Wednesday, October 9, 2013

அமெரிக்கன் கல்லூரி

சென்ற மாதம் ‘வம்சி’ பதிப்பித்த எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு குழந்தைகள் புத்தகங்கள் வெளியீட்டு விழாவிற்கு மதுரை போயிருந்தேன். நான் வருவதறிந்து நண்பர் ஸ்டாலின் ராஜங்கம் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் ஒரு மணி நேரம் பேச அழைத்தார். அமெரிக்கன் கல்லூரிக்குள் பேசுவதென்பது என் நெடுங்கனவு. என் மதிப்பிற்குரிய உதிரிப் பூக்கள் மகேந்திரன், பாலா, ராம் என பெரும் கலைஞர்கள், பாரதி கிருஷ்ணகுமார், ரா. கண்ணன் என்ற ஆளுமைகள் அங்கிருந்து வந்தவர்கள் தான்.

அக்கல்லூரிக்கு எதிரிலேயே ஹோட்டல் நார்த் கேட் வேயில் எனக்கு அறை போடப்பட்டிருந்தது. என் நீண்ட நாள் வாசகி தமிழ்ச்செல்வி அக்கா தன் மகன் சுரேஷோடும் நண்பர்களோடும் கிட்டதட்ட இருபது பேருக்கு ஆள் வைத்து சமைத்து சாப்பாட்டை அடுக்கடுக்காய் கொண்டு வந்து என் அறையை நிறைந்தார்கள். அதைப் பார்த்த என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவுக்கு ஜீரமே வந்துவிட்டது (நிஜமாகவே) அறைக்கருகே இருந்த எல்லா நண்பர்களையும் சாப்பிட அழைந்தோம். கவிஞர் மனுஷயபுத்திரன், ஆத்மார்த்தி, இளம்பரிதி என நிறைய பேர் எங்களோடு அவ்உணவை பகிர்ந்து கொண்டார்கள்.
பாதிச் சாப்பாட்டில் பேரா. ஸ்டாலின் ராஜாங்கம் கைப்பிடித்து அக்கூட்டத்திற்கு அழைத்துப் போனார். நான் படித்த டேனிஷ் மிஷன் பள்ளியின் நீட்சி போல அச்சிவப்பு கட்டிடங்கள் மரச்செறிவினூடே என்னை வரவேற்றது. ஒவ்வொரு மர பருண்மையிலும் கயிறுகட்டி என் பெயரெழுதி தட்டி போர்டு வைக்கப்பட்டிருந்தது. கருங்கல் படிக்கட்டேறி மேல்மாடியின் அவ்விசாலமான அரங்கை சமீபித்தபோது இருநூறு பேர் சுமார் ஒரு மணி நேரமாக எனக்காகக் காத்திருந்தார்கள். ஸ்டாலின் அவசரம் புரிந்தது.

தமிழ் வாத்தியார்களால் எப்போதுமே முடியாத ஒரு நிமிடமும் வீணாக்கபடாமல் நான் பேச அழைக்கப்பட்டேன். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிமுக உரை என்னை கூச்சப்பட வைத்தது.
பட்டமேற்படிப்பு, M.Phil., Ph.d படிக்கும் மாணவர்கள், அவர்களின் பேராசிரியர்கள், தட்டிபோர்டு கண்டு வந்த மற்ற துறை பேராசிரிய, மாணவர்கள் இவர்கள் மட்டுமே பார்வையாளர்கள்.
என் கதைகளிலிருந்து ‘சத்ரு’, ‘வலி’, ‘நீர்’ ஆகிய மூன்று கதைகளை மட்டுமே மையப்படுத்தி ஒன்றரை மணி நேரம் பேசினேன். கிட்டதட்ட அவர்கள் உறைநிலையிலிருந்தார்கள். அதில் பெரும்பாலோர் என்னை முழுதும் வாசித்திருந்தார்கள். அதுமட்டுமே என் உரையை அத்தனை அமைதியாய் கேட்கவைத்தது.
பேராசிரியர் பூமிச்செல்வன், ஏற்கனவே தான் தொகுத்த திருடர்களைப் பற்றிய தமிழ் கதைகளுக்கு என் ‘சத்ரு’வை கேட்டு வாங்கியிருந்தார். இக்கூட்டம் முடிந்ததும் அதற்கு ‘வலி’யைத் தரமுடியுமா? என கேட்டார். கோணங்கியின் ‘தா’வரையிலான அவர் வாசிப்பு என்னை நானறிந்த தமிழ்ப் பேராசியர்களின் போதாமையோடு ஒப்பிட வைத்தது.

என் கதைகள் அக்கல்லூரியின் ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்கள் அரங்கிற்கு வெளியே வந்து புத்தகத்தில் கையெடுத்துக் கேட்டார்கள். மழைபெய்து முடிந்திருந்த அம்மாலையில் தட்டி போர்டுகள் சுமந்த அப்பெருமரங்களைக் கவனித்தேன். மழை நீர் பட்டு என் பெயர் அழியாமல் இருந்தது.

No comments:

Post a Comment