Monday, June 1, 2009

ரிட்ரீட்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த தேர்தல் வேலைகளில் கடும் அதிருப்தியுற்றிருந்தேன். பணம் இத்தேர்தலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றிருந்தது. இருநூறுரூபாய் கவர்கள் ஒவ்வொரு வாக்களாருக்கும் சகல ஒழுங்கோடும் விநியோக்கப்பட்டன. பணமன்றி வேறெதுவும் தேர்தல் வெற்றிக்கு தேவையில்லை என்ற விஸ்வரூபமான உண்மையின் முன் சுருண்டுகிடந்தேன். நல்ல வேளையாக அன்றுதான் நான் விபத்துக்குள்ளாகி அதை சாக்குவைத்து ஓட்டுபோட போகாமலிருந்தேன். ஏனோ சமீபத்தில் நான் சந்தித்த எல்லா நிகழ்வுகளுமே என்னை ஒரு தோல்வியுற்றவனாக்கி அறையில் அடைந்து கிடக்கும் முடமான மனநிலைக்கு தள்ளி யிருந்தன.

தேர்தல் முடிவுகள் வந்த மூன்றாம் நாள் காலை ஈரோட்டிலிருந்து டாக்டர் ஜீவா தொலைபேசியில் அழைத்து அரைமணி நேரம் பேசினார். ஒரு கண்ணாடியின் முன் நின்று எனக்கு நானே தனிமையில் பேசிக்கொள்வது மாதிரியான பேச்சு அது. சமீப நாட்களில், எந்த நண்பர்களிடமும் இத்தனை ஆத்மார்த்தரீதியான உரையாடல் வாய்க்கவில்லை.

திமுகவின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி மக்களுக்கு உண்டெனினும், அதற்கு மாற்றாக ஜெயலலிதாவையும், ராமதாசையும், வைகோவையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இத்தேர்தலில் பேசிய ஜெயலலிதாவின் உரையை பெரிதும் நாடகத்தன்மையானது என்றே பெரும்பாலான மக்கள் உள்வாங்கினார்கள். மதுவிற்பனை, மணல் கொள்ளை போன்ற சமூகக்கேடுகளுக்கு எதிராக ராமதாஸ் பேசினபோதும், பெரும்பாலான ஊர்களில் இதை அவர் கட்சிக்காரர்களே செய்வதை மக்கள் கண்னெதிரே பார்க்கிறார்கள். உண்மைக்கு வெகுதொலைவில் நின்று இவர்கள் உரக்க சத்தமிட்டது சாதராண மக்களுக்கு கேட்கவேயில்லை. இத்தருணத்தை திமுக மிகச்சரியாக அறுவடை இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தது. இடதுசாரிகளின் அணிமாறும் காரணிகளாக கொள்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் நடுத்தரவர்க்க படித்தவர்களாலேயே அது நிராகரிக்கபட்டது.

டாக்டர் ஜீவா,

"ஆனாலும் இடது சாரிகளின் மீதான நம்பிக்கையை மக்கள் இன்னமும் முற்றாக இழந்துவிடவில்லை. தேர்தலன்றி பிறநாட்களில் சமூக அநீதிகளுக்கு எதிரான தொடர்குரல் அவர்களுடையதுதான் என்ற நிஜத்தை இந்த தேர்தல் ஆரவாரத்தால் மறைக்க முடியாதது. ஆனால் நாமும் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்து வருகிறோமோ? இச்சமூகத்தின் மீதான அக்கறை குறைந்து வாழ்தலுக்கான அன்றாடங்களின் அவசியம் கூடிவிட்டதோ?" என அங்கலாயித்தார்.

முற்றின உரையாடலுக்குப் பின் மௌனமாய்க்கிடந்தேன். கடைசியாய் ஜீவா சொன்ன ஒரு வார்த்தையின் அழுத்தலிலிருந்து எழமுடியாத கிடத்தலது. "கிருஸ்துவர்களுக்குள் அடிக்கடி ரிட்ரீட் நடக்கும் பவா, அந்தமாதிரி ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினர்களையும் கூட்டி ரிட்ரீட் நடத்தி, செதுக்கி, கழிக்க வேண்டியவைகளைக் கழித்து, எண்ணிக்கைகளை உதிர்த்து உயிர்ப்புகளை அதிகப்படுத்தும் வேலையை உடனே மேற்கொள்ளுமா கட்சி?."

தொலைபேசிகளிள் இருபக்கமும் நீடித்த மௌனம் பெருமூச்சாய் மாறி அடங்கியது.

4 comments:

  1. எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அன்றைய தேர்தல் முடிவுகள் தந்தன என்று இப்போது நினைத்தாலும் வலிக்கிறது.

    ReplyDelete
  2. டுத்து பேசாமல் தமிழர்களின் உணர்வை தூண்டும் ஈழம் பற்றி மட்டுமே பேசியதும் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம்.

    கேரளாவில் நடந்தது உல் கட்சி சண்டை தோல்வி. வங்கத்தில் கூட்டணி கணக்கு.

    அனால் வங்கத்தில் டார்ஜிலிங்கில் முதல் முறையாக பாஜகா தன கணக்கை துவக்கி இருப்பது, கம்முநிச்டுகளால் கவனிக்க பட வெட்னிய விஷயம்.



    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  3. அன்புள்ள் பவா, வணக்கம்.இடதுசாரிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வற்றிப்போய்விடவில்லை.ஜீவா கூறியுள்ளது மிகவும் நிஜம.பவா உங்களை முன்பு த.மு.எ.க.ச.நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்ப்பேன்.இப்பொழுது பார்க்க முடியவில்லை.விருதுநகர் மாநில மாநாட்டில் உங்கள் அருகில் உர்கார்ந்து சாப்பிட்டது.உங்களுக்கு என்னை அறிமுகம் இல்லை.சில மன வருத்தத்தால் தாங்கள் அமைப்பில் இருந்து விலகி இருப்பதாக சொன்னார்கள்.நாமெல்லாம் இந்த சமுக மாற்றத்துக்கான போராட்டத்தில் இருந்து விலகினால் பெருச்சாளிகள் அந்த இடத்தை அடைத்துக் கொள்ளும்.உங்களுடைய ஆளுமையைக் கண்டு திருவண்ணாமலை மகாநாட்டில் வியந்தேன்.மீண்டும் த.மு.எ.க.ச.வில் தங்களைக் காண ஆவலுடன் உள்ளேன்.

    நன்றி,
    ரெங்கசாமி ,மாநிலக்குழு உறுப்பினர்,விருதுநகர்.

    ReplyDelete
  4. அன்புள்ள் பவா, வணக்கம்.இடதுசாரிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வற்றிப்போய்விடவில்லை.ஜீவா கூறியுள்ளது மிகவும் நிஜம.பவா உங்களை முன்பு த.மு.எ.க.ச.நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்ப்பேன்.இப்பொழுது பார்க்க முடியவில்லை.விருதுநகர் மாநில மாநாட்டில் உங்கள் அருகில் உர்கார்ந்து சாப்பிட்டது.உங்களுக்கு என்னை அறிமுகம் இல்லை.சில மன வருத்தத்தால் தாங்கள் அமைப்பில் இருந்து விலகி இருப்பதாக சொன்னார்கள்.நாமெல்லாம் இந்த சமுக மாற்றத்துக்கான போராட்டத்தில் இருந்து விலகினால் பெருச்சாளிகள் அந்த இடத்தை அடைத்துக் கொள்ளும்.உங்களுடைய ஆளுமையைக் கண்டு திருவண்ணாமலை மகாநாட்டில் வியந்தேன்.மீண்டும் த.மு.எ.க.ச.வில் தங்களைக் காண ஆவலுடன் உள்ளேன்.

    நன்றி,
    ரெங்கசாமி ,மாநிலக்குழு உறுப்பினர்,விருதுநகர்.

    ReplyDelete