
என் எழுத்தாளர் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய செய்திகள் எதுவும் மீடியாக்களில் வருவதை எப்போதும் தான் விரும்புவதில்லை என்று சொல்லுவார், ஆனாலும் அவரைப்பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அவர் சந்தோஷப்படுவதைக் கவனித்திருக்கிறேன். அது நம் இருப்பை சொல்கிறது, சக நண்பர்களின் உரையாடலை சமீபப்படுத்துகிறது. எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத மனிதர்களிடம் நம்மை அடையாளப்படுத்தி சந்தோஷமோ, சங்கடமோ கொள்ள வைக்கிறது.
இக்கட்டுரையை மலையாளத்திலிருந்து தமிழுக்கு அவசர அவசரமாக ஜெயஸ்ரீயும், சுகானாவும் மொழிபெயர்த்தனர்
எழுத்துகளின் தூய்மையும், நெருக்கதையும், விவாதத்தையும், சக்தியையும் இதயத்துடிப்பையும் சேர்த்து வைத்து பாலம் கட்டுவது, அதனூடாக மலையாளம், தமிழுக்குள் கரைந்து கொள்வது.
தமிழ்நாட்டில், திருவண்ணாமலை நகரில் பெயரிடப்படாத அந்த வீட்டின் முகவரிதான் 19, டி.எம். சாரோன்.
தமிழின் இனிமையும் மலையாளத்தின் அழகும் கலந்திருக்கும் இந்த இரண்டு அடுக்குமாடி வீட்டின் மர நிழல் வரவேற்கும் வாசலில் கைகூப்பி வரவேற்க, பவாசெல்லதுரையின் அம்மா தனம்மாவும், ஷைலஜாவின் அம்மாவான கேரளத்து மாதவி அம்மாவும் இருக்கிறார்கள். இரண்டு அம்மாக்களின் கருணையும் பிரியமும் விளங்கும் இந்த இடம், இந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக இருக்கிறது. இங்கே தமிழும், மலையாளமும் இழைகளாகப் பின்னிப் பிணைந்து பேசி, பழகி, அற்புதப்பட்டு, விவாதித்து ஒன்று சேர்ந்திருக்கும் மலையாளத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிற இலக்கியங்களை இந்த வீட்டின் வாசலினூடாகஎன்.எஸ். மாதவன், கெ.என். பணிக்கர், எ. அய்யப்பன் முதல் எட்டாம் வகுப்பு மாணவி சிபிலா மைக்கேல் வரை தமிழகம் ஏற்றுக் கொண்டது, இவர்களினூடாகத்தான்.
ஜவுளி வியாபாரியாக இருந்த உத்திரகுமாருடன் அடிமாலியில் வாழ்ந்த நாட்களில்தான் ஜெயஸ்ரீ தன் எழுத்துலகில் நுழைகிறார். மாத்ருபூமி நாளிதழில் "நிலவில் கால்வைத்தது கட்டுகதையா?" என்ற தலைப்பில் வந்த கட்டுரையை 2002 இல் தமிழில் மொழிபெயர்த்தது தான் தொடக்கம். பிறகு அடிமாலியைச் சேர்ந்த சியாமளா சசிகுமாரின், "நிசப்தம்" என்ற கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்தார். பால் சக்கரியாவின் பெண்கதைகள், குறுநாவலான "இதுதான் என் பெயர்" சாகித்ய அகாடமிக்காக "சக்கரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 கதைகள்" எ. அய்யப்பனின் "கல்கரியின் நிறமுள்ளவர்கள்" சந்தோஷ் ஏச்சிக்கானத்தின்" ஒற்றைக் கதவு", "கவிதையும் நீதியும்" என்ற தலைப்பில் சுகதகுமாரியுடன் கவிஞர் விஜயலட்சுமி நிகழ்த்திய நேர்காணல் என மலையாள இலக்கியச் செல்வங்களை ஜெயஸ்ரீ தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
திருவண்ணாமலைக்கருகில் வாணாபுரம் அரசு மேனிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரான ஜெயஸ்ரீயும், வியாபாரியான உத்திரகுமாரும் வேலைப் பளுவிற்கு இடையிலும் புத்தகங்களோடு தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
அறிமுகப் படுத்துவதற்கும் மேலாக, மலையாள இலக்கியத்தைப் பற்றிய கௌரவமான தேடல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் இந்தக் குடும்பத்தின் முயற்சிகள் களம் அமைக்கிறது. காந்திகிராம் பல்கலைக் கழகத்தின் பி.ஏ. தமிழ்ப் பாடப்புத்தகமாக இருக்கிறது ஷைலஜா மொழிபெயர்த்த "சிதம்பர நினைவுகள்". தன்னாட்சிக் கல்லூரியான திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் எம்.ஏ. முதல் வருடப் பாடப்புத்தகமாக உள்ளது ஜெயஸ்ரீ மொழி பெயர்த்த "நிசப்தம்". அதே கல்லூரியின் பி.ஏ. இளங்கலை பாடப்பிரிவிற்கு பவா செல்லத்துரையின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" பாடபுத்தகமாக இருக்கிறது. என்.எஸ். மாதவனின் பரியாய கதைகளின் தமிழ் பெயர்ப்பான "சர்மிஷ்டா" வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களும் தமிழகத்தில் உள்ளனர்.
கேரளத்தில் பால் சக்கரியா கொளுத்திவிட்ட விவாதமும், இப்போதைய மலையாள சினிமாப் பிரச்சினையும் கூட 19. டி.எம். சாரோனில் தொடர்விவாதப் பொருளாகின்றன.
இந்த வீட்டில் சமையல் உதவியாள் லதா கூட தண்ணீர் கேட்டால் ”வெள்ளம் வேணுமோ” என்று மலையாளத்தில் திரும்பக் கேட்கிறாள். அங்கே சென்று நாம் தமிழைத் தேடும்போது இவர்கள் மலையாளத்தைத்தான் தேடுகிறார்கள். அங்கேயிருந்து வெளியேறினால் நாம் தமிழை விட்டுவிடுவோம் சொந்த நாட்டை விட்டு வெளியேறினால் நாம் மலையாளத்தை மறப்பதுபோல. இப்போதும் இவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை விட அவர்களின் ப்ரியமான மலையாளத்தை.




































