Wednesday, July 27, 2016

தமிழ் நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை






ஆட்டகளத்தை விட்டகன்று வெகுதூரம் விலகிவந்து வெற்று மைதானத்தை வெறித்து பார்க்கும் ஆட்டக்காரனுக்கு மட்டுமே பழைய நினைவுகள் அலை மாதிரி மேலெழுந்து வந்து அவனை அலைக்கழிக்கும்.

நான் என் காலடியில் ஸ்பரிசத்திலிருக்கும் பந்தோடேயே என் மைதானம் புதைத்து வைத்துள்ள நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.





காலமோ, வருடமோ, தேதியோ ஒருபோதும் ஒரு கலைஞனின் நினைவுகளில் தங்குவதில்லை. எம்.டி.வி தன்இறுதி யாத்திரைநாவலில்  “வியாபாரிக்கு வெறும் எண்கள் போதும், எழுத்து எதற்கு? எனக் கேட்டு என்னை புரட்டிப் போட்டிருக்கிறார்.

எண்பதுகளின் பிற்பகுதிகளில் தமிழிலக்கியம் உச்சத்திற்கு சென்ற காலம் என்பது என் கணிப்பு. தமிழகத்தின் சகல திசைகளிலிருந்தும் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கலைஞர்களும் பெரும் உக்கிரத்தோடு இயங்கிய நாட்கள் அவை. என்னைப் போல கல்லூரியில் படித்தும், முடித்தும், வேலையற்றவர்களாக அலைந்தும் திரிந்தும் நாட்களை நகர்த்திய பலரையும் மனப்பிழற்வாளர்களாக மாற்றாமல் காப்பாற்றியது அப்போது சிறுபத்திரிகைகளில் வெளிவந்த காத்திரமான படைப்புகள் மாத்திரமே.

புது யுகம் பிறக்கிறது என்ற சிறு பத்திரிகையில் வந்த பாதசாரியின்காசிஇன்றளவும் என்னை பிறாண்டுகிறான். கோவை ஞாநியின்நிகழ்எஸ்.வி.ஆரின் ‘இனி இன்றுஎல்லாம் அப்போது தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

இவைகள் எங்களுக்குள் ஏற்படுத்திய பேரலைகள் அடங்காதவை. அதை எங்கள் சக மனிதர்களுக்கு எப்படியாவது கடத்திவிட வேண்டுமென்ற எங்கள் யத்தனிப்பே திருவண்ணாமலையில் நாங்கள் துவங்கியகலை இலக்கிய இரவுஎன்ற சிறு முயற்சி.
எல்லா பெரும்நிகழ்வுகளும், வரலாறும் இப்படி ஏதோ ஒரு மூலையில் உருவான சிறு பொறி மட்டுமே.  

ஒரு திருமண மண்டபத்தில் ஐநூறுக்கும் குறைவானர்களோடு ஆரம்பித்தது எங்கள் முதல் கலை இரவு. ஐந்தடிக்கும் குறைவான உயரமேயுடைய ஒரு ஆய்வு மாணவனாக கே..குணசேகரன் என்ற பாடகனின் பாடல்கள் பல நூறு மனிதர்களை உள்ளிழுத்து வந்தது. கையில் ஒரு உடுக்கையோடு அவன் எழுப்பிய உணர்வு பெருக்கில் அம்மண்டபம் தளும்பியது.

கொண்டாட்டமும் இசையும் நிரம்பிய அந்த இரவில்தான் எங்கள் அடுத்த நிகழ்வுக்கான நிழ்விடம் நான்கு பக்கமும் சுவர் எழுப்பப்பட்ட ஒரு மண்டபம் அல்ல என்றும், அது ஒரு திறந்த வெளி மைதானமாக பல ஆயிரம் மனிதர்களை சங்கமிக்க வைக்கும் அதன் நீளமும் அகலமும் அளவிட முடியாததாக இருக்க வேண்டும் ன்றும் முடிவெடுத்தோம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்தோம்.








எங்கள் முன் டிசம்பர் 31 என்ற தேதி கேட்பாரற்று கிடந்தது. வெற்று கொண்டாட்டங்களாலும், பீர்பாட்டில்களின் உரசும் சப்தங்களாலும், சைலன்சர் கழிற்றிவிடப்பட்ட பைக்குகள் வெளியேற்றும் சப்தத்தாலும் நிறைந்திருந்த அந்த ஒரு இரவை அர்த்தமுள்ளாதாக்க வேண்டும் என்ற எங்கள் ஒருமித்த சிந்தனை இரு மாதங்களுக்கு முன்பே வேர்பிடிக்க துவங்கிவிட்டிருந்தது.

ஊரின் எல்லா மையங்களும் தொட்டுக் கொள்ளும் காந்தி சிலை மைதானம் எங்கள் ஆட்டக்களமாக்கப்பட்டது.

இயக்கம் ஒரு மகத்தான செயலை முன்னெடுக்கும் போதும் யாரோ சில தனி மனிதர்களின் அர்பணிப்பும், செயலூக்கமும் தான் அதை முழுமையடைய வைக்கிறது.

அப்படித்தான் என்னோடு தமுஎசவுக்கு கிடைத்த இருவேறு ஆளுமைகளென 
எஸ். கருணாவையும், ஓவியர் பல்லவனையும் சொல்லலாம்.

ஓவியர்கள் சல்வடார் டாலி, பிக்காசோவில் ஆரம்பித்து ஜான் ஐசக் அருமை ராஜன், இசக்கி அண்ணாச்சி என்று விரிந்த அப்பட்டியலிருந்து ஆகச் சிறந்த ஓவியங்களையும் புகைப்படங்களையும் தேர்வு செய்வோம். அப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு ஓவியர் பல்லவனிடம் ஒப்படைக்கப்படும்.

இவர் இதை அங்கிகரீக்கிறாரா? மறுதலிக்கிறாரா? என யாராலும் அவதானிக்க முடியாததொரு மனநிலையில் அன்றிரவு ஒன்பது மணிக்கு எங்களை அவரின் கலைக் கூடத்திற்கு வரவழைப்பார்.

