Monday, January 13, 2020

நிலமெங்கும் சொற்களை விதைப்பவன்

பாரதி கிருஷ்ணகுமார்


திருச்சியில் நடந்த தமுஎச மாநாட்டின் பின்னிரவு முழுவதும் நடந்த ஒரு அரட்டைக் கச்சேரியில்தான் கவிஞர். கந்தர்வன் எனக்கு கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரதுப் புனைப்பெயர் முகவை பாலாஜி. ஆளைப் பிடித்திருந்தது. பெயரைப் பிடிக்கவில்லை. எனக்கு அந்தப்பெயர் பிடிக்கவில்லை என்பது அவருக்கு தெரிந்ததோ என்னமோ கொஞ்ச நாட்களிலேயே அவர் தன் பெயரை பாரதி.கிருஷ்ணகுமார் என எனக்குப் பிடித்தமான பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார்.
அடுத்த வருடமே சென்னையில் நடந்த ஒரு நாடக விழாவில் கவிஞர். கந்தர்வனின் ‘விலைவாசி’ என்ற நவீன நாடகத்தில் கிருஷ்ணகுமார் விலைவாசியாக நடித்தார். அவர் உயரத்திற்கு விலைவாசி உயர்ந்துகொண்டே போகும். எந்த வசனமும் இன்றியே ஆளின் உயரத்திற்கே. பார்வையாளர்கள்  கை தட்டிக் கொண்டேயிருந்தார்கள்.
கைதட்டல் அடங்கின பத்தாவது நிமிடத்தில் நானும் அவரும் தனித்திருந்தோம். எங்கள் உரையாடலின் போது தன்னியல்பாக எங்கள் கைகள் கோர்த்திருந்ததைக் கவனித்தேன். அவரின் உயரமும், சிரிப்பும், ஒழுங்கும், எதையும் அழகியலோடு அணுகும் நேர்த்தியும் இம்மனிதனை தனியே உனக்குள் பதித்துக் கொள் என்று ஒரு அசரீரி சொன்னது.
நான் அவ்விதமே அவரை என்னுள் ஆழமாக பதித்து கொண்டேன். அசரீரிகளின் சொற்களை புறந்தள்ளி விட முடியாதில்லையா? அது தெய்வ குற்றம்.
அப்போது கிருஷ்ணகுமார் பாண்டியன் கிராம வங்கிக்கு போய் வந்து கொண்டிருந்தார். அவர் அங்கு பணி புரிவதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் உ.ஆ.க்கு போய் வந்து கொண்டிருக்க வில்லையா? அப்படித்தான் அதுவும் என எங்களை ஒப்பிட்டுக் கொண்டேன்.
தமிழ்நாட்டின் எல்லா நகரங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் அவர் தன் குழுவோடும் தனித்தும் இடைவெளியின்றி பயணித்துக் கொண்டிருந்தார். நான் பெரிதும் மதிக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மிகப்பிடித்தமானப் பேச்சாளனாகவும், மனிதனாகவும் கிருஷ்ணகுமார் இருந்தார். அவருக்காக அடிகளார் தான் மேற்கொண்ட பல ஆகம விதிகளை மீறிக் கொண்டேயிருந்ததை தூரத்திலிருந்து கவனித்திருக்கிறேன்.
வங்கி தொழிற்சங்கத்தில் அகில இந்திய அளவில் பொறுப்பில் இருந்தார். இலக்கியத்தையும், தொழிற்சங்க அரசியலையும் அதனதன் எல்லைகளில் நின்று அதன் பணிகளை மேற்கொண்டார். பின்னிரவு வரை வாசிப்பு என்பதை ஒரு தவம் மாதிரி தனக்குப் பழக்கிக் கொண்டவர்களில் கிருஷ்ணகுமாரும் ஒருவர்.
ஞானக்கூத்தனின் பல கவிதைகளை ஞானக்கூத்தனே மறந்திருக்கக் கூடும். அத்தனை லாவகமாக கவித்துவ மொழி ஒரு சிந்தலுமின்றி தன் முன் பரந்து விரிந்திருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். பல பேச்சாளர்களை இந்த முப்பது வருடங்களில் கவனித்து வருகிறேன். பாரதியைத் தாண்டாதவர்கள், பாரதிதாசனை தொட தயங்குபவர்கள், வைரமுத்து, மேத்தாவோடு நின்று கொண்டு சிலையாகிவிடுபவர்கள் எல்லாமே ஓரிடத்தில் நின்று ஜீவனம் செய்பவர்களே அதிகம்.
கிருஷ்ணமுமார் அவர்களிடமிருந்து பல ஆயிரம் மைல்கள் முன்னகர்ந்து வந்து, கல்யாண்ஜியையும், மனுஷ்யபுத்திரனையும், சமயவேலையும் தனக்குள் இருத்திக் கொண்டு அவர்களின் எழுத்தை மேடைகளில் பிரவாகித்தார். நம்மை நெகிழவைத்தார். அழச் சொன்னார். அவருக்குக் கட்டுப்பட்ட வாசகர்கள் அவர் சொல்லுக்கு மயங்கினார்கள். மிரண்டார்கள்.
இந்த மனிதன் ஏன் பட்டிமன்றம் என்ற கடைந்தெடுத்த ஒரு கேளிக்கையில் போய் பங்கெடுக்கிறார் என நினைக்கும்போதே அதிலிருந்து துண்டித்துக் தன்னை முழுவதுமாக கொண்டார். உள்ளுணர்வுகளை படிக்க தெரிந்த கலைஞன்.
