Tuesday, February 7, 2017

தேன்

மலையாள மூலம் : பால் சக்காரியா
தமிழில் : பவாசெல்லதுரை
  





இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லையென உங்களுக்குத் தோன்றினாலும் இது ஒரு உண்மைக் கதையின் விவரிப்பும், சமீப நாட்களில் உலகெங்கும் நடக்கிற ஒன்றுதான். வசீகரமானதொரு வனமும், அதையொட்டிய ஒரு குக்கிராமமும் மட்டுந்தான் இக்கதையின் நிலப்பரப்பு.

சர்ச்சைகள் எழுவதற்கு இதில் ஒன்றுமில்லையென்றாலும், ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இக்கதையின் நிகழ்விடத்தையும், அதன் மனிதர்களையும், அவர்களின் அந்தரங்கத்தையும் பாதுகாப்பது என் கடமை. என் கடமையைச் செய்ய நீங்கள் என்னை முழுமையாக அனுமதிக்க வேண்டும்.

தேவதைகள் உலாவினாலும் இல்லாவிட்டாலும் வனமென்பது எப்போதும் போதையேற்றும் ஒரு சொர்க்கமே. அங்கே நடந்த நிகழ்வுகளின் ஒரு  ஓவியத்தை முழுமையடையச் செய்ய அதன் பின்புலமாக உள்ள காட்டைப் பற்றிய சிறு விவரிப்பை முதலில் தந்துவிடுகிறேன். இந்தப் பகுதியை, காடுகளைப் பற்றி அறிய விருப்பமுடையவர்கள் மட்டும் இனி வாசித்தால் போதுமானது.

நீங்கள் இப்போது தரிசிக்கவிருக்கும் இக்காட்டில் வியாபித்திருக்கும் சில மரங்கள்: நாய்க்கொல்லி, கத்திப்பிடி, மொட்டுமூக்கன், கல்சுருளி, முளகுநாறி, கடுவாப்பிடுக்கன், மூட்டில்தூறி, வெருகுதீனி, உண்டகண்ணி, அண்ணான்வழுக்கி, பூதம்கொல்லி, பாதிரி.

இவ்விரிந்த காட்டில் ஜீவித்திருக்கிற காட்டுவாசிகளான சிறு விலங்குகளில் என்னுள் பதிந்த சில: கடந்தல், குளவி, பேன், செல், வண்டு, மின்மினி, தும்பி, எட்டுகாலி, அட்டை, தோட்டப்புழு, ஞாஞ்ஞூல், மண்ணிரை, தேள், சிதல், எறும்பு, தேனீதொழுகையன், பூச்சிகள், கொசு, , குழியான், பட்டாம்பூச்சி, வெட்டுக்கிளி, சில்வண்டு, சாழி, வழுதார, தேரை, வெள்ளத்திலாசான்.

இவர்களுள் பலருக்கு உபஜாதிகள் உண்டென்பது எனக்குத் தெரியும். நானறிந்து மதம் இருப்பதாகத் தெரியவில்லை. பூச்சியினம் என்பதே இவர்களின் பொதுப்பெயர். மதமில்லாதவர்கள் என்பதால் கடவுள் மட்டுமே இவர்களுக்குத் துணை. காட்டிற்கு வெளியே தேனீக்களைத் தவிர மற்றவைகளைப் பூச்சிக்கொல்லிகளால் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இக்காட்டில் வாழ்க்கைப் போராட்டம் நடத்தும் நீர்வாழினங்களும், நீரிலும் நிலத்திலும் வாழ்பவையுமான இறைவனின் படைப்புகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

மீன்கள் : வட்டோன், விரால், பள்ளத்தி, மானத்துக்கண்ணி, வாழக்காய் வரையன், கல்லொட்டி, கல்நக்கி, நெற்றியேப் பொன்னன், துப்பல் குடியன்.

தவளைகள் : தீவயிறன், நீர்சொறியன், கரிவயறன், பிலிகிரியன், காட்டு மணவாட்டி, பிள்ளராத்தவளை, மேனோன் குருடி, உம்மன் குருடி, சதுப்பன் சிலப்பன்,

தவிர அணில், சீங்கண்ணி, முதலை, ஆமை, கரையாமை, சூரல் ஆமை, பீமன் ஆமை, வெள்ளை ஆமை, சித்திர ஆமை, நட்சத்திர ஆமை இவையும் அவற்றினூடே வாழ்பவைதான்.

அக்காட்டாற்றின் நீர் தளும்பலில் ஒமேகா 3 குறைவுதான் என அறிவியல் சொல்கிறது. ஒமேகா 3 இல்லாத அத்திசை நமக்கெதற்கு, ருசி மட்டும் போதுமே! ஆமைக்கறி ருசிக்குப் பெயர் பெற்றது. தவளைகளின் கால்கள் இன்றும் உலகம் முழுக்கப் பறந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஜென்மத்தில் காலில்லாமல் பிறக்க வேண்டுமென தவளைகள் மனமுருகிப் பிரார்த்திப்பதில் ஏதாவது தவறுண்டா? அத்தவளைகளின் பிராத்தனைகளுக்கு யாரும் காது கொடுத்ததாகத் தெரியவில்லை. ‘கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்ற வழக்கு அவற்றின்மீது அப்படியே செயல்படுத்தப்படுகிறது. மனித வாழ்வின் நெடுந்தூண்களாகக் கொல்வதும், உண்பதும், கழிப்பதும் என்றென்றும் இறுகிப் போயுள்ளன.

ந்தக்காட்டிலும் முலையுள்ளவர்களே முக்கியமானவர்கள். யானை, கடுவா, புலி என்று எந்த விலங்குகளையும் நீங்கள் கவனித்தால் இது உங்களுக்கு உறுதிப்படும். காட்டின் முலைகளுக்கு ஒரு வேறுபாடு உண்டு. நாட்டிலிருப்பவை போல அது உடல் சார்ந்தவையோ, கவர்ச்சிகரமானவையோ அல்ல. காடுகளில் பால் ஊட்டுவதற்கு மட்டுமே அவை பயன்படுகின்றன. காட்டின் பெண் விலங்குகளுக்கு தங்கள் முலைகள் குறித்த பெருமிதங்கள் எதுவுமில்லை. தவிர முலைக்கச்சைகளைத் தேடி அலைவதற்கான அவசியமும் இல்லை.

ந்தக்காட்டில் முலையுள்ளவர்களில் சிலர் : கேழமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, சுண்டெலி, ஈனாம்பேச்சி, பெருச்சாளி, அணில், வௌவ்வால், நரி, நீர்நாய், கரடி, குரங்கு, கடுவா, புலி, காட்டுநாய், குள்ளநரி, கீரி, வெறுகு, மரநாய், யானை, முயல், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, அதனூடே சோம்பேறிக் கரடிகளுக்கு நாம் திரும்பிவர வேண்டும்.

வெயிலும், மழையும் ஒன்றாகப் பெய்யும் சில நாட்களில் இக்காட்டிலுள்ள வனவாசிகள் முலையோடு சம்மந்தப்பட்ட ஒரு அலாதியான காட்சியைக் காண்பார்கள். அப்படியான சில ஆபூர்வ கணங்களில், அழகே வடிவான ஒரு வனமோகினி தன் உடலின் சரிபாதியை பாதிரி மரத்தினடியிலுள்ள பாறையில் அமர்ந்து உண்ணிக் கிருஷ்ணனுக்குப் பாலூட்டுவதைப் பார்க்கலாம். அவர்களைச் சுற்றி தேனீக்கள் ரீங்காரமிட்டபடியிருக்கும். வண்ணத்துப்பூச்சிகளும், பெயர் தெரியாத சில பூச்சிகளும் அவற்றைச் சுற்றிப் பறக்க, தூரத்திலிருந்து பறவைகள் இக்காட்சியை கவனித்துக் கொண்டிருக்கும். பொந்துகளிலிருந்து பூதங்கள் மெல்லிய குரலில் இசைக்க, கானுலா வருகின்ற தெய்வங்கள் அவற்றை நோக்கிப் புன்னகைக்கும்.

இருபுறத்திலிருந்து பிருந்தாவன விளையாட்டு, பசுக்களை மேய்க்கிற கண்ணன் வயிறு நிறையப் பால் குடித்த தெம்பில் அப்பூதத்தைக் கட்டிப்பிடித்து, வயிறுவரை எம்பி நின்று, ஒரு முத்தம் கொடுத்து உடனே அதன் மடியிலிருந்து குதித்து, அருகிலிருந்த அருவியை நோக்கி கால் கொலுசு சப்தமிட, அரைஞாண்கொடி துள்ளியாட வேகமாக ஓடுவான்.
அப்போது பூதகியின் அழகு மத்தாப்பு போல ஒளிரும். அதன் உதட்டில் தேங்கி நிற்கும் மென்மையான புன்னகையுடன், இன்னமும் பால் சுரக்கும் மார்புகளோடு கனவிலாழ்ந்து அது லயித்திருக்கும். நீண்ட குளியலில் களைப்புற்றிருக்கும் உண்ணிக் கிருஷ்ணன் அதன் மடியில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருப்பான்.

இக்காட்சியைக் காணும் வனவாசிகளின் உற்சாகம் சொல்லில் அடங்காதது. அதற்கொரு குறிப்பிட்ட காரணமுண்டு. பூதகி அவர்களில் ஒருத்தி. அம்மனுஷியால் எவரையும், குறிப்பாக குழந்தையை ஒருபோதும் வஞ்சிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.

அவர்கள் எக்காளமிட்டுக் கூவுவார்கள்.

இக்காட்சியே உண்மை. வனவாசிகளின் வாழ்வியல் உண்மை. அசுரர்களின் பிறப்பின் உண்மை. இது சத்தியம்.

இக்காட்டில் ஊர்வனவற்றின் சில இனங்களை இப்போது காணலாம்.

பல்லி :குட்டிவிரலன் பல்லி, பொன்னன் மரப்பல்லி, தங்க மரப்பல்லி, ஆனைமலப்பல்லி, பொன்முடி மரப்பல்லி, சித்ரகன் பல்லி, ப்ரசாதிப் பல்லி, புள்ளிப் பள்ளி, சிதல்பல்லி, வரையன் பல்லி.

ஓணான் : பச்சை ஓணான், முள் ஓணான், கூனன் பாறை ஓணான், சங்கன் ஓணான், மர ஓணான்.

அரணை : நீலக்கோடு மரஅரணை, பாம்பு அரணை, ரெண்டு கோடு மண் அரணை, பழனிமண் அரணை, துருக்குபூனை அரணை, செம்பண் அரணை, மணல் அரணை.

பாம்பு : முழமூக்கன், குழி மண்டலி, பச்சை நாகம், கொம்பேறி மூக்கன், சுருட்டை, மோந்தை உந்தி, கரிக்குரியன், சோளபச்சோலன், கரடி இரு தலையன், இரத்த குத்தன், ஆசம்புமேலி வாலன், கொக்குருட்டி, தாய்ப்பால் குடியன், பாண்டன் முள் வாலன், கருந்தலையன்.

இவையன்றி, உடும்புகளும், எலிகளும் உண்டு.

இவற்றிற்கும் ஜாதிகள் உண்டு, மதங்கள் இல்லை. எல்லோரும் இறைவனின் குழந்தைகள். மதமின்றி, ஜாதிமட்டும் வாய்த்திருப்பது எத்தனை அற்புதமானது.

சிவ, சிவா!

நம் உணவுப் பாரம்பரியத்தில் இவற்றை நாம் சாப்பிடுவதில்லை. ஆனால் இனி முயற்சி செய்து பார்க்கலாம். சீனாவில், அதையொத்த சில நாடுகளில் மட்டும் இவை விருப்பமான உணவுப் பொருட்கள். நமக்கு மட்டும் என்ன குறைச்சல்? பிராய்லர் கோழிகளை மட்டும் தின்று வளர்ந்தால் நாம் எப்படி சீனாவைப் போல முன்னேற முடியும்?

இவற்றிற்கும், நமக்கும் இருபெரும் வித்தியாசங்கள் உண்டு. போர்க்களத்திலும், இரை பிடிக்கும் போதும், காதலிக்கும் போதும் மட்டுமே இவை வாலாட்டும். நாம் வாலாட்டுவது, மந்திரிகளுக்கும், மதவாதிகளுக்கும் முன்னால்தான். நாம்  குழைவதும் இவர்களைக் காணும்போதுதான்.

ஆனால் இவற்றின் பணிவென்பது தங்கள் வாழ்வை முன்னகர்த்திச் செல்லும்போது மட்டுமே.

இக்காட்டில் ஜீவித்திருக்கும் பறவையினங்களில் இறைவனின் படைப்புகளில் சில: தீக்குருவி, அசுரசிந்தன், சோலைக்குடுவன், மணிகண்டன், சின்னக்குட்டுறவன், காடுமுழக்கி, சுட்டிப் பருந்து, பச்சைமரக் குருடன், மீன்கொத்தி, ஷாமக்கிளி, பொன்மான்.

இவற்றில் பெரும்பாலானவை சதைப்பற்று குறைவான பறவைகள் என்பதால் பிராய்லர் கோழியின் முக்கியத்துவம் இங்குதான் அதிகரிக்கிறது.

இறுதியாக, இக்காட்டிலுள்ள மற்ற உயிரினங்களில் சிலவற்றை உங்களுக்குத் தரமுடியும்.

மரணப்பாச்சில், ரத்தவிருந்துகுடல்மாலை, எலும்புக் கூடு, இறுதிவலி, சகிக்க முடியாத நாற்றம் இவற்றோடு இக்காட்டின் வரைவோவியம் நிறைவு பெறுகிறது.

இனி கதையை ஆரம்பிக்கலாம், இக்காட்டில் பேரழகனும், நோயற்ற உடல்வாகும், கடவுள் பக்தனுமாகிய இளவட்டக் கரடி ஒன்றுண்டு. இவ்விடத்தில் ஒரு சிறு விளக்கம் தேவைப்படும். கரடி பற்றிய தவறான செய்திகள்தான் மலையாளச் சமூகத்திற்குள் இன்னும் புழங்குகிறது.

சோம்பேறிக் கரடி.

எல்லா மலையாளிகளையும் போலவே, மலையாளக் கரடிகளும், உழைப்பின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவையும், தங்கள் சொந்த நெற்றி வியர்வையைக் கொண்டே ஊண் உண்ணுபவையுமே.

‘‘சோம்பேறிக் கரடி’’

எத்தனை துயரம்!

சோம்பேறி சிரியன், சோம்பேறி முஸ்லீம், சோம்பேறி நாயர், சோம்பேறி ஈழுவன், சோம்பேறி நம்பூதிரி என்று நம்மை யாரேனும் அழைத்தால், அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? அல்லது சோம்பேறி கம்யூனிஸ்ட், சோம்பேறி காங்கிரஸ்காரன்! எலும்பு முறிய உழைத்து, லௌகீக வாழ்வு நடத்தும் ஒரு இனவாதியை சோம்பேறி இனவாதி என அழைத்தால் எப்படி இருக்கும்? எத்தனை அநீதியானது இது?

மற்ற எல்லாக் கரடிகளையும் போலவே, இந்த இளங்கரடியும் தனக்கான உணவை, இரவுகளிலேயே தேடிச் சேகரித்துக் கொண்டது. மனிதத் தொந்தரவு ஏதுமில்லாத நாட்களில், பகலிலும் கூட அதன் வேட்டையும், உணவு சேகரிப்பும் நீளும். அதற்குப் பிரியமான உணவுகள் பழங்களும், கிழங்குகளும், சிறுபிராணிகளின் மாமிசமும். அதிலும் மிகப் பிடித்தமானவை கரையான். கரையான் புற்றுகளுக்கருகில் தவமிருந்து, அதில் துளையிட்டு, கரையான் விருந்துகளில் திளைக்கும் பாக்யவான் அது.

பகல் நேரங்களில் குளிர்ச்சியான மரப்பொந்துகளில் அடைந்து, பகல் கனவு காண்பதோ, சில்வண்டுகளின் பாடல் கேட்டு உறங்குவதோ அதன் வாடிக்கை. வெயில் காலங்களில் மலைத்தேன் குடித்து ஆனந்த லயிப்பில் கிறங்குவதுண்டு. நிலவொளி வீசும் இரவுகளில் உணவு தேடுவதையும் மறந்து, சந்திரனைப் பார்த்து அதிசயித்து நிற்பதுண்டு. மற்ற இளங்கரடிகளைப் போல, மந்தத் தன்மையான கனிகளை உண்பதோ, சக கரடியோடு மோதுவதோ, கரடிக் கூட்டங்களோடு சேர்ந்து ரத்தம் சிந்தும் பழக்கமோ எப்போதுமில்லை.

எப்போதாவது ஒரு சாகசத்திற்காக, காட்டுக்கருகிலுள்ள கருப்பந்தோட்டத்திற்குள் இறங்கி கரும்பு ஒடித்துத் தின்பதுண்டு. பல ஆயிரம் கரும்புகள் விளைந்துத் திளைக்கும் கருப்பந் தோட்டங்களில், இக்கரடி ஒடித்துத் தின்னும் பத்து கரும்புகளால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது!

பார்க்கும் எவருக்கும் இன்னொரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் வசீகரம் மிக்கது அது. ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கும் அலாதியானதொரு நடை. கறுத்து இருண்ட வலிமையான பளபளப்பான மேல் தோல். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையுள்ள கண்கள். கூர்மையான வெண்நிற முகத்தில் புடைத்த மூக்கு, புடைத்த உதடுகள். நெஞ்சில் ஒரு வெண் முத்திரை.

இத்தனை வசீகரமானதொரு இளங்கரடி, மற்ற இளம் பெண்கரடிகளை ஈர்க்க தன் சுண்டுவிரலைக்கூட அசைத்ததில்லையென்பது கவனிக்கத்தக்கது. வன் சமூகப் பிரக்ஞையில் அதீத கவனமுற்று, சமூகக் கடமையாற்றுவதில் நாட்டமுள்ளது என்பதால் பெண்கள் விஷயத்தில் அவனின் ஈர்ப்பின்மை மற்றவர்களால் அத்தனை நுட்பமாக கவனிக்கப்படாமலேயே போய்விட்டது. சக கரடிகள் இவன் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு தங்கள் மூக்கின்மேல் விரல்வைத்து வியந்ததோடு சரி. இவன்மீது காமமுற்ற கரடியுவதிகள் என்ன செய்வதெனத் தெரியாமல் திக்குமுக்காடித் ததும்பின கணங்கள் உண்டு. அப்போதெல்லாம் வானத்தை வெறித்தவாறே அநாவசியமாக அவர்களைக் கடப்பதுண்டு.

அவன் மனதில் ஒரு வித்தியாசமான கனவு உதித்திருந்தது என்பதே உண்மை. அது வேறொன்றுமில்லை. அவன் ஒரு மனிதப் பெண்ணின் காதலுக்காக ஏங்கினான். அப்படி வாய்க்க வாய்ப்பில்லையென யாருக்காவது தோன்றினால் அதில் தவறொன்றுமில்லை. காரணம் எந்த ஒரு இளங்கரடியும், இன்னொரு பெண் கரடியையே ஸ்நேகிக்க முடியும். அல்லது ஒரு பெண் கரடி இன்னொரு ஆண் கரடியைக் காதலிக்க முடியும். அதேபோல ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே காதலிக்க முடியும். இது எச்சூழலிலும் மாறாதது, இயற்கையின் நியதி. இந்த இரு வம்சங்களிலேயும் அனுக்கிரகம் பெற்றவர்கள் அவர்கள் வம்சத்திலேயே தங்கள் காதலைக் கண்டடைய முடியும். அதுதான் மனித சமூகச் சாரத்தின் நியதி. மாறாக, கரடி மனுஷியோடோ, மனுஷி கரடியோடோ காதல் வயப்பட்டால் இதுவரையிருந்த நடைமுறை சலித்து விட்டதென்றும், அதைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட வேண்டுமென்றும் முடிவெடுத்துவிட்டதாக நாம் நினைத்துக் கொள்ளலாம்.

காட்டின் விளிம்பில் மறைந்திருந்து வெளிப்புறக்காட்சியை ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலையிலேயே முதன்முதலாக அது பல மனிதப் பெண்களைக் கண்டது. அதன்பின், அவர்களின் நடமாட்டத்தை அது தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. அவர்களில் சிலர் தங்கள் காதலர்களுடன் காடுகளின் உள்ளறைகளில் சுகித்திருந்தபோது அது மிக அந்தரங்கமாய், மௌனமாகி, விரிந்த கண்களுடனே அக்காட்சியைப் பார்த்திருக்கிறது. அவர்களின் கூடல் அத்தனை தூரம் அதை வசீகரித்திருக்கவில்லை.

அவர்களில் தேன்மாதிரி இனிப்பானவளும், மனதைப் பித்துபிடிக்க வைக்கக் கூடிய வசீகரத்தோடும் ஒருத்தி அவனை நோக்கி வந்து கொண்டிருந்ததை  அவனால் உணர முடிந்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு அழகோடு படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவன் உணர ஆரம்பித்த நாட்கள் அவை. அவர்களுடைய முலைகளை அவன் நுட்பமாக கவனிக்க ஆரம்பித்து, இத்தனை பெரிய முலைகள் மனிதப் பெண்களுக்கு எதற்கு என யோசிக்கத் தொடங்கினான்.

அந்த இளங்கரடி, மனிதப்பெண் குறித்த தன் கனவை, அதன் வயதையொத்த சில நெருங்கிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டதுண்டு. அவர்கள் அவனைக் கிண்டலடித்துச் சிரித்தார்கள்.

உனக்கு வெக்கமாயில்லையாடா? இப்படி ரெண்டுகால் ஜீவன்கிட்ட காதல் வயப்பட! அதுங்களுக்கு உடம்புல ஒழுங்கா முடிகூட இல்ல. தலையிலேயும், இங்கேயும் அங்கேயுமா எங்கயோ சில இடத்துல மட்டும் முடி மொளச்சு சே, எங்களால இத யோசிக்கக்கூட முடியல!!’’

‘‘உடம்பு முழுக்க ரோமம் இல்லாமலும், இரண்டு கால்களோடு இருப்பதாலும் ஒரு சௌந்தர்யத்தை உங்களால் தரிசிக்க முடியலயா?’’

அது மிகுந்த துயரத்தோடு தன் சகாக்களைப் பார்த்துக் கேட்டது. பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அவை மரங்களின் மீதேறி வானத்தைப் பார்த்து ஓலமிடத் துவங்கின. மௌனமாய் அவர்களைப் பார்த்து நின்றது அந்த இளங்கரடி.

பெண்கள் விஷயத்தில் தான் எதிர்கொண்ட ஒரு மிகப்பெரும் பிரச்சனையை, ஈவிரக்கமற்ற இவற்றோடு பகிர்ந்துகொள்ள அதற்குத் தோன்றவில்லை. தான் கண்ட எல்லாப் பெண்கள்மீதும் அவனுக்கு மோகம் உண்டாயிற்று. சுகிக்கத் தோன்றியது. எல்லோரையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவும் பெரும் விருப்பமுண்டாயிற்று. இது எப்படி சாத்தியம்? ஒரு கரடியால் ஒரே சமயத்தில் எத்தனை பெண்களைத் திருப்திப்படுத்த முடியும்? அதேபோல நூறு பெண்களில் தனக்கு விருப்பமான பெண்ணை எப்படித் தேர்வு செய்ய முடியும்? எத்தனை யோசித்தும் சரியான பதில் பிடிபடவில்லை. அப்படியே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் எந்த பாஷையால் தன் காதலை வெளிப்படுத்துவது? அதற்கும் அதனிடம் பதிலில்லை. தன் பிரத்யேகப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டி அது கடவுளிடம் மண்டியிட முடிவெடுத்தது.

பல ஆண்டுகாலமாக உண்மையான கடவுள் பக்தனாய் தான் இருந்த போதிலும், கடவுளிடம் தன் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டி செல்வது இதுதான் முதல்முறை. தன்னிடமிருந்த ஒரு பெரும் தேனடையைக் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொண்டு சென்றது. தன் கண்முன்னால் கையிலிருக்கும் அத்தேனடையிலிருந்து சொட்டும் தேனைக் குடிக்க நீளும் தன் நாக்கை அது அடக்கிக்கொள்ள சிரமப்பட்டது.

வனத்தினிடையேயிருந்த ஒரு தடாகத்தின் நடுவில்தான் அது வேண்டி நின்ற கடவுளின் வீடும் அலுவலகமும். பார்வையாளர்களின் வசதிக்காக ஒரு சிறு படகு எப்போதும் கரையில் நிற்கும். அப்படகைப் பிணைத்திருந்த கயிற்றை அக்கரடி தொட்டவுடன் அது உதிர்ந்து விழுந்தது. மனிதர்கள் அதைத் தொட்டு பல காலமாகிவிட்டதை அதனால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அலைகளின் சிறு அசைவில் ததும்பிக் கொண்டிருந்த கடவுளின் வீட்டை நோக்கி, தன் கையிலிருந்த துடுப்பினால் துழாவியது.

பாதி வழியில் அத்துடுப்பும் முறிந்தது. முறிந்த மரத்துண்டுகள் கொண்டு முன்னேறி ஒரு வழியாய் அது கடவுளின் வீட்டையடைந்து, கவனமாக தோணியைக் கயிற்றில் கட்டிவிட்டு வராந்தாவைக் கடந்து வீட்டினுள் கால் பதித்தது.

உணவு மேசையில் அமர்ந்து கடவுள் டி.வி.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த காட்சியை அக்கரடி கண்டது. கடவுளின் முன் தான் கொண்டு சென்ற தேனடையைச் சமர்ப்பித்து கரடி தொழுது நின்றது. தெய்வத்தைத் தொழும்போது உச்சரிக்க வேண்டிய,

ஹலி ஹலியோ

ஹலி! ஹூலாலோஎனச் சொல்ல,

கடவுள் அதே வார்த்தையைத் திருப்பிச் சொல்லி கரடியின் தொழுகையை ஏற்ற கணம், கரடி தன் வேண்டுதலைக் கடவுளின் முன் வைக்கப்பட்ட தேனடையை வெறித்துப் பார்த்தவாறே சொல்லி முடித்தது. கடவுள் தன்னருகில் கரடியை அழைத்து தேனடையிலிருந்து ஒரு பகுதியை உடைத்தெடுத்து அதைக் கரடியின் முன்நீட்டி உண்ணச் சொல்லி சைகை செய்ய, அதுவரை அடக்கி வைத்திருந்த தன் ஆசை கட்டவிழ, அதை ஆர்வத்துடன் தின்ன மீதியைக் கடவுளும் தின்று முடித்தது. பின்னர் தரையிலிருந்து தன் ஒரு காலை மேலே உயர்த்தி அதைக் கரடியின் தலையின் மேல் வைத்து, ‘ஹந்தொந்து என்ற வார்த்தையை மட்டும் சொல்லி, மீண்டும் டி.வி.யைப் பார்க்க ஆரம்பித்தது.

அவ்வார்த்தையின் அர்த்தம் புரியாத கரடி, கடவுளையும், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டத்தையும் மாறிமாறிப் பார்க்க ஆரம்பித்தது. பின் மிகுந்த அதிருப்தியோடு அப்படகிலேறி மறுகரையை அடைந்து காடடைந்தது. ‘ஹந்தொந்து என்ற வார்த்தையை அது மீண்டும், மீண்டும் உச்சரித்தது. அதன் அர்த்தம் என்ன? ஒரு உண்மையான பக்தனிடம் கடவுள் மனந்திறந்து இன்னும் வெளிப்படையாகப் பேசியிருக்கலாமென கரடியின் மனம் குமைந்தபோது, அதன் முகத்தின் முன் சுழன்று வட்டமடித்துக் கொண்டிருந்த பெருந்தேனீ ஒன்று எதிர்பாராத கணத்தில் அதன் மூக்கின்மேல் அழுத்திக் கொட்ட ஹந்தொந்து என அலறிப் புடைத்து மண்தரையில் விழுந்து புரண்டது. அப்போதுதான் கடவுளின் அந்த அருள்வாக்கின் அர்த்தம் அதன் உள்மனதில் எதிரொலித்தது.

தேனீ

தேன்

தேன்மீது பெரும் வாஞ்சையுற்ற ஒரு யுவதியே உனக்கானவள்

அது சந்தோஷம் தாங்காமல் எக்களித்தது. அவள் மொழியை எப்படி நானறிவது கடவுளே? ‘‘பெண் கிடைத்தால், மொழியும் கூடவே கிடைக்கும்அந்த இளங்கரடி தாங்கமுடியாத சந்தோஷத்தில் ஒரு அணில்வழுக்கி மரத்தின் மேலேறி வானத்தையும், மேகத்தையும் பார்த்து, மீண்டும் மீண்டும் எக்காளமிட்டது. ஒரேயொரு நிராசை மட்டும் அதனுள் எழுந்தது. அவளுக்கு என்னைப் போலவே தேனடையோடு கரையானும்கூடப் பிடித்திருக்க வேண்டும் கடவுளே! தன் இருப்பிடத்தை அடைந்தவுடன் அது அடுத்து எடுத்துவைக்க வேண்டிய தன் அடியைப் பற்றி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தது. இருட்டியவுடன் அது காட்டின் மையத்திற்குள் பிரவேசித்தது. அக்காட்டினுள் ஜீவித்திருந்த ஒட்டுமொத்த தேனீக் கூட்டமும் நடுநடுங்கிய இரவு அதுதான். இத்தனைப் பெரிய தொடர் ஆக்ரமிப்பை அவை ஒட்டுமொத்தமாய் இதுவரை எதிர்கொண்டதில்லை. மொத்தத் தேனீக்களும் அக்கரடியைச் சூழ்ந்து, மொய்த்து, கொட்டியும், அவற்றைத் தன் உடலால் அநாவசியமாக ஏற்று,  அக்கரடியே ஒரு பெரிய தேன்கூடாக மாறி நடந்தது. தன்மீது மொய்த்திருந்த தேனீக்களைத் தட்டிவிடக்கூட மறந்து, ஒரு தேன் கூட்டிலிருந்து, இன்னொரு தேன்கூட்டிற்கு மாறிமாறி நடந்து மொத்தத் தேனடைகளையும் அப்படியே தன்முன் கொண்டுவந்து குவித்தது.

விடியும்போது இன்னமும் சொட்டிக் கொண்டிருந்த தேனடைக் குவியலின் முன் அது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. இக்கரடியின் ஆகிருதியின் முன் தோற்றிருந்த மொத்தத் தேனீக்களும் காட்டை விட்டகன்றிருந்தன. காலையில் அக்காட்டின் அருகிலிருந்த வயல்வெளிப் பாதையில் ஆண்களின் நடமாட்டம் குறைவதற்காக வேண்டி அக்கரடி மறைந்து நின்று காத்திருந்தது.

பெண்களின் வருகை சமீபிக்கும்முன் அது காட்டின் விளிம்பை ஒட்டிய ஒரு பகுதியில், நேற்றிரவு தான் சேகரித்த மொத்த தேனடைகளையும் குவித்து வைத்து மறைந்து நின்றுகொண்டது. அதன் எதிர்பார்ப்பின்படியே அவ்வழியே பெண்களின் வருகை ஆரம்பமானது. அவசர கதியில் நடந்தவர்கள், அத்தேனடைகளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றார்கள். சிலர் தேனடைகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். குனிந்து கையிலெடுத்து முகர்ந்து பார்த்து முகம் மலர்ந்தார்கள். விரலால் தொட்டு நக்கி ருசியை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டார்கள். தங்கள் கணவர்களுக்காக அத்தேனடைகளின் துண்டுகளை கைகளிலோ, காகிதங்களிலோ சுற்றி, பைகளில் வைத்தவாறு அவர்கள் நடந்தார்கள்.

காட்டின் விளிம்பில் மூச்சடக்கி கரடி இதை கவனித்தவாறு நின்றிருந்தது. தேனடைக் குவியல் மிக விரைவில் சிறியதாக இளைத்திருந்தது. இனி எட்டு அல்லது பத்து அடைகளே மிச்சமிருந்தன. கரடி நிராசையில் மூழ்கியது. கிரிக்கெட் பார்க்கும் ஆர்வத்தில் கடவுள் என் கோரிக்கையை மறந்துபோனதா? தேன்மீது  அதீத நாட்டமுள்ள எனக்கான அவள் எங்கே? இப்போது தன்னைக் கடந்துபோன பெண்களைப் போல தேனடைகளை எடுத்து இலைகளிலோ, பைகளிலோ அடைத்துக் கொள்ளும் ஒருத்தி அல்ல அவள். இத்தேனடைகளைக் கண்ட விநாடி அவள் மேலெழும்பித் ததும்பும் தன் ஆர்வத்தை அடக்க முடியாமல் தேனைப் பருகியிருப்பாள். இந்நினைவே அதன் வாயில் எச்சிலூற வைத்தது. ஊறிய எச்சிலை தனக்குள் விழுங்கியபடியே இன்னொரு இரவை தேனீக்களோடு மல்லுக்கட்டி செலவழிக்க வேண்டுமே என்ற ஆதங்கத்துடன் அவ்வழியின் மீதே கண்களை மீண்டும் பதித்தது.

தூரத்திலிருந்து ஒரு பெண் வருவது இப்போது தெளிவாகத் தெரிந்தது. அவள் வருவாள். மீதியிருக்கும் தேனடைகளையும் எடுத்துக்கொண்டு போய்விடுவாள். அவ்வளவுதான் முடிந்தது என் கதை. வரும் பெண்ணின் கையில் பையோ, கூடையோ இல்லாமலிருந்தது அதற்குப் பெரிய நிம்மதியைத் தந்தது. அவள் அருகில் வந்தபோது அதன் கண்கள் விரிந்து, மூக்கு புடைத்து மனம் குதூகலித்தது. இத்தனை பேரழகோடு ஒரு மனுஷப் பெண்ணை இதுவரை அது பார்த்ததில்லை.

தன்முன் வியாபித்திருந்த கோரைப்புற்களை முற்றிலும் விலக்கி, அவள் பேரழகைப் பருகியும், மயங்கிச் சரியாமல் கிறங்கி நின்றது. அத்தனை வசீகரமானவள் அப்பெண். அவள் ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வந்து கொண்டிருந்தாள். அதற்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரியவில்லையெனினும்,

‘‘ஜன்னல் திரைகளை விலக்கி,

ஜாலம் காட்டுவது எதற்காக?

தேன் தடவிய முட்களை

என் இதயம் நோக்கி வீசுவது எதற்காக?’’

என்ற அப்பாடல் தனக்கானது என அது அர்த்தப்படுத்திக்கொண்டது.

அவளின் அழகும், அப்பாடலின் வசீகரமும் சேர்ந்து காதல் ததும்பும் நீல வானத்தில் அதைத் தூக்கிப் போட்டது.

ஹலி ஹலியோ

ஹலி, ஹலாலோ

நான் தேடிக் கண்டடைய விரும்பிய தேனூறும் பெண் இவளாக மட்டுமே இருக்க வேண்டும் கடவுளே! கடவுளிடம் பிரார்த்தித்தபடி அவளின் ஒவ்வொரு காலடி ஓசையையும் அது மனதால் பின்தொடர்ந்தது.

ஓர் அற்புதத்தைப் பார்ப்பதைப்போல தன் முன்னிருக்கும் அத்தேனடைகளைக் கண்ட விநாடி அவள் கண்கள் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தன. அவள் நாக்கு, ஈர உதடுகளின் மீதேறி பயணித்தது. வாயில் எச்சில் ஊறத் துவங்கியது. தேனடைகளின் முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டாள். முதல் தேனடையைக் கையிலெடுத்து வாயிலிட்டபோது, உதட்டோரம் வழியும் தேன் துளிகளும், கிறங்கிய கண்களுமாய் அதை அப்படியே அவள் ஸ்வீகரித்தாள். ஒரு நிமிடம் கண்மூடி அதன் சுவையை உள்வாங்கி. இப்போது தேனை உள்ளங்கையிலிட்டு நக்கிக் குடிக்க ஆரம்பித்தாள்.

கனவு நிறைந்த கண்களினூடே, இதழ்களில் வழியும் தேன்துளிகளைத் தன் விரல்களால் வழித்து நக்கி, இடையிடையே நாவில் அகப்பட்ட சில தேனீக்களைத் துப்பி, சுவாசிப்பதற்காக வேண்டி சில விநாடிகள் சுவைப்பதை நிறுத்தி, கடைசித் துளியையும் மிச்சமின்றி அருந்தி முடித்த கணம், வானத்தை நோக்கி கண்கள் விரிய அவள் புன்னகைத்தாள். எழுந்து நின்று கட்டியிருந்த பாவாடையை உயர்த்தி, தாடையில் வழியும் தேனைத் துடைத்துக்கொண்டு பிசுபிசுத்த கைகளை முதலில் புற்களிலும், பின் தன் பாவடையிலுமாகத் துடைத்துக்கொண்டாள். வலதுகாலை முன்வைத்துப் புறப்பட ஆயத்தமானாள்.

‘‘இவள்தான் எனக்கானவள்’’

கரடி சந்தேகமற்று ஆசுவாசமானது. அது ஒளிந்திருந்த இடத்திலிருந்து ஒரே தாவலில் அப்பெண்முன் நின்று அவள் கைகளைப் பற்றி,

‘‘தேனூறுபவளே! ங்களை நான் காதலிக்கிறேன்’’ என்றது.

தன்னிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு அதுவே நடுங்கியது. அது மனித மொழியை உச்சரித்ததுதான் நடுக்கத்திற்கான காரணம்.  கிரிக்கெட் பார்க்கும் வெறிக்கிடையிலும் கடவுள் வாக்கு பலித்துவிட்டது.

‘‘பார்க்க ஒரு கரடியைப் போலிருக்கும் நீங்கள் யார்?’’ அவள் வாய் திறந்தாள்.

‘‘ங்கள் யூகம் சரிதான். நான் இக்காட்டிலுள்ள ஒரு கரடிதான். ங்களை நான் ஆத்மார்த்தமாகக் காதலிக்கிறேன்’’

‘‘நீங்கள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு இங்கு என்ன நடந்தது?’’

‘‘உங்கள் அழகும், பாடலும் என் இதயத்தை உருகி ஓட வைத்துவிட்டது. கடவுளின் வாக்குபடி நீங்கள்தான் என் தேன் காதலி’’

‘‘சரி கையை எடுங்கள், இது கேரளா. நீங்கள் ஒரு ஆண் என்பதையும் நான் ஒரு பெண் என்பதையும், ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்’’

‘‘சமூகநீதிக் காவலர்களும், மாதர் அமைப்புகளும், இளைஞர் சங்கங்களும், ஊடகக்காரர்களும் நம்மை கவனித்து கையும் களவுமாகப் பிடித்தால் நம் கதி அதோகதிதான். நாம் கைது செய்யப்பட்டால் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை’’

சட்டெனக் கரடி அவள் கைகளை விடுவித்தது.

‘‘உங்கள் வாழ்க்கைச் சுருக்கத்தைச் சொல்ல முடியுமா? சொத்து விவரங்களையும், லௌகீக சுகபோகங்களையும்கூட’’

ஒரு ரகசியம்போல அவள் கேட்டாள்.

‘‘வாங்க, போங்கன்னு மரியாதையா என்னக் கூப்பிடுறத உடனே நிறுத்து. இதயத்தை உருக்குவதைப் போல என்றெல்லாம் இன்னொருவாட்டி வசனம் பேசினா நான் வன்முறையக் கையாள வேண்டியிருக்கும். சரி, உனக்கு எவன் மலையாளம் கத்துக் குடுத்தது ?

இனி நான் உன்னை நீன்னும் போடா வாடான்னும் கரடின்னும்தான் கூப்பிடுவேன். நீ என்னை தங்கமேன்னும், சக்கரக் கட்டியேன்னும், குட்டின்னும் செல்லமாக் கூப்பிடு, உனக்கு என்னிடம் சொல்ல வேண்டிய ஏதாவது இருந்தா சொல்லு, மீதி விஷயங்கள அப்றம் தொடரலாம்!’’

ஒரே மூச்சில் அவள் சொல்லி முடித்தாள்.

கரடி சொன்னது,

‘‘ஹந்தொந்து’’

அவள் அதிர்ந்தது போல பாவித்து,

‘‘நீ அவ்வளவு ஒண்ணும் மோசமில்ல போலிருக்கே, பஷீரை வாசிச்சிருக்கியா?’’

‘‘பஷீரை எனக்குத் தெரியாதுடா தங்கம். இதை எனக்கு என் கடவுள் சொல்லித் தந்தார்’’

‘‘உன் கடவுளும் அவ்ளோ ஒண்ணும் மோசமில்ல போலிருக்கே’’

உற்சாகமுற்ற கரடி,

‘‘ஹலி ஹலியோ

ஹலி ஹூலாலோ’’ என்றது.

அவர்களிருவரும் காட்டினுள் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் உரையாடினார்கள். இப்படியொரு அருமையான இணை அருகிலிருந்தும் இவ்வளவு நாள் அறியாமல் இருந்துவிட்டேனே என ஆச்சர்யப்பட்டு, அவள் அக்கரடியைக் கட்டித்தழுவி ஒரு முத்தம் தந்தாள்.

‘‘வா, நான் உன்னை என் அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறேன்’’ என அதைத் தன்னோடு அழைத்துக் கொண்டு, தன் வீட்டைப் பார்த்து நடந்தாள்.

அதை அந்த ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. சிலர் ஆச்சரியத்துடன்,

‘‘இந்தக்கரடியை எங்க பாத்த? உன்னோட எணக்கமாப் பழகுதே’’ என விசாரிக்க ஆரம்பித்தார்கள்.

‘‘ஆமாம், என்னோட அவ்ளோ பிரியமா இணைஞ்சிடுச்சு. நானே அதை வளர்க்கலாம்னு இருக்கேன்’’ என அவர்களுக்கு பதில் சொன்னாள்.

‘‘இருந்தாலும் ரொம்ப கவனமாயிரு. எப்பவுமே ஒரு கரடி இவ்ளோ எணக்கமாயிருக்குமான்றது சந்தேகந்தான்’’

ஊர்க்காரர்களின் வார்த்தைகளில் எச்சரிக்கையிருந்தது.

‘‘நான் பாத்துப்பேன். எணக்கத்தவிட அனுசரணையா இருக்கறதுதான் எனக்கு முக்கியம்’’

கரடிக்கு அவர்களைப் பார்த்துநமஸ்காரம் சொல்ல வேண்டும் என்று ஆர்வமெழுந்தாலும், ‘ஊர்க்காரர்கள் முன் வாயைத் திறக்கவே கூடாதுஎன அவள் எச்சரித்திருந்தது நினைவுக்கு வர அமைதி காத்தது.

அவள் அதைப் பேசக் கூடாதெனச் சொல்லியிருந்ததன் காரணம் கரடி மலையாளம் பேசினால், அதை ஒற்றன் என்றோ, மாவோயிஸ்ட் என்றோ முத்திரை குத்தி கேரளாக்காரர்கள் அதை சேனல்களின் முன் நிறுத்தப் போவது உறுதி என்பதை அவள் நன்கறிந்திருந்தாள்.

மிகவும் பிரியத்தோடு அவள் கரடியிடம் ‘‘நாம எப்பயுமே கவனமாயிருந்தா ஒரு பிரச்சனையுமில்ல. அது மட்டுமில்ல, உன் வேலை என்னிடம் இணக்கமாயிருப்பதே தவிர, இந்த ஊர்க்காரர்களிடம் அல்ல’’ என்றாள்.

வீட்டை நோக்கி இருவரும் நடந்தபோதே அவள் சொன்னாள். ‘‘கூப்பிட வசதியாயிருக்குன்னு நான் உனக்கு ஒரு பேர் வைக்கிறேன். நடேசன். இந்தப் பேர் உனக்குப் பிடிச்சிருக்கா?’’

‘‘பிடிச்சிருக்கு, ஆனால் இந்தப் பேர் புகழ்பெற்ற நல்ல பேர்தானா?’’ கரடி சந்தேகத்துடன் கேட்டது.

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்,

‘‘நீ அவ்ளோ தூரம் இந்தப் பேரைப் பத்தி யோசிக்க வேண்டாம்’’

மகள் ஒரு கரடியோடு வீட்டுவாசலை அடைந்தபோது அப்பாவும் அம்மாவும் நடுங்கிப் போனார்கள். கோழி, வாத்து, ஆடு, பசு, முயல் இதெல்லாம் வீட்டிலிருந்தது போதாதுன்னு, அவளே சொந்தமாக வளர்த்த ஏழு பூனைகள், ஒன்பது நாய்கள், ஒரு குரங்கு என ஏற்கனவே வீட்டிலிருக்கும்போது,

‘‘ஈஸ்வரா இந்தக் கரடிய வேற வீட்ல எங்க வச்சு வளக்கறது?’’

அவர்களிருவரும் பதைக்கும் மனதோடு தன் மகளையும், அந்தக் கரடியையும் மாறிமாறி பார்த்துத் திகைத்தார்கள்.

அவள், அப்பா அம்மாவைப் பொதுவாகப் பார்த்துக்கொண்டே,

‘‘இது என் கரடி நண்பன். பெயர் நடேசன். கடவுள் பக்தியும், உழைப்பின்மீது பெரும் நம்பிக்கையுமுடையவர். அவர் என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறார். அதப் பத்தி உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேச வந்திருக்கார்.  அவருக்கு மலையாளம் பேசவும் தெரியும்’’

கரடி முந்திக்கொண்டு அப்பா அம்மாவின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தது.

மரியாதைக்குரிய அப்பா, அம்மா என்னை ஆசீர்வதிக்க வேண்டும். உங்கள் மகளை என் மனைவியாக்கிக் கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும். நான் அவளைத் தங்கத்தைப் போலப் பார்த்துக் கொள்வேன்’’

அப்பாவும் அம்மாவும் விக்கித்து நின்றார்கள். அப்பா மெதுவாக அம்மாவிடம்,

‘‘அது நம் கால்களைப் பிடித்துக் கொண்டு கேட்டதைப் பாத்தியா? இந்தக் காலத்துப் பையன்கள்ல யாருக்கு இத்தன பணிவிருக்குது? பாக்கறதுக்குக் கரடி என்பதைத் தவிர வேற பிரச்சனை எதுவுமில்லயே? அவளுக்குப் பிடிச்சிருந்தாநாம எதற்காகநீ என்ன நெனைக்கிற?’’

அம்மா சொன்னாள்,

‘‘சரி எனக்கும் சம்மதம். ஆனா ஒரு விஷயம். கல்யாணம் முடிஞ்ச பிறகு இங்க குடியிருக்க வேண்டாம். கரடியப் பாக்க தொடர்ந்து ஆளுங்க வந்தா அது ஒரு பெரிய பிரச்சனையாயிடும்’’ அம்மாவின் முடிவை அப்பா அவள் காதுகளில் ஒரு ரகசியம் போலச் சொன்னபோது,

எனக்கொண்ணும் அதுல பிரச்சனையில்லப்பா. நான் நடேசனோட காட்டுக்குப் போகத்தான் விரும்பறேன். காட்ல இருக்கற கரடி சமூகத்துக்கு, ஒரு முன்மாதிரியான வாழ்க்கையச் சொல்றதுக்கு என் இருப்பு பெரும் ஒதவியா இருக்கும்னு நடேசன் விரும்புறார். தினம்தினம் காட்லருந்து வேத்து விறுவிறுக்க வீட்டுக்கு வந்து அடுத்தநாள் காட்டுக்குத் திரும்பறதவிட, நாங்க அங்கயே போயிடறது நல்லாயிருக்குந்தானே!’’
அம்மா சொன்னாள்,

‘‘உன் விருப்பம் போலவே மகளே, ஆனா நீ வீட்டைவிட்டுப் போய்ட்டா நாய்களையும், பூனைங்களையும், குரங்கையும் யார் பாத்துக்கறது? என்னால அந்த பாரத்தையும் சேத்துச் சொமக்க முடியாது. ஏற்கனவே உன் அப்பாவச் சுமப்பதே போதும்’’
‘‘பரவாயில்ல. அதெயெல்லாம் நானே என்னோட கூட்டிட்டுப் போயிடறேன். நாய காட்டு நாயாவும், பூனைய காட்டுப் பூனையாவும், கொரங்க காட்டுக் கொரங்காவும் நான் மாத்தி வளத்துக்கறேன்’’

அப்பாவும், அம்மாவும் அவர்களிருவரையும் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்கள். அவர்கள் இருவரும் மகளின் கையைப் பிடித்து நடேசன் கைகளில் ஒப்படைத்தார்கள். புதுமணத் தம்பதிகள் காட்டை நோக்கி நடந்ததை அவர்கள் ஒரு புள்ளியாகி மறையும்வரை கண்களில் நீர் பனிக்க, பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஏழு பூனைகளும், ஒன்பது நாய்களும் ஒரு குரங்கும் அவர்களைப் பின் தொடர்ந்தன.

ஒரு வருடம் கடந்தது.

ஒரு நாளின் அதிகாலையில் நடேசனும், அவன் மனைவியும் கைக் குழந்தையுமாய் அப்பா அம்மாவின் ஆசீர்வாதம் பெற வேண்டி வீட்டையடைந்தார்கள். குழந்தையைக் கொஞ்சி முடித்து, டீ தந்தவுடன் அம்மா, மகளை அடுக்களைக்கு அழைத்து,

‘‘உன் வீட்டுக்காரன் எப்படி இருக்காரு? உன்னை எப்படிப் பாத்துக்கிறாரு?’’ என்று கேட்டாள்.

மகள் நிதானமாகச் சொன்னாள்.

‘‘அம்மா, இவரோட மகத்துவம் இத்தனை தூரம் நான் எதிர்பார்க்கல. குடியில்ல, ஒரு பீடி சிகரெட் இல்ல, வாய் நாத்தமில்ல, அரசியல் இல்ல, இன்னொரு பொண்ணைத் தேடிப் போறதில்ல, சமையற்கட்டை மொத்தமாகவே அவர் பாத்துக்கிறார்.

அவர் சமையலோட சுவையை என்னால வார்த்தைகளால விவரிக்க முடியாது. தண்ணீர் கொண்டு வருவார், விறகு வெட்டுவார், பூ பறித்து எடுத்து வருவார். துணி துவைக்க ஒரு நாளும் நான் கஷ்டப்பட்டதில்ல. காரணம் அவர் துணி உடுத்தறதில்ல. தேன் நெறஞ்சு கெடக்கும் என் வீடு. கூடைக்கூடையாய் பழங்கள் கொட்டிக் கெடக்குது. கரையானும் கூட. அதைச் சாப்பிடப் பழகிக்கிட்டா அப்பறம் வேற எதையும் சாப்பிடத் தோணாது நமக்கு. துவையலுக்குக் கரையானைவிட இன்னொண்ணை யோசிக்கவே முடியல என்னால. இதவிட முக்கியம், குழந்தைக்குப் பாலூட்டறதத் தவிர வேறெதையும் நான் செய்யத் தேவையில்ல. எல்லாம் அவரே பாத்துக்குவார்.

அப்றம் ரொம்ப முக்கியம் அவர் என்னைச் சந்தேகப்பட்டதேயில்லகுளிச்சு முடிச்சு சிங்காரிச்சிக்கிட்டு அவர் வர்றதப் பாத்துக் காத்திருக்க வேண்டிய அவசியமேயில்ல. அவருக்கும் குளிக்கறதுலயும் பெரிய விருப்பமேதுமில்ல’’

அவள் சொல்லிக்கொண்டே போனாள்.

‘‘படுக்கைல?’’

‘‘அதுல அவர் பெரிய ஜாலக்காரன், ஒரு நாள் கூட என்ன சும்மா விட்டதில்ல’’
யாராலும் அவதானித்துவிட முடியாததொரு மனநிலையில், அவிழ்ந்திருந்த தன் கூந்தலைக் கட்டிக்கொண்டே சமையற்கட்டிலிருந்து நடைக்கு வந்தாள் அம்மா.

தீ ஜ்வாலை மாதிரியாகியிருந்த கண்களோடு, ஈசிச்சேரில் உட்கார்ந்திருந்த தன் கணவனை ஒரு பார்வை பார்த்தாள். அப்படியே திரும்பி மகளைப் பார்த்து,

‘‘ஏண்டி, எங்கேயாவது ஒரு கரடி தேனடைகளோடு உட்காந்திருக்கறப் பாத்தா உடனே எங்கிட்ட சொல்லு. மறந்துடாத!’’

   ‘‘நிச்சயமா அம்மா, நான் என் பிரியப்பட்ட அம்மாவுக்காக என் கண்களை எப்போதும் திறந்து வச்சுகிட்டேயிருப்பேன்’’

இது ஒரு உண்மைக் கதையில்லையென உங்களில் யாருக்காவது தோன்றினால் அது கொஞ்சம் கஷ்டந்தான்?



(கரடி, மனிதப் பெண்ணை மணம் புரிவதான அமெரிக்க நாட்டுப்புறக் கதைகளை நினைவில் கொண்டு


நன்றி
தடம் மாத இதழ்
பிப்ரவரி

No comments:

Post a Comment