நானும் கருணாவும் வேலைக்கார சிறுவர்கள் போல அங்கு போய் நின்றிருப்போம்.

பத்து மணிவரை கலை, இலக்கியம், விவாதம் என நீளும். சட்டென்ற ஒரு விநாடியில் பல்லவன் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு கறுப்பு மையிட்ட தூரிகையால் கண்ணாடியில் நாங்கள் காலையில் தந்திருந்த ஓவியத்தையோ, புகைப்படத்தையோ வரைய ஆரம்பிப்பார்.

சில நிமிடங்கள்தான். ஒரு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்ட அக்காண்ணாடியின் முன் அளவெடுக்கப்பட்ட தூரத்தில் நின்று நானோ கருணாவோ டார்ச் லைட் வெளிச்சத்தை கண்ணாடியின் மீது பாய்ச்சுவோம்.





நாம் நம்பமுடியாததொரு அளவில் அப்படம் எங்கள் முன் நிறுத்தப்பட்ட 40 அடி நீளமும் 20 அடி அகமுள்ள ஒரு துணி பேனரில் விரியும்.

பல்லவன் வெறிக்கொண்டு இயங்கும் தருணமது. ஒரு கறுப்புமை தடவிய துரிகை இப்படியும் அப்படியுமாக அந்த பெரிய பேனரில் குதியாட்டம் போடும்.

அப்போது எங்கள் யாரிடமிருந்தும் ஒரு சொல்லும் எழாது. ஒரு ஓவியன் கோரும் மௌனம் அது.

எதுவும் பேசாமல் பின்னிரவுகளில் பிரிந்து செல்வோம். வசிப்பிடங்கள் கேவலமாக எங்களை எதிர்கொண்ட நாட்களும் அதுவே.

இப்படியான துவக்கத்தில்தான் திருவண்ணாமலையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு பிரமாண்டமான பேனர்களும் உருவானது. அது மக்களை ஈர்த்தது. போக்குவரத்தை நிறுத்தியது. காவல்துறையை தூண்டியிட்டது. அரசை கவனிக்க வைத்தது.

இதில் எங்களுக்கு  எந்த சம்மந்தமுமில்லை என்பது போல நாங்கள் தோழர்களோடு ஒவ்வொரு கடையாக ஏறி  நிதி வசூலிப்போம். பத்து ரூபாய் தருபவன் மனிதன், நூறு ரூபாய் தருபவன் வள்ளல் ஆயிரம் ரூபாய் தருபவன் கடவுள்அதற்கும் மேலே தருபவன் கடவுளுக்கும் மேலே என மனிதர்களை மனம் பிரிக்க கற்றுக் கொடுத்தது.

மாலை ஆறுக்கும் ஆறறைக்குமான இடைவெளியில் கரிசல்குயில் கிருஷ்ணசாமியோ, சுகந்தனோ, தங்கள் காந்தக் குரலால் பாடத்துவங்குவார்கள். அது மனிதர்களை தூண்டில் போட்டு இழுத்துவரும். காந்தி சிலை மூலையில் நிகழ்ந்த எங்கள் இரண்டாவது கலையிரவு பத்தாயிரத்துக்கும் மேல் பார்வையாளர்களால் நிரம்பி தளும்பியது.




மேடையில் நிகழும் நிகழ்வுகளின் அடர்த்தியில் ஒரு துளியும் கேளிக்கைகள் நுழைந்து விடாமல் அடைகாப்போம்.

அசோகமித்ரன், பிரபஞ்சன், ராமகிருஷ்ணன், கோணங்கி என்று தமிழின் இன்றைய முக்கிய ஆளுமைகளில் பலரும் எங்கள் கலை இரவுகளின் பங்கேற்பார்களும், பார்வையாளர்களும்.

பாரதி கிருஷ்ணகுமாருக்கும், கரிசல் கிருஷ்ணசாமிக்கும் இதை பல ஆயிரம் னிதர்களுக்கு கொண்டு போனதில் எப்போதுமான பெருமிதங்கள் உண்டு. மாவட்டத்தின் உள்ளடுக்குகளில் உறைந்து கிடந்த கிராமங்களிலிருந்து நம் மரபான பல கலைகளை மீட்டெடுத்தோம்.

அதுவரை மரணவீடுகளில் மேளமடித்துக் கொண்டிருந்த பாப்பம்பாடி ஜமாவை கம்பீரமானதொரு கௌரவத்தோடு கலை இரவு மேடையேற்றினோம்.

பொரசப்பட்டு தண்டா போன்ற மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பழங்குடி மக்களின் ஆட்டகலைகளான பிரியாட்டம், மணியாட்டம்லம்பாடியாட்டம்  என நகர பார்வையாளர்கள் நம் மண்ணின் பாரம்பரிய கலைகள் குறித்து பிரமிப்படைந்தனர்.

எஸ்.ராமகிருண்ணன் ஒரு கூட்டத்தில் பரவசப்பட்டு திருவண்ணாமலையை தமிழ்நாட்டின் இலக்கிய நகரமென ப்ளிங் நகரைப்போல அறிவிக்க வேண்டுமென  சொன்னார். அத்தனை மௌனத்தோடும், கொண்டாடத்தோடும் எங்கள் பார்வையாளர்கள் எதிரில் நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டின் எல்லா திசைகளிலிருந்தும்  நண்பர்கள் மூன்று இரண்டு நாட்களுக்கு முன்பே புறப்பட்டு வருவார்கள்ஒவ்வொருவரும் ஒரு வேலையை அவர்களாகவே பகிர்ந்து கொள்வார்கள்.

திருபரங்குன்றத்திலிருந்து சு. வெங்கடேசனும், தேனியிலிருந்து பாஸ்கர் சக்தியும், ஒசூரிலிருந்து போப்பும் திருவண்ணாமலையிலிருந்து கலையின் வீரிய விதைகளை தங்கள் ஊருக்கு கொண்டு போனார்கள். கற்பாறைகளின் மேலல்ல, பதப்படுத்தப்பட்ட மனித மனங்களில் அத்தாய் விதைகள் விதைக்கப்பட்டன. மனித மனதின் ஈரம் காற்றில் அவ்விதைகளை தமிழகமெங்கும்  தூவிவிட்டது. அவைகள் செடியாய், பூவாய், காயாய், பழங்களாய், காய்த்து தொங்கின காலமே தமிழகத்தின் கலை இலக்கியக் காலம்.

படைப்பூக்கம் உள்ள மனிதர்களுக்கு திரும்ப நிகழ்தல் எப்போதுமே சலிப்பூட்டக் கூடியவைகள்தான். அச்சலிப்புகள் எங்கள் மேல் பரவுதற்குள் நாங்கள் எங்கள் வடிவங்களை மாற்றிக் கொள்ள தீர்மானித்தோம். கோணங்கியும், போப்புவும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்ட வடிவ கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பதினெட்டு பேர்களில் இருவர். அக்கூட்டத்தில் தான் இந்திய அளவிலான இலக்கிய ஆளுமைகளை  டேனிஷ்மிஷன் பள்ளி மைதானத்திற்கு வரவழைத்து நாற்காலிகள் போடாமல், மைக் வைக்காமல் அவர்களை மனம்  திறந்து உரையாட வைப்பதென்றும், அக் கூடுகைகளுக்குமுற்றம்என ஞானஸ்நானம் கொடுப்பதென்றும் முடிவெடுத்தோம்.






ஒரு காவி லுங்கியை மட்டும் கட்டிக் கொண்டு புகைத்து முடித்த பலநூறு சிகரெட் துண்டுகளின் மிச்சங்களோடு கருணா எழுதி முடித்த பல நூறு தட்டிபோர்டுகள் நகரையே வேறு ஒரு கலாபூர்வமான உலகத்திற்கு அழைத்துப்போனதும் அந்நாட்களில்தான். சுகுமாரன், சமயவேல், கலாப்பிரியா, கல்யாண்ஜியின் கவிதைகளும் புதுமைபித்தனில் துவங்கி கந்தர்வன் வரையிலான  ஆக சிறந்த  உரைநடைகளும் அத்தட்டி போர்டுகளில் உயிர்பெறும். இதுவரை தமிழ்நாட்டின் வேறெந்த நகரத்திலேயும் அப்படி நிகழ்ந்ததாக எனக்கு நினைவில்லை. துவக்கமும் முடிவும் அதுமட்டுந்தான்.

கலை இரவுகளையொட்டி, பல்வேறு நவீன ஓவிய புகைப்பட புத்தக கண்காட்சிகள் விரிந்து நகரத்தையேங்களுக்குக்குள் இழுத்துக் கொண்ட காலமும் அது மட்டுமே.
பல ஆயிரம் அடிகள் நீண்டு விரிந்த டேனிஷ் பள்ளியின் மைதானத்துக்கிடையே உருவாக்கப்பட்ட அச்சிறு  மேடையே எங்கள் முற்ற மேடை.

சச்சிதானந்தனில்  ஆரம்பித்து பால் சக்காரியா, ஜெயகாந்தன், பாலசந்திரன் சுள்ளிக்காடு, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், அம்பை என கூடிக் கொண்டே போன அந்த படைப்பாளிகள் பட்டியல் இப்பொழுது நினைத்தாலும் பிரம்மிப்படைய வைப்பவைகள். எந்த பாசங்களுமற்று மனம் திறந்து உரையாடிய அந்த உரைகள் இப்போதும் நிலைத்து நிற்பவை.




பல ஆண்டுகள் மௌனம் காத்த பின்னொரு மழை ராத்தியில் வெறும் அறுபது பார்வையாளர்களோடு சுந்த ராமசாமி பகிர்ந்து கொண்ட உரை அவராலேயே அதற்கும் பிறகும் முயற்சிக்க முடியாது. அம்மேடையில் என்னென்னவோ நிகழ்ந்தது.
ஜெயகாந்தன் சொன்னார்.

 “என் பத்தாண்டுகளில் இவ்வளவு நிதசர்னமாக நான் பேசியதில்லை. இம்மேடையும் அதன் அலங்காரமற்ற எளிமையுமே என்னுள் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி  எடுத்தது.”

அக்காலங்கள் தமிழிலக்கிய உலகில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதைக் கடந்து சென்ற ஒவ்வொருவரின் மனதிலும் இன்னமும் தேங்கியிருக்கும். முற்ற நிகழ்வுகள் வெறும் கூட்டங்கள் அல்ல. காற்றின் திசைகளில் கவிதைகள் கலந்த ஈரம் மிக்க நாட்கள் அதுவே.

இந்நாட்களில் இதற்கு சற்றும் குறைவின்றி, கலை இலக்கிய பெருமன்றமும், இன்னும் சில இலக்கிய அமைப்புகளும் நகரின் ஏதோ ஒரு இடத்தில் தங்கள் படைபூக்கமிக்க நாட்களை பதித்துக் கொண்டேயிருந்தார்கள்.





பங்கெடுக்கவோ, பார்வையிடவோ தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் வந்த படைப்பாளிகளும், கலைஞர்களும், நிகழ்வு முடிந்து நாலைந்து நாட்களும் எங்களுடனே தங்கியிருந்து, நிலம், திப்பக்காடு, நிறை கிணறு, நடைபாதையென இலக்கியம் பேசி பேசி தீர்த்த காலங்கள் அவைதான்.

ஜெயமோகனும், ராமகிருஷ்ணனும் கோணங்கியும் முக்கோண வடிவில் உட்கார்ந்து ஒரு இரவெல்லாம் சண்டை போட்டதும், அவர்களுக்கு ணிக்கொருதரம் நான்டீஊற்றித் தந்ததும், அதிகாலை பிரியும்போது ஆளுக்கொரு திசையில் பஸ் ஏறி போனதும் அப்படியே நினைவில் தங்கி ஒன்று.