எனக்கு இன்னும் நெருக்கமான தோழனாகி இன்றுவரை எங்கள் தோழமை நீடிப்பது அக்கணத்திலிருந்துதான். அசாத்தியமான தொழிற்சங்க தலைமை. சொற்களில் விளையாடின் அந்த மைய ஆட்டக்காரனை ஒருநாள் திண்டுக்கல்லில் நடந்த பாரதிராஜா திரைப்படங்களுக்கான ஆய்வரங்கத்திற்கு அழைத்துப் போனது காலம். 
மேடையை ஆடுகளமாக்கி அவர் திரைப்பட ஜாம்பவான்களுக்கு முன் நிகழ்த்திய அசாத்தியமானதொரு உரையில் பாரதிராஜா கரைந்து போகிறார். தன் உடல் முழுவதும் கிருஷ்ணகுமார் மீது பட அவரை நெருக்கி அணைத்துக் கொள்கிறார்.
அன்றிரவு திண்டுக்கல் விடுதியில் நடந்த ஒரு மது விருந்துக்கு கிருஷ்ணகுமாரை அழைக்கிறார் பாரதிராஜா.
அவரை அருகிலிருந்து அவதானிக்கிறார். என்ன ஊரு?என்ன வேலை? எப்படி இப்படி தமிழ் பேசுகிறாய்? எத்தனை ஆண்டு வாசிப்பு உன் உடம்பில் இருக்கிறது? இப்படி பல ஏன், என்ன  கேள்விகளால் அந்த இரவு நீண்டுகொண்டே போகிறது.
தன்னோடு சினிமாவில் பணியற்றுமாறு பாரதிராஜா அழைக்கிறார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணகுமார் ஒரு முடிவுக்கு வருகிறார். வங்கி வேலையை விட்டுவிடுவது. சொற்போரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது. இந்த இயக்குநர் பாரதிராஜவோடு இணைந்து சினிமாவைக் கற்றுக்கொள்வது.
முடிவெடுத்த இத்தருணம் சரியானதுதானா என்று இருபது வருட கடத்தலுக்குப் பிறகும் தீர்க்கமான பதிலில்லை நண்பர்களே!
வங்கிவேலை, அங்கீகரிக்கப்பட்ட ஊதியம், லௌகீக சுகங்கள், கூடவே இலக்கியம். இதுதான் நாம் வகுத்து வைத்திருக்கின்ற செல்நெறிகள்.
எப்போதுமே துனிந்த ஒரு கலைஞன் இதை சுலபமாக மீறுகிறான். ஐம்பெத்தெட்டு வயதுவரை கணக்கு டேலி ஆகல, அதிகாரிக்கு அடங்கி, பணக்கட்டுகளை எண்ணி முடித்து, பக்கத்து இருக்கையிலிருந்து வரும் மல்லிகைப் பூவின் மணத்தை கூட திருட்டுத்தனமாய் நுகர்ந்து, ஐம்பெத்தெட்டில் ஏதோ ஒரு மாதத்தின் முப்பதிலோ, முப்பத்தி ஒன்றிலோ ரிட்டையராகி, ஒரு ஸ்வீட், மிக்சர், காபி, கவிதை பார்ட்டி முடித்து, சில சால்வைகளும் ஒரு பூ மாலையுமாய்  அரசு வாகனத்தில் வீட்டில் போய் இறக்கிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகும் சக ஊழியர்களுக்கு பை சொல்லி...
இந்த நீட்டிப்பை ஒரு கலைஞன் மிகச் சுலபமாக உதறுகிறான். தன் தினந்தோற அப்பத்திற்கும், ரசத்திற்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லாத போதும் அவன் தனக்குத்தானே தன் தலையில் அந்த முள் முடியை எடுத்து அணிந்து கொள்கிறான்.
காலம்  ஈவிரக்கமின்றி அந்த முள்முடி மீது சம்மட்டியால் அடிக்கிறது. அவன் தாங்கிக் கொள்கிறான். ரத்தம் சொட்ட சொட்ட அடுத்தநாள் படபிடிப்பிற்கு நாலு மணிக்கு எழுந்து போகிறான். பத்து டூ ஐந்து என்ற தன் அன்றாடங்களிலிருந்து தன்னை அப்புறப்படுத்திக்கொள்கிறான்.
இதையெல்லாம் கிருஷ்ணகுமார் செய்தார். நிரந்தர சம்பளம், மனைவி, குடும்பம் என எல்லா நிராகரிப்புகளும் இருபக்கமும் நிகழ்ந்தன.
அவர் ஒரு தவம் மாதிரி சினிமாவை தனக்கு வசப்படுத்திக் கொள்ளமுடியுமா? என வெறிகொண்டு அலைந்தார்.
கற்றிருக்கிறோம், கேட்டிருக்கிறோம், ஆனாலும் அந்த கிணற்றில் குதித்துதான் எழுவோமே என்ற உந்துதல்தான் பல கலைஞர்களை அப்பாழுங்கிணற்றில் தள்ளுகிறது. ஒரு வேளை தன் முழுகலில் மட்டும்,  ஒரு தங்கப்புதையல் கிடைத்துவிடாதா என்ற உந்துதல். கிருஷ்ண குமாருக்கு. கிணற்றின் ஆழத்திலும் இன்னொரு முள்முடிதான் கால் துழாவலில் அகப்பட்டது கிருஷ்ணகுமாருக்கு இது காலுக்கானது.
இப்போது அதே ரத்தம் காலிலிருந்து சொட்ட சொட்ட அவர் படப்பிடிப்பு தளங்களில் நடக்கிறார். தன் ரத்தத்தை தானே பார்க்க நேருகையில் அது தனதில்லை என முன்னகர்கிறார்.
எல்லோருக்கும் போலவே அவருக்கும் சினிமா துரோகத்தை, பரிசளித்தது ஒவ்வொரு நாளும் அவமதிப்பை கொடுத்துக் கொண்டேயி ருந்தது. வாஞ்சையான மனிதர்கள் திரைப்பட தளங்களுக்கு வெளியில் இருந்ததை படப்பிடிப்பு முடிந்து, ஏதோ சற்று நேரம் படுத்தெழும் தருணங்களில் அவர்  நினைத்துக்கொண்டார்.
நகரங்களில் தான் பேசிய கூட்டங்களில் ஒரு பேரலை மாதிரி எழுந்தடங்கின ஆர்ப்பரிப்புகள். தொழிற்சங்க தலைமையாய் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டு பல அதிகாரிகளின் இரவுத்தூக்கத்தை, ஒரு பிசாசின் பிராண்டல்களோடு சிதைத்துப் போட்ட நாட்களை அவர் கேமராவிற்கு பின்னிருந்து கோணம் பார்த்த கேமரா மேனுக்கும், இயக்குநருக்கும் பின்னாலிருந்து நினைத்துக் கொண்டார்.
சமீபத்தில் கோணங்கி என்வீட்டில் மூன்று முழு நாட்கள் தங்கியிருந்தான். அவன் குளித்துவிட்டு வந்து சாப்பிட வைத்திருந்த ஒரு ஆப்பிள் பழத்தை, ஒரு குரங்கு சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அவனை அற்பமாக ஏறெடுத்து பார்த்தது.
நீ பெரிய பின் நவீனத்துவ எழுத்தாளனாகவோ, மேஜிக்கல் ரியலிச எழுத்தில் ஜாலம் காட்டுபவனாகவோ இருக்கலாம் நண்பா! உனக்கான ஒரு ஆப்பிளை உன்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லைதானே?
குரங்கின் குரல் அவன் காதுகளில் கேட்டது. ஐந்து நிமிடத்தில். தன் துணிமணிகளை பெட்டியில் அடைத்து, கீழிறங்கி வந்து,
“நான் போறன் பவா”
“ஏன்டா திடீர்னு?”
“குரங்கு என்னைப் போகச் சொல்லிடுச்சி. எனக்கான ஆப்பிளை அது புசிக்க ஆரம்பித்தால் என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்?”
“உனக்கு இங்க வேலை இல்லடா, இது எனக்கான பிரதேசம் ,எனக்கான ஃச்ணஞீண்ஞிச்ணீஞு உன் சொந்த நிலப்பரப்புக்கு நீ புறப்படுன்னு”
அதேதான் கிருஷ்ணகுமாருக்கும் அவர் தன் தற்காலிகமாய் தள்ளி வைத்திருந்த தன் சொந்த நிலப்பரப்பை நோக்கி நகரத் துவங்கினார். நான் அறிந்த வரையில் அவருக்கு தமிழ்நாட்டிலயே பிடித்தமான ஊர் மதுரை தான்.
அங்குதான் அவர் ஆசான் எஸ்.ஏ.பி.யை அறிந்து கொண்டார். எம்.எல். அரசியல்தான் மாணவப்பருவத்தில் அவரை ஈர்த்த அரசியல். சிபிஎம், சிபிஐ, கட்சிகள் ஆயிரம் சமாதானம் சொல்லி, திமுகவின் அல்லது அதிமுகவின் குட்டி ஜமீன்தார்களுக்கு, ஊழலில் பெருத்த உடம்புள்ளவர்களுக்கு, ஆதிக்க ஜாதி திமிறில் தனக்கும் கீழுள்ளவனை கட்சியின் பெயரால் அடக்கி வைத்திருப்பவனுக்கு  தேர்தல் நேரத்தில் போஸ்டர் ஒட்ட வைக்கும் எம்.எஸ். அரசியல் அப்படியல்ல.
தங்கள் தோழர்கள் தங்கள் வியர்வையின் மிச்சத்தில் சேகரித்த தேர்தல் நிதி  ஊர் ஊராய் போய் ஓட்டுக் கேட்க  செலவழியும் திமுக, அதிமுக காரனுக்கு.
எந்த தேர்தல் நேரத்து சமாதானங்களும் ,அரசியல் தந்திரங்களும் தத்துவார்த்தரீதியில் தேர்ச்சி பெற்றிருந்த கிருஷ்ணகுமாரின் மனதைத் தொடவில்லை.
மார்க்சியக் கொள்கைகளின்  உச்சமே எம்.எல் அரசியல்தான். மத்ததெல்லாம் போலிகள் என அவர் உறுதியாய் நம்பினார்.
இந்தியாவிற்குத் தேவை ஆயுதம் தாங்கிய புரட்சி மட்டுமே. இரண்டு மூன்று எம்.பி.யோ, பத்து பதினைந்து எம்.எல்.ஏ.வோ இல்லை.
இதையெல்லாம் அவர்கள் போட்டுத்தந்த மேடைகளில் உரத்து முழங்கினார். யாரையும் தன் வசப்படுத்தும் ஆ.ஓ.வின் உடல் மொழியும், குரலும் மக்கள் கூட்டத்தில் ஏவுகணைகள் மாதிரி ஊடுறுவியது. ஒவ்வொரு கூட்டம் முடிந்ததும், இன்னும் கொஞ்சநாளில் புரட்சி வெடித்துவிடும், மதுரையில் அதை நிறைவேற்றும் பொறுப்பை  கட்சியினரிடம் கேட்டு பெற்றுவிட வேண்டும் என பெருங்கனவு கண்டார்.
ஆனால் கூட்டங்கள் முடிந்த பின்னிரவுகளிலும் திறந்திருந்த மதுரை பரோட்டா கடைகளில், அவருக்கு நாலு பரோட்டாவும், இரண்டு ஆம்லேட்களும் தோழர்களால் ஆர்டர் செய்யப்பட்டன.
ஒரு நாள் அவர் தன் நெருங்கிய சகாவிடம் கேட்டார். தோழர் நான் கூட்டங்களில் பேசுவதோடு சரியா? நம் குழுக்கூட்டங்களுக்குக் கூட நீங்கள் என்னை அழைப்பதில்லையே?
எனக்குத் தெரியாமல் நீங்கள் ரகசியமாய் இயங்குகிறீர்கள்! அதிலெல்லாம் எனக்கு எந்த பங்களிப்பும் இல்லையா?
இல்லை என்பதை ஒவ்வொருத்தோழரும் ஒவ்வொருவிதமாகச் சொன்னார்கள்.
ரொட்டியில் ஒருவர் தேனையும், ஒருவர் ஜாமையும், ஒருவர் வெண்ணயையும் தடவி அவருக்குத் தந்தார்கள்.
அந்த இரவில் அவருக்கு எல்லாமே கசந்தது.
அடுத்த நாள் காலை அவருக்கு  தெளிவுடன் விடிந்தது. அவர் நீண்ட தூரம் நடந்து சென்று அடைந்தது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர அலுவலகம். மாவட்ட செயலாளர் முனியாண்டி அங்கிருக்கிறார்.  அடுத்து அவர்  சங்கமமானது எஸ்.ஏ.பி. என்ற பெரும் ஆளுமையுடன்.
இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான் என்ற கண நேர யோசனையில் தன் நெற்றியைச் சுருக்கி, அது விரிவதற்குள் அவர் கிருஷ்ணகுமாரை அணைத்துக்கொள்கிறார்
அவர்கள் டீயும், சிகரெட்டுமாய் பலநேரம் உரையாடுகிறார்கள். கிருஷ்ணகுமாருக்கு தேர்தல் அரசியல் மீதான கசப்பை, சக்கரை தூக்கலா டீ சொல்லிஎஸ்,ஏ.பி. தணிக்கிறார்.
மார்க்சியம் இந்தியா மாதிரியான ஒரு முதலாளித்துவ நாட்டில் எப்படி செயலாற்ற முடியும் என்று தன் அனுபவமேறிய வார்த்தைகளால் தோழர். எஸ்.ஏ.பி. தன் சகதோழனுக்குக் கடத்துகிறார். ஆனாலும் இன்னும் பல கேள்விகள்  புதுசுபுதுசாய் அவருக்கு வந்து கொண்டேயிருந்தன அந்த இளந்தோழனுக்கு. சலிப்படையாத நேரக்கடத்தலில் அவைகளை ஒவ்வொன்றாக அவரே வெளியே எடுத்து பி.கே.வை சமாதானப்படுத்துகிறார். பல இரவுகளைகுடித்த தர்கம் அவை.
ஒரு இளம் கம்யூனிஸ்டை வென்றெடுக்க நீங்கள் பல பத்துமணி நேரத்தை, பல ஆயிரக்கணக்கான சொற்களை, நீங்கள் அடைந்த மார்க்சிய மெஞ்ஞானத்தை செலவிட்டே ஆகவேண்டும் தோழர்களே!
அந்த நிதானம் நானறிந்து தோழர்.வி.பி.சி.யிடமும், தோழர் எஸ்.ஏ.பி.யிடமும் மட்டுமே மிஞ்சி யிருந்தது. மற்றவர்களுக்கு இல்லை என்ற நிராகரிப்பு இல்லை. மற்றவர்களிடம்  ஒரு சாதாரண முப்பது வயது பையனிடம் நாம் ஏன் இத்தனை அனுபவச் செழுமையை கரைத்துக் கொள்ள வேண்டும் என்ற தன்னங்காரம் இருந்தது.
இப்போது கிருஷ்ணகுமார் தமுஎச என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகு ஜன அரங்கில் முன்னணி ஊழியராக தன்னை இணைத்துக் கொள்கிறார்.
இருவருக்குமே நிறைந்திருந்த இரவுகள் அதுதான்.
அடுத்த நாள் ஆரம்பித்த பயணம் கிருஷ்ணகுமாருக்கு, எனக்குத் தெரிந்து இன்னுமே நிறைவடையவில்லை. கட்சியும், ஸ்தாபனமும் போகச்சொன்ன இடங்களுக்கெல்லாம் அவர் இரயிலில், பஸ்ஸில், லாரியில், டெம்போவில் என பயணித்துக் கொண்டேயிருந்தார்.
கை நிறைய சம்பாதித்த வேலையை சினிமாவுக்காக பறிகொடுத்து, திரைப்படத் துரோககங்களால் அங்கும் நிலைக்க முடியாமல், அவர் தன் ஸ்தாபனத்தை மட்டுமே தன் ஜீவனாக நம்பிய காலம் ஒன்று அவருக்குமிருந்தது.
ஸ்தாபன ஒழுங்குகளில் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்காதவர்கள், அதை விட்டு விலக நேரும் கொடுமை வாழ்நாளில் நேராமல் ஒருவருக்கும்  இருக்கவேண்டும்.
மனுஷ்ய புத்திரன் தன் ஒரு கவிதையில் சொல்வது மாதிரி...
பாம்பு நிலவைத்
தின்னும் கொடுமை
எல்லோரும் பார்க்க நிகழ்கிறது.
அது எப்போதும் ஸ்தாபனத்திலிருந்து இயங்கி பின் விட்டு விலகி நிற்கும் படைப்பாளிகளுக்கு உக்ரமாக நிகழும். தங்கள் ஸ்தாபன கட்டுபாட்டுக்குள் பாதுகாப்பாக நின்றுக் கொண்டிருப்பவர்கள் கைகொள்ளாத அளவுக்கு வெளியேறியவன் மேல் கல் எறிவார்கள்.
ஆனால் நேற்றுவரை அக்கலைஞனின் அலைந்து திரிதல், இழத்தல் எதுவும் அவர்களின் மூர்க்கம் முன் ஒரு தூசளவிற்கு கூட பொருட்படுத்தப்படாது.
புயல் எப்போதும் வங்கக் கடலில் மையம் கொண்டிருப்பதாகத் தானே வானிலை அறிக்கையில் சொல்வார்கள்.
அந்த வருடம் அது திருவண்ணாமலையில் மையம் கொண்டிருந்தது. மப்பும், மந்தாரமும், இடியும் மின்னலும், மழையுமாய்  கொட்டித்தீர்த்த அந்நாளின் ஒன்றில்தான் ஜேக்டோ-ஜியோ-அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் அது ஒரு பௌதீக இயக்கமாக மாறி ஆட்சியாளர்களை நடுங்கச் செய்தது. எம்.ஜி.ஆர்.அப்போது முதல்வர்.
எல்லா ஊர் இயக்க போராட்டத்துக்கும் அப்போது கிருஷ்ணகுமாரின் எழுச்சியுரை தேவைப்பட்டது. ஆசிரியர் அரசு ஊழியரோ அல்லாத ஒருவர் இப்போராட்டத்தின் நியாயத்தை விளக்கிப் பேசவேண்டும் என்ற உள்ளுணர்வு அரசு ஊழியர் ஆசிரிய இயக்கங்களின் தலைமைக்கு இருந்தது.
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, திருநெல்வேலியென ஒரு நாளைக்கு இரு கூட்டங்களில் பி.கே. பேசினார். கிடைக்கும் பேருந்து நெரிசலில் அடுத்த கூட்டத்திற்கான மனத்தயாரிப்பு நிகழ்ந்து நிறையும் நாட்கள் அவை.
வருவாய்த்துறை ஊழியர் சங்க தலைவர் தோழர் வேலூர் சிவராஜ் அழைப்பின் பேரில் வேலூர் கூட்டத்தை காலையில் முடித்துக்கொண்டு மாலை திருவண்ணாமலைக்கு பெரு மழையோடு வந்து சேர்கிறார்.
ஆறரை மணிக்கு அபிராமி கல்யாண மண்டபத்தில் கட்டுக்கடங்காத அரசு ஊழியர் ஆசிரியர் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். அநேகமாக அதற்கு முன்னும் பின்னும் ஆ.ஓ.யின் அப்படி ஒரு உள்ளார்ந்த உரையை நான் கேட்டதில்லை.பேச ஆரம்பித்த பத்தாவது நிமிடம் கூட்டம் சொற்களில் உறைந்து போகிறது. அவர் மேடையை ஆடுகளமாக்கி களமிறங்குகிறார். யாரோ  எனக்கு அவர் பெயர் தெரியும்  ‘மரித்து போனவர்களை மரியாதை செய்வோம்’ ஒரு தோழர் குடித்துவிட்டு அந்த உறைந்த பனிக்கட்டிகளின் மேலேறி நின்று சலம்புகிறார்.
தன் உரையை பாதியில் நிறுத்திவிட்டு அவனை தூக்கி வெளியே போடுங்கள் என கத்துகிறார் பி.கே. ஆறேழு பேர்கள் உடனே அதை நிறைவேற்றுகிறார்கள்.
மீண்டும் நதி உறைகிறது.
அவர் விட்ட புள்ளியிலிருந்து பெரும் பிரவாகமெடுக்கிறார். பேச்சியினிடையே எம்.ஜி.ஆரை நோக்கி, உங்களுக்கு உங்க அம்மாவை ரொம்ப பிடிக்குமென சொல்வது உண்மையெனில் உங்கள் தாயின் வயதையொத்த இன்னொரு தாயை நாளெல்லாம் சத்துணவு கூட அனலில் சோறாக்கிப் போட முப்பது நாட்களுக்கு வெறும் நூறு ரூபாய் கூலி என நிர்மானித்தாயே, “தீடச்t டிண் தூணிதணூ ணீணிடூடிஞிதூ, ஐ இச்ணூஞு tணி Mதூ ஊணிணிt‘ என கோபத்தின் உச்சத்தில் வேறு மொழியை பிரயோகிக்கிறார்...
கூட்டம் பெரும் அச்சத்திலும், உறைநிலையை மீறி அனலிலும் தகிக்கிறது.
அதே கோபத்தோடு மேடையை விட்டிறக்கி ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
கட்சியின் தலைமை வரை அப்புகார் செல்கிறது. எத்தனை கோபமெனினும் ஒரு முதல்வரை எப்படி செருப்பால் அடிப்பேன் என சொல்ல முடியும்?
பதில் சொல்ல வேண்டிய அரசு ஊழியர் சங்க தலைவர்கள் அமைதி காக்கிறார்கள்.
நல்ல வேளை ஒரு மூத்த தோழருக்கு அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்திருந்தது என பி.கே. புன்னகைக்கிறார்
அந்த தோழர் நிதானமாகச் சொல்கிறார்
ஐ ஞிச்ணூஞு tணி ட்தூ ஞூணிணிt என்றால் நீ என் செருப்புக்கு சமம் என்றுதான் அர்த்தம். அடிப்பேன் என்றல்ல...
மற்றவர்கள் காப்பாற்றாமல் விட்ட இடத்தை கவிஞர் கந்தர்வன் தொடர்கிறார். கலைஞர்கள் அப்படி உணர்வுவயப்படுவார்கள்தான் தோழர். ஸ்தாபனம் எல்லா நேரத்திலும் அவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியாது அவர்கள் திமிறிக்கொண்டேதான்யிருப்பார்கள்.
இப்போது கட்சி அமைதி காத்தது.
கந்தர்வன், கிருஷ்ணகுமாரை நாயகனாக வைத்து ஒரு கதை எழுதினார். எனக்கும் மிகப்பிடித்தமான கந்தர்வன் கதைகளில் ஒன்று அது. இருவருக்குமே அதன் தலைப்பு இப்போது நினைவில் இல்லை.
முகமே அரசு எந்திரத்தைப் போல மரத்துப்போன ஒரு சூப்பிரடெண்ட் தன் ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்டில் முதன் முதலில் ஒரு புல்புல்தாரா  வாங்குவார் அக்கதையில். அப்படி அவரை வாங்க வைத்த இன்னொரு அரசு ஊழியனும் கலைஞனுமானவன்  கிருஷ்ணகுமார்.
நீண்ட நாட்கள் கழித்து நடந்த ஒரு கலை இரவில் ஆ.ஓ.விடம் அன்பு தியேட்டர்  அருகில் நின்று பேசிக்கொண்டிருந்த அந்த அரசு ஊழியரை  நான் சட்டென அடையாளங்கண்டுபிடித்ததைப்பார்த்து பி.கே.சொன்னார், ‘இவரைத்தான் அன்று அந்த போராட்டக் கூட்டத்தில் நான் தூக்கி வெளியே எறியச்சொன்னேன் பவா” இப்போது அவர் சொல்கிறார், “உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். என் அன்பை எப்படி வெளிப்படுத்தணுங்கிற தடுமாற்றத்துல அப்படி பண்ணிட்டேன். என்ன? அதை நான் குடிக்காம வெளிப்படுத்தியிருக்கணும், இப்ப எக்கி ஒரு முத்தம் தரட்டுமா? இப்போ நான் குடிக்கல”....கலைஞனின் வாழ்வு, அன்பு எப்படியெல்லாம் சுழல்கிறது பார்த்தீர்களா?
எழுத்தாளர் ஜெயகாந்தன் எப்போதுமே  தன் எழுத்துக்குப் பின்னே எவனும் இல்லையென்றே உறுதியாய் நம்பினார். அதனாலயே அவர் எவன் எழுத்தையும் வாசிப்பதில்லை என்ற முரட்டுத்தனத்தை ஒருமூட நம்பிக்கையைப் போல் இறதிவரை பின் பற்றினார்.
ஆனால் தன் மேடைப்பேச்சு எப்படி எஸ்.ராமகிருஷ்ணன் (மார்க்சிய அறிஞர்), தோழர் ஜீவாவின் தொடர்ச்சியோ அதே போல தன் தொடர்ச்சி யார் யாரென அவர் சிலரை உள்ளுக்குள் உணர்ந்திருந்தார்.
பி.கே.தான் அந்த மன அலைவரிசையின் முதல் ஆள்.
’சமூகம் என்பது நாலு பேர்’ என்ற ஜே.கே.வின் கதையை எப்படியாவது தன் வாழ்நாளில் திரைக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென இயக்குநர் பாரதிராஜா பெரும் கனவிலிருந்தார். அது அவருக்கு நாற்பது வருடமாக கை கூடவேயில்லை.
அது இயல்பாக ஒரு நாள் பி.கே.வுக்கு கை கூடியது. இருவரையும் நேசித்த ஒரு தயாரிப்பாளர், இப்பரிசோதனைக்கு தன்னை ஒப்புக்கொடுக்க தயாராக இருந்தார்.
ஏற்காட்டில் நான்கு நாட்கள் சந்திப்பதாக திட்டமிடப்பட்ட போது ஜே.கே. ஒரு நாள் தொலைபேசியில் என்னை அழைத்து, ’நீங்களும் வாங்கோ’ என அழைத்தார். கடைசி கனத்தில் வழக்கம் போல் எதனாலோ நான் போகவில்லை (அநேகமாக மழை பெய்து கிணறு நிரம்பியிருக்கலாம்). பின்னர் ஐந்து நாள் கதை விவாதம் ஏற்காட்டில் நிகழ்ந்ததை கதை கதையாய் ஆ.ஓ. சொன்னார்...
‘நீ வந்திருக்கணும்டா‘
நான் மௌனம் காத்தேன்.
அக்கதையின் முடிவை மாற்றச் சொன்ன அத்தயாரிப்பாளரைப் பார்த்து,
‘உனக்கும் இக்கதைக்கும் தொடர்பில்லை. வெளியேப்போ என அவர் போட்ட அறையிலிருந்து அவரை வெளியேப் போகச் சொல்லியிருக்கிறார் அதுதான் ஜே.கே.
இப்படியாக, ’சமூகம் என்பது நாலு பேர்’ இன்னும் கதையாக மட்டுமே இருந்து வாசகர்களை உயிரூட்டுகிறது.
கிருஷ்ணகுமாரை தன் மேடைப் பேச்சின் அடுத்த வாரிசு என்று, ஜே.கே. எப்போதும் சொன்னதில்லையே தவிர, தன் நடவடிக்கை, பேரன்பில், தன் சபையில் பி.கே.வுக்கு எப்போதும் இடம் தந்து கௌரவப்படுத்தியதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன்.
அதன் பிறகான இருபதாண்டுகளில் அவர் தனித்தே இயங்கினார். கட்சி ஸ்தாபனம் எல்லாமும் ஒரு நாள் நினைவில் தங்குவதாக மட்டுமே மாறிவிட்ட துயரம் அவருக்கும் நிகழ்ந்தது.
ஆனால் கட்சிக்கூட்டங்கள், மாநாடுகள், தமுஎச கலை இரவுகள் என அவர் அழைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தார். இதைத்தான் அவரின் சொற்களுக்கும் கம்பீரத்திற்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.
எந்த விவதங்களுமின்றி மௌனித்து, தன் நாட்களை மிக கவனமாகக் கையாண்டார். கூட்டங்களில் பங்கெடுப்பது, தனித்திருந்து எழுதுவது, ஆவணப்பட மெடுப்பது, திரைப்படத்திற்கு முயற்சிப்பது என்பது அவரின் வரைவுப் பட்டியல்.
அதிகம் பேசுபவனுக்கு எழுத்து கைவராது என்ற அவச்சொல்லை அவர் சுலபமாக மீறினார் என்பதற்கு அவரின் ’கோடி’, ’அப்பத்தா’ என்ற இரு கதைகளை நாம் கட்டாயம் வாசிக்க வேண்டும். அது கிருஷ்ணகுமார் என்ற எழுத்துக்காரனுக்கு மட்டுமே வாய்த்த தனி உலகம்.
ஆவணப்படங்களை அதற்குரிய தீவிரத்தோடும், நேர்த்தியோடும் கையாண்டார். முழுநீளப்பட முயற்சி வாய்த்து, அது கை தவறி கண்ணாடி குடுவையைப் போல ஒரு மென் சத்தத்தோடு உடைந்த போது, அவர் அதை ஒரு புன்னகையோடு கடந்து, அடுத்த சாத்தியத்திற்கு முயல்கிறார்.
இதெல்லாம் சரி, மக்கள் நீதி மய்யத்தில் போய் சேர்ந்தாரே அது எப்படி சரி?
நண்பர்களே, ஒரு விஷயத்தை தனித்திருந்து உங்கள் மனதோடு மட்டும் தர்கம் நடத்தி மல்லுக்கட்டிப் பாருங்கள்.
தான் உள்ளார்ந்து நம்பின கட்சிக்காகவும், தான் நேசித்த ஒரு இலக்கிய அமைப்பிற்காகவும் தொடர்ந்து இருபதாண்டுகள் தமிழ்நாட்டின் வரைபடம் எங்கெங்கு நீள்கிகிறதோ, அங்கெல்லாம் சுற்றித்திரிந்த ஒரு கலைஞன் எதனாலோ, மனக்காயப்பட்டு படுக்கையில் கிடக்கிறான்!
அவன் கரம் பற்றி ,தலைகோதி, ஒரு தாய் மாதிரி என்ன ஆச்சிடா உனக்கு? என அமைப்பின் கரங்கள் நீளவேண்டாமா?
அவன் என்னவாக வேண்டுமானால் சீரழியட்டும் என அப்படியே விட்டுவிடுவோமா?
நாம் பலரையும் விட்டுவிட்டோம்.
ஆனால் வெகுஜன அமைப்புகள், மார்க்சியத் தலைவர்கள் என தனித்தனியே அவரிடம் நட்பு வைத்திருந்தார்கள். இன்னமும் வைத்திருக்கிறார்கள்.
ஜி.ராமகிருஷ்ணனும், டி.கே.ஆரும் தான் அவரின் ஆவணப்படங்களை முன்னின்று வெளியிட்டார்கள்.
கலைஞர்களின் மனது உலோகங்களால் ஆனது அல்ல. அது எந்த ஒரு பரிவுக்கும் தாவி விடும் இடுப்புக் குழந்தை மாதிரி.
கல்லூரிக் காலம் முதல் மார்க்சியம் படித்து, காடு மேடுகளிலெல்லாம் களப்பணியாற்றி கட்சிக்காகவே உயிர் வாழ்வதாய் நாம் நம்பிய தோழர்கள் அண்ணா திமுகவில் போய் சேரவில்லையா? மார்க்சிய அரசியல் கற்றவனுக்கே இது நிகழும் போது இலக்கியம் படித்தவனுக்கு? படைத்தவனுக்கு?
அதுதான் ஆ.ஓ.வுக்கும் நேர்ந்தது. அது ஒரு சகித்துக் கொள்ளமுடியாத சங்கமம். நதியே விரும்பினாலும் அது திரும்பிப் போய்விட முடியாதில்லையா? ஆனால் அது கடலில் கலக்காமல் அங்கேயே தேங்கிக்கொண்டது அப்போதைக்கு.
அங்கிருந்து அது தன் தற்போதைய நாட்களின் படைப்பூக்க கணங்களைத் தீர்மானிக்கிறது
அந்த இடம்தான் ஆ.ஓ.என்ற கலைஞனின் இடம். இப்போது அவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக பாரதியார் பல்கலை கழகத்தில் இணைந்திருக்கிறார். வாசிப்பின் நேரத்தைக் கூட்டியிருக்கிறார். அதிகம் இலக்கியக் கூட்டங்களில் கலந்து  கொள்கிறார். நண்பர்களினுடனான பின்னிரவு வரை நீளும் சந்திப்புகளின் எண்ணிக்கையும், ஊர்களும் கூடியிருக்கிறது.
பழைய தோழிகளை இப்போது கடந்து போகையில் தன்னையறியாமல் ஒரு புன்னகை வந்து போகிறது.
மாபெரும் எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி தனது நாவலை தான் சொல்ல சொல்ல எழுத தனக்கு ஒரு ஸ்டெனோவை பணியமர்த்தினது  தெரியும் தானே?
அவர், அவள் மீது மிகுந்த காதலடைந்திருப்பதை அவளும் அறிவாள். தான் டிக்டேட் செய்யும் வார்த்தைகளுக்கிடையே அவர், அவறுக்கான தன் காதலை வெளிப்படுத்தும் வரிகளையும் சொல்லி அவளை ஏறெடுத்துப் பார்ப்பார். எதுவுமே தெரியாதது மாதிரி அவள் புன்னகையை உள்ளடக்கிக் கொண்டு இயல்பாய் மிளிர்வாள். தாஸ்தாவெஸ்கிக்கும், அவளுக்கும் குறைந்தது இருபது வருட இடைவெளி இருக்கும்.
அதனால் என்ன?
உலகத்தில், எம்மொழியில், எந்த நிலப்பரப்பில் கலைஞர்களைத் தேடி பெண்கள் வராமல் இருந்திருக்கிறார்கள்? அப்பெண்களின் நட்பை நாம்தான் ஒற்றை அர்த்தத்தில் கணக்கிடக் கற்றுக்கொண்டோம்.
எங்கள் சிபியை ஒரு விபத்தில் பறிகொடுத்து, நிமிடங்களை எப்படிக் கடத்துவது எனத் தெரியாமல் வீட்டு மொட்டை மாடியில் நானும் ஷைலஜாவும் மட்டும் தனித்து உட்கார்ந்திருந்த ஒரு முன்னிரவில் மூன்றாவது தோழனாக ஆ.ஓ. எங்களுடனிருந்தார்.
அந்த இரவு எங்கள் வாழ்நாளின் மொத்த இரவுகளிலேயே நம்பிக்கைத் தந்த இரவு. எத்தனை இழப்புகளையும் தாங்கிக்கொள் தோழா என எங்களை உரமேற்றிய இரவு.
ஆ.ஓ என்று பொது மேடைகளில் வந்து பேசிவிட்டு போகிற ஒரு ஆளுமை என நினைத்து விட்டு போகமுடியாத தோழமை ததும்பின சொற்களால் எங்களை நிறைத்த
அவர் சந்தித்த துரோகங்கள், அவர் தப்பித்த விபத்துக்கள், அவர் இழந்தமனிதர்கள் என அவர் அந்த இரவை நினைவுகளால் நிரப்பிக் கொண்டேயியிருந்தார்.
திருச்சியிலிருந்து கரூருக்கு போய்க்கொண்டிருக்கும்  ஒரு இரவுப் பேருந்தில் கடைசி இருக்கையில் தன்னுடன்  உட்கார்ந்திருந்த ஒரு சகப்பயணி அப்போதுதான் எழுந்து போய் ஓட்டுநருக்கு பின் இருக்கை காலியாக இருப்பதை அறிந்து அமர்ந்து கொள்கிறான். அவன் அமர்ந்த ஐந்தாவது நிமிடம் அப்பேருத்து விபத்துக்குள்ளாகிறது.
ஓட்டுநரும், அப்பயணியும் மட்டுமே அவ்விபத்தில் இறந்து போகிறார்கள்.
இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் பவா,  ஷைலஜா?
ஷைலஜாவின் அழுகையை மீறி
நான் அவர் கைகளை எடுத்து என்னுள் இறுக்கமாக அழுத்திக் கொள்கிறேன்.
இப்போதும் அப்படித்தான் பி.கே.



No comments:

Post a Comment