Tuesday, January 2, 2018

என் நான்கு வாசகர்கள்- பவா செல்லதுரை

 

  எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படித்தான் வாய்த்திருக்குமாவெனத் தெரியவில்லை. எனக்கு இப்படியான அபூர்வ வாசகர்கள் வாய்த்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு மந்தமான காலையில் பெங்களூரிலிருந்து வீட்டிற்கு வந்து,

“பேரு கீதா சார், சொந்த ஊர் ஊத்துக்குளி. இப்போ பெங்களூர்ல ஐ.டி. ல வேலை பாக்கறேன். உங்க ஒவ்வொரு எழுத்தையும் அங்குல அங்குலமா வாசிச்சிருக்கேன்” என பேசிக்கொண்டே அவர் கொண்டு வந்திருந்த பையிலிருந்து எனக்கு வாங்கி வந்திருந்த உடைகளை எடுத்து மேசையில் வைக்க, நான் அப்பெரிய பையில் மீதியிருந்த உடைகளை பார்ப்பதை கவனித்து,

“இதுவா சார்? இது காயத்ரி கேம்யூஸ் என்ற உங்கள் ஓவிய ஸ்நேகிதிக்கு….
இந்த புடவை பாட்டுகார லட்சுமி என்ற துக்கத்தின் தேவதைக்கு….
இது பினி பாஸ்கர் என்ற அப்புகைப்பட கலைஞனுக்கு….”
அவர் அடுக்கிக்கொண்டே போக சட்டென கண்கள் நிறைந்து கீதாவை மங்கலாகப் பார்த்தேன்.

அவர்கள் எல்லாம் என்  ‘19.டி.எம்.சாரோனிலிருந்து’ புத்தகத்தில் வரும் நிஜப்பாத்திரங்கள்.
ஒரு எழுத்தாளனின் கதாபாத்திரங்களுக்கும் சேர்த்து துணிகள் வாங்கி வந்த கீதாவின் மனநிலையை என்ன யோசித்தும் புரிந்து கொள்ளமுடியவில்லை. கீதா பழனிச்சாமி பிறகு கீதா சுரேஷ் ஆனபின்பும் இன்றளவும் அவர்களின் அன்பில் ததும்புகிறது 19.டி.எம்.சாரோன்.
                             2
“பவா இப்ப நான் எங்கயிருக்கேன்னு சொல்லுங்க?” என்ற தொலைபேசி குரல் முன்பு எப்போதோ கேட்டமாதிரி இருந்தாலும் அடையாளப்படுத்த முடியவில்லை. அதற்கு அவகாசம் தராமல் நான்,   ‘ஸ்ரீ’ என்கிறேன்.

அக்குரலும் அம்மனுஷியும் எனக்கு பரிச்சயமானதுதான். எப்போதும் படைப்பாற்றல் தெறிக்கும் ஒரு கட்டிடப் பொறியாளர் ஸ்ரீ.
பெங்களூரிலிருந்து பணி செய்ய கோவை வந்திருந்தபோது வாழ்வைப்பற்றிய அதுவரை வகுத்திருந்த எல்லா வரையறைகளையும் மீறப்பட்டவர்.
காற்று மாதிரி சுதந்திரமாய் பயணங்களில் சுற்றித் திரிபவள். ஒரு கட்டுவிரியன் பாம்பை கழுத்தில் மாலையாய் போட்டு காட்டில் அலையும் ஸ்ரீயின் ஒரு புகைப்படம் என் சேகரிப்பில் உண்டு.

“சொல்லு ஸ்ரீ.”
“நான் எங்க நிக்கறேன்னு நீங்க சொல்லவேயில்ல”
“எனக்கெப்படி தெரியும் ஸ்ரீ?”
“போன வாரம் நீங்க வந்து பேசின மதுரை அமெரிக்கன் கல்லூரி மரத்தடி”
“ஏன்?”

“சும்மாதான், நம்ம தல நின்ன மரத்தடி எப்படியிருந்திருக்குன்னு உணரத்தான்”
ஸ்ரீ மாதிரியான மனுஷிகளை வாசகிகள் என்பதோடு என்னால் வரையறுக்கமுடியவில்லை. அதைத் தாண்டி வந்து அப்படைப்பாளியின் சுக துக்கங்களில், குடும்பத்தில், குழந்தைகள் மீது, தன் பிரியத்தை பூ மாதிரி தூவிக் கொண்டிருப்பவள்.

ஒரு படைப்பாளிக்கு அவன் எழுதிய கதைகளுக்கு இப்படிப்பட்ட பூத்தூவல்களும் உண்டுதானே!

                            3
திருச்சூருக்கருகில் உள்ளடங்கிய முண்டூர் என்ற குக்கிராமத்தை நாங்கள் சென்றடைந்தபோது மணி இரவு 12.30
அடுத்த நாள் காலை தாமதமாக எழுந்தபோது எனக்காக யாரோ மூன்று பேர் நீண்ட நேரம் காத்திருப்பதாகச் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.
ஆனால் அது உண்மைதான். ஒருவர் சூர்யா மாஸ்டர். மற்றவர்கள் அவரின் சகாக்கள்.
என்னைப்பார்த்த விநாடி சூர்யா மாஸ்டர் பேச ஆரம்பித்தார்.

“தேசாபிமானியில் வரும் உங்கள் பத்தி படிக்கிறேன்.எத்தனை மனோகரமான கட்டுரைகள் அது.” என் ஆச்சரிய பாவத்தை பார்த்தபடி  அவர் தொடர்கிறார்.
நான் மறந்துபோன என கதாப்பாத்திர நண்பர்களை என் கண்முன்னே கொண்டுவருகிறார். எழுத்தின் சுழிப்பு ஒரு நதியின் சுழிப்பைவிட சுதந்திரமானது என்பதை தன் ஐம்பது வருட வாசிப்பனுபவத்திலிருந்து பகிர்கிறார்.

தன் டூ விலரில் என்னைப் பின்னால் உட்காரவைத்து அச்சிறு கிராமத்தை சுற்றி காண்பிக்கிறார். தன் வீட்டின்  முற்றத்தில் காய்ந்த மிளகு, தேங்காய் என சகலத்தையும் எங்கள் வண்டியில் நிறைத்த அவ்வாசக மனம் இன்றளவும் என்னை திகைக்க வைப்பது.
கடந்தவாரம்  கைரளி தொலைக்காட்சியிலிருந்து நண்பர் பிரதிப் நாராயணன் ஒரு அதிகாலையில் அழைத்து கே.ஆர்.வினயன் என்ற அந்த புகழ்பெற்ற புகைப்படகாரரின் திருவண்ணாமலை வருகையைப் பற்றி சொன்னார்.

இவ்வுரையாடல் முடித்து தொலைபேசியை  தனிப்பதற்கு முன் வினயன் தன் இரு தோழர்களோடு என் வீட்டிலிருந்தார்.
அடூரில் தொடங்கி மோகன்லாலின் ஒடியன் படம்வரை தான் புகைப்பட காரனாக பணியாற்றிய படங்களின் அனுபவ பகிர்தலில் நாங்கள் திளைத்திருந்தப்போது, மென் சுபாவமும், ஒரு புன்னகையால் உலகின் எல்லா பறிமாற்றங்களும் சாத்தியமே என உறுதியாய் நம்பியவருமான அனில் எங்களுக்கு கை சூட்டினூடே அறிமுகப் படுத்தப்பட்டார்.

அனில் மலையாளத் திரைப்படங்களுக்கு எழுதும் எழுத்தாளர். அவர் வசனம் எழுதிய படம் தான் கடந்த ஆண்டு  தேசிய விருது பெற்ற திலீப் நடித்த படம். தேர்ந்த இலக்கிய வாசிப்பாளன்.


சக்காரியா, ஆனந், கல்பட்டா, சந்தோஷ், அசோகன் செருவில் என எழுத்தாளர்களின் பெயர்களில் எங்கள் உரைச்சக்கரம் சுழன்றது.

மதிய உணவு வேளை வரை சக்கரம் நின்றபாடில்லை. என்னைப் பற்றிய அறிமுகத்தை ஷைலஜா மலையாளத்தில் கடத்தினாள். பேச்சினூடே மலையாளத்தில் ராஸ்பெரி பப்ளிகேஷ்ன்ஸ் சார்பில் வெளிவந்திருக்கும் என் எல்லா நாளும் கார்த்திகை, நட்சத்திரம் ஒளிந்துகொள்ளும் கருவறை கதாப்பாத்திரங்களையும் கேட்டப்போது துள்ளிக் குதித்த அனில் அந்த உயரம் குறைந்த நாற்காலியிலிருந்து எழுந்து என் கைகளை இறுக்கிக் கொண்டார்.

“சார் என் குரல் ஞாபகமில்லையா ?”
“………………”
“நான் அனில், உங்கள் சிறுகதைகளை மலையாளத்தில் படித்து முடித்த பின்னிரவில் உங்களை அழைத்து எனக்கு தெரிந்த அறைகுறைத் தமிழிலும் மலையாளத்திலும் சிக்கித்தவித்து மொழி வெளிவராமல் தவித்தேனே…”
என் காதுகளில் அப்பின்னிரவில் விசும்பலும், உரையாடலும் பிசிறின்றி மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.



“ஓ. அந்த அனிலா நீங்கள்? உலகம் எத்தனை சின்னது அனில்.?”
“ஆம் பவா சார். நான் எப்போதும் கனவிலும் நினைத்ததில்லை, உங்களை இப்படி ஒரு அசாத்தியமான சந்திப்பில் கைகோர்ப்பேனென”
கீதா, ஸ்ரீ, சூர்யா மாஸ்டர், அனில் மாதிரியான வாசகர்கள் தான் என் ஜீவிதத்தை சதா ஈரமாக்கி வைத்திருப்பவர்கள்.



Monday, January 1, 2018

ஸ்வரபேதங்கள்



மலையாள மூலம்  :  பாக்யலஷ்மி.
தமிழில்              :  கே. வி. ஷைலஜா.

எம் பேரு சுமதி. மூணாங்கிளாஸ் படிக்கிறேன். உன்ன எந்த கிளாஸில சேக்கக் கூட்டிட்டு வந்தாங்க?”

தெரியாது

உன்னோட அம்மாவா கொண்டுவந்து விட்டாங்க?”
ம்...”

அப்பா...?”

நான் அப்பாவைப் பற்றி யோசிக்கத் துவங்கினேன். தெளிவில்லாத ஒரு முகம் அலையடித்ததே அல்லாமல் அதை வடித்தெடுக்க முடியவில்லை. இங்கு வருவதற்கு முன்பு நானும் அம்மாவும் வேறு ஒரு இடத்திலிருந்தோம். அந்த இடம் எதுவென்று சரியாக எனக்குத் தெரியவில்லை. அங்கே அம்மாவின் வயதொத்தவர்கள் கொஞ்சபேர் இருந்தார்கள். என் வயதில் இரண்டு மூன்று குழந்தைகளையும் அங்கு பார்த்தது நினைவிலிருக்கிறது. காலையில் எல்லாப் பெண்களும் எங்கோ வேலைக்குப் போகும்போது அம்மாவும் அவர்களுடன் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அம்மா போவதற்கு முன்பு என்னைக் குளிக்க வைத்து சாப்பிட ஏதாவது தருவாள். மதியத்திற்கும் சாப்பாடு செய்து வைத்துவிட்டே போவாள். இதற்கிடையில் எப்போதோ நியாபகத்தில் இருந்த அப்பாவின் முகம் என்னிடமிருந்து நழுவியிருந்தது. இப்போது சுமதி கேட்கும்போதுதான் யோசிக்கிறேன். என்னை உலுக்கியபடிஅப்பா எங்கே?” என மீண்டும் கேட்டாள்.
நான் அவளைப் பார்த்து மலங்க விழித்தேன்.

அப்பா….தெரியாது

இங்கே இருக்கிறது உன்னோட சொந்த அக்காவும் அண்ணனும் தானே?”

நினைவுகளிலிருந்து என்னை உலுக்கி சுமதி மீண்டும் கேட்டாள்.
இன்னைக்கிக் காலையில உங்கூடப் பாத்த இந்திரா அக்காவும் உண்ணிக் கிருஷ்ணனும் உனக்கு யாரு? சொந்த அக்காவும் அண்ணனுமா?

சுமதி கேட்டபோது தான் அக்காவின் பெயர் இந்திரா என்பதும் அண்ணனின் பெயர் உண்ணிக் கிருஷ்ணன் என்பதும் எனக்குத் தெரிய வந்தது.

தெரியாது, அவங்க என்னோட அக்காவும் அண்ணனும்தான்னு அம்மா இப்பதான் சொல்றாங்க. நான் இப்பதான் மொதல் தடைவையா அவங்களப் பார்க்கிறேன்

கொஞ்சநேரம் கழித்து சுமதி மீண்டும் கேட்டாள்.
உனக்குதான் அம்மா, அக்கா, அண்ணன் எல்லோரும் இருக்காங்களே, பின்ன எதுக்கு இங்க கொண்டுவந்து சேர்த்திருக்காங்க?
எனக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புரியவில்லை. துக்கம் வயிற்றிலிருந்து மேலெழுந்தது.

அப்படின்னா ?” புரியாதவளாய் நான் கேட்டேன்.  
அப்படின்னா எனக்கு அப்பாவும் அம்மாவும் இல்ல. பாட்டி மட்டும்தான் இருக்காங்க. அதனால என்னை இங்க கொண்டு வந்து விட்டிருக்காங்க. இங்க இருக்கிறவங்க எல்லாருமே யாரும் இல்லாதவங்கதான். இது அனாதைப் பிள்ளைகள் படிக்கிற இடம். அதனால தான் கேட்டேன், உனக்கு அம்மா இருந்தும் ஏன் இங்க கொண்டுவந்து விட்டாங்க?

எனக்கு அவள் பேசுவதொன்றும் புரியாமல் போனதால் நான் ஏதும்  திரும்பப் பேசவில்லை. ஆனால் துக்கம் தொண்டைக் குழியில் ஸ்திரமாய் இறங்கியது.
வா இங்கே உட்காரலாம்

ஒரு மரத்தடியில் உட்கார்ந்தோம். காலையில் அழுததால் ஏற்பட்ட கேவல் இன்னும் மிச்சமிருந்தது. என் கண்கள் மீண்டும் நிறைந்து ததும்பி வெளியேறக் காத்திருப்பதைப் பார்த்த சுமதி, ஏதும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்தாள்.

நான் இனி எப்ப எங்க அம்மாவைப் பார்க்க முடியும்?
இங்க மாசத்துக்கு ஒரு முறைதான் யாரையாவது பார்க்க அனுமதிப்பாங்க. இனி அடுத்த மாசம் உன்னோட அம்மா வருவாங்க
அடுத்த மாசம்னா?
கொஞ்ச நாள் கழிச்சி

நான் மெலிதான குரலில் அழ ஆரம்பித்தேன்.
ஒருமுறை எதற்கோ அடம் பிடித்து அழுதபோது அம்மா சொன்னது நினைவிற்கு வருகிறது.
இப்படி அடம்பிடிச்சா உன்ன எங்கயாவது கொண்டுபோய் தூக்கிப் போட்டுடுவேன்

 அதனால் தானா அம்மா என்னை இங்க தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டாங்க? எவ்வளவு முயன்றும் அழுகையை அடக்கவே முடியவில்லை.
எங்க அண்ணன் எங்க?சட்டென எனக்கு அண்ணனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது .
அதோ அங்க தெரியுதே அந்தக் கட்டிடத்தில் தான் உங்க அண்ணன் இருக்கிறான். அங்க ஆம்பளப் பசங்க மட்டும் இருப்பாங்க. இங்க பொம்பளப் பசங்க மட்டும்

இனி அண்ணனையும் பாக்க முடியாதா?
பள்ளிக்கூடத்துக்கு வரும்போது பாக்கலாம்
மீண்டும் சுமதி ஏதேதோ பேசியபடியிருந்தாள். அந்தப் பள்ளி, ஆசிரியர்கள், சாப்பாடு பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். தங்கும் இடம், சாப்பிடும் அறை, படுக்கும் அறை, சமையல் கூடம், குளியலறை என எல்லாவற்றையும் சுற்றிக் காண்பித்தாள்.
நான் எதையும் கவனிக்கவில்லை, எனக்கு உரக்கக் கத்தி அழவேண்டும் போலிருந்தது.

நேரம் மாலையாயிருந்தது. எல்லாப் பெண் பிள்ளைகளும் வாசலில் ஓடி விளையாடும்போது நான் மரத்தடியில் அம்மாவைப் பற்றி யோசித்தபடி உட்கார்ந்திருந்தேன். வேதனை சகிக்க முடியவில்லை. நேரம் இரவானது. ஒரு பெரிய ஹாலில் வரிசை வரிசையாக எல்லோரும் பாய் விரித்துப் படுத்தார்கள். சின்னப் பிள்ளைகள் ஒரு ஹாலிலும், பெரியவர்கள் மற்றொரு ஹாலிலுமாகப் படுத்தார்கள்.

      எனக்கு ஒரு பாயும், போர்வையும் தரப்பட்டது. பாயை விரிக்கத் தெரியவில்லை. ஏதோ ஒரு அம்மா வந்து அதை விரித்துக் கொடுத்தாள். எல்லோரும் படுத்து விட்டார்கள். விளக்கணைத்தபோது பயமாக இருந்தது. அம்மாவை நினைத்து யாருக்கும் கேட்காத குரலில் அழ ஆரம்பித்தேன். அழுதழுது  அப்படியே தூங்கிப் போயிருந்தேன்.




      காலையில் யாரோ வந்து தட்டி எழுப்பியவுடன் பதறிப்போய் அம்மாவைத் தேடினேன். கண் திறந்து சுற்றிலும் பார்த்தபோது, நான் அம்மாவுடன் இல்லை என்ற சூழல் எனக்கு விளங்கியது. எல்லோரும் பாயையும் போர்வையையும் மடித்து  வைக்கிறார்கள். போர்வையைப் பாயில் மூடி வைத்து மடித்தேன். சுமதி எங்கேயிருந்தோ ஓடி வந்து போர்வையை மடிக்க உதவினாள்.

இப்படி சுருட்டி வச்சா மேடம் வந்து அடிப்பாங்க
சுமதி கொண்டுபோய்வைத்த இடத்தில் நானும் வைத்தேன்.

பல் தேய்க்க ஒரு பெரிய பாத்திரத்தில் உமிக்கரி வைத்திருந்தார்கள். பல் தேய்த்தேன். நிறைய பெண்பிள்ளைகள் கூடி நின்று கூச்சலிட்டபடி குளித்துக் கொண்டிருந்தார்கள். சுமதி அவளோடு என்னைக் கூட்டிக்கொண்டாள். என்ன செய்ய வேண்டுமென்று தெரியால் நான் நின்றேன். நான் இதுவரைத் தனியாக குளித்ததில்லை. அம்மாதான் குளிக்கவைத்து தலையைத் துவட்டி விடுவாள்.
ஒரு பெண் வந்து என்னை அழைத்துப் போய் குளிக்க வைத்து, ‘தலை துவட்டிக்கோ என்று சொல்லிவிட்டுப் போனாள். எப்படித் துவட்டுவது எனத் தெரியாமல் நான் உடையை மாற்றிக்கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தேன்.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிலும் பார்த்தேன். சுமதியைத் தேடினேன். எங்கேயோ ஒரு மணி அடித்த சத்தம் கேட்டது. எல்லாக் குழந்தைகளும் ஒரு பக்கமாக ஓடினார்கள். நானும் அவர்களுடன் ஓடினேன். எங்கிருந்தோ சுமதி ஓடிவந்து என் கையைப் பிடித்தாள்.  “உன்னோட தட்டும் டம்ளரும் எடுத்திட்டு வா, இது சாப்பாட்டு பெல்
நான் தட்டும் டம்ளரும் எடுத்துக்கொண்டு வந்து சுமதியின் பக்கத்தில் உட்கார்ந்தேன்.

தோசையும் டீயும் குடிப்பதற்கிடையே சுமதி அந்த இடத்தின் நடைமுறைகளையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தாள். எந்த பெல் எதற்காக என்றெல்லாம் சொன்னாள்.

காலையில் எழுந்திரிக்க, காபி, பலகாரம் சாப்பிட, மதிய சாப்பாட்டுக்கு, இரவு படிக்க, தூங்க என எல்லாத்துக்கும் பெல் அடிக்கும். இதையெல்லாம் சரியான நேரத்திற்குச் செய்யலன்னா மேட்ரன் அடிப்பாங்க. வேறொரு மேட்ரன்  இருக்காங்க. அம்மம்மா என்று தான் நாங்களெல்லாம் கூப்பிடுவோம். அந்த அம்மம்மா குழந்தைகளை அடிக்கவே மாட்டாங்க, பொய் சொன்னா மட்டும்தான் அடிப்பாங்க. அவங்க வெளியில போயிருக்காங்க, இன்னிக்கி வந்திடுவாங்க. சீக்கிரமா சாப்பிட்டு எழுந்திரு. ஸ்கூல் பெல் அடிக்கப் போறாங்க

நெருக்கியடித்து கை கழுவப்போய் வந்த நேரத்தில் மீண்டும் சுமதியைக் காணவில்லை.
எல்லோரும் அவசர அவசரமாய் எங்கோ ஓடுகிறார்கள். சுமதி கூட இருந்தால் சின்னதாய் ஒரு ஆசுவாசத்தை உணர முடிந்தது.
இனி என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் சுற்றிலும் பார்த்தேன். ஒரு அம்மா வந்து கையைப் பிடித்தாள்.
என்ன இப்படி நிக்கிற? ஸ்கூலுக்குப் போக வேண்டாமா? வா ரெடியாகலாம்

அந்த அம்மா எனக்குப் பவுடர் பூசி பொட்டிட்டார். அப்போது என் கண்கள் நிறைந்து வழிந்தபடியிருந்தன.
அய்யோடா, அழுகை இன்னும் தீரலையா?”
தலைவாரப் போனபோது நான் இன்னும் தலை துவட்டவில்லை என்பது தெரிந்தது. தலை துவட்டி, சிக்கெடுத்து, வாரிவிட்டு என் கையைப் பிடித்தபடி வேறு ஒரு அறைக்குக் கூட்டிப் போனார். அங்கே வயதான ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தார்.
இவங்கதான் சுமதி சொன்ன அம்மம்மாவா?
என்னை அழைத்துக் கொண்டு போன பெண் அவரிடம் சொன்னாள்.
இவதாம்மா நேத்து வந்த பொண்ணு. என்ன அமக்களம் தெரியுமா நேத்து? இப்பவும் துக்கம் தீர்ந்தபாடில்லை”  அவர் அப்படிச் சொல்லும் போதும் என் கண்கள் கலங்கியிருந்தன, அம்மம்மா என்னைப் பக்கத்தில் அழைத்தார்.
பேரென்னா ?

பாக்கியம் , பாக்கியலஷ்மி

நல்ல பேரு,  அய்யோ என்ன  பாப்பா நீ அழறியா? நல்ல பிள்ளைங்க அழமாட்டாங்க, உனக்குப் படிக்க வேண்டாமா? வீட்டில அம்மா வேலைக்குப்  போயிட்டா, நீ தனியாதான இருப்பே, அதனாலதான் உன்ன இங்கக் கொண்டு வந்து விட்டிருக்காங்க. இங்க எத்தன பேரு உங்கூட விளையாட இருக்காங்க பாத்தியா? இப்ப இந்த அம்மாகூட ஸ்கூலுக்குப் போ. ஸ்கூலுக்குப் போட்டுட்டு போக புது டிரஸ் உனக்கு நாளைக்குத் தரேன் சரியா?”

புடவைத் தலைப்பால் அம்மம்மா என் முகத்தை அழுத்தத் துடைத்து விட்டாள். ஏதோ எழுதி வாங்கிக் கொண்டு என் கையையும் பிடித்தபடி என்னைக் கூட்டிக் கொண்டு அந்த அம்மா வெளியே நடந்தாள்.
மற்ற பிள்ளைகடு யாரும் அப்போது அங்கு இல்லை. அவர் என்னை அழைத்துக் கொண்டு நேற்று சுமதி காண்பித்த அந்தப் பள்ளிக் கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அங்கேயும் ஏதோ எழுதிக் கொடுத்துவிட்டு வேறு ஒரு அறைக்குப்போய் ஒரு சீட்டைக் காண்பித்தாள். உள்ளே ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார். என்னை உள்ளே அழைத்து பெஞ்சில் உட்காரச் சொன்னார். அங்கே நிறைய ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் உட்கார்ந்திருந்தார்கள். அவர் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் பெல்லடிக்கும் சத்தம் கேட்டது. அவர் வெளியே போனார். எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள். ஒரு பெண் வந்து என்னிடம் பேர் கேட்டாள். அவள் சொல்லித்தான் அது வகுப்பறையென்றும் இப்போது வெளியே போனவர் வாத்தியார் என்றும் நான் இருப்பது முதல் வகுப்பென்றும் எனக்குப் புரிந்தது.

ஒவ்வொருத்தராக வந்து ஏதேதோ கேட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு வாத்தியார் வந்தார். போர்டில் ஏதோ படம் வரைந்தார்.
சீக்கிரத்திலேயே இன்னொரு மணியடிக்கும் சத்தமும் கேட்டது. பிள்ளைகள் ஆர்ப்பரித்து சத்தமெழுப்பியபடி வெளியே ஓடினார்கள். அந்த கூட்டத்தில் நான் மட்டும்  ஒன்றும் செய்யவேண்டிய தேவையில்லை என்பது மாதிரி தனியாக நடந்து கொண்டிருந்தேன். இந்த சுமதி எங்கே?

பள்ளிக் கட்டிடமும் தங்குமிடமும் பக்கத்துப் பக்கத்திலிருந்தது. அங்கே போய் சாப்பிட்டேன். மறுபடியும் ஒரு மரத்தடியில் வந்து உட்கார்ந்தேன். யாரோ வந்து தோள்மீது கை வைத்தார்கள். திரும்பிப் பார்த்தபோது உண்ணி அண்ணன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் எனக்கு மீண்டும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கண்களைத் துடைத்தபடி அண்ணன் என்னிடம் கேட்டான்.
சாப்டியா?”
ம்…”

நான் அழுதபடியே அண்ணனிடம் கேட்டேன், “ஏண்ணா, அம்மா என்ன இங்க தூக்கிப் போட்டுட்டுப் போனாங்க? எனக்கு அம்மாவைப் பாக்கணும்

அம்மா உன்னத் தூக்கிப் போடலம்மா, படிக்க தானே இங்க விட்டுட்டு போயிருக்காங்க
நேத்து சுமதி, யாரும் இல்லாதவங்களத்தான் இங்கக் கொண்டுவந்து விடுவாங்கன்னு சொன்னா. இது அனாதைப் பிள்ளைகள் படிக்கும் இடமாமே…”
கொஞ்ச நேரத்திற்கு அண்ணன் ஒன்றுமே பேசவில்லை. பிறகு அவன் சட்டையை இழுத்து என் முகத்தைத் துடைத்தபடி சொன்னான்

                      “நாம அனாதைகளெல்லாம் இல்லை. அம்மா வேலைக்குப் போக வேண்டாமா? உன்ன தனியா விட்டுட்டு அம்மா எப்படி வேலைக்குப் போக முடியும். அதனாலதான் இங்கக் கொண்டுவந்துவிட்டாங்க

சுமதி நம்ம அப்பா இல்லயான்னு கேட்டா, நம்ம அப்பா எங்கண்ணா?”
அப்பாநம்ம அப்பா செத்துப் போயிட்டாங்க. உனக்கு அப்ப மூன்றரை வயசுதான் ஆயிருந்திச்சு. நமக்கு அம்மா மட்டும்தான் இருக்காங்க. அம்மா ரொம்ப பாவம்மா. நாம படிச்சு பெரியவங்க ஆனா அம்மாவை நல்லாப் பாத்துக்கணும். அதனால நீ நல்ல புள்ளயா படிக்கணும்மா. போ பெல்லடிக்கப் போறாங்க

அண்ணன் போனான். நான் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். அப்பாவின் முகத்தை மீட்டெடுக்க மீண்டுமாய் முயற்சி செய்தேன். எங்கெங்கிருந்தோ தெளிந்தும் கலைந்தும் வரும் உருவங்களிலிருந்து வெள்ளைத் துணியிட்டு மூடிய ஒன்றின் முன் அமர்ந்து அம்மா பெருங்குரலெடுத்து அழுதது நினைவிற்கு வருகிறது.
அதுவாகயிருந்தாரா அப்பா? நாற்காலியில் உட்கார்ந்து வாசிக்கும் அப்பாவின் முகத்தை, வெள்ளைத்துணியில் புதைத்து வைத்திருக்கும் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முயற்சித்தேன். சட்டென ஏதோ சத்தம் கேட்டு பதறிப் போனேன். வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்திருந்தது.


மீண்டும் வகுப்பில் வந்து உட்கார்ந்தபோது, யாரோ ஒரு ஆள் வந்து,  
பாக்யலஷ்மி யாரு?’  என்று கேட்டார். நான் எழுந்து நின்றேன்.
ஏதோ ஒரு பொருளை என் கைகளில் தந்துவிட்டு போனார். இது எதற்கு என்ற பாவனையில் நான் எல்லோரையும் பார்த்தேன். யாரும் எதுவும் பேசவில்லை. இன்னும் வகுப்பிற்கு வாத்தியாரும் வரவில்லை.
பள்ளி விட்டு மீண்டும் தங்குமிடத்திற்கு வந்தபோது சுமதியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. யார் யாரிடமோ விசாரித்தேன். அவளைக் காணாதபோது மரத்தடியில் வந்து உட்கார்ந்தேன். எங்கிருந்தோ சுமதி ஓடி வந்து என்னருகே அமர்ந்தாள்.
நான் ரொம்ப நேரமா உன்னைத் தேடிகிட்டிருக்கேன் பாக்யம், டீ குடிச்சியா?”

இல்ல

அய்யோ, அங்க எல்லருக்கும் டீ குடுக்கறாங்க
எனக்கு வேண்டாம்

நான் அந்தப் பொருளை எடுத்து சுமதியிடம் காண்பித்தேன்.  “இது எதுக்கு?”
அய்யே, இது தெரியாதா, இது ஸ்லேட்டும் பலப்பமும். இதில் இப்படி எழுதணும்

சுமதி எழுதிக் காண்பித்தாள்.
“நான் விளையாடப் போறேன் வரியா” என்று கேட்டாள். இல்லை என்று சொல்வதற்கு முன்பாக அவள் ஓடி விட்டிருந்தாள்.
எனக்கு எதைச் செய்யவும் தோன்றவில்லை. பிள்ளைகள் ஓடி விளையாடவும் ஒளிந்து விளையாடவும் செய்கிறார்கள். வேறு சிலர் வட்டமாக நின்று கை கோர்த்து ஏதேதோ பாடுகிறார்கள்.
சாயங்காலமானதும் மணியடித்த சத்தம் கேட்டது. எல்லோரும் உள்ளே ஓடி அடைந்தார்கள்.

பள்ளிக்கூடத்திலோ தங்குமிடத்திலோ யாரோடும் பேசவும் பழகவும் எனக்குத் தோன்றவேயில்லை. காற்று புகக்கூட இடமில்லாமல் மன இடுக்குகளில் முழுவதுமாய் அம்மா நிறைந்திருந்தாள்.
வகுப்புகள் இல்லாத நேரங்களிலும், பள்ளிக்கூடம் இல்லாத நாட்களிலும் நான் வெளி கேட்டைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன். தூரத்தில் எங்காவது அம்மாவின் முகம் தென்படுகிறதா?
வகுப்பில் சொல்லித் தருவதொன்றையும் என்னால் கவனிக்க முடியவில்லை. எப்போதும் மனசு முழுவதும் துக்கம் மட்டுமே நிறைந்திருந்தது. சாப்பிடும் போதும் தூங்கும்போதும் நிழல்போல கூடவே வந்தது. மற்ற பிள்ளைகள் எல்லோரும் ஓடியாடி விளையாடி சத்தமிட்டு பாடி ஆர்ப்பரிப்பதை வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருமுறைகூட அவர்களோடு விளையாடவோ அவர்களின் சந்தோஷத்தை பங்கு வைக்கவோ என்னால் முடிந்ததேயில்லை.
குளித்துவிட்டு சரியாகத் தலை துடைக்கத் தெரியாததாலோ என்னவோ சீக்கிரமாகவே ஜுரம் வந்தது. உடம்பு சரியில்லையென்றால் தனி அறையில்தான் அறையில் படுக்க வைப்பார்கள். இரவில் மட்டும் கூட ஒரு பெண் உடன் வந்து படுப்பாள். காய்ச்சல் அதிகமாக அதிகமாக அம்மாவிற்குத் தகவல் சொல்லிவிட வேண்டும் என்று டாக்டர்கள் அபிப்ராயப்பட்டார்கள். மறுநாளே அம்மா வந்தாள்நிறைய நாட்களின் விடுபடலுக்குப்பிறகு அம்மாவைப் பார்த்தபோது என்னால்  துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாவைக் கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதேன்.

இனி நான் குறும்பே செய்யமாட்டேன். அம்மா சொன்னதெல்லாம் கேப்பேன். என்ன இங்கிருந்து கூட்டிட்டு போயிடுவீங்களா அம்மா?”
அம்மாவும் என்னுடன் அழுகிறாள். ஒன்றும் பேசவில்லை. டாக்டர்கள் அம்மாவிடம் என்னென்னவோ சொன்னார்கள். அம்மாவை இறுகக் கட்டிக் கொண்டு நான் தூங்கிப் போயிருந்தேன்.
எப்போதோ திடுக்கிட்டுக் கண் திறந்தபோது அம்மாவைக் காணவில்லை. பக்கத்தில் நின்றிருந்த பெண்ணிடம் கேட்டேன்,  “அம்மா எங்கே?”

அம்மா போயிட்டாங்க பாப்பா. ரெண்டு நாளா நீ கண் முழிக்கவேயில்ல. இன்னக்கி ஜுரம் நல்லாவே சரியாயிடிச்சு. நீ கண் திறந்து பாத்து அழுவியோன்னு அம்மா சீக்கிரமே போயிட்டாங்க
அதோடு அம்மாவைப் பற்றின  எதிர்பார்ப்பும் காத்திருப்பும் எனக்குள்ளாகத் தீய்ந்துபோனது. இனி ஒருபோதும் என்னைப் பார்க்க அம்மா வரமாட்டாள் என்று எனக்குத் தீர்மானமாகத் தெரிந்தது. ஆனாலும் அப்போதும் அந்தச் சூழலோடு என்னால் ஒத்துப்போகவே முடியாமலிருந்தது.

மீண்டும் நிறைய நாட்களின் முடிவில் அம்மா வந்தாள். அப்போதும் நான் தாங்க முடியாமல், உடன் அழைத்துப் போகச் சொல்லி அழுதேன்.
தீரவே மாட்டேங்குது இவ துக்கம்என்று அக்கா அனாவசியமாக என் தலையில் தட்டினாள். நான் அவளுடைய கையைத் தட்டிவிட்டு, அம்மாவிடம் இன்னும் நெருங்கி நின்றபடி சொன்னேன்.
அன்னக்கி இவங்க என்ன அடிச்சாங்க தெரியுமா? ரொம்ப வலிச்சது. எனக்கு இவங்களப் புடிக்கலம்மா
அதற்கு பதிலாய் அம்மா என்னென்னவோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினாள்.

அதன்பிறகு அம்மாவை நிறைய நாட்களுக்குப் பார்க்கவே முடியவில்லை. மெல்ல மெல்ல நான் அந்தச் சூழலோடு ஒத்துபோக முயற்சி செய்தேன். ஆனால் யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். யாரோடும் சேரமாட்டேன். அதனாலேயே சில பிள்ளைகள் என்னை மிகவும் துன்புறுத்தினார்கள். தினமும் பிள்ளைகளின் அடியும் உதையும் ஏற்று தனியாய் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன். உதாசீனத்தின் உப்புச்சுவையை முழுவதுமாய் அனுபவித்த நாட்கள் அவை.
சுமதி, “அடி வாங்கிக் கொண்டிருக்காதே, நல்லாத் திருப்பிக் கொடு பாக்யம்” என்று என்னை எச்சரிப்பாள். அண்ணனிடமும் இந்த வேதனையைச் சொல்வேன்.

பரவாயில்லையாரையும் நீ அடிக்கவேண்டாம். மேட்ரன்கிட்ட சொன்னா அவங்க பாத்துப்பாங்கஎன்று அவன் சமாதானப்படுத்துவான்.


தொந்தரவு சகிக்க முடியாமல் போனபோது ஒரு பெண்ணைப் பளீரென அடித்துவிட்டேன். யாரும் எதிர்பார்க்காத, நானும் திட்டமிடாத சம்பவம். அதன் பிறகு திருப்பி அடிப்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. என்னை அடிப்பவரை முடியைப் பிடித்து குனியவைத்து முதுகில் முட்டிக்கை வைத்து ஓங்கி அடிக்கப் பழகினேன். எனக்காக  மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காகவும் நான் அடிக்கத் தொடங்கினேன். யாராவது பிள்ளைகளைத் தொந்தரவு செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டால் நான் அங்கே போய்விடுவேன்.
மற்றவர்களைப்போல விளையாடவோ சந்தோஷமாக இருக்கவோ என்னால் முடிந்ததேயில்லை. பள்ளி இல்லாத நாட்களில் ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருப்பேன். அம்மாவைப் பற்றிய நியாபகங்கள் மெல்ல மங்கத் தொடங்கினமனசுக்குள்ளாக ஒரு வைராக்கியமோ துக்கமோ இருந்ததோ? மற்ற பிள்ளைகளை அடிக்கும்போது உள் மனசில் ஏதோ பழி வாங்கும் திருப்தி ஏற்படுகிறதோ? சரியாய் சொல்ல முடியவில்லை.

என்னிலிருந்து அப்படியே வேறாகயிருந்தான் என் அண்ணன். நன்றாகப் படிப்பான். நல்ல குரலில் பாடுவான். அடக்கமான பையன். ஆண் பிள்ளையின் குணம் எனக்கும் பெண்பிள்ளையின் குணம் அவனுக்கும் வாய்த்திருக்கிறதென  டீச்சர்களெல்லாம் கிண்டல் செய்வார்கள். எப்போதாவது அக்காவைப் பார்ப்பேன். நான் பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவே மாட்டேன்.

பாலமந்திரத்தில்எல்லாவற்றிற்கும் ஒர் ஒழுங்கு இருந்தது. காலையில் ஆறு மணிக்கு எழுந்திருக்கவேண்டும். எட்டு மணிக்கு முன்னால் குளித்து தயாராக வேண்டும். எட்டரை மணிக்குள் சாப்பிட்டு ஒன்பதரைக்குள் பள்ளிக்குப் போய்விடவேண்டும். பன்னிரெண்டரைக்கு மதிய சாப்பாடு. ஒன்றரைக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கும். மாலை நான்கு மணிக்குப் பள்ளி முடியும். ஐந்தரை வரை விளையாட்டு நேரம். பிறகு கை, கால், முகம் கழுவி, விளக்கு ஏற்றி வைத்திருப்பதற்கு முன்னால் ஹாலில் எல்லோரும் குழுமி நின்று பிரார்த்தனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாட்டு. “கிருஷ்ண கிருஷ்ண முகுந்தா ஜனார்த்தனா”, நரனாய் இப்படி பூமியில் அவதரித்தாய்…..” என. எனக்கு மிகவும் பிடித்த நேரமாகயிருந்தது இது.
பல நாட்களில் காலையில் கஞ்சிதானிருக்கும். இல்லையென்றால் உப்புமா, தோசை. வாரத்தில் ஒரு நாள் கறியோ மீனோ இருக்கும். சாப்பாட்டைக்கூட நான் இஷ்டமில்லாமல்தான் சாப்பிட்டிருந்தேன்.
அனாதை விடுதியில் கொண்டு வந்து விடும்வரை அம்மாதான் எனக்கு சோறு ஊட்டுவதும் குளிக்க வைப்பதுமெல்லாம் செய்திருந்தாள். இங்கு வந்த பிறகு சோறூட்டவோ, குளிக்க வைக்கவோ, பொட்டிட்டு, மை எழுதி, தலை சீவி அலங்காரம் செய்து பார்த்து ரசிக்கவோ எனக்கு யாருமேயில்லை. துணி துவைப்பதைக்கூட பிள்ளைகளே செய்தோம். மாதங்கள் மிகவும் சிரமத்துடன் நகர்ந்தன.

ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை காபி, டிஃபனெல்லாம் சாப்பிட்ட பிறகு பிள்ளைகள் அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்படி விளையாடிப் பழக்கம் இல்லாததால் ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி ஹாலில் ஜன்னலுக்குக் கீழே படுத்திருந்தேன். ஹாலிற்கு வெளியே பெரிய வராந்தாவும் அதன் பின்னால் சமையலறையும் இருந்தன. சமையலறையிலிருந்து யாரோ காபியைக் கொதிக்க வைத்து இந்தப் பக்கத்தில் நிற்கும் ஒரு பெண்ணின் கைகளுக்கு மாற்றுகிறார்கள். சூடு அதிகமாயிருந்ததாலோ என்னவோ அந்தக் கைகளில் தவறும் காபி மொத்தமும் சிந்தாமல் சிதறாமல் ஜன்னலருகில் படுத்திருந்த என் முகத்தில் இடம் மாறுகிறது.
கொதிக்கும் காபி விழுந்து என் முகம் கொப்பளித்துப் போனது. நான் உருண்டு பிறண்டு அழுதேன். யார்யாரோ ஓடி வந்து முகத்தில் தண்ணீர் தெளித்து, விசிறி விடுகிறார்கள். வேறு யாரோ வந்து ஒரு பாட்டில் இங்க் எடுத்து முகத்தில் ஊற்றினார்கள்.
மறுநாள் காலையில் என் முகம் மொத்தமும் கொப்பளங்களால் வீங்கிப் போனது. பார்ப்பவர்கள் எல்லாம்  ‘அய்யோ நல்ல அழகு குழந்தையாச்சே’ என்று துக்கப்பட்டார்கள்
இந்த அடையாளங்கள் அப்படியே நின்று விடுமா? வளரும்போது இதுவும் சேர்ந்து வளருமா? அப்படியானால் முகம் எப்படி விகாரமாகும்! இதையெல்லாவற்றையும் விட அம்மா என்னை வந்து பார்க்கவில்லையே என்பதுதான்  என்னை அதிக துக்கத்துக்குள்ளாக்கியது. அண்ணன் என்னை பார்க்கப் வந்தபோதுதான் அம்மா டெல்லிக்குப் போய்விட்டாள் என்று தெரிய வந்தது.
என்னைத் தனியாக ஒரு அறையில் படுக்கவைத்தார்கள். கொப்பளங்கள் மெதுவாகப் பழுக்கத் தொடங்கின. பயந்துபோய் யாரும் என்னிடம் வருவதில்லை. ஒரேயொரு முறை இந்திராக்கா வந்தாள். இங்க் ஊற்றி கறுத்து, வழவழவென்ற மருந்து தடவி, அது வழிந்து கிடக்கும் என் முகத்தைப் பார்த்தபோது அவளுக்கு சிரிப்பு வந்தது. என்னென்னவோ சொல்லி, சிரித்து, கிண்டலடித்துவிட்டுப் போனாள். ஆண் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லையென்றாலும் அங்கிருக்கும் சூப்பிரண்டண்ட் அம்மம்மா என்னைப் பார்க்க உண்ணியை அனுமதித்தார். அண்ணனின் வருகையும் சுமதியின் ப்ரியமும் என்னை மிகவும் ஆசுவாசப்படுத்தின. என் துணி துவைப்பதும் உடம்பைத் துடைத்து தருவதெல்லாம் சுமதி செய்தாள். ஒரு நாள் எனக்குத் துணி மாற்றவும் மருந்திடவும் சுமதி தயாரானபோது அண்ணன் உள்ளே வந்தான்.

நீ தள்ளிக்கோ, நான் உடம்பு தொடச்சி விடறேன்அண்ணன் சுமதியிடம் சொன்னான்.

என் துணியெல்லாம் மாற்றி, சுடுதண்ணீர் வைத்துத் துடைத்து, பௌடர் போட்டு, மருந்திட்டு, என் முகமெல்லாம் மருந்தால் மூடியிருந்ததால் உள்ளங்கையில் முத்தமிட்டான். சட்டென அறையிலிருந்து விலகி வெளியே ஓடினான். அவன் அழுதிருப்பான் போலிருக்கிறது. அந்த நெகிழ்வான ப்ரியத்தைப் பிறகென் வாழ்நாளில் எப்போதும் யாரிடமிருந்தும் நான் அடையவில்லை. இதோ இதை எழுதும் இந்த நிமிடம்வரை.

ஒரு மாதமானபோது முகத்தில் புண்கள் காய்ந்து உலர்ந்து நான் பழைய மாதிரியானாலும் வடுக்கள் அதிகமாகத் தெரிந்தன. அது மற்ற பிள்ளைகளை கேலி செய்ய வைத்தது. சாப்பிடுகிற இடத்தில், படுக்கையறையில், வகுப்பில் என எல்லா இடங்களிலும் யாரும் என்னோடு பேசாமல் விலகிப் போனார்கள். இதனால் நான் மேலும் மேலும் யாரையும் மதிக்காதவளாகவும் அடங்காதவளாகவும் மாறிப் போனேன். மட்டுமல்லாமல் நிர்தாட்சண்யமாக படிக்காமலும் இருந்தேன்.

மறுநாள் செய்ய வேண்டிய வீட்டு பாடங்கள் தருவார்கள். மீண்டும் பள்ளிக்கு வரும்போது எழுதிக்கொண்டு வர வேண்டும் என்று நம்பியார் சார் சொல்லுவார். ஆனால் நான் எழுத மாட்டேன். மறுநாள் வகுப்புக்குப் போவதற்கு முன்பாக கரியால் நன்றாக ஸ்லேட்டைத் துடைத்து மேலும் அட்டக் கரியாக்கி சாரிடம் கொடுப்பேன். பிறகென்ன? பெஞ்சில் ஏற்றி நிற்க வைத்து தாறுமாறாய் அடிவிழும்.
உன்னக் கொன்னுடுவேன்என்றபடி பாவாடையை உயர்த்தி மர ஸ்கேலால் தொடையில் பட்டை பட்டையாய் அடிப்பார். சில நேரங்களில் வலி தாங்க முடியாமல் வகுப்பிலேயே பாவாடையை நனைத்து விடுவேன். ஆனாலும் நான் அழ மாட்டேன். சாரையே முறைத்துப் பார்ப்பேன். சாருக்குக் கோபம் உச்சிக்குப் போய் காதைப் பிடித்துத் திருகிவிடுவார். அவர் நல்ல உயரமும், தாட்டிகமாகவும், சுண்டினால் ரத்தம் வரும் நிறத்துடனும், காது மடலெங்கும் முடியுடனுமிருப்பார். பார்க்கவே பயமாக இருக்கும். ஆனாலும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டேன்.
அம்மாவும் ஏ.வி.குட்டிமாளு அம்மாவும்
ஒரு நாள் வகுப்பு முடிந்து வரும்போது வாத்தியார் எல்லாரையும் கூப்பிட்டு,   “நாளை விடுமுறைதான். ஆனால் காலையில் குளித்து யூனிஃபார்ம் போட்டு ஒன்பது மணிக்கெல்லாம் பள்ளி வளாகத்திற்கு வர வேண்டும்என்று சொன்னார்.

சொன்னதுபோலவே எல்லோரும் பள்ளி முற்றத்தில் வரிசையாக நின்றோம். ஆரஞ்சு நிறத்திற்கும் பச்சை நிறத்திற்குமிடையில் வெள்ளையில் நீலநிறச் சக்கரம் வரைந்த ஒரு பேப்பர் துண்டை சுமதி என் சட்டையில் குத்திவிட்டுப் போனாள்.
இதென்ன?” நான் சுமதியிடம் கேட்டேன்.

இதுதான் நம் தேசியக் கொடி. இன்னக்கி நமக்குச் சுதந்திரம் கிடைத்த நாள். இன்னைக்கொரு அம்மம்மா வருவாங்க. ஒரு மந்திரியோட மனைவி அவங்க. அவங்க வந்து தோ அங்க தெரியுதே அந்தக் கொடிய மேல ஏத்திக் கட்டுவாங்க. அப்ப எல்லாரும்ஜன கன மன கதிபாடுவோம்

கொஞ்ச நேரத்தில் அங்கே வந்த ஒரு காரில் வயசான ஒரு அம்மம்மாவும் மிக அழகான ஒரு பெண்ணும் இறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் இறங்கிய பெண்ணைப் பார்த்து நான் விக்கித்துப் போய் நின்றேன்.
என் அம்மா!... அம்மா  எப்படி இவங்களோட?’
சுமதியும் அதிசயப்பட்டுக் கேட்டாள், “பாக்யம் உன்னோட அம்மாதான அது? மந்திரியோட மனைவி உங்க சொந்தக்காரங்களா?”
நான் அந்தக் கேள்வியை நேரிட்டபோதும் அதிர்ச்சியிலிருந்து விடுபடாமலேயேயிருந்தேன்.

கொடி ஏற்றும் சடங்கெல்லாம் முடிந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எல்லோரும் கலைந்து போனவுடன் பள்ளி அலுவலகத்திலிருந்து நான் அழைக்கப்பட்டேன். அங்கே அந்த அம்மம்மாவும் அழகான பெண்ணும் என் அம்மாவும் நின்றிருந்தார்கள். உண்ணியும் இந்திராவும் எங்கள் பள்ளி அம்மம்மாவும் மேட்ரனுமாக நிறைய பேர் நின்றிருந்தார்கள். வந்த அம்மம்மா என்னை அருகில் அழைத்துநல்லாயிருக்கியா? நல்லாப் படிக்கணும்என்றெல்லாம் ஏதேதோ சொன்னாள். நான் எதற்கும் பதில் பேசவில்லை. இவர்களுக்கும் அம்மாவிற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி மட்டுமே மனசு முழுக்க ஆர்ப்பரித்தபடியிருந்தது.
பிறகு சூப்ரன்டண்ட் அம்மம்மா தவிர மீதி எல்லோரும் வெளியே போனார்கள். எங்கள் மூன்று பேரைப் பற்றியும் அம்மாவிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். இந்திரா நல்ல அடக்க ஒதுக்கமான பெண் என்றும், நன்றாகப் படிப்பதாகவும் உண்ணி சுமாராகப் படிக்கிறான், ஆனால் நன்றாகப் பாடுவான் என்றெல்லாம் சொன்னார்கள். அடுத்தது என்னைப் பற்றித்தான் எனப் புரிந்தது. அம்மம்மா என்னைப் பார்த்து கேட்டார்.
பாக்யத்தப்பத்திச் சொல்லட்டா?”

நான் ஒன்றும் பேசாமல் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு நான் பிள்ளைகளை அடிப்பதையும் படிக்காமலிருப்பதையும் பற்றிய குற்றச்சாட்டுகளின் தொகுப்பு வாசிக்கப்பட்டது. அம்மம்மா என்னை சேர்த்தணைத்தபடி கேட்டார்.
பொம்பள பிள்ளைங்க எப்பப் பாத்தாலும் அடிச்சுப்பாங்களா? ஏன் இப்படி செய்யறே? இனி இப்படி செய்யக் கூடாது, சரியா? அடுத்த வாட்டி உன்னப் பாக்கும்போது நீ நல்ல பிள்ளைன்னு பேரெடுக்கணும் சரியா?”

கொஞ்ச நேரம் அம்மாவும் நாங்கள் மூன்று பேரும் முற்றத்தில் இறங்கி மெதுவாக நடந்து கொண்டே பேசினோம்.
என்னைப் பற்றிய புகார்களைக் கேட்டு அம்மா மிகவும் துக்கமுற்றவளாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். தோட்டத்திலிருந்த பெஞ்சில் நாங்கள் உட்கார்ந்தோம்.
இனி யாரையும் அடிக்கக் கூடாதும்மாஅவங்கெல்லாம் உன்னப்பத்தி சொல்லும்போது எவ்வளவு அசிங்கமா இருக்கு தெரியுமா? ம்இனி அப்படி செய்வியா?”

என்னை அடித்தால் நானும் அடிப்பேன். அடித்தால் திருப்பி அடிக்கச் சொல்லி சுமதி சொல்லியிருக்காளே
அம்மா அப்படியே அமைதியானாள். எதுவுமே பேசவில்லை.
நான் சொன்னேன் இவகிட்ட அடிதடிக்கெல்லாம் போகாதேன்னுஅண்ணன் தன் பங்குக்குச் சொன்னான்.
இவ அடங்காதவ அம்மா, ஒரு அனுசரணையும் இல்லாத பொண்ணு. படிக்கவும் மாட்டாஇந்திராக்கா சொல்வதையும் கேட்டபோது எனக்கு கோபம் சுருசுருவெனத் தலைக்கேறியது.
போடிஎன்றபடி நான் அங்கிருந்து ஓடினேன். பிறகெப்போது அம்மா போனாள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எப்போதும் உட்காரும் அந்த மரத்தடியில் போய் தனியாக உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து அண்ணன் வந்து பக்கத்தில் உட்கார்ந்தான்.
பரவாயில்ல போகட்டும் விடு. அம்மா ஒண்ணும் உன்னத் திட்டலியேபோபோய் விளையாடு

அவங்கெல்லாம் யார்ண்ணா? எதுக்கு நம்ம அம்மாகூட வராங்க?”
அண்ணன்தான் எல்லாம் சொன்னான்.
அந்த வயதான அம்மா பெயர் ஏ.வி.குட்டிமாளு அம்மாவென்றும், கோழிப்புரத்து மாதவ மேனனின் மனைவியென்றும், மாதவ மேனன் இப்போது மந்திரியென்றும், உடன் வந்த அழகான பெண் அவர்களுடைய மகள் லஷ்மியென்றும் சொன்னான்.
இனி நான் எவ்வளவு தொந்தரவு செய்தாலும் யாரும் அடிக்க மாட்டார்கள் என்றொரு தைரியம் எனக்கு வந்தது.
எப்படியிருந்தாலும் அவர்களுடைய அவ்வப்போதான வருகை எனக்கு சாதகமாகவேயிருந்தது. அந்த அனாதை மடத்தில் என்னைப் பார்க்க மட்டுமே எப்போதும் ஆட்கள் வருகிறார்கள் என்ற கர்வமும் கூடியது.
அதன் பிறகான மாதங்களில் அம்மா வரவேயில்லை. நான் படிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லையானாலும், விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்தேன். அவ்வப்போது கொஞ்சம் பாடவும் ஆரம்பித்தேன். பெரும்பாலும் நானும் அண்ணனும் சேர்ந்தே பாடுவோம். பார்க்கக் கொஞ்சம் நிறத்துடனும் பூசின உடம்பாகவும் இருப்பதால் டீச்சர் என்னை எப்படியாவது டான்ஸ் ஆட வைக்க முயற்சித்தார்கள். எனக்கென்னவோ என் உடல் அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காது என்று தோன்றியது.
இப்படியான உதாசீனங்களிலும் காழ்ப்புணர்ச்சியிலும் வெறுப்பிலும் எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றங்களிலுமாகபாலமந்திரத்தில்என் ஒரு வருடம் கழிந்தது. பள்ளி விடுமுறை விடப்பட்டது. சுமதியெல்லாம் ஊருக்குப் போய்விட்டாள். இந்திராக்காவின் பத்தாம் வகுப்பு முடிந்ததால் இனி இங்கு தங்கிப் படிக்க முடியாது. எங்களைக் கூட்டிக் கொண்டு போகமட்டும் யாரும் வரவில்லை. விடுமுறை தீர ஒரு மாதம் இருக்கும்போது  அம்மா வந்தாள். எங்களை பாலக்காட்டிலிருக்கும் ஒரு தாய்மாமாவின் வீட்டிற்கும்மப்பாட்டு கரையிலிருக்கும்’ இன்னொரு தாய்மாமாவின் வீட்டிற்கும் கூட்டிக்கொண்டு போனாள். அம்மாவோடு இருந்த அந்த நாட்கள் பனி போல சீக்கிரமே விலகிப் போனது.