இந்நிகழ்வுகள் முடிந்து அவர்களுக்கு பயணச் செலவுகளுக்கு கொடுக்க காசில்லாமல் லாரிகளில் ஏற்றி அனுப்பியிருக்கிறோம். பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் நிற்க வைத்துவிட்டு கடன் கேட்டு அலைந்திருக்கிறோம். ஜே.கே.வை சென்னை பேருந்தில் ஏற்றி உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே போக நிர்பந்தித்திருக்கிறோம். இவையெல்லாம் இலக்கிய ஆர்வத்தின் பொருட்டே என்ற மேன்மையான புரிதலில் அப்பெரும் படைப்பாளிகள் மனம் அவைகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

நீண்ட இப்பயணத்தில் காளிதாஸ், கவிஞர் பீனிக்ஸ், சாமிநாதன், ஷைலஜா, ஜெயஸ்ரீ, ரேணுகோபால், பாலாஜி, சந்துரு, குழந்தைவேல், வேடநத்தம் ராஜேந்திரன், அன்பரசன், சோமு என நினைவில் நின்றும், அகன்றும் பல பெயர்களின் உழைப்பு உள்புதைந்து கிடக்கிறது.

இந்நகரம் ஒரு பேரழகியின் வசீகரத்தோடு நின்று எல்லா திசைகளிலிருந்தும் படைப்பாளிகள் கலைஞர்களை கை நீட்டி அழைத்துக் கொண்டேயிருக்கிறாள். இதழ் குடிக்க அனுமதிக்கிறாள். எலும்புகள் நொறுங்க அவள் அணைப்பிலிருந்து இன்றளவும் எங்கள் எவராலும் விடுபட முடியவில்லை என்பதே உண்மை.

அதன் தொடர்ச்சிதான் இப்போதும் எப்போதாவது முற்றத்தில் ஒரு இளம் படைப்பாளிகள் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. என் வீட்டு மாடியில்நிலம்என்ற பெயரில் ஒரு இலக்கிய கூடுகை தொடர்கிறது. ‘டெண்ட் கொட்டாய்என்று பெயரிட்டு உலக திரைப்படங்களை எங்கள் குழந்தைகள் வம்சியும் மானசியும் அவர்களின் நண்பர்களான ஷபி, கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ் என இணைந்து வீட்டு மொட்டை மாடியின் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

நானும் என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவும் இணைந்துடயலாக்என்ற பெயரை மகாத்மா காந்தியிடமிருந்தே பெற்றோம். எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிடலாம் என்று சொற்களின் மீதான ஆழமான நம்பிக்கையில் மிக ஆழமாக ஊனப்பட்ட வீரிய விதை அது.

சேகர் தத்தாத்ரியின் புலிகள் குறித்த ஆவணப்படத்தையும், புலிகள் யாருக்காக? என்ற சமீபத்தில் மறைந்த ஆண்ட்டோவின் படத்தையும் ஒரே இடத்தில் திரையிட்டு சொற்களின் வீரியத்தை நிரூபிக்க முயன்ற நிகழ்ச்சிகளும் எங்களிடம் உண்டு.
ஒரு உறை மௌம் என்னை ஆக்ரமித்தபோது எப்படியாவது அதிலிருந்து மீள வேண்டும் என்ற உந்துதலில் நானும் என் நண்பன் ஜே.பி.யும் சேர்ந்து குவா வாடீஸ் என்ற கட்டிடங்கள் புறந்தள்ளப்பட்ட பல்சமய உரையாடல் மையத்தின் மரங்களும் செடிகளும், பூக்களும் கூடி குதூகலிக்கும் வளாகத்தில்,

என்கதை கேட்க வாங்கஎன்ற நிகழ்வை ஆரம்பித்தோம். ஐம்பது பேரில் ஆரம்பித்து அதுவும் ஐநாறு பார்வையாளர்களை தாண்டிவிட்டது. அது கதைகளை, வாசிப்பை, எழுத்தை உயிர்ப்பிக்கிறது. என் சக மனித ஸ்பரிசத்தை தினம் தினம் வேண்டுகிறது. மனித சந்தோஷத்தையும், துக்கத்தையும், துரோகத்தையும் பேரன்பையும் அது எப்போதும் நதியில் அள்ளப்பட்ட ஒரு கை நீரால் ஈரப்படுத்துகிறது. மானுடத்திற்கு கலை இலக்கியம் இதைவிட வேறெதை தந்துவிட முடியும்?

நன்றி தடம் மாத இதழ்







Monday, July 25, 2016

சந்தோஷ் ஏச்சிக்கானம்

இலக்கியம் என்பதன் பொருள் வெளிச்சம். இலக்கியத்தின் தர்மம் துர்நாற்றங்களிலிருந்து மனிதனை சுகந்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே. அதன் மிகப்பெரிய எடுத்துக் காட்டு மகாபாரதத்திலேயே இருக்கிறது.

மகாபாரதத்தில் சத்யவதி என்ற கதாபாத்திரத்தை உங்களுக்குத் தெரியும். அவள் ஒரு படகோட்டி. சுழித்தோடும் கங்கை நீரில் மனிதர்களை இக்கரைக்கும் அக்கரைக்கும் அழைத்துச் செல்லும் பேரழகியான படகோட்டி அவள்.

அவள் உடலிலிருந்து எப்போதும் வீசும் மீன் கவிச்சியின் பொருட்டு யாரும் அவளை நெருங்கவுமில்லை, காதலிக்கவுமில்லை.

