Thursday, December 15, 2011
வரைய முடியாத சித்திரம்
Wednesday, December 7, 2011
தொடர் - 18

Saturday, December 3, 2011
தொடர் - 17
ஒரு நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங் கன்றுக்கும்
இன்னொரு தென்னங் கன்றுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்கு
துல்லியமாய் கணக்குண்டு
என்ன யோசித்தும் புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர
வேண்டிய இடைவெளி எதுவென்று
கிடந்தால் பின்னிக் கிடக்கிறோம்
நின்றால் ஒற்றையாய் நிற்கிறோம்.
-மனுஷ்யபுத்திரன்.
இந்த இடைவெளிகளை இட்டு நிரப்பி வாழ்நாள் முழுக்க வாழ்ந்துவிட்ட மனிதர்கள், நானறிந்தவரை குறைவு. ஏதாவதொரு அதிர்ஷ்ட அல்லது துரதிர்ஷ்ட நிமிடத்தில் இவ்விடைவெளிகளை அறிந்தோ, அறியாமலோ கடந்துவிடுகிறோம். ஒரு நிமிடத்தில், நதியோரப் பெருமரத்தின் நட்புக் கிளையொன்று சகல சப்தத்தோடும் முறிந்து விழுந்து, பச்சை வாசனையோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, வெளியை வெறுமையாக்கி விடுகிறது.
கிளை இழந்த மரத்தின் காயம், மரம் சார்ந்தது. அடித்துச் செல்லப்பட்ட கிளையின் வலி, கிளை சார்ந்தது. ஒரு வார்த்தையை, இப்படி வெவ்வெறாகப் பிய்த்துப்போட்டு விளையாடுவதில்தான் காலம் ஏத்தனை திருப்தியடைந்துவிடுகிறது. ஒரு வார்த்தை அல்லது ஒரு உடலசைவு போதும், இத்துயரம் நிகழ. எனக்கு மட்டுமல்ல, உங்கள் எல்லோருக்கும் வாழ்வின் ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு கணத்தில் நிகழ்ந்த உங்கள் ஆத்மார்த்த நட்பிழப்பை ஞாபகப்படுத்தினால், உங்கள் அறை கொஞ்சநேரம் தோழமையின் வாசனையாலோ, தூரோகத்தின் துர்நாற்றத்தாலோ நிறையலாம். பொறுத்துக் கொள்ளுங்கள்.
காட்டாற்று வெள்ளத்தில் காப்பாற்ற வேண்டி, உயிரை உள்ளங்கைக்கு இறக்கி, உன்னை நோக்கி நீண்ட கரங்களைப் புறந்தள்ளி, மரத்தடி பருண்மையில் மறைந்த உன் ஆண்மை, நீ நினைக்கிற மாதிரி நீ மட்டும் அறிந்த ரகசியம் அல்ல. நண்பனே, அது நிர்வாணம், முழு நிர்வாணம். தூய வானில் ஒளிரும் பேரழகோடு பயணிக்கும் ஒரு நிலவைப்போல அது உலகறிந்தது. வெகுநேரம் உள்ளங்கையில் தேங்கியிருக்கும் அக்கசப்பை விழுங்கு அல்லது சிந்து.
உன்னிடம் விரோதமில்லை, அன்பைப் போலவே
- சுகுமாரன்.
இழந்த நட்பு மீட்டலில், எழுத்து சம்மந்தமின்றி இப்படித்தான் சுழன்றடிக்கிறது. ஓரு பசிய விலங்கின் இரை தேடலுக்கான ஆவேசமும் அலைச்சலுமான தேடலும், மீட்டலும் அது.
கடந்த வாரம். வெயிலடிக்காத மதிய வேளை. நண்பனுடைய அம்மாவின் கடைசி நிமிட அடங்குதலுக்கு, எல்லோரும் காத்திருக்கிறார்கள். நாடி பார்த்து, ரத்த அழுத்தத்தின் அளவுப் பார்த்து, சுவாசம் பார்த்து, உயிரடங்குதலை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் அந்நிமிடத்தில், நான் அவர்களுடன் இருந்தேன். என் தொலைபேசி ரகசியமாய் அழைத்தது. அங்கிருந்து சப்தமின்றி வெளியேறி, அச்செய்தியைக் கேட்கிறேன். மனம் அடங்க மறுத்து ஆவேசத்துடன் துடிக்கிறது.
சீனுராமசாமி, தன் கவிதையால் என்னோடு இரு வரிகளில் பேசுகிறான்.
எல்லோரும் வெளியேறுங்கள். நான் அழவேண்டும்.
அங்கு யாரும் வெளியேறவில்லை. அழ எனக்கு அறை வேண்டாம். நடுத்தெரு போதும்.
ஷைலஜாவின் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று, அடுத்த பத்தாவது நிமிடம், கிரேஸ் மருத்துவமனை வாசலில் நின்றோம். அறுபது எழுபது சோகம் கப்பிய முகங்களிலிருந்து அந்த அப்பாவைத் தனியாகக் கண்டடைகிறோம்.
‘‘எப்பவுமே உங்களைப் பத்திதாம்மா பேசுவான். எனக்கு எல்லாமே பவா சாரும், ஷைலஜா மேடமும்தாம்பான்னுவான். நம்மை எல்லாரையும் மீறிட்டுப் போயிட்டானேம்மா...’’ என அவள் கரம் பற்றிக் கதறினார்.
‘‘குளுருது குளுருதுன்னு எப்பவுமே பெனாத்துனாருங்க’’ அவன் மனைவி, ஷைலஜாவிடம் ஏதேதோ சொல்ல முயன்றாள். எனக்கு ஜி.நாகராஜனின் கடைசி நாளைப் பற்றி சி.மோகன் நினைவு கூர்ந்தது ஞாபகம் வந்தது.
ரொம்ப குளுருதுப்பா.
சிதையில வச்சாத்தான் இந்தக் குளுரும் போகும்போல
படைப்பாளிகளோ, சாதாரணமானவர்களோ, எல்லோரும் மரணத்தை முன்கூட்டி தெரிந்துகொள்கிறார்கள். அதன்பிறகான அவர்களின் மிதந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வாழ்வின் அனுபவம் ததும்பும்.
நான் வைராக்கியத்தோடு அழாமலிருந்தேன். அவர்களை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து உள்ளறைக்கு நகர்ந்தேன். பணியிலிருந்த அந்த இளம் மருத்துவர் என்னைப் பார்த்ததும், அவசரமாக எழுந்து என் கரம் பற்றி, சுய அறிமுகம் செய்தார். நான் யாரைத் தேடி வந்திருக்கிறேன் என்பதை, என் முகம் பார்த்தும், என்னோடு நின்ற நண்பர்களைப் பார்த்தும், ஒரு நிமிடத்தில் யூகித்தறிந்து,
‘‘த்ரோட் கேன்சர் சார். பத்து நாளைக்கு முன்ன, சேரும்போதே சீரியஸ்தான். மதியம் ரெண்டரைக்கு நர்ஸ் கூப்புடறாங்கன்னு அந்த ரூமுக்குப் போனேன். ஒரு வெயின் டிஸ்ட்ரப் ஆகி, சுமார் ரெண்டு லிட்டர் ரத்தம் பெட்ல கொட்டிடுச்சி சார். பல்ஸ் பார்த்தேன், அடங்கியிருந்திச்சு.’’
பச்சை ரத்தம் பார்த்து, முகர்ந்த அதிர்வு, அந்த இளம் மருத்துவரின் முகத்தில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் தங்கியிருந்தது. நான் அழாமல் நின்றிருந்தேன். அம்மருத்துவர், என் தோளுக்கிணையாய் நின்று, அடுத்த வார்த்தையை எங்கிருந்து ஆரம்பிக்கவெனக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.
‘‘சார் மட்டும் பாடியைப் பாக்கறீங்களா?’’
நான் தலையசைத்தேன்.
அவர் அனிச்சையாய் முகத்தில் கவசமணிந்து, கையுறையிட்டு என் முன் நடந்தார். அந்த எட்டுக்கு எட்டு குறைவான சிறு அறையை அவர் திறந்தார். முழுக்க போர்வையால் மூடப்பட்ட ஓருடல், அப்படுக்கை நீளத்திற்கு நீண்டிருந்தது. என் முகத்தைப் பார்த்தவாறே போர்வையை விலக்கினார்.
முகத்திலும், கழுத்திலும் உறைந்திருந்த ரத்தத்தோடு, அப்போதுதான் இறந்திருந்த என் நண்பன் ராஜவேலு.
அம்முகம், அவ்வுடல், அந்த மௌனம், அந்த மூடிய அறை, எதுவும் அவனுடையதல்ல. அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டேயிருந்த ஓர் இளங்கன்று. என் அலுவலக வாசல் டீக்கடையில், ராஜவேலு சொடக்குப் போட்டுப் பேச ஆரம்பித்தால், கூட்டம் மொய்க்கும். அவன் தீவிர அ.தி.மு.க. அம்மாவின் மீது பற்றும் மரியாதையும் இருந்தது. அது, அவர் மீது எழுந்ததல்ல. தி.மு.க.வின் மீது எழுந்த எதிர்ப்புணர்வின் வடிகாலென, ராஜவேலுவைச் சந்தித்த பத்தாவது நிமிடத்தில் நானறிந்து கொண்டேன்.
மதுரை அவனுக்குச் சொந்த மாவட்டம். அப்பாவின் மின்வாரிய பணி நிமித்தம், குடும்பம் திருவண்ணாமலைக்கு குடி பெயர்ந்திருந்தது. வாசிப்பின் ருசி அறிந்தவன். கொண்டாட்டங்களை எப்போதும் தனதாக்கிக் கொண்டவன். வீடு, அலுவலகம், பயணம், பார், அறை எல்லாமும் அவனுக்கு சந்தோஷங்களால் நிறைய வேண்டும். ‘இனக்குழுக்கள், கொண்டாட மட்டுமேயானவை’ என்று நினைத்த பேராசை மனம் அவனுக்கு.
சமூகத்தின் எந்நிகழ்வுகள் குறித்தும், ராஜவேலுவுக்கு எதிர்மறைக் கருத்துகள் உண்டு. அக்கருத்தின் வலிமையை, நான்கு பேருக்கு முன்னால் சொடக்குப் போட்டு ஸ்தாபிப்பான். ராஜவேலுவால் காயப்பட்ட ஒரு மனிதனையும் நானறியேன். சகமனித மன ஸ்பரிசமற்று, சுடுகாடுகளாகிப்போன அரசு அலுவலகங்களை, ராஜவேலு எப்போதும் தன் வார்த்தைகளால் உயிர்ப்பிப்பான். தன் வெடிச் சிரிப்பால் ஒளியூட்டுவான். எல்லாம் ஒரு நிமிடத்தில் அடங்கியிருந்தது.
‘‘பாடியைக் கொண்டுபோக ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டீங்களா?’’
அப்படியென்றால், அவன் பேச்சு, அவன் வாசிப்பு, அவன் தர்க்கம், அவன் கொண்டாட்டம், அவன் சொடக்கு, எதுவுமே மிச்சமில்லையா? எல்லாம் துடைத்தெறியப்பட்ட மீந்த ஞாபகங்களா?
அவ்வறையிலிருந்து பத்து நாட்களாய் பயன்படுத்தின பொருட்கள், துணிகள், போர்வை, எல்லாம் இரு பிக் ஷாப்பர்களில் அடைக்கப்பட்டு, வெளியே எடுத்துச் செல்லப்பட்டன.
இறந்தவனின் ஆடைகளை
என்ன செய்வதெனத் தெரியவில்லை
மனுஷ்யபுத்திரனின் கவிதை வரிகள் நெஞ்சில் முட்டுகிறது.
ஆம்புலன்ஸும், அதன் பின்னாலேயே நாங்களும் இடுக்குப் பிள்ளையார் கோவிலின் எதிரே தனித்திருந்த அவ்வீட்டை அடைந்தபோது, ஒரே ஒருவர் மட்டும் எங்களை எதிர்கொண்டு நின்றிருந்தார். மரணத்தின் பரபரப்பின்றி சடலம் இறக்கப்பட்டது. வீட்டு ஹாலில் பென்ச் போட்டு படுக்க வைக்கப்பட்டபோது, ‘கிழக்கு மேற்கால’ என்று எங்கிருந்தோ ஒரு சம்பிரதாய குரல் ஒலித்தது.
ஒரு புது வேட்டி போர்த்தி, கால் விரல்களைச் சேர்த்துக் கட்டி, பன்னீர் தெளித்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, இவை அனைத்தையும் தனியாய் அசாத்திய மவுனத்தோடு செய்தவர் ராஜவேலுவின் அப்பா.
எங்கள் நாலைந்து பேரின் மூச்சுக் காற்றை உட்கொண்டு அவ்வறை சுவாசித்துக்கொண்டிருந்தது. நான் வயதான அந்தத் தகப்பனையே பார்த்துக்கொண்டிருந்தேன். எதன் பொருட்டோ அவரிடம் உறைந்த அந்நேர மவுனம், என்னை பயமுறுத்தியது. எல்லாம் முடிந்து, தன் மகனின் காலடியில் நின்று, படுத்துறங்கும் மகனை ஆசைதீர பார்வையால், முழுமையாய் பருகினார்.
‘‘மகனே’’ என ஓங்காரித்து வந்த அக்குரலொலி, அங்கிருந்த எங்கள் எல்லோரையும் அசைத்தது. அதன் பிறகான பத்துப் பதினைந்து நிமிடமும் அவர் தன் மொழியற்ற குரலால், வெவ்வேறு உடல் மொழியால், தன் பிரிவாற்றிய அந்நிமிடம் என் வாழ்வில் வேறெப்போதும் காணக்கூடாதது. பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டு சவங்களாக அப்பாக்கள் வாழும் வாழ்வெதற்கு?
ராஜவேலு என்ற என் அலுவலக நண்பன், தன் வாசிப்பாலும், பேச்சின் வசீகரத்தாலும், எல்லோரையும் பின் தள்ளி, என் கைகளைப் பற்றிக்கொண்டவன். நாங்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களின் வெளிச்சமற்ற ஓர் இருட்டில், தனியாக நின்று உரை அருந்துபவன். ‘‘பார் இருட்டு மனசுக்குப் பழகிடுச்சுண்ணே’’ எனச் சிரிப்பான். நானறிந்து, உள் ரகசியங்களற்ற மனிதன்.
நம் மனக்கதவுகள், மரவட்டை பூச்சியின் கால்களைப்போல நீண்டு ஊர்ந்துகொண்டே இருக்கிறது. நாம் இருக்கிற அவசரத்தில், எத்தனைக் கதவுகளை அடைக்க முடியும்? ஒன்றை அடைத்தால், புதிதொன்று முளைக்கிறது. எத்தனையோ பூட்டுகளுடன், எத்தனை எத்தனை சாவிக் கொத்துகளுடனும், நம் ரகசியங்கள் தினம் தினம் மறைக்கப்படுகின்றன.
ராஜவேலுவின் உலகம் கொண்டாட்டங்களால் மட்டுமல்ல, வெளிப்படைகளால் ஆனதும்கூட.
‘‘அண்ணே, இன்னிக்கு ஒரு எஸ்ட்டிமேட் போட ஒருத்தன்கிட்ட முன்னூறு ரூபா கேட்டேன். ஐநூறா கொடுத்தான். எஸ்.ராமகிருஷ்ணனோட ‘உபபாண்டவம்’ என்ன வெல?’’
வம்சிக் கடை பணியாளர்கள், அவனின் இந்த அப்பழுக்கற்ற வார்த்தைகளுக்கு ரசிகர்கள்.
‘‘படிக்க படிக்க, லஞ்சம் வாங்க வேணான்னுதாண்ணே தோணுது. ஆனா குடிக்கவும், படிக்கவும், நான் வாங்கற சம்பளம் பத்தல.’’
‘‘உங்களுக்கு எப்படி ராஜவேல் என்னைத் தெரியும்?’’
‘‘தரிசனம் பெற நாள் முழுக்க யோகி ராம்சுரத்குமாரின் சன்னதி தெரு வீட்டு முன்னாடி நான் நிற்கும்போதெல்லாம், அவரு உங்களைப் பக்கத்துல ஒக்காரவச்சி பேசி சிரிப்பாரே, அப்பயிருந்துண்ணே’’
கழுத்தில் ஒரு சிறு ஆபரேஷன் செய்த வடுவோடு, ஆறேழு மாதங்களுக்கு முன், என் இருக்கைக்கு முன் நின்றவனை, கொஞ்சம் பதட்டத்துடன் பார்த்தேன்.
‘‘அண்ணே கவலைப்படாதீங்க. கேன்சரை, தொடச்செறிஞ்சிட்டேன். ரொம்ப வாய் பேசறேன்னுட்டு, தேவையே இல்லாம பத்து பல்லை புடுங்கிட்டாண்ணே அந்த டாக்டரு.’’
எனக்கு கணக்குப் போட முடியவில்லை. வாழ்வை இவன் மட்டும் எப்படி இத்தனை அநாவசியமாக எதிர்கொள்கிறான்? எது இவனுக்குள் இத்தனை அசாத்தியமான தைரியத்தை விளைத்திருந்தது?
‘என் கேன்சரை இடது கையால் நானே துடைத்தெறிந்துவிட்டேன். என்னைக் கொண்டாடு’ என்று காலத்தின் முன் துள்ளும் மனதைப் பார்த்து, அது முறுவலித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் காலம்காலமாய், காலம் தனக்குள் மறைத்து வைத்திருந்த குரூரம், என் நண்பனைக் கீறி, இரண்டு லிட்டர் ரத்தத்தை உறிஞ்சியிருக்கிறது.
நட்பின், தோழமையின், துரோகத்தின், மரணத்தின், நீள அகலங்களை அமைக்கத் தெரியாத நம் குதூகல விளையாட்டினூடே, மெல்ல ஒரு விஷக் காற்று மாதிரி பரவிவிடுகிறது காலம்.
Tuesday, November 22, 2011
தொடர் - 16
என்ன நினைவுப் பிழையெனினும் பத்து வருடங்களுக்கு முன்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் என்பதுகூட நினைவிருக்கிறது. எங்கள் வீட்டு தெரு முக்கில், ஆட்டோவுக்காக காத்திருக்கிறோம். என்னோடிருப்பவர்கள், அப்போதுதான் சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமியும், அவர் மனைவியும்.
ஞாயிறு ஆராதனை முடிந்து, வண்ண வண்ண உடைகளோடும் பொங்கி வரும் சிரிப்போடும், தேவாலயத்திலிருந்து வெளிவரும் மனிதர்களில் நானும் அவரும் வெவ்வேறு விதமாக ஒன்றியிருந்தோம். கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, திடீரென எழுந்த ஓர் அலறலும் அதைத் தொடர்ந்து கூடிய கும்பலும், அச்சூழலை மட்டுமின்றி எங்களையும் குலைத்தது. எல்லாவற்றிலிருந்தும் அறுத்துக் கொண்டு ஓடினோம்.

அந்த சர்ச்சின் பாதிரியார், மெல்ல தரையில் கை ஊன்றி எழுந்து கொண்டிருந்தார். அங்கி முழுக்க மண் ஒட்டியிருந்தது. உதட்டோரம் கொஞ்சமே கொஞ்சமாக ரத்தக் கசிவு. கீழே விழுந்துவிட்டாரோ என்ற எங்கள் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக, ஒருவன் தேவனுக்கு விரோதமான தமிழ் வார்த்தைகளில் அவரை திட்டிக்கொண்டிருந்தான். அவனிருந்த மூர்க்கம், மீண்டும் அவரை தாக்கக்கூடுமோ என அச்சமூட்டியது. நாங்கள்தான் அவனை விலக்கிவிட்டோம்.
நான் தற்செயலாய் கந்தசாமி சாரை கவனித்தேன். ஒட்டுமொத்த முகமும் கருத்து, ஒதுங்கி நின்று சற்று முன் விழுந்த அடிகள், தன்மீது விழுந்த வலியோடும் வேதனையோடும் நின்றிருந்தார். கூட்டத்திலிருந்து தனித்திருந்தோம்.
‘‘எனக்கு மதம் மீதெல்லாம் பெரிய நம்பிக்கையில்லை பவா. ஆனா, ஒரு பாதிரியாரை அடிப்பதென்பது கடவுளை அடிப்பது மாதிரி’’ அவர் வார்த்தைகளில் துயரம் தோய்ந்திருந்தது.
கடந்த இருபதாண்டுகளில் இந்த இறை நிலையையும், நன்னெறியையும் திருச்சபைகளே முற்றிலும் இழந்துவிட்டதென்றும், வெறும் பதவி, பணம், சொத்து என அது ஒரு கிணற்றுப் பிணம் மாதிரி உப்பியிருப்பதையும் அவருக்குச் சொன்னேன். பதிலுக்கு, ‘‘அதுபற்றிய அக்கறையோ, கவலையோ படவேண்டியது என்னைவிடவும் அதன் எளிய மக்கள்தான். அப்பாதிரியார் அடிபட்டு நடுரோட்டில் விழுந்த காட்சி, எத்தனை ஜென்மத்திலும், என்னால் எதன்பொருட்டும் மறக்க முடியாதது’’ என்ற ஒரு படைப்பாளியின் பதைபதைப்பை அப்போது உள்வாங்கினேன்.
சா.கந்தசாமி கலை, ஓவியம், சிற்பம், சினிமா, புனைவு என்று எல்லா நுண்கலைகளின் மீது மிகுந்த ஆர்வமும் அக்கறையுமுள்ளவர் மட்டுமல்ல, புனைவில்கூட மிகையை எப்போதும் மறுதலிப்பவர். ‘‘ஒரு படைப்பாளி, எழுதி முடித்த தன் படைப்பிலிருந்து மிகுதியான ஜோடனைகளை, அன்னப்பறவை மாதிரி உறிஞ்சி எடுத்துவிட்டால் மட்டுமே தெளிந்த நீரைப்போல அவன் படைப்பு வாசகனுக்கு அருந்தக் கிடைக்கும்’’ என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சா.கந்தசாமி, தமிழ் படைப்பிலக்கியத்தில் ‘சாயாவனம்’ என்ற நாவல் மூலம், தன் இடத்தை மிக சுலபமாக அடைந்தவர் எனினும், ‘தொலைந்து போனவர்கள்’, ‘சூர்யவம்சம்’ என்ற அவரின் நாவல்களும் பொருட்படுத்தத் தக்கவைகளே.
எழுத்தாளன் என்பதைத் தாண்டி, வேறு எந்த வெளிச்சமும் தன்மீது படுவதைக்கண்டு கூச்சத்தோடு ஒதுங்கிக் கொள்பவர் அவர். முற்றத்தில் அவர் உரையாற்ற வந்தபோது, அவரை அறிமுகப்படுத்திப் பேசிய நான், அவருடைய பல படைப்புகளை சொல்லிவிட்டு அப்போதைய மத்திய அமைச்சர் ஒருவரின் சம்பந்தி என்பதையும் சொல்லிவிட்டேன். தன் பார்வையிலேயே என்னைக் கண்டித்தார். ‘அதெல்லாம் என் தகுதியல்ல’ என்று மறுத்த ஒரு படைப்பாளியின் நேர்கொண்ட பார்வை அது.
ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும், பெண்ணியவாதியுமான அவரை, தன் வீட்டிற்கு இரவு விருந்துக்கு அழைத்திருந்தார் கந்தசாமி. எழுத்தாளர்களின் விருந்தென்பது உணவு சாப்பிடுவதா? அந்த நேரத்திலான உணர்வு பகிர்தலும்தானே! விருந்து முடிய இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. அந்த பெண் எழுத்தாளரை, அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு கொண்டு போய்விடத் தயாராகும் கந்தசாமி சாரை, அவர் மனைவி ஒரு நிமிடமென உள் அறைக்கு அழைக்கிறார். சில நிமிடங்களில் வெளியே வரும் அவரைப் பார்த்து,
‘‘என்ன கந்தசாமி, உங்க மனைவி என்னை விட்டுட்டு உடனே வந்துடுங்கன்னு தனியே கூப்பிட்டு சொல்றாங்களா?’’ என நக்கலோடு சிரிக்கிறார் அந்த எழுத்தாளர்.
கந்தசாமி சார் மிகுந்த நிதானத்தோடு, ‘இல்லையே, நைட் ரொம்ப லேட் ஆயிடிச்சி. அங்கேயே தங்கிட்டு, காலைல வந்தாப் போதும்னு சொல்றா’ என்கிறார். பெண்ணியவாதத்தை இப்படிக் கோட்பாடுகளின்றி, புத்தகங்களின்றி, தத்துவங்களின்றி, இவைகளை விடவும் வாழ்விலிருந்து எடுத்தாளும் பெண்களே, எப்போதும் வரலாற்றில் மகத்தானவர்கள். அறிவு ஜீவிகளின் பார்வைகளில் வேண்டுமானால் இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லது சராசரிகள். ஆனால், இந்த சராசரிகளும், சாதாரணங்களுமே எப்போதும் மானுடத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறார்கள்.
மற்ற எழுத்தாளர்களுடனான நட்பைப்போல மிக வாஞ்சையாகவும், உரிமையாகவும் என்னால் கந்தசாமி சாரை அணுக முடிந்ததில்லை. முதல் பார்வையில் அவர் மீது எனக்கேற்பட்டது மரியாதையும், கொஞ்சம் பயமும். ‘எளிதில் அணுக முடியாதவரோ?’ என்ற தயக்கமும், எல்லாவற்றையும் அவரும் அவர் மனைவியும், திருவண்ணாமலை வந்து எங்களோடு தங்கியிருந்த அந்த மூன்று நாட்களும் தகர்த்தெறிந்துவிட்டன.
நம் பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் சிதைத்திருந்த அரசியல் கட்சிகள் மீது, மிகப்பெரும் கோபத்துடனேயே எப்போதுமிருப்பார். ‘‘சார், உங்க பிறந்தநாளைக்கு நீங்க ஒரு கேக்கோட உங்க ஃபிரெண்ட் வீட்டிற்கு போவீங்க. உங்க ஃபிரெண்ட் பிறந்த நாளைக்கு ஒரு கேக்கோட உங்க வீட்டிற்கு வருவான். இதான் நம்ம மரபு இல்லையா? ஆனா இந்த தலைவனுங்க பண்றக் கூத்திருக்கே... உங்க பொறந்த நாளுன்னாலும், உங்க தலைவன் பொறந்த நாளுன்னாலும் நீங்கதான் அவங்களைப் போய்ப் பாக்கணும். இது கேக்க ரொம்ப சாதாரணமா இருக்கலாம். இதெல்லாம் ஒரு கலாச்சாரத்தோட சீரழிவு. நம்ம வேர்கள்ல, அதிகாரம்ங்கிற பேர்ல இவங்க ஊத்தற கொதிநீர்’’ என கொதித்திருக்கிறார்.
அவரோடிருந்த பல தருணங்களில் என் அப்பாவோடு இருந்த கதகதப்பை மனம் உணர்ந்திருக்கிறது. அவருக்கு சொல்லவும் கொட்டவும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்களை இந்த பெருவாழ்வு அளித்திருக்கிறது.
அவர் வந்திருந்த முற்றத்திற்கு அப்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராயிருந்த கண்ணகி பாக்யநாதன், பார்வையாளராய் வந்திருந்தார். எப்போதும் அதிகார ஒளி உமிழும் சிவப்பு விளக்கிட்ட காரை கண்ணுக்குத் தெரியாத தொலைவிலேயே நிறுத்திவிட்டு, ஒரு பெரிய டைரியோடு வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருக்கையில் சந்தேகம் வந்த ஒரு ஹைஸ்கூல் மாணவி மாதிரி, நாங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வந்து, தரையில் உட்கார்ந்து, கூட்டம் முடிய ஐந்து நிமிடங்களுக்கு முன்னமே போய்விடுவார். கலெக்டர் என்ற அதிகார முகமூடியை கழட்டி வைத்துவிட்டு இளைப்பாறும் இடமாக அவர் அந்த முற்ற மைதானத்தை உணர்ந்தார். தமிழ்நாட்டில் அப்போது கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் முன்னணியில் இருந்த கலெக்டர் என்று பெயரெடுத்திருந்தார்.
அன்று ஜெயகாந்தன் பேசிய முற்றத்திலும் அவர் பார்வையாளராய் தரையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். கூட்டம் முடிந்த அன்றிரவு, அறையின் உற்சாகம் ஆரம்பிக்கும் முன்பு ஜே.கே. என்னைப் பார்த்துக் கேட்டார்.
‘‘அந்த இடது பக்கம் உட்கார்ந்து மாய்ஞ்சி மாய்ஞ்சி சிரிச்சிட்டிருந்தாங்களே, அவங்கதான் உங்க கலெக்டரா?’’
நான் சிரித்துக் கொண்டே தலையாட்டினேன். திடீரென வேறு ஒரு மனநிலையில் ஜே.கே. சொன்னார்.
‘‘சாராயத்துல நல்ல சாராயம், கள்ளச் சாராயம்னு எதுவும் இல்லை பவா. சாராயம் சாராயம்தான். இந்தம்மா பாவம். ஓடி, ஓடி அதை அழிக்க பாடுபடுது. ஆனா, நாளைக்கே கவர்மெண்ட் சாராய கடையை சட்டபூர்வமா அனுமதிச்சா, இந்தம்மா யாரையெல்லாம் அரெஸ்ட் பண்ணுச்சோ, அவங்கள்ளாம் கலெக்டர் சேம்பருக்கே வந்து, இவங்க கையால புதுக்கடையை தொறந்து வைக்க கேட்பாங்க. நீ, முடியாதுன்னு சொல்ல முடியாது. அது கவர்மெண்ட்டோட பாலிசி.’’ அவர் உற்சாகத்தில் பேசிக்கொண்டே போகிறார்.
கந்தசாமி சார் அதை இடைமறிக்கிறார். ‘‘இல்ல ஜே.கே., அதுக்காக இந்த நிமிஷத்திய அந்த அம்மாவின் முயற்சி தேவையில்லைன்னு சொல்றீங்களா?’’
‘‘அப்படியில்ல கந்தசாமி...’’
‘‘இல்ல. அந்த அம்மாவின் அதிகாரமற்ற ஆழ்மன விருப்பம் அது. தனக்கிருக்கும் அதிகாரத்தின் துணைகொண்டு அதில் ஒரு துளியையாவது நிறைவேற்றத் துடிக்கும் ஒரு தாயின் மனம் அது.’’
‘‘இல்ல கந்தசாமி. மது விலக்கு அமுல்ல இருந்தப்போ தமிழ்நாட்டுல குடிச்சா குற்றம், ஜெயில். இதையே அரை கிலோமீட்டருக்கு அப்பால போய், பாண்டிச்சேரி பார்டர்ல நின்னுக் குடிச்சா குற்றமில்ல. இது அபத்தமில்லையா?’’
‘‘இந்த அபத்தங்கள் அவ்வப்போது அரசுகளால் நிறைவேற்றப்படுகின்றன.’’ இது கந்தசாமி சார்.
‘‘அதான், அந்த அரசுகளோட கூலிங்கதான் இந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். எல்லாம்.’’
‘‘இல்லையில்ல. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு அதிகாரத்தைக்கொண்டு, எதையாவது செய்திட முடியுமான்னு முயற்சி பண்றவங்கள உங்க வாதம் முடக்கிடும் ஜே.கே.’’
அன்றிரவு அந்த அறைக்கு பக்கத்து அறையில அமர்ந்து, கண்விழித்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். ஓவியர்கள் சந்தானராஜ், தனபால் போன்றவர்களெல்லாம் எத்தனை பெரிய ஆளுமைகள்! அவர்களெல்லாம் தமிழகம் நமக்களித்த அற்புதக் கொடைகள்.
‘‘ஆனால், துரதிஷ்டம். தமிழ்த் தலைவர்களுக்கு இவர்களின் மேன்மை தெரியாது. சினிமா மீது வெறிகொண்டு, உலகம் முழுக்க சுற்றியலைந்து, அரிய பல பொக்கிஷத்தை நமக்களித்த ஏ.கே. செட்டியாரை எத்தனை சினிமாக்காரர்களுக்கு தெரியும்?’’ என்ற அவர் வெளிப்பாடுகளில் இருந்த உஷ்ணத்தை அந்த குளிரறையிலும் நான் ஸ்பரிசித்தேன்.
அவருடைய சாயாவனத்திற்கு நிச்சயம் ‘சாகித்ய அகாடமி’ கிடைத்திருக்கவேண்டும். நிறுவன அரசியல் காரணமாக, அது வேறு ஒருவருக்கு இடம் மாறிப்போனது. அதைப் பற்றிய மனக்குறைகளற்று இலக்கிய, கலையின் பல துறைகளிலும் அவர் இயங்கிக் கொண்டிருக்கையில், அவர் பெயர் அந்த வருட சாகித்ய அகாடமியின் இறுதிப் பட்டியலில், மூன்று பெயர்களில் ஒன்றாக இருந்தது.
அன்று நடக்கவிருந்த அகாடமி கூட்டத்தில், மூன்றில் ஒருவர் அந்த வருட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். வழக்கம்போல் அக்கூட்டத்தில் கலந்து கொள்ள கந்தசாமி சார் காரோட்ட, அவருக்கு அருகாமையில் ஜெயகாந்தன் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கிறார். மௌனம் இருவருக்குமிடையே மிக நாகரீகமாக உட்கார்ந்திருந்தது. வழக்கம்போல் ஜே.கே.வே அதை உடைக்கிறார்.
‘‘கந்தசாமி, உன் பேரும் ஃபைனல் லிஸ்ட்ல இருக்கு தெரியுமா?’’
‘‘தெரியும் ஜே.கே.’’
‘‘ஆனா நான் உனக்கு ஓட்டு போடப்போறதில்ல.’’
‘‘நான் உங்ககிட்ட கேக்கலையே ஜே.கே.’’
‘‘உனக்குதான் போடலான்னு இருந்தேன். நேத்து லட்சுமி வந்து, நேரா பாத்து கேட்டுட்டா. என்னால மறுக்க முடியல.’’
ஒரு சிறு அசைவுமின்றி, காரோட்டிக்கொண்டே அவ்வார்த்தைகளை புறந்தள்ளுகிறது ஒரு நட்பு மனம். அந்த வருடம் கந்தசாமிக்கு அல்லாமல் ஒரு வணிக எழுத்தாளரான லட்சுமிக்கு அகாடமி விருது கிடைத்தது, தமிழ் வரலாற்றில் பிழைத்திருத்த வேண்டிய பக்கம். தக்கையின் மீது பதியும் கண்கள், மீன் வேட்டைக்கு வேண்டுமானால் சாத்தியம். படைப்பாளிக்கல்ல.




