Monday, October 24, 2011

தொடர் - 12


சல்வடோர் டி விட்டாவின் சினிமா பாரடைஸ் என்ற உலகப் புகழ் பெற்ற இத்தாலியப் படத்தில், அப்படத்தின் நாயகன் பெரிய இயக்குநராகி திரும்பித் தன் நகரத்துக்கு வந்து அவனை இப்படி ஓர் இயக்குநராய் உயர்த்திய சிதிலமடைந்த அத்திரைப்பட அரங்கின் முன் நிற்கிற துயரம் எப்போதும் என்னுள் வந்து வந்து போகும் காட்சிப் படிமம். இதற்குச் சற்றும் குறைவில்லாத மனநிலையை எங்கள் ஊர் ராமலிங்கனார் தெரு மூலையில் சிதைந்து போயுள்ள மீனாட்சி தியேட்டரைப் பார்க்கும் போதெல்லாம் அடைந்திருக்கிறேன். அதைக் கடக்கும்போதெல்லாம் , துருப்பிடித்த அதன் மூடிய இரும்பு கேட்டைத் திரும்பிப் பார்ப்பேன். ஒரு துக்கம் உடல் முழுவதும் பரவுவதை உணர்வேன். யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத, வார்த்தைகளில் கூடாத மன உணர்வு அது. ஒரு கிழட்டு வேசியின் அந்திம காலத் துயர வாழ்வை மீட்டுவது போன்றது.

ஆறரை மணிக்குத் துவங்கும் பஸ்ட் ஷோ பார்க்க நாலு மணிக்கெல்லாம் வீட்டை விட்டுப் புறப்பட்டு கியூவில் முதல் ஆளாய் நிற்க ஆரம்பித்தாலும், ஒரு போதும் முதல் டிக்கெட்டை நான் வாங்கினதாய் நினைவில்லை. மனிதர்களின் அசுர நெரிசலில் நான் நசுங்கியும், பின்னோக்கி இழுத்து விடப்படினும்கூட ஒவ்வொரு படத்தையும் வியர்வையினூடே பார்த்த நினைவுகள் மேலிடுகிறது.

அத்தியேட்டரில் நான் பார்த்த தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்த முடியாது. ஆனால் பாரதிராஜாவின் நிழல்களை முதல் நாள் முதல் காட்சியில் மூன்றாம் ஆளாக டிக்கெட் வாங்கி, மனித ஆரவாரங்களினூடே பார்த்த நாளின் ஞாபகம் மட்டும் என்றென்றும் என்னுள் நேரம், காலம், பருவம் எல்லாவற்றையும் உள்ளடக்கி அப்படியே உறைந்திருக்கிறது.

அன்று அப்படம் என்னுள் நிகழ்த்திய உணர்வுக் குவியலான உரையாடல்கள், வேலையின்மையைப் பற்றி அது தந்த மனச் சித்திரம், கலைஞனின் பெருமிதம் குறித்து அது பேசிய உச்சம் இப்படத்தின் இயக்குநரை ஒரே ஒருமுறை வாழ்வில் சந்தித்துவிட முடியுமா என்ற பேராசை எல்லாத் தமிழ் இளைஞர்களுக்கும் போலவே எனக்குள்ளும் எழுந்த அன்றைய இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.

ஒரு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலைப் போல காலம்தான் எத்தனை வேகமாக நம்மை சடசடத்துப் போய்விடுகிறது! ஆறேழு வருடங்களுக்கு முன் பெரும் தனிமை சூழ்ந்த ஒரு விடுமுறை நாளின் பின்னிரவில் என் நண்பர் எஸ். கே. பி. கருணாவுடன் பெங்களூர் போய், உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கினோம்.

அயர்ந்து தூங்கும் நண்பர்களின் முகங்களை ஒரு நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, திருட்டுப்பூனையின் மெல்லிய காலடி ஓசையில் அறையை விட்டு வெளியேறி நாங்கள் தங்கியிருந்த மூன்றாவது மாடியின் லிப்ட்டுக்குள் நுழைய வைத்தது எல்லாமும் ஒரு காப்பியின் பொருட்டே.

கண்ணாடி அணிந்து, பெர்முடாஸ் போட்டு, ஒரு கங்கலான டி-ஷர்ட்டோடு அந்த லிப்ட்டில் என்னோடு இருந்த லிப்ட் ஆபரேட்டர் அச்சு அசல் பாரதிராஜாவின் இன்னொரு வார்ப்பு. அவசர அவசரமாய் காபி குடித்து, தம் அடித்து, மீண்டும் அறைக்கு வந்து என் நண்பர் கருணாவிடம் இந்த ஹோட்டல் லிப்ட் ஆப்பரேட்டர் நம்மூர் பாரதிராஜா மாதிரியே இருக்கிறார் என்று சொன்ன என் குழந்தைத் தனத்தையும் கருணா புன்னகையோடு ஏற்றுக்கொண்டார். அடுத்த காப்பிக்கு அவரோடு போய், மங்கலான அவ்வெளிச்சத்தில் உட்கார்ந்து நிமிர்ந்தால் எங்கள் எதிரில் அவர்.

இரு குழந்தைகளின் குதூகலத்தோடு பாரதிராஜாவும் கருணாவும் உடல்மொழியில் கட்டித் தழுவி, நிதானப்பட்டு, கருணா என்னை அறிமுகப் படுத்தினார்.

‘’இவர் பவா, என் நண்பர், நல்ல எழுத்தாளர் சார்’’

ஹேய், இவனைத் தெரியாதா எனக்கு! இவன்தான் கொஞ்சம் முன்னாடி என்னை யாருன்னே தெரியாத மாதிரி லிஃப்ட்ல மொறச்சான்.

சார்... நான் உங்களை லிப்ட்...’’ வார்த்தைகளைப் பாம்பின் நச்சு நாக்கு மாதிரி உள்ளிழுத்துக் கொண்டேன்.

காலம்தான் என்னென்ன விளையாட்டுகளை நம்முன் தினம் தினம் விளையாடிப் பார்த்து விடுகிறது. அவர் காபி குடித்து முடிக்கும்வரை, நிழல்கள் படம் ஒவ்வொரு பிரேமாய் அவர் முகத்தின்மீது ஓட ஆரம்பித்தது எனக்கு.

ராஜசேகர், சந்திரசேகர் என்ற இரு அறிமுகங்களின் இயல்பான நடிப்பும், ஒவ்வொரு காட்சியும் வரையப்பட்ட ஓர் ஓவியம் மாதிரி வந்துபோன இன்றுவரை பெயர் தெரியாத அப்படத்தின் நாயகியும், மனதில் நினைத்ததை அப்படியே திரைக்கு மாற்றியஒரு கலைஞனின் அசாத்தியமான ஆளுமையாலும் நிறைந்து அறைக்குத் திரும்பினேன்.

பெப்ஸி போராட்டம் உச்சமாகியிருந்த நேரமது. திருவண்ணாமலையில் ‘மறுமலர்ச்சி படமாகிக் கொண்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் ஹென்றி படைப்பாளிகள் சங்கத்தின் தீவிர செயல்பாட்டாளர். அப்போது படைப்பாளிகள் சங்கத்தைத் தலைமையேற்று நடத்தியவரும் தன் நண்பனுமான பாரதிராஜாவின் பிறந்தநாளை திருவண்ணாமலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தன் விருப்பத்தை ஹென்றி சார் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவ்வளவுதான்.

மூடப்பட்டிருந்த தன் ரைஸ் மில்லையே ஓரிரு நாட்களில் கலாபூர்வமாக்கி, ஒரு படைப்பாளியின் பிறந்தநாளைக் கொண்டாட ஆயத்தப்படுத்தினார் கருணா.

அது இன்னும் நம்ப முடியாத ஓர் இரவு.

முப்பது நாற்பது இயக்குநர்கள் பத்திருபது கார்களில் வந்திறங்கி எங்களை ஆச்சர்யப்படுத்தினர். மயக்கமூட்டிய அன்றைய லேசான மழைத்தூறல் மிக்க இரவில் கிட்டத்தட்ட விடியும்வரை எங்juகள் உரையாடல் நீண்டது.

அடுத்த நாள் அவரோடு பயணிக்க வாய்ந்த பகல்நேரக் கார் பயணம் நேற்றிரவு விட்ட உரையாடலை நீட்டித்துக் கொள்ள உதவியது. இயக்குநர் வி. சேகரின் சொந்த கிராமமான நெய்வா நத்தத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து வேட்டவலம் போகும் சாலையில் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.

வழியோர மந்தமான கிராமங்கள், டீக்கடை மரப்பலகைகளில் கிராமத்து ஆட்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தவர் என்பக்கம் திரும்பி, தமிழ்நாட்ல எல்லா கிராமத்தானும் ஒருபோலத்தான் இருக்கான். இது மாவட்டம், ஜாதி அப்படியெல்லாம் ஒரு மயிருமில்ல என்று வார்த்தைகளை முடிப்பதற்குள் கார் கோணலூர் ஏரிக்கரைமீது போய்க் கொண்டிருந்தது. பரவசத்துடன் காரை நிறுத்தச் சொன்னார். நான்கு திசைகளிலும் வியாபித்திருந்த உருண்டை உருண்டையான கற்குன்றுகள் அவருக்குள் எதையோ மீட்டுக்கொண்டு வந்திருப்பதை நான் மௌனமாய் உணர்ந்தேன்.

ஆழ்ந்த மௌனமும் பெருமூச்சுமாய் காரின் முன்சீட்டிற்கு ஏறி, என் பக்கம் திரும்பிக் கொண்டார்.

‘‘இந்த லேண்டஸ்கேப் எத்தனை அற்புதமா இருக்கு! இப்படி ஒரு எடத்தை நான் கிழக்கே போடும் ரயிலுக்காக தேடி அலைந்தேன், உங்க ஊரை அப்ப பாக்கல. இந்த எரியாவை ஏனோ மிஸ் பண்ணிட்டேன்’’ என அப்பயணத்தின் முடிவுவரை எதையோ இழந்த மன பதற்றத்தோடே பேசிக் கொண்டுவந்தார்.

சாலையோரங்களில் அலாதியாய் பூத்துக்கிடந்த கசா மலர்களை படமாக்க வேண்டி அவசர அவசரமாய் முயன்றும் ஆறேழு மாதங்கள் கழித்தேபோய் அப்படி ஒரு மலர் செடிகள் இருந்த அடையாளமேயற்ற நிலப்பரப்பைப் பார்த்து சத்யஜித்ரே அடைந்த மன பதற்றத்திற்கு நிகரானது அது.

ஒரு சிறு பத்திரிகையில் வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதியிருந்த கட்டுரையை என் மதிய உணவினூடே வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், தமிழில் பாரதிராஜாவின் ‘என் உயிர்த் தோழன் மிக முக்கியமான படம். திராவிடக் கட்சிகள் ஒரு சாதாரண ஸ்லம் பையனின் எதிர்காலத்தை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை அதன் கலாபூர்வத்தோடு சொன்ன படம் அது என்று அதை முடிக்குமுன்பே பாரதிராஜவை தொலைபேசியில் அழைத்து அச்செய்தியை பகிர்ந்து கொண்டேன். தான் மிக எதிர்பார்த்திருந்தும் எதனாலோ அப்படம் நான் நினைத்த அளவுக்கு பேசாமல் போனது. ஆனால் எனக்குத் தெரியும் பவா, ஈவிரக்கமற்ற விமர்சனத்தை காலம்தான் முன்வைக்கும். அப்படைப்பை நானே மறந்த பிறகும் யாரோ ஒரு நேர்மையான விமர்சகனால் அது போற்றப்படுகிறது அது போதும் எனக்கு என அவர் தழு தழுத்ததை தவிர்க்க வேண்டி,

‘‘அப்புறம் எப்படி சார் இருக்கீங்க?’’

‘எனக்கு ரொம்ப பிடிச்ச படத்துல ஒன்னு பவா என்னுயிர் தோழன், ஏன் அது தோத்துச்சி என ஆவேசத்தோடு என்னிடமே கேட்டார். எதிர் முனை மௌனத்தை உணர்ந்து ‘தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சுக்க முடியலை பவா என அங்கலாய்த்த அக்கலைஞனின் குரல் நீண்ட நேரம் தொலைபேசியை மீறியும் அந்த அறையில் அலைந்துகொண்டிருந்தது.

மழைநீர் அறைக்குள்ளும், வெளியிலேயும், பொழிந்த ஓர் இரவு அவர் எங்களுக்கு ஜெயகாந்தனின் ‘சமூகம் என்பது நாலு பேர் கதை சொன்னார். என் வாழ்வில் என்றாவது ஒரு முறை இந்த படத்தை நான் தான் எடுப்பேன். என்னளவிற்கு இக்கதையை உள் வாங்கிக் கொண்டவன் எவனுமில்லையென்று குரல் உயர்த்தினார். ஆனால் அந்நாவல்தான் அவர் தமிழில் கடைசியாக வாசித்தது என என்னால் உணரமுடிந்தது. எதன் பொருட்டோ பிரபலம் வாசிப்பை துப்புற துடைத்து விடுகிறது. அது அவருக்கும் நேர்ந்தது இயல்புதான்.

கொஞ்சம் கொஞ்சமாய் படைப்பு மனம் விலகி, எதை எதையோ முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் பெரும் கலைஞர்களை இலக்கியத்திலும் திரையிலும் நாம் அறிவோம். அப்படி ஓர் இறுதி முடிவுக்கு வாசகனோ, பார்வையாளனோ வந்துவிடுமுன் தன் ஆகச் சிறந்த இன்னொரு படைப்பின் மூலம் உச்சத்தை அடைந்து நம்மை ஏமாற்றத்துகுள்ளாகிய படைப்பாளிகளே அதிகம். (பொம்மலாட்டம்......)

பொம்மலாட்டம் படம் துவங்கின பத்தாவது நிமிடம் நான் இந்த மனநிலையில் இருந்தேன். நானேபடேகர் என்ற ஆகிருதியை இவர் கையாண்ட விதம் அப்படிப் பிடித்திருந்தது எனக்கு. அப்படத்தின் ஜீவனோடே இடைவெளியின்றி அவரோடு கூட நானும் பயணித்தேன்.

இதற்கு மேல் ஒரு நிமிடமும் தாமதிக்க முடியாது. கதையின் கன்னி அறுத்து பார்வையாளனை விடுவித்தே ஆகவேண்டியத் தருணத்தில் அப்படத்தின் நாயகி பெண்ணல்ல ஆண் என்ற அதிர்வு என் உடல் முழுக்கப் பரவியது. ஒரு சராசரி சினிமா பார்வையாளனாக நான் என் வாழ்வில் அடைந்த ஒரு உச்சஸ்தாயிலான யாராலும் அனுமானிக்க முடியாத அனுபவம் அது. கிட்டதட்ட ஷைலஜாவும் என்னுடனே இருந்தாள்.

இருவரும் மௌனமுற்று, பேச எதுவுமற்று, ஈரகாற்று முகத்தில் மோத வீட்டிற்கு வந்தோம். வாசலிலேயே நின்று அவருக்கு போன் செய்தேன்.

‘‘சார் இப்பதான் பொம்மலாட்டம் பாத்துட்டு வர்றோம்’’ என்ற துவக்கம் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. தாவணிக் கனவுகள் என்ற படத்தில் தான் நினைத்த ஒன்றை காட்சிப் படுத்த முடியாமல் முற்றிலும் சோர்ந்து போகும் ஒரு கணத்தில் வெளியில் பாக்யராஜ் ராதிகாவிடம் அதே காட்சியை, அதே உகரத்தோடு நடித்துக் காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து பாரதி ராஜா ஒவ்வொரு நிமிடமும் மலர்வதை கேமிரா படமாக்கிக் கொண்டேயிருக்கும், அதே மாதிரியான தருணமது.

என் போன் ஷைலஜாவுக்கு போனது, ‘‘இதுக்கு மேல பேசினா நான் பொறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்துறவேம்மா, உங்கரெண்டு பேரின் பாராட்டு போதும் எனக்கு, பணம் போனா மயிராச்சி’’

கிட்டத்தட்ட அவரிடம் பேசின அதே மன உணர்வோடு பாலுமகேந்திராவிடமும் பேசினோம். எல்லாக் கலைஞர்களுமே உணர்வுக் குவியல்கள்தானே.

ஒரு நல்ல படைப்பை நான் கொடுத்தா என்ன, என் நண்பன் பாரதி கொடுத்தா என்னம்மா என்று எங்களிடம் சொல்லிவிட்டு, ஒரு நிமிடமும் தாமதிக்காமல் அம் மனஉணர்வுகள் எதன் பொருட்டும் கலைந்துவிட அனுமதிக்காதப் பிடிவாதத்தோடு பார்சன் காம்ப்ளக்ஸ்க்குப் போய், எப்போதும் அவரிடம் உள்ள நிதானத்தை கொஞ்சம் தளர்த்தி, பரவசமாகி

‘‘பாரதி நான் இன்னும் படம் பாக்கல என் மக ஷைலுவும், மாப்ள பவாவும் இப்பதான் பேசினாங்க அந்த ஈரத்தோடயே வந்திருக்கேன், இப்போ உனக்கு என்ன கொடுக்கறதுன்னு எனக்கு தெரியல....’’ எனத் தடுமாற,

எதிர்பாராத இவ்வுணர்வுபூர்வமான சந்திப்பை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்த பாரதிராஜா, தன் எதிரில் மிக பிரமாண்டமாய் மாட்டப்பட்டிருந்த பொம்மலாட்ட பட ஸ்டில்லை கிழித்து, அரைகுறையாய் கிழிக்கப்பட்ட அந்த போட்டோ பிரிண்ட் மீது

‘நான் எப்போதும் நேசித்து மதிக்கும் அன்பு நண்பன் பாலுவுக்கு அன்புடன் பாரதிராஜா.... என எழுதி தருகிறார்

கலைஞர்களின் வாழ்வை ஒரு பறவையின் புதிர் நிரம்பிய வாழ்வைப் போலவே நம் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது நண்பர்களே!


-நன்றி மீடியா வாய்ஸ்

7 comments:

  1. உணர்வு பூர்வமான எழுத்தை வாசித்ததில் எனக்கு புல்லரித்து போயிற்று. அருமையாய் ஒவ்வொரு கலைஞனையும் மனதில் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் . வாழ்த்துக்கள் பவா சார்

    ReplyDelete
  2. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவரைப் பற்றிய நல்ல உணர்வுப்பூர்வமான பகிர்வு. நன்றி பவா..:-))

    ReplyDelete
  3. கலங்கடிக்கிறீங்க...

    ReplyDelete
  4. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. இந்த தொடரை இத்தனை நாள் எப்படி மிஸ்பண்ணினேனு தெரியலையே! ரொம்ப அருமை

    ReplyDelete
  6. பாரதிராஜா சார் எவ்ளோ பெரிய director.என்னோட ஒரு exam அப்போ முதல்மரியாதை போட்டாங்க tv ல நான் உக்கார்ந்து படம் பார்த்திட்டுதான் படிச்சேன்.எவ்வளவு முறை பார்த்தாலும் திரும்பவும் ரசிக்க வைக்கும்.”பொம்மலாட்டம்” எப்படித்தான் இந்த படங்களெல்லாம் தோல்வியை தழுவுகிறதுன்னு நானும் அப்படத்தை பார்க்கும் போதெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.அருமையா பதிவு பண்ணிருக்கிங்க பவா..

    ReplyDelete
  7. //இன்றுவரை பெயர் தெரியாத அப்படத்தின் நாயகியும்,// ரோகிணி

    ReplyDelete