ஒருநாள் பராசர முனிவர் சத்யவதியை சந்திக்கிறார். அவள்மீது மோகம் கொண்டு அவளும் சம்மதிக்க, வியாசன் என்ற குழந்தை பிறக்கிறது. இவ்வுலகின் மிகப் பெரும் தத்துவ ஞானியும் எழுத்தாளானும் தான் வியாசன் என்பது நமக்குத் தெரியும். வியாசன் பிறந்து பூமியில் விழுந்த அந்நிமிடம் அதுவரை சத்தியவதியின் உடலிலிருந்த மீன் வீச்சம் அவளை விட்டகல்கிறது.



ஒருவன் மீது கலை அல்லது இலக்கியம் படியும்போது அவனுள் அதுவரையிருக்கும் எல்லா துர்நாற்றமும் அகன்று போகிறதென்று இக்கதையிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

அதன்பின் சத்தியவதிக்குப் பிறந்த இரண்டு மகன்கள்தான் சித்தராங்கதனும் விசித்ரவீரியனும். அவர்கள் அம்பிகா, அம்பாலிகா என்ற இரு இளவரசிகளை திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே இருவருமே இறந்துவிடுகின்றனர். இளவரசிகள் இருவரும் இளம் விதவைகளாகவே, சத்தியவதி பீஷ்மரிடம் மீண்டும் கேட்கிறாள்.

அரசை வழி நடத்த இனியும் எனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும். புதிய தலைமுறை உருவாக வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன செய்வது?

பீஷ்மரிடம் எந்த பதிலுமில்லை.



அப்போது சத்தியவதி தன் உள்ளுணர்வில் ஒன்றைக் கண்டடைகிறாள். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். முன்னெப்போதோ பராசர முனிவரின் மூலம் பிறந்த மகன் அவன். ‘அம்மா நீ எப்போது என்னை நினைக்கிறாயோ, அந்நிமிடம் நான் உன்னை வந்தடைவேன்எனச் சொல்லி பிறந்து விழுந்த அந்நிமிடமே அங்கிருந்து மறைந்துபோன வியாசன். சத்தியவதி அவனை மனதால் நினைக்க, அந்நிமிடமே அவன் வந்து அவளையடைகிறான்.

வியாசன் அந்த இரு விதவைகளையும் மணந்துகொள்ள சம்மதிக்கிறான். அம்பிகையும், அம்பாலிகையும் வியாசன் மிக வலிமையுடைய, திடகாத்திரமான, பேரழகனான ஒருவன் என நினைத்துக் கொண்டிருக்க, வியாசன் அப்படியெல்லாம் இருக்கவில்லை. ஐந்தடிக்கு
ம் குறைவான உயரமும், உருவத்தால் பொருட்படுத்த முடியாத குரூபியான உடல் தோற்றமும், வியர்வை நாற்றம் வீசுபவனுமாக இருந்தான்.

அம்பிகையின் படுக்கையறைக்குள் வியாசன் நுழைய, அவன் உருவத்தைக் கண்டு பயந்து அவள் தன் கண்களை மூடிக்கொள்கிறாள். அவர்களிருவரின் உறவில்தான் குருடனான திருதராஷ்டிரன் பிறக்கிறான்.

கலை, இலக்கியத்துக்கு எதிராக யார் தன் கண்களை மூடிக் கொள்கிறார்களோ அவர்கள் குருடர்களாக மாறுகிறார்கள். அவர்களை இருண்மை வந்தடைகிறது. அவர்களிலிருந்துதான் யுத்தங்கள் உருவாகின்றன. அவர்களால்தான் சமூக அமைதி குலைகிறது என்று மகாபாரதம் சொல்கிறது.

அடுத்து அம்பாலிகை வருகிறாள். வியாசனைப் பார்த்த முதல் பார்வையில் அவள் வெளிறிப்போகிறாள். அவளுக்கு ஆண்மையற்ற பாண்டு பிறக்கிறான். குருடனிடமிருந்தும், ஆண்மையற்றவனிடமிருந்தும் நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால்தான் நாம் தொடர்ந்து ஆளப்படுகிறோம். இவர்களின்மூலம் நாம் எதையும் கண்டடைவதில்லை. உற்பத்தியற்ற, அக இருளடைந்துள்ள இவர்களுக்கு எதிரான போர்ப் பிரகடனதம்தான் கலையும் இலக்கியமும்.

எப்போதும் பாவப்பட்டவர்களின், பசித்தவர்களின் பக்கம் நிற்கும் ஒரு மாபெரும் சக்தியாக இலக்கியம் இருக்க வேண்டும். அத்தகைய ஒரு சக்தியுள்ள புத்தகம்தான்நிலம் பூத்து மலர்ந்த நாள்பசித்தவர்களின் பயணம்தான் அந்தப் புத்தகம். வன்முறைக்கும் வேதனைக்கும் ஆளாக்கப்பட்டவர்களின் பயணம். எங்கேயும் ஒரு துணையுமற்ற பெரும்பாணர்களின், பாடகர்களின் ஒரு நீண்ட பயணமது.




-

திருவண்ணாமலையில் மனோஜ் குரூரின் ‘‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’’ (தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ) நாவலை வெளியிட்டு எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் பேசியதன் மிகச்சுருங்கிய வடிவம்.

Wednesday, July 6, 2016

பெருமரங்கள் வீழ்கின்றபோது…


மரத்தை வெட்றதும்
மார அறுக்குறதும் ஒண்ணுதான்யா
-    நம்மாழ்வார்

மலை சுற்றும் பாதையைச் சுற்றிலுமுள்ள பல நூறு மரங்கள் ஜே.சி.பி.யால் வேரோடு பிடுங்கி சாய்க்கப்படுகின்றனநாளை காலை ஆறு மணிக்கு தங்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய விரும்புபவர்கள் மலை சுற்றும் பாதையில் சந்திக்கலாம்” என்ற குறுஞ்செய்தி என்னை அடைந்தபோது இரவு பதினோரு மணியிருக்கும்ஆறு மணிக்குப்  போகும்போது நானும் வருவேன் என அடம்பிடித்த என் மகள் மானசி அடுத்த ஐந்தாவது நிமிடம் உறங்கிவிட்டாள்நான்தான்  தூக்கம் வராத நேற்றைய இரவில் இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அரசால் எப்படி எந்த முன் யோசனையோ பின் விளைவுகளோ இன்றி ஒரே உத்தரவில் இயற்கை பூமிக்குக் கொடுத்த இத்தனைப் பெரிய வரத்தை அழித்துவிட முடிகிறதுஅது என்னவெல்லாம் பெயர் கொடுத்துத் தன்னை நாகரீகமாகக் காட்டிக் கொள்ள முடிகிறதுவிரிவாக்கம்செப்பனிடல்நவீனம்அடிப்படை வசதி இப்படி
ஐந்தரைமணிக்கு எழுந்து மகள் மானசியைப் பார்த்தேன்அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்எழுப்பாதேயென ஒரு தந்தையின் மனம் தடுத்தது.




நான் தனியாளாக என் பைக்கில் சமுத்திர ஏரிக்கரை  வழியே மலை சுற்றும் பாதையை அடைந்தபோது நூற்றுக்கும் மேலே மனிதர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்எல்லோர் முகங்களிலும் தூக்கமின்மையும்பதட்டமும்இழந்த சோகமும் பதிந்திருந்தன.

அவர்களில் பலபேரை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்மருத்துவர் சீதாஎழுத்தாளர் சங்கீதா ஸ்ரீராம்குக்கூ சிவராஜ்புகைப்படக் கலைஞர்கள் தேவ் குகைவினோத் பாலுச்சாமிகவிஞர்குமார் அம்பாயிரம் என அவர்கள் திருவண்ணாமலையின் எளிய அடையாளங்கள்.

எங்களுக்குள் கைகுலுக்கல்கூட இல்லைவிரைவான செயல்திட்டங்கள் மட்டுமே எங்கள்முன் இருந்த ஒற்றை அஜெண்டாநவீன் அக்கூட்டத்தைத் துவக்கினார்.

இல்லைஒரு சிறு தீக்குச்சியைக் கொளுத்தி எங்கள் முன் போட்டார்தீ மளமளவெனப் பரவியதுஎங்கள் பின்னணியில் மலை ஒரு பெரு யானையைப் போல் படுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததுஅதன்முன் நேற்றைய இரவில் முறித்துப் போடப்பட்டபசும் மரங்களின் வேர்கள் செத்த மாடுகளைப் போலக் கிடந்தனவார்த்தைகளற்ற சோகம் எங்களுக்கான இடைவெளியை நிரப்பிக் கொண்டது.

ஏழுமணிக்குள் கூட்டம் நூற்றி ஐம்பதைத் தாண்டியதுவெளிநாடுகளிருந்து இங்கு வந்து வசிக்கும் பலநாட்டு மனிதர்களும்கைக்குழந்தைகளோடு வந்திருந்த பெண்களும் அக்கூடுகையை அடர்த்தியாக்கினார்கள்.

பத்து மணிக்கு கலெக்டர் இது விஷயமாகப் பேச அழைத்திருக்கிறார் என்பதே அப்போதைக்கான சிறு ஆறுதல் செய்தியாக இருந்ததுஅரசு எந்திரத்தின் ஒரு சிறு அசைவும் எளிய மனிதர்களுக்குக் கிடைக்கும் வரம்தானே!

ஒரு தடுத்தலுக்காக வந்தவர்கள் அப்படியே திரும்ப மனமின்றி ஒருவர் கரத்தை இன்னொருவர் பற்றி மனித சங்கிலியாகப் பத்து நிமிடம் நின்றோம்.




அப்போது நீடித்த மௌனத்தில் உணர்வு மேலிட உடைந்த கலைஞர்களின் பலவீனமான கண்களை கவனித்தேன்.

காலை நடைப் பயிற்சிக்காக வந்த பலரும் எங்களுக்குக் கைகொடுத்து நின்றார்கள்கிராமங்களில் சொல்வார்கள் முட்டு கொடுத்து நிற்பதெனஎத்தனை பலஹீனமான பலகைகளையும்  ஒரு சிறு முட்டு தாங்கிக் கொள்ளும்வழியில் வந்த மனிதர்களும்வேடிக்கை பார்த்த துறவிகளும் எங்களுக்கு முட்டு கொடுத்து நின்று எங்களை பலப்படுத்தினார்கள்.

தன் இன்றைய வேட்டையைத் துவங்க ஒரு மஞ்சள்நிற அரக்கனைப் போல அந்த       ஜே. சி. பி. எந்திரம் எங்களைத் தொட்டுக்கொண்டு வந்து உறுமியது. எங்கள் எதிரி இத்தனைப் பக்கத்திலா எனக் கோபமேறிய கைகளோடு எங்கள் தோழர்கள் பலர் அதன் மீதேறி மிதித்தார்கள். அது தன் எந்திர உறுமலை நிறுத்தித் தொலைத்தது.

இன்று பத்து மணிக்கு கலெக்டர் எங்களுடன் பேசும்வரை எந்தத் தாவரத்தையும் தொட வேண்டாமென அதன் ஓட்டுநரிடமும், மேற்பார்வையாளரிடமும் தோழமைக் குரல்கள் கோரிக்கை வைத்தன.

ஒத்துக் கொண்டது மாதிரி அது திரும்பிப் போனதை எங்களில் பலரும் நம்ப மறுத்தார்கள். அதிகாரம் ஒருபோதும் எளிய மக்களின் குரல்களுக்குப் பணியாது. பணிவது மாதிரி பதுங்கும். அது சமயம் கிடைக்கும் தருணத்தில் அதன் ஆயிரம் மடங்கு பலத்தோடு அதே மக்கள்மீது பாயும். அதுவரை அது அடைகாத்த வன்மத்தை ஆத்திரத்தோடு துப்பும்.




இன்று காலையும் அதே நியதிதான் நடந்தேறியது. திரும்பிப் போன அந்த எந்திரம் தன் எஜமானர்களின் உத்தரவின் பேரில் மூன்று பெருமரங்களை வேரோடு பிடுங்கிப் போட்டது. எங்கள் கண்முன்னே நடந்த இப்படுகொலையைத் நாங்கள் தடுக்க முற்படும் முன் அவை  சவங்களாய் முட்காட்டில் கிடந்தன.

மருத்துவர் சீத்தா அம்மரத்தின் முறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கிளையின்முன் அமர்ந்து அடக்க முடியாமல் அழுததை எங்கள் மலையும் பார்த்துக் கொண்டிருந்தது.
திரும்ப நினைத்த அத்தனை கலைஞர்களையும், செயற்பாட்டாளர்களையும் அந்த அழுகையே திரும்ப அழைத்தது.



சற்றுமுன் பார்த்த இழந்த  துக்கத்திலிருந்த முகங்கள் அல்ல அவை. ரௌத்திரமேறியிருந்த நடையை தூரத்திலிருந்தே அவதானித்தேன். அவர்கள் அந்த எந்திரத்தையும், அதை இயக்கியவர்களையும் ஒவ்வொரு விதமாக எதிர்கொண்டார்கள்.
மக்கள் எதிர்ப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் அது மெல்ல நகர்ந்தது.

நாங்கள் யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல் சாலையில் உட்கார்ந்தோம். வெளிநாட்டவர்களின் முகங்கள் முன்னிலும் சிவந்திருந்தன. ஏதோ ஒரு நாட்டிலிருந்து இந்த இயற்கையை தினம்தினம் தரிசிப்பதற்கென வந்த ஒருவர் ஆங்கிலத்தில் உரக்கக் கத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

இயலாமையில் எங்கள் கிராமத்துப் பெண்கள் மண்ணை வாரித் தூற்றுவார்கள். இரண்டிற்குமான இடைவெளி எதுவுமில்லை.

அடுத்த பத்தாவது நிமிடம் போலீஸ் வந்தது. அரசு விசுவாச நாற்றம் அவ்விடத்தை குபீரென நிறைத்தது.

எங்கள் விவாதங்கள் கூடிக்கொண்டே போனது. வார்த்தைகளின் உஷ்ணம் போலீசையும் நிதானிக்க வைத்தது.

‘உங்களுக்கு என்னதான் வேணும்?’





எம். முகுந்தனின் ‘மய்யழிக் கரையோரத்தில்’ நாவலில் தாசனைப் பார்த்து, அந்தப் பிரெஞ்சுக்கார கவர்னர் கேட்டான்.

நூறாண்டுகளுக்குப் பின்னும் அதே கேள்வி மிச்சமிருக்கிறது. அவன் அதை நம்மிடம் தூவிவிட்டுப் போயிருந்தான்.

‘உங்களுக்கு என்னதான் வேணும்?’

‘’சுதந்திரம்’’ தாசன் சொல்லுவான்.

எங்கள் சிறு நகரத்தின் ஒரு செடியையும் உங்கள் அரச அதிகாரம் பிடுங்கக்கூடாது.

அதை நான் எப்படி சொல்வது. அதிகார அடுக்குகளில் ஏதோ ஒரு புள்ளிதான் இவர்கள் என்பதை  அறியாதவர்கள் அல்ல நாங்கள்.

எங்கள் கண்ணெதிரே மூன்று மரங்களைப் பிடுங்கிப்போட்ட அந்த இருவரும் வரலாறு மன்னிக்காத தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

அந்த மஞ்சள்நிற இயந்திர அரக்கனை இனியும் நம்பத் தயாராக இல்லாத பத்துபேர் அதன் அசைவின்மைக்கு டாக்டர் சீதா தலைமையில் காவலிருக்கநாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கச் சென்றோம்.





காத்திருக்க வைக்காமல் எங்கள் எல்லோரையும் அந்தக் குளிரூட்டப்பட்ட அறை அனுமதித்ததுசற்றே நீடித்த மௌனத்தைத் தொடரவிடாமல் தோழர் கருணாஇந்த மரங்கள் எங்கள் நகரத்திற்கு  எத்தனை மகத்தான பொக்கிஷங்கள் என்றும்ஓர் அரசு ஆணையில்அல்லது ஒரு ஒப்பந்தத்திற்கு எப்படி அதை பலி கொடுக்கத் துணிந்தீர்கள் என்றும் அடிமனதிலிருந்து கேள்விகளை எழுப்பினார்.

உரையாடல்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் என்ற மகாத்மா காந்திதான் அக்கணத்தில் என் நினைவுக்கு வந்தார்.

முதல் பத்து நிமிடங்களில் தன் தரப்பு நியாயத்தை கலெக்டர் முன் வைத்தார்.
நாங்கள் எல்லோருமே அதை நிராகரித்தோம்.

விரிவாக்கம் இந்தப் பாதைக்குத் தேவையில்லையென்பதையும்இந்த மரச்செறிவின் குளிர்ச்சிக்கும்பகலிலேயே கவியும் லேசானதொரு இருளுக்கும்தான் மனிதர்கள் தங்கள் மனதைப் பறிகொடுக்கிறார்களென்றும்அதுவே ஆன்மீக அனுபவமென்றும் அச்சபையில் பல்வேறு குரல்கள் தடித்தும் மெலிந்தும் விளக்கினகலெக்டர் எங்கள் குரல்களை உள்வாங்கிக் கொண்டேயிருந்தார்கேட்கப் பழகின காதுகள் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் என்ற சொற்றொடர்மீது ஏனோ எனக்கு அந்நிமிடம் நம்பிக்கை பிறந்தது.

‘’புதர்களைக்கூட நீக்கக் கூடாதா?’’ என்ற நிர்வாகத் தரப்பின் கேள்விக்குக் கவிஞனும் களச் செயல்பாட்டாளனுமான குமார் அம்பாயிரம் தன் அனுபவத்திலிருந்து பதில் சொன்னார்.

‘’நீங்கள் கை வைத்திருப்பது சாலையோரம் நட்டுவைத்து வளர்க்கப்பட்ட புளியமரங்கள் அல்லஅது சோணகிரி காடுமலையின் தொடர்ச்சிஇம்மலையின் வேர்களில்தான் இம்மரங்கள்செடிகள்கருங்குரங்குகள், உழக் குள்ளநரிகள், பதுங்கு முயல்கள், உடும்புகளென நூற்றுக்கணக்கான காட்டுயிர்களும், பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களும், நீங்கள் புதர்கள் என்று தவறாய் அடையாளப்படுத்தும் இம்மூலிகைச் செடிகளுக்கடியைத்தான் தங்கள் வாழ்விடங்களாக பாவிக்கின்றன. அவற்றையும் அதிலிருந்து வெளியேற்ற எங்கள் மாடுகளைப் போல் பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்ன வைத்து விடாதீர்கள் என்ற வேண்டுகோளுக்கு அப்படி ஒரு அமைதியை அச்சபை அங்கீகரித்தது.

இடையே ஒரு தொலைபேசி அழைப்பில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளரைத் தன் அறைக்கு வரச்சொல்லி ஆணை பிறப்பித்தார் கலெக்டர்.

Respected Sir, என்ற பழக்கப்படாத ஒரு குரலுக்கு எல்லோருமே திரும்பிப் பார்த்தோம். அது இந்திய அளவில் முக்கியமான புகைப்படக் கலைஞன் தேவ்குகையுடைய குரல்.

அவரால் பேச முடியவில்லை. விம்மல்கள் மட்டும் தெறித்து விழுந்தது. தன் ஆங்கில அறிவை அத்தனை அற்புதமான வார்த்தைகளில் புதைத்து பத்து நிமிடங்கள் அவர் முன்வைத்த வாதங்கள் யாரையும் புதைகுழியில் அமிழ்த்தும். பத்து வருடங்களாக தேவ் குகையை நானறிவேன். ஓரிரு வார்த்தைகளைக்கூட விரும்பிச் செலவழிக்கத் தெரியாத கலைஞன் அவன். பேசுவதற்குத் தன் கைவிரல்கள் போதுமென நினைப்பவன். இன்று தன்னிடம் இருப்பது இதுவரை ஆத்திரத்தோடு அடைகாத்த இச்சொற்கள் மட்டுமேயென நினைத்து, தன்னிடமிருந்த அத்தனை சொற்களையும் கொட்டித் தீர்த்தான்.

நான்கு நாட்களாக எந்த மரங்களும் வெட்டப்படவில்லையென்ற பொய் எங்கள் முன்னிலையிலேயே அவிழ்க்கப் பட்டது.

சில நிமிடங்களில் பல கேமராப் பதிவுகளும், இன்று எடுக்கப்பட்ட செல்போன் புகைப்படங்களும் பச்சை வாசனையோடு கலெக்டர்முன் காட்சிப்படுத்தப்பட்டது.

ஹைவேஸ் இன்ஜினியர் அவசரத்தில் உள்ளே நுழைந்து தனக்கான இருக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார். எங்கள் எல்லோர் வார்த்தைகளும் அவரை நோக்கி ஒரே நேரத்தில் திரும்ப, சொல்ல எதுவுமற்று அமைதி காத்தார்.

அவசர அவசரமாக சில உத்தரவுகளை கலெக்டர் பிறப்பித்தார்.

‘’ஒரு மரத்தையும் இனி வெட்ட வேண்டாம்’’

அவர் உத்தரவை இடைமறித்து, ‘’நீங்கள் புதர்கள் என்று தப்பாய் விவரிக்கும் மூலிகைச் செடிகளையும்… ம்.. அவற்றையும்…’’

நான்  முதல் வரிசையிலிருந்து திரும்பிப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் படிந்திருந்த அவநம்பிக்கைகள்  மெல்ல பனிக்கட்டி மாதிரி உருக ஆரம்பித்திருந்தது.

பத்து வருடங்களுக்கு முன் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரி தன் பட்டா நிலத்திலிருந்து ஒரு பெரிய வேப்ப மரத்தை இயந்திரத்தால் அகற்ற முயல, அம்மரத்தைக் கட்டிக்கொண்டு நின்ற என் தோழியும், உலக பிரசித்தி பெற்ற ஸ்பெயின் நாட்டு ஓவியருமான காயத்ரி காமூஸ் என் நினைவுக்கு வந்தார். இன்றளவும் அந்த எளிய மனுஷியின் ஞாபகமாய் மீந்திருக்கும் அந்த வேப்பமரம் இன்னும் கணம் கூடி கம்பீரமாய் நின்றிருக்கும் இதே திருவண்ணாமலையில்தான் இத்தனை கலைஞர்களும், படைப்பாளிகளும், கள செயல்பாட்டாளர்களும்,இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான மர உயிர்களைக் காப்பாற்றிய பெரு நிம்மதியோடு அங்கிருந்து கலைந்தோம்.

கைக்குலுக்கல்களும், உடலசைவுகளும், முத்தங்களும் உணர்வு பெருக்கில் கலெக்டர் அறையிலேயே சக மனிதர்களின் அன்பின் பொருட்டு நிகழ்ந்தது.
வீட்டிற்கு வரும்போது பகல் ஒரு மணி. ஒரு புனைவு மாதிரி நடந்ததை எங்கள் சாப்பாட்டு மேஜையில் பகிர்ந்தேன்.

“மகள் மானசியை எழுப்பி உடன் அழைத்துப் போயிருக்கலாம், அவள் ஒரே நாளில் எத்தனை மகத்தான அனுபவத்தை அடைந்திருப்பாள்” 

என்னிடம் எந்த சொல்லும் மீதமில்லை.




படங்கள்: தேவ் குகை, முருகன் தி.மலை, ஷபி, வினோத் பாலுச்சாமி,சேது.

நன்றி 
ஜுனியர் விகடன்