Thursday, June 23, 2016

ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்





பனிப்பொழிவின்போதே விழும் தூறல் அபூர்வமானது. அந்த வருடக் கார்த்திகை எல்லாவற்றையுமே மறுதலிப்பதாயிருந்தது. பனியின் மூடாப்பைத் தூறல்தான் விலக்கியது. மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்திலேயே அற்புதம் பாட்டிக்கு முழிப்பு தட்டியது. பக்கத்தில் தன் கதகதப்பிலும், வெற்றிலைச் சாறின் கார நெடியிலும் பழக்கப்பட்டு தூக்கத்திலிருந்தவனைக் கிள்ளி எழுப்பினாள். பாட்டியின் நகங்கள் அவனைத் தவிர எல்லோருக்கும் பயமூட்டக்கூடியவை. அவள், நகநுனிகளில் உலகின் பல ஜால வித்தைகளை வைத்திருந்தாள். மூன்றாவது கிள்ளலில் துடித்தெழுந்தான். இருளின் அடர்த்தியைக் குறைக்க வெளியில் ஒரு முயற்சி நடந்தேறிக் கொண்டிருக்கையில், பாட்டி தெருவில் நின்று வடக்கால் திரும்பி மலை பார்த்தாள். பனியும், தூறலும், பத்தாதென்று மேகமும் மறைந்த போதும், ஒரு சிம்னி விளக்கொளி மாதிரி தீபம் தெரிந்தது. கண்களில் தெரித்து விழுந்த ஈரத்துளிகளை வழித்துப் போட்ட கையோடு மலை நோக்கிக் கும்பிட்டாள். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து தயாராக மடிக்கப்பட்டிருந்த இரண்டு கொங்காணிகளை எடுத்து ஒன்றை அவனுக்குப் போட்டுவிட்டாள். ஒரு பெரிய கூடையை இடுப்பில் இடுக்கி சாக்கு போட்டு மூடினாள். அதில் ஒரு சிறு கூடை, ஒரு பித்தளை சொம்பு, அவள் வெத்திலை இடிக்கும் உரல், உலக்கை இருந்தது.

நடை.

அவள் நடைக்கு அவன் ஓட வேண்டியிருந்தது. தார்ரோடு இரவெல்லாம் நனைந்த ஈரத்திலிருந்தது.  செருப்பில்லாத கால்கள் ஈரத்தைத் தலை உச்சிவரை கொண்டுபோய்க் குளிரவைத்தது. அவள் உடல் நடுக்கத்திற்கு அவனை இழுத்தணைத்து நடத்தினாள்.

குறுக்கால் பிரிந்த மண்பாதையின் நுழைவிலேயே, தாறுமாறாய்  வளர்ந்திருந்த சப்பாத்திக் கள்ளிகளின் நெருக்கம் யாருக்கும் தரும் லேசான பயத்தைத் தந்தவாறிருந்தது. அற்புதம் பாட்டியின் காய்ப்பேறிய கரங்களின் நெருக்கலில் அவன் இன்னும் ஒடுங்கினான். வழியெங்கும் யாரோ  அளவெடுத்து நட்டு வைத்த மாதிரி வளர்ந்திருந்த பனைமரங்கள் அவர்களுக்கான பாதைக்கு வழிகாட்டிகளாய் நின்றிருந்தன. கேட்கும் மழை சத்தம், பறவைகளின் விடியற்கால ஆரவாரச் சப்தங்களை முற்றிலுமாக உறிஞ்சி விட்டிருந்தது.

நடை நின்று, நிலத்தில் ஊனின கால்கள்.

சனிமூலை üமென ý பிடித்தார்கள். ராத்திரி கவுண்டர் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிடும்போதே அற்புதம் பாட்டி முடிவெடுத்தாள், மொத ஆளா நெலத்துல நின்னு, சனிமூலை மென புடிக்கணும்.

பிடித்தாள்.

கறுப்பேறி பழுத்திருந்த இலைகளும், இலை உதிர்ந்து மொட்டையாய் நின்றிருந்த காம்புகளும், காய்களின் உள்முற்றலை வெளிச்சொல்லிக் கொண்டிருந்தன. குனிந்து பத்து செடி புடுங்கியவளுக்கு, மெல்ல ஒரு பயம் தன்மீது கவிழ்வதை உணரமுடிந்தது.

அவசரப்பட்டு முன்னாலேயே வந்துட்டுமோ? நாம மட்டும் தனியா நிக்கறதைப் பாத்தா எவனும் என்ன நெனப்பான்? யோசனைகளைச் சுத்தமாய்த் துடைப்பது மாதிரி முப்பது நாப்பது ஆட்கள் தூறலில் நனைந்து கொண்டே நிலமிறங்கினார்கள்.

''கெழக்கத்தி ஆளுங்களா?"

அந்த நாளின் முதல் வார்த்தை அற்புதம் பாட்டியிடமிருந்து நடுங்காமல் கொள்ளாமல் மழை சத்தத்தை மீறிக் கேட்டது. பதிலையும் அவளே ஊகித்த மாதிரி, அதற்காகவெல்லாம் காத்திருக்காமல், இதுவே அதிகம் என்பது மாதிரி குனிந்தாள். மாரணைத்து குவிந்த  செடிகளோடுதான், மீண்டும் நிமிர முடிந்தது. அவள் இருப்பை சுத்தமாக மறந்திருந்தாள்.

துவரஞ்சாலைக்குள் அடர்ந்திருந்த செடிகள், அவளின் ஆவேசமான அலசலில்  வேரோடும்சேறோடும் குவிந்தன. முன்பே அறிந்ததுதான் எனினும், பாட்டியின் இந்த வேகம் அவனை நிலை குலைய வைத்தது.

மேற்கு மரிச்சில் ஏறி நின்றுதான் திரும்பினாள். கெழக்கத்தி ஆட்கள் முக்கால் மெனை ஏறிவிட்டிருந்தார்கள்.

தூறலின் மீதே நிகழ்ந்த விடியலின் வெளிச்சம் அழகு நிரம்பியதாயிருந்தது.

புடுங்கிப் போட்டுக் குவித்திருந்த மல்லாட்டைச் செடிகள் அவனுக்கு மலைப்பாகவும், அவளுக்குச் சாயங்காலம் வரை தாங்குமா? என்றுமிருந்தது.

முழங்கை பெரிசுக்கு தடித்திருந்த ஒரு துவரஞ்செடிக்கு மேல், ஒரு பழம்புடவையை  விரித்தாள். மழை பெய்தால் மழைக்கு, வெய்யிலடித்தால் வெய்யிலுக்கு.

பெரிய்ய கூடையைப் பக்கத்தில் இருத்தி, சிறு கூடையில் காய்களை ஆய்ந்தாள். பாட்டியின் உக்கிரமான முறுக்கலில் செடிகள் காய்களைக் கூடைக்குள் உமிழ்ந்தன. அந்த வேகம் ஒரு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கக் கூடியதாயிருந்தது.

அவன், பேருக்கு ஒன்றிரண்டு காய்களைக் காம்போடு பிய்ப்பதும், கூடைக்குள் போடுவதும், பித்தளைச் சொம்பில் நிரப்புவதும், நிரம்பும் முன் பெரிய கூடைக்குள் கவிழ்ப்பதுமாக, அந்த அதிகாலையை வேடிக்கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான். பாலேறி முற்றி, பெற்ற மழையீரத்தில் முளைவிடத்தயங்கிய காய்களாகப் பொறுக்கி, பாட்டி அவனிடமிருந்து பிடுங்கிய பித்தளை சொம்பில் போட்டாள்.

அவள் கைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். செடிகளை முறுக்கி உதிரும் காய்களில், முத்துக்களை அவள் தனியே பிரிப்பதற்கு ஒரு துளியும் தனியே முயற்சிக்காது, அது தன்னால் பிரியும் என்பது போல இயங்கினாள்.

சொம்பு நிரம்பியதும் üüஉரிச்சி துண்ணுýý என்று அவனைப் பார்த்து சொன்னாள். அவன் அந்த ஈரமான காலையில் உற்சாகமேறியிருந்தான். முதல் காயை எடுத்து உரித்தான்.

ரோஸ்நிறப் பருப்பில் இளம் மஞ்சளாய் முளைவிட்டிருந்த இடத்திலிருந்து ஓர் உயிர் துடிப்பதை உணர்ந்தான். இவனின் அதிர்வுக்கு முன்பே ஒரு இளவரசியைப்போல மின்னும் அழகோடு அவள் இவன் முன் உட்கார்ந்திருந்தாள். பிரமிப்பும், ஆச்சர்யமும், லேசான நடுங்குதலும், நிறைய சந்தோஷமும் குழைய, குழைய அடுத்த காயை உரித்தான்,

இதோ இன்னொரு இளவரசி.

இரண்டு இளவரசிகளும், இவனோடு காய் உரிப்பதில் சேர்ந்து கொண்டார்கள்.

உரிக்க உரிக்க ரோஸ் நிறப் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் பேரழகோடு  ஒளிர்ந்து இவன் கண்களைக் கூச வைத்தார்கள். இந்த விந்தைகளில் சம்மந்தமில்லாதவளாக அற்புதம் பாட்டி, சிறு கூடையை நிரப்புவதும், அதைப் பெருங்கூடையில் கொட்டுவதுமாய் இயங்கிக்கொண்டிருந்தாள்.

அவள் இவனையோ, இவள் எதிரிலும் பக்கத்திலுமாக சூழ்ந்திருக்கும் பெண்களையோ கவனிக்கும் பிரக்ஞையற்று இருந்தாள்.

துவரஞ் சாலைகளுக்கூடாக நீண்ட ரயில்பெட்டி மாதிரி நின்றார்கள் அச்சிறுமிகள்.  இவன் முதல் ஆளாக நின்றான். இவன் பின்பக்கச் சட்டையைக் கொத்தாகக் கசக்கிப் பிடித்து நின்றிருந்த பெண் ராஜாம்பாள் மாதிரியே இருந்தாள். அவள் மீதிருந்து கிளம்பிய லேசான வாசனை நிரம்பிய நாற்றம் ராஜாம்பாளிடமிருந்து ஏற்கனவே சுவாசித்தது. அவர்களின் ரயில் வண்டி சத்தமின்றி புறப்பட்டது. இந்த விந்தைகளைப் பார்க்காமலேயே அற்புதம் பாட்டியைப் போலவே கிழக்கத்தி ஆட்களும் காய் ஆய்வதில் மும்முரமாயிருந்தார்கள்.

இவர்கள் ரயில், கருவேடியப்பன் கோவில் வேப்ப மரங்களுக்கிடையே தேங்கி நின்ற இருட்டில் நின்றது. இவன் முற்றிலும் பயம் உதிர்ந்து குதூகலமாயிருந்தான். ராஜாம்பாள் உடனான நாட்களில் அவனிருந்தது போலவே இந்நாள் அவனை மாற்றியது.

"இருளக் குட்டிக்கூட என்னடா வெளையாட்டு" என்று இவனை அறுத்துக் கொண்டுபோய், டவுனில் டி.வி. ஆண்டனாவில் கட்டிப் போட்டு, தினம், தினம் வீசும் காற்றில் துடித்துக் கொண்டிருந்த நூல், இன்று அறுந்து விட்டது மாதிரியிருந்தது.

அச்சிறுமிகள் சிரிப்பதும், பேசுவதுமாயிருந்தார்கள். சிலர் லேசாக பாடக்கூடச் செய்தார்கள். எல்லாருமே, ராஜம்பாளின் முக ஜாடையை ஒத்திருந்தார்கள்.

இவர்கள் ரயில் வண்டி கருவேடியப்பனின் கோவிலில், உடைந்து சிதிலமாகிக் கிடந்த குதிரைகளில் ஏறி...

அசைகிறதா? நிற்கிறதா? எனக் கணிக்கமுடியாத ஒரு நதியின் கரையில் நின்றது. நதியின் மேற்பரப்பு முழுக்க கண்ணாடியிட்டு மூடியிருந்தது மாதிரியும், எந்த விநாடியும்  இது அவர்களை உள்ளே இழுத்துக்கொள்ள சித்தமாயிருப்பது மாதிரியும் இருந்தது.

ஓடி வந்த களைப்பில் நதியின் மடியில் இளைப்பாற அவர்கள் எல்லோரும் ஒரே நேரம் முடிவெடுத்தார்கள்.

பெரும் நாக மரங்கள் நதியின் கரையோரம் அடர்ந்திருந்தன. அது கார்த்திகை மாதமானதால் பழமோ காயோ அற்று, இலைகளால் மட்டும் அடர்ந்திருந்தது. காலை வரை நீடித்திருந்த தூறலின் மிச்சங்கள் ஒன்றிரண்டாய் சொட்டிக் கொண்டிருந்தன.

சப்தமற்று ஒருத்தி, உள்ளங்கால் மட்டும் நதியில் நனைய இறங்கி, தன் பாவாடையை ஏந்தினாள். கெண்டை மீன்கள் துள்ள, துள்ள அவள் ஓடிவந்த உற்சாகம் அங்கிருந்த எல்லோரையும் தொற்றிக் கொள்ள, ஓணான்கொடி பிடுங்கி நாக மரத்தில் ஏறி, ஊஞ்சல் கட்டினார்கள்.

மரம் முழுக்க சிறுமிகள் பூத்திருந்த பேரழகை நாக மரங்களும், களங்கமற்றிருந்த நதியும் மட்டுமே அன்று பார்த்தன.

ஒவ்வொருத்தியாய் உட்கார்ந்த ஓணான்கொடி ஊஞ்சல் நதியின் கரையிலிருந்து, நதியின் நடுமுதுகுவரை அநாவசியமாகப் போய் வந்தது. அவர்கள் எல்லோருக்குமே நதியின் அக்கரைக்குப் போகும் ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

அவன் பெரும் உற்சாகத்திலிருந்தான். ஒவ்வொருத்தியாய் ஊஞ்சலில் உட்கார்த்தி வைத்து, தள்ளிவிடும் அவனின் உந்துதல் மேலும் வலுப்பெற்றிருந்தது. அதில் நதியின் அக்கரை நோக்கிய இலக்கிருந்தது.

ஒவ்வொரு சிறுமியின் ஸ்பரிசமும், ராஜாம்பாளின் தொடுதல் களையே நினைவூட்டின. நதியின் அக்கரையில் ஒவ்வொருவரும் நனைந்த உடைகளோடு விழுந்து கொண்டும், இறங்கிக் கொண்டுமிருந்தார்கள்.

மீன் பிடித்து மடியில் தேக்கி வைத்திருந்தவள், ஊஞ்சல் போகும்போது ஒரு கையில் ஓணான்கொடி பிடித்து, இன்னொரு கையில் மீன் நிரம்பிய மடி பிடித்தும் போனது  மற்ற சிறுமிகளை ஆரவாரக் கூச்சலிட வைத்தது.

எல்லோரையும் போய் சேர்த்துவிட்ட ஓணான்கொடி ஊஞ்சல் திரும்பி வராமல் நதியின் இடையில் நின்று கொண்டது. அதுவரை பீறிட்ட அவன் உற்சாகத்தை திடீரென வந்த நதிநீர் அடித்துப் போனது.

அவன் ஊஞ்சலைத் தன் பக்கமிழுக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோற்றான். நாகமரத்திலிருந்து நதியில் குதித்து நீந்துவது என முடிவெடுத்த  கணம், நதியின் ஆழமும், குணமும் அறியாமல் குதிப்பது குறித்த எச்சரிக்கையும், கண்ணாடி போர்த்தி உறங்கும் அதன் பேரமைதி  குறித்த பயமும் அவனுக்குள் முளைத்தது. எதிர்ப்பக்கச் சிறுமிகள் ஆரவாரமாய்  இவனைத் தங்கள் பக்கம் அழைத்தார்கள்.

இஞ்சின் இன்றி அவர்கள் ரயில் அறுந்து கிடந்தது. அந்த நிமிடத்தில் எது நடப்பினும் பயமற்று நதியில் குதித்தான்.

இவன் நினைத்த மாதிரி எதுவுமற்று, நதி ஒரு குழந்தையைச் சுமப்பது மாதிரி தன் முதுகில் சுமந்து, இவனுடைய ராஜாம்பாள்களிடம் இவனைச்  சேர்ப்பித்தது.

பெரும் கானகத்தின் நுழைவாயில், நதியின் அக்கரை. பருத்திருந்த மரங்களின் திண்மைகள் இதுவரை அவன் பார்த்தறியாதது. அடிக்கடி கேட்ட விநோதமான குரல்களும், கேட்டிராத சப்தங்களும், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டியிருந்த பயத்தையும் உதிரச்செய்து முற்றிலும் பயமற்ற வெளிக்கு அழைத்துச் சென்றன. மரங்களுக்கிடையே படுத்திருந்த பாறைகள், நீண்ட கவனிப்புக்குப் பிறகே பாறைகள் என ஊர்ஜிதமாயின. ஒரு மரம் முழுக்க தலைகீழாய்க் காய்த்திருந்த  வெளவ்வால்கள் அவர்களைத் தங்கள் மௌனம் நிரம்பிய உலகுக்கு அழைத்தன. அப்படிப் போக மனமற்று, சப்தமும், ஆராவாரமும், பெரும் கூச்சலும், பாடல்களும், பறவைகளின் கீச்சொலியும் நிரம்பிய உலகில் இருப்பதையே  அவர்கள் எல்லோருமே விரும்பினார்கள்.

காய்த்து, பழுத்து இருந்த காய்களையும், பழங்களையும் பறித்து எல்லோருமே அவனுக்காக மட்டுமே தந்து கொண்டிருந்தார்கள்.

ராஜாம்பாளின் உலகம் ருசிகளால் ஆனது.

வாழ்வு, அதுவரை தந்திராத சுவையை அவர்களுக்காக, வழங்கிக் கொண்டிருந்தது.

ஒவ்வொருத்தியும் அவனுக்காக மடி, மடியாய் பிரியத்தை வைத்திருந்தார்கள்.

அவர்கள் உற்சாகமும் விளையாட்டும் எல்லை கடந்திருந்தன.

கானக அமைதி கலைந்து, இவர்களால் குதூகலம் சூழ்ந்திருந்த, அதுவரை  யாரும் யாரோடும் அறிந்திராத உலகத்தில் அவர்கள் சுற்றினார்கள்.  தொடர்ந்து நீண்ட விளையாட்டில், அவர்கள்  களைப்புறாதவர்களாயிருந்தார்கள். நிமிடங்கள் கடக்க, கடக்க அவர்கள் புதுசாகிக் கொண்டே இருந்தார்கள்.   புதுப்புது    விளையாட்டுகளில்   மூழ்கிஎழுந்துஅடுத்ததற்குப்  பயணமானார்கள்.

"கண்ணாமூச்சி ஆடலாமா?"

உடனே சம்மதித்தான். மரத்தில் முகம் புதைத்து நூறுவரை எண்ண வேண்டும். பரவியிருந்த மரங்களின்  இடைவெளிகளில் அவர்கள் மறைத்தார்கள்.

மீன் நாற்றம் காட்டிக் கொடுத்துவிடுமென, செத்து, விரைத்திருந்த  மீன்களை அவன் காலடியிலேயே கொட்டிவிட்டு ஓடினாள் அவள்.

ஒண்ணு... ரெண்டு... மூணு...

நூறு... நூறு...

கானகம் முழுக்கத் தேடியும் அவர்கள் யாரும் அகப்படவில்லை. எல்லா மரப்பருமன்களும் அவர்களின் மறைவின்றிதான் இருந்தன. அவன் துக்கத்தின் ஆழத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தான்...

"ராஜாம்பா... ராஜாம்பா... ராஜாம்பா..."

அவன் குரல் சிதைந்து சுக்குநூறாகி நதியில் வீழ்ந்தது. அவர்களின் ஓணான்கொடி ஊஞ்சல் அறுந்து நதியில் மிதந்து கொண்டிருந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்த அவன் அழுகை கொஞ்ச நேரத்திலேயே கேவலாய் மாறியது. கருவேடியப்பன் கோவில் வேப்பமர நிழலில்தான் அது நின்றது.

இருட்டிவிட கொஞ்சமே பொழுதிருந்த வேளை, அற்புதம் பாட்டி ஒவ்வொரு கிணறாய் தேடியலைந்து, களைத்து, அவனைக் கண்டெத்தாள். மல்லாட்டைக்குள்ளிருந்து வந்த ரோஸ் நிற ராஜாம்பாள்கள் குறித்து, எதுவும் அறியாதவளாய் அவனைத் திட்டித் தீர்த்தாள்.

அன்று "எட்டுக்கு ஒண்ணு"  என்று அவள் ஆய்ந்த காய்கள் அளக்கப்பட்டன.

இருள் அடர்ந்து போயிருந்தபோது, அவர்கள் வீட்டை அடைந்தார்கள். அவனுக்குள் அப்போதும் லேசான விசும்பல்கள் நீண்டிருந்தன. வாசலில் நின்று பாட்டி மலையைப் பார்த்தாள். தீபம் அவளுக்கு மட்டும் மினுக்கிட்டாம்பூச்சிப்போல் மின்னி மேகத்தில் மறைந்தது. அற்புதம் பாட்டி நடுவீட்டுக்குள் நின்று, தன் பின் கொசுவலத்தைத்  தளர்த்தினாள்.

பாலேறி முற்றியிருந்த நெத்துக்களாய் மல்லாட்டைகள் உதிர்ந்தன.


அவன் அவசர அவரசமாய் ஒரு ரோஸ் நிற ராஜாம்பாளின் உயிர்ப்பின் எதிர்ப்பார்ப்போடு ஒரு காயை உரித்தான்.

Friday, June 3, 2016

எப்போதும் ஆடுகளத்தின் மையத்தில் – பிரளயன்


                                                                                                               கட்டுரை
நான் ஏன் நாத்திகனானேன்?
கற்பூரம் வாங்க காசில்லாததால்
நான் கிருஸ்துவனானேன்.
மெழுகு வர்த்திகூட இருபத்தைந்து காசாம்
இப்போது தான் முஸ்லிமானேன்.
லுங்கி கட்டாத கோபணதாரிகளை
மசூதிகள் அனுமதிப்பதில்லை
இப்போது நான் நாத்திகனானேன்.

நான் படித்த டேனிஷ் மிஷன் மேநிலைப் பள்ளியின் வாசலிலிருந்த மாவட்ட மைய நூலகத்தினுள், பரவிக்கிடந்த பெரிய மேசையில்வார்ப்புஎன்ற பெயருடன் என்னை ஈர்த்த கையெழுத்துப் பிரிதியின் அட்டைப்படத்தில் இக்கவிதையை முத்து முத்தான கையெழுத்துடன் வாசிக்க வாய்த்தது.



எழுதியவரின் பெயர் மிகச்சிறயதாகபிரளயன்என்றிருந்தது. மனம் அக்கவிஞனை தேடியலைந்தது. அவரை ஒரு மாணவனாக  நான் தூரத்திலிருந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

ஓதுவான் என்றும், சந்துரு என்றும் தன் நண்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரளயன் என் தமிழாசிரியர் சண்முக அருணாசலம் சாரின் சகோதரன் என்பது கூடுதலாக அவரை கவனப்படுத்த வைத்தது.

அவர் போகும் பாதைகளில் நின்று கவனிக்க ஆரம்பித்தேன். வாலிபத் துள்ளலோடு அவர் நகரை வலம் வந்து கொண்டிருந்த நாட்கள் அவை. ஒரு பெரும் நண்பர் கூட்டத்துடன் குதூகலமாக ஆட்டம் போட்ட ஓதுவானை நகர் இன்னமும் நினைவில் இருத்திக் கொண்டுள்ளது.

எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகத்தின் சகல திசைகளிலிருந்தும் இளைஞர்கள் அணி அணியாய் புறப்பட்டு சென்னையை நோக்கிக் குவிந்தார்கள். பெரும்பாலும் அவர்களின் மைய லட்சியம் திரைப்படம்.

திருட்டு ரயிலேறி வந்துதான் இத்தனை உயரத்தை அடைந்தேன். பிளாட்பாரத்தில் தங்கியிருந்த போதுதான் முதல் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது போன்ற சொல்லாடல்கள் கிராமப்புற சாதாரண இளைஞர்களை பெரிதும் வசீகரித்து வழி நடந்த தொடங்கியிருந்த நாட்கள் அவை.

அப்படியெல்லாம் எந்த கனவும் இன்றி, தீர்மானிக்கப்பட்ட கொள்கையோடும், வாழ்வோடும் பிரளயன் எண்பத்தி ஒன்றில் சென்னைக்கு பயணமாகிறார். வசதியான வாழ்க்கை, ஏராளமான நிலம், நகரின் மத்தியில் ரைஸ்மில் என எல்லாமும் அவருக்கு பின்னால் சென்று சென்று ஒரு கட்டத்தில் மறைந்து போகிறது. அடையப் போகும் லட்சியம் ஒன்றே தன் கண் முன் விரிகிறது.

அக்காலத்தில் என்னைப் போல எழுத ஆரம்பித்த கத்துக்குட்டிகளுக்கும், இடதுசாரி கொள்கைகளை தீ மாதிரி மனதில் எரியவிட்டு சென்னைக்கு வந்தவர்களுக்கும் தெரிந்த ஒரே இடம் 4, பிச்சுபிள்ளைத் தெரு, மைலாப்பூர், மட்டுந்தான்.

எருமைமாடுகளும், வாசலிலேயே போடப்பட்ட ஒரு நாஷ்டா கடையும் சேர்ந்த ஒரு பழைய மாடிவீட்டின் அறையும் ஒரு விரிந்த மொட்டைமாடியும் தான் பிரளயனின் வசிப்பிடம். எப்படியோ அந்த இடத்தை அவர் அடைந்த விநாடி, இதுதான் நம் வெளி என்பதை மனம் உறுதி செய்து நிலைத்து விட்டிருந்தது.

இன்று தமிழகத்தின் பெரிய ஆளுமைகளான பலரையும் முதன்முறையாக நான் இங்குதான் முதன்முறையாக சந்தித்திருக்கிறேன். அப்போது நானறிந்து இடதுசாரி கவியரங்குகளில் கவிஞர்கள் கே.சி.எஸ்.அருணாசலம், தணிகைச் செல்வன், வெண்மணி, கந்தர்வன், பிரளயன் இவர்கள்தான் தங்கள் வானுயர்ந்த குரலால் கவிதை வாசிப்பார்கள். தமிழ்த்தாயை இவர்கள் விதவிதமாய் வர்ணித்து சண்டைக்கழைக்கும் சொல்லாடல்கள் தமிழகமெங்கும் பலரை இவர்களை நோக்கி இழுத்துக் கொண்டிருந்தது.

நான் கூட பல தனிமையான தருணங்களில் தணிகைச்செல்வன் மாதிரி, கந்தர்வன் மாதிரி கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உள் மனது இவைகள் கவிதைகள் இல்லை. உரத்து சொல்லப்படும் வார்த்தை அடுக்குகள் என்றும், கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்புக்குட்படுத்த வேண்டியவைகள் அது மனதைப் புரட்டிப் போடும். ஒரு மனிதனை நிலைகுலைய வைக்கும், தன் வேர்களை நோக்கி திருப்பும், லட்சியத்தை நோக்கி நீளச் செய்யும், அவையல்ல இது. இது ஜாலம். தற்காலிகமான ஒரு எழுச்சியை இது உண்டாக்கி உதிர்ந்துவிடும் என்ற முடிவுக்கு வந்து இன்றுப் பேசப்படும் சில அபூர்வமான கவிதைத் தொகுப்புகளோடு என் உள்ளறையில் நான் என்னை அடைத்து கொண்ட ரகசிய நாட்கள் எனக்குண்டு.

இதே நாட்களில்தான், மிகச் சரியாக பிரளயனும் தன்னிலிருந்த கவிஞனை உதறி ஒரு நாடகக்காரனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டார்.



கடந்த முப்பதாண்டுகளை கூர்ந்து கவனிக்கும் ஒரு நுட்பமான விமர்சகன் ஒத்துக் கொள்ளக் கூடும், இடதுசாரி இயக்கங்களில் நமக்கு மீந்திருக்கும் ஒரே அரங்கக் கலைஞன் பிரளயன் மட்டுமே. இதை அடைவதற்கு அவரின் வலிநிறைந்த நாட்கள் நமக்குத் தெரியாதது. அவ்வப்போது மாறும் தன் குழுவுடன் பட்ட காயத்தையும் ரணத்தையும் இன்னமும் அவர் சட்டையை கழட்டிப் பார்த்தால் சிறுசிறு தழும்புகளாக நம் விரலுக்கு தட்டுப்படலாம்.

தன் சிறு அறையைத் தவிர்த்து அதன் முன் பரந்திருக்கும் மொட்டை மாடியின் காரை உதிர்ந்த தரை அக்கலைஞனுக்கு ஒத்திகைப் பார்க்கும் இடமாகவும், பகல் நேரங்களில் தன் இயக்கத்திற்கு தட்டி போர்டுகள் எழுதித் தரும் இரகசிய கிடங்காகவும்,

தன்னைப் போலவே மனதில் தீ எரிய தமிழகமெங்குமிருந்து வரும் படைப்பாளிகளும், களப்பணியாளர்களும் இலவசமாகத் தங்கிப் போகும் யாத்ரி நிவாசாகவும் 4 பிச்சுப்பிள்ளைத் தெருவை பிரளயன் மாற்றியிருந்தார்.

இன்று தமிழின் பெரும் படைப்பாளிகளாக உருமாறியிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி போன்ற சகபடைப்பாளிகள் கிழிந்த லுங்கியோடு இங்கு படுத்துக் கிடந்ததையும், உலவிக் கொண்டிருந்ததையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

சில உருவாக்கங்கள், சிதைவுகள், முயற்சிகளுக்குப் பின் பிரளயன்சென்னைக் கலைக்குழு’  என்ற முழுமையை அடைகிறார். அங்கங்கே சிறுசிறு குழுக்கள் உருவாகியும், செயல்பட்டும் மறைந்தும் போயிருந்தாலும்சென்னைக் கலைக்குழுமட்டுந்தான் இன்றளவும் நமக்கிருக்கும் அரங்கத்திற்கான ஒரே தளம்.

இதுவரை ஐம்பதற்கும் மேற்பட்ட படைப்புகளை சென்னைக் கலைக்குழு மூலம் பிரளயன் தமிழ் சமூகத்தின் முன் நிகழ்ந்தியிருக்கிறார். அவைகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் முழுமையை அடைந்தவை. இதை அடைய ஒரு குழுவாக அவர்கள் மேற் கொண்ட வலி நிறைந்த பயணங்கள்தான் முக்கியம்.

நாங்கள் வருகிறோம், மணிமேகலை, மாநகர், முற்றுப்புள்ளி, பெண், ஜேம்ஸ்பாண்டு, உரம், பவுன்குஞ்சு, பாரி படுகளம் என நீளும் இந்நாடகங்கள் மாநகர தெருமுக்குகளில் துவங்கி காமராஜர் அரங்கம் வரை நீண்டவைகள். பல லட்சம் மக்களை விதவிதமான இரவுகளில் இவர்கள் தங்கள் அரங்க படைப்பின் மூலம் தொட்டிருக்கிறார்கள். இதன் பிண்ணனியில் பிரளயனின் பணி மகத்தானது.

ஒரு கட்டத்தில் தமிழகத்தில் அறிவொளி இயக்கம் துவங்க பட்டு அதை மக்கள் மனதில் செயல்படுத்த சரியான மனிதர்களின்றி அரசு நம் முன் நிற்க வேண்டி வந்தபோது, நாம் ஒரு பெரிய லட்சியத்திற்கு துணை நிற்பதாகக் கருதி உடனே அதற்கு நம் கலைஞர்களை முழுவதுமாய் ஒப்புக் கொடுத்தோம்.



அதுவரை வகுப்பறைகள் முடிந்து பூட்டப்படாமல் கிடந்த அரசு பள்ளிகளின் அறைகளும், மைதானங்களும் மட்டுமே நம் ஒத்திகை கூடங்களாக இருந்தது மாறி திருமண மண்டபங்கள், குளிரூட்டப்பட்ட அரசு அரங்குகள் நமக்குத் தரப்பட்டன.

நமக்கான மதிய  சாப்பாட்டை அரசு வாகனங்களில் சுமந்து கொண்டு ஒரு பி.டி..வோ, தாசில்தாரோ நமக்கு பறிமாறின போது நாம் சிலிர்ப்புற்றோம். அதுவரை நாம் அனுபவத்தறியாத ஏதோ ஒரு சிறு சுகத்திற்கு நம் உடல் பழகியது.

தீஜூவாலை மாதிரி நமக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்பு மெல்ல அணைய ஆரம்பித்தது. நம் போராட்ட அரசியல் சேவை அரசியலாக மாறியது இக்காலக் கட்டத்தில்தான் என்பதை இருபது ஆண்டுகளுக்கு பின்னான இத்தருணத்திலாவது நாம் நம்மை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது என கருதுகிறேன்.

திறந்தவெளி அரசியல் அரங்குஎன்ற வடிவத்தைதான் பிரளயன் தனக்கான களமாக கொண்டு இயங்கினார். இவரின் காலத்திலேயே ந.முத்துசாமி, மு.ராமசாமி, .ராமசாமி, கருஞ்சுழி ஆறுமுகம், கே..குணசேகரன் போன்ற அரங்க கலைஞர்கள் தங்கள் படைப்புகளை அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் முன், பெரும் பொருட் செலவு செய்து தருவிக்கப்பட்ட ஒளி அமைப்புகளுடன், ஒரு அரங்கில் அரங்கேற்றிக் கொண்டிருந்த போது பிரளயன் மட்டுந்தான் தனித்து நின்று தன் நாடகங்களை புறநகர் பகுதிகளில், தெரு முக்குகளில், ஓசியில் கிடைத்த அரங்குகளில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

முருகபூபதி என்ற தனித்துவமிக்க ஒரு நாடகக்கலைஞன் இதிலிருந்தெல்லாம் வெகுதூரம் போய் வனங்களிலும், தேரிக்காடுகளிலும் தனக்கான தனி மொழியில் இயங்கிக் கொண்டிருந்தான்.

பாதல் சர்க்காரின் தொடர்பாலும், சப்தர் ஹஷ்மியின் கொலையாலும் தன் படைப்புகளை இன்னும் செதுக்கி கொள்ள முடிந்தது என்கிறார் பிரளயன்.

பதினைந்து ஆண்டுகளாக பல தென் மாநிலங்களில் பலமொழிகளில் இன்குலாப்பின்மணிமேகலையை நிகழ்த்திய போது அவர் அடைந்த பெருமிதங்கள்தான் தன் மொத்த அரங்க வாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் என நினைக்கும் பிரளயன் பத்து வருடங்களுக்கு முன் புழுதிபடிந்த தெருவிலிருந்து நடந்து அரங்கத்திற்கு வருகிறார்.

அங்கு தன் நாடக சகாக்கள் முத்துசாமியில் ஆரம்பித்து மு.ராமசாமி வரை ஏற்கனவே சிம்மாசனங்களில் உட்கார்ந்திருக்கிறார்கள். தன்னாலும் அந்த அரங்குகளில் தன் அரசியலை கலையாக மாற்ற முடியும் என்பதை நிருபிக்கிறார். அப்படி நிகழ்தப்பட்டவைதான்  ‘நாங்கள் வருகிறோம்’,  ‘போபால் 1990’,  ‘புரட்சிக்கவி’  ‘உபகதை’,  ‘வஞ்சியர்காண்டம்’  ‘பாரி படுகளம்’.

பிரளயனின் பிரவேசத்திற்குப் பின் பல நாடக ஜாம்பவான்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். அது மக்களிடமிருந்து கற்றுத் தேர்ந்து வந்த ஒரு கலைஞனின் பிரவாகம்.

உலகமயமாக்கலும், அது இந்திய விவசாயத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி, விவசாயிகளை தற்கொலை செய்யகொள்ள நிர்பந்தித்ததும் பிரளயனின்  ‘உரம்தவிர வேறு எந்த அரங்க செயல்பாடுகளிலும் ஒரு வரி செய்தியாகக்கூட பதிவாகவில்லை.

பிரளயனின் புதிய நாடக அரங்கேற்றத்திற்கு என் நண்பர்கள் காளிதாஸ், கருணாவோடு, நான் பயணித்த பயணங்கள் நினைவிற்கு வருகின்றன.

நாடகம் முடிந்து திரும்பி வருகையில் ஒரு புதிய உத்வேகமும், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதலும் எங்களை நெருக்கும். அந்நெருக்கத்தோடு நான் நின்று கொள்ள தோழர் காளிதாசும், கருணாவும்நிதர்சனா’ ‘தீட்சண்யாஎன இரு நாடகக் குழுக்களை திருவண்ணாமலையிலிருந்து துவங்கினார்கள்.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இப்படி பல மரங்கள் துளிர்க்கவே செய்தன. அதன் வேர்களில் கசியும் நீரைப் போல வெகு தூரத்திலிருந்து சென்னைக் கலைக்குழு செயப்பட்டது.


இப்போது நினைவுபடுத்தினால் சகிக்க முடியாத தன் குடும்ப ஒழுக்கத்தை, இதுவரை கெட்டப் பழக்கங்கள் என ஒழுக்கவாதிகளால் முன் வைக்கப்பட்ட எல்லாவற்றையும் சிரமேற்கொண்டு தானே செய்து, தன் குடும்பத்தை நிலை கொள்ள செய்த ஒரு இளைஞன் கடந்த முப்பதாண்டுகளில் தன் தொடர் செயல்பாடுகளால், கற்று தேர்ந்த மார்க்சிய கொள்கையால் எளிய மனிதர்கள் மீது கொண்ட வெறித்தனமான நேசிப்பால், இந்திய அரங்கமே வியந்து பார்க்கும் ஒரு ஆளுமையாக மாறிப் போனான்.
  
காமராஜர் அரங்கத்தில் என்னோடு சேர்ந்து ஆயிரத்திற்கும் மேலானோர்பாரிபடுகளம்பார்க்கிறோம். நான் மட்டும் என் சொந்த ஊர்க்காரர் பிரளயனின் தொட முடியாத உயரத்தை தனித்து நின்று அளந்துகொண்டிருந்தேன்.

அவர் படைப்புகளில் இன்றளவும் என்னை ஆக்ரமித்துக் கொண்ட ஒன்றுபெண்ஒரு பெண்ணின் ஐந்து வயதில் ஆரம்பித்து அறுபது வயதுவரை அவள் எப்படி ஒரு ஆணை சார்ந்து, வாழ நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதை வலி நிறைந்த காட்சியமைப்புகளால் நமக்கு கடத்தி நம்மை குற்ற உணர்வுக்குட்படுத்துவார் பிரளயன்.

.மங்கையும் உ.வாசுகியும் தங்கள் அபாரமான நடிப்பினால் இன்றளவும் பார்வையாளனின் மனதில் நிலைத்திருக்கிறார்கள். ஒரு கவிதையை செதுக்கியது போலான வசனங்களால் அந்நாடகத்தில் பிரியோகிக்கப்பட்ட மொழி நம்மை கலங்கடிக்கும். அமைப்புகள்கடந்தவைகள்என பட்டியலிடாமல்பெண்போன்ற ஆக்கங்களை இன்னும் அடர்த்தியான ஆண் சமூகத்தின் முன் நிகழவைத்து அவர்களை குற்ற உணர்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

எப்போதும் இடைவெளிகளை இட்டு நிரப்புவதல்ல ஒரு கலைஞனின் இடம்.

முதன்மை பேச்சாளரோ, முதன்மைத் தலைவரோ பேச ஆரம்பிக்கும்முன் சுருதி கூட்டி ஒரு இதமானச் சூழலை உருவாக்கி தருவதற்காக அல்ல கலைஞன்.

ஒரு நாகரீக சமூகத்தின் முதன்மை சிம்மாசனமே அவனுக்குத்தான்.

அழுகிக் கொண்டிருக்கும் அதன் உள் உறுப்புகளை அவன்தான் உலகிற்கு தன் கலை மூலம் முன்னறிவிக்கிறான்.

அமைப்புகள் எப்போதும் கலைஞர்களை தங்கள் கைப்பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்ளவே முளைகிறது. அது இருபக்க பாதுகாப்பை உள்ளடக்கியது. வரலாறு நெடுக பிரளயன் மாதிரியான அசல் கலைஞர்கள் திமிறிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்போ, மாநாட்டு உணவு இடைவெளிகளின் போதோ, இரவு உணவு முடிந்து தூக்கம் வரத் தாமதமாகும் முன்னிரவுகளிலோ மட்டுந்தான் நமக்கு கலைத் தேவைப்படுகிறது. அது ஒரு மனமகிழ்ச்சி யூட்டும் மூன்றாம் தர (paid) கலைஞனின் வேலை.

முற்றுப்புள்ளிமாதிரியான ரௌத்திரம் மிக்க படைப்பை உருவாக்கிய பிரளயன் போன்ற கலைஞர்களால் ஒரு போதும் அப்படி செயல்பட முடியாது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் முன் ஒரு மாலையில் பெரியார் திடலில் நான் அந்நாடகத்தைப் பார்த்தேன். எனக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அந்நாடகம் எனக்குள் ஏற்படுத்திய மன எழுச்சி சொல்லிடங்காத்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அழுகலான சமூகத்தின் துர்நாற்றத்தை அது கிளறி மேற்கொண்டு வந்தது. எத்தனை குனித்தும், எத்தனை தேய்த்தும் அது என் உடலில் இன்னொரு மேல்தோல் மாதிரி போர்த்தி கொண்டு விட்டது.

.மங்கை அந்நாடகத்தில் பெண் மருத்துவராக நடத்திருப்பார் ஒரு இன்ஸ்பெக்டருக்கும் அவருக்கும் நடக்கும் தீவிரமான விவாதம் பார்வையாளர்களை உச்சத்திற்கு கொண்டு போய் கழுத்தை நெறித்து வெறும் பிணமாக கீழே உதறும்.

அவர்கள் சவமான வீழம் கணம் அரங்கு மௌனத்தால் உறையும்.

அந்நாடகத்தில் ஒரு இடதுசாரி தலைவரின் உரை நிகழும். தோழர் வி.பி.சி.யும், W.R.வரதராஜனும் ஆற்றிய ஒரு மே தின உரையின் சுண்டக்காய்ச்சிய வடிவம் அது.

பாலியல் பலாத்காரம் குரல். செய்யப்பட்டு, கொல்லப்பட்ட போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு பிணவறையில் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு பாமரனின் மகளுக்காக நீதிகேட்டு ஒலிரும் ஒரு குரல் பெரியார் திடலையும் தாண்டி நீளும்.

தாங்க முடியாத பெரும் துயரத்தோடும், கோபத்தோடும் நான் அவ்ரங்கத்தை விட்டு வெளியேறி வெகுதூரம் வந்து தினத்தந்தி அலுவலக வாசலில் நின்று கொண்டேன். இது ஒரு வகையான தப்பித்தல் அல்லது அடைகாத்தல்.

பல அற்புதமான நிகழ்வுகளையும், வெறுக்கத்தக்க, தாங்கமுடியாத அனுபவங்களையும் தந்து கொண்டே மெல்ல நகரும் இம்மானுட வாழ்வில் சில கணங்கள் மட்டுமே ஞாபகத்தில் தங்குகிறது.

எம் பொண்ணுஎம் பொண்ணுமல்லிகா என கதறும் அத்தந்தையின் குரல் என் வாழ்நாள் முழுக்க என்னைப் பின் தொடர்கிறது. இதைத்தான் ஒரு மகத்தான படைப்பு செய்யும்.

திருவண்ணாமலையில் நடந்த ஒரு நிகழ்வில் மூன்றாம் அரங்கு பற்றிப் பேச அ.மங்கை வந்திருந்தார். மேடையிலிருந்து கீழிறங்கி வந்தவுடன்பவா பைக்கை எடுங்கஎன என் பின்னால் உட்கார்ந்து கொண்டார். மௌனமாக சாலையின் இருபக்கங்களையும் மலங்க மலங்க பார்த்துக் கொண்டே வந்தவர்,

‘‘காந்தி சில மூலைக்கு போங்க பவா’’

‘‘எங்க மங்கை?’’

‘‘நாம கலை இரவு நடத்துவோமே அந்த மூலைக்கு’’

நான் அந்த இடத்திற்கு போனபோது மணி பார்த்தேன்.

இரவு ஏழு

இருள் மெல்ல என் நகரத்தை மூடிக் கொண்டிருந்தது.

பைக்கிலிருந்து இறங்கி வெகுதூரம் பின்னகர்ந்து சென்று அத்திறந்த வெளியில் ஏதோ நிகழ்வதாக பாவித்து அதையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அருகில் போய் மங்கையைப் பார்த்தேன்.

‘‘என்னாச்சு மங்கை?’’

தன் கண்களை துடைத்துக் கொண்டே,

‘‘ஒண்ணுமில்ல பவா, இந்த இடத்தில் எத்தனை முறை என்னவெல்லாமாக மாறி நான் நடித்திருக்கிறேன். விட்டுவிலகி தூர வந்துட்ட மாதிரி இருக்கு’’

அந்நிமிடம் நான் பிரளயனை நினைத்துக் கொண்டேன்.


தூர நின்று தன் ஆடுகளத்தை ஏக்கத்தோடு பார்க்கும்படி என்றுமே நேராது அவருக்கு.

எப்போதும் ஆடுகளத்தில் மையத்திலேயே பிரளயன் இருக்கிறார்.

நன்றி 
இம்மாத செம்மலர்