Thursday, October 31, 2013

சிங்காரக்குளம்



கருங்கற்களாலான மதில்சுவரின் மீது எப்போதோ அடிக்கப்பட்ட வெள்ளைச் சுண்ணாம்பில் பாசி படிந்து ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பிரமாண்டமான அந்த மதில் சுவரின் உட்புறம் காய்த்துத் தொங்கும் பலாக்காய்களும், பல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்களும் எந்த வெளி ஆளையும் மிரட்டும். மலையைச் சுற்றி மதில் சுவரென்பதே ஆச்சிரியமும் அச்சமுமான விஷயம்தான். மதில் சுவரை மீறி வெளியே தெரியும் இரண்டே இரண்டு விஷயங்களில் இந்த மரங்கள் ஒன்று. அதற்கு நிகராக நிற்கும் கோவில். அதற்குள்ளேதான் வேட்டவலம் ஜமீனோ, குதிரைகளோ, தானியக் கிடங்கோ, அதன் தனி ராஜ்ஜியமோ இயங்குவதாக யாரும் எளிதில் நம்பிவிட முடியாது. நகரத்தையே அடைத்த ஜமீனின் ராட்சத இரும்புக் கதவுகள் தொடர்ந்தாற்போல் அஞ்சு நிமிஷம் திறந்திருந்து யாரும் பார்த்ததில்லை.
தெற்கு மதில் சுவரோரம், எந்த ஆரவாரமுமின்றி ஆனால் உள்ளூர ஒரு பயங்கரத்தோடு ஜமீனைப் போலவே தேங்கியிருந்தது சிங்காரக்குளம். இந்தத் தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மலையிலிருந்து குளத்திற்கான வழி எது? அல்லது முழுவதுமே பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்தியைச் சிங்காரக் குளத்திற்காக வைத்திருந்தார்கள். பறத்தெருக்காரர்களைத்தவிர, காமராஜரைப் பார்த்தேன்; இந்திரகாந்தி அம்மாவைப் பார்த்தேன் என்பது போன்ற அந்த ஊர் செய்திகளின் அபூர்வங்களில் ஒன்று சிங்காரக்குளம் பார்த்த பறத்தெருக்காரர்களிள் எண்ணிக்கை.
எளநீர் குடிக்கும்போது, ‘‘சிங்காரக்கொளத்து தண்ணீ மாதிரி இனிக்கிதே’’ என்றும் ‘‘நைனார் வீட்ல வெறகு பொளந்துட்டு மத்தியான சாப்பாட்ல ரெண்டு சொம்பு சிங்காரக்கொளத்துத் தண்ணி குடிச்சேன். ரெண்டு நாள் வாய்க்கு ஒனக்கையா எதுவும் கேக்கல’’ என்பது மாதிரியும் காலனியில் அவ்வப்போது அடிப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்காரக்குளப் பேச்சு.
இப்போ மாதிரியில்லை.
இப்போ பறத் தெருவையே நாலா பிரிச்சி, பாரதி, பாரதிதாசன் தெருன்னு பேர் மாத்திட்டாங்க. ஆனா எவன் அதை கேக்கறான். மிலிட்ரிக்குப் போன வயசு பசங்க மட்டும் இந்தப் பேரில் விலாசம் எழுதி கடிதம் போட்டு சரியா வந்து சேராததனால, மறுபடி வேட்டவலம் காலனின்னே எழுதறானுங்க. ஊர் ஒலகத்துக்கு மட்டும் அது பாரதி, பாரதிதாசன் தெருவுன்னு பல்லை இளிச்சிக்கிட்டு நிக்கும்.
ஆனா இப்போ நாலு கூரை வூட்டுக்கு மத்தியில் ஒரு சீம ஓடு போட்ட வீடும் பத்து வூட்டுக்கு ஒரு மெத்தை வீடுமா கட்டுத் தள்ளிட்டானுங்க. வாத்தியாரா ஆனவன், மிலிட்டரிக்குப் போனவன், கவர்மெண்டு உத்தியோகம் பக்கம் போனவன், தலையாரி ஆனவனையும் சேத்தா எண்ணி பத்து வீடு தேறும் முழுசா மெத்தை வீடுன்னு.
அப்பவே வகையறாவுக்கு வகையறா பிரிவு போட்டு, அத்தனை அம்சமா பறத்தெருவுக்கு நடுவுல மாரியம்மன் கோயில் கட்டி, அதுக்கு வடக்கால நிக்குதே அந்த மேடை, அது அப்பா கட்டினதுதான். இப்போ சமூக நாடகம், அம்பேத்கார் கூட்டம் எல்லாம் அதுலதான். ஆனா ராத்திரில படுத்துக்க சொகமான எடம் அது. அன்னிக்கு ராத்திரி கூட்டாளிங்க கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டு, மேடையில படுத்தப்பதான் திடீர்னு பொறிதட்டுச்சு அவனுக்குச் சிங்காரக்குளத்து ஞாபகம்.
ஞாபகம் எங்க வர்றது? முன்னே பின்ன பார்த்திருந்தாதானே ஞாபகம் வர. அதைப் பேசின ஆளுங்களைப் பற்றி, மலைலதான் பொறப்பட்டு ஜமீன் வழியா கீழ எறங்குது என்ற செய்தி பற்றி, வர்ற வழியில ஜமீன் பொம்பளைங்க அதுலதான் குளிப்பாங்களாம் என்ற ஆச்சிரியம் பற்றி, அந்தக் கொளத்துக்கு ஊர்த் தெருக்காரனுங்க காவலுக்கு ஆளு போட்டு மாசு, மருவு, தீட்டு படாம காப்பாத்தி வருவது பற்றி, அந்தக் காவலாளுங்களுக்கு வேலையே வைக்காம இந்தப் பறத்தெரு பத்து, பனிரெண்டு வகையறாவுல இது வரையும் அந்தக் குளத்துல ஒரு உள்ளங்கை தண்ணி அள்ளி குடிக்காதது பற்றி… இது… இதுதான்… இதைப் பற்றின யோசனையின்போதுதான் இதயத்தில் ஏதோ புதுசாய்த் தேங்குவதை உணர்ந்தான்.
விடிந்திருந்தபோது அது கண்கள் வழியே தெறித்திருந்தது. கோபம்… ஆத்திரம்…
அன்னிக்கு காலையிலேயே தொடங்கிய பேச்சுதான். நிக்கல. நெருடல. வயது, ஆளு, வகையறா, தலக்கட்டு எந்தப் பேதமும் அவனுக்குக் குறுக்கே வரலை. எல்லார்ட்டேயும் அவன் சிங்காரக் குளத்தைப் பத்திதான் பேசிக்கொண்டிருந்தான்.
பேசிக் கொண்டிருந்தவன் ஒரு நாள் திடீர்னு பேசறத நிறுத்திட்டு, பேசினதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சதும் இதே மாரியம்மன் கோயில் மேடையில்தான்.
அதிர்ந்து போனான்.
சிங்காரக்குளப் பேச்சு அவனிடமிருந்து பலரைப் பிரித்திருந்தது இப்போது புரிந்தது. இவனைப் பார்த்துப் பார்த்து பொம்பளைகள் குசுகுசுவெனப் பேசிக் கொண்டது, சில ஆளுங்க அவனைப் பைத்தியக்காரன் கணக்கா பார்த்தது, இது வீணான வெவகாரம்னு நாட்டாருங்க அறிவுரை சொன்னது, எல்லாத்துக்குமே காரணம், ‘பறத்தெருக்காரங்களும் சிங்காரக்குளத்துல இறங்கி ஒரு கை தண்ணி குடிச்சாகணும்’ என்ற வார்த்தையின் ஆபத்துதான் அது. ஆனாலும் அப்படி, இப்படியென்று பறத்தெருவில் அம்பது, அறுபது பேர், அவன் வார்த்தைகளுக்கு ரத்தமேற்றிக் கொண்டிருந்தார்கள்.
அந்த பலமோ, பலவீனமோ, அவனைப் பறத்தெருவைத் தாண்டி வேதக்காரத் தெருவிலேயும் கால்வைக்கவும் சிங்காரத்தெருவுலேயும் கால்வைக்கவும் சிங்காரக்குளத்தைப் பற்றி பேசவும் செய்தது.
வேதக்காரத்தெரு இன்னா வேதக்காரத்தெரு. இவன் சொந்த அக்காவே அங்கதான் வாழுது. ரெண்டு தெருவுக்குமான கொள்வினை, கொடுப்பினை சகஜம். என்ன, பறத்தெருப் பொண்ணு அங்க வாழப்போச்சுன்னா புதுநன்மை எடுத்து ஞானஸ்தானம் வாங்கனுன்னு ஒத்த கால்ல நின்னு ஜெயிச்சிட்டு இருந்தாங்க வேதக்காருங்க. பறத்தெரு பசங்களும், வேதக்கார பொண்ணுங்களை மாசத்துக்கு ஒண்ணுன்னு கூட்டியாந்து தாலி கட்டிக் குடும்பம் நடத்திக்கிட்டு வாழ்க்கையால பதில் சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க.
சிங்காரக்குளப் பேச்சு வேதக்காரத்தெருவுலேயும் பயத்தைக் கௌறினாலும் பறத்தெருவுக்கு பரவாயில்லைன்னுதான் இருந்துச்சி.
அவன் அவனில் முன்னேறிக்கொண்டுதான் இருந்தான். ஓட்டம் ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்தான். அந்த ஓட்டந்தான் மார்ச் 12 அன்னிக்கு பறத்தெரு, வேதக்காரதெருவுல இருந்து மொத்தமா 15 பொம்பளைங்க சிங்காரக்குளத்துல இறங்க, தண்ணி மொள்ளுவாங்க என்பதில் போய் நின்றது.
அதன் பிறகு மார்ச் 12 நடவடிக்கையை தேசியமாக்கினான்.  நிகழப் போகும் ரத்தச்சேதம் எந்த நேரமும் நினைவில் இருந்தது. முதலில் நம்பிக்கைக்குரிய பதினைஞ்சு பொம்பளை ஆளுகளைத் தேர்ந்தெடுத்தான்.
இனி அவனில்லை. அவர்கள். பொறி, கனிய ஆரம்பித்திருந்தது.
ஊர்த் தெருவைத் தாண்டி தண்ணி எடுக்க போவப்போற பொம்பளைங்க, கூடப் போக ஆம்பள ஆட்கள், அவர்களுக்கு  ஆயுதங்கள், எல்லாமும் பறத்தெரு, வேதக்காரத்தெருவின் சகஜத்தை மீறி நடந்து கொண்டிருந்ததை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. பங்கு தந்தையைத் தவிர.
அவர்கள் மாரியம்மன் கோலில் மேடையில் படுப்பதைத் தவிர்த்திருந்தார்கள். ரகசியங்கள் கசிந்து ரத்தம் கேட்கலாம். கதவு தட்டப்படும் ஓசையில் அதிராமல் ஆனால் சகல ஜாக்கிரதையோடும்  கதவுக் கொண்டியை நீக்கி வெளியே பார்த்தான்.
எல்லாம் வேதக்காரத்தெரு ஆட்கள். எல்லார் முகங்களும் பயத்தில் தொங்கியது. ஒன்றிரண்டு முகங்களில் ஏமாற்றமும் கோபமும் தெரிந்த்தை நிலவு வெளிச்சந்தான் சொன்னது. நேரடியாக விஷயத்துக்கு வந்தார்கள்.
“நாளன்னிக்கு காலைல நடக்கப்போற நடவடிக்கைல வேதக்காரத்தெரு ஆளுங்க யாரும் கலந்துக்கல. ஒரு ரத்தக்களறிய திருச்சபை விரும்பல. நாங்க பங்குத் தந்தையை மீற முடியாது. வாழ்வோ சாவோ மானமோ மரியாதையோ எல்லாமே எங்களுக்கு அவருதான்.”
“மானம் மரியாதைக்குக் கூடவா?”
கேள்வி முடியும் முன்பே கோபத்தோடு பிரிந்தார்கள். அதன் பிறகு வீட்டுக்குள் போக முடியல. பீடியும் புகையுமாய் மாமரத்தைச் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான்.
இது நின்று விடுமா?
தலைமுறை தலைமுறையாக குனிந்த தலைகள் நிமிரவே வழியில்லயா? முதுகெலும்புகளின் நிமிர்வு காண சாத்தியமே இல்லையா?
ஒரு வேளை ஜெயிச்சிட்டா வரலாற்றின் உச்சம். இல்லை, இல்லை. இதில் பின்னடைவில்லை. இத்தனை மாத உழைப்பு, பேச்சு, கோபம் எல்லாம் நாளை மறுநாள் நிரூபணமாகியாக வேண்டும்.
ஆனால் அவன் கவலையெல்லாம் வேதக்காரத்தெருக்காரங்க நடவடிக்கையில பின்வாங்கிட்டாங்கற செய்தி பறத்தெரு சனங்களுக்கு எப்படியும் தெரிந்திடக் கூடாது என்பதுதான்.
ஆனால் விடிந்து வீட்டுக்கு வருவதற்குள் பறத்தெரு முழுக்க செய்தி பரவியிருந்தது.
அவனுடைய “அவர்களே” பெரிசாய் பயந்திருந்தார்கள்.
அவனது எந்தப் பேச்சும் எடுபடவில்லை. அன்றிரவு அவர்களில் பலர் மீண்டும் மாரியம்மன் கோயில் மேடைக்கே படுக்க வந்தார்கள். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவனுக்கு.
“என் மகனாவது சிங்காரக்குளத்துத் தண்ணி அள்ளி குடிப்பானா?”
இதுவரை எதுவுமே நடக்காதது மாதிரி அல்லது நடக்க இருந்ததை மாரியாத்தாளா பாத்து ஒதுக்கிவிட்ட மாதிரி ஆழமான உறக்கத்திலிருந்து தெரு.
ஏதோ கூச்சல் கேட்டுதான் எழுந்தான். கும்பல் கும்பலாய் ஆண்கள், பெண்கள். வேதக்காரத்தெரு ஆட்களும் கலந்திருந்தார்கள்.
“நம்ம பொண்ணுதாண்டா.”
“எத்தை வச்சி உறுதியா சொல்ற.”
“வந்தவன்தான் உறுதியா சொல்றானே!”
திகில் பரவிய முகத்தோடு சைக்கிளிலேயே உட்கார்ந்து கால்களைத் தரையில் ஊன்றி நின்றிருந்தான் ஊர்த்தெரு ஆள்.
பறத்தெரு அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. தடியும் கம்புமாய் புறப்பட்டவர்களின் இடுப்பில்கொடுவாள் உறைந்திருந்தது.
பொம்பளைங்களை வரவேண்டாமெனத் தடுத்தது கூட்டம். இதை எதிர்பாக்காதவனாகப் பெரும் அதிர்ச்சியுடன் சைக்கிளை அழுத்தினான் ஊர்த்தெருக்காரன்.
கூட்டத்தில் பொம்பளைங்களும் இருந்ததை யாரும் கட்டுப்படுத்த முடியாமல் போய்க்கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த ஊரே சிங்காரக் குளக்கரையில் நின்றிருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது.
 கும்பல் அருகில் போனபோது பெரும் அதிர்ச்சியும் பயமும் காற்றில் அலைமோதியது. அதுவரை வாழ்நாளில் அவர்கள் அறிந்திராத திகில் ஒவ்வொருவரையும் கவ்வியது.
ஆம்பளைகளைத் தள்ளிவிட்டு விட்டு பொம்பளைங்கள்தான் குளத்தைப் பார்த்தார்கள். இந்த ஜென்மத்தில் இந்தக் குளத்தை முதன்முதலாய்ப் பார்க்கின்றார்கள்.
குளத்தில் வடக்கால ஓரத்தில் எந்தச் சலனமுமின்றி பாவாடை தாவணியோடு ஒரு பெண்ணின் பிணம் மிதந்து கொண்டிருந்தது.
“நம்ம காத்தவராயன் மக மல்லிகாடா,” அமைதியைக் கிழித்து எழுந்த குரலில் நடுக்கம் இருந்தது.
ஒட்டுமொத்தக் கூட்டமும் குரல் வந்த திசையை நோக்கித் திரும்ப, அவனுக்குப் பொறி தட்டிற்று.
இன்னிக்குக் காலைல குளத்தில் இறங்கித் தண்ணீர் எடுக்க பெயர் கொடுத்திருந்த மல்லிகா!
அழுதுவிடக் கூடாது. வெடித்துவிடக் கூடாது.
சொல்லமுடியாத மௌனத்திலிருந்தான்.
பறத்தெருக்கூட்டம் யாருக்காகவும் காத்திராமல் தபதபவென சிங்காரக்குளத்தில் இறங்கிப் பிணத்தைத் தூக்கியது.
ஒருதலைமுறை கனமாய்ப் பிணம் கனத்தது.



