்கிற முயற்சியே இது போன்ற பதிவுகள்,

இதனால் என்ன பயன்?

ஒன்று ஆளுமைகள் குறித்த நமது புரிதல்களை நாம் மறுபரிசீலனை செய்து கொள்ள முடியும்,

அடுத்தது, இவர்கள் சார்ந்த துறைகளில் இவர்களது பங்களிப்பு என்ன? அந்தப் பங்களிப்புக்கும் இவர்கள் பெற்ற பிரபல்யத்துக்கும் தொடர்பு உள்ளதா? அதற்காக இவர்கள் தந்திருக்கும் விலை என்ன? என்றெல்லாம் நம்மால் யோசிக்க முடியும்,

புத்தகத்தில் சில குறிப்பிடத்தக்க அனுபவங்கள் உள்ளன,

                திருமண வரவேற்பு
                கலெக்டரின் பெயரை தன் மகனுக்கு சூட்டிய கந்தர்வன்
                லெனின் தன் தோளில் சுமந்த நாக் அவுட்
                கல்வராயன் மலையில் கோணங்கி
மேலும் பெயரளவில் மட்டுமே நாம் அறிந்த சிலரைப் பற்றிய பதிவுகள்

கைலாஷ் சிவன்  ,, இவரைப் பற்றிய பதிவு என்பது சில காலத்துக்கு முன்பு இலக்கியவாதிகள் என்ற பெயரில் சில பிரகிருதிகள் செய்த அதிகபிரசிங்கித்தனங்களை நம்மால் நினைவுபடுத்தி சிரிக்க வைக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் கைலாஷ சிவனை சந்தித்ததும் என் நண்பர் அவரைக் குறித்துக் குறிப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது,

தன்னை படமெடுத்துவிடக்கூடாது என்று பிடிவாதமாய் மறுத்த அம்பையுடன் நீங்கள் எழுத்தாளன் என்றால் நான் கலைஞன், வியாபாரி அல்லஎன்று மார் நிமிர்த்திப் பேசிய வைட் ஏங்கிள் ரவி

எனக்கும் புதுமைப்பித்தன்தாண்டே ஆதர்ஷம் என்று தமிழ்ச்செல்வனை ராணுவத்திலிருந்து விடுவித்த அந்த பெயர் தெரியாத மேஜர்,

ஏற்கனவே நமக்குத் தெரிந்த ஆளுமைகளைக் குறித்தும் அவர்களைப் பற்றிய நமது புரிதல்களை மேலும் உறுதிப்படுத்தும்விதமாகவும் பதிவுகள் உள்ளன,

மேடையில் தனக்கு சமமாக அன்றைய பாண்டிச்சேரி சபாநாயகர் கண்ணணுக்கு இருந்த நாற்காலியை எடுக்கச் சொல்லிவிட்டு, கண்ணணை கீழே உள்ள நாற்காலியில் உட்காரும்படி கைகாட்டும்போது நாம் உணரும் ஜே,கேயின் கம்பீரம் சாகித்ய அகாதமி பரிசுக்காக சா, கந்தசாமிக்கு ஓட்டுப் போடாமல் லட்சுமிக்கு ஓட்டுப் போட்டதாக சொல்லும்போது குறுகிப் போகிறது,

சில ஆளுமைகளைக் குறித்து எழுதும்போது அவரது பெருமைகளையும் சாதனைகளையும் குறிப்பிடும் அதே நேரத்தில் அவர்களது பலவீனங்களையும் போதாமைகளையும் சுட்டிக் காட்ட தயங்கவில்லை பவா,

பாரதிராஜா சமூகம் என்பது நாலு பேர் கதைக்குப் பிறகு எதையுமே படிக்கவில்லை என்று குறிப்பிடும் பவா, எதன் பொருட்டோ பிரபலம் வாசிப்பைத் துப்புறத் துடைத்துவிடுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்,

ஜெயகாந்தனைப் பற்றிய இறுதிப் பகுதியில் ,, உடல் நிலை பாதிக்கப்பட்டு கலைஞரோடு சமசரமாகி,, என்று தன் விமர்சனத்தை வெற்றிடத்தில் பதிவு செய்கிறார்,

அதே நேரத்தில் பவாவின் சில பதிவுகள், அவரது அனுபவங்கள் கருத்துக்கள், என்றாலும் சற்று மிகையானதாக படுகிறது, குறிப்பாக இயக்குநர் மிஷ்கினைக் குறித்தும் எஸ் ராமகிருஷ்ணன் குறித்தும் அவரது வரிகள், அந்த பதிவில் நமக்கு அனுபவமாகும் மிஷ்கின் வேறு, அவரது படங்களின் வழியாக நான் புரிந்து கொண்டிருக்கும் மிஷ்கின் வேறு,

இது முழுக்க முழுக்க பவாவின் அனுபவ உலகம், தான் உணர்ந்தவாறு அனுபவத்திவாறு குதூகலத்தோடும் ஆச்சரியத்தோடும் நெகிழ்ச்சியோடும் எந்த பாசாங்கும் இன்றி எழுதியுள்ளார், இவர்களைப் பற்றிய வாசகனின் கருத்துக்கள் வேறாக இருக்கலாம், பல்வேறு விதமான விமர்சகனங்கள் இருக்கலாம்,

இதில் பவா குறிப்பிட்டிருக்கும் ஆளுமைகள் எனக்குள் ஏற்படுத்தியுள்ள உணர்வை விட முக்கியமானது பவாவைக் குறித்து நான் உணர்ந்தது,

இத்தனை முக்கிய ஆளுமைகள், சினிமாக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், இடதுசாரி தோழர்கள் என்று எல்லோரையுமே பவா தன் எளிமையால் அன்பால் ஈர்த்திருக்கிறார் என்பது முக்கியமானது, இவர்கள் எவரிடத்திலும் பவாவுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை, மம்முட்டியும் திலகவதியும் சாப்பிட்ட அதே தட்டில்தான் கைலாஷ் சிவனும் கோணங்கியும் சாப்பிட்டிருக்கிறார்கள், அவருக்கு எல்லோருமே நண்பர்கள், ஆளுமைகளோ பிரபலங்களோ அல்ல,

இவர் சினிமாக்காரர், இவர் எழுத்தாளர், இவர் இடதுசாரி, இவர் அதிகாரி என்றெல்லாம் பவாவிடம் எந்த பாகுபாடுமில்லை, அனைவருக்கும் விரிந்த கதவுகளுடன் விசாலமான இதயத்துடன் பவா காத்திருக்கிறார், பவா என்கிற இந்த அபூர்வமான ஆளுமையின் அளப்பரிய அன்பின் வெளிச்சமே இந்த நூலின் உள்ள ஆளுமைகளின் பக்கங்களில் ஒளி வீசுகிறது,