Wednesday, September 14, 2016

கொண்டாட்டங்களின் வாசனை

கேரள தலைமைச் செயலக ஊழியர்கள் சார்பில் நடத்தப்படும் மாத இதழின் ஓணம் சிறப்பிதழ் இந்த வருடம் இரண்டு சிறப்பிதழ்களோடு வந்துள்ளது.

ஒன்றில் மம்முட்டியின் அட்டைப்படுமும், இன்னொன்றில் கவிஞர் சச்சிதானந்தன் கோட்டோவிய அட்டைப்படமும்.

'கொண்டாட்டங்களின் வாசனை' என்ற தலைப்பில், ஓணத்திற்கும் எனக்குமான தொடர்பு குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதன் பிரதிகளோடு  ஓணம் முடித்த கையோடு தோழர் ஜோதிசங்கர் (கேரள தலைமைச் செயலகம்) இன்று அதிகாலை என்னை சந்தித்தார்.

எத்தனை மேன்மையான மாநிலமும், மனிதர்களும் நம் அருகே இருந்து இலக்கியத்தைக் கொண்டாண்டுகிறார்கள்!








1992  டிசம்பர் 31- அந்த கலை இரவின்  குளிர் படர்ந்த  இரவில் எங்கள் மேடையின் முன் பல ஆயிரம்  மனித முகங்கள் விரிந்திருக்கிறது.

புரிசை கண்ணப்ப  தம்பிரானின்பாஞ்சாலி சபதம்கூத்து முடிந்து மக்கள் ஆரவாரத்திற்கிடையே ஒரு  பூப் போட்ட ஜோல்னா  பை எனக்கு பரிசாக அளிக்கபட்டு என்னைப் பரவசப்படுத்தியது. கூடவே ஒரு வாழ்த்து அட்டை.

 “உங்களின்  இந்த  கலை இலக்கிய செயல்பாடுகளுக்கு என் எளிய வெகு மதி -  கே.வி.ஷைலஜா.”

நான் அந்த இரண்டு வரிகளை மைக் முன் நின்று சத்தமாக வாசிக்கிறேன். இப்படித்தான் ஷைலஜா என்ற மனுஷி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

எல்லா ஆரவாரங்களுக்கும் பின் ஏற்படும் அமைதியும், மனிதர்கள் கலைந்தபின் ஏற்படும் வெறுமையும் என் நாட்களை சூழ்ந்து கொள்ள, நான் என் பழைய சைக்கிளில் தாமரைக் குளக்கரையிலிருந்த  ஷைலஜாவின் வீட்டிற்குப் போன ஒரு சாயங்காலம் இன்னும் நினைவில் இருக்கிறது.

அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்த ஷைலஜாவையும், ஜெயஸ்ரீயையும் அவர்களின் அப்போதைய இலக்கிய வாசிப்பினூடே சந்தித்தது எனக்கு பெரும் சந்தோஷத்தைத் தந்தது.

சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளை இலக்கிய வாசிப்பிலும் செயல்பாடுகளிலும் கரைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்பெண்களின் அருகாமை பெரும் ஆசுவாசத்தை தந்தது.

சந்திப்புகளின் நகர்வு ஆவணி மாதத்திற்கு எங்களை நகர்த்தியது.

அவர்கள் வீடு மெல்ல மெல்ல ஓணத்தின் கொண்டாட்டத்தை  நோக்கி  நகர்ந்ததை உணர முடிந்தது. வீட்டின்  அதீத  சுத்தத்தில்  ஆரம்பித்து புதிய உடைகளை  அவர்கள் வாங்க ஆரம்பித்தது வரை உடனிருந்து உள்வாங்கி கொண்டிருந்தேன்.

களிமண்ணால்  செய்யபட்ட  நிறைவடையாத ஒரு சாமி சிலை உருவாக்கத்தில் எனக்கும் கூட சில பங்கிருந்தது. அதற்கு ஒரு அழகான குடை. அதைச் சுற்றிலும் பூக்கள். சாணி தெளித்த வாசலில் அது நிறுவப்பட்ட போது அத்தெருவே அழகாகி விட்டதைப் போல அத்தனை  வசீகரமாயிருந்தது.

எல்லோர் கண்களும் அதையே  மொய்த்துக் கொண்டிருக்க, நான் அன்று மாலை மீண்டும்  ஷைலஜாவின் வீட்டிற்கு போனேன்.

ஒரு ஆள் பெரும் சத்தத்தோடு அவள் மாமாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எனக்கு நிலைமையை புரிந்து கொள்ள பத்து நிமிடங்கள் மட்டுமே போதுமானதாயிருந்தது.

ஷைலஜாவின் குடும்பம் கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து திருவண்ணாமலையில் நிலைபெற்றிருந்தது.

பெரும் கனவுகளோடு அவள் அப்பா வாசுதேவன் தன் தொழிலை வெற்றிகரமாக முன் செலுத்திக் கொண்டிருந்த போது நிகழ்ந்த அவரின் எதிர்பாராத மரணம் அக்குடும்பத்தை நிலை குலைய செய்துவிட்டிருந்தது.

அம்மூன்று பெண் குழந்தைகளும் ஒரு பச்சைக்  கொடியின் பற்றுதல் மாதிரி தன் தாய் மாமாவின் கைகளை பற்றிக் கொண்டிருந்தார்கள். இருபது வயது இளம் விதவையான அவள் அம்மா மாதவி தன் மொத்த நிராசைகளுக்கும், துடைத்தெறியப்பட்ட கதைகளுக்கும் தன் பிஞ்சுக்குழந்தைகளின் அருகாமையை மட்டுமே வடிகலாக்கி  கொண்டிருந்தார்.

சொந்தங்களற்ற வெறுமையை இப்படியான பண்டிகைக்  கொண்டாட்டங்கள் மட்டுமே அச்செடிகளுக்கும் அத்தாய் மரத்திற்கும் நீரிட்டுக் கொண்டிருந்தது.

அவர்களுக்கு ஒரு முதிய பாட்டியிருந்தாள். பெயர் கல்யாணி. கேரளாவின் பாரம்பரிய பெண்ணுடை மட்டுமே அந்த முதிய தேகத்தை மூடியிருக்கும். நாற்பது கிலோவிற்கும் குறைவான எடை. காற்று மொத்தமாக அடித்தால் கீழே விழுந்துவிடக்கூடிய உடல் எடை. னால் மனதால் உறுதியேறி இருந்தாள் கல்யாணி பாட்டி.

அவள் தான் புரிந்தும் புரியாததுமான தமிழில் அந்த சண்டை போட்ட ஆளோடு தன்னையும் சேர்த்து தன் மக்களின் மனநிலைகளை விலக்கிக் கொண்டிருந்தாள். அதில் இடம் பெயர்ந்து வந்த அகதியின் சோகமும், கெஞ்சலுமிருந்தது.

