Saturday, November 30, 2013

என் தோழனிடமிருந்து நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை

மலை மனிதனோடு ஒரு அக பயணம்                                                                                                                                                          
                                                                    ஜி.செல்வா


ந்தைப்பொருளாதாரம், அடிப்படைவாதத்தோடு கூட்டு வைத்து நடத்தும் வெறியாட்டத்தில் மனிதம் சிக்கி வதைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்பும் பாசமும் விளைந்த மண்ணில் குரோதம் தலைவிரித்தாடுகிறது. தோழமை, நட்பு கசியும் காதல் , ஆறுதல் சொற்கள் வேண்டிநிற்கிறது மனம்.இதற்குத்தானே இதோ என நம்முன் நிற்கிறது நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” - பவா. செல்லத்துரையின் சிறுகதைத் தொகுப்பு பதினோறு கதைகளுடன். பாறைக்கும், மண்ணுக்கும் கலைகளுக்கும் உயிர் கொடுக்கும் மக்கள்! அவர்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பில் தெறிக்கும் வெள்ளை பற்களின் ஒளி. இவைகள் தான் பவாவின் கதைக்களம்.
கதைகளை ஒருசேர ஒரேமூச்சில் வாசித்துவிடுவேன் என நுழைந்தால் ஒவ்வொரு கதை யும் தன்னை வெளிப்படுத்தியவுடன் வாசித்தவர் ஒரு விதமான உணர்வில் சிந்தனை வெளியில் பயணிக்கும் போது மற்ற கதைகள் கை கொட்டிச்சிரிக்கும்.சந்தைப் பொருளாதாரம் நம் பண்பாட்டை கலாச்சார நிகழ்வுகளை சீரழித்த வரலாற்று சாட்சி ஏழுமலை ஜமாகதை. பாரம்பரிய கலைகள் கூத்துக்கள் கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்படும் காரணத்தை நறுக்கென சொல்லிச் செல்கிறார் பவா. அத்தோடு கலைஞனை கலையை நேசிக்கும் மக்களின் பிரியத்தை வெளிப்படுத்தி நெஞ்சை கணக்க செய்கிறார்.கொத்துக் கொத்தாய் சிரிப்பும் பேச்சுமாய் இருக்கும் மனிதர்களின் வாழ்வில் அதிகார வர்க்கம் நடத்தும் சேட்டை மிக நுட்பமாக வேறு வேறு மனிதர்கள்கதையில் வெளிக் காட்டப்பட்டுள்ளது.அப்பா - மகனின் உறவுகள், ரத்தமும் சதையுமான பேச்சுக்கள் ... மகன்கள் அப்பாவிட மிருந்து வேறுபடும் தருணங்கள்... இணையும் புள்ளிகள் இப்படியாய்... இதையும் தாண்டி இரண்டு கதைகள்.ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது. வாழ்வு அதுவரை தந்திராத சுவையை அவர்களுக் காக வழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்”. இந்த பிரியத்தை அனுபவிக்க , அவசியம் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகளில்பயணிக்க வேண்டியுள்ளது.வாழ்வின் எந்த தருணத்தில், எந்த புள்ளியில் மதத்தின் அரவணைப்பில் மனிதன் அடைக் கலம் தேடுகிறான்? அதேமனிதன் எந்த பொறித்தட்டில் கண்கள் தெறித்து மதத்தின் கட்டுப் பாட்டில் சாதியம் விதைத்திருக்கும் விஷத்தை கருவறுக்கிறான்? இரண்டும் இரண்டு தளத்தில் இரு கதைகளின் வழியே.

ஜப்பான் கிழவன் காடு காற்றின் சத்தத்திற்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறி கொள்ள வைத்த தருணத்தில்தன்கண்ணிகளை பையில் பத்திரமாக வைத்து மதத்தில் ஆறுதல டைகிறான். குளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு மருவு தீட்டு படாம காப்பத்தி வருவைதைப் பற்றி அந்த காவலுக்கு வேலை வைக்காம இந்தப் பறத்தெரு.. இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது”.. “ பறத் தெருவை நாலா பிரிச்சி பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாலும் மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க எழுதும் கடிதம் சரியா வந்து சேராததனால மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுத”.. இப்படியாகத் தொடரும் தலைமுறை கொடூரத்தை சாதியத்தை மதத்தின் பிடியிலிருந்து விலகிவந்து களம் கண்ட துசிங்காரக்குளம்”. வாசித்தவுடன் கடக்க முடியாமல் தலைமுறை பாரத்தை சுமக்க வைக்கிறது.மனிதர்களின் அக உலகத்தையும் புற உலகத்தையும் இயற்கையோடு சேர்த்து பின்னிப் பிணைந்து இழைத்த கதை சத்ரு”,. மனிதம் ஒரு சொட்டாக உதிர்ந்து பிரவாகம் எடுக்கிறது. இந்தப் பிரவாகத்தில் மூழ்கி தெப்பலாக எழுந்து நிற்கும் போது நமது முகங்கள் வன்மமற்று குழந்தை முகங்களாகி புன்னகை பூத்திருக்கும்.

முகம்கதையில் வரும் அம்முகுட்டி முகம் போலிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள்.மலை, பனிக்காலம், இருட்டு, தார்சாலை, புழுதிதெரு, காடு, குளம், வயல் இப்படியாய் இவற் றோடு காய்ந்த தலைகள், ஈர மனிதர்கள், வறண்ட வயிறு, மனிதம் பூத்து குலுங்கும் சிரிப்பு, வாருங்கள்.. இந்த மலை மனிதனோடு ஒரு அகப்பயணத்திற்கு!இடையறாத தொடர்ந்த வாசிப்பை ஒரு வாழ்க்கையாகவே கொண்டபிரபஞ்சன் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் நூற்றாண்டுச் சிறுகதை வரலாற்றை கச்சிதமாக சொல்லி செல்வது சிறப்பு.

Friday, November 29, 2013

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

ஓவியம்: பாலசுப்ரமணியன்

பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின்  நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான் இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.
நடை.
அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது. செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.
குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய் வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.
நடை நின்று, நிலத்தில் ஊனின கால்கள்.
சனிமூலை மென பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.
பிடித்தாள்.
கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன்மீது கவிழ்வதை உணரமுடிந்தது.
அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.
கெழக்கத்தி ஆளுங்களா?
அந்த நாளில் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.
துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில் வேரோடும், சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது.
மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.
தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.
புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.
முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.
பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.
அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளைவிடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.
அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள்.
சொம்பு நிரம்பியதும் உரிச்சி துண்ணு என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.
ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான்,
இதோ இன்னொரு இளவரசி.
இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள்.
உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் இவளையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள்.
துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள். இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.
இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.
‘இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு’ என்று இவனை அறுத்துக் கொண்டுபோய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.
அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.
இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி…
அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும் இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருத்தது.
ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள்.
பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்த்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தன.
சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான்கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.
மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன.
ஒவ்வொருத்தியாய் உட்ஆர்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் உஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.
ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல்களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.
மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும்போது ஒரு கையில் ஒணான்கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிட வைத்தது.
எல்லோரையும் போய் சேர்த்துவிட்ட ஒணான்கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்துப் போனது.
அவன் ஊஞ்சலைத் தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய் இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.
இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான்.
இவன் நினைத்த மாதிரி எதுவுமற்றறு, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச் சேர்ப்பித்தது.
பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தையும் உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்துச் சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள், நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒர மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த வௌவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.
காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.
ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.
வாழ்வுர அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்து. ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்.
அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன. கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள். தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள் களைப்புறாதவர்களாயிருந்தார்கள், நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டே இருந்தார்கள். புதுப்புது விளையாட்டுகளில் மூழ்கி, எழுந்து, அடுத்ததற்குப் பயணமானார்கள்.
‘‘கண்ணாமூச்சி ஆடலாமா?’’
உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறுவரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின் இடைவெளிகளில் அவர்கள் மறைந்தார்கள்.
மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினான் அவள்.
ஒண்ணு… ரெண்டு… மூணு…
நூறு… நூறு…
கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை. எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தன. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்…
‘‘ராஜாம்பா… ராஜாம்பா… ராஜாம்பா…’’
அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.
இருட்டிவிட கொஞ்சமே பொழிதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.
அன்று ‘‘எட்டுக்கு ஒண்ணு’’ என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டன.
இருள் அடர்ந்து போயிருந்தபோது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத் தளர்த்தினாள்.
பாலேறி முற்றியிருந்த நெத்ததுக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.
அவன் அவசர அவசரமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.

     

Wednesday, November 20, 2013

கார்த்திகை தீபம் – என் வீட்டனுபவங்கள்

ஞாயிற்றுக்கிழமைக்கான தீபக்கொண்டாட்டம் எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவே துவங்கிவிட்டது. சாத்தூரிலிருந்து தியாகு அண்ணன் தன் மனைவியுடனும், இரு மகன்களுடன் கூடவே அ.முத்துக்கிருஷ்ணனைக் கூட்டிக் கொண்டு இரவு எட்டு மணிக்கு, சாத்தூர் சண்முக நாடார் கடை கருப்பட்டி மிட்டாய், சேவு தலா இருபது கிலோவுடன் வந்து சேர்ந்தார். இதுவரையிலான அவர் சந்திப்பு கருப்பட்டிமிட்டாயும், சேவுமின்றி ஒருமுறை கூட நிகழ்ந்ததில்லை.
அவர் தம்பி மகேந்திரன் சென்னையிலிருந்து தன் ஏழுவயது மகனோடு தனி காரில் இரவு எட்டரைக்கு வந்து சேர்ந்தார். மிக சமீபத்தில் தன் மனைவியை கேன்சருக்கு பலிகொடுத்திருந்தார் மகேந்திரன். அத்துயரம் அவர் பேச்சை உறிஞ்சியிருந்தது. அமெரிக்க வாழ்வு தந்த அலுப்பும் அதனுடன் சேர்ந்திருந்தது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு முன்பே என் நண்பர் ஓவியர் சீனிவாசன் தன் மனைவி ஜெயந்தி, ஐந்து வயதேயான மகன் தம்புக்குட்டியோடு வந்திருந்தார். அவர் வாழ்வு கொண்டாட்டங்களாலும், மௌனங்களாலும் மட்டுமே நிறைந்தது. ரமணாஸ்ரமம், கந்தாஸ்ரமம், ஆஸ்ரம சாப்பாடு இதெல்லாம் மௌனத்தின் பக்கம் சேரும். தன் நண்பர்கள் கார்த்தி, ஜெய், முருகனோடு நீண்ட பின்னிரவுகளில் ஊர்சுற்றல், விவாதம், எவரையும் காயப்படுத்தாத நக்கல்கள் இவை முதல்வகை.
நானும் நண்பன் சிந்து ஏழுமலையும், வரும் நண்பர்கள் தங்குவதற்கு ஒவ்வொரு இடமாகத் தயார் செய்தோம். ஜெயஸ்ரீயின் கல்வீடு, எங்கள் இரண்டாம்நில கெஸ்ட் அவுஸ், மாத்தூர் நில வீடு ஆகியவை ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்களால் இரவு பகலாய்ப் பொலிவூட்டப்பட்டன.
சனிக்கிழமை இரவு முதல் என் தொலைபேசி பல்வேறு குரல்களால் மூச்சு திணறியது. மூன்று நான்கு முறை அதை சார்ஜ் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, இயல்பு. எல்லாரையும் தாங்கிக் கொள்ள ஒரு வலுவான இதயம் வேண்டும்தான். அது எனக்கு சிறுவயது முதலே வாய்த்திருந்தது.
இரவு பனிரண்டு மணிக்கு மேல் வந்த மருதா பாலகுரு, மற்றும் அவர் நண்பர்களை அழைத்து வந்து மாத்தூர் நிலத்தில் தங்க வைத்தோம். அடுத்த விடியலுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே மிச்சமிருந்தது. ஏதோ விசித்திர சத்தம் கேட்டு வெளியே எழுந்து வந்து பார்த்தால் அடைமழை துவங்கியிருந்தது.
மாலை மூன்று மணியளவில் மலேசியாவிலிருந்து என் மாமா மகள் பரமேஸ்வரியும் அவள் ஸ்நேகிதி யோகேஸ்வரியும் மழையினூடே திருச்சி விமான நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு எங்கள் போலோ காரில் வந்திறங்கியது இனிமையான காட்சி.                                     
சனிக்கிழமை மாலையே வந்து சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தர்  எழுத்தாளர். ஜெயமோகனின் மகன் அஜிதன்.
வம்சி, மானசி, ஹரி, அஜி, தியாகு அண்ணனின் மகன்கள் நிருபன், அஸ்வின் அ.முத்துகிருஷ்ணன்  இவர்கள் எல்லோரும் நிறைந்திருந்த கிணற்று நீரில் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் ஊறிக் கிடந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் ஜெயஸ்ரீ வீட்டிற்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்தோம். ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமாக சமைத்து சாப்பிட்டோம்.
இடையே சிபிச்செல்வனும், வேல்கண்ணனும் வந்து ஒரு கறுப்பு காபி மட்டும் குடித்து அவசரமாக விடைபெற்றார்கள். இரவு சாப்பாட்டிற்கு அவசியம் வருவதாக அப்போதே பொய் சொன்னார்கள். எல்லாம் கடந்து போனது.
இப்போதெல்லாம்  என் தம்பியும் கவிஞனுமான நா.முத்துக்குமாரும்,  பாட்டெழுதும் விதமே அலாதியானது. படத்தின் இயக்குநரோடு காலையில் சென்னையிலிருந்து கிளம்பி வாணியம்பாடிவரை பயணிப்பது. இடையிலேயே பாடல் கருக்கொண்டுவிடும். வாணியம்பாடியிலோ, ஆம்பூரிலே முஸ்லீம் வாசம் வீசும் பிரியாணியோடு அப்பிரசவம் முடிந்திருக்கும்.
திரும்பி வரும்போது அவர்களை ஒரு புதுப்பாடல் நிறைக்கும். இம்முறை அருணாசலேஸ் வரருக்காக அல்லாவைத் தவிர்த்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலையே முத்துக்குமாரும் நீயா நானா’ ஆண்டனியும், அவரின் நண்பனும் பட இயக்குனருமான சார்லஸ் ஆகியோர் இரு கார்களில் புறப்பட்டு வந்தவாசி வழியே தங்கள் பயணத்தைத் துவக்கியிருந்தார்கள்.

ஆண்டனி சார் தயாரிப்பில் சார்லஸ் இயக்கும் படத்திற்கு முத்துக்குமார் பாடல் எழுத வேண்டியிருந்தது. அப்படப் பாடல் நிறைவடையும் இடத்தில் சார்லசும் கோபியும் அப்படியே சென்னைக்குத் திரும்பிவிடுவார்கள். (டப்பிங் வேலை) நாங்கள் எத்தனை பேருக்கு சமைப்பது என்பது குழப்பத்திலிருந்தது. வந்தவாசி அவர்களுக்கு அப்பாடலை பரிசளித்து அப்படியே திருப்பியனுப்பியது. ஆண்டனியும், முத்துக்குமாரும் மட்டுமே மாலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார்கள். தமிழகத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் வந்த நண்பர்கள் ஒவ்வொருவரின் பயணம் பற்றியும் ஒரு அத்தியாயம் எழுத வேண்டியிருக்கும்.
மாலை ஐந்து மணிவரையிலும் நண்பர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள். ஐந்து மணிக்குக் குளித்து முடிந்து எல்லோரும் மொட்டைமாடிக்குப் போனோம். மானசி, வம்சி, அஜி, பாஸ்கர், ஹரி எல்லோருமாக அம்மொட்டைமாடியை அகல் விளக்குளால் அலங்கரித்திருந்தார்கள். செம்மண் அகல்களில் தீப எண்ணெய் நிறைந்திருந்ததே தனி அழகு.

எங்கிருந்தோ சிந்து ஏழுமலை ஒரு பை நிறைய மத்தாப்புகளையும், பட்டாசுகளையும் கொண்டு வந்தான். நான் நேரம் பார்த்தேன். சரியாக 5.50 எனக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. பல லட்சம் கண்களோடு சேர்ந்து என் கண்களும் மலையின் திசையில் நிலைகொண்டது. மலை உச்சியை கருமேகங்கள் நிறைப்பதும், விலகுவதும் அட… அது ஒரு சுவாரசியமான ஏமாற்றம். பக்கத்து அறையில் படுத்திருந்த முத்துக்குமாரையும், ஆன்டணி சாரையும் எழுப்பினேன். பதறியடித்து எழுத்து வந்து மொட்டைமாடி வெறுந்தரையில் சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள். மானசி முதல் மந்தாப்பைக் கொளுத்துவதற்கும் தீபம் ஏற்றுவதற்கும் சரியாயிருந்தது. எங்கிருந்தோ வந்த உற்சாகம் எங்கள் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லார் வீட்டு மொட்டைமாடிகளிலும் அதுவே பிரிதிபலித்தது. அடுத்த அரைமணி நேரத்திற்கு ஊரெங்கும் வான வேடிக்கையும், குதூகலமும், ஆன்மீக அனுபவமுமாகத் திகழ்ந்தது.
அகல் விளக்குகளின் ஒளி குறைதலுக்கு அஜி தனியே எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வம்சி இவைகளை ஓடிஓடி பல கோணங்களில் படமாக்கிக் கொண்டிருந்தான். அங்கிருந்த ஒரு சிறு குழுவிடம் ஆன்டணி நீயாநானாவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். ஜோலார்பேட்டை பரிதி அதில் மூழ்கியிருந்தார். ஷைலுவும், ஜெயஸ்ரீயும் ஒரு பெரிய மேசையில் தாங்கள் இதுவரை சமைத்த இருபத்தியோரு வகை உணவை மிக அழகாக மூடியிட்டு அடுக்கிக் கொண்டேயிருந்தார்கள். அதில் என்னைக் கவர்ந்த ஆறேழு வகை, காலிபிளவர் ப்ரை, முருங்கைக்கீரை மல்லாட்டை கலவை, பாகற்காய் வெங்காயம் சேர்ந்தொரு வறுவல், மூக்குகடலை, மொச்சை, பட்டாணி, பெரும்பயறு கலந்ததொரு சுண்டல், ஷைலஜாவின் பிரத்தேயக சேமியா பாயாசம். இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிய பீர்க்கங்காய் காரக் குழம்பு.
சிறுசிறு குழுக்களின் பேச்சினூடே சாப்பிட ஆரம்பித்தோம். ஒவ்வொருவருக்கும் முன் ஒரு மூன்றடிக்கு தலைவாழை இலை. பௌர்ணமி வெளிச்சத்தில் அதன் மஞ்சள் கலந்த பச்சை நிறம் மின்னியது.
உற்சாகமும், உணவும் கூடிக் கொண்டேயிருந்தது.
ட்ரம்ஸ் சிவமணியை முத்துக்குமார் சாப்பிட அழைத்தான். அவர் பேசி முடித்து என்னிடம் தொலைபேசியைத் தரச்சொல்லி,
‘‘சாரி பவாண்ணே, போன வருட தீபத்துக்கு உங்க வீட்டு மொட்டமாடியிலதான் சாப்பிட்டேன். நாளைக்காலை பூனாவுக்கு ப்லைட் பிடிக்க அவசர அவசரமா போறேன். இடையில் இன்னொரு முறை வர்றேன். தீபத்துக்கு சமைச்ச அத்தனை வகையும் வேணும்’’
தொலைபேசியை முத்துக்குமார் கைகளுக்கு மாற்றிய என்னிடம் ஒரு பெருமிதமான சிரிப்பிருந்தது.
அதைத் தொடர்ந்து இன்னொரு தொலைபேசி அழைப்பு, இது ஷைலஜாவுக்கு,
அவள் முதல் வார்த்தையிலேயே பரவசமாகி அதையும் என்னிடமே தந்தாள்.
‘‘சார் நான் சப்தரிஷி, லா.ச.ரா பையன். பத்து வருசமா உங்களை பாக்கனுன்னு முயற்சிக்கிறேன். இன்னிக்கித்தான் வாய்ச்சது. உங்க ‘வம்சி’ முன்னால நிக்கறேன். அங்கிருந்த போர்ட்லதான் நெம்பர் எடுத்தேன். வீட்டுக்கு எப்படி வரணும்?’’
நான் ஆட்டோவிற்கு வழி சொன்னேன். அவரும் அவர் மனைவி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஆட்டோ கிடைக்காமல் நடந்தே மூணு கிலோமீட்டர் தூரம் வந்தார்கள். அவர் மொட்டைமாடியில் ஏறும்போதே பெரும் உற்சாகத்தைக் கூடவே கூட்டி வந்தார். அது எல்லோரையும் பற்றிக் கொண்டது.
நான் உங்களைப் பார்க்க வந்தது 49%. தான் ஷைலஜாவைப் பார்க்க வந்ததுதான் 51%. கணக்கு சரியா?
அதற்கும் நான் சிரித்துக் கொண்டேன்.
‘சிதம்பர நினைவுகள்’ என்னை உலுக்கியது. அதுக்கு அப்புறம்தான் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’
‘‘நேற்று நீங்க உங்க இப்லாகு-ல எழுதினதுவரை படிச்சிட்டேன் சார்’’ இது இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வாய்ஸ்.
அவர்களுக்கு ஷைலுவும், ஜெயஸ்ரீயும் தாங்கள் மொழிபெயர்த்த புத்தகங்களைக் கையெழுத்திட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர், அப்பாவின் ‘தொனி’யை மீண்டும் படித்தேன் பெரிய கலைஞன்தான் அவர் என அதிலிருந்த ஒரு பகுதியை அச்சுப் பிசகாமல் அப்படியே எங்களிடம் பகிர்ந்தார்.
‘அபிதா’வும், ‘பச்சைக்கனவும்’ வந்துவந்து போனார்கள். இடையிடையே கருமேகத்திற்கிடையே தீபம் மினுக்கிமினுக்கி எல்லோருக்கும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
ஜெயமோகனின் ‘அறம்’ கேட்டார். கொடுத்தவுடன் அதில் ஜெயமோகனுக்கு பதிலாக அவர் மகன் அஜியிடம் கையெழுத்து கேட்டார்.
அவன் முடியவே முடியாதென அடம்பிடித்தபோது என் தொலைபேசி வழியே ஜெயமோகனே வந்தார்.
நான் பெரும் சிரிப்பினூடே,
‘அஜி உங்களுக்கு பதிலா கையெழுத்து போட மறுக்கிறான் ஜெயமோகன்’ என்றேன்.
அவரும் சிரித்துக் கொண்டே தொலைபேசியை அஜியிடம் கொடுக்கச் சொன்னார்.
அவர் என்னமோ சொல்ல அவன் மிக வெட்கப்பட்டு, நாணிக் கோணி அப்புத்தகத்தில் கையெழுத்திட்டது பேரழகு.
நான் ஜெயமோகனிடம் ‘அஜி இப்போது ஐந்தாவது பந்திக்குப் பரிமாறுகிறான்’ என்றேன்.
அவர் ‘அவனை உங்கள் வீட்டிற்கு பஸ் ஏற்றுவதற்கு முன் ‘எதிரிகளை சம்பாதிப்பது எப்படியென்று அப்பாவிடமும், நண்பர்களை சம்பாதிப்பது எப்படியென பவா மாமாவிடமும் கத்துக்கோடா’ என சொல்லித்தான் பவா பஸ் ஏற்றினேன்’ என்றார்.
இருவருமே முடிந்தவரை சிரித்துத் தீர்த்தோம்.
இப்போதைக்கு எவரும் பேசுவதை நிறுத்துவதாயில்லை. என் கை கால்களைத் தனித்தனியே கழட்டிவிட வேண்டும் போலிருந்தது. தாங்கமுடியாத வலி உடலெங்கும் பரவியிருந்தது.
அவர்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு நானும் சிந்து ஏழுமலையும் பைக்கை எடுத்துக் கொண்டு நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போனோம்.
கெஸ்ட் அவுஸ் திறந்தே கிடந்தது. ஏதோ ஒரு அவசரத் தொலைபேசியின் அழைப்பின் பொருட்டு இத்தனை கொண்டாட்டங்களையும் இழந்துவிட்டு தீபம் பார்க்காமலேயே பஸ் ஏறிவிட்ட கட்டுரையாளன் அ.முத்துகிருஷ்ணன் படுத்திருந்த தடயத்தை மட்டும் விட்டு சென்றிருந்தான். இந்த வருடம் நிச்சயம் அவனால் அவ்வளவு அதிரடிக் கட்டுரைகளை எழுதவே முடியாது, அண்ணாமலையாரின் சாபம் அப்படி.
மேடைமீது நேற்று நண்பர்கள் குதூகலித்து முடித்த மிச்சமாய் வயலட்நிற ‘வோட்கா’ இருந்தது.
அதை பார்த்துக் கொண்டே நான் அப்படியே படுக்கையில் சரிந்தேன். திரும்பிப் பார்த்தால் ஏழுமலை சிறு குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
எழுந்து வெளியே வந்து கிணற்றுத் திட்டின் மீதமர்ந்தேன். அங்கிருந்து தீபத்தைப் பார்த்தேன். நள்ளிரவிற்குப்பின் சுடர் பிரகாசமாய் எரிந்தது தெரிந்தது.
  ஆரவாரங்களின் அடங்கல்களில் எதுவும் பிரகாசமடைகிறது. அதை முழுவதும் தரிசிக்கவும், பருகவும் முடிகிறது.
அந்நிலப்பரப்பில், சுற்றிலும் வயல்வெளிகளிள் அடர்பச்சையின் அசைவினில் அப்பாவின் நினைவு வந்தது.
பத்து வருடத்திற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முடித்த முன்னிரவில், ஷைலஜாவை தன்னருகே அழைத்து ‘தீபம் ஏற்றிட்டாங்களாம்மா’ என்ற வார்த்தையோடுதான் அவரின் உயிர்ச்சுடர் அணைந்தது. அவர் பேசிய கடைசி வார்த்தைகளும் அதுதான்.
எல்லாவற்றையும் தாண்டி அப்பாவை நினைத்து ‘ஓ’ வென கத்தி யாருமற்ற இந்த வனாந்தரத்தில் கொஞ்சநேரம் அழவேண்டும் போலிருந்தது எனக்கு.

Wednesday, November 13, 2013

மூன்று நிகழ்வுகள்



சனிக்கிழமை காலையே நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்தோம். ஒரு குழு ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த பால்சக்காரியாவின் ‘யேசு கதைகள்’ திறணாய்வுக் கூட்டத்திற்காக வேலூருக்கும், இன்னொரு குழு ஓவியர்கள் சீனுவாசன் – பாலசுப்ரமணியன் உரையாடிய நம்மோடுதான் பேசுகிறார்கள் புத்தகப் பகிர்வுக்காகச் சென்னைக்குமாகப் பிரிந்தோம். முதல் குழுவில் தோழர்கள் அமலதாஸ், காளிதாஸ், ஆனந்தியும் எங்கள் குழுவில் கார்த்தி, ஜெய், சத்யா என்றும் அடங்கியிருந்தார்கள்.
நாங்கள் சென்னை போய் சேர்வதற்குள் வேலூரில் நடந்த கூட்டம் பற்றிய செய்திகளை அவரவர் செல்போன்கள் அவசரப்பட்டு அறிவித்துக் கொண்டேயிருந்தன.
கூட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் பாதிரியார்களும், பேராசியர்களும். தொகுப்பிலுள்ள பதிமூன்று கதைகளைப் பற்றி பதின்மூன்று பேர் பேசுகிறார்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. யாருமே யேசுவை மீட்பர் என்றும், கடவுளென்றும். உச்சரிக்கவில்லை.


சக்காரியாவுக்கு மட்டுமல்ல நமக்கும் தோழன்தான் இந்த யேசு. தேவாலய பீடங்களிலிருந்து உச்சரிக்கப்படும் இக்குரல்கள் பெரும் நம்பிக்கையூட்டுகின்றன. ‘அல்லேலுயா’ இதோ உள் ‘தேவனின் வருகை’ இயேசுவின் இரத்தம் ஜெயம் என்ற அபத்தங்களற்று, யேசு ஒரு தோழனாக, நண்பனாக, சகோதரனாக, காதலனாகப் பார்க்கப்படுகிறார்.
எங்கள் கார் பயணம் நம்பிக்கைகளால் நிறைந்து கொண்டேயிருந்தது.
வேலூர் கூட்டம் முடிந்து நேராக அவர்கள் புக்பாய்ண்ட்டுக்கு ஆறு மணிக்குள்ளாக வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் பதினைந்து நிமிடத் தாமதத்தில் அங்கிருந்தோம். வரவேற்பறையில் புதுசு புதுசான குஜராத்தி ஸ்வீட்ஸ் என்னை வம்புக்கிழுத்தன. சீனுவாசன் சார் பிடிவாதமாக அவர் புத்தகத்துக்கு வந்திருந்த விமர்சனங்களைப் பேசும் நாவலாக்கியிருந்தார். அவை விரித்து வைக்கப்பட்டிருந்த மேடை புதிய வண்ணங்களால் நிறைந்து தன்னைத் தேர்ந்தெடுத்த அந்த ஓவியனுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தன.



இரண்டு பெண்கள் கச்சேரியில் பாடுவது போல சப்பராங்கால் போட்டமர்ந்து பாடிக் கொண்டிருந்தார். என் மனம் வரவேண்டிய விருந்தினர்கள் எஸ்.ரா, பிரபஞ்சனுக்காக அலைந்து கொண்டிருந்தது.
முன்வரிசையில் நான் இன்றளவும் மிக மதிக்கும் ஆளுமை சே. ராமனுஜம் தன் வழக்கமான வெள்ளை பைஜாமா, ஜிப்பாவோடு கால்மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இது எதுவுமில்லாமலேயே இயல்பான கம்பீரத்தோடு கூத்துப் பட்டறை நா. முத்துசாமி அருகிலிருந்தார். அவருக்கும் பக்கத்தில் நரசய்யா. இக்கூட்டத்திற்கு சம்மத்தமே இல்லாத நிறந்தோடும் அழகோடும் இன்னொரு பெண் இருந்தார். யாரையும் கேட்காமலேயே அவர்தான் சௌமியா அன்புமணி என அறிந்தேன்.

அடுத்து முன் வரிசையில் தனியே தமிழச்சி இருந்தார். ஒவ்வொருவரும் அவரருகிலமர்ந்து ஓரிரு வார்த்தைகளில் பேசிக் கொள்வதும், படமெடுத்துக் கொள்வதும், ஒவ்வொருவருக்கும் தர அவரிடம் தனித்தனியே பிரியம் இருந்ததையும் கவனிந்தேன். அரங்கில் சீட்டுக்கட்டுகள் போல் கலைந்திருந்த கலைஞர்களில் அங்கங்கே ஓவியர் மணியன் செல்வம், கோணங்கி, மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி என்றிருந்தார்கள். கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழ் ஸ்டுடியோ அருண் என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டார்.
மேடையில் நான் தனித்து நின்று அரங்கை ஒருமுறை கண்களால் பருகினேன்.
என் சிறு வயது முதலே பார்த்து வியந்த ஆளுமைகள் அரங்கில் நிறைந்திருந்தார்கள். நடுக்கமில்லை. ஆனாலும் பரவசப்பட்டேன். நாடகக்கலைஞர் சே. ராமனுஜம், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, ஓவியர். மணியம் செல்வன், கோணங்கி ஆகியோருடனான என் பழைய ஞாபகங்கள் அடுக்கடுக்காய் நினைவில் கசிந்து வார்த்தைகளால் ஒழுகியது.


புரிசையில் தன் ஒவ்வொரு நாடகமும் நிறைவடைகையில் ராமனுஜம் சாருக்கு ஊர்மக்கள் அந்த நள்ளிரவில் மண் மொந்தையில் அருந்த பனங்கள் கொடுப்பார்கள். அவர் ஒரு பச்சிளம் குழந்தையைக் கையிலேந்துவதைப் போல அதை வாங்கி ஆயிரம் வாட்ஸ் வெளிச்ச உமிழ்தலுக்கிடையே குடிப்பார். ஒரு கலைஞனுக்கான தைர்யமும் பெருமிதமுமது. இதை நான் சொன்னபோது ராமனுஜம் சார், ஒரு மணப் பெண்ணைப்போல முறுவலித்ததும், அருகிலிருந்த ந.முத்துசாமி அவர் தோளில் தட்டி காதில் ஏதோ கிசுகிசுத்தார். (என்னை விட்டுட்டு போயிட்டேயாய்யா) அதற்கு அவர் அந்த அரங்கமே அதிர சிரித்தார். புரிசையில் கேட்ட அச்சிரிப்பைப் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேட்டேன். தமிழச்சி, சௌமியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் தங்கள் தனித்துவத்தோடு பேசினார்கள். வழக்கமான தன் மேடை மொழியை உதறி, தன் அந்தரங்க நண்பன் ஒருவனுடன் பாரில் பேசிக் கொள்வது போல கிருஷ்ணகுமார் பேசினது எல்லோரையும் கவர்ந்தது.


யாருமே எதிர்பார்க்காமல் பட்டியலில் எப்போதும் இல்லாத கோணங்கியைப் பேச அழைத்தேன். அவனால் மறுக்க முடியாது எனத் தெரியும். திருவண்ணாமலையில் இருபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஓர் பேச்சைக் கிளறிவிட்டேன். அக்கருத்தரங்கில் அவன் உரையாடல் பாதியில் அறுந்ததை நினைவு படுத்தினேன். அதை அப்போது நிறுத்தின பி.கே.வைப் பார்த்தேன். எல்லாரும் உன்மத்த மனநிலையிருந்தோம்.

கோணங்கி சிரித்துக் கொண்டே மேடையை நோக்கி ஓடிவந்தான். காற்றில் அலைந்து கொண்டிருந்த ஒரு துவக்க வார்த்தையைக் கையிலெடுத்தான், இல்லை ஏற்றினான்.
வார்த்தை தீப்பிடித்துக் கொண்டது. முத்துசாமி அவன் நிகழ்த்து கலையை ஆழ்ந்து கவனித்தார். அரைமணி நேரம் அம்மழை நீடித்தது. நான் முழுக்க நனைந்திருந்தேன். சீனுவாசனும் பாலு சாரும் தலைதுவட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த ஈரத்திலேயே அறைக்குத் திரும்ப வேண்டும் போலிருந்தது.

Monday, November 11, 2013

பால் சக்காரியாவின்



பால் சக்காரியாவின் யேசுகதைகள் (தமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ) பற்றி இம்மாத (நவம்பர் புத்தகம் பேசுது இதழில்) எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜா











Tuesday, November 5, 2013

ஜெயஸ்ரீயின் கல்வீடு என் பங்களிப்பு – Extention


பவா செல்லதுரை


ஜெயஸ்ரீயின் கணவர் உத்ரகுமாருக்கு அவருடைய குடும்ப பாகமாக 3 லட்ச ரூபாய் கிடைத்தபோது அதை வைத்து சாரோன் பகுதியில் ஒரு பிளாட் வாங்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கடைசிவரை கைகூடவில்லை. ஐந்துலட்சத்திற்கும் குறைவாக 20க்கு 50 அடியுள்ள மனையும் கிடைக்காதபோது ஷைலஜாதான் அந்த யோசனையைச் சொன்னாள்.
நம் நிலத்தருகே  50 சென்ட் இடம் வாங்குவது, ஒரு காற்றோட்டமான, விசாலமான வீடு கட்டுவது. அது அப்படியே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடம் வாங்கி அங்கிருந்த ஒரு கல்லாங்குத்து அழிக்கப்பட்டு அதன்மேல் கடக்கால் போடப்பட்டபோது உள்ளிருந்து வந்த கருங்கற்கள் பரவசப்படுத்தின.

மிக ஆழமான கடக்கால் தோண்டி அக்கருங்கல் துண்டுகளோடு செம்மண் கலந்து கரைத்துவிட்டு கடக்காலை மூடியதற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே செலவானது.
என்  நண்பன்புகழ்பெற்ற புகைப்படக்காரன் பினு பாஸ்கரின் தம்பி பிஜூ பாஸ்கர் மாற்று வீடுகளுக்கான கனவு காண்பவனும்  கட்டி முடிப்பவனுமான ஒரு நவீன ஆர்க்கிடெக்ட். அவனிடம் இவ்வீடு பற்றி விவாதித்தோம். முதலில் செங்கல் என்றும் பிறகு அங்கு கிடைக்கும் கருங்கற்களே போதும் என்றும் முடிவானது.
அவ்வீட்டிற்கான ஒரு பிளானைத் தந்துவிட்டு வழக்கமான எல்லாக் கலைஞர்களையும் போல எங்கேயோ காணாமல்   போனான் பிஜூ. அவ்வீட்டின் கட்டுமானத்தை நாங்களே, (நான்ஷைலஜாஜெயஸ்ரீஉத்ரா) ஆகிய நால்வருமே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வேலைகளைத்  துவக்கினோம்.  கருங்கல்லிலிருந்து எழுந்து வந்தவன் போலிருந்த ஒருவனைத் தற்செயலாக சந்தித்தேன். தன் பெயர் மாது என்றும்தர்மபுரி மாவட்டம் மத்தூர் தன் சொந்த ஊர் என்றும் சொன்ன மாது பத்து உடைகற்களைக் கொண்டு சீத்தாப்பள்ளி பழம்போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் காட்டி இதுதான் இவ்வீடு என்று சொன்ன அவ்விநாடிஅவ்வீட்டின் நிறைவு என் முன் பிரம்மாண்டமாய் விரிந்தது.

அன்றிலிருந்து ஒரு படைப்பு மனங்கொண்டு அனைவரும் இயங்கினோம். வெய்யில் காலத்தில் ஆரம்பித்த அவ்வீடு வளர வளர எங்கள் படைப்பின் பக்கங்கள் கூடிக் கொண்டே போனது. நினைத்தது கைக்கூடாத போது அப்பெரும் நிலப்பரப்பில் நின்று தனியாக அழுதிருக்கிறேன். மசூதியிலிருந்தும் மண்டபத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்த கருங்கற்தூண்கள் தூக்கி நிறுத்தப்பட்டபோது அனைவரும் பரவச மனநிலையை அடைந்தோம்.
அவ்வீட்டின் கட்டுமானத்தை மூன்றாகப் பகுத்துக் கொண்டேன். முதலில் கறுப்பும், நீலமும் கலந்த கருக்கற்களோடு சிகப்பு கருங்கற்களை சேர்க்கும்போது அச்சுவர் மேலும் அழகடையும். அதைத் தேடுவது. அதையும் அதன் சுற்றுப்புறங்களிலேயே சேகரிப்பது. அதிக அலைச்சலின்றி, அவ்வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டரில் தென்மாத்தூர் ஏரிக்கரைக்கருகில் ஏழுமலை என்பவர் தோண்டி போட்டிருந்த கல்லணைத்தும் சிகப்பு நிறமுள்ளவை.
நானும் ஜெயஸ்ரீயும் ஒரு மாலையில் அதைக் கண்டடைந்தபோது குதூகலித்தோம். அதன் ஒரு சிறுதுண்டை ஒரு குழந்தையை ஏந்துவதுபோல ஜெயஸ்ரீ கையில் ஏந்திக் கொண்டார்கள்.
வீட்டைக் கட்டப் போகும் மாதுவிடம் அதைக் காண்பித்தபோது ‘‘இதான் சார் இதான் சார்’’ என அதை ஆமோதித்தார்.
எனக்கு இதனூடே சுத்தக் கறுப்பு நிறத்திலான கற்களையும் சேர்க்க வேண்டுமென ஆசையிருந்தது. மரபான பலர் ‘‘கறுப்புக் கற்களை வீட்டிற்கு பயன்படுத்தக்கூடாது’’ எனத் தடுத்ததை, ஒரு சொல்லில் நிராகரித்தேன். இக்கறுப்புக் கற்களின் பாலீஷ் செய்யப்பட்ட வடிவம்தான் கிரானைட் கற்கள். அதை வீட்டிற்கு, அடுப்புத்திட்டிற்கு என பயன்படுத்தவில்லையா என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
ஆக இப்போது எங்கள் முன் நீலம், சிகப்பு, கறுப்பு ஆகிய மூன்று நிறங்களிலான உடைகற்கள் குவிய ஆரம்பித்தன. எனக்கு மட்டும் இன்னும் ஏதோ குறைவது போலிருந்தது. இன்னொரு நிறம் தேவைப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக பூமியில் புதைந்து கிடந்த பாறைகளை ஜே.சி.பியின் மூலம் தோண்டியெடுத்தபோது அதன் மேற்புறம் முழுவதும் அடர் மஞ்சள் நிறத்தில் உறுதிப்பட்டிருந்தது. ஒரு பக்கம் நீலமும், இன்னொருபுறம் அடர்மஞ்சளிலான கல்லும் சுலபமாகக் கிடைத்தன.
இப்போது கட்டுமானத்தைத் துவங்கினோம். மாது அநியாயத்திற்கு இருமடங்கு சம்பளம் கேட்டார். என் ஆர்வம் அவனைப் பணமாக மாற்றியிருந்தது. அதன் ஆரம்பம் தள்ளிப் போய்விடக் கூடாதென்பதற்காக அனைத்திற்கும் சம்மதித்தேன்.

எங்கள் ஊரில் ஒரு மேஸ்திரிக்கு ஒருநாள் சம்பளம் 500/- ரூபாய்தான். மாது 1000/- கேட்டார். உதவியாளுக்கு முன்னூறுக்கு பதில் எழுநூறு கேட்டார். உள்மனதில் ஒரு கணக்குப் போட்டேன். வித்தையை உள்ளூர்காரர்கள் கற்றுக் கொள்வதற்கான தட்சணை இது. பேரம் பேசாமல் ஒத்துக்கொண்டேன். என் சம்மதங்கள் மாதுவுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அவர் கேட்காமலேயே அவருக்கும் அவர் உதவியாட்கள் அனைவருக்கும் மூன்றுவேளையும் சோறு போடுவதாகச் சொன்னேன். அவ்வார்த்தை மாதுவை ஒரு சிறு குழந்தையாக்கி என் உள்ளங்கை கதகதப்பிற்குள் கொண்டு வந்தது.
எல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அற்புதமான காலையில் தமிழின் மிக முக்கிய கவிஞன் விக்ரமாதித்யன் முதல் கருங்கல்லைத் தூக்க முடியாமல் தூக்கி சனிமூலையில் வைக்க எங்கள் எல்லோரின் பெருங்கனவு ஒன்று ஊழித்தீ போல பெருக ஆரம்பித்தது.
பத்துபேர் சேர்ந்து பணிபுரியும் இடத்தில் நிகழ இருக்கும் கருத்து மோதல்கள், உடல் சிராய்ப்புகள், தடித்த வார்த்தைகள், மனித ஈகோ எல்லாவற்றையும் நான் நன்கறிந்திருந்தேன். ஒவ்வொரு நாளும் ஈரமான வார்த்தைகளால், வாஞ்சையான செயல்பாட்டால் கல்லின் மீது படியும் சிமெண்ட்டை அவர்கள் துடைப்பது போலவே நானும் அவர்களறியாமல் துடைத்துக் கொண்டே போனேன். ஆனால் இது அரூபமானது.
உள்ளூர் மேஸ்திரிகள் இரண்டு மூன்று பேரை மாதுவுக்கு உதவியாளர்களாய் சேர்த்துவிட்டு என் எதிர்கால திட்டத்தைத் துவக்கினேன். நான் எதிர்பார்த்தது போலவே மாதுவைவிட வேகமாக காமராஜூம், குமாரசாமியும் கருங்கற்களைக் கைக் கொண்டார்கள்.
கட்டிடம் வளர வளர நாங்களனைவரும் அதனுள் அமிழ்ந்து போனோம். எங்கள் தலைகளைத் தாண்டி அது உயர்ந்திருந்தது. எங்கள் எல்லோரையும் கலவரப்படுத்திய ஜன்னல், வாசற்படிகளுக்கு, சிலாப் எப்படிப் போடுவது என்ற கேள்வி ஒரு குட்டி பிசாசைப் போல அவ்வீட்டின் முன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டது. எல்லோரும் வேலை முடித்து போய்விட்ட பின் நான் மட்டும் அக்கட்டிடப் பரப்பினுள் கையில் ஒரு சிகரெட்டோடு அலைந்து கொண்டிருந்தேன். தூரத்திலிருந்து அப்பிசாசு என் தோல்வியை எதிர் நோக்கிக் காத்திருந்தது. முடிவை உள்மனம் எட்டியபோது எதிரிலிருந்த ஒரு கட்டுக்கல்லை வன்மத்தோடு காலால் உதைத்தேன். அப்பிசாசு இடமகன்றது.
அன்றிரவு ஜெயஸ்ரீயை தொலைபேசியிலழைத்து காலை ஆறுமணிக்குத் தயாராக இருக்கும் படியும், ஒரிடத்திற்குப் போக வேண்டுமென்று மட்டும் சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்.

அடுத்தநாள் காலையின் பேரழகை தள்ளிக் கொண்டு நாங்களிருவரும் அடியண்ணாமலை கிராமத்தின், யாரையும் பயமுறுத்தும் கல்குவாரியின் முன் நின்றோம்.
ஆண்டாண்டு காலமாய் அடியண்ணாமலைப் பாறைகளில் நெருப்பிட்டு கொளுத்தி பாளம்பாளமாகப் பலகைக் கற்களை வெட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போய்ச் சேர்ந்த அந்த காலையிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுத்த திரேகங்களோடு அப்பாறைகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.
நான், ஆறு ஜன்னல், இரண்டு வாசற்படிகளுக்கு நாலடி வீதம் பலகைக் கற்கள் வேண்டுமெனக் கேட்டேன். ஜெயஸ்ரீயின் முகத்தைக் கவனித்தேன். திகைப்பும், ஆனந்தமும், முடிவும் அறிந்த அதன் முக பாவனைகளைக் கொண்டுவர எழுத்திற்கு வலுவில்லை. கேமராக்கள் முயலலாம்.
இத்தனை அழகானதொரு கல்வீட்டிற்கு சிமெண்ட் கான்க்ரீட் சிலாப்புகள் பொருத்தமற்றவை. அதுவும் கருங்கல்லாலேயே என்ற என் தீர்மானத்தின் ஆரம்பம்தான் இந்த அடியண்ணாமலையின் பலகைக் கல் குவாரி.
இரண்டாம் நாள் காலை மாட்டு வண்டிகளில் இரண்டிரண்டு கற்களாக அவ்வீட்டின் முன் வந்து அப்பலகைக் கற்கள் இறங்கின, வாழப்போகும் வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள்களின் குதூகலத்தோடு.

வண்டிமாடுகளைத் திரும்பியனுப்பிவிட்டு நானும் ஷைலுவும் இதை எப்படி இவ்வளவு உயரமுள்ள கட்டிடத்தின் மேலேற்றுவது என விவாதிக்க ஆரம்பித்தோம். என் நினைவில் எப்போதோ எங்கோ இதைவிட பெரிய பாறாங்கல்லை அநாவசியமாகத் தூக்கித் திரிந்த ஒரு கிரேன் நிழலாடியது.
அடுத்த அரைமணி நேரத்தில் அக்கிரேன் அவ்வீட்டின் முன் நின்றது. அதற்குள் காமராஜையும் குமாரசாமியையும் வரவழைத்திருந்தேன்.
எந்த விவாதமும் வேண்டாம். செயல்படுத்துவோம் என முதல் கல்லை கிரேனில் கட்டி அதைக் கட்டிப் பிடித்துக்கொண்டு காமராஜ் நின்று கொள்ள, ஒரு வித்தை மாதிரி அக்கல் வானவெளியில் அலைந்து அக்கட்டிட ஜன்னல் விளிம்பில் உட்கார்ந்து கொண்டது. அக்கல்லின் மீதேறி நின்று காமராஜ் கைத்தட்டி குதூகலித்தது இன்னும் நினைவில் அகலாதது.
திரும்பிப் பார்த்தால் பக்கத்தூர் ஜனங்கள் பாதிக்கும் மேல் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தார்கள். நான் உள்ளூர பெருமிதத்திலிருந்தேன். மொத்தமாக இரண்டு மணி நேரத்தில் எல்லாப் பலகைக் கற்களும் அதனதன் இடத்தில் அம்சமாக உட்கார்ந்து கொண்டன. மனித உடலால் சாத்தியமற்ற ஒன்றை, அவனால் வடிவமைக்கப்பட்ட இயத்திரம் ஒரு அடிமையைப் போல நிறைவேற்றித் தந்துவிட்டது. ஸ்லாபுக்கும் மேலே ஆறுவரிகள். ஆறு நாட்களில் நிறைவடைந்தது.

அடுத்து வீடுகட்டும் ஒவ்வொருவரின் பெருங்கனவான கான்க்ரீட். அது நிறைவடைந்துவிட்டால் பாதிவீடு முடிந்துவிடும். எதுவும் எதிர்ப்பார்ப்பில்லையெனில் அப்படியே அடுப்பு பற்ற வைக்கலாம். கான்க்ரீட் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். நண்பர்களின், உடன் பணிபுரிபவர்களின் நகைகளும் வளையல்களும் அடகுக் கடைகளுக்குப் போய் ஜல்லிகளாகவும், மணலாகவும் சிமெண்டாகவும் குவிந்தன.
கான்க்ரீட்டுக்கான நாளாக ஒரு ஞாயிற்றுக் கிழமையைத் தேர்த்தெடுத்துக் கொண்டோம். சனிக்கிழமை இரவே எல்லோரும் மூட்டை முடிச்சுகளோடு எங்கள் நிலத்து கெஸ்ட் அவுஸ்க்கு போய்ச் சேர்ந்தோம்.
வம்சி அப்போது சிவாஜிகணேசன் படங்களாகப் பார்த்துத் தீர்த்துக் கொண்டிருந்தான். கையோடு ‘வசந்த மாளிகை’ கொண்டு வந்திருந்தான். இரவு பத்து மணிக்கு மேல் அப்படத்தைப் பார்க்கத் துவங்கினோம்.
யாருக்காக? இது யாருக்காக என கணேசன் அந்தக் கண்ணாடி மாளிகையின் முன் நின்று சுழன்று, சுழன்று நடிக்கும்போது தாங்கமுடியாத ஏதோ ஒன்று எங்களை அழுத்த, அப்படியே அப்படத்தை அணைத்துவிட்டு வெளியேறினோம். தென்னை மரத்தின் ஓலைகளின் சப்தம் அலாதியாயிருந்தது. அங்கிருந்து நடந்து நாளைக் காலை கான்க்ரீட் போடப் போகும் ஜெயஸ்ரீயின் வீட்டின் முன் நின்றோம்.

அந்த நள்ளிரவில் சற்றுமுன்தான் கம்பிகட்டி முடித்து தொழிலாளர்கள் இறங்கியிருந்தார்கள். கட்டிடத்தின் மேலேறிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவரிலுமிருந்தது.  ஒரு முடிவுக்கு வருமுன்பே வம்சியும், மானசியும் சுகானவும் ஹரியும் எதன் வழியோ அக்கட்டிடத்தின் மேலேறி அவர்களின் உலகிற்கு எங்களை அழைத்தார்கள். வளைய முடியாத, ஏற முடியாத உடல் வளர்ந்திருந்த எங்கள் இயலாமை வெட்கித் தலைகுனிந்தது.
எப்படியோ ஒவ்வொருவராய் மூச்சு வாங்க மூச்சு வாங்க ஏறினோம். அக்கட்டிட உயரத்தில் நின்று அந்த அகாலத்தில் மலையை நோக்கினோம். மலை பாதி வரைந்து முடிந்த ஒரு யானையைப் போல வெகுதூரத்தில் படுத்துக் கிடந்தது. இன்னும் மூன்று திசைகளில் திப்பக்காட்டின் நீட்சித் தெரிந்தது. வெள்ளி நட்சத்திரம் ஒன்று எங்கள் தலைகளுக்கு மேல் நின்று எங்கள் மேல் வெளிச்சம் உமிழ்ந்தது.

கட்டி முடிக்கப்பட்ட கம்பிகளின் மேலேயே படுத்துக் கொள்ளலாமாவென ஒரு கணம் யோசித்தோம். படுத்திருக்கலாம். முடியவில்லை. ஆனால் அதன்பிறகு ஒருவரும் தூங்கவில்லை. சிவாஜிகணேசன் மீண்டும் மீண்டும் யாருக்காக? யாருக்காக வென எங்கள் தூக்கங்களைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தார்.
காலை ஆறு மணிக்குள் ஒரு டெம்போவில் நாற்பது ஐம்பது பேர் வந்திறங்கினார்கள். பெரும்பாலும் உரமேறியப் பெண்கள். கான்க்ரீட்பாலு என்ற அந்த முப்பது வயதுக்கும் உட்பட்ட பையன் தன் ட்ரேட்மார்க் சிரிப்போடு என்னருகே வந்து,
‘‘ஆரம்பிச்சிடலாமாண்ணே?’’ என்றான்.
நான் பரவசமானதொரு மனநிலையிலிருந்தேன். ஷைலஜா அவர்கள் அனைவருக்கும் மதிய உணவின் ஆயத்தத்தில் அலைந்து கொண்டிருந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் முதல் தட்டு ஜல்லிக் கலவை தயாராகி கட்டிடத்தின் கிழக்கு மூலையில் கொட்டப்பட்டபோது அவர்கள் அனைவரும் ஆராவாரக் கூச்சலிட்டார்கள்.

அது பற்றிக் கொண்டது. கல் நெரியும் சப்தமும், மணல் குழையும் நேர்த்தியும், சிமெண்ட் சேரும் அழகும், அவர்கள் கொண்டு வந்திருந்த கான்க்ரீட் இயந்திரத்தின் பெரும் சப்தமும் மனித உழைப்பின் மகத்துவத்தை எல்லோருக்குமாக நிரூபித்துக் கொண்டிருந்தது.
அது தொடர்ச்சி. இடையில் ஏற்பட்ட தொய்வு ஃபேன்ட்டா, 7 அப்பால் நிரப்பிக் கொள்ளப்பட்டது. பேச்சு… பேச்சு… அவர்களுக்குள்ளான ஆசைகள், வாழ்வுகள், கணவன்கள், கள்ளக்காதலன்கள், நிறைவேறாமைகள் எல்லாமும் நாம் கெட்டவார்த்தைகளெனப் பிரித்து வைத்திருக்கும் சொற்களைக் கொண்டே தங்களை நிரப்பிக் கொண்டார்கள். இடையிடையே சிரிப்பும், கும்மாளமும், கலவையை அள்ளி வீசிக் கொள்வதும், இளம்பெண்களின் மாரில் அதுபட்டுத் தெறிக்கும்போது ஆராவாரமிடும் இளம் பையன்களும்.
சே, இவர்கள் வாழ்வு எவ்வளவு அழகானது?
எந்தப் புகாருமற்றது!
எல்லாம் முடிந்து மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் எங்கள் கிணற்றடி புங்கமரத்திற்கு சாப்பிட வந்தார்கள். வீழ்ந்தப்பட்ட வாழைமரங்களைப் போலிருந்தார்கள். உடல் களைப்பையும் அசதியையும், மீறி வேலை முடிந்த திருப்தி அந்த உழைப்பாளி மக்களின் முகங்களில் படிந்திருந்தது. நாங்கள் தரப் போகும் இருநூறு ரூபாய் கூலிக்கான உழைப்பில்லை அது. ஒரு எளிய குடும்பத்துக்கான வாழ்விடத்தைத் தங்கள் கரங்களால் நிறைவு செய்த சக மனிதத் தோழமை.

மணக்க மணக்க கதம்ப சாம்பாரில் ஆரம்பித்து, ஷைலஜாவின் பிரத்யேக சேமியா பாயசத்தில் நிறைவுற்ற மதிய உணவு அது. அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த டிபன் கேரியரிலும், பிளாஸ்டிக் கேரி பேக்குகளிலும் மீதியை தங்கள் குஞ்சுகளுக்காக சேகரித்துக் கொண்டார்கள்.
இருபத்தியொரு நாள் இடைவெளி எங்களை மேலும் நிதானப்படுத்தியது. இழைத்த தவறுகள், பட்ட அவசரங்கள். எல்லாவற்றையும் திருத்தியது. கான்க்ரீட்டின் மேல் கடலென நீர் ததும்பி நின்றது. ததும்பலில் நனைந்த கருங்கற்கள் மேலும் நிறம்காட்டி அழகூட்டியது.
எனக்கொரு மேற்பார்வையாளர் தேவைப்பட்டார். என் அன்றாட அலுவல் பரபரப்பு அதைக் கோரியது. ஜெயஸ்ரீயுடன் வேலை பார்க்கும் ஃபிலோமினா டீச்சரின் மாமா என்றறியப்பட்ட ராஜா அப்பணிக்கு வந்து சேர்ந்தார். அவர் மரபான அனுபவம் என்ற மணல் கயிற்றால் எங்களைக் கட்டியிழுக்கபட்ட அனைத்துமே உதிர்ந்து போனது. நாங்கள் நவீனத்திலும் லாரிபெக்கர் என்ற மேதையின் நிழலிலும், அவரை வழி நடந்திய காந்தியின் சொல்லிலும் உறுதிப்பட்டிருந்தோம்.
மீண்டும் கட்டிடத்தின் இறுதி வேலைகளின் போது காமராஜ் தன் சகாக்களோடு காணாமல் போயிருந்தான். இடையிடையே நாங்கள் மாற்றிய மேஸ்திரிகள், சீத்தாப்பள்ளிப் பழ வடிவ அடுக்கலுக்குப் பயந்து ஓரிரு நாட்களில் வழக்கமான செங்கல் வேலைகளுக்கு  போனார்கள். ஆனால் எதன் பொருட்டும் அப்பணி நிற்காமல் குமாரசாமி என்ற மேஸ்திரி அப்புதுவடிவத்திற்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு மேலேறிக் கொண்டிருந்தான்.
கருங்கல் தூண் நின்று, விசாலமான அதன் தாழ்வாரமும், என் நண்பர் அருண் (மைசூர்) பிரத்யமாகத் தயாரித்து அனுப்பிய தேக்கு ஊஞ்சலும் அவ்வீட்டின் முன் புறத்தை பிரமிக்க வைத்தன. மாடியின் போர்டிகோவைப் பச்சை மூங்கிலால் வடிவமைக்க நினைத்து, நாள்தாங்காமயை யோசித்து, சிமெண்ட்டால் மூங்கிலைப் போலப் பிரிதியெடுத்தோம். எல்லாம் கச்சிதமாக நிறைந்த ஒரு இரவில் அடைமழை வந்தது.
கிட்டதட்ட ஒன்பது மாதங்கள் நாங்கள் அதனுள் மூழ்கி இருந்தோம். அதற்கொரு எளிமையான திறப்புவிழாவை நடத்துவதென்றும்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவ்வீட்டைத் திறப்பதென்றும்எங்கள் எல்லோராலும் வீட்டின் மூத்த அண்ணனாக என்றும் நினைக்கப்படுகிற  எங்கள் பிரியத்திற்குரிய சேலம் மணி அண்ணன் (தமிழ் செல்வன்கோணங்கியின் தம்பி) பால் காய்ச்சுவதென்றும் முடிவு செய்தோம்.
எல்லாம் அவ்விதமேயானது. உடன் நண்பர் மிஷ்கின்எஸ்.கே.பி. கருணா,                     அ. முத்துகிருஷ்ணன்பாஸ்கர் சக்திதேனி ஈஸ்வர்வைட் ஆங்கிள் ரவி சங்கர், முருகபூபதி என்று நண்பர்களால் நிறைந்தது அவ்வீடு.
புதிய வீட்டை எங்கள் முன்னத்தி ஏர் பிரபஞ்சன் திறப்பார் எனச் சொன்னவுடன் புது பட்டுவேட்டிஜிப்பாவிலிருந்த பிரபஞ்சன் மிகுந்த சந்தோஷத்தோடு கத்தரிக்கோலைக் கையில் எடுக்கநாங்கள் யாரும் எதிர்பாராத  அத்தருணத்தில்,

காணிநிலம் வேண்டும் - பராசக்தி
காணிநிலம் வேண்டும்”    என
தன் கம்பீரமான குரலில் கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடத் துவங்க, ஜெயஸ்ரீயின் அம்மாவின் முகம் ஆனந்தமும்,  துயரமும்கண்ணீரும், பெருமிதமான பல்வேறு நிலைகளுக்கு சென்று திரும்பியது. என் அன்பிற்குரிய புகைப்படக்காரத் தம்பிகள் வேலுஜான்சன் எல்லோருமே தவறவிட்ட  அற்புதக் கணங்கள் அவை.
அவ்வீட்டின் மொட்டை மாடியில் பெரிய ஸ்கிரீன் ஒன்றை வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அருகிலிருக்கும்  கிராமத்திற்கும் சேர்த்து படம் போடப் போகிறோம். அத்திரையை நண்பர் மிஷ்கின் திறந்து வைத்தார். அதன் அருகில் அவர் சமீபத்தில் மொழிபெயர்த்த பருந்து கவிதை ஒரு ஃப்ளக்ஸ் பேனரில் பிரிண்ட் செய்து வைக்கப்பட்டிருந்தது. சற்றே உணர்வுவயப்பட்ட மிஷ்கின் அங்கிருந்தவர்களுக்கு அக்கவிதையை வாசித்துக் காட்டினார். 

இப்புதிய வீட்டின் துவக்கத்தில் என் முப்பதாண்டுகால நண்பர்களும்தமிழின் நவீன இலக்கியத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்களுமான, ஜெயமோகன்எஸ். ராமகிருஷ்ணன்கோணங்கி ஆகிய மூவரும் எங்களோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீராத ஆசை சில மணித்துளிகளின் இடைவெளிகளில் நிறைவேறியது. முந்தின இரவே ராமகிருஷ்ணனும்அன்று காலை கோணங்கியும்அடுத்த நாள் அதிகாலை ஜெயமோகனுமாய் வந்து அவ்வீட்டை நிறைத்தார்கள். குதூகலமான கொண்டாட்டங்களோடு நாள் நீண்டது.

எல்லார் விருப்பத்திற்கிணங்க அன்று மதியம் கறிச்சோறுப் போட்டோம். சுடுசோறுரத்தப்பொறியல்மட்டன் குழம்புநாட்டுக்கோழி வறுவல், கதம்பம் (போட்டி,  நுரையீரல்ஈரல்கிட்னி..) எலும்பு ரசம் என்று ஆட்டின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு பாத்திரங்களில் வெந்தன. அன்றிரவு எல்லோரும் புதுவீட்டின் வெற்றுத் தரை  குளிர்ச்சியில் படுத்துறங்கினோம்.
அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் நான் மட்டும் வெகு தூரம் வந்து திரும்பிப்  பார்த்தேன்.
ஒரு கனவு முற்றுப் பெற்றது போலவும்ஆனால் முடிக்க முடியாத ஒரு ஓவியம் மாதிரியும் வயல்வெளிகளுக்குக்கிடையில் அவ்வீடு பனியில் நனைந்திருந்தது.