வாரி அனணத்துக்கொண்ட பத்திரிகைகள்



 
மஞ்சேரியில் நிகழ்ந்த என் புத்தக வெளியீட்டின் போது அநியாயத்திற்கு மலையாள சேனல்களும், பத்திரிகைகளும் அந்நிகழ்வையும் என் பேட்டியையும் பதிவு செய்திருந்தன. எல்லோருக்கும் நன்றி. 

மாத்யமம்  அக்டோபர் 27.2013


மாத்ருபூமி அக்டோபர் 27.2013

 மாத்யமம் அக்டோபர் 28.2013
மாத்ருபூமி 28.2013
  மலையாள மனோரமா அக்டோபர் 27.2013

Tuesday, October 29, 2013

மஞ்சேரிவரை


நான் எழுதிய எல்லா நாளும் கார்த்திகை அதே பெயரில் டாக்டர் ரகுராம் (இவர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்) அவர்களால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கோழிக்கோடு ராஸ்பெரி பப்ளிஷர்களால் பதிப்பிக்கப்பட்டு 26.10.2013 சனிக்கிழமை மாலை மஞ்சேரி Wood Bine ஆடிட்டோரியத்தில் அதன் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(மஞ்சேரி, பாலக்காட்டிற்கும், கோழிக்கோட்டிற்குமிடையே உள்ள சிறுநகரம்)
வெள்ளிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு மூன்று கார்களில் என் பதினெட்டு நண்பர்களோடு புறப்படும்போதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. வழியில் அரூர் ஸ்வேதா ஓட்டலின் அசைவ உணவை வைத்தே பயணம் தீர்மானிக்கப்பட்டது. ஒரு சதவீதமும் ஏமாற்றாமல் அந்த ஹோட்டலில், மட்டன் குழம்பு, ஒண்ணுக்குள்ள ஒண்ணு (பரோட்டாவில் உடைத்து ஊற்றிய முட்டை) நாட்டுக்கோழி வறுவல், போட்டிக்கறி, தலைக்கறி, கல்தோசையென எங்கள் ருசி அகலமாகிக் கொண்டே போனது. மதிய சாப்பாடு தேவையில்லையென எல்லாருமே அப்போதே முடிவு செய்திருந்தோம்.
என் மகன் வம்சியும், மானசியும் அவர்களுக்கு பிடித்தமான அம்மம்மா, பாஸ் அண்ணன், அஜிதன் (எழுத்தாளர் ஜெயமோகனின் மகன்) இவர்கள் பயணித்த டவேராவைத் தேர்த்தெடுத்துக் கொண்டார்கள். தான் புதிதாய் வாங்கியிருந்த எல்லோரையும் பொறாமைப்படுத்திய சிகப்புநிற ஆடி ஏ4-ல் ஓவியர் சீனிவாசனும், நண்பன் கார்த்தியும் மாற்றி, மாற்றி ஓட்ட பயணம் குதூகலித்தது.
சேலத்தில் நண்பன் வேலுவும், ஸ்நேகிதி அல்லியும் கைக்குலுக்கி பயணத்தை மேலும் உற்சாகமாக்கினார்கள்.

மாலை கோவை மருத்துவமனைக்கு எதிரில் நல்லதொரு விடுதியில் என் நண்பன் அக்னி நந்து நான்கு விசாலமான அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இரவு குளித்து முடித்ததும் உரையாடல் ஆரம்பித்தது. மொழிபெயர்ப்பாளர்   ஜி. குப்புசாமி தன் மனைவி நர்மதாவை ஷைலஜா, ஜெயஸ்ரீ அறைக்கு அனுப்பிவிட்டு எங்களோடு சங்கமித்துக் கொண்டார்.
முப்பது மில்லிக்கும் குறைவான ஒயின் கண்ணாடி டம்ளர்களில் தேங்கி நின்றது கொள்ளை அழகு.
பேச்சு சுழன்று சுழன்று அறைக்கு வெளியே அவசரத்தில் தத்தளித்து. நான் புதிதாய் எழுதப் போகும் ஒரு கதையின் கரு எல்லோரையும் வசீகரித்தது. நான் உற்சாகமேறியிருந்தேன்.
சீனுவாசன் சாரும், கார்த்தியும், ஜெய்யும் வம்சியும் கோவை மாநகரில் ஒரு இரவு உலாவுக்குச் சென்றார்கள். அவர்களின் உலகங்களாக விதவிதமான கார்கள், பைக்குகள் இவை கோவையில் யார் யாரிடம் உள்ளன என பட்டியல்கள் அவர்களின் செல்போனுக்கு அதற்குள் தகவல்களாக வந்து குவிந்திருந்தன.
இரவு இரண்டு மணிக்கு மேல்தான் அவரவர் அறைக்கு அவர்கள் திரும்பினார்கள். நான் அடுத்த நாள் நிகழ்வுக்குப் போட வேண்டி விலையுயர்ந்த ஒரு சட்டை வாங்கி வந்திருந்தார்கள்.
என்னை சந்திக்க கோவையில் பல நண்பர்கள் வந்திருந்தார்கள். தகவல் தெரியாதவர்கள் திட்டித் தீர்த்தார்கள். தன் வாசகி யாழினியை சந்திக்க ஷைலுவும், ஜெயஸ்ரீயும் காரில் கிளம்பிப் போயி வந்தார்கள். எல்லாம் பரபரப்பான ஒரு திரைப்படக் காட்சி போல விரிந்து கொண்டேயிருந்தன.

எழுத்தாளர் சூர்யகாந்தன் தன் புகழ்பெற்ற மானாவாரி மனிதர்கள் நாவலை மறுபதிப்பு செய்யவேண்டி எங்களை சந்திக்க அறைக்கு வந்திருந்தார். என் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ராம்கோபால் இரவு உணவுக்கு எங்கள் எல்லோரையும் அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். அங்கு வரமுடியாத சூழலை நான் விவரித்ததும் அவர் தொலைபேசியை அவர் மனைவியிடம் தர, அவர் செய்து கொண்டிருக்கும் உணவு வகைகளின் பட்டியல் ஒரு நிமிடம் என் மன நிம்மதியைக் குலைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டேன். திரும்பும் வழியில் சந்திப்பதாக ஒரு பொய் வாக்குறுதியைக் கொடுத்தேன்.
கோவையிலிருந்து லீனா ஜோஸ் என்ற என் வாசகி தன் கணவருக்கு இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக என்னுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன் என மெயில் அனுப்பியிருந்தார். அவ்வளவு சிரமம் ஏன் எனக் கோவையிலேயே சந்திக்க விரும்பினேன். அதற்கு அவகாசம் தராமல் நானும் என் கணவரும் மஞ்சேரி புத்தக வெளியீட்டில் சந்திக்கிறோம் என மறுபடியும் மெயில் அனுப்பியிருந்தார்.
காலைத் தேனீருக்கு செல்வேந்திரன் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இரண்டு காரிலும் இருந்தவர்களை அவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கார், பைக் பார்த்த உற்சாகத்தில் எனக்கு வாங்கப்பட்ட சட்டையை அந்த ஷாப்பிங் மாலிலேயே விட்டுவிட்டு வந்ததை எடுக்க நாங்கள் போவதற்கும், அக்கடையைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது.
எடுத்து முடித்து நேரம் பார்க்கையில்தான் மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. லேசான பதட்டம் எங்களைத் தொற்றிக் கொள்ள, செல்வேந்திரனிடம் ஒரு தொலைபேசி மன்னிப்புக் கேட்டு மஞ்சேரி என்ற அந்த கனவு நகரத்திற்கு விரைந்தோம்.

கோவையிலிருந்து பாலக்காட்டிற்குச் செல்லும் சாலை சற்றும் குறைவில்லாமல் நம் ஊர் சுடுகாட்டிற்குப் போகும் சாலையை விடவும் கேவலமாயிருந்தது. கல்லடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உம்மன்சாண்டியும், நாளுக்கொருதரம் அமைச்சர்களை மாற்றும் அம்மாவும் இதை எப்போதாவது கவனிக்க வேண்டும் என்பதற்காக மதுக்கரை லாரி உரிமையாளர் சங்கம் தன் பணியாளர்களுடன் ஒரு கருஞ்சட்டை ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தார்கள். காரிலிருந்து மனதார வாழ்த்தினோம். கீழறங்கி ஓடி ஊர்வலத்தின் முன் நின்று கோஷம் போட நினைத்த மனதை காரின் வேகம் அடக்கியது.
பாலக்காட்டிலிருந்து மஞ்சேரி செல்லும் சாலையின் இருபுறமும் தான்தோன்றித்தனமாக வளர்த்திருந்த மரங்களும், செடிகளும், கொடிகளும், பூத்து, காய்த்து, கனித்து எங்களை வாரி உள்ளிழுத்துக் கொண்டது. ஒரு பெண்ணிடம் புதைந்து போகும் ஆணின் பரவசர மயக்க நிலை அது. மலைப்பாதைதான் அது என்றாலும் மலையேறும் உணர்வு இல்லை. கொஞ்சம் தரை, கொஞ்சம் மலையென மாறிமாறி வளைந்து, நெளிந்து அது எங்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசீகரித்தது.
டாக்டர் ரகுராம் வீட்டில் எங்கள் வருகைக்காக எடிட்டர் பீ.லெனின், வைட்ஆங்கிள் ரவிசங்கரன், தமிழ் ஸ்டுடியோ அருண் மூவரும் காத்திருந்தார்கள். அகோர பசியிலிருந்தோம். டாக்டர் ரகுராம் வீட்டில் நவநீத அக்கா எங்களுக்காக விதவிதமாய் சமைத்திருந்தார்கள். நெய்மீன் வருவல் எங்களை இன்னும் ஈர்த்தது. சாப்பிட்டு முடித்து அவசர அவசரமாக ஹோட்டல் மலபாருக்குப் போனோம். அதற்குள் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு லெனின் சாரும், ரவிசங்கரும், அருணும் மாடியிலிருந்து  கீழறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மிகுந்த களைப்பில் நானும், சீனுவாசன் சாரும் படுக்கையில் படுத்தோம். அப்படியே தரையிலிருந்து தன் இறையை உள்ளிழுத்துக் கொள்ளும் பாம்பைப்போல தூக்கம் எங்களை இழுத்துக் கொண்டது.
யாரோ எழுப்பியதை வைத்துப் பதறி அடித்து எழுந்தால் நேரம் ஆறைத் தாண்டியிருந்தது. பரபரப்பாகி தயாராகி ட்ராப்பிக்கில் மாட்டி Wood Bine  அரங்கை அடையும்போது மௌனமாக்கப்பட்டிருந்த என் தொலைபேசியைக் கவனித்தேன். ஷைலஜா இருபது முறை என்னை அழைத்திருந்தாள்.
முதல் தளத்திற்கு ஏறக்குறைய ஓடினேன். அப்பெரிய அரங்கு நிரம்பியிருந்தது.  நான் மிக மதிக்கும் மலையாக எழுத்தாளர் டி.டீ. ராமகிருஷ்ணன் என் புத்தகம் குறித்து அழகான மலையாளத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
கவிஞரும், எழுத்தாளருமான கல்பட்டா நாரயணனுக்கும், எடிட்டர் லெனினுக்கும் இடையே எனக்கான இருக்கையிலமர்ந்தேன். பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டிய நிமிடம் நெகிழ்ந்து நின்று எழுந்து கைக்கூப்பினேன். ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து கல்பட்டா நாரயணன் சங்கீதத்தையும் தாண்டிய ஒரு மொழியில் கிட்டதட்ட பாடினார். அதை கேட்டுக் கொண்டேயிருக்க மனம் ஏங்கியது. சலித்துப் போகாத காதலியின் ஆரம்பகால முத்தங்களின் போது உடல் ஒருவிதமாக முறுவலிக்குமே அப்படி.
ஆனால் கனவுகள்தான் பாதியில் அறுத்து போகுமே, கல்பட்டாவும் தன் உரையை நிறைவு செய்தார். எஸ்.ராமகிருஷ்ணனின் கதையில் வரும் ஒரு திருடன் நாட்டு ஓடுகளைப் பிரித்து களவுக்காக வீட்டிற்குள் இறங்கும்போது அந்த நிசப்தமான கணத்தைத் தாண்டி கேட்கும் மெல்லிய சத்தம் ஒரு பூசணிப்பூவின் மலரல் என அவர் முடிக்கும்போது முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கேரளாவின் மிக முக்கியமான  கதகளிக் கலைஞர் கோட்டக்கல் சசீதரன் எழுந்து நின்று கைத்தட்டினார். அவர் கண்கள் நிறைந்திருந்தை மேடையிலிருந்து கவனித்தேன்.
அடுத்து மதுரமானதொரு மலையாள மொழியில் அந்நிகழ்ச்சி தொகுப்பாளரும், மலையாளத்தில் 100 க்கும் மேற்பட்ட நவீனச் சிறுகதைகளை எழுதியிருப்பவருமான ரகுமான் கிடங்கயம் புத்தக வெளியீட்டு நிகழ்வை அறிமுகப்படுத்தினார்.
பிரசஸ்த்தி பெற்ற எழுத்துகாரன் கல்பட்டா நாரயணன் இப்புத்தகத்தை வெளியிட பிரசஸ்த்தி பெற்ற சித்திரக்காரன் கலைமாமணி என்.சீனிவாசன் இதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். ஓரமாய் நின்றிருந்த என்னை இழுத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் நிற்க வைத்து அழகு பார்த்தார் எங்கள் லெனின்.
அரங்கு கைத்தட்டிக் கொண்டேயிருந்தது. சில்ரன் ஆப் ஹெவனில் வரும் அப்பையன் முதல் பரிசு பெற்று அச்சிறு மேடைமீது நின்றிருப்பான்.
‘‘மாஸ்டர் கொஞ்சம் தலையை உயர்த்துங்க’’ என ஒரு புகைப்படக்காரனின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்ப்பான்.
நிமிர்ந்து பார்த்தேன். என்னெதிரே பத்துக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள், தங்கள் கேமராக்களில் மாறி, மாறி இதைப் போட்டிபோட்டு பதிவு செய்தார்கள். பெரும் உற்சாகம் அந்த அரங்கில் நிறைந்து நின்றது.
ஒரு கணம் என் கண்கள் கலங்கின. நான் எழுத ஆரம்பித்த அந்த முதல் நிமிஷம் ஞாபகம் வந்து போனது. பட்ட அவமானங்களில் உடல் எரிந்தது. எல்லாம் எல்லாம் சரியாகி, மொழி தெரியாத இம்மாநிலத்தில் இத்தனை நூறுபேர் என் எழுத்தின் சுவை தேடி வந்திருக்கிறார்கள். என்னை அவர்களின் பிள்ளையாய் சுவீகரிக்கிறார்கள். ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு ஞானஸ்நானத் தொட்டில்  நிறைந்த நீர் ததும்பியது.
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.
இன்னும் எழுதலாமா?

Wednesday, October 23, 2013

யேசு கதைகள் வெளியீட்டு விழா

       20.10.2013 ஞாயிற்று கிழமை மொழிப்பெயர்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ வீட்டில் நிகழ்ந்த அவர் மொழிபெயர்த்த பால் சக்காரியாவின் யேசு கதைகள் வெளியீட்டு நிகழ்வின் ஒளி வடிவம்.