அந்த ஆள் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. கேரளாக்காரர்கள் எல்லாம் மாந்திரீக செய்வினை செய்பவர்கள் என்பதும், இக்களிமண் பொம்மை உருவாக்கமும் அதன் ஒரு நீட்சி தான் என்பதும் அவன் மனதில் பதிந்திருந்தது. என் தலையீடும் சமாதானமும் அம்மனிதனை எதுவும் செய்து விட முடியவில்லை. இறுதியில் அக்களிமண் சிலை அவர்கள் வீட்டு பின்புறம் தளும்பிய தாமரைக் குளத்தில் தள்ளப்பட்டது.

ஒணக்கொண்டாட்டத்தின் முன் இரவு புரிந்து கொள்ளாமையினாலும், ஒற்றைக்  குடும்பம் என்பதாலும், ஒரு பெரும்பான்மை இனக்குழுவினால் இப்படி அவர்கள் சிறு கனவு ஒன்று மொத்தமாக துடைத்தெறியப்பட்ட என் முதல் ஒண அனுபவமாக மனதில் விரிகிறது. அதன் பின் ஒரு தோல்வியுற்ற இளைஞனாக நான் அச்சண்டையை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

ஆனால் மனதால் அன்று ஒரு முடிவெடுத்தேன்.உறவுகளைத் துறந்த வாழ்க்கை, அலைக்கழித்து எங்கோ தொலை தூரத்து நகரத்தில் இக்குடும்பத்தை கரை ஒதுக்கி இருக்கிறது. எப்போதும் கொண்டாட்டங்களாலும், சந்தோஷங்களாலும் இவர்களை சந்தோமாக வைத்திருக்க  வேண்டும்

என் கனவுகள் எதுவுமே நிராசையானதில்லை. எங்கள் திருமணத்திற்குபின், அதுவரை மலையாள வாசிப்பில் எப்போதாவது புரிந்தும், புரியாமலும் திணறிக்கொண்டிருந்த ஷைலஜா முதன்முதலில் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் 'சிதம்பர ஸ்மரணயை ' தமிழில் 'சிதம்பர நினைவுகள்' என மொழியாக்கம் செய்யுமளவிற்கு அவளுக்கு அம்மொழி கை கூடியிருந்தது. அப்புத்தகத்தில்  ‘திருவோண விருந்து என்றொரு பகுதி உண்டு.

தான் சுவீகரித்துக்கொண்ட கொள்கையின் பொருட்டு பாலச்சந்திரன் தன் செல்வாக்கான குடும்பத்தைப் பிரிந்து, நாடோடியாக கேரள நகரங்களிலும், கவியரங்குகளிலும், மாநாடுகளிலும் கவிதை வாசித்துக்கொண்டு தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் இடமும் உணவுமின்றி அலைந்து கொண்டிருந்த நாட்களில், ஒரு ஓணத்திருநாளின் போது ஏதோ ஒரு பெயர் தெரியாத ஒரு வீட்டுக் காம்பௌண்ட் சுவற்றின் முன் பசியோடு நின்றிருப்பார். அவரை சோற்றுக்கலையும் பிச்சைக்காரன் எனக்கருதி அவ்வீட்டுத் தலைவி தன் பூட்டப்பட்ட இரும்பு கேட்டை அவனுக்காகத் திறப்பாள். தலை கவிழ்ந்து, உடை கலைந்து, அழுக்கேறிய உடம்போடு நிற்கும் அவனைப் பார்த்து என்ன வேணும்? என கண்களால் விசாரிப்பாள். தன் தலையை ஏறெடுத்து அத்தாயைப்  பார்ப்பான் அக்கவிஞன்.  'சோறு' என்ற சொல் வெளிவராமல் நாக்கிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அது முந்தைய தலைமுறை கெளரவம். ஒரு நிமிடத்தில் அதைப் புரிந்து கொண்ட அப்பெண் அவனைத் தன் வீட்டிற்குள் அழைப்பாள். எதுவும் பேசாமல் அவளைப் பின் தொடரும் அவனுக்கு அவ்வீட்டின் பின்புற தாழ்வாரம் காண்பிக்கப்படும். தரையில் தலை கவிழ்ந்து உட்க்கார்ந்திருந்த அவன் முன் ஒரு தலை வாழை இலை போட்டு அன்றைய ஓணவிருந்து பரிமாறப்படும். இலைநிறைய பதார்த்தங்கள் பரவிய விநாடி பாலனுக்கு தன் வீட்டு ஓணச்சாப்பாடு தலையிட்டு கண்களை நிறைக்கும். ஒரு வாய் சாப்பிட முடியாமல் நினைவுகளின் பெருமிதம் அலைக்கழிக்கும்.

புதுப்பட்டுப் பாவாடை சரசரக்க வரும் அவ்வீட்டின் கல்லூரி படிக்கும் ஒரு  இளம்பெண் அவனை அடையாளம் கண்டு கொள்வாள்.

 “நீங்க கவி பாலேந்திரன்  தானே !

அவளை நிமிர்ந்து பார்த்த ஒரு நொடியில் மதிப்பும் மரியாதையையும் விடப் பெரியது பசியும் சோறும்தான் என்ற மனநிலையில் மீண்டும் தலை குனிந்து உணவை பிசையும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு  எனும் கேரளா பெருமிதத்தின் காட்சி சித்திரம் ஒன்று ஒவ்வொரு ஓணத்தின் போதும் என்னுள் வந்து போவதை தவிர்க்கவே முடியாது.

ஓணம் என்பது இப்பெரும் இரு துயர நினைவுகளால் எனக்குள் நிரம்பியிருந்தது.

எங்கள் திருமணம் முடிந்த முதல் ஓணம் எங்களுக்கான தலை ஓணம். ஷைலஜாவின் மூத்த சகோதரி சுஜியும் அவள் கணவர் குட்டி கிருஷ்ணனும்  திருவண்ணாமலையில் வேறொரு பகுதியிலிருந்த அவர்களின் வீட்டிற்கு எங்களை அழைத்திருந்தார்கள்.

அது கொண்டாட்டங்களின் ஆரம்பம். அவர்களின் டயர் கம்பெனியில் வேலை பார்த்த அழுக்கு இளைஞர்களில் ஆரம்பித்து, உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்களென பலதரப்பட்ட மனிதர்களின்  வருகையினால் அவ்வோம் உயிரூட்டப்பட்டிருந்தது.

கேரள உணவின் முழுமையை நான் சுவைத்த முதல் நாளென அதைச் சொல்லலாம். பல காய்கறிகளை நறுக்கிப் போட்டு வைக்கப்பட்ட பொடி அரைத்து வைத்த சாம்பாரின் ருசி என் நாவிற்க்கேறியதும் அன்றுதான்.

அவல் பாயசம் எனும் அற்புதத்தை நான் தரிசித்த நாளும் அன்று தான். ஓணம் மீது எனக்கிருந்த கசப்பை மெல்ல மெல்ல கரைக்கத் துவங்கியது.

கேரள இலக்கியத்திற்கும்,தமிழிலக்கியத்திற்குமான பரிமாற்றங்களில் எங்கள் குடும்பம் முழுமையாக ஈடுபட்டது.

பால் சக்கரியா, ஏ.ஐய்யப்பன், சந்தோஷ் ஏச்சிக்கானம் எனும் பெரும் படைப்பாளிகளில் ஆரம்பித்து மனோஜ் குருர் வரை ஷைலஜாவின் இரண்டாவது சகோதரி ஜெயஸ்ரீ தமிழுக்குத் தந்து ஓணத்தின் வாசனையை தமிழ்நாட்டிற்குப் பரவச் செய்தார்கள்.

என்.எஸ்.மாதவன், கல்பட்டா நாராயணன், எம்.டி.வி, கெ.ஆர்.மீரா, திரைக் கலைஞர். மம்முட்டி என கேரள ஆளுமைகளை அப்படியே தமிழ் இலக்கியப் பரப்பிற்கு ஷைலஜா கூட்டி வந்தாள்.

இதோ அசோகன்  செருவில்லின்  கதைகளை ஜெயஸ்ரீயின் மகள் சுகானா இப்போது மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறாள்.

ஓணத்திருவிருந்தின் போது புறக்கணிக்கப்பட்ட ஒரு பெரும் கவிஞன், யாரோ ஒரு பெயர் தெரியாத ஒரு குடும்பத்தலைவியல் அரவணைக்கப்பட்டது போல தமிழ்நாட்டின் ஒரு புறக்கணிக்கப்பட்ட நகரத்திலிருந்து நாங்கள் ஓணத்தை உள்வாங்கி கொண்டோம். ஒவ்வொரு ஓணமும் எங்களால் குதூகலமாக்கப்படுகிறது. அன்று ஒருநாள் எங்கள் தோழர்களும், தொழிலாளர்களும் கேரள உணவின் ருசியை புதிதாக்குகிறார்கள்.

ஒவ்வொரு பண்டிகைக்கென்றும் ஒரு தனி வாசனை இருக்கிறது. ஆடிக்காற்றின் அமைதிக்குப்பின் மழையும், வெயிலுமற்ற ஒரு பருவத்தில் வரும் இப்பண்டிகை எனக்கு நீரில் ஊறவைக்கப்பட்ட விதை நெல் வாசனையைத் தருகிறது. அது  கிறக்கத்தின் துவக்கம்.

சித்திரையில் வரும் விஷு எனக்குள் அறுவடைக்காலங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானிய வாசனையை நிரப்புகிறது. தமிழகத்தைப் போலவே கேரள மாநிலமே பண்டிகைகளால் உயிரூட்டப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

என் நண்பரும், கேரள திரை உலகின் மெகா ஸ்டாருமான மம்முட்டியின் மகன் துல்கரின் திருமண அழைப்பின் பொருட்டு ஒரு கிருஸ்துமஸ் நாளின் மத்தியானத்தில் நான், ஷைலஜா, மகன் வம்சி, மகள் மானசி என நாங்கள் நால்வரும் கொச்சின் நகருக்குப் பயணமானோம். நள்ளிரவில் அந்நகரை அடைந்த போது அந்நகரின் காட்சிகள் எங்களை உறைய வைத்த. சாலையோர பெருமரங்கள் சிறு விளக்குகளாலும் மரம் முழுக்க ‘ஸ்டார்களாலும்’ தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக்கொண்டிருந்தன.

நள்ளிரவில் நாங்கள் நடந்து சென்ற போர்ட் கொச்சினின் சாலைககளில் அன்றைய கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களும், குதூகலங்களும் மிச்சமிருந்தன. அவை எங்களுக்கானவை. தமிழ் நாட்டிலிருந்து வரும் தங்கள் விருந்தினர்களுக்கு கடவுளின் சொந்த பூமி விட்டு வைத்திருந்த கொண்டாட்டங்களின் சிந்தல். நாங்கள் மனதால் வசீகரிக்கப்பட்டோம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு வாசனை மிச்சமிருக்கிறது தானே?

ஒரு பிறந்த குழந்தையின் கழுவி முடிக்கப் பட்ட ஜனன வாசனையை அந்த கிருஸ்துமஸ்  எங்களுக்கு தந்தது. அது வாய்ப்பது மானுட பிறவியின் பெரும் பாக்கியம். அன்றிரவு அந்நறுமணத்தில்  நாங்கள் கிடந்தோம்.







Thursday, September 1, 2016

தன்னை முன்நிறுத்தத் தெரியாத துறவு நிலை...

க்ருஷியைப் பற்றிய நினைவுகள் மேலெழும்போதெல்லாம் மனதை இசை வந்து நிரப்பிக் கொள்ளும் எனக்கு. அதிலும் ஆராவாரமில்லாத வயலினும், புல்லாங்குழலும் மட்டும்.

எப்போதாவதுதான் பேசுவார்.

பேசுவதற்கு முன் ஜானகிராம் ஹோட்டல் ஸ்ட்ராங் காபியும், கூடவே ஒரு  கோல்ட் பிளாக் ஃபில்டரும், நிழல் விரிந்து பரவியிருக்கும் ஒரு மரத்தடியும் வேண்டும் அவருக்கு. அதிலும் பருத்த வேப்பமரத்தடி மனநிலையைக் கூட்டும்.

சா. தமிழ்ச்செல்வன், கோணங்கி, நாறும்பூநாதன், உதயசங்கர், சாரதி, அப்பணசாமி என எல்லோரின் வரிகளுக்கும் பின்னால் வாத்தியார் ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் க்ருஷியின் புன்சிரிப்பு ஒன்றுண்டு.

நேற்று காலை என்னை அழைத்தார். தொலைபேசியில் அவர் பெயரைப் பார்த்தவுடன் ஜானகிராம் ஹோட்டல் காபியும், வேப்பமர நிழலும் என்னைச் சுவையும்வெளியுமாக சூழ்ந்து கொண்டது. அது ஒரு பனிப்பொழிவின் புகைமூட்டம் மாதிரி.



அதிலிருந்து கொண்டுதான் கிருஷி சார்வாள் என்னைக் கூப்பிட்டார்.

அவருடைய ஒரு கையில் கோல்ட் பிளாக் ஃபில்டரும், இன்னொரு கையில் இம்மாத செம்மலரும் இருந்திருக்கக் கூடும்.

உதயசங்கரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை வரிவரியாய் வாசித்து வரிகளுக்கிடையே இசையை நிரப்பினார். அதிலும் புல்லாங்குழல் இசை மட்டுமே. அது மட்டுமே அதற்கானது எனத் தன் உரையாடலை ஆரம்பித்தார். பெரும்பாலும் மௌனம் காத்தேன். அவர் வார்த்தைகளில் தெறித்த இரண்டு மூன்று படிமங்கள் நான் இதற்கு முன் கேட்டறியாதது.

 ‘குருவோ, ஆசானோ இல்லாமல் சில ஊர்களில் அவன் பாட்டுக்கு எடுத்து நாதஸ்வரத்தை ஊத ஆரம்பித்து அதிலிருந்து உருவாகி வித்வானாகியிருப்பான். அவன் இசை யாருடையது மாதிரியும் இருக்காது. அது ரொம்ப ராவான அவனே உருவாக்கிக் கொண்டது. சாயல்களைத் தன் நாதஸ்வரக் கட்டைமீதுகூடப் படிய அனுமதிக்கமாட்டான். உன் எழுத்து அப்படிப்பட்டது. தொடர்ந்து வாசிக்கிறேன். யாருடைய சாயலும் அதிலில்லை

 ‘நான் காடு கழனியில் வளர்பவன் சார்வாள், என்னைச் சுற்றிலும் மிகமிக எளிய மனிதர்களின் சுவாசமும், பேச்சும், வாழ்வும் மட்டுமே நிறைந்திருக்கிறது சார்வாள். வாசிப்பிலிருந்து எனக்கு அனுபவம் மட்டுமே கிடைக்கிறது. எழுத்து அல்ல

மலையின் உச்சியில் தாங்க முடியாத குளிரினூடே நள்ளிரவில் தலைக்கும் சேர்த்து போர்வை போர்த்தி வெட்டவெளியில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது உள்ளடங்கிய மலைகிராமம் ஒன்றிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இசைச் சத்தம் மேலெழுந்து வருமே…’

 ‘சொல்லுங்க சார்வாள்.’

 ‘முதலில் வயலின், இல்லை புல்லாங்குழல், அப்புறம் தான் வயலின். கேட்டுக் கொண்டேயிருக்கையில் பறை. அது மனதையும் சேர்த்து மிகு விசையோடு கீழ்நோக்கி இழுக்கும். தன் பழைமையேறிய தோல்மீது கைகள் அதிரும் அதிர்வுக்கு அது உச்சியிலிருந்து உன்னைக் கீழே புரண்டு வரவழைக்கும்.

உன் இந்த எழுந்து என்னை அப்படி வரவழைத்தது பவா

நான் மௌனம் காத்தேன். இசையின் நடுவே சொல் எதற்கு?

அவர் வேப்ப மரத்தடியிலிருந்து அடுத்த காபிக்கு ஆர்டர் செய்வது இங்கிருந்தே கேட்டது.

கோணங்கிமதினிமார்கள் கதைஎன்ற தன் முதல் தொகுப்பை வாத்தியார் ராமகிருஷ்ணனுக்கும், பால்வண்ணத்துக்கும் சமர்ப்பித்திருப்பான்.

கலைஞர்களின் சமர்ப்பணம்தான் கிருஷியின் ஆகிருதி. அது தன் இயல்புக்கு வளைந்து, நெளிந்து, மேடேறி, பள்ளம் தாழ்ந்து, நொப்பும் நுரையுமாகப் போய்க் கொண்டிருக்கும் காட்டாறு. கரையில் நிற்கும் தங்க அரளிப்பூமரங்களும், சரக்கொன்றைகளும் அதன்மீது கொட்டும். அது தன் செம்மண் படிந்த தலையைச் சிலுப்பிவிட்டு, போய்க்கொண்டேயிருக்கும்.



ஒரு வகையில் க்ருஷியின் பயணம் அத்தகையதுதான். சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில், ‘கவிதை எழுதாத ஒரு கவித்துவமன முள்ள வாசகனைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன். இதோ கிடைத்துவிட்டான் என என் மனம் குதூகலிக்கும் போதெல்லாம் இதோ என் கவிதை’யென அவன் தன் பாக்கெட்டிலிருந்து தான் எழுதிய ஒரு தாளை உருவிவிடுகிறான்என எழுதியிருப்பார்.

க்ருஷிக்கும் அது நிகழ்ந்தது. தான் அவ்வப்போது எழுதி மண்ணில் மறைத்து வைத்த சில்லறைக் காசுகளை மண்ணோடும் துருவோடும் ஒருநாள் வெளியே எடுத்தார். புதைத்து வைத்த மண்ணைக் கிளற அவருக்கு ஒரு மழைத் தேவைப்பட்டது. அந்தப் பாதை அவர் மட்டுமேயறிந்தது. ஒரு சிறுமியின் பாவாடை நிறைய நிரம்பியிருந்த காட்டுப்பூக்களின் நறுமணத்தில் அவளே கிறங்கிப்போய்  தன் சக கூட்டுக்காரிகளுக்கு அதைப் பகிர்வதைப்போலமழைவரும் பாதையில்என்ற தன் நாற்பது வருடச் சேகரிப்பை நம்முன் வைத்தார்.

ஏதோ ஒர் அபூர்வ கணத்தில்தான் ஒரு கலைஞன் தான் யாரென முழுவதுமாய் வெளிப்படுவான். அப்படி ஒரு தருணம் பத்து வருடங்களுக்கு முன் எங்கள் நிலத்து பாதாம் மரத்தடியில் நிகழ்ந்தது,

நான், டாக்டர் கே.எஸ்., பரிணாமன், செல்வம் என நண்பர்களால் அம்மர நிழல் அடைபட்டிருந்த இளங்காலை நேரம் அது. மண் தரையில் போர்வை விரித்து உட்கார்ந்திருந்தோம். கே.எஸ். தன் பிரியமான ஓல்டு மங்க் விஸ்கியை கையிலேந்திக் கொண்டிருந்தார்.

தன்னைப் பற்றிய “ஒரு பாடலை பாடு” எனச் சூழல் உந்தித்தள்ள பரிணாமன் பாடினார்.

‘‘ஐந்து பூதத்தை
ஆண்டு நிற்கிறேன்
ஆறாவது பூதம்
நான் ஐந்தாவது வேதம்’’

எங்கள் எல்லோரையும்விட க்ருஷியை இந்த இசை நிரப்பியது. அவர் பேச ஆரம்பித்தார். தன் உப்புச்சப்பற்ற வாத்தியார் வாழ்க்கை, தன்னை வந்தடைந்த ரஷ்யப் பேரிலக்கியங்கள், மார்க்சிம் கார்க்கி, அன்னைவயல், மாயகோவஸ்கி, கு.அழகிரிசாமி, கி.ரா, டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை இதனூடே க்ருஷியை நாங்கள் முழுக்க உள்வாங்கிக் கொண்டோம்.

கே.எஸ். தன் கண்ணாடி டம்ளரை கீழே வைத்துவிட்டு,

நீங்க எந்த ஊரு சார்வாள்?’ என தன் உரையாடலைத் துவக்கினார். க்ருஷியின் சொற்கள் அவரை அநியாயத்திற்கு போதையேற்றியிருந்தது. நானும் க்ருஷி என்ற அக்கலைஞனை அன்றுதான் என்னுள் நிரப்பிக் கொண்டேன்.

கவிதையைவிட கவிதை மனநிலைகள் நிரம்பியிருந்த பக்கங்கள் அவை. கூர்ந்துப் பார்த்தால் ஏதோ சில பக்கங்களில் மயிலிறகும், பதப்படுத்தப்பட்ட அரச இலையும் ஒரு வாசகனின் விரல்களுக்குத் தட்டுப்படலாம்.

அடிப்படையில் க்ருஷி ஒரு ஓவியர்தான். வண்ணங்கள்தான் அவர் மனம். அது தமிழ்வாழ்வியல் மீது எத்தனையோ வண்ணங்களை வாரியிறைத்து அழகூட்ட நினைக்கிறது. பல வருடக் களிம்பேறிய அதன் பாசி படர்ந்த அடர் கறுப்பு அவர் கைகளைத் திரும்ப எடுக்க வைக்கிறது. அக்கேன்வாஸ் முழுக்க சாதியும், மதமும், வர்க்கமும் நிறைந்த கறுப்பு வர்ணத்தால் ஒரு இன்ச் கனத்திற்குத் தடித்திருக்கிறது.

வரைவதற்கு முன் ஒரு ஓவியன் இதைச் சுரண்டியாக வேண்டும். அதுவும் அவன் வேலைதான். ஒரு உதவியாளன் அதை அக்கறையின்றி அகற்றிவிடக் கூடும். ஒரு ஓவியனே அதையும் சேர்த்து செய்யும்போது கேன்வாசின் ஏதோ ஒரு மூலையில் அக்கறுப்பின் ஒரு திட்டை வேண்டுமென்றே விட்டு விடக்கூடும். இன்னும் ஓரிடத்தில் தேய்க்கப்பட்ட கறுப்பின் நிறத்திப்பியை அடையாளத்திற்காகக் கூட அப்புறப்படுத்தாமல் அதிலேயே இருக்கட்டுமென நினைக்கக்கூடும்.

அந்த வேலையைத்தான் அவர் இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து செய்வதாக எனக்குத் தோன்றும்.

குழைத்த வண்ணக்கலவை இன்னும் கேன்வாசில் ஏறாமல் குழைக்கப்பட்ட டப்பாவிலேயேதான் உலர்ந்து கிடக்கிறது. தினம் தினம் தனக்கு ஜானகிராம் ஹோட்டல் காபியைப் போல் அதற்குத் தாமிரபரணி நதிநீரை வார்க்கிறார் ஈரப்படுத்த.

நாற்பது வருடங்களாக ஒரு மனிதன் தான் வாசித்ததை, அதில் தனக்குப் பிடித்ததை, அந்தப் படைப்பாளிகளுக்குக் கடத்த நினைக்கும் மனமே நமக்கெல்லாம் வாய்க்காதது. அது தன்னை முன்னிருத்தத் தெரியாத ஒரு துறவு நிலை. க்ருஷியைப் போல எங்கெங்கோ சில அற்புதமான வாசகர்கள் அப்படியேயிருக்கிறார்கள். இன்னமும் கூட தன் பாக்கெட்டிலிருந்து கவிதையெழுதப்பட்ட ஒரு காகிதத்தை எடுக்காத லிங்கம் வேலூரில் இருக்கிறார். டால்ஸ்டாயும், தாஸ்தாவேஸ்கியும் தான் அவர் வாழ்வை முற்றிலும் நிரப்பிய இரு ஆளுமைகள். கமலாதாஸ் அவரின் மனதிற்கு நெருக்கமான இன்னொரு மனுஷி, எனக்கு ஒருமுறை கமலாதாசின் My Story-யைப் பரிசளித்துச் சொன்னார்.

இலக்கியத்தின் அதிகபட்ச நேர்மையை டால்ஸ்டாய், தாஸ்தாவேஸ்கிக்கு அப்புறம் இவளிடம்தான் தோழர் தரிசித்தேன்

என் கைகளில் அப்போது மாதவிக்குட்டி என்கிற கமலாதாஸை ஏந்திக் கொண்டிருந்தேன். இவளிடம் மேலோங்கிய உண்மையை எக்காலத்திலும் சிந்திவிடக்கூடாது என்ற இறுக்கம் என் கைகளுக்கிருந்தது.

ஒரு நல்ல படைப்பை வாசித்த விநாடி லிங்கம் அப்படைப்பாளியை அழைப்பார். தான் அப்படைப்பை அருந்துகையில் தனக்கேற்பட்ட புளிப்புச் சுவை, இனித்தல், குவளையின் அடியில் தேங்கிய மிகு கசப்பு எல்லாவற்றையும் அப்படியே அதை எழுதின கைகளுக்குக் கடத்தத் தெரிந்தவர் லிங்கம்.

அதனால் ஏற்பட்ட மனக் கசப்புகள், விலகல்கள், நிராகரிப்புகள் எதுவும் அவருக்குப் பொருட்டல்ல. சத்தியம்தான் இவை எல்லாவற்றையும்விடப் பெரிது. அதைத்தான் தன் ஆசான்கள் டால்ஸ்டாயும், தாஸ்தாவேஸ்கியும் தனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது அவர் உடலில் கூடுதல் ரத்த சதவீதமாக ஊறிவிட்டது.

க்ருஷியும் லிங்கமும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். நிமிர்வும், வளைவும் மனித உடலின் இயல்பு. அது பொருட்படுத்தத் தக்கதல்ல.



நெல்லையில் நடந்த தமுஎச-வின் ஒரு மாவட்ட மாநாட்டிற்கு முன்னிரவே போய்ச் சேர்ந்தபோதுதான் சிந்துபூந்துறையில் தாமிரபரணிக்குப் போகும் வழியில் ஒரு கறைபடிந்த வேட்டியோடு வண்ணமயமான தட்டி போர்டுகள் எழுதிக் கொண்டிருந்த க்ருஷியை நான் முதன்முதலில் சந்தித்தேன்.

அசைவு கேட்டு ஒரு நிமிர்வு. அவ்வளவுதான். அப்புறம் அந்த மொட்டை பிரஷால் தட்டிபோர்டில் எழுத்து, என் நினைவு சரிதானெனில் அப்போது அவர் நகுலனின் ஒரு கவிதையைஏன் இன்னமும் நினைவைக் கூர்மையாக்கினால்

இருப்பதற்காகத்தான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

என்ற வரிகளை எழுதிக் கொண்டிருந்த க்ருஷியின் கைகளையே  பார்த்துக் கொண்டிருந்தேன்.

விரலிலிருந்து உதிரும் சிகரெட் சாம்பலோடு, தூரமாய் விலகி வந்து நின்று அவ்வரிகளை வாசிக்கிறார்.

தன் தூரிகையால் அக்கவிஞனின் வரிகளுக்கு நியாயம் செய்திருக்கிறேனா என்ற ஒரு ஓவியனின் அக்கறை அது.

அதன் பிறகுதான் ஸ்ட்ராங் காபி, கூடவே புகைக்க சில சிகரெட் துண்டுகள்.

என்ன மாதிரியான வெளிகளில் எங்கள் கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏசியும், காரும், பிரிட்ஜூம் அவர்கள் நினைவுகளில் எப்போது தளும்பியது? தட்டிபோர்டும், போஸ்டரும், பசையும், பீ நாத்தம் வீசும் சுவர்களும்தானே எங்கள் இறந்தகால இரவுகளை நிரப்பியிருந்தன.

தமுஎச-வின் பல மாநாடுகளில் க்ருஷியை அருகிலிருந்து அவதானித்திருக்கிறேன். நிகழ்ச்சி நிரல்களின்படி அரங்கினுள் அமர்ந்து அவரைப் பார்த்ததில்லை.

அலைவுறும் கால்கள் அவருடையவை. மண்டபத்திற்கு வெளியே ஒரு பரந்தவெளியோ, மரநிழலோதான் அவருக்கான இருக்கை. தூய வெள்ளையில் வேட்டியும், சட்டையும், தோளில் எப்போதும் தொங்கும் ஜோல்னாப் பையுமாக பேசுவதற்கு அவரையொத்த மனமுடைய ஐந்தாறு தோழர்களோடு. அவ்வளவுதான். இடையிடையே டீயும், சிகரெட்களும் போதும். அவர்களுக்குச் சொல்ல அவரிடம் அனுபவச் செறிவுள்ள அத்தனை வாழ்வியல் அனுபவங்களும், வாசித்த இலக்கியமும், கேட்ட இசையும், சந்தித்த ஆளுமைகளும், அவர்களுடனான உரையாடல்களின் தேக்கமும் பெருகி வரும்.

சுந்தரராமசாமியின்குழந்தைகள், பெண்கள், ஆண்கள்நாவல் வெளியீட்டு விழாவில் ஜெயகாந்தன் பேசினார்.

அது ஒரு எழுத்தாளர்களுக்கான மூன்றுநாள் மாநாடு. இதே மெட்ராசில்தான் நடந்தது. ராமசாமியை அப்போதுதான் முதல்முறைப் பார்க்கிறேன். ஒரு வாத்சல்யம் என்னை உந்தியது. நானும் அவரும் அரங்கிற்கு வெளியே கைகளை சேர்த்துக் கொண்டோம். பேசினோம், பேசினோம், அப்படி ஒரு பேச்சு, எங்கெங்கோ நாங்களும், எங்களைத் தொடர்ந்து எங்கள் சொற்களும் கூடவே வந்தன.



எங்கு சாப்பிட்டோம், எங்கு தூங்கினோம். எதுவும் நினைவில் இல்லை. நாங்கள் பேசி முடித்திருந்த போது மாநாடும் முடிந்திருந்தது.

மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள், முகாம்கள் எல்லாமும் கலைஞர்களை ஒருமுகப்படுத்துகின்றன. ஒத்த மனநிலையுடைய கலைஞர்களை அது திறந்தவெளிக்குக் கைப்பிடித்து அழைத்துப் போய்விடுகிறது. அவர்கள் உலகம் அதுதான்.

ஸ்தாபனம் ஒரு ஹெட்மாஸ்டர் மாதிரியென்றால், சு.ரா.வை, ஜே.கே.வை க்ருஷியை பென்ச் மேல் நிற்க வைத்திருக்கும்.

ஒரு இலக்கிய அமைப்பிற்கு இதெல்லாம் தெரியும். இந்த சுதந்திரத்தை அது அனுமதிக்கும். அனுமதிக்குமென்ன... அவர்களுக்கும் சேர்ந்துதான் அது இயங்குகிறது. அவர்கள்தான் இயக்கத்தின் செல்லப் பிள்ளைகள்.

மூன்று வருடங்களுக்கு முன் திருவண்ணாமலையில் நடந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டு ஊர்வலத்தில் நான் கோவில்பட்டி சாரதியை அடையாளம்கண்டு போய் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

சாரதியும் க்ருஷியின் வார்ப்புதான்.

சாரதி

 ‘நான் இப்போ டெபுடி பி.டி..வா இருக்கேன் பவா.’

அந்த ஊர்வலத்தில் பல நூறு டெபுடி பி.டி..க்கள் எங்களைக் கடந்து போனார்கள்.

சாரதியை அதிலிருந்துக் கத்தரித்து டீக்கடைக்குக் கொண்டு வந்தேன். கரிசல் மண்ணிலிருந்து பல வருடங்களுக்கு முன் வந்தநெல்லுச்சோறுதொகுப்பில் அவன் கதை. முருகேஸ்வரி அக்காவை நினைவுபடுத்தினேன்

திருப்பித் திருப்பி அக்கதையிலேயே கிடந்து மூன்றுமுறை டீக்குடித்தோம். ஒரு டெபுடி பி.டி.ஓ பதவி சாரதியிடமிருந்த எல்லாக் கதைகளையும் குடித்துவிட்டிருந்தது புரிந்தது. என்முன் நின்று டீக்குடிக்கும் சாரதி அரசாங்கத் திட்டங்களை நிறைவேற்றி தரும் ஒரு அற்ப ஊழியன். ஆனால் சாரதியின் முருகேஸ்வரி அக்கா’ கதைபோல அவனின் வேலையற்ற நாட்களின் புழுக்கத்தில் எழுதிய ஆற்றாமையும், வெக்கையும் நிறைந்த கதைளை இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தின் பொருட்டு பலி கொடுத்த பல சாரதிகள், பல ஹேமாக்கள் நம் அலுவலகங்களில் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லௌகீகம் கேட்கும் முதல் பலியே நம் படைப்பையும் வாசிப்பையும்தான். நம் நுட்பங்களை ஈவிரக்கமின்றி அது சிதைக்கும். நம் அன்றாடங்களை அழுத்தும். திமிறி, தப்பித்து வர முடியாது நண்பனே. அதன் பிடி அத்தனை வலியது. அது நம் லௌகீக வாழ்வின் வெற்றியால் பின்னப்பட்ட இரும்புவலை.

ஒரு கலைஞன் எப்போதும் இதிலிருந்து வெளிப்படுகிறான். மெல்ல மெல்லவேனும் இந்த வலையை அவனே அறுத்தெடுத்து உதிரச் செய்கிறான். அதிலிருந்து வெளியேறும்போது வசீகரமிக்க, அவன் மனதுக்கு மிக நெருக்கமான ஒரு வாழ்வு அவன்முன் காத்திருக்கிறது.

க்ருஷியைப் போல பல மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் தனித்திருக்கிறார்கள். எந்தப் பதிவிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்காத கால்கள் அவருடையவை.

பலநூறு அற்புதமான கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை நமக்குத் தந்துவிட்டு மரணித்த இசக்கி அண்ணாச்சியை இன்றளவும் க்ருஷிதான் நமக்கு நினைவுப்படுத்துகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்து லௌகீக வாழ்வால் நசுக்கப்பட்ட டெரகோட்டா மாதவனின் சுடுமண் குதிரைகள் க்ருஷியாலேயே நமக்கு வந்தடைகின்றன.

திருவண்ணாமலையில் முப்பது வருடங்களாக, புரட்சி நடராஜன் என்ற தோழரை நானறிவேன். கருத்துவேறுபாடுகளால் இரவுநேர டீக்கடைகளைத் தங்கள் விவாதங்களால் நொறுக்கித் தள்ளும் அவரின் தோழர் என்.வெங்கடேசனையும் அவரையும் பல நள்ளிரவுகளில் கடந்திருக்கிறேன்.



அவர்களிருவரும் ஒரு தத்துவத்தை, கொள்கையை, இயக்கத்தை, அரசியலை, அதன் அமைப்பை விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டவர்கள். அது அவர்களின் ரத்தத்தோடு கால் நூற்றாண்டுக்கும் மேலே கலந்துவிட்டது.

இரவெல்லாம் டீக்கடையில் சண்டை போட்டாலும், காலை மறியலுக்கு ஒருவர் சைக்கிளில் இன்னொருவர் பின் அமர்ந்து செல்லப் பார்த்திருக்கிறேன்.

தோழமையின் உச்சம் அது. அவர்கள் வாழும் நிகழ் அவர்களால் சகிக்க முடியாதது. அவர்கள் விரும்பும் வேறொரு மானுட வாழ்வின் உலகம்தான் அவர்களின் லட்சியம். அதை நோக்கிய பயணம்தான் அது. விவாதங்களால், சண்டைகளினால் அப்பயணத்தை மேலும் மேலும் அர்த்தமுள்ளதாகவும், லகுவாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

எனக்கு இவ்விருவரும் மனதில் பதிந்த முன்மாதிரிகள். அமைப்பில், கட்சியில் அவர்கள் என்ன பொறுப்பிலிருக்கிறார்கள் என அவர்களைப் போலவே எனக்கும் தெரியாது. ஆனால் அவர்களின் இடைவிடாத பயணம்தான் என்னை ஆகர்ஷித்தது.

 ‘இந்தபுரட்சிஎன்ற பெயரை யார் தோழர் உங்களுக்கு வச்சது?’

எழுபது வயதில் ஒரு எலிமென்டரி ஸ்கூல் குழந்தை மாதிரி அவர் முகம் மலர்ந்து, கண்கள் விரிந்தன.

 ‘எமர்ஜென்ஸி பீரியட்ல, ஓயாமடத்துக்கு முன்னால செங்கொடிய யாரும் ஏத்த பயந்தப்போ, நான்தான் தோழர் ஒத்த ஆளாப் போய் நின்னு ஏத்தனேன். அப்பதான் நம்ம பொகையல காம்பு நடராஜன் தோழர் என்ன புரட்சி நடராஜன்னு மொத மொறையாக் கூப்பிட்டாரு

இவரை நீங்கள் எந்தச் சட்டத்திற்குள் அடைப்பீர்கள். இவர்தான் என் லட்சியவாதத்தின் எளிய உருவம்.

க்ருஷி, என்.வி, புரட்சி நடராஜன், திருபுவனம் கனகசபை எல்லோருக்கும் ஒரு பெருங்கனவிருக்கிறது. அதை உள்ளூர நம்புகிறவர்கள். அது ரத்தம் செறிந்த பெரும் பயணம்தான். இடையில் கனகசபை மாதிரி சிலர் மரணத்தால் உதிர்ந்தபோதும் எப்போதாவது இக்கால்கள் இவர்கள் விரும்பிய உலகை அடையும்.


அதுதான் நாம் அடைய விரும்பும் உலகமும்கூட. நான் இன்னும் கொஞ்சம் தாமதமாகத்தான் அவர்களை நெருங்க முடியுமெனத் தோன்றுகிறது

- நன்றி
இம்மாத செம்மலார்

மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்...

எனக்கென்று தனியாக நூலக அறையில்லை. புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பவனில்லை நான். அது கட்டிலில், சமையலறையில், முற்றத்திலென இறைந்து கிடக்கும். நண்பர்கள் யார் அவைகளை எடுத்துப் போனாலும் எப்போதும் வருத்தமிருந்ததில்லை. மாறாக சந்தோஷப்பட்டுக் கொள்வேன்.

அப்படியேத்தான் புகைப்பட சேகரிப்புகள் எதுவும் எண்ணிடமில்லை. பறவைகளின் எச்சத்தில் கலந்து ஈர பூமியில் விழுந்த பூசணிப்பூ கொடி ஒன்று வலுவாக கூரை மேலேறி கூரைத்தாங்காத பெரும் காய்களாக காய்த்து தீர்க்குமே அப்படி எப்படியோ என் கணிணியில் முப்பது அபூர்வ படங்கள் தங்கியிருப்பதை ஒரு நாள் கவனித்தேன்.

அவை ஒவ்வொன்றும் காலத்தை மீண்டும் என் முன் எடுத்து போடுபவை. கடந்து போன அந்நாட்களின் நினைவை மீட்டுபவை. அப்புகைப்படங்களுக்குள் காலம் உறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன். அவைகளை என் வாசகர்களுக்கும் கடத்திவிட வேண்டி ஒரு சிறு முயற்சிதான் இத்தொடர்.

பவாசெல்லதுரை






1992 

அப்போது மீட்சி, நிகழ் இனி இன்று, கல்குதிரை காலச்சுவடு என காத்திரமான சிறுபத்திரிகைகள் மட்டும் வந்து மனதை நிரப்பிக் கொண்டிருந்த காலம், யாருமே எதிர்பாராத ஒரு நாளில் கோமல் சாமிநாதனை ஆசிரியராகவும், இளையபாரதியை துணை ஆசிரியராகவும் கொண்டுசுபமங்களாஎன்ற சென்டிமெண்ட் பெயர் கொண்ட சிறுபத்திரிகையாயும் இல்லாமல், வெகுஜன பத்திரிகை மாதிரியும் இல்லாமல் ஒரு மாத இதழ் தமிழ் சூழலில் வெளிவந்தபோது, வாசிப்பின் பல்வேறு ருசி தேடி அலைந்து கொண்டிருந்த என்னை மாதிரி இளைஞர்களுக்கு அது முதன் முதலில் ஒரு பெண் உடலின் புது ஸ்பரிசம் மாதிரி சிலிர்ப்பானது.

அந்நிகழ்ச்சி சில நாட்களில் நினைவிலிருந்து அகன்றது. நிகழ்வு முடிந்து ஒரு தெருவோர பரோட்டாக் கடையில் சாப்பிட்டு முடிந்து அதன் எதிரிலிருந்த உடைந்து சிதிலமாகியிருந்த வாரவதியின் மீதமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கோமல், இந்திரன், .கந்தாமி, .தேவதாஸ், இளையபாரதி, ஜெயமோகன் இன்னும் அப்போது இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இரண்டு மூன்று இளம் வாசகர்கள்.

அதற்கு முந்தையசுபமங்களாவில் ஜெயமோகனின்ஜெகன் மித்யைசிறுகதை வந்து பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது (அப்போது ஜெயமோகனின் புனைவுகளும் சர்ச்சையானவையே)

கந்தசாமி சார் தன் வாழ்விலிருந்து அனுபவங்களை திரவமாக்கி எங்களுக்குப் பருகத் தந்தார்.

கூட்டம் துவங்குவதற்கு முன் கோமலும் இளையபாரதியும் யோகிராம் சூரத்குமாரை சந்திக்க வேண்டும் என ஆர்வப்பட்டதை அரைமணி நேரத்தில் நிறைவேற்ற முடிந்தது எனக்கு. சூரத்குமார் என்னோடு ஒரு நண்பனைப் போல பழகிக் கொண்டிருந்த நாட்கள் அவை.

கோமலின் கைகளை வெகு நேரம் அவர் பற்றியபடி உரையாடினார். இளையபாரதிக்கும் அதுவே. ஊது வத்தி புகையும், சார்மினார் சிகிரெட் புகையும் கலந்து சுழன்ற அவ்வறையிலிருந்து நாங்கள் மூவரும் வெளியே வந்து மரத்தேர் அருகில் நின்று பேச ஆரம்பித்தோம். இளையபாரதி அவர் கரங்களைப் பற்றிய விநாடி என்னுள் மின்சாரம் பாய்ந்து உடல் உதற ஆரம்பித்தது என்பதை கோமலுக்கு சொல்ல,

எனக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு சக மனிதனின் கைப்பற்றலுக்கு அதிகமாக அதில் ஏதுமில்லை எனச் சொல்ல,

‘‘உங்களால அதை உணரமுடியாது கோமல்’’ என பாரதி சொல்ல

‘‘நீ அடிப்படையிலேயே பலஹீனமான ஆள். நான் மார்க்சிய கல்வியிலிருந்து இப்படிப்பட்ட வெற்று நம்பிக்கைகளை உதறக் கற்றுக் கொண்டவன்’’ என அவர்களிருவரின் குரலும் உயர ஆரம்பிக்கும் முன் கூட்டம் துவங்கிவிட்டது.

நிகழ்வின் முடிவில் அவர்களிருவரும் அதுவரை பத்திரமாக காப்பாற்றிய கூட்டத்திற்கு முன் சூரத்குமாரின் சந்திப்பின் தொடர்ச்சியிலிருந்து துவங்கினார்கள்.

ஜெயமோகன் தனக்கு மிக பிரியமான மடாதிபதி கதைகள், சாமியார்கள், ஆஸ்ரமங்கள், ஞாநிகள் என விவரிந்துக் கொண்டே போக,

ஒரு சிறு பையனின் இத்தனை அனுபவங்களை அந்த மதிற்சுவர்மேலியிருந்த மனிதர்கள் வியந்து கேட்டுக் கொண்டிருக்கையில்

‘‘நானும் சூரத்குமாரும் சக பிச்சைக்காரர்களாக இக்கோவிலின் முன் ஒரு மாதம் கையில் திருவோடோடு நின்றிருக்கிறோம்’’ என்று அடுத்த அதிர்வை தன் சொற்களைக் கொண்டு உருவாக்கி மேலேறும்போது.

சென்னைக்கு போக வேண்டிய 122 பேருந்து எங்களை உரசிக் கொண்டு நின்றது.

அவசர அவசரமான கைக்குலுக்கல்களோடு இந்திரன், கோமல், இளையபாரதி பேருந்தில் ஏற நானும் ஜெயமோகனும் மட்டும் மீந்திருந்தோம்.

அங்கிருந்து சன்னதி தெரு இறக்கத்தில் அந்நள்ளிரவில் நடந்தே வந்தோம். இராஜராஜன் லாட்ஜில் அறுபது போய்க்கு நான் போட்டிருந்த சிறு அறை ஒன்று எங்கள் பின்னிரவு உரையாடலுக்கு விழித்திருந்தது.

அதன் காத்திருப்பை ஏமாற்றாமல் நாங்களிருவரும் பேச ஆரம்பித்தோம்.

அந்த உரையாடலின் நிறைவில்தான் ஜெயமோகன் தன் பையிலிருந்து ஒரு பெரிய கையெழுத்துப் பிரதியை என் கைகளுக்கு மாற்றி,

இது இதுவரை நான் எழுதிய சிறுகதைகளின் பிரதிகள். நல்ல பப்ளிஷர் கிடைக்கல. உங்களுக்கு கவிஞர் மீரா, நல்ல நண்பர் என்பது தெரியும். முயன்று பாருங்க பவாஎனச் சொன்னார்.

அடுத்த நாள் பதினோரு மணிக்குத்தான் இருவராலுமே எழ முடிந்தது. காலை உணவுக்கு அவசியமே இல்லாமல் அங்கிருந்த மேடேறி நாங்கள் இருவரும் நின்ற இடம் யோகிராம் சூரத்குமாரின் சன்னதி தெரு ஓட்டு வீட்டு வாசல்.

பெரும் சிரிப்பொலி சத்தத்திற்கிடையே அவர் இரும்பு கம்பியிட்ட கதவைத் திறந்து எங்களை உள்ளே அழைத்தார்.

ஜெயமோகனுக்கும் யோகிக்குமான துவக்கமே பெரும் சண்டையோடு ஆரம்பித்தது.

‘‘பிரமிள் உங்க நண்பரா?’’

‘‘Yes’’

‘‘பாலகுமாரன்’’

He is also my friend,

எப்படி ஒரே நேரத்தில் ஒரு மகத்தான கவிஞனோடும், ஒரு முனிசிபால்டி குப்பையோடும் உங்களால் நட்பாயிருக்க முடிகிறது?

யோகி தன் நீலநிறக் கண்களால் ஜெயமோகன் ஊருறுவினார். பார்வை ஜெயமோகனின் ஆழத்தைத் தொட்டிருக்கக் கூடும். ஆனாலும் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.

அத்தனை வாசித்த படைத்த ஒரு கலைஞனின் அகங்காரம் அது.

யோகிக்கும் அது இருந்தது. சதவீதம்தான் குறைவு. அவர் சட்டென தன்னை தளர்த்திக் கொண்டார். மூன்றாவது சார்மினரின் சாம்பல் அவர் வேட்டி மீது உதிர்ந்தது.

Yes, Balakumaran is my another friend. நான் ஒரு Begger. இந்த பிச்சைக்காரனுக்கு மானுடப் பிறவிகள் எல்லாருமே நண்பர்கள்தான் my dear friend.

மௌனமான உறைதலில் இதற்கு சம்மந்தமில்லாத அவர்முன் உட்கார்ந்திருந்த பக்தர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்கள். இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது போன்ற பாவனையில் நான் மனதளவில் விலகியிருந்தேன்.

ஜெயமோகன் விடுவதாயில்லை. நீங்கள் பிச்சைக்காரனில்லை. உங்களைச் சுற்றி இத்தனை கோட்டீஸ்வர பக்தர்கள். வசதியான வீடு, அடுக்கிக் கொண்டே போன ஆங்கில சொற்களை யோகி வழிமறித்தார். அவர்களிருவரின் தர்க மோதலில் அக்குளிர்ந்த கற் தரை சூடானது.

 ‘போதுமா யங் ரைட்டர். OK. நான் கோட்டீஸ்வர பிச்சைக்காரன்.’ என எங்கள் இருவர் கைகளிலும் இரு ஆப்பிள்களை திணித்தார்.


‘My father bless you’ என ஆசிர்வதித்தார். என்னை நாளைக்கு வருவாயா? எனக் கேட்டார். நான் தலையசைத்து விடை பெற்று ஜெயமோகனை பஸ் ஏற்றிவிட்டு தோளில் தொங்கும் ஜோல்னாப் பையோடு சைக்கிள் மிதித்தேன்.


- நன்றி
இம்மாத அந்திமழை