Wednesday, June 21, 2017

தவறவிட்டவைகள்


பலவிதமான வீடுகள் (நவீன மலையாள சிறுகதைகளை பற்றி ஒரு பதிவு)
பவாசெல்லதுரை

  சென்னை புத்தக கண்காட்சியில் ‘வம்சி’யில் கொஞ்சநேரம் உட்கார்ந்து, அரங்கினுள் வந்து புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் வாசகர்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்த அந்த அரைமணி நேரமும் இரண்டு மூன்று தலைப்பிலான புத்தகங்களை மட்டுமே மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுத்து வாங்கினார்கள். ஏதோ ஒரு விளம்பரம் அல்லது மதிப்புரை, அல்லது நண்பர்களின் பரிந்துரை, பிரபல எழுத்தாளனின் எனக்குப் பிடித்தது போன்ற ஒன்று அவர்களின் ஆழ்மனதில் அப்புத்தகத்தின் மீதான ஏற்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.



அவர்களின் தேர்வுக்கு நிகரான அல்லது அதைவிட சிறப்பான புத்தகங்கள் அதே ரேக்குகளில் கவனிப்பின்றியும், தொடுதலின்றியும் கிடந்தது மனதில் சொல்ல முடியாத ஏதோ ஒரு துயரத்தைத் தந்தது. உணர்வு மேலிடலை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டேன்

ஒவ்வொரு பதிப்பங்களிலும் எந்த காரணத்தாலோ, யாராலும் கடைசி வரை கவனப்படுத்தபடாத பத்து இருபது தலைப்பிலான புத்தகங்கள் கடைசி வரை அப்படியே தேங்கிவிடும். ஆனால் சிறந்த படைப்புக்கு தாமதமாகவேணும் சிறகு முளைத்து விடுகிறது. அது நேரடியாக தன் வாசகனின் மனம் தேடி பறந்து போய் அமர்ந்து கொள்கிறது.

எந்த பதிப்பகம்? யார் முன்னுரை, யார் பரிந்துரை என்றெல்லாம் இன்றுவரை ஞாபகப்படுத்தப்படா இருபது ஆண்டுகளுக்கு முன் என் மனதில் அப்படி ஒரு பெரும் சிறகடிப்போடு வந்து உட்கார்ந்த ஒரு சிறு புத்தகம் பாதசாரியின் ‘காசி’ என் நினைவு பிழையின்றி இருப்பது நிஜமெனில் அக்கதை அதற்குமுன் ‘புதுயுகம்’ பிறக்கிறது இதழில் பிரசுரமாகி இருந்தது.

என்னை பல நாட்கள் நிலைகொள்ள முடியாமல் தத்தளிக்க வைத்த படைப்பு அது. ஓடும் பெரும் நதியில் விழுந்த ஒருவன் கரைசேருவதற்கான மரண உந்துதலை ஏதோ ஒரு காட்சியில் கவனிக்கும் போதெல்லாம் மொட்டையடிக்கப்பட்ட ‘காசி என்னை நோக்கி வருவதை இன்றளவும் தவிர்க்க முடியவில்லை. அதற்கு முன் எனக்கு காசியை யாரும் அறிமுகப்படுத்தியிருக்கவில்லை. முகநூலிலோ, வலைப்பதிவிலோ அதன் அட்டைப் படத்தையோ, அதன் அவசியத்தின், திணித்தலையோ நான் பார்த்ததில்லை. எதுவுமே இல்லாமல் ஒரு வழிபோக்கன் மாதிரி காசி என் வீட்டு திண்ணையில் வந்த அமர்ந்து கொண்டான்.

அவன் அனுபவத்தை நான் வாசிக்கையில் நான் இழந்துபோன காதலை நினைவுகளால் மீட்டெடுக்க முடிந்தது. படித்து முடித்து நான் வேலை தேடி அலைந்ததெல்லாம் ஒன்றுமேயில்லையென அவன் அலைவுறல் எனக்கு சொன்னது. என் வலியை அவன் தோள்களுக்கு நான் இறக்கி வைத்தேன் அல்லது அவனே தீட்சை பெறுவது மாதிரி பெற்றுக் கொண்டான்.

தன் ஓயாத தேடுதலில் காசி ஒருநாள் திருப்பதியிலிருந்து திரும்பி வருகையில் திருவண்ணாமலைக்கு வருவான். யோகிராம்சூரத்குமாரின் சன்னதி தெரு வீட்டின் உள்பக்கம் தாழிடப்பட்ட இரும்பு கேட்டை சத்தமாய் தட்டுவான். இல்லை அவன் இயல்பாய்தான் தட்டுவான். அவனுள் அப்போது ஏறியிருந்த உக்கிரம் அவனை உள்ளிருந்து வன்மமாய் இயக்கும்.

உள்ளேயிருந்து சூரத்குமார் ஒரு கையில் தன் விசிறியோடும் மறு கையில் புகையும் சேர்மினோ வெளியே வருவார்.

‘‘என்ன வேணும்?’’

மௌனம். எத்தனை ஆண்டுகளாய் அடைகாத்த மௌனம் அது. எப்போதுமே அது ஒரு சிறந்த மொழி என்பது மாறாததாய் இருக்கிறது.

“நீ  கேட்டைத் தட்டிய விதம் சகிக்க கூடியதாய் இல்லை. போ”

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நான் யோகியைத் தேடிப் போனேன். என்ற கனவேடு கொந்தளித்த மனதிற்கு அவர் நீர் ஊற்றக் கூடும்.

மக்கள் நடமாற்றம் பெருகி வழிந்த அந்த பரபரப்பிம் நான் காசியையே நினைத்துக் கொண்டிருந்தேன். காசி எக்காலத்திலும் யாராலும் முன்னிருத்தப்பட்டதில்லை. ஆனால் என்னைப் போல பல நூற்றுக்கணக்கான வாசகர்களை அவன் உருவமின்றி அரூபமாக அலைக்கழித்துக் கொண்டிருந்தான். இருபது வருடங்கள் கடந்த இன்னும் கூட.

‘வம்சி’ புத்தக ரேக்குகளில் அடுக்கியிருந்தவைகளில் ‘பலவிதமான வீடுகள்’ என்ற அத்தொகுப்பை யாராவது ஒரு வாசகர் தொட்டுவிடக்கூடும் என்ற என் எதிர்பார்ப்பு நான் அங்கிருந்த வரை கை கூடவில்லை. அது ஒரு இளம் பெண்ணின் காதல் ததும்பி வெட்கப்பட்டு உள்ளடங்கும் மெல்லிய குரல்.

அன்றைய கண்காட்சியின் நிறைவில் நான் மீண்டும் ‘பலவிதமான வீடுகளை’ என் அறைக்கு எடுத்து வந்தேன். என் ஸ்ரிசத்தில் அது தன் முனகலை நிறுத்தியிருந்தது. அதன் வேண்டுதல் ஏதோ ஒரு மனிதனுக்கு புரிந்ததின் நிம்மதி.

அன்றைய பின்னிரவில் அப்புத்தகத்தை மூன்றாவது முறையாக திறக்கிறேன். இன்றளவும் என்னை ஆகர்ஷிக்கும் பஷீரின் ‘டைகர்’ கதையோடு அத்தொகுப்பு துவங்குகிறது. பஷீர்தான் தன் முதுமையேறிய அந்த மாமரத்தடியில் உட்கார்ந்து எத்தனை அழகாக கதை சொல்கிறார்! ஒரு மாமங்கத்திற்கான கதையை சொல்ல அவருக்கு அந்த ஈசிசேரின் சாய்மானம் மட்டும் போதுமானதாய் இருந்திருக்கிறது.


மனிதனின் குரூரங்கள், வாழ்வின் அலைகழிப்புகள், பசியில் அலைவுறும் பெருநாக்குகள் எல்லாவற்றையும் அந்த வாப்பா நமக்கு சொல்ல எந்த பிரத்யேக மெனக்கிடலும் இல்லை. பல ஆண்டுகளாய் இந்தியாவைத் தாண்டியும் அலைவுற்ற அந்த உரமேறிய கால்கள் வழி அவர் தனக்குள் சேமித்துக் கொண்ட அனுபவம் போதும் பஹீர் நமக்கு கதை சொல்ல.

அந்த இரவில் ‘டைகரை’த் தாண்டி என்னால் போகமுடியவில்லை.

அப்படியே ஓ.வி. விஜயன், எம்.டி.வி. முகுந்தன் என ஒவ்வொருவர் முன்னும், ஒரு பிச்சைக்காரனைபோல நிற்கிறேன். காத்திருந்தது போல அவர்களின் முழுக் கதவும் எனக்காக திறந்து கொள்கின்றன. என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் தாகம் தணிய அவர்கள் எனக்காக தூய சுனை நீரைப் பருகத் தருகிறார்கள்.

ஆனாலும் எந்த மனிதன் இதுவரை இதிலெல்லாம் திருப்தியடைந்து அமைதியடைந்திருக்கிறான்? அது ஒரு தற்காலிகம். மீண்டும் துடித்தெழுவதற்கான ஆயத்தம். நான் எனக்குள் விழித்திருக்கிறேன்.

அசோகன் செருவில் நவீன மலையாள இலக்கியத்தில் இவனளவிற்கு மனிதர்களின் அந்தரத்திற்குள் நுழைத்தவர்ளென சிலரையே சொல்ல முடியும்.

இத்தொகுப்பின் தனப்பே இவருடையது. சிறுகதையிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது.

அசாதரணங்கள் எப்போதும் சாதரணத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன.

நாம் அதுவரை அடைகாத்த பல விழுமியங்களை பலி வாங்கிக் கொண்டு மத்தியதர வாழ்க்கை ஒரு கௌரவத்தை நமக்கு பிச்சை போடுகிறது. அதன் பொருட்டு அது நம்மிடம் மிச்ச மீதியாகியிருக்கும் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. நம் நுகர்வு பசியை அடக்க அது எந்த விதத்திலாவது நம்மை திருடனாய், லஞ்சம் வாங்குபவனாய், சக மனிதனை ஏமாற்றுபவனாய், மனிதத் துயரங்களை முகம் திருப்பி பார்க்க கூடாதவனாய் மாற்றுகிறது.

அசோகன் செருவில்லின் ஜோசப்பும் இப்படி மாட்டிக்கொண்டவன்தான். ஆனால் அவன் தன்னிடமுள்ள எதையும் இழந்துவிடாமல், மத்தியதர வர்கத்தின் மிகப் பெரிய கனவான புதுவீடு கட்டத்துணிகிறான். அது அவனை தன் இழுப்புக்கெல்லாம் இழுத்து முடித்து வெறும் சக்கையாக்கி துப்புகிறது.

புது வீட்டில் அத்திருச்சபையின் பாதிரியார் வந்து ஜெபித்து வைத்து அவர்கள் வாழ்வை துவக்கி வைக்கிறார். களைப்பில் அவன் வெறும் தரையிலேயே படுத்து தூங்கிப் போகிறான். அடுத்த நாள் காலையிலேயும் பாதிரியாரின் குரல் மீண்டும் கேட்கிறது. தூக்க கலக்கத்தில் தெளிவின்றி அவர் கேட்ட குரல் விழிப்பு வந்ததும் துல்லியமாகிறது.

அவர் அவன் மனைவி ரெஜினாவிடம் சொல்கிறார். திருச்சபையின் இன்றைய பெரும் நெருக்கடியே கல்லறையில் நமக்கான முன் பதிவு செய்வதுதான். நீங்கள் இருவரும் எனக்கு மிக வேண்டியவர்கள் என்பதால்தான் இத்தனை அக்கறையோடு உங்களிடம் சொல்கிறேன். ஒரு கல்லறையின் இடத்திற்கு முப்பதாயிரம். உங்கள் இருவருக்கும் சேர்ந்து அறுபதாயிரம். உங்கள் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து முன்பதிவு செய்தால் ஒரு சலுகை உண்டு இருவருக்கும் சேர்ந்தே இருபதாயிரம் பாதருக்காக காபி போட்டுக் கொண்டிருந்த ரெஜினா சமையலறையிலிருந்து பெருங்குரலெடுத்து கத்துகிறாள்.

‘‘போதும் பாதர்’’ அவர்களுக்கெல்லாம் மட்டுந்தான். எதுவும் வேண்டாம். அத்தகைய ஒரு துயரமும் பதட்டமும் நிரம்பியக் குரலை அவர் அதற்குமுன் தன் ஜீவிதத்தில் கேட்டதேயில்லை. அவர் வேறந்துவிழும் மரம் போல சாய்கிறார்.

வாழ்வின் யதார்த்தம் என்பது முற்றிலும் வேறாய் இருக்கிறது. நாம் நமக்கான வீடுகளை விதவிதமாய் கட்டிக்கொண்டேயிருக்கிறோம். டைல்ஸ் பதித்து, வர்ணம் பூசி, கதவுகளை தேக்கில் இழைத்து அதை உருவாக்குகிறோம்.

அதேத் தருணத்தில் நமக்கான இன்னொரு வசிப்பிடமும் வெறும் மண் தரையில் ஆறடியில் நமக்காக உருவாகிக் கொண்டேயிருக்கிறது.

நம் பதட்டமும், கண்ணீரும் அதற்கு ஒரு பொருட்டேயில்லை. குழந்தைமையோ, வயோதிகமோ, கணவனோ, பிரியமான மனைவியே, எதுவும் அதன் கணக்கில் ஒன்றுதான்.

ரெஜினாவால் தன் குழந்தைகளுக்காக அப்படி முன்பதிவு செய்யப்படும் கல்லறையை எதிர் கொள்ள முடியவில்லை. உலகில் எந்த அம்மாவால்தான் அதை தாங்கிக் கொள்ள முடியும்?

இவைகள் எதுவுமின்றி மாடிப்படியில் விளையாடிக் கொண்டிருக்கும் எப்போதுமில்லாமல் ஒரு மகன் கைப்படியில் சறுக்கிக் கொண்டு கீழிறங்குகையில் ஜோசப் பதறிப் போய் கத்துகிறார்.

‘‘ஜாக்கிரதை’’

எப்போதாவது திருச்சூரில் அசோகன் செருவில்லை பார்க்க வாய்த்தால் முதல் வார்த்தையை எங்கிருந்தது ஆரம்பிப்பது?


‘‘ஜோசப்பின் குழந்தைங்க இப்ப எப்படி இருக்காங்க சார்?’’

நன்றி 
இம்மாத அம்ருதா