நிகழ்வை ஒருங்கினைத்த நண்பன் ஜே.பி 

தீவிர கவனிப்பில் மகள் மானசி

ஏற்புரையில் கே.வி.ஜெயஸ்ரீ

அழகிய பெரியவன்

தொகுப்பை வெளியிடும் ஜெயமோகன், பிரதியை பெற்றுக்கொள்ளும் தேவதேவன்

உரையாற்றும் ஜெயமோகன்

பார்வையாளர்கள்

முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் முன்னாள் பேராயர் கிடியன் தேவநேசன்

பார்வையாளர்களின் இன்னொரு பகுதி

நான்



அரங்கு




 புகைப்படங்கள் - ஷிவாத்மா

ஜெயமோகனும் நண்பர்களும்

    சென்ற வாரம் திருவண்ணாமலையில் எங்கள் நிலத்தில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் வாசகர் வட்ட கூடுகை, சில புகைப்படபதிவுகள்.









 புகைப்படங்கள் - ஷிவாத்மா

Thursday, October 17, 2013

கேரளாவிலிருந்து நவ்யா

vk.nisagandhi@gmail.com>
Oct 14 (3 days ago)
to me
hai sir
i have read the book" ella nalum karthikai" in Malayalam
when it appeared in deshabhimani weekly, i used to read it
but then as i was studying outside, i missed some of those columns
now i am so hapi that i could experience the work in its totality
i should tell u you that i read the book in one sitting and enjoyed each episodes
the lines were warm and i cant express how much that literary world relieved me of my terrible solitude...those words has light in them..i envy the peopled world of ur creativity..and wish to see more works in future..i can understand tamil,but cant read  tamil properly..
nandri & vazhthukal

Wednesday, October 16, 2013

ஓநாய் குலச்சின்னம் – ஒரு கலந்துரையாடல்




ஜியாங்ரோங் சீன மொழியில் எழுதி ஹோவர்டு கோல்டுபிளாட் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த ‘Wolf Tottam’ தஎன்ற நாவல் தமிழில் சி.மோகனால் மொழிபெயர்க்கப்பட்டு, இயக்குநர் வெற்றிமாறானால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நாவல் வெளிவந்ததிலிருந்து அந்நாவலை பெரும்பாண்மையினரை வாசிக்கவைக்க நாங்கள் முயற்சி செய்தோம். நாவலின் பக்க அளவு, களம், மொழி இவைகளை தாண்ட முடியாத சிலர் பின் தங்கி நின்று கொண்டார்கள் (நான் உட்பட) நாவலை முழுமையாக படித்தவர்களுக்கான ஒரு கலந்துரையாடலை டயலாக் அமைப்பின் மூலமாக கடந்த ஞாயிறன்று எங்கள் நிலத்து மாமரத்தடியில் ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு இலக்கியக் கூட்டம் நடந்துவதற்கு அதைவிட நேர்த்தியான இடம் இல்லை. 20 பேர் வந்திருந்தார்கள். கவிஞர்.  நா.முத்துக்குமார், எழுத்தாளர் போப்பு, கே.வி.ஜெயஸ்ரீ, எஸ்.கே.பி. கருணா போன்றவர்கள் முழுமையாகவும், நான், தோழர். சந்துரு, ஷைலஜா, கிருஷ்ணமூர்த்தி, அமலதாஸ், உத்ரகுமார் ஆகியோர் இருநாறு, முந்நூறு பக்கங்களை தாண்டாதவர்களாகவும் இருந்தோம்.



நா. முத்துகுமாரின் கராறான எச்சரிப்பிலிருந்து நாவலின் விவாதம் விரிந்தது. அந்நாவல் முன் வைக்கும் அரசியல், விவசாய வாழ்வுக்கு எதிரானதாகவும்  மேய்ச்சல் நில வாழ்வை உன்னதப்படுத்தி மையப்படுத்துவது, அற்புதமானதொரு மொழியில் மோகன் அதைத் தமிழ்படுத்தியது, என பகல் இரண்டு மணி வரை உரையாடல் நீண்டது. போப்பு, முத்துக்குமார், ஜெயஸ்ரீ, எஸ்.கே.பி. கருணா, சந்துரு ஆகியோர் முழு ஈடுபாட்டுடன் பேசினார்.
 
ஒரு நிறைவான உரையாடலுக்கு 20 பேர் போதுமென நினைத்தேன். நிகழ்வு முடிந்து என் நண்பன் சாந்தகுமார் கைமணத்தில் தயாரான கறிச்சோறு சாப்பிட்டோம். நாவலின் விவாதம் யாரும் கோராமலேயே போப்பு மொழிபெயர்த்த ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனின் ஒப்புதல் வாக்குமூலம் நாவலுக்கு எங்களை அழைத்து போனது. இரு நாவல்களும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதை நுட்பமான வாசகர்கள் கண்டடைந்தார்கள்.