Friday, April 17, 2009

நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,

டாக்டர். கே. எஸ். சுப்பிரமணியன்


நண்பர் பவா செல்லதுரையின், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை, என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர் பவா இலக்கியக்களனில் ஒரு படப்பாளி; ஓர் ஆர்வலர்; ஒரு செயல்பாட்டளர் அல்லது தேர்ந்த இலக்கியவாதிகளை, வயது என்ற காரணியைப் புறந்தள்ளி விட்டு, இனங்கண்டு அவர்களுக்கு ஒரு களம அமைத்துக் கொடுப்பது; படைப்பாளி - வாசகர் சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில கருப்பொருள்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைக் கட்டமைப்பது - இவை போன்ற பணிகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருபவர் பவா. இன்று, அவரது நூலுக்கு வெளியீட்டு விழா என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளின் அடிநாதம் காட்டு மணம். காட்டின் குளுமையும், அச்சுறுத்தும் தன்மையும்; காட்டில் வியாபித்திருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள், பச்சிலைகள், மலர்கள், முட்கள், வனாந்திரத்தில் அலைந்து திரியும் விலங்கினங்கள்; பாடிப் பறந்து இனிமையை விநியோகிக்கும் பறவைகள்; வாழ்க்கைக்காக அயராது போராடி, அதே நேரத்தில் வாழ்க்கையை ருசித்து ரசிக்கும் வனவாழ் மக்கள், கானக மணம் நம்மேல் இதமாகக் கவிகிறது. வானம் பொய்த்தால், அம்மக்கள் எதிர்கொள்ளும் வரட்சியும் சோகமும் நம் இதயத்தில் வண்டாய்க் கரிக்கிறது.
காட்டைச் சார்ந்த, இத்தகைய அதீதமான மன ஆக்கிரமிப்பு அல்லது அள்ங்ள்ள்ண்ர்ய் ஏன் என்ற வினா இயல்பாக எழுகிறது. பாவவின் சொந்தஊர் காட்டின் எல்லையுடன் ஒட்டி உறவாடும் கிட்டத்தில் உள்ளது. அவரது தந்தையார் இருளர் இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தனர். பவாவின் பால்ய இருளர் இன மக்களாலானது.

இந்தப் பின்புலத்தில், ‘முல்லை’ என்ற பெயர் தாங்கிய முன்னுரையில் பவாவின் வாககுமூலம் அர்த்தம் உள்ளதாக விளங்குகிறது. இதோ பவா:
“ நான் திமிரத்திமிர காலம் என்னை அங்கிருந்து அறுத்துக்கொண்டு வந்து, இந்த நகரத்தில் போட்டது. என்னை ஆக்ரமித்த ஈரமான, குதூகல ஞாபகங்களை அதனால் இன்னும் கூட அழிக்க முடியவில்லை.
.............
நான் விட்டுப் பிரிந்த பதுங்குமுயலையும், ஒழக்குள்ள நரியையும், தவக்கரடியையும் சந்திக்கவே முடியாத துயரத்தை காலம் என்மேல் ஏற்றியிருக்கிறது. என் படைப்பின் மூலமாவது மீண்டும் அந்த நிலப்பரப்பை, பழங்களை, விலங்குகளை, பால்யகாலத் தோழர்களை சென்றடைய எத்தனிக்கும் முயற்ச்சியே இந்நூல்” என்கிறார்.
இம்முயற்ச்சியில் பவா கணிசமாக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டும் இல்லை அவரது காடுகள் பாலும், அங்கு வாழும் மக்கள் பாலும், ஓர் ஒற்றுணர்வை, ஓர் அன்யோன்யத்தை வாசகர்களிடமும் ஊக்கி யிருப்பது அவரது படைப்பாக்கத்தின் வெற்றி.

இத் தருணத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியக் களத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக நிலவிவரும் ஒரு செல்நெறியை விமரிசப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். பல்வேறு காரணிகளின் தாக்கத்தால், கிராமப் புறங்களிலிருந்து நகர்களையும் பெருநகர்களையும் நோக்கி புலம் பெயர்தல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது. இந்தப் பின்புலத்தில் இழந்த கிராம வாழ்வு சார்ந்த பின்னோக்கிய ஏக்கம் அல்லது சர்ள்ற்ஹப்ஞ்ண்ஸ்ஹ இயல்பாக விளைகிறது. இந்த யதார்த்தப் பின்னணியில் சொந்த மண்சார்ந்த ஏக்கம் ஒரு சோகமாக, ஒரு கையறு நிலையாக இலக்கியப் படைப்புக் கருவாக இடம்பெற்று வருகிறது. பல தரமான இலக்கியப் படைப்புகள் செழுமையான அறுவடையாக விளைந்துள்ளன.

இந்தத் திக்கில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்தப் பிரிவு ஏக்கம் நிரந்தரமான ஒன்று இல்லை. முதல் பத்தாண்டு காலத்தில் இந்த ஏக்கத்தில் உண்மை இருக்கும் காலப்போக்கில், புதிய களத்தில் இயன்ற அளவு புலம் பெயர்ந்தவன் காலூன்றுகிறான்,வேர் பாய்ச்சுகிறான். புதிய களத்தின் இயங்கு நெறிகளை உள்வாங்கிக் கொள்கிறான். புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்கிறான். அவனது சாமர்த்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்ப வெற்றி / தோல்வியை எதிர் கொள்கிறான். இது அவனது யதார்த்த இயங்கு களனாகவே உருப்பெற்று விடுகிறது.

மேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்த பின்பும், பின்னோக்கிய ஏக்கத்தைக் கட்டிக்கொண்டு புலம்புவது ஒரு மாயை ; ஒரு சுயஏமாற்று; ஒரு பொய்யான சுய ஒத்தடம். ஒரு படைப்பாளி இதைச் செய்யும் போது சுயஏôமாற்றுதலை மீறி இந்தப் போக்கு ஒரு பொய்யான வியாபார்ச் சரக்காகும் அபாயத்துக்கு ஆளாகிறது. இந்த சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ உத்தி, வேர்மண் விநியோகம் செல்லுபடியாகும் வியாபாரமாக வடுப்பட்டு விடுகிறது. இது குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற எல்லாத் திணைகளுக்கும் பொருந்தும்; எல்லா நிற மண்ணுக்கும் பொருந்தும்.

இரண்டு / மூன்று பத்தாண்டுகள் நகரிலோ, பெருநகர்லோ வாழ்ந்த பிறகு, தன் வேர்மண்ணிலிந்தே அந்நியப்பட்டுப் போதல் நிகழ்கிறது. இது ஒரு சோகம் இது ஓர் இழப்பு. நகர மண்ணிலும் வேர்பாய்ச்ச முடியாமல் இருப்பது ஒரு துயரமான இயலாமையும் உயிர்ப்புள்ள, படைப்புக்கு உகந்த கருப்பொருளாக அமையும்.

இந்தப் பின்புலத்தில் பார்க்கும் போதும், காடுகள் சார்ந்த பவா செல்லதுரையின் ககைகளில் வனாந்திர மணத்தில் கலப்படம் இல்லை, அவற்றில் உள்ள உண்மையின் கதகதப்பு நம்மைத் தொடுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை இனங்காண முடிகிறது. பவா இப்போது வாழும் திருவண்ணாமலை நகரம் அவரது படைப்புக் களனான காட்டுப் பகுதிக்கு மிகவும் அருகிலேயே உள்ளது என்று பவாமிடமிருந்து அறிகிறேன். இரண்டு: அவரது இயல்பான சார்பை ஒட்டி, பவா இருளர் இனத்தை, உள்ளடக்கிய வேர்மட்ட மக்கள் நலவில் தீவிரமான, தொடர்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். எனினும், காலம் போக்கில் பவாவின் படைப்புலகம் காட்டிலிருந்து மெல்ல விலகி நகர்ப்புற வாழ்வியல் கரிசனைகளை நோக்கிப் பயணிப்பது இயல்புக் கட்டாயம் என எண்ணுகிறேன்.

காட்டுமணம் முன்னுரிமை பெற்றுள்ள அதே நேரத்தில், இந்தத் தொகுப்பில்உள்ள கதைகள் அழகான ஒரு நிறப்பிரிகை போல் காட்சி அளிக்கின்றன. முத்தான கதைகள், ஒவ்வொன்றிலும் தனித்துவம் உள்ள நிகழ்வுக்களன்; இயல்பான மொட்டவிழ்ப்பு; இறுதியில் எதிர்பாராத ஒரு ‘சுளீர்’.

சிறப்பாக அமைந்துள்ள கதைகளில் ஒரு சிலவற்றையாவது தொட்டுச் செல்லாவிட்டால் என் உரை மூளியாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு.

‘’ஏழுமலை ஜமா’ பின்னோக்கிய ஏக்கத்தின் வார்ப்படம். கோணலூர் ஏழுமலை. கூத்து ஐமாவின் முக்கிய அங்கம். வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அவனை பெங்களூருக்குத் தள்ளியது. சில ஆண்டும் பெருநகர வாழ்க்கை அவனுக்கு மூச்சு முட்டியது பாட்டின் சத்தமும், லயமும், பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகளும்; அவனை பஸ் ஏற்றி விட்டிருந்தது. கிராமத்தின் முகமோ மாறியிருந்தது. சினிமா ஸ்டார்களின் ஆக்கிரமம் மதுவில் மனவேதனையை மழுங்கடிக்கும் முயற்சியூடே தொலைவிலிருந்து கூத்துப் பாட்டின் மெலிந்த ஒலி ஒலி நோக்குத் தள்ளாடுகிறான். ஜமாவில் சங்கமிக்கிறான். சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ வின் கலாநேர்த்தியான, உள்ளத்தைத் தொடும் படைப்பு.

‘வேட்டை’ வேட்டைதான் ஜப்பான் கிழவனின் குலத்தொழில்; வாழ்வாதார ஈடுபாடு. அவனது கண்ணின் வீரியமும், கண்ணியின் வெறியும், அம்பின் குறியும் எதையும் தப்ப விடாது. பறவையாயினும் சரி, குஞ்சானாலும் சரி; காட்டுப் பன்றியாயினும் சரி, குட்டியாயினும்சரி. ஒரு பேரிழப்பு; அதைத் தொடர்ந்து ஒரு ரசவாதம். இதோ பவா:

“ ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து.... ஜன்னி வந்து செத்துப் போனதுக்கு அப்புறம் ..... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக”.

‘சத்ரு’: அருமையான சிறுகதை வடிவத்துக்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு பொட்டு இருளனின் திருட்டு சாகசங்கள் அந்த மலைக்காட்டுப் பிரதேசத்தில் அவனுக்கு ஓர் இதிகாச பிம்பத்தை உருவாக்கி இருந்தது. காட்சி மாற்றம். பல்லாண்டு வரட்சியில் வதங்கி ஒடுங்கிப் போயிருந்தது கிராமம். இறுதி முயற்சியாக சாமிக்குப் படையால். மணி மணியாகச் சேகரித்த சோளம் மாவாக்கப்பட்டது. அதிலேயே கைவைத்துடன் உயிர்மாய்க்க உறுதிபூண்டது கிராமம். திடீரென்று, ‘மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது. பூமி நனைகிறது; உள்ளம் குளிர்கிறது; வன்மம் மறைகிறது.

இனி ஜென்மத்தும் திருடாத மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா போ, போய் பொழச்சிக்கோ, எல்லோர் குரலும் நனைந்திருந்தது

சினமும், சீற்றமும் கருணையாய்ப் பரிணமிக்கும் மந்திர தருணத்தில் நாமும் நனைந்து கரைகிறோம். நம்மை அறியாமல் நம் கண்கள் பனிக்கின்றன.

பவாவின் இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டத்தக்க இன்னோர் அம்சம் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி. வீரியமும், நளினமும், கவித்துவமும் இயல்பான மீட்டலில் நம்மைத் தொடுகின்றன.

பல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்கள்; சிங்காரக் குளத் தண்ணீர் முழுவதுமே, ‘பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா?’ என்ற பிரமிப்பு; ‘மண்ணில் ஊனப்பட்ட விதைகளில் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பாதிப்பாதி கண்கள் முறைத்தும், மறைந்தும் போக்குக் காட்டிடும்’ காட்சி; ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களில் காத்திருத்தல்,’ பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு, அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த யாருமற்ற தனிமை - இவ்வாறு கவித்துவம் நம்மை ஆங்காங்கு ஆலிங்கனம் செய்கிறது.

இறுதியாக, வரட்சியின் வெம்மையையும், பஞ்சத்தின் குரூரத்தையும் நம் கண்முன் நிறுத்தம், கந்தகச் சொற்களால் வடிக்கப்பட்ட சித்திரம்:“ தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.

பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில், உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபத்தில் மீந்தது”.

சொல்லின் சக்தியை நம்முள் விதைத்து, நம் உள்மன ஆழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். படைப்பாளி. பவாவின் படைப்புலகம் மேலும் ஆழமும், அடர்த்தியும் கொண்டு சிறக்க என உளமார்ந்த நல்லாசிகள்.

2 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றி, மகிழ்ச்சி, கண்டிப்பாக வாங்கி வாசிக்க முயலுகிறேன்.

    குப்பன்_yahoo

    ReplyDelete