Monday, February 6, 2017

உப்பு கடலை குடித்த பூனை




கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் என்று கொங்கு மண்டலத்தின் ஒரு ஜமீன்தாரை நினைவுபடுத்தும் பெயர்தான் சிவக்குமாரின் சொந்தப் பெயர். ஆனால் இந்த பிம்பத்துக்கு முற்றிலும் நேர்எதிர் திசையில் எப்போதும் பயணித்த எழுத்தாளன் சிவா.

அடிப்படையில் சிவக்குமாரின் வாழ்வு மண்ணும், நீரும் சார்ந்த விவசாய வாழ்வுதான். செடி முருங்கை காய்த்துத் தொங்கும் கன்னிவாடி நிலப்பரப்பைவிட்டு நெட்டித் தள்ளிய வாழ்வை எதிர்கொள்ள அவன் தள்ளு வண்டியில் ஜவுளித்துணிகளைப் போட்டு தெருத்தெருவாய் சுற்றி அலைந்தவன். ஒரு வகையில் அவனுக்குப் பிடித்தமானதொரு ஜீவித துவக்கமும் அதுதான்.

அவன் அலைவுறுதலை பயணம் என என்னால் சுருக்கிவிட முடியாது. கையில் ஒரு துணிப்பைகூட இல்லாமல் கடைசி பஸ் பிடிப்பவன் அவன்.

அலைந்து திரிந்த அவ்வாழ்வின் ஒரு சிறு சிதறலுக்கு ‘காற்றாடை’ என தலைப்பிட்டு, அப்போது ‘இந்தியா டுடே’ நடத்திய சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிவிட்டு தள்ளுவண்டியின் பின்னால் அதே உற்சாகத்தில் நடை போட்டவன் அவன்.

என்ன செய்வது?

சுயம்புலிங்கத்தை, ஏ.அய்யப்பனை, விக்கிரமாதித்யனை, கைலாஷ் சிவனை இப்படித்தான் அலையவிடுகிறது பசித்த வயிறு.

அவன் எதிர்பார்த்த மாதிரியே அக்கதைக்கு முதல் பரிசும், அவன் சகதோழன் பாஸ்கர்சக்தியின் கதைக்கு இரண்டாம் பரிசும் கிடைத்தது. தன் பெயரில் வங்கிக்கணக்கு கூட இல்லாத சிவகுமாருக்கு, ஐந்தாயிரம் ரூபாய்க்கான அந்தக் காசோலை ஏற்படுத்தியக் கிளர்ச்சி சொல்லில் அடங்காதது. சிவக்குமாரின் கண்கள் அகல விரிந்த அத்தருணத்தை கண்கள் மூடி படுத்திருக்கும் இப்போது நினைவுபடுத்த முயல்கிறேன்.

அக்கதையின் கவனிப்பிற்குப் பிறகே எழுத்தின்மீது சிவாவுக்கு ஆர்வமும், நம்பிக்கையும் துளிர்த்தது. எழுதி மட்டுமே வாழ்ந்துவிட முடியும் என்ற பொய் பிம்பத்தை அவன் கன்னிவாடியில் இருந்துகொண்டு நம்ப ஆரம்பித்தான்.

சிவாவின் எல்லாக் கதைளுமே அவனின் நினைவுகளின் சிந்தல்களே. படித்ததிலிருந்தோ, அறிந்ததிலிருந்தோ, ஒரு வரியும் கூட அவன் தன் கதைகளுக்காக எடுத்துக் கொண்டதில்லை. எல்லாவற்றையும் தன் வாழ்விலிருந்தும் அனுபவங்களிலிருந்துமே கதைகளாக்கியவன்.

சம்சாரிகளின் வலிகளை எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, சிவா மட்டும் அவர்களின் ஆழ்மனதில் ததும்பிக் கொண்டிருந்த அபிலாஷைகள், சிற்றின்ப வேட்கைகள் இவைகளைக் கண்டுபிடித்தான். திருவிழாக்களின் மீதும், மனிதக் கூடுகைகளிலும், அங்கே நிகழும் கேளிக்கைகள், சீட்டாட்டம், கரகாட்டகாரிகளின் கடக்க முடியாத புன்னகை, இவைகளை அவன் எழுத்துகள் கண்டுபிடித்து சுவீகரித்தன.

பெரும்வலி கொண்ட வாழ்வு சிவாவுடையது. போதிய கல்வி இல்லாமை, புருஷ லட்சணத்திற்கான தொடர் உத்யோகத் துறப்பு, வீடு தங்காமை, அவமானங்களை தொடர்ந்து, தானே சென்று வெகுமதிகளைப் போல வாங்கி வருதல், இதனூடே எழுதுதல் என சிவாவின் நாட்களை என்னால் மதிப்பிட முடியும். தாங்கமுடியாத அந்த வலியையும், தாங்கிக் கொண்ட தொடர் அவமானங்களையும் தான் அவன் தன் மொழியின்மீது மேற்பூச்சாக, தடவி வைத்திருந்த நகைச்சுவையால் கடந்தான்.

ஒரு ஆரம்பகால வாசகன் இத்தனை நகைச்சுவையானதா வாழ்க்கை? என வியந்து அங்கேயே நின்று கொண்டான். ஒரு நுட்பமான வாசகன் தன் கூரிய விரல் நகம் கொண்டு மேற்பூச்சைச் சுரண்டியெடுத்து அதன் ஆழத்து வலியைப் பருகினான்.

‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ ஒரு கதை மட்டுமே போதும்  க.சீ.சிவக்குமார் என்ற அசல் கலைஞனை நாம் அடையாளப்படுத்த, அல்லது அவனை தவறவிட்ட குற்றவுணர்வுக்கு நம்மை உட்படுத்திக் கொள்ள.

சம்பாதிப்பதற்கு வெளிநாட்டிற்குப் போயிருக்கும் மனைவியில்லாத வீட்டில் தானும், மகளும், தனிமையை துடைத்தெறிய அங்குமிங்கும் ஓடித் திரியும் ஒரு பூனை. இவற்றை வைத்து சிவா காவியத் தன்மையோடு ஒரு சிறுகதையைச் செதுக்கியிருப்பான். ஒவ்வொரு வரியும் ஒரு வாசகனை நகரவிடாமல் நிறுத்தும். வெளிநாட்டிற்குப் போயிருக்கும் அந்த மனைவி திரும்பி வந்துவிட மாட்டாளா என நம்மை ஏங்க வைக்கும்.

இன்று காலை எனக்கும், சிவாவுக்குமான வாசகர் பாலா தான்சான்யாவிலிருந்து பேசினார்,

என் மனதில் எப்போதும் சிவா ஒரு கேணக்கிறுக்கந்தான் பவா. அப்போதுதான் மழையில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சு மாதிரி சுவரோரமாக ஒதுங்கி நின்றுகொள்பவன்.

படைப்பாளி என்ற கர்வம் எப்போதும் அவனிடம் இருந்ததில்லை. அச்சலுகையை மேற்கொண்டு மாபெரும் சபைதனில் ஒருபோதும் நடந்ததில்லை. சபைக்கு வெளியே ஏதாவது ஒரு மரத்தடியில் புகையும் சிகரெட்டோடு நின்று அச்சபையைப் பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் மனமே இறுதிவரை அவனுக்கு வாய்த்திருந்தது.

‘கன்னிவாடி’ என்ற தலைப்பில் தமிழினி கொண்டு வந்ததுதான் சிவக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

அது ஏதோ காரணத்தால் தமிழிலக்கிய படைப்பாளிகளாலும், பத்திரிகைகளாலும் புறக்கணிக்கப்பட்டது. அவர்கள் ஒரே நேரத்தில் படைப்பையும், படைப்பாளியையும் புறந்தள்ளினார்கள். அவன் மிக சோர்வுற்றிருப்பான் என என் பொது புத்தியிலிருந்து அவதானித்தேன். மாறாக அவன் பெரும் உற்சாகமடைந்திருந்தான். அக்காலத்தில்தான் ஆதிமங்கலத்து விஷேசங்கள், குணச்சித்திரங்கள், என்றும் நன்மைகள், நீல வானம் இல்லாத ஊரே இல்லை என எழுதிக் குவித்தான்.

அவன் புத்தகப் பக்கங்களை ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்களை, அசல் மனிதர்களைக் கொண்டு நிரப்பினான்.

அப்போதுகூட தமிழ் இலக்கிய பிராண்டட் முகம் எதுவும் சிவாவைத் திரும்பிப் பார்த்தால் எனக்கு நினைவில்லை.

தமிழில் ஜி. நாகராஜனுக்குப் பின்னும், மலையாளத்தில்
ஏ. அய்யப்பனுக்குப் பின்னும், சிவக்குமார் அளவுக்கு தன் சகப்படைப்பாளிகளாலும் நண்பர்களாலும் பொது வெளிகளில் அவமானப்படுத்தப்பட்ட படைப்பாளி க.சீ.சிவக்குமார் மட்டுமே. அவற்றைத் தன் உடலாலும் படைப்பாலும் பகடிகளாக மாற்றி, சிரித்துத் திரிந்த படைப்பாளி அநேகமாக சிவக்குமார் மட்டுந்தான்.

யாருக்குமே இல்லாத சில பிரத்யேக குணாம்சங்கள் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. ஒரு வெள்ளைக்கார துரையின் பங்களாவைப் பார்த்துக்கொண்ட தோட்டக்காரளான தன் மாமனாரை அவன் நண்பர்களிடம் ‘பூந்தோட்டக் காவல்காரன்’ என்றே அறிமுகப்படுத்துவான். மாமனார் என்ற மனைவியின் அப்பாமீது தமிழ்ச் சமூகம் ஏற்றி வைத்திருக்கிற பிம்பத்தைக் கலைத்து வேடிக்கையாக்குவது,
அதுதானே சிவா உன் எழுத்திலும் மிளிர்ந்தது. ஒரு தெரு நாயை க.சீ.சிவக்குமார் அளவிற்கு அறிமுகப்படுத்திய எழுத்து தமிழில் வேறில்லை.

‘‘ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் அச்சொற்றொடர் ஒன்று போதும் அக்கதைக்கு.

ஆர். சண்முக சுந்தரம் கூட நாகம்மாளின் துயரத்தை, அதன் மீறலை தன் படைப்பில் முன் வைத்தார்.

சிவக்குமார் அதையும் தாண்டிய மனித மனதின் ஏங்குதல்களை, அலைவுறுதல்களை, நிராகரிப்புகளை பகடி மாதிரி சொல்லி நம்மை நெக்குருக்கினான். நரம்பு ஊசிப் போடுகையில் டாக்டர் குழந்தை வாயில் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து சப்பு கொட்ட வைப்பது போல அது. ஆனால் போட்டு முடித்த அடுத்த கணம் வலி மெல்ல உடலெல்லாம் பரவுமே அப்படியான ஒன்றுதான் சிவாவின் எழுத்து.

ஒரு எழுத்தாளனை நீங்கள் கொல்ல நினைத்தால் அல்லது அவனை எழுதவிடாமல் செய்ய வேண்டுமென நினைத்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். அவனை இடம்பெயர்த்து விடுங்கள் போதும்.

கன்னிவாடியில் மையம் கொண்டு அங்கிருந்து பஸ் ஏறி திருவிழா பார்த்து, கரகாட்டக்காரிகளை வம்புக்கிழுத்து, கூத்தாடிகளோடு குந்திக் குடித்து, செடி முருங்கை மரத்தடியில் கள் குடித்து வாழ்ந்து வந்த ஒரு எழுத்தாளனை, வாழ்வு பெங்களூர் என்ற மாநகரத்திற்குக் கைபிடித்து அழைத்துப் போகிறது. அது ஒரு அபார்ட்மெண்ட் வீடு. மூன்று வேளை சாப்பாடு, இன்டெர்நெட் வசதி என அந்த லௌகீகப் பிசாசு தன் கையிலிருந்த மாய வலைகளை அப்படைப்பாளியின் மீது வீசியது. அறுத்தெறிய முடியாத இறுக்கத்தோடு அது அவனை மரணப்பரியந்தம் சுற்றிக்கொண்டது.

தினம் தாமிரபரணி தண்ணீர் குடித்த வண்ணநிலவனை, கோவில்பட்டி வெய்யிலருந்திய ப.செயப்பிரகாசத்தை, நீங்கள் அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்தீர்களே என்ன ஆனது?

ஒரு எஸ்தரும், ஒரு ஜெருசலேமும் அதன் பிறகு அவர்களிடமிருந்து முகிழவேயில்லை. ஒரு படைப்பாளியின் நிலப்பரப்பும், வாழ்விடமும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் அவன் எழுத்தின் வழி கசிவதை நீங்கள் ஏன் எப்போதும் கவனிக்கத் தவறுகிறீர்கள்?

அதன் பிறகும் அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு மகத்தான படைப்புகள் பீறிடுவது மாதிரித் தெரியலாம் அது, சொந்த ஆற்றில் நீந்தித் திரிந்த மீனைத் தூக்கி தரையில் வீசும்போது இன்னும் கொஞ்சம் உயிர்ப்போடு துள்ளி நம்மை ஏமாற்றுமே அது. அடங்குதலுக்கு முந்தைய ஆர்ப்பரிப்பு.

என் கணிப்பில் தன் வாழ்வின் மொத்தத்தையும் படைப்பிலக்கியத்தில் ‘உப்புக் கடலை குடிக்கும் பூனை’ என்ற தன் மொத்தச் சிறுகதை தொகுப்பிலும், மற்றவற்றைத் தன் தொடர் அனுபவப் பகிர்பிலும் அவன் எழுதி நிறைவு செய்திருக்கிறான்.

எல்லா மரணங்களுமே புதிரானவைதான் சிவா, மரணமே ஒரு புதிர்தான். நேற்று காலையிலிருந்து ஒரு கவிஞனை ஒரு எழுத்தாளனை ஒரு நண்பனை, உன் தொலைபேசியில் அழைத்திருக்கிறாய். யாரையும் வழக்கம்போல் தொலைபேசியை அணைத்து விடாதே என கெஞ்சியிருக்கிறாய்!

எதையோ சொல்ல தடுமாறியிருக்கிறாய் நண்பா. ஜான் ஆப்ரகாம் என்ற கலகக்காரனும் மாடியிலிருந்து இதே தடுமாற்றத்தோடுதான் மரிப்பதற்கு தரையைத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.

உன்னை மாநகரச் சுடுகாட்டின் மின் அடுப்பிற்கு உள்நுழைக்காமல், கன்னிவாடியின் சொந்த மண்ணில் புதைக்கப் போகிறோம்.


முன்கூட்டியே உன் பேனாவை மகள் மகாஸ்வேதாவின் கைகளுக்கு மாற்றியிருக்கிறாய். போய்வா நண்பா!

No comments:

Post a Comment