Saturday, November 30, 2013

என் தோழனிடமிருந்து நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

மலை மனிதனோடு ஒரு அக பயணம்                                                                                                                                                          
                                                                    ஜி.செல்வா


ந்தைப்பொருளாதாரம், அடிப்படைவாதத்தோடு கூட்டு வைத்து நடத்தும் வெறியாட்டத்தில் மனிதம் சிக்கி வதைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்பும் பாசமும் விளைந்த மண்ணில் குரோதம் தலைவிரித்தாடுகிறது. தோழமை, நட்பு கசியும் காதல் , ஆறுதல் சொற்கள் வேண்டிநிற்கிறது மனம்.இதற்குத்தானே இதோ என நம்முன் நிற்கிறது நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” - பவா. செல்லத்துரையின் சிறுகதைத் தொகுப்பு பதினோறு கதைகளுடன். பாறைக்கும், மண்ணுக்கும் கலைகளுக்கும் உயிர் கொடுக்கும் மக்கள்! அவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தெறிக்கும் வெள்ளை பற்களின் ஒளி. இவைகள் தான் பவாவின் கதைக்களம்.
கதைகளை ஒருசேர ஒரேமூச்சில் வாசித்துவிடுவேன் என நுழைந்தால் ஒவ்வொரு கதை யும் தன்னை வெளிப்படுத்தியவுடன் வாசித்தவர் ஒரு விதமான உணர்வில் சிந்தனை வெளியில் பயணிக்கும் போது மற்ற கதைகள் கை கொட்டிச்சிரிக்கும்.சந்தைப் பொருளாதாரம் நம் பண்பாட்டை கலாச்சார நிகழ்வுகளை சீரழித்த வரலாற்று சாட்சி ஏழுமலை ஜமாகதை. பாரம்பரிய கலைகள் கூத்துக்கள் கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் காரணத்தை நறுக்கென சொல்லிச் செல்கிறார் பவா. அத்தோடு கலைஞனை கலையை நேசிக்கும் மக்களின் பிரியத்தை வெளிப்படுத்தி நெஞ்சை கணக்க செய்கிறார்.கொத்துக் கொத்தாய் சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும் மனிதர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் நடத்தும் சேட்டை மிக நுட்பமாக வேறு வேறு மனிதர்கள்கதையில் வெளிக் காட்டப்பட்டுள்ளது.அப்பா - மகனின் உறவுகள், ரத்தமும் சதையுமான பேச்சுக்கள் ... மகன்கள் அப்பாவிட மிருந்து வேறுபடும் தருணங்கள்... இணையும் புள்ளிகள் இப்படியாய்... இதையும் தாண்டி இரண்டு கதைகள்.ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது. வாழ்வு அதுவரை தந்திராத சுவையை அவர்களுக் காக வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்”. இந்த பிரியத்தை அனுபவிக்க , அவசியம் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகளில்பயணிக்க வேண்டியுள்ளது.வாழ்வின் எந்த தருணத்தில், எந்த புள்ளியில் மதத்தின் அரவணைப்பில் மனிதன் அடைக் கலம் தேடுகிறான்? அதேமனிதன் எந்த பொறித்தட்டில் கண்கள் தெறித்து மதத்தின் கட்டுப் பாட்டில் சாதியம் விதைத்திருக்கும் விஷத்தை கருவறுக்கிறான்? இரண்டும் இரண்டு தளத்தில் இரு கதைகளின் வழியே.

ஜப்பான் கிழவன் காடு காற்றின் சத்தத்திற்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறி கொள்ள வைத்த தருணத்தில்தன்கண்ணிகளை பையில் பத்திரமாக வைத்து மதத்தில் ஆறுதல டைகிறான். குளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு மருவு தீட்டு படாம காப்பத்தி வருவைதைப் பற்றி அந்த காவலுக்கு வேலை வைக்காம இந்தப் பறத்தெரு.. இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது”.. “ பறத் தெருவை நாலா பிரிச்சி பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாலும் மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க எழுதும் கடிதம் சரியா வந்து சேராததனால மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுத”.. இப்படியாகத் தொடரும் தலைமுறை கொடூரத்தை சாதியத்தை மதத்தின் பிடியிலிருந்து விலகிவந்து களம் கண்ட துசிங்காரக்குளம்”. வாசித்தவுடன் கடக்க முடியாமல் தலைமுறை பாரத்தை சுமக்க வைக்கிறது.மனிதர்களின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இயற்கையோடு சேர்த்து பின்னிப் பிணைந்து இழைத்த கதை சத்ரு”,. மனிதம் ஒரு சொட்டாக உதிர்ந்து பிரவாகம் எடுக்கிறது. இந்தப் பிரவாகத்தில் மூழ்கி தெப்பலாக எழுந்து நிற்கும் போது நமது முகங்கள் வன்மமற்று குழந்தை முகங்களாகி புன்னகை பூத்திருக்கும்.

முகம்கதையில் வரும் அம்முகுட்டி முகம் போலிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.மலை, பனிக்காலம், இருட்டு, தார்சாலை, புழுதிதெரு, காடு, குளம், வயல் இப்படியாய் இவற் றோடு காய்ந்த தலைகள், ஈர மனிதர்கள், வறண்ட வயிறு, மனிதம் பூத்து குலுங்கும் சிரிப்பு, வாருங்கள்.. இந்த மலை மனிதனோடு ஒரு அகப்பயணத்திற்கு!இடையறாத தொடர்ந்த வாசிப்பை ஒரு வாழ்க்கையாகவே கொண்டபிரபஞ்சன் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் நூற்றாண்டுச் சிறுகதை வரலாற்றை கச்சிதமாக சொல்லி செல்வது சிறப்பு.

Friday, November 29, 2013

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

ஓவியம்: பாலசுப்ரமணியன்

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின்  நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான் இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.
நடை.
அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.
குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.
நடை நின்று, நிலத்தில் ஊனின கால்கள்.
சனிமூலை மென பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.
பிடித்தாள்.
கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன்மீது கவிழ்வதை உணரமுடிந்தது.
அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.
கெழக்கத்தி ஆளுங்களா?
அந்த நாளில் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.
துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது.
மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.
தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.
புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.
முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.
பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.
அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளைவிடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.
அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள்.
சொம்பு நிரம்பியதும் உரிச்சி துண்ணு என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.
ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான்,
இதோ இன்னொரு இளவரசி.
இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள்.
உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் இவளையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள்.
துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.
இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’ என்று இவனை அறுத்துக் கொண்டுபோய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.
அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.
இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி…
அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருத்தது.
ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள்.
பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்த்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தன.
சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான்கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.
மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன.
ஒவ்வொருத்தியாய் உட்ஆர்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் உஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.
ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல்களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.
மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும்போது ஒரு கையில் ஒணான்கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிட வைத்தது.
எல்லோரையும் போய் சேர்த்துவிட்ட ஒணான்கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்துப் போனது.
அவன் ஊஞ்சலைத் தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.
இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான்.
இவன் நினைத்த மாதிரி எதுவுமற்றறு, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.
பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தையும் உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்துச் சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள், நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒர மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வௌவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.
காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.
ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.
வாழ்வுர அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்து. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன. கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள், நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டே இருந்தார்கள். புதுப்புது விளையாட்டுகளில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.
‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’
உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறுவரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைந்தார்கள்.
மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினான் அவள்.
ஒண்ணு… ரெண்டு… மூணு…
நூறு… நூறு…
கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை. எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தன. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்…
‘‘ராஜாம்பா… ராஜாம்பா… ராஜாம்பா…’’
அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.
இருட்டிவிட கொஞ்சமே பொழிதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.
அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டன.
இருள் அடர்ந்து போயிருந்தபோது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள்.
பாலேறி முற்றியிருந்த நெத்ததுக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.
அவன் அவசர அவசரமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.

     

Wednesday, November 20, 2013

கார்த்திகை தீபம் – என் வீட்டனுபவங்கள்

ஞாயிற்றுக்கிழமைக்கான தீபக்கொண்டாட்டம் எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவே துவங்கிவிட்டது. சாத்தூரிலிருந்து தியாகு அண்ணன் தன் மனைவியுடனும், இரு மகன்களுடன் கூடவே அ.முத்துக்கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு இரவு எட்டு மணிக்கு, சாத்தூர் சண்முக நாடார் கடை கருப்பட்டி மிட்டாய், சேவு தலா இருபது கிலோவுடன் வந்து சேர்ந்தார். இதுவரையிலான அவர் சந்திப்பு கருப்பட்டிமிட்டாயும், சேவுமின்றி ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை.
அவர் தம்பி மகேந்திரன் சென்னையிலிருந்து தன் ஏழுவயது மகனோடு தனி காரில் இரவு எட்டரைக்கு வந்து சேர்ந்தார். மிக சமீபத்தில் தன் மனைவியை கேன்சருக்கு பலிகொடுத்திருந்தார் மகேந்திரன். அத்துயரம் அவர் பேச்சை உறிஞ்சியிருந்தது. அமெரிக்க வாழ்வு தந்த அலுப்பும் அதனுடன் சேர்ந்திருந்தது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு முன்பே என் நண்பர் ஓவியர் சீனிவாசன் தன் மனைவி ஜெயந்தி, ஐந்து வயதேயான மகன் தம்புக்குட்டியோடு வந்திருந்தார். அவர் வாழ்வு கொண்டாட்டங்களாலும், மௌனங்களாலும் மட்டுமே நிறைந்தது. ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம், ஆஸ்ரம சாப்பாடு இதெல்லாம் மௌனத்தின் பக்கம் சேரும். தன் நண்பர்கள் கார்த்தி, ஜெய், முருகனோடு நீண்ட பின்னிரவுகளில் ஊர்சுற்றல், விவாதம், எவரையும் காயப்படுத்தாத நக்கல்கள் இவை முதல்வகை.
நானும் நண்பன் சிந்து ஏழுமலையும், வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒவ்வொரு இடமாகத் தயார் செய்தோம். ஜெயஸ்ரீயின் கல்வீடு, எங்கள் இரண்டாம்நில கெஸ்ட் அவுஸ், மாத்தூர் நில வீடு ஆகியவை ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்களால் இரவு பகலாய்ப் பொலிவூட்டப்பட்டன.
சனிக்கிழமை இரவு முதல் என் தொலைபேசி பல்வேறு குரல்களால் மூச்சு திணறியது. மூன்று நான்கு முறை அதை சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, இயல்பு. எல்லாரையும் தாங்கிக் கொள்ள ஒரு வலுவான இதயம் வேண்டும்தான். அது எனக்கு சிறுவயது முதலே வாய்த்திருந்தது.
இரவு பனிரண்டு மணிக்கு மேல் வந்த மருதா பாலகுரு, மற்றும் அவர் நண்பர்களை அழைத்து வந்து மாத்தூர் நிலத்தில் தங்க வைத்தோம். அடுத்த விடியலுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மிச்சமிருந்தது. ஏதோ விசித்திர சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்தால் அடைமழை துவங்கியிருந்தது.
மாலை மூன்று மணியளவில் மலேசியாவிலிருந்து என் மாமா மகள் பரமேஸ்வரியும் அவள் ஸ்நேகிதி யோகேஸ்வரியும் மழையினூடே திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எங்கள் போலோ காரில் வந்திறங்கியது இனிமையான காட்சி.                                     
சனிக்கிழமை மாலையே வந்து சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தர்  எழுத்தாளர். ஜெயமோகனின் மகன் அஜிதன்.
வம்சி, மானசி, ஹரி, அஜி, தியாகு அண்ணனின் மகன்கள் நிருபன், அஸ்வின் அ.முத்துகிருஷ்ணன்  இவர்கள் எல்லோரும் நிறைந்திருந்த கிணற்று நீரில் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஊறிக் கிடந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் ஜெயஸ்ரீ வீட்டிற்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தோம். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமாக சமைத்து சாப்பிட்டோம்.
இடையே சிபிச்செல்வனும், வேல்கண்ணனும் வந்து ஒரு கறுப்பு காபி மட்டும் குடித்து அவசரமாக விடைபெற்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அவசியம் வருவதாக அப்போதே பொய் சொன்னார்கள். எல்லாம் கடந்து போனது.
இப்போதெல்லாம்  என் தம்பியும் கவிஞனுமான நா.முத்துக்குமாரும்,  பாட்டெழுதும் விதமே அலாதியானது. படத்தின் இயக்குநரோடு காலையில் சென்னையிலிருந்து கிளம்பி வாணியம்பாடிவரை பயணிப்பது. இடையிலேயே பாடல் கருக்கொண்டுவிடும். வாணியம்பாடியிலோ, ஆம்பூரிலே முஸ்லீம் வாசம் வீசும் பிரியாணியோடு அப்பிரசவம் முடிந்திருக்கும்.
திரும்பி வரும்போது அவர்களை ஒரு புதுப்பாடல் நிறைக்கும். இம்முறை அருணாசலேஸ் வரருக்காக அல்லாவைத் தவிர்த்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலையே முத்துக்குமாரும் நீயா நானா’ ஆண்டனியும், அவரின் நண்பனும் பட இயக்குனருமான சார்லஸ் ஆகியோர் இரு கார்களில் புறப்பட்டு வந்தவாசி வழியே தங்கள் பயணத்தைத் துவக்கியிருந்தார்கள்.

ஆண்டனி சார் தயாரிப்பில் சார்லஸ் இயக்கும் படத்திற்கு முத்துக்குமார் பாடல் எழுத வேண்டியிருந்தது. அப்படப் பாடல் நிறைவடையும் இடத்தில் சார்லசும் கோபியும் அப்படியே சென்னைக்குத் திரும்பிவிடுவார்கள். (டப்பிங் வேலை) நாங்கள் எத்தனை பேருக்கு சமைப்பது என்பது குழப்பத்திலிருந்தது. வந்தவாசி அவர்களுக்கு அப்பாடலை பரிசளித்து அப்படியே திருப்பியனுப்பியது. ஆண்டனியும், முத்துக்குமாரும் மட்டுமே மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த நண்பர்கள் ஒவ்வொருவரின் பயணம் பற்றியும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டியிருக்கும்.
மாலை ஐந்து மணிவரையிலும் நண்பர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஐந்து மணிக்குக் குளித்து முடிந்து எல்லோரும் மொட்டைமாடிக்குப் போனோம். மானசி, வம்சி, அஜி, பாஸ்கர், ஹரி எல்லோருமாக அம்மொட்டைமாடியை அகல் விளக்குளால் அலங்கரித்திருந்தார்கள். செம்மண் அகல்களில் தீப எண்ணெய் நிறைந்திருந்ததே தனி அழகு.

எங்கிருந்தோ சிந்து ஏழுமலை ஒரு பை நிறைய மத்தாப்புகளையும், பட்டாசுகளையும் கொண்டு வந்தான். நான் நேரம் பார்த்தேன். சரியாக 5.50 எனக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. பல லட்சம் கண்களோடு சேர்ந்து என் கண்களும் மலையின் திசையில் நிலைகொண்டது. மலை உச்சியை கருமேகங்கள் நிறைப்பதும், விலகுவதும் அட… அது ஒரு சுவாரசியமான ஏமாற்றம். பக்கத்து அறையில் படுத்திருந்த முத்துக்குமாரையும், ஆன்டணி சாரையும் எழுப்பினேன். பதறியடித்து எழுத்து வந்து மொட்டைமாடி வெறுந்தரையில் சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள். மானசி முதல் மந்தாப்பைக் கொளுத்துவதற்கும் தீபம் ஏற்றுவதற்கும் சரியாயிருந்தது. எங்கிருந்தோ வந்த உற்சாகம் எங்கள் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லார் வீட்டு மொட்டைமாடிகளிலும் அதுவே பிரிதிபலித்தது. அடுத்த அரைமணி நேரத்திற்கு ஊரெங்கும் வான வேடிக்கையும், குதூகலமும், ஆன்மீக அனுபவமுமாகத் திகழ்ந்தது.
அகல் விளக்குகளின் ஒளி குறைதலுக்கு அஜி தனியே எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வம்சி இவைகளை ஓடிஓடி பல கோணங்களில் படமாக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு சிறு குழுவிடம் ஆன்டணி நீயாநானாவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை பரிதி அதில் மூழ்கியிருந்தார். ஷைலுவும், ஜெயஸ்ரீயும் ஒரு பெரிய மேசையில் தாங்கள் இதுவரை சமைத்த இருபத்தியோரு வகை உணவை மிக அழகாக மூடியிட்டு அடுக்கிக் கொண்டேயிருந்தார்கள். அதில் என்னைக் கவர்ந்த ஆறேழு வகை, காலிபிளவர் ப்ரை, முருங்கைக்கீரை மல்லாட்டை கலவை, பாகற்காய் வெங்காயம் சேர்ந்தொரு வறுவல், மூக்குகடலை, மொச்சை, பட்டாணி, பெரும்பயறு கலந்ததொரு சுண்டல், ஷைலஜாவின் பிரத்தேயக சேமியா பாயாசம். இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய பீர்க்கங்காய் காரக் குழம்பு.
சிறுசிறு குழுக்களின் பேச்சினூடே சாப்பிட ஆரம்பித்தோம். ஒவ்வொருவருக்கும் முன் ஒரு மூன்றடிக்கு தலைவாழை இலை. பௌர்ணமி வெளிச்சத்தில் அதன் மஞ்சள் கலந்த பச்சை நிறம் மின்னியது.
உற்சாகமும், உணவும் கூடிக் கொண்டேயிருந்தது.
ட்ரம்ஸ் சிவமணியை முத்துக்குமார் சாப்பிட அழைத்தான். அவர் பேசி முடித்து என்னிடம் தொலைபேசியைத் தரச்சொல்லி,
‘‘சாரி பவாண்ணே, போன வருட தீபத்துக்கு உங்க வீட்டு மொட்டமாடியிலதான் சாப்பிட்டேன். நாளைக்காலை பூனாவுக்கு ப்லைட் பிடிக்க அவசர அவசரமா போறேன். இடையில் இன்னொரு முறை வர்றேன். தீபத்துக்கு சமைச்ச அத்தனை வகையும் வேணும்’’
தொலைபேசியை முத்துக்குமார் கைகளுக்கு மாற்றிய என்னிடம் ஒரு பெருமிதமான சிரிப்பிருந்தது.
அதைத் தொடர்ந்து இன்னொரு தொலைபேசி அழைப்பு, இது ஷைலஜாவுக்கு,
அவள் முதல் வார்த்தையிலேயே பரவசமாகி அதையும் என்னிடமே தந்தாள்.
‘‘சார் நான் சப்தரிஷி, லா.ச.ரா பையன். பத்து வருசமா உங்களை பாக்கனுன்னு முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் வாய்ச்சது. உங்க ‘வம்சி’ முன்னால நிக்கறேன். அங்கிருந்த போர்ட்லதான் நெம்பர் எடுத்தேன். வீட்டுக்கு எப்படி வரணும்?’’
நான் ஆட்டோவிற்கு வழி சொன்னேன். அவரும் அவர் மனைவி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஆட்டோ கிடைக்காமல் நடந்தே மூணு கிலோமீட்டர் தூரம் வந்தார்கள். அவர் மொட்டைமாடியில் ஏறும்போதே பெரும் உற்சாகத்தைக் கூடவே கூட்டி வந்தார். அது எல்லோரையும் பற்றிக் கொண்டது.
நான் உங்களைப் பார்க்க வந்தது 49%. தான் ஷைலஜாவைப் பார்க்க வந்ததுதான் 51%. கணக்கு சரியா?
அதற்கும் நான் சிரித்துக் கொண்டேன்.
‘சிதம்பர நினைவுகள்’ என்னை உலுக்கியது. அதுக்கு அப்புறம்தான் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’
‘‘நேற்று நீங்க உங்க இப்லாகு-ல எழுதினதுவரை படிச்சிட்டேன் சார்’’ இது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வாய்ஸ்.
அவர்களுக்கு ஷைலுவும், ஜெயஸ்ரீயும் தாங்கள் மொழிபெயர்த்த புத்தகங்களைக் கையெழுத்திட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர், அப்பாவின் ‘தொனி’யை மீண்டும் படித்தேன் பெரிய கலைஞன்தான் அவர் என அதிலிருந்த ஒரு பகுதியை அச்சுப் பிசகாமல் அப்படியே எங்களிடம் பகிர்ந்தார்.
‘அபிதா’வும், ‘பச்சைக்கனவும்’ வந்துவந்து போனார்கள். இடையிடையே கருமேகத்திற்கிடையே தீபம் மினுக்கிமினுக்கி எல்லோருக்கும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
ஜெயமோகனின் ‘அறம்’ கேட்டார். கொடுத்தவுடன் அதில் ஜெயமோகனுக்கு பதிலாக அவர் மகன் அஜியிடம் கையெழுத்து கேட்டார்.
அவன் முடியவே முடியாதென அடம்பிடித்தபோது என் தொலைபேசி வழியே ஜெயமோகனே வந்தார்.
நான் பெரும் சிரிப்பினூடே,
‘அஜி உங்களுக்கு பதிலா கையெழுத்து போட மறுக்கிறான் ஜெயமோகன்’ என்றேன்.
அவரும் சிரித்துக் கொண்டே தொலைபேசியை அஜியிடம் கொடுக்கச் சொன்னார்.
அவர் என்னமோ சொல்ல அவன் மிக வெட்கப்பட்டு, நாணிக் கோணி அப்புத்தகத்தில் கையெழுத்திட்டது பேரழகு.
நான் ஜெயமோகனிடம் ‘அஜி இப்போது ஐந்தாவது பந்திக்குப் பரிமாறுகிறான்’ என்றேன்.
அவர் ‘அவனை உங்கள் வீட்டிற்கு பஸ் ஏற்றுவதற்கு முன் ‘எதிரிகளை சம்பாதிப்பது எப்படியென்று அப்பாவிடமும், நண்பர்களை சம்பாதிப்பது எப்படியென பவா மாமாவிடமும் கத்துக்கோடா’ என சொல்லித்தான் பவா பஸ் ஏற்றினேன்’ என்றார்.
இருவருமே முடிந்தவரை சிரித்துத் தீர்த்தோம்.
இப்போதைக்கு எவரும் பேசுவதை நிறுத்துவதாயில்லை. என் கை கால்களைத் தனித்தனியே கழட்டிவிட வேண்டும் போலிருந்தது. தாங்கமுடியாத வலி உடலெங்கும் பரவியிருந்தது.
அவர்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு நானும் சிந்து ஏழுமலையும் பைக்கை எடுத்துக் கொண்டு நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போனோம்.
கெஸ்ட் அவுஸ் திறந்தே கிடந்தது. ஏதோ ஒரு அவசரத் தொலைபேசியின் அழைப்பின் பொருட்டு இத்தனை கொண்டாட்டங்களையும் இழந்துவிட்டு தீபம் பார்க்காமலேயே பஸ் ஏறிவிட்ட கட்டுரையாளன் அ.முத்துகிருஷ்ணன் படுத்திருந்த தடயத்தை மட்டும் விட்டு சென்றிருந்தான். இந்த வருடம் நிச்சயம் அவனால் அவ்வளவு அதிரடிக் கட்டுரைகளை எழுதவே முடியாது, அண்ணாமலையாரின் சாபம் அப்படி.
மேடைமீது நேற்று நண்பர்கள் குதூகலித்து முடித்த மிச்சமாய் வயலட்நிற ‘வோட்கா’ இருந்தது.
அதை பார்த்துக் கொண்டே நான் அப்படியே படுக்கையில் சரிந்தேன். திரும்பிப் பார்த்தால் ஏழுமலை சிறு குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
எழுந்து வெளியே வந்து கிணற்றுத் திட்டின் மீதமர்ந்தேன். அங்கிருந்து தீபத்தைப் பார்த்தேன். நள்ளிரவிற்குப்பின் சுடர் பிரகாசமாய் எரிந்தது தெரிந்தது.
  ஆரவாரங்களின் அடங்கல்களில் எதுவும் பிரகாசமடைகிறது. அதை முழுவதும் தரிசிக்கவும், பருகவும் முடிகிறது.
அந்நிலப்பரப்பில், சுற்றிலும் வயல்வெளிகளிள் அடர்பச்சையின் அசைவினில் அப்பாவின் நினைவு வந்தது.
பத்து வருடத்திற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முடித்த முன்னிரவில், ஷைலஜாவை தன்னருகே அழைத்து ‘தீபம் ஏற்றிட்டாங்களாம்மா’ என்ற வார்த்தையோடுதான் அவரின் உயிர்ச்சுடர் அணைந்தது. அவர் பேசிய கடைசி வார்த்தைகளும் அதுதான்.
எல்லாவற்றையும் தாண்டி அப்பாவை நினைத்து ‘ஓ’ வென கத்தி யாருமற்ற இந்த வனாந்தரத்தில் கொஞ்சநேரம் அழவேண்டும் போலிருந்தது எனக்கு.

Wednesday, November 13, 2013

மூன்று நிகழ்வுகள்



சனிக்கிழமை காலையே நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த பால்சக்காரியாவின் ‘யேசு கதைகள்’ திறணாய்வுக் கூட்டத்திற்காக வேலூருக்கும், இன்னொரு குழு ஓவியர்கள் சீனுவாசன் – பாலசுப்ரமணியன் உரையாடிய நம்மோடுதான் பேசுகிறார்கள் புத்தகப் பகிர்வுக்காகச் சென்னைக்குமாகப் பிரிந்தோம். முதல் குழுவில் தோழர்கள் அமலதாஸ், காளிதாஸ், ஆனந்தியும் எங்கள் குழுவில் கார்த்தி, ஜெய், சத்யா என்றும் அடங்கியிருந்தார்கள்.
நாங்கள் சென்னை போய் சேர்வதற்குள் வேலூரில் நடந்த கூட்டம் பற்றிய செய்திகளை அவரவர் செல்போன்கள் அவசரப்பட்டு அறிவித்துக் கொண்டேயிருந்தன.
கூட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் பாதிரியார்களும், பேராசியர்களும். தொகுப்பிலுள்ள பதிமூன்று கதைகளைப் பற்றி பதின்மூன்று பேர் பேசுகிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. யாருமே யேசுவை மீட்பர் என்றும், கடவுளென்றும். உச்சரிக்கவில்லை.


சக்காரியாவுக்கு மட்டுமல்ல நமக்கும் தோழன்தான் இந்த யேசு. தேவாலய பீடங்களிலிருந்து உச்சரிக்கப்படும் இக்குரல்கள் பெரும் நம்பிக்கையூட்டுகின்றன. ‘அல்லேலுயா’ இதோ உள் ‘தேவனின் வருகை’ இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற அபத்தங்களற்று, யேசு ஒரு தோழனாக, நண்பனாக, சகோதரனாக, காதலனாகப் பார்க்கப்படுகிறார்.
எங்கள் கார் பயணம் நம்பிக்கைகளால் நிறைந்து கொண்டேயிருந்தது.
வேலூர் கூட்டம் முடிந்து நேராக அவர்கள் புக்பாய்ண்ட்டுக்கு ஆறு மணிக்குள்ளாக வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் பதினைந்து நிமிடத் தாமதத்தில் அங்கிருந்தோம். வரவேற்பறையில் புதுசு புதுசான குஜராத்தி ஸ்வீட்ஸ் என்னை வம்புக்கிழுத்தன. சீனுவாசன் சார் பிடிவாதமாக அவர் புத்தகத்துக்கு வந்திருந்த விமர்சனங்களைப் பேசும் நாவலாக்கியிருந்தார். அவை விரித்து வைக்கப்பட்டிருந்த மேடை புதிய வண்ணங்களால் நிறைந்து தன்னைத் தேர்ந்தெடுத்த அந்த ஓவியனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தன.



இரண்டு பெண்கள் கச்சேரியில் பாடுவது போல சப்பராங்கால் போட்டமர்ந்து பாடிக் கொண்டிருந்தார். என் மனம் வரவேண்டிய விருந்தினர்கள் எஸ்.ரா, பிரபஞ்சனுக்காக அலைந்து கொண்டிருந்தது.
முன்வரிசையில் நான் இன்றளவும் மிக மதிக்கும் ஆளுமை சே. ராமனுஜம் தன் வழக்கமான வெள்ளை பைஜாமா, ஜிப்பாவோடு கால்மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இது எதுவுமில்லாமலேயே இயல்பான கம்பீரத்தோடு கூத்துப் பட்டறை நா. முத்துசாமி அருகிலிருந்தார். அவருக்கும் பக்கத்தில் நரசய்யா. இக்கூட்டத்திற்கு சம்மத்தமே இல்லாத நிறந்தோடும் அழகோடும் இன்னொரு பெண் இருந்தார். யாரையும் கேட்காமலேயே அவர்தான் சௌமியா அன்புமணி என அறிந்தேன்.

அடுத்து முன் வரிசையில் தனியே தமிழச்சி இருந்தார். ஒவ்வொருவரும் அவரருகிலமர்ந்து ஓரிரு வார்த்தைகளில் பேசிக் கொள்வதும், படமெடுத்துக் கொள்வதும், ஒவ்வொருவருக்கும் தர அவரிடம் தனித்தனியே பிரியம் இருந்ததையும் கவனிந்தேன். அரங்கில் சீட்டுக்கட்டுகள் போல் கலைந்திருந்த கலைஞர்களில் அங்கங்கே ஓவியர் மணியன் செல்வம், கோணங்கி, மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி என்றிருந்தார்கள். கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழ் ஸ்டுடியோ அருண் என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டார்.
மேடையில் நான் தனித்து நின்று அரங்கை ஒருமுறை கண்களால் பருகினேன்.
என் சிறு வயது முதலே பார்த்து வியந்த ஆளுமைகள் அரங்கில் நிறைந்திருந்தார்கள். நடுக்கமில்லை. ஆனாலும் பரவசப்பட்டேன். நாடகக்கலைஞர் சே. ராமனுஜம், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, ஓவியர். மணியம் செல்வன், கோணங்கி ஆகியோருடனான என் பழைய ஞாபகங்கள் அடுக்கடுக்காய் நினைவில் கசிந்து வார்த்தைகளால் ஒழுகியது.


புரிசையில் தன் ஒவ்வொரு நாடகமும் நிறைவடைகையில் ராமனுஜம் சாருக்கு ஊர்மக்கள் அந்த நள்ளிரவில் மண் மொந்தையில் அருந்த பனங்கள் கொடுப்பார்கள். அவர் ஒரு பச்சிளம் குழந்தையைக் கையிலேந்துவதைப் போல அதை வாங்கி ஆயிரம் வாட்ஸ் வெளிச்ச உமிழ்தலுக்கிடையே குடிப்பார். ஒரு கலைஞனுக்கான தைர்யமும் பெருமிதமுமது. இதை நான் சொன்னபோது ராமனுஜம் சார், ஒரு மணப் பெண்ணைப்போல முறுவலித்ததும், அருகிலிருந்த ந.முத்துசாமி அவர் தோளில் தட்டி காதில் ஏதோ கிசுகிசுத்தார். (என்னை விட்டுட்டு போயிட்டேயாய்யா) அதற்கு அவர் அந்த அரங்கமே அதிர சிரித்தார். புரிசையில் கேட்ட அச்சிரிப்பைப் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேட்டேன். தமிழச்சி, சௌமியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் தங்கள் தனித்துவத்தோடு பேசினார்கள். வழக்கமான தன் மேடை மொழியை உதறி, தன் அந்தரங்க நண்பன் ஒருவனுடன் பாரில் பேசிக் கொள்வது போல கிருஷ்ணகுமார் பேசினது எல்லோரையும் கவர்ந்தது.


யாருமே எதிர்பார்க்காமல் பட்டியலில் எப்போதும் இல்லாத கோணங்கியைப் பேச அழைத்தேன். அவனால் மறுக்க முடியாது எனத் தெரியும். திருவண்ணாமலையில் இருபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஓர் பேச்சைக் கிளறிவிட்டேன். அக்கருத்தரங்கில் அவன் உரையாடல் பாதியில் அறுந்ததை நினைவு படுத்தினேன். அதை அப்போது நிறுத்தின பி.கே.வைப் பார்த்தேன். எல்லாரும் உன்மத்த மனநிலையிருந்தோம்.

கோணங்கி சிரித்துக் கொண்டே மேடையை நோக்கி ஓடிவந்தான். காற்றில் அலைந்து கொண்டிருந்த ஒரு துவக்க வார்த்தையைக் கையிலெடுத்தான், இல்லை ஏற்றினான்.
வார்த்தை தீப்பிடித்துக் கொண்டது. முத்துசாமி அவன் நிகழ்த்து கலையை ஆழ்ந்து கவனித்தார். அரைமணி நேரம் அம்மழை நீடித்தது. நான் முழுக்க நனைந்திருந்தேன். சீனுவாசனும் பாலு சாரும் தலைதுவட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த ஈரத்திலேயே அறைக்குத் திரும்ப வேண்டும் போலிருந்தது.

Monday, November 11, 2013

பால் சக்காரியாவின்



பால் சக்காரியாவின் யேசுகதைகள் (தமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ) பற்றி இம்மாத (நவம்பர் புத்தகம் பேசுது இதழில்) எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜா