Friday, May 28, 2010

தாய் வீடு


என் எழுத்தாளர் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் மீடியாக்களில் வருவதை எப்போதும் தான் விரும்புவதில்லை என்று சொல்லுவார், ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அவர் சந்தோஷப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அது நம் இருப்பை சொல்கிறது, சக நண்பர்களின் உரையாடலை சமீபப்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மனிதர்களிடம் நம்மை அடையாளப்படுத்தி சந்தோஷமோ, சங்கடமோ கொள்ள வைக்கிறது.

சமீபத்தில் என் குடும்பம் பற்றி ஒரு முழுப்பக்க கட்டுரை கேரளா "தேசாபி மானியில்" "தாய் வீடு" என்ற தலைப்பில் வெளியாகி மூன்று, நான்கு நாட்கள் கேரளாவிலிருந்து நண்பர்களும், உறவினர்களுமாக தொலைப்பேசியில் அழைத்து பேசி நெருக்கத்தை அதிகப்படுத்தினார்கள். நம் மனோஜ் தான் (புனைவின் நிழல்) காசர்கோட்டில் உள்ள தன் சகோதரியின் வீட்டிலிருந்து அதிகாலையில் தேசாபிமானியை பார்த்து என்னை எழுப்பினார். ஆனாலும், மலையாள இளம் சேச்சிகளின் தொலைபேசி குரல்களுக்காக ஏங்கினேன். ஜோதிர்மையி சாருவிடம் என் தொலைபேசி எண்ணை கேட்டிருக்க கூடும் என்ற அற்ப சந்தோஷம் ஒரு நிமிடம் நீடித்தது அப்படிப்பட்ட எதுவும் என்னைப் போன்ற துர்பாக்கியசாலிகளுக்கு எப்போதும் வாய்க்காது. சாருவிற்கும், அய்யனாருக்குமே மொத்த பாக்கியமும் போய்ச் சேரக்கடவது.

இக்கட்டுரையை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவசர அவசரமாக ஜெயஸ்ரீயும், சுகானாவும் மொழிபெயர்த்தனர்


தாய்வீடு
- ஷபீக் அமராவதி

எழுத்துகளின் தூய்மையும், நெருக்கதையும், விவாதத்தையும், சக்தியையும் இதயத்துடிப்பையும் சேர்த்து வைத்து பாலம் கட்டுவது, அதனூடாக மலையாளம், தமிழுக்குள் கரைந்து கொள்வது.

என்.எஸ். மாதவனும், பால் சக்காரியாவும், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஏ. அய்யப்பனும், சந்தோஷ் ஏச்சிக்கானமும் கே.ஆர். மீராவும், பிரபஞ்சனுக்கும், அசாகமித்ரனுக்கும், கோணங்கிக்கும், நாஞ்சில் நாடனுக்கும், வண்ணதாசனுக்கும், கனிமொழிக்கும், மனுஷ்யபுத்திரனுக்குமிடையில் கரைகிறார்கள்.

தமிழ், மலையாள இலக்கியங்களுக்கிடையில் சங்கமிக்கவைக்கிற ஒரு பாலத்தைப் பற்றியும், அதற்கு குறுக்கும் நெடுக்குமாக ஸ்தூலமாய் தாங்கி நிற்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது.

தமிழ்நாட்டில், திருவண்ணாமலை நகரில் பெயரிடப்படாத அந்த வீட்டின் முகவரிதான் 19, டி.எம். சாரோன்.

தமிழின் இனிமையும் மலையாளத்தின் அழகும் கலந்திருக்கும் இந்த இரண்டு அடுக்குமாடி வீட்டின் மர நிழல் வரவேற்கும் வாசலில் கைகூப்பி வரவேற்க, பவாசெல்லதுரையின் அம்மா தனம்மாவும், ஷைலஜாவின் அம்மாவான கேரளத்து மாதவி அம்மாவும் இருக்கிறார்கள். இரண்டு அம்மாக்களின் கருணையும் பிரியமும் விளங்கும் இந்த இடம், இந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக இருக்கிறது. இங்கே தமிழும், மலையாளமும் இழைகளாகப் பின்னிப் பிணைந்து பேசி, பழகி, அற்புதப்பட்டு, விவாதித்து ஒன்று சேர்ந்திருக்கும் மலையாளத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிற இலக்கியங்களை இந்த வீட்டின் வாசலினூடாகஎன்.எஸ். மாதவன், கெ.என். பணிக்கர், எ. அய்யப்பன் முதல் எட்டாம் வகுப்பு மாணவி சிபிலா மைக்கேல் வரை தமிழகம் ஏற்றுக் கொண்டது, இவர்களினூடாகத்தான்.



தமிழ் நவீன எழுத்தாளர் பவா செல்லதுரைதான் இந்தப் பாலத்தின் முதுகெலும்பு. மனைவியின் அம்மா மாதவியம்மாதான் இதைத் தாங்கி நிற்கும் தூண்.
இந்தக் குடும்பத்தின் நான்கு ஜீவன்களுக்குத்தான் இந்தத் தூணில் பாலத்தை முழுமையாக்கிய பொறுப்பு உண்டு. பவாவின் மனைவி ஷைலஜா, ஷைலாஜாவின் அக்கா ஜெயஸ்ரீ, ஜெயஸ்ரீயின் கணவர் தமிழனான உத்திரகுமாரன், இவர்களுடைய மகள் சுகானா. மலையாளத்தின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கூட காலடியெடுத்து வைக்காமல் இத்தனை முக்கியமான மொழி பெயர்ப்பாளர்களாக உயர்ந்திருக்கின்றனர். பவா அவர்களுக்கு பாதையமைக்க, மாதவியம்மா வார்த்தையெடுத்துக் கொடுக்கிறார். பல விதமான விருந்துகளினூடே பவாவின் அம்மா தனம்மாளும் இதில் பங்கெடுத்துக் கொள்கிறார்.

பாலக்காடு பறளியைச் சேர்ந்தவர் மாதவியம்மா. முண்டூர் அரசினர் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். பாலக்காடு சிவில் ஸ்டேஷனுக்கு அருகில் கல்லேக்காடு வாசுதேவனின் வாழ்க்கைத் துணையானார். முதலில் வாசுதேவனின் சேலத்து அக்கா வீட்டிலும் பின்னர் திருவண்ணாமலையிலுமாக வசிக்கத் தொடங்கினர். மலையாளத்தை மறக்காமல் இருந்த மாதவியம்மா வாசிப்பை உயிரென தொடர்ந்தார். இவர் மூலம் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும், பேத்தி சுகானாவும் மலையாளத்தை பேச்சு - எழுத்து மொழிகளால் நிறைத்தார்கள். மாதவியம்மாவோ தன் மூத்த மகளின் பாடபுத்தகத்தைத் துணையாக்கி தமிழ் எழுத்துலகத்துக்குள் பிரவேசித்தார். வாசுதேவனின் மறைவுக்குப் பின் வாசிப்பு மாதவியம்மாவின் மறுபாதி ஆனாது. பவா-ஷைலஜாவின் குழந்தைகளான ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வம்சியும் இரண்டாம் வகுப்பில் படிக்கும் மானசியும் ஜெயஸ்ரீயின் மகன் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் அமரபாரதியும், மாதவியம்மாவின் தாய்பள்ளிக்கூடத்தின் புதிய மாணவர்கள்.

எழுத்தாளன், அரசு ஊழியன், விவசாயி, சமூகப் பணியாளன், பேச்சாளன், என்பதன் கூட்டுக் கலவையின் மொத்தமே பவாசெல்லதுரை. திருவண்ணாமலை மின்வாரியத்தில் அட்மினிஸ்ரேடிவ் சூப்ரவைசராக இருக்கிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும், அமைப்பாளராகவும், பேச்சாளருமாக இருப்பவர். +1 மாணவராக இருக்கும்போதே பந்தங்களையும், அதன் சிக்கல்களையும் விசாரணை செய்யும் விதமாக, "உறவுகள் பேசுகின்றன" என்ற நாவலின் மூலமாகத்தான் பவா 1983 இல் எழுத்துலகில் பிரவேசிக்கிறார். 89இல் "எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்" கவிதைத் தொகுப்பு மூலமும் 90 இல் முகம் என்ற தனது முதல் சிறுகதை மூலமும் தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமாகிறார். 2008 மார்ச்சில் அவருடைய முதல் கதைத் தொகுப்பு "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" வெளிவந்தது. நவீனத் தமிழிலக்கியத்தின் கவனிக்கத்தக்க பத்து எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது விமர்சகர்களின் கருத்து. உலகத் தரமான தமிழ்க் கதைகளின் முன்னால் நிற்கும் எழுத்து இவருடையது. இப்போது புதிய ஒரு நாவலின் உருவாக்கத்தில் இருக்கிறார்.

பட்டதாரி மாணவியாக இருக்கும்போது கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருந்த ஷைலஜா திடீரென எழுதுவதை நிறுத்திவிட்டார். தன்னைவிட 2 வயது மூத்தவரான பவாவையும் அவருடைய எழுத்துகளையும் நெருங்கியறிந்ததாலும் அவர் மூலமாக அறிமுகமான நவீன இலக்கிய வாசிப்பினாலும் இது நிகழ்ந்தது என்கிறார் ஷைலஜா. இவர் படித்த திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் சீனியர் மாணவராயிருந்தார் பவா. அன்றே இலக்கிய மேடைகளில் கவனிக்கத்தக்க பேச்சாளன், கவிஞன். இப்படியான இலக்கியக் கூட்டங்களில் மூலம்தான் பவாவுடன் நட்பான இந்த சகோதரிகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகள் வரை கொண்டு சேர்த்தது. இப்போது சங்கத்தின் மாநில செயற்குழுவில் பவாவும், மாநிலக்குழுவில் ஷைலஜாவும்.

தீவிர வாசிப்பினூடே மலையாளப் புத்தகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் ஜெயஸ்ரீயும், ஷைலஜாவும் திரும்பவும் எழுத்துலகில் கால் பதித்தனர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை நடத்திய இலக்கிய சந்திப்பான "முற்றம்" நிகழ்ச்சியில் பேசிய பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் மலையாள உரையை தமிழ்படுத்தியதுதான் ஷைலஜாவின் முதல் மொழிபெயர்ப்பு அரங்கேற்றம். அந்தச் சந்திப்பிலேயே தன் "சிதம்பர நினைவுகளை" மொழிபெயர்ப்பு செய்வதற்கான அனுமதியையும் பாலச்சந்திரன் அளித்தார். தொடர்ந்து என்.எஸ். மாதவனின் "பரியாய கதைகள்" கூக்குரல், சாராஜோசப், என். பிரபாகரன், ஆர். உண்ணி ஆகியோரின் கதைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டு மொழிபெயர்த்தார். "சூர்ப்பனகை" என்ற பெயரில் மொழிபெயர்த்த கெ.ஆர். மீராவின் "மோகமஞ்சள்" என்ற கதைத் தொகுப்புதான் அவருடைய சமீபத்திய வரவு. குடும்ப நண்பரான நடிகர் மம்முட்டியின் "காழ்ச்சப்பாடு" என்ற சுயசரிதையும், இ.எம்.எஸ். பற்றிய, அவரது மகள் இ.எம். ராதாவின் நினைவுக் குறிப்புகளும் இனி அடுத்ததாக ஷைலஜாவின் மொழி பெயர்ப்பில் வெளிவரப்போகிறது. குறைந்த காலத்துக்குள் தமிழ்நாட்டின் முற்போக்கு புத்தக வெளியீட்டாளர் என்ற பெயர் பெற்ற "வம்சி புக்ஸ்" நிறுவனத்தின் உரிமையாளராகவும் ஷைலஜா விளங்குகிறார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி தான் இவருக்கு பதிப்பகம் துவங்க ஊக்கமளித்தவர். "திலகவதியின் குறுநாவல்கள்" தான் வம்சி புக்ஸின் முதல் புத்தகம். 2004 மே 29இல் ஆரம்பித்த வம்சி இதுவரை 130 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. ஜோதிடம், வாஸ்து, ஆன்மீகம் என்பவற்றைப் பரப்பும் புத்தகங்களுக்கான மை வம்சியில் எப்போதும் இல்லை.
புத்தக வெளியீட்டாளர் என்பதற்குமேல் திருவண்ணாமலையின் இடதுசாரி கலாச்சார மையமுமாக விளங்குகிறது மத்தலாங்குளத் தெருவிலுள்ள வம்சி புத்தக மையம்.

ஜவுளி வியாபாரியாக இருந்த உத்திரகுமாருடன் அடிமாலியில் வாழ்ந்த நாட்களில்தான் ஜெயஸ்ரீ தன் எழுத்துலகில் நுழைகிறார். மாத்ருபூமி நாளிதழில் "நிலவில் கால்வைத்தது கட்டுகதையா?" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை 2002 இல் தமிழில் மொழிபெயர்த்தது தான் தொடக்கம். பிறகு அடிமாலியைச் சேர்ந்த சியாமளா சசிகுமாரின், "நிசப்தம்" என்ற கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்தார். பால் சக்கரியாவின் பெண்கதைகள், குறுநாவலான "இதுதான் என் பெயர்" சாகித்ய அகாடமிக்காக "சக்கரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கதைகள்" எ. அய்யப்பனின் "கல்கரியின் நிறமுள்ளவர்கள்" சந்தோஷ் ஏச்சிக்கானத்தின்" ஒற்றைக் கதவு", "கவிதையும் நீதியும்" என்ற தலைப்பில் சுகதகுமாரியுடன் கவிஞர் விஜயலட்சுமி நிகழ்த்திய நேர்காணல் என மலையாள இலக்கியச் செல்வங்களை ஜெயஸ்ரீ தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
கேரள வாழ்க்கையிலிருந்து மலையாளத்தைக் கற்றுக் கொண்ட உத்திரகுமாரன், ஜி.என். பணிக்கரின் "தாஸ்த்தாவேஸ்கியின் வாழ்வும் கலையும்" என்ற புத்தகத்தை மொழிபெயர்த்தார். சேகுவராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "மோட்டார் சைக்கிள் டயரீஸ்" இன் தமிழ் திரைக்கதையையும் மொழி பெயர்த்துள்ளார். மகளான சுகானா எட்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது, திருவனந்தபுரம் மண்ணந்தல எஸ்.இ. தாமஸ் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்த சிபிலா மைக்கேலின் "மறையுந்ந தீரம்" என்ற கதைத் தொகுப்பை "எதிர்பாராமல் பெய்த மழை" ஏன்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார். பவா-ஷைலஜாவின் மகனான வம்சி இரண்டாம் வகுப்பு மாணவனாக இருக்கும்போது வரைந்த ஓவியங்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்போது "ஆன் பிராங்க் டைரியை" மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் சுகானா. சாரோனிலேயே வேறொரு தெருவில் இந்தக் குடும்பம் வசித்துக் கொண்டிருந்தாலும் 19. டி.எம். வீட்டின் தொடர் இலக்கிய விவாதங்களில் தவறாமல் பங்கெடுத்துக் கொள்கிறது.



திருவண்ணாமலைக்கருகில் வாணாபுரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரான ஜெயஸ்ரீயும், வியாபாரியான உத்திரகுமாரும் வேலைப் பளுவிற்கு இடையிலும் புத்தகங்களோடு தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.

அறிமுகப் படுத்துவதற்கும் மேலாக, மலையாள இலக்கியத்தைப் பற்றிய கௌரவமான தேடல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இந்தக் குடும்பத்தின் முயற்சிகள் களம் அமைக்கிறது. காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பி.ஏ. தமிழ்ப் பாடப்புத்தகமாக இருக்கிறது ஷைலஜா மொழிபெயர்த்த "சிதம்பர நினைவுகள்". தன்னாட்சிக் கல்லூரியான திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் எம்.ஏ. முதல் வருடப் பாடப்புத்தகமாக உள்ளது ஜெயஸ்ரீ மொழி பெயர்த்த "நிசப்தம்". அதே கல்லூரியின் பி.ஏ. இளங்கலை பாடப்பிரிவிற்கு பவா செல்லத்துரையின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" பாடபுத்தகமாக இருக்கிறது. என்.எஸ். மாதவனின் பரியாய கதைகளின் தமிழ் பெயர்ப்பான "சர்மிஷ்டா" வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களும் தமிழகத்தில் உள்ளனர்.
”நிசப்தம்” திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் விருதும், எ. அய்யப்பனின் ”வார்த்தைகள் கிடைக்காத தீவில்” கவிதைத் தொகுப்பிற்கு திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும் கிடைத்துள்ளன. புத்தக வெளியீட்டிற்கும் மேலாக, கேரளத்தின் சின்னச் சின்ன விவாதங்களுக்குக் கூட எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்கிறது இந்தக்குடும்பம்.

கேரளத்தில் பால் சக்கரியா கொளுத்திவிட்ட விவாதமும், இப்போதைய மலையாள சினிமாப் பிரச்சினையும் கூட 19. டி.எம். சாரோனில் தொடர்விவாதப் பொருளாகின்றன.

இந்த வீட்டில் சமையல் உதவியாள் லதா கூட தண்ணீர் கேட்டால் ”வெள்ளம் வேணுமோ” என்று மலையாளத்தில் திரும்பக் கேட்கிறாள். அங்கே சென்று நாம் தமிழைத் தேடும்போது இவர்கள் மலையாளத்தைத்தான் தேடுகிறார்கள். அங்கேயிருந்து வெளியேறினால் நாம் தமிழை விட்டுவிடுவோம் சொந்த நாட்டை விட்டு வெளியேறினால் நாம் மலையாளத்தை மறப்பதுபோல. இப்போதும் இவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை விட அவர்களின் ப்ரியமான மலையாளத்தை.


8 comments:

  1. திருவண்ணாமலை என்றாலே முதலில் கோவிலும் பின் உங்கள் வீடும்தான் நினைவுக்கு வரும். ஷைலஜாவிற்கும், ஜெயஸ்ரீக்கும், அம்மாக்களுக்கும், பிள்ளைகளுக்கும் என் ப்ரியங்களை சொல்லிவிடுங்கள்..எனக்கும் வெள்ளம் கொடுத்த லதாவிற்கும்தான்... அருமையான பதிவு பவா. மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

    ReplyDelete
  2. BAவா.குடும்ப,எழுத்துப் பணிகள் பற்றிய நிறைவான கட்டுரை.தேவையற்ற தகவல்களும் இல்லாமல்,தேவையான தகவல்களும் விடுபடாமல் எழுத்தாளர் பற்றி அறியத் தூண்டும்
    சிறப்பான கட்டுரை.பாவாவின் புதிய நாவல் விரைவில் வர வேண்டுM

    ReplyDelete
  3. படிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கூடவே இருந்தும் இத்தனை சிறப்பாய் பதிவு செய்யாதிருந்திருக்கிறேன் என்பது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

    மற்றபடி உங்களின் ஆசி அப்படியே பலிக்கட்டும் :)

    ReplyDelete
  4. THANKS FOR SHARING BAVAA, NICE ARTICLE, THANS TO DESA ABIMAANI

    ReplyDelete
  5. சந்தோசமாக உள்ளது! இப்போது நான் கேரளத்தில் இருப்பதால் இரட்டை சந்தோசம்! கறிமீன் கழிச்ச சந்தோசம்! வாழ்க நீங்கள்! இன்னும் நிறைய நிறைய படைக்க என் வாழ்த்துக்கள்! காலமெல்லாம் காதல் வாழ்க!
    இக்பால்

    ReplyDelete
  6. ungal anaivaraiyum pukaippadaththil ulla athe idaththil santhikkum peru petren. mikavum perumaiyaka irukkirathu ungalai ninaikkaiyil.intha unarvai neril velippaduththa mudiyathu enpathuthan en sikkal.

    ReplyDelete
  7. particularly your son said when iam leaving that come uncle , at next time also.
    i cannot forget that love. so i will come next time also.is it ok? :)

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி. படைப்பாளிகளுக்கு இத்தகைய கவனிப்பு, நல்ல ஊக்க மருந்து.

    தேசாபிமானி கட்டுரையின் மொழிபெயர்ப்பும் அதன்வழி கிட்டும் மூலத்தின் நடையும் நன்று.

    இந்தக் குடும்பத்தின் இலக்